Social Icons

Pages

Saturday, July 25, 2009

கனாக்கண்டேன் தோழீ நான்!











வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப்புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி

(ஆண்டாள்-நாச்சியார் திருமொழி.)


வாரணம் என்றால்யானை

பன்மையில் சொல்லவேண்டுமானால் யானைகள்.,

பாடலில் வாரணங்கள் ஆயிரம் என வரவேண்டும் (,யாப்பிற்காக எண் வழுவமைதி) ஆயிரம் சூழ வலம் செய்து, என்று வருகிறது

நாரணநம்பி ( சிறந்த கல்யாண குணங்களை உடைய நாரணன்) எதிரில்
நடக்கின்றான்
(எனவே எதிர்கொண்டழைக்க)

பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன்

நீர் நிறைந்த தங்கக்குடங்களை பூரண கலசங்களாய்வைத்தபடி அவ்னை வணங்க மக்கள் காத்திருக்க,
எங்கும் அலங்காரத் தோரணம் நட்டிருப்பதாக கனவுகண்டேன்

தோழீ ( தோழியின் மீதான விழிப்பு தோழீ)

நான்’

இப்படி ஆண்டாள் சொல்வதாக பாடல் அமைந்திருக்கிறது.

----------------------------------------------------------------
ஆண்டாளின் அறிவுக்கூர்மைதான் வாரணம் , அதுவும் ஆயிரம் வாரணம்.

அதாவது பெருகிய அறிவுக்களம். (யானை அறிவுக்கு உருவகம், விலங்குகளின் நல்ல அறிவுடையது யானை)

வெளியெங்கும் விரிகிறது. அவள்பார்வை.

விரிதலின் முடிவு ( இதற்கு உருவகம் நாரணன் நம்பி) உணர்வுகளுக்கு அருகிலேயே,எதிரிலேயே உள்ள தளத்தில், ஆனால் அந்தத் தளமும் இயங்கிக்கொண்டேயுள்ளது.


பேரானந்தவெளியில் அகமிருக்க, அவள் புறமெங்கும் வெளியாய், ஆனந்தம் விரிகிறது.புறத்திலும் ஆனந்த வெள்ளம்!
எதிரில் மனம் கவர்ந்த மதுசூதனன் வருகின்றான். ஆனந்த எல்லை அது!

( அவள் தன் அனுபவத்தை
சொல்லெடுத்து சேர்த்து வார்த்தைகளாக்கி சொல்லவேண்டியதால் - வார்த்தைகளின் உட்பொருளாய்-மனக்கண்ணின்
தரிசனமாய்- அவளுடைய கனவுக்காதலை தோழியிடம் சொன்னாள் என்பது நேரடிப் பொருளானது.

ஆண்டாள் உலாவிய தளங்கள் வித்தியாசமானவை. அதில் அவள் பெற்ற அனுவங்கள் வித்தியாசமானவை

அகத்தின் ஆனந்தமே புறத்தில்பேரானந்தமாக அதன் பூரணத்தை அலங்காரத்தோரணங்களான வார்த்தைகள் வழியாக தோழியிடம் கூறுவதாக நம் கற்பனையும் விரிகிறது!


ஒவ்வொரு இலக்கியத்தின் பின்னும் அதை எழுதியவன் மறைந்து நிற்கிறான் என்கிறார் ஹட்ஸன்.( ...behind the every book that is writer lies the Personality of man who wrote it.... =Hudson .."An introduction to the study of literature" அவ்வாறே ஆண்டாளின் ஒவ்வொரு பாடலுக்குப்பின்னும் அவளது மனநிலை மறைந்திருக்கும்.!
மேலும் படிக்க... "கனாக்கண்டேன் தோழீ நான்!"

Sunday, July 19, 2009

கம்பனும், கீட்சும்!

இலக்கியத்தின் வசந்தகாலம் கவிஞர்களின் பாடல்களில்தான் இருக்கிறது.

அந்தவகையில்,ஆங்கிலத்தில் கீட்சும் தமிழில்கம்பனும் நம்மில்
பெரும்பாலரின் மனதைக் கவர்ந்துவிடுகிறார்கள் !

அதிகம் கரைத்துக்குடிக்கவில்லை எனினும் கண்டுகளித்தவரை கீட்சும் கம்பனும் அவர்களின் மொழிகளில் சொல்லோவியத்தைக்காட்டி இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது.


சொல் ஓவியம்!

பார்த்தீர்களா. சொல்சிற்பம் என்று வருகிறதா ஓவியம் என்றே சொல்லின் பெருமைக்கு சிறப்பு சேர்க்கிறது!


ஆம்!..கம்பனும் கீட்சும் ஓவியத்தை தங்கள் பாடல்களில் ஒளித்துவைத்ததை சற்றே பார்க்கலாமா?

ஆயகலைகள் அறுபத்திநான்கு! சிற்பம் ஓவியம் நாட்டியம் எழுத்து பேச்சு, மகிழ்வு ஊட்டும் கருவிகள் என்று ..
இவைகளில் ஓவியம் ஒருதனிச்சிறப்பைப்பெறுகிறது.


குறிப்பாக காதல்நோயில் வீழ்ந்தவர்களுக்கு ஓவியம் ஒருசிறந்த உறுதுணையாக அமைகிறது.

ஆணாயினும். பெண்ணாயினும் தங்களுடைய அன்புக்குரியவர்களின் முகத்தினன நினைத்து,படத்தினைப் பார்த்து மனம் மகிழ்கின்றனர்.

நடைமுறைவாழ்க்கையில் சிறந்தபொருளை நமக்குஒருவர் கொடுக்ககவிட்டால் உடனே,' அதென்ன பெரிய ஓவியமோ?' என்று கேட்கிறோம்.

கதைகளில்கூட அவள் அஜந்தாஓவியம்போலிருந்தாள் எனக்தாசிரியர்கள் எழுதுவார்கள் அழகுச்சித்திரம், சித்திரம் பேசுதடி,காதல் ஓவியம் என்றெல்லாம் பாடல்களில் கேட்டுவருகிறோம்.

மக்கள்தங்களுக்கென்றுமொழி உருவாகாத காலத்தில் குகைகளில் சித்திரங்களைவரைந்து அதன்மூலம் உணர்சிகளை வெளிபடுத்திக்கொண்டார்கள்.

. உணர்ச்சிபூர்வமான சிறந்தஓவியம் பல கதைகளை நமக்குச்சொல்லிவிடும்.


அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியம் ஒன்றினை புலவன் கீட்ஸ் காண்கிறான்

அந்தஓவியம் வரையப்பட்டிருந்தது ஒரு தாளில் அல்ல..குகைச்சுவர்களில் அல்ல.அல்லது மரத்தூண்களில் அல்ல.மாறக ஒருதாழியில் !(URN)

அந்தத் தாழி,கிரேக்கநாட்டுச் சார்புடையதாக அவனுக்குத் தோன்றியது எனவே அந்தப்பானைக்கு Greecian Urn என்று பெயர்வைத்தான்' அந்ததாழியை வ்ரலாற்று

ஆசிரியனாகவும் (Sylvan Historian)நினைத்து அதனுடன் பேசுகிறான்

காதலன் காதலிக்கு ஊதுகுழல் ஊதி மகிழ்வித்து அவளைப் பின் தொடர்ந்து தன் அருகில் அழைத்திடுவதுபோன்ற ஓவியம் .

அவன் அழைப்பதை செவிசாய்க்காமல் அவனுடைய இன்னிசையைக்கேட்டு இசைவுகொடுக்காமல் தப்பி ஓட முயற்சி செய்கிறாள் அந்தப்பெண்

ஒருமரத்தடியிலே இந்தக்காதல்நாடகம் நடக்கிறது ,இந்த நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஓவியம் கீட்சின் சிந்தனையைக் கவர்கிறது.


அந்தஓவியக்காதலனிடம் கீட்ஸ் பேசுகிறான்

"இந்தமரத்தினடியில் நீ எப்போதும் நின்றுகொண்டிருக்கலாம் நீபாடுகின்றபாட்டினைக் கேட்காமல் அவள் எங்கேயும்தப்பித்துப்போகமுடியாது. இந்தமரங்களும் உன்னுடையபாட்டைக்கேட்டுப்பழக்கப்படவேண்டியதுதான்.
நீ அவளைமுத்தமிடமுயற்சிக்கிறாய் ,ஆனால் முடியாது.
நீ உனதுகுறிக்கோளில் வெற்றிக்குப்பக்கத்தில் நிற்கிறாய், அதற்காகபயப்படாதே !
அவளும் உன்னைவிட்டுமறைந்துவிடமுடியாது. எப்பொழுதும் உனது காதல் இருந்துகொண்டே இருக்கும் அவளும் அழகு மாறாமலே இருப்பாள்'

என்னும்பொருள்பட தாழியிலுள்ளஓவியக் காதலர்களைப்
பார்த்துச்சொல்லுகிறான் கீட்ஸ்.


அமரத்துவம் வாய்ந்தகாதல் ஓவியம் அழியாதது!
அந்தக்காதலர்களுக்கு மூப்புஇல்லை என்பதைகீட்ஸ்மறைமுகமாகசொல்கிறார்..

அதனைக்கீழ்கண்ட ஆங்கிலவரிகள் நமக்கு உணர்த்திவிடும்.



Thou still unravish'd bride of quietness,
Thou foster-child of silence and slow time,
Sylvan historian, who canst thus express
A flowery tale more sweetly than our rhyme:
What leaf-fring'd legend haunts about thy shape
Of deities or mortals, or of both,
In Tempe or the dales of Arcady?
What men or gods are these? What maidens loth?
What mad pursuit? What struggle to escape?
What pipes and timbrels? What wild ecstasy?

Heard melodies are sweet, but those unheard
Are sweeter; therefore, ye soft pipes, play on;
Not to the sensual ear, but, more endear'd,
Pipe to the spirit ditties of no tone:
Fair youth, beneath the trees, thou canst not leave
Thy song, nor ever can those trees be bare;
Bold Lover, never, never canst thou kiss,
Though winning near the goal yet, do not grieve;
She cannot fade, though thou hast not thy bliss,
For ever wilt thou love, and she be fair!
(From "ode on a Grecian urn"by John Keats)





கீட்சின் இந்தவிவரிப்பும்,கம்பனின் காவியத்தில் ஒரு நிகழ்ச்சிகோர்வையையும் பார்த்தால் ஓவியக்கலையின் சிறப்பை
நாம் இன்னும் உணரமுடியும்.

ஆற்றமுடியாத துயரத்துடன் அசோகவனத்தில் அன்னை சீதை இருக்கிறாள்.

"இராமன்வருவானா? என்னைமீட்பானா?


என் தலைவன் இராமன் நல்லவன்! பேரழகன்!

ஆமாம்! அரசாட்சியை ஏற்றுக்கொள் என்றபோதும் ராஜ்ஜியம் உனக்குஇல்லை என்றபோதிலும் அவன்முகம் சித்திரத்தில்மலர்ந்த செந்தாமரையாகவே இருந்தது. "

அந்தமுகத்தை எண்ணுகிறாள் சீதை. வறண்டபாலையாய் இருந்த அவள் உள்ளத்தில் வசந்தம் எட்டிப்பார்க்கிறது.




"மெய்த்திருப்பதம் மேவு என்ற போதிலும்
இத்திருத்துறந்து ஏகென்ற போதிலும்

சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருந்த முகத்தினை உன்னுவாள்
"

கம்பன் காட்டும் இந்த சொல் ஓவியம் இதுதான்!


ஓவியக்கலையின் சிறப்பை மிக நுணுக்கமாக பொதித்துவைக்கிறான் கம்பன் இங்கு,

அரசுரிமையைத்துறந்து காட்டிற்குச்செல்லவேண்டும் என்றுகைகேயிகூறியபோது 'அன்றலர்ந்த தாமரையினை வென்றதம்மா' என்று இராமனின்முகத்தை வர்ணிக்கிறார்.


கைகேயின் சுடு சொல் கேட்டமுகம் அன்றுமலர்ந்த தாமரையாம்.
. அன்றுமலரும்தாமரைக்கு உயிருண்டு ..நேரமாகிவிட்டால் வாடிவிடும் .

ஆனால் சீதையைப்பற்றி கம்பன்கூறும்போது 'சித்திரத்தில் அலர்ந்ததாமரை' என்கிறார், இராமனின் முகவதனத்தினை!

சித்திரத்தாமரைக்கு அழிவில்லை என்றும் மலர்ந்தே இருக்கும்.
சீதை தனிமையில் இருக்கும்போது அவளுக்கு மகிழ்ச்சி அளிப்பது என்றும் மலர்ந்திருக்கும் இராமனின் திருமுகம்!

அதுமட்டுமல்ல சித்திரச்செந்தாமரைமுகத்தை நினைக்கும்போது சீதைக்குஇன்னொன்றும்தோன்றி இருக்கவேண்டும் அந்த அழகான முகத்தை சூர்ப்பனகை போன்ற அரக்கியர்களால் காணநேர்ந்துவிட்டால், அவர்களால் கண்டுமட்டுமே மகிழலாம் என்றும் எண்ணிக்கொள்ளலாம்!


கம்பன்காட்டிய சொல்லோவியத்தையும் தாழியில்வரையப்படிருந்த காதலர்களின் உள்ளப்பாங்கினை கீட்ஸ் நமக்கு உணர்த்தும் உருவகமும் நாம் படித்து மகிழ வேண்டிய சுவையான காட்சிகள் !


கலைகளில்பலபிரிவுகளில் ஓவியம் ஓர் உயர்ந்த இடத்தைபிடிக்கிறது என்பதில் ஐயமே இல்லை.

இதனால்தானோ என்னவோ, கம்பனையும்கீட்சையும் பின்பற்றி கண்ணதாசனும் இப்படிப்பாடினான்?

காலங்களில் அவள் வசந்தம்!
கலைகளிலே அவள் ஓவியம்!
மேலும் படிக்க... "கம்பனும், கீட்சும்!"

Thursday, July 09, 2009

அபி அப்பாவா. ஆண்டாள் அப்பாவா?!








முன்குறிப்பு..1 பிரபலபதிவர் அபி அப்பாக்கும் இந்தப்பதிவுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை.
மு.கு 2....
ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் - பெரியாழ்வார் திருநட்சத்திரம் - பிறந்த தினம் - (ஜூலை3ம்தேதி இடவேண்டிய பதிவு இது,,சிலகாரணங்களினால்தாமதமாகிவிட்டது)

முகு3..தவறாம பின்குறிப்பு படிங்க!
**********************************************************************


நிறையப்பேசின ஆழ்வார்கள் மூவர்!

ஸ்ரீநம்மாழ்வார் ஸ்ரீகலியன் ஸ்ரீபெரியாழ்வார்,முறையே 1296 , 1253, 473 பாசுரங்கள் அருளியுள்ளனர்.

’ஒளிபுத்தூர் வித்தகன் விட்டுச் சித்தன் விரித்த தமிழ்’ என்று பெரியாழ்வார் தன்னை வித்தகன் என்று சொல்லிக்கொள்கிறார் ஒருபாடலில். வித்தகன் என்றால் கெட்டிக்காரர் என்று அர்த்தம். பாண்டியன் சபையில் வாதத்தில் வென்ற வித்தகராயிற்றே!


புதுவைக்கோன்பட்டன் புதுவைமன்னன் பட்டர்பிரான் என்று பெரியாழ்வார் வில்லிபுத்தூருக்கே ராஜாவாக இருந்திருக்கிறார்.

பெரிய ஆழ்வார், பெரியாழ்வார் மட்டுமே!
விஷ்ணு சித்தன் இவர் தம் இயற்பெயர்! பட்டர்பிரான் என்பது சிறப்புப் பெயர்!

திருவரங்கம் மற்றும் அதன் தொடர்புள்ள எல்லாமே "பெரிய" என்று தான் அடைமொழியப்படும்!
பெரிய கோவில் - திருவரங்கம்
பெரிய திருவடி - கருடன்
பெரிய அவசரம் - திருவரங்க நிவேதனம்
பெரிய பெருமாள் - அரங்கநாதன்
பெரிய பிராட்டி - அரங்கநாயகி
அந்த வரிசையிலே, அவனுக்குப் பெண் கொடுத்த பக்தரும்
பெரிய ஆழ்வார் - பெரியாழ்வார்!


மற்றவர்களுக்கு எல்லாம் வெறும் பரிவு தான், இறைவனிடத்தில்!
இவருக்கு மட்டுமே பொங்கும் பரிவு!
தாய் போல் பொங்கும் பரிவு! குழந்தையை நினைக்கும்போதே தாய்க்கு நெஞ்சகம் பொங்கிவிடும்! தாய்ப்பால் பொங்கும் பரிவு! - அதனாலேயே அவர் பெரிய ஆழ்வார்!





பெருமாளுக்கே தாய் ஆனதால் பெரிய ஆழ்வார்!
ஆண்டாள் பூமித் தாயின் அம்சம்! அந்த தாய்க்கே தந்தை ஆனதால் பெரிய ஆழ்வார்!
இப்படி இவர் ஒருவரே,
அவனுக்குத் தாயுமாகி, அவளுக்குத் தந்தையும் ஆனதால் பெரிய - பெரிய ஆழ்வார்






தமிழில் அபியும் நானும் என்று சிலநாள்முன்பு ஒருபடம் வந்தது.அப்பா-மகள் பாசம்பற்றிய கதை.

ஆண்டாள்்மீது பெரியாழ்வார் கொண்ட பாசத்தின் முன்பு அபியாவது அவள் அப்பாவாவது! வேறெந்த தந்தை-மகளுக்கிடையே இப்படி ஒரு பாசப்பிணைப்பு இருக்குமா என்றால் அது சந்தேகமே!

ஆண்டாளைப்பற்றிப்பாடும்போது ’பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!’ என்கிறார்கள். இத்தனைக்கும் அவர் துளசிக்குவியலில்தான் ஆண்டாளைக்கண்டுபிடித்திருக்கிறார். பெற்ற பெருமை இல்லாதவருக்குக்கிடைத்த பேற்றினைப்பாருங்கள்!

’பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலைமுப்பதும் தப்பாமே’ என்கிறாள் ஆண்டாளே தான் வடித்த திருப்பாவைப்பாடலில். அப்பாவும் பெண்ணும் மாறிமாறி அன்பைப்பரிமாறிக்கொள்கிறார்கள்.

தான் சூடிய மாலையை இறைவனுக்குச்சூட்டிட அதனை தந்தையிடம்கொடுத்த துணிச்சல்காரியான பெண் ஆண்டாள்.

அந்த நாளிலேயே பெண் சுதந்திரம் இருந்திருக்கிறதென்பதற்கு ஆண்டாளின்
நாச்சியார் திருமொழி வாசகங்களே போதும். அப்படி ஒரு சுதந்திரத்தை அவளுக்கு அளித்தவர் பெரியாழ்வார் என்றால்மிகை இல்லை.


மகளின் ஆசையைபூர்த்தி செய்து அவளை திருமாலுடன் சேர்த்துவைத்து வீடுவந்தவர் மகளின் பிரிவில் மனம் தவிக்கிறார். செங்கண்மால்தான் கொண்டுபோனான் என மனதைத்தேற்றிக்கொள்ள பிரயத்தனப்படுகிறார்.ஆனாலும் பாசம் மனசை வழுக்கிவழுக்கி நினைவுகளை பின்னோக்கி இழுத்துச்செல்கிறது.மகளோடு கூடிக்கழித்த நாட்களை அசை போடுகிறது.

’நல்லதோர் தாமரைப்பொய்கை
நாண்மலர் மேல்பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு
அழகழிந்தாலொத்ததாலோ
இல்லம் வெறியோடிற்றாலோ
என்மகளை எங்கும் காணேன்
மல்லரையட்டவன் பின்போய்
மதுரைப்புறம் புக்காள்கொலோ’


கண்ணில் நீர்மல்கப்பாடுகிறார் பெரியாழ்வார்.
கண்பனித்தது என்பார்கள்.
ஆமாம் பெரியாழ்வாருக்கு மகள் மணமாகிசென்றதும் கண்பனித்துத்தான் போனது.
அவரது விழிகளாகிய தாமரைக்கு மகள் எனும் சூரிய ஒளி இல்லாமல்போய்விட்டதாம்.
பனிவந்து தாமரையைச் சூழ்கிறதாம். பனிகண்டமலர் விரியுமோ?

பெண்ணிருந்தவரை இல்லம் தாமரைப்பூத்த பொய்கையாய் அழகாக இருந்ததாம்.இப்போது பனிபெய்வதால் இதழ்கள் உருகிக்கருகிவிட்டதாம்,கொடி மொட்டையாய் நிற்கிறது இதுபோல வீடு அழகழிந்து வெறியோடிவிடுகிறது.

நம் மனதிற்குப்பிரியமானவர்கள் பிரிந்துவிட்டால் இல்லமென்ன நம் உள்ளமே ’வெறிச்’ என்றுபோய்விட்டதாய் சொல்கிறோம் அல்லவா? அதைத்தான் ஆழ்வார் இந்தப்பாடலில் சொல்லி இருக்கிறார்.




பொய்கையின் படம் பெரியாழ்வாரின் சொற்சித்திரத்தில் மனதில் பதிந்துவிடுகிறது.கவிதைக்கென்று தனி வார்த்தைகள் இல்லையென்று காட்டிவிட்டார் பெரியாழ்வார், ஆமாம் உலகத்தில் வழங்கிவரும் சொற்களை வைக்கிற இடத்தில் வைத்தால் அவைகளுக்கு அபூர்வ சக்தி ஏற்பட்டுவிடுகிறது என்பது உண்மைதானே!

பின்குறிப்பு
எனக்குத்திருமணம் முடிந்து என்னை திருவரங்கத்திலிருந்து பெங்களூருக்கு அனுப்பும்போது தன் கண்ணீரைபேனாவில் நிரப்பி என் தந்தை எழுதிய பாடல் இது!


மணமகளாய் என்மகள்தான்
மணம்முடித்துச்செல்கின்றாள்
குணம் நிறைந்த கணவருடன்
குதூகலமாய்ச் செல்கின்றாள்
இத்தனை நாள் நான் வளர்த்த
என் இனியத்திருமகள்
இன்றென்னைப்பிரிந்து
தொலைதூரம் செல்கின்றாள்
வரும் நாளில் அவள் நினைவில்
வாடித்தான் இருப்பேனோ
வசந்தமான நினைவுகளை
அசைபோட்டுத்தான் இருப்பேனோ?
மறுபடியும் சந்திக்கும்
நாளுக்குக் காத்திருப்பேன்
மனமெல்லாம் மகள்நினைவில்
மானசீகமாய் வாழ்வேன்!


*********************************************
மேலும் படிக்க... "அபி அப்பாவா. ஆண்டாள் அப்பாவா?!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.