Social Icons

Pages

Tuesday, November 10, 2009

கலங்குகிறேன்.

பாலில்நீரைக்கலப்படம் செய்த
காபியை காலையில் அருந்திவிட்டு
கலப்படம் பற்றிக் கவிதைஎழுத
கணிணியைத்திறந்தால்
கணிணிக்குள்ளே
வைரஸின் கலப்படம்


’அங்கிங்கெனாதபடி
எங்கும் நிறைந்திருப்பது கலப்படம்’
என்று சொல்ல வரும்போது
கண்கள் கலங்குகின்றன

காரணம்..
காற்றில்வரும் தூசியிலும்
கரியமலவாயுக்கலப்படம்

சுவாசிக்கும் மூச்சிலும்
சுற்றுபுறசூழலின்
நச்சுப்புகைக்காற்றின் கலப்பு



உயிரையே பலிவாங்கும்
கலப்பட மருந்துகள்
நோயைவிட மனித உடம்பை
மேலும் பாதிக்கும்

சிமெண்டில் கலப்படமாம்
சரிந்துவிழுகிறது கட்டியசுவர்கள்
மிளகுக்கு நடுவே பப்பாளிவிதையாம்
மிளகாய்த்தூளில் செங்கல்தூளாம்
உணவுப்பொருளில் கலப்படம்
எப்படிச் செய்வதென்பது தேர்ந்த
வியாபாரிகளுக்கு மனப்பாடம்

இன்னும் இன்னும் இருக்கிறது
கேட்கக்கேட்க மனம் பதறுகிறது
எல்லா உரிமையும் ஜனநாயகநாட்டில்
இருக்கின்றது என்பதினால்
கலப்பட உரிமையை பட்டாபோட்டு
களிக்கின்றது ஒருகூட்டம்.

ஆயகலைகள் இப்போது 65
கலப்படம் கடைசியாய் புகுந்த
கைவந்தகலையாய் ஆகியது.
இந்த அக்கிரமங்களை
தமிழில் எழுதவந்தால்
அங்கும் கலப்படம ஆடுகிறது
சென்னைத்தமிழாம் நெல்லைத்தமிழாம்
தஞ்சைத்தமிழாம் அதெல்லாம் அமிழ்தாம்!

தொலைக்காட்சிகென்று
வெள்ளைக்காரன்மொழியொடுகலந்த
ஒரு தொல்லைத்தமிழைக்
கேட்கவும் கொடுமை.

இந்திரலோகத்து அமுதமாயினும்
கலப்படமின்றி
ஏதும் நம்கைக்குவராத நிலமை
எனும்போது தமிழ் என்ன செய்யும் பாவம்!



பாலில் நீரினை
பகுத்தறிந்த
அன்னப்பறவையையும்
அடியோடு காணோம்
நளன் தமயந்திக்கு
தூதுசென்றதில்
சோர்ந்து ஓய்வு
எடுக்கின்றதோ?

சாராயத்தில் கலப்படமாம்
சாவுஎண்ணிக்கை சொல்கிறது

கலப்படம் என்பதை
ஜாதிகள்மலிந்த நம்தேசத்தில்காணும்
கலப்புத்திருமணத்தில் வரவேற்போம்

பொன்னுடன் செம்பைசேர்த்தால்தான்
மின்னும நகைகள் உருவாகும்

புதுப்புதுவர்ணங்களின்கலவை
ஓவியக்கலைதரும் பிரமிப்பு

ஆணும்பெண்ணும் கலப்பதில்
அதிசியத்தக்கமனிதப்படைப்பு

ஆயின்
நோய்தீர்க்கும் மருந்தில்
குழந்தைஉணவில்
கலப்படம் செய்யும்கயவர்களை
விரல்நகம்போல்
வெட்டி எறியவேண்டும்
இல்லாவிடில் நம்
விரல்களே பறிபோய்விடும்.










--
மேலும் படிக்க... "கலங்குகிறேன்."

Tuesday, November 03, 2009

உள்ளம் கவர் இல்லம்!



”அழகினைத்தேடி உலகம் முழுவதும் திரிந்தேன் என் வீட்டுவாசலில் இருந்த புல்லின் பனித்துளியில் பிரபஞ்சத்தை தரிசிக்கத்தவறிவிட்டேன் ” என்கிறார் தாகூர்.

ஒவ்வொருமனிதனுக்கும் மகிழ்ச்சி அவனுடைய வீட்டின் மையத்திலிருந்தே ஆரம்பமாகிறது. எங்கு சென்றாலும் வீடு திரும்பும்பொழுது ஏற்படும் உற்சாகம் அளவில்லாதது

வீட்டை ஒவ்வொருக்கணமும் நேசிக்கும் மனிதர்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நேசிக்கும் ரசனைகொண்ட மாந்தர்களாக இருக்கின்றனர்.

ஒருவன் உலகளாவ ஓங்கி உயர்ந்து நின்றுதன் புகழ்க்கிளைகளை பரப்பினாலும் அவன் கால்கள் வேரூன்றி நிற்பது அவன வீட்டில்தான்.


உறவுப்பிரியங்களை அடையாளம் காட்டும் வீடு

இளமை முதல்முதுமைவரை நமது அந்தரங்கம் அனைத்தையும் கண்டுகொண்டிருப்பதுவீடு. நமக்கான எல்லாவற்றையும் சுமக்கும்வீடு வெறும் சுவர்களால் கட்டப்படது அல்ல , அங்கு அன்பிற்குரியவர்களின் சுவாசம் நிறைந்திருக்கிறது ! அது இளைப்பாற அமரும் மர நிழல்! விருப்பம் போல சிற்குவிரித்துப்பறக்க அகாயம் ! இயலாமையின் தோல்வி சறுக்கல்களில் கீழேவிழும்போதெல்லாம் நம்மை ஏந்திக்கொள்ளும் அன்புக்கரங்களைக் கொண்டது வீடென்பது.

வெளி உலகில் எத்தனையோ சாதனைகள் புரிந்தாலும் வெற்றிவாகைகளை சூடிக்கொண்டாலும் உலாசென்ற தேர் நிலைக்கு வருவது போல முடிவில் மனிதன் விட்டிற்கே திரும்புகின்றான்.

மகிழ்ச்சியுடனோ கோபத்துடனோ விருப்பமுடனோ வெறுப்புடனோ எப்படியாயினும் திரும்பும் நம்மை ஏற்றுக்கொள்ளும் வீடு கடவுளின் கருணைபோன்றது.

’என்வீடுமிகச் சிறியவீடு ஆனாலும்
வீடுதிரும்ப விரும்புகிறேன்
ஒவ்வொருவீடும்
நிரந்தரச்சூரியனை
ஜன்னல்வழியே அழைக்கிறது
படியில் ஏறியதும்
பயங்கள் மறையும்
பின்கதவைத்
திறந்துபார்க்கிறேன்
வீட்டிற்கு அப்பால்
வேறு எதுவும் இல்லை’

என்கிறார்

தேவதச்சன் தன்கவிதை ஒன்றில்.



இல்லறம்துறந்து கானகம் செல்லும் துறவிகளுக்கும் ஆகாயமே கூரையாய் சுவர்களில்லா வீடாக இருந்திருக்கவேண்டும்.

வாழ்க்கை எந்த ஒருஇடத்திலும் நின்றுவிடப்போவதில்லை அது ஒரு பிரும்மாணட் ஊர்வலம் ஊர்வலத்தின் உயிர்நாடியாய் வீடுகளும் மனிதர்களும்.

வீடுகளில் நாம் தங்குகிறோமோ இலையோ சிலவீடுகள் நம் மனதில் தங்கிவிடுகின்றன


.


ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வீடு என்பதன் பொருள் பல்பரிமாணமுடையது. புலம்பெயர்ந்த புகலிடங்களில் தங்களைப் பொருத்திக்கொண்டவர்களுக்கு சிக்கல்கள் இல்லை. . ‘எனது வீடு எங்கோ தொலைவில் திரும்பவியலாத தேசத்தில் இருக்கிறது’என்று வருந்தும் அகதிகளாய் இருப்பவர்களின் வீடு தரையில் இல்லை. அது அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. ஈழத்திற்குள்ளேயே புலம்பெயர்க்கப்பட்டு அலைக்கழிபவர்களின், முகாம்களில் இருப்பவர்களின் வீடுகளோ கல்லறைகளாகவோ மாற்றப்பட்டுவிட்டன. கூரை, சுவர்கள், வாசல், முற்றம் தோட்டம், பூச்செடி, கிணறு, பூனைக்குட்டி முதலியன கனவாய்ப்பழங்கதையாய் போய் தவிக்கும் அவர்களின் வாழ்வு மீள்வது என்று என்ற கேள்வி நமக்கு வதைத்துக்கொண்டே இருக்கிறது


உணர்ந்திருக்கிறீர்களா நீண்டநாள் கழித்து உங்கள் வீட்டுக்குச்செல்லும் போது வீதிமுனையிலேயே கால்களோடுமனமும் வேகமாய் நகர்வதை? பலநேரங்களில் வெளிதேசங்களிலிருந்து வீடுவந்து திரும்பும் போது வராமலேயே இருந்திருக்கலாம் என்று சிலருக்குத்தோன்றிவிடுவதுண்டு. வந்து மகிழ்ந்து களித்த சில நாட்களின் நினைவுநெடியின் தாக்கம் கொடுமையானது.





கால வெளிகளில் திரிந்தலைந்தபின் வீடு திரும்ப
என்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் வீடு
தன் அறைகளோடும் வாசத்தோடும்

என் அலைதல் ஒவ்வொன்றும்
வீட்டை மையப்படுத்தியே இருந்திருக்கிறது
ஒரு நாளைக்கு 56 தடவைகள் வீட்டைப் பற்றி நினைக்கிறேன்
பதினோரு முறை வெளியிலிருந்து வீட்டிற்குள் பிரவேசிக்கிறேன்
சதாசர்வ காலமும்
மூடிக்கிடக்கும் கதவைத் திறக்கும்போது கேட்கும் ஒலிகள்
என் காதில் ஒலித்துகொண்டே இருக்கின்றன
வீட்டுக்குள் தொங்கும் சட்டைகளோடு என் நினைவுகளும் தொங்க
வெளியே வெற்றுடலாய் அலைகிறேன்

வீட்டின் கூரைகளும் சுவர்களும் நெகிழ்ந்திருக்கின்றன
தன் எஜமானனுக்கான வரவை நோக்கி

இன்று கதவு திறக்கும் பொழுதில்
என் சப்தங்கள் உள்நுழைய
ஒடுங்குகிறது வழிதவறிய நத்தை
சுவர் மூலையில்.
நான் உரக்கச் சொன்னேன்,
அது தன் வழி கண்டடைந்த நத்தை’

எனும் ஹரன் ப்ரசன்னாவின் கவிதையும்






,
மரங்களும் சாலைகளும்
முடிந்து போன ஒரு
புள்ளியில்
இருந்ததாக ஞாபகம்
எனக்கொரு வீடு!

எனது செளந்தர்யத்தையும்
இளமையும் எடுத்துக் கொண்டு
தன் தனிமையும் துயரையும்
திருப்பித் தந்தது அது!

ஆவேசமற்ற ஆற்றாமையுடன்
அதனிடம் முறையிட்டப் போது
இறுக்க சாத்திக் கொண்டது
தன் கதவுகளையும் ஜன்னல்களையும்!

வளையல்கள் உடைய ரத்தம் கசிய
தட்டியும் ஒரு போதும்
திறக்கவில்லை அவ்வாழ்வின் கதவுகள்.

அசைக்க முடியாத நம்பிக்கையுடன்
மீண்டும் மீண்டும் வீடு திரும்புகிறேன்,
சாத்திய கதவுகளுக்கு அப்பால்
சாத்தியப்படும் வாழ்வினைத் தேடி!’

****************************************

எனும் உமாஷக்தியின் கவிதையும் இல்லங்களைப்போலவே நம் நெஞ்சில் பதிந்துவிடுகின்றன.
மேலும் படிக்க... "உள்ளம் கவர் இல்லம்!"

Monday, November 02, 2009

திக்குத் தெரியாத காட்டில்...

மகிழ்ச்சியான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.
அதேநேரம் அடக்கமாக எளிமையாக இருக்கும் சாதனையாளர்களையும் பார்க்கிறபோது
இதையெல்லாம் விளம்பரப்படுத்தவும் வேண்டுமா என்றும் தோன்றிவிடுகிறது. ஆனாலும் அன்பு நட்பு உள்ளங்கள் பல கேட்டுக்கொண்டதால் இந்தத்தகவலை இங்கே அளித்துவிட்டு நாவலினை விரைவில் தட்டச்சு செய்து அளிக்கிறேன். கையில் எழுதி (100பக்கங்கள்) அனுப்பிவிட்டதால் கணிணியில் சேர்த்துவைக்கவில்லை.

நன்றி!












<\
மேலும் படிக்க... "திக்குத் தெரியாத காட்டில்..."

Thursday, October 22, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே!(சர்வேசன்500’நச்’கதை2009 போட்டிக்கு)

(மு.கு.

முந்தின கதை நன்றாக இருந்தாலும் ’நச்’ இல்லையென சர்வேசன் சொல்லிவிட்டதால் திரும்ப இன்னொன்று எழுதி அனுப்புகிறேன்!)





1989 ஜனவரி, 7.

“கவுண்டரய்யா உங்க மகன் ராசு. ரண்டு வயசுக் கொளந்தப் பையனாட்டமா இருக்கான்? அராமித் தனம் பொறுக்க முடிலீங்கோ. நெம்ப லொள்ளுங்கோ. என்ர ஊட்டுக்குள்ள பூந்து ஆறு மாசப் பச்சக் கொளந்தைனுங்கூடப் பாக்காம அருக்காணிப் புள்ளைகிட்ட இருந்து அதும்பட கையத் திருகி அதுன்ர பொம்மையைப் புடுங்கி ஒடச்சிப் போட்டுட்டானுங்கோ.”

”ஏன்ரா சின்னசாமி! அவனும் கொளந்தப் பையந்தான? போச்சாது போனு சொல்லிப்போட்டுப் போவயா? அத உட்டுப்போட்டு நாயம் வெக்க வந்துட்ட? செரி செரி.. இந்தா ஆயரன் ருவா வெச்சுக்க. உன்ர புள்ளைக்கு புதுப் பொம்மய வாங்கிக் குடுத்துச் சீராட்டு போ போ!”







1997 ஜூன்,18

”கவுண்டரய்யா பள்ளிக்கோடத்துல ராசு என்ன பண்ணிப்போட்டாந் தெரியுமா? பக்கத்துப் பையனப் பாத்து காப்பி அடிச்சிப் போட்டானுங்க. பத்து வயசுங்கூடி ஆகல. அதுக்குள்ள இத்தச்சோட்டு அக்குறும்பு ஆகாதுங்கோ.”

”ஆமாய்யா! நீங்கல்லாம் ஒரு வாத்தியாய்யா? பொறளி பேச வந்து போட்டீங்க. ஒளுக்கமாப் படிப்புச் சொல்லிக் குடுத்தா அவன் ஏனுங்க காப்பி அடிக்கப் போறான்? ஒங்க லச்சனம் அப்பிடியிருக்குமாட்ட இருக்குது. போவீங்களா அக்கட்டால!









2006 செப்டம்பர், 7

”கவுண்டரய்யா! காலேசுல ராசு வளுசப் புள்ளைகளப் பண்ற இமிசு நெம்ப சாஸ்தியாயிட்டே போகுதுங்கோ. நெம்ப நிதான பசங்களைச் சேத்துகிட்டுச் சீக்கி அடிக்கறதும், அளும்பாப் பாட்டுப் படிக்கறதும் ஒரு ரூப்பிலாம போய்க்கிட்டே இருக்குதுங்கோ!”

”எல்லாம் வயசுக் கோளாறு! அந்த வயசுல நாம கூடத்தான் புள்ளைகள கிட்டக் குறும்பு செஞ்சோம். காலேசுக்கு வர்ர புள்ளைகள ஒளுக்கமாச் சீல துணிமணி போட்டூட்டு வரச் சொல்லுங்க அங்கியும் இங்கியும் காமிச்சீட்டு அவிங்க வந்துபோட்டு அப்பறமாப் பசங்ககள நொள்ள சொல்றது. இதே தொளிலாப் போச்சு”





2008 ஜுலை9

”கவுண்டரய்யா! நிச்சயம் பண்ணுன என்ர புள்ள கையைப் புடிச்சு ராசு இளுத்துப்போட்டான். இந்த அக்குறும்புக்கு நீங்க நாயம் சொல்லிப் போடுங்க.”

”அடப் போய்யா! ஊரு முச்சூடும் இந்தக் கெரகத்தைச் சொல்லீட்டுத் திரியாத. லச்ச ரூவா பணம் இருக்குது. எடுத்திட்டு புள்ளையையுங் கூட்டிகிட்டு எங்காச்சும் ஓடிப் போயிரு.”








2009 ஆகஸ்ட், 16

”கவுண்டரய்யா! ஐயோ என்ன காரியம் பண்ணிப் போட்டீங்க?“

”நான் செஞ்சதுல என்ரா தப்பு? நேத்துத் தண்ணி மப்புல அந்த நாசமத்தவன் என்ன பண்ணிப் போட்டாந் தெரியுமா? சொதந்திர தினத்துக்கு ஏத்தி வெச்ச கொடிய உருகிப் போட்டுப்போட்டு கொடிக் கம்பத்துல மாட்டக் கட்டி வெச்சு வெளுத்துகிட்டிருந்தாந் தெரியுமா? ஏண்டா இப்புடி அக்குறும்பு பண்றேனு கேட்டதுக்கு வாயில வந்தபடி என்னைய வாத்தா வக்கானு பேசிப்போட்டான். அதாச்சும் பரவாயில. கொடியப் பத்தியும் சொதந்திரம் வாங்கிக் குடுத்தவிங்க பத்தியும் அட்டூளியமாப் பேசிப்போட்டான். அதான் பெத்தமவன்னும் பாக்காம நொங்கு சீவறாப்புலா ஒரே சீவா அவனச் சீவிப் போட்டேன்”

கதர்ச் சட்டையில் படிந்த ரத்தக் கறையுடன் கவுண்டர் காவல் நிலையம் நோக்கி நடந்தார்.


மேலும் படிக்க... "நெஞ்சு பொறுக்குதில்லையே!(சர்வேசன்500’நச்’கதை2009 போட்டிக்கு)"

Tuesday, October 20, 2009

உதவி.(சர்வேசன்500 ’நச்’ னுஒருகதை2009போட்டிக்கு)

”புது பைக்கு ! புது ட்ரஸ்ஸு !புது ஆபீசு! கலக்கற நந்து!”

பாலீஷில் பளபளத்த ஷூவிற்குள் தன் பாதங்களை நுழைத்துக்கொண்டிருந்த

நந்தகுமார் ,தங்கையின் கிண்டலான பேச்சை ரசித்தபடி,”தாங்க்ஸ் நித்யா “ என்றான்.

முதல் நாள் அலுவலகம் போகிற டென்ஷனில் அவனுடைய
முகம் அந்த ஃபான்காற்றிலும் லேசாக வியர்க்க ஆரம்பித்தது.


வாசலுக்குசென்று பைக்கினைஆரோகணித்து அமரும்போது உள்ளிருந்து அவன் அம்மா ஓடிவந்தாள்.

வரும்போதே கையில் இருந்த சின்னகாகிதப்பொட்டலத்தைபிரித்தபடி அவள்வரவும் அதைப்பார்த்த நந்தகுமார் சட்டென முகம் மாறினான் .


பிறகு எரிச்சலாக,” அம்மா உஙகளுக்குத்தான் தெரியும் இல்ல, எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு? என்றான் .

“இல்லடா நந்து. முத நாள் ஆபீசுக்குப்போறே! அங்க நல்லபேரு வாங்கி நீடிச்சி இருக்கணுமே அதுக்கு தெய்வம் துணை இருக்கணுமே அதுக்குத்தான் நெத்தில அண்ணாமலையான் விபூதியை வைக்கலாமேன்னு ...” தயக்கமாய் இழுத்தபடியே அவள்பேசுவதை கேட்கவும் பிடிக்காமல் நந்தகுமார் பைக்கைஉசுப்பி சாலைக்கு
விரைந்தான்.



’’நல்லபையன் தான், ஒருகெட்டபழக்கம் கிடையாது,எல்லார்க்கும் உதவற நல்ல உள்ளம்.
ஆனா கடவுள் நம்பிக்கைமட்டும் இல்லாம இப்படியே வளர்ந்துட்டுவரானே .... எனக்குக்கவலையா இருக்கே..’ புலம்பியபடியே வீட்டிற்குள் திரும்பிவந்தாள் நந்தகுமாரின் அம்மா.

நந்தகுமார் பைக்கை அந்த நெரிசலான சாலையில் செலுத்திக்கொண்டு வந்தபோது சாலைநடுவே பதட்டமுடன் தட்டுத்தடுமாறி நடந்துவந்துகொண்டிருந்த அந்த வயதான கிழவியைக்கண்டான்.

பார்வையை இழந்த நிலையில் ஒருகையில் அலுமினியதட்டை ஏந்திக்கொண்டு
இன்னொரு கைவிரல்களால்காற்றைத் தடவியபடி சாலையைக் கடக்கமுயன்றுகொண்டிருந்தாள். சுற்றி நடக்கும் மக்கள் யாரும் கிழவியைக்கண்டுகொண்டதாகத்தெரியவில்லை.

எந்தநேரமும் ஏதாவது ஒரு வாகனம் அவள்மீது ஏறிவிடும் அபாயசூழ்நிலையை நந்தகுமார் தூரத்திலிருந்தே பார்த்து உணர்ந்தான்.



சட்டென பைக்கை சாலை ஓரமாய் நிறுத்திவிட்டு அவளருகில் சென்றான் .

அவள்கையைபிடித்து ,”பாட்டியம்மா! ரோடைக்ராஸ் செய்ய நான் உதவறேன் என் கையைப்பிடிச்சிட்டு வாங்க!” என்றுதன் கரத்தை அவள் கரத்தோடு இணைத்துக்கொண்டான்.


கிழவியின் சுருக்கம் விழுந்த முகம் விரிந்துமலர்ந்தது !பார்வையில்லாத விழிகளில் நம்பிக்கை ஒளிபிரகாசமாய் தெரிய அவன்கைவிரல்களை இறுகப்பிடித்துக்கொண்டாள்.

சாலையின் எதிர்ப்புறத்திற்கு இருவரும் வந்தனர்.

“இங்க அவ்வளோ நெரிசல் இல்லை ..கவனமா நடங்க பாட்டிம்மா...நான் வரேன் ” என்று சொல்லியபடியே கையைவிடுவித்துக்கொண்டு நகர இருந்தவனிடம் அந்தக்கிழவி நெகிழ்ந்த குரலில் சொன்னாள்.

”தம்பீ! நீ நல்லா இருக்கணும்! சமயத்துல கடவுள் மாதிரிவந்து என்னைக் காப்பாத்தினியேப்பா !”
மேலும் படிக்க... "உதவி.(சர்வேசன்500 ’நச்’ னுஒருகதை2009போட்டிக்கு)"

Monday, October 19, 2009

பிரியமழை!

கொட்டு மழைமிகுதியில்
கரையுடைத்துக்கொள்ளும்
காட்டாற்றினாய் மாறாமல்
ஆழ்ந்து சூழ்ந்து
தனக்குள்ளே
பெருகிப்படர்ந்து
விளிம்புவரை
ததும்பிநிற்கும்
கேணி நீராய்
என்னுள்பொங்குகிறது
உன்மீதான
என் பிரியங்கள்
உன்னைத்திணறவைக்கும்
உத்தேசமின்றி
அவைகள்
என்னுள்
பத்திரப்படுத்தப்பட்டுள்ளது

அன்பென்பது
ஆதிக்கம் செலுத்த அல்ல
என்பதை
புரிந்துகொண்டிருப்பதால்
மதிக்கின்றேன்,
ஆரவாரமில்லாத
உன் பிரியமழையையும்
அமைதியை அடக்கிய
உன் புன்னகையையும்.
மேலும் படிக்க... "பிரியமழை!"

Saturday, October 17, 2009

தீபாவளிக்குதூகலங்கள்!

அன்று.....
-- ஒருவாரம் முன்பே
அம்மாதயாரித்துவிடும்
மிக்சரும் மைசூர்ப்பாகும்
பாதுஷாவும் பாதாம் அல்வாவும்
இன்னும் சில
பலகாரங்களையும்
எங்கள்பார்வையில்
படக்கூடாது என்று
தூக்கிலிட்டுமறைத்துவிடுவாள்
சந்தோஷப்பூரணத்தை
உள்ளேவைத்திருக்கும்
சோமாசிப்பலகாரம்
முரசடித்து தன் இடத்தை
அறிவிக்க
தம்பிகளுடன் சேர்ந்து
தூக்கு வைத்த இடத்தை
மோப்பம் பிடித்து
பாதிதூக்கைக்
காலிசெய்துவிடுவோம்
’இறைவனுக்குப்படைக்குமுன்பே
எதற்கு எடுத்தீர்கள்?’
என்று அம்மாகேட்கும்போது
’குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானே அம்மா?’
என்ற எங்கள்பதிலில்
அம்மாவின்கோபமெல்லாம்
பறந்தேபோய்விடும்!


தூக்கக்கலக்கத்தில்
தலையணைக்கடியில் வைத்த
விரல்களைப்பிடித்திழுத்து
மருதாணி வைக்கும்போது
சில்லிட்டுப்போவது
உள்ளங்கைமட்டுமல்ல
அம்மாவின் பாசத்தில்
உறையும் இதயமும்தான்

முதல்நாளேபட்டாசுகளை
முறத்திலிட்டு
மொட்டைமாடியில்
காயவைத்து
அவரவர் பங்கிற்கு
எது எது என்று
முன்கூட்டியே திட்டமிடுவோம்
பெரும்பாலும்
பெண்குழந்தைகளுக்கு
கம்பிமத்தாப்புகளும்
தரைச்சக்கரமும்
விஷ்ணுசக்கரமும்
பூவானமும்தான்
வழங்கப்படும்

வாழ்த்து அட்டைகள்தவிர
அஞ்சலட்டையிலும் அழகாய்
ஒருமயிலோ அல்லது அன்னமோ
வரைந்து அன்பான தீபாவளி
‘வாழ்த்துகளை அனுப்பிவைப்போம்


பணிக்களைப்பில்
கரகரத்துப்போனகுரலில்
அம்மாவின் நலங்குப்பாட்டோடு
தலையில் எண்ணை அரங்கேறும்
நீமுந்திநான்முந்தி என
குளியலறக்குப்போட்டிபோட்டு
குளித்துவந்ததும்
அம்மாவின் கையினால்
சாம்பிராணிப்புகைவாசம்
கூந்தலில் படரும்

’பார்த்துப்பார்த்து’
என்று அப்பா
பலதடவைஎச்சரித்தும்
பட்டாசுக்காயம்
கட்டைவிரல் நுனியிலோ
கால்விரல் இடுக்கிலோ
பட்டுக்கொள்ளாமல்
பெரிய தம்பி
தெருவைவிட்டு வந்ததில்லை.

தொடங்கிய கொஞ்சநேரத்திலேயே
வெடிக்கும்பட்டாசின்
கந்தக்கத்துகள்
கண்ணில்பட்டுவிட
பாதியிலே
அடங்கிப்போகும் என்
பட்டாசு ஆர்வம்

வெளிக்காய வலி அறியா
உளமனசின் உற்சாகங்கள்,
மகிழ்ச்சி ,கலகலப்பு,
உறவினர்களின் வருகை,
பேச்சு ,சிரிப்பு என்று
மதியம் மாலைவரைநீண்டு
இரவில் மத்தாப்பாய்
ஒளிர்விடும்!

இன்று..

பண்டிகைநாள் என்றாலே
கண்டிப்பாய் பலநிகழ்ச்சிஎன்று
உறவுகளுக்கிடையே
இடைவெளியை உருவாக்கி
இல்லத்திற்குள்வந்து
உட்கார்ந்து ஆளுமைசெய்யும்
தொலைக்காட்சிப் பெட்டியால்
தொலைந்தேதான் போனது
தீபாவளிக் குதூகலங்கள்!
மேலும் படிக்க... "தீபாவளிக்குதூகலங்கள்!"

Tuesday, September 15, 2009

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளுக்காக.







இன்று வாழ் சமுதாய்ச் சிறப்பெலாம்
எழில் படங்களாய் வார்த்திட்ட வித்தகர்
ஒன்றினோடொன்று மாறுபற்றிடும்
உலகமக்களின் உள்ளங்கள் ஆய்ந்தவர்
வென்றிபெற்றிடும் மானிடன் மாட்சியும்
வீழ்ச்சியுற்றிடும் தாழ்ச்சியும் கண்டவர்
என்றும் வாழும் தமிழிலக்கியம் தந்தவர்
இதயங்களில் இன்றும் இருப்பவர்!

மனிதர் மேல் அபிமானம் மிகுந்தவர்
மாநிலமுதலமைச்சர் பதவிவகித்தவர்
கனவு கொண்டிடும் நற்றமிழ் வாழ்வுறக்
கதை கவிதைகள் பலவும் படைத்தவர்
புனிதமாம் சமுதாயம்பிறந்திடப்
புதினம் பற்பல நன்கு அளித்தவர்
இனிமையே உருவாகவேவிளங்கியவர்
இதயங்களிலே இன்று இசைந்தே இருப்பவர்!

காவிரி வெள்ளமென களீமணம் கொண்டவர்
கலைகள் யாவினும் ரசனை மிகுந்தவர்
பூவினைப்போன்றுள மென்மனம் வாய்த்தவர்
பொருந்து நண்பரைத்தோளொடு அணைப்பவர்
நாவினாலுரைத் தேனினை வார்த்தவர்
நாடு முற்றும் புகழ்பெறத் திகழ்ந்தவர்
யாவும் செய்யும் பேனாவினை ஆணடவர்
யாவரும் போற்றும் தலைவராய் இருப்பவர்!
மேலும் படிக்க... "அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளுக்காக."

Monday, August 24, 2009

2050 லவ்ஸ்டோரி!







அனி வீடுவந்தபோது அவள் அப்பாபெரியசாமி ஆடவர்மலர் பத்திரிகையில் ஆழ்ந்திருந்தார்.

“டாட்! இன்னமும் இந்த கையில் வச்சி புக் படிக்கிற பழக்கத்தை விடலையா நீங்க? அதான் உங்க வாட்ச்லயே நெட் கனெக்‌ஷன் இருக்கே அதுலபடிக்கவேண்டியதுதானே?” என்றாள், தனது பேனாபோன்ற ஒரு சாதனத்தைத் திறந்து மின்னஞ்சலைப்பார்த்தபடி.

“என்னதான் சொல்லும்மா புஸ்தகம்னா நாங்க அந்த நாள்ள குமுதம் விகடன்லாம் கைல எடுத்துவச்சிட்டு ஆழ்ந்து படிக்கிற சுகம் இருக்கே அதுக்கு ஈடு ஆகாதுஅனிதா…” என்று ஆரம்பித்தவரைக் குறுக்கிட்டாள் அனி.

‘கால் மீ ‘அனி’ டாட்! நான் இதை முதல்லயே இந்தக்கதையை எழுதப்போகும் ஷை(லஜாபாட்டி)கிட்டயும் சொல்லி எச்சரிச்சிட்டேன்…இந்த 2050ல அ, னி , தா ன்னு இவ்ளோ பெரிய பெயரை யாராலும் கூப்பிடமுடியாதுன்னுதான் நான் அனி ன்னு மாத்திக்கிட்டேன்..இன்ஃபாக்ட் இருபத்தி ரண்டு வருஷம் முன்னாடி எனக்கு நீங்க உங்க மாம் பெயரான அபிதகுசலாம்பரி என்கிற பெயர் வைக்க நினச்சிங்களாமே?அம்மாதான் பிடிவாதமா அனிதான்னு வச்சதா கேள்விப்பட்டேன்.ரெடிகுலஸ் என்ன இதெல்லாம்? அந்தகாலம் மாதிரியே பெண் அடிமைகளா இருப்பாங்கன்னு நினச்சீங்களா?”


மகள் போட்ட போட்டில் பெரியசாமி பேசாத சாமியாகி விட்டார்.
தனக்குதிருமணம் ஆகும் முன்பு எப்படி இருந்தோம் என நினைத்துப்பார்க்க ஆரம்பித்தார்…
அசைபோடும் பழைய நினைவுகளேஅவரது தனிமைக்குத் துணை.

லஞ்ச் டாட் காமில் மதிய உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு டிவியை ஆன் செய்தார்…

ஏன்ஷியட் நெட் ஒர்க்ஸ் சானலில் பனிக்கால உடையில்விக்ரம், கடும்கோடைகால உடையிலிருந்த ஷ்ரேயாவோடு டுயட் பாடிக்கோண்டிருந்தார்,

சட்டெனத்திரும்பின அனிதா டிவியைப்பார்த்து அலறினாள்.

“ஓ மை காட்! கந்தசாமியா? 2009ல் வந்தபடமா?ஏன் இப்படி பழையபடமாவே வைக்கிறாங்க? டாட் இதெல்லாம் உங்ககாலப் படம்!நீங்கதான் பாக்கணும்! நான் பப் அல்லதுக்ளப்புக்குப்போகப்போறேன் ..மாம் வந்தா பிஸ்ஸா சமைச்சிவைங்கஇல்லேன்னா ஹாங்காங் நுடுல்ஸ் செய்யுங்க… மாம்ஸுக்கு அதான் பிடிக்கும்…. ஆமா எங்கபோனான் என் அருமைத்தம்பி டாம்?”

“தாமோதரனா? என்னம்மா அவன்பெயரையும் இப்படி சுருக்கிட்டே? அவன் டென்த் க்ரேட் ஆச்சேம்மா சின்சியரா படிக்க ப்ரண்ட்வீடுபோனான்”







‘வாட் ?மணி பத்தாகுது இன்னும் டாம் வீடுவரலையா? என்ன டாட் நீங்க பொறுப்பே இல்லாம இருக்கீங்க? ஒரு வயசுப்பையன் இருட்டி இவ்வளோநேரம் வெளில இருக்கான்னு கவலையே இல்லையா? மம்மி ஆபீஸ்போய் உழைப்பாங்களா இல்ல டாம் பத்தி கவலப்படுவாங்களா? நீங்க இப்படி ஆடவர் மலர்புக்படிச்சிட்டு ஆணீயம் பேசிக்கிட்டு இருக்கறது நல்லாவே இல்ல… நைட் மம்மி வந்ததும் உங்களுக்கு நல்ல டோஸ் இருக்கு….சரி நான் கிளம்பறேன் க்ளப்ல ஜீ(வா), ஜா(னி) ஜோ(தி) ரி(ஷி) எல்லாம் வெயிட் செய்துட்டு இருப்பாங்க..பை டாட்’

அனி அந்த சொகுசுக் காரில் ஏறி உட்கார்ந்து ரிமொட்டை எடுத்துக்கொண்டாள்.. நகரப் போக்குவரத்து சந்தடி ரிமோட்டை ஆஃப்செய்யவைத்தது.

.”ச்சேசே ப்ளடி ட் ராஃபிக்…..” என்று அவளே ட்ரைவ் செய்ய ஆரம்பித்தாள்.

கார்கணிணித்திரையில் தர்ம் சிரித்தான்… “ ஹாய் ஹண்ட் சம்!மை ப்ரின்ஸ்! என்றைக்காவது நீ என்னை ஏறெடுத்துப்பார்த்து ஐலவ்யூ சொல்லத்தான் போறேடா? என்கிட்ட என்ன இல்ல,…பழைய நடிகை பாவனா மாதிரி இருக்கேன்னு நீயே ஒருவாட்டி சொல்லி இருக்கே! ஐஞ்சடி அஞ்சங்குல உயரமும் இந்த ரோஜாப்பூநிறமும், கடைஞ்சிஎடுத்த தேகமும் எல்லா காளைகளையும் மயக்கும்போது நீ மட்டும் என்னடா விஸ்வாமித்ர தபஸ் செய்றே? நான் மேனகையா மாறணும்னு நீ எதிர்பார்த்தா ஐயாம் ரெடி யார்!”

திரை நோக்கி பறக்கும் முத்தமிட்டாள்.

அனி யின் புத்தபுது ஜப்பானிய டொகொமோ மாடல்
5 ஜிசெல்போனில்(பிரசவம் தவிர அதில் எல்லா காரியங்களையும் வெற்றிகரமாய் செய்யலாம் என அதைக்கண்டுபிடித்த யென்சிங்மங் சொல்கிறார்) ஜோ(தி) வந்தாள்.

“வாட்ஸ் அப் டீ?”

“ஹேய் அனி…உன் ஆளு , இங்க மர்லின் மால் வந்திருக்கான்..அவன் காரை நான் பார்த்திட்டேன்....அன்பேசிவம்னு காரின் பின் கண்ணாடில கொட்டையா எழுதி இருக்கு, அவனேதான்..'


"ரியலி?'

”யெப் உடனே இங்க வா அனி"

*********************************

மர்லின்மாலுக்குள் அனி நுழையும்போது மெக்டொனால்ட்ஸ் வாசலில் பர்கர் கையோடேயே வந்து வழிமறித்தான் வா(சன்).

சிந்தெடிக் இழைகள்மின்னும் உடையுடன் தெரிந்தான் சராசரிக்கும் அதிகமான உயரம் ஆனால் ஆண்மையின் கம்பிரம் அதில் அதிகமாகவே இருந்தது.முகவெட்டில் பழைய நடிகர் ஷாரூக்கான்,சிரிப்பில் பழைய மாதவன்.துடிப்பில் பழையசூர்யா மொத்தத்தில் 2050ன் புதுமுகம் சாகர் போல அட்டகாசமாய் இருந்தான்.

“ ஹேய் அனி உனக்காகவே நான் வாழ்கிறேன்” என்றான் போதையான குரலில்.

“முதல்ல வழிவிடு…நான் அர்ஜண்டா போகணும்”

“அனி மை ஹனி!மை ப்ரெட்டி கேர்ல்! என் இனிய அழகுதேவதையே…!எவ்வளவு காலம் ஆனா என்ன தமிழ்ப்பெண்களுக்கு என்றும் தனி அழகுதான்.உன் நினைவில் நான் இருக்கேன் !அனி !இன்னும் நான் யார்கூடவும் டேட்டிங் வச்சிக்கல… பிகாஸ் உன்கூடத்தான் வாழணும்னுதான்..அனி!நான் டேட்டிங் கேட்டால் உடனே ஓடி வர ஆயிரம் பேர் இருக்காங்க ஆனா எனக்கு அவங்க வேண்டாம்.லுக் அனி ! நான் நாலுகோடி(டாலர்) சொத்துக்கு ஒரே வாரிசு.என்னை ஏன் நீ கல்யாணம்செய்துக்கக்கூடாது?”

“ஹலோ ஹலோ கொஞ்சம் அடங்கு….நான் தான் தர்மை லவ்பண்றேன்னு உனக்கு தெரியுமில்ல?”

“அதனால் என்ன அனி~ இ து 2050… அவனைக் காதலிச்சிக்கோ.. என்கூட டேட்டிங் வச்சிக்கயேன்..”

“வா! நான் மாடர்ன் கேர்ல்தான்… ஆனா உண்மையான காதலை மதிக்கிறவள். இன்னிக்கு விஞ்ஞானம் அசுரவேகத்துல வளர்ந்து மனித உறவுகளை சீரழிச்சிட்டிருக்கு… ஆண் பெண் இணைப்பை பயாலஜிகல் ஈவெண்ட்டா பாக்றாங்க ஆனா நான் மனசோட சம்பந்தப்படுத்திப் பாக்றேன் எனக்கு ட்ரூ லவ் தான் பெருசு என்னால் உன்மனசு கெட்டுருந்தா ஸாரி..குட்பை”

வாசனை ஒருவழியாய் கழற்றிவிட்டு ஜோதியை மொபைலில் தேடினாள். அவள் அப்போதுதான் ரெஸ்ட்ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.

“ஜோ! நான் 'டாய்ஸ் ஆர் அஸ்' கடைவாசலில் நிக்கறேன்” தகவல் கொடுத்தாள்

“யா யா…என் செல்லுல நானும் உன்னைப்பார்த்துட்டேன்.. அங்க வரேன் இரு”

ஜோ வந்ததும்
“அனீ….இந்த காம்ப்லெக்சில் தர்ம் இருகிற இட ம் சின்னகோயில் .அ துக்கு கார்லதான் போகணும்டி ..24வது மாடி”என்றாள்.

“மொபைலில் கோயிலைத்தேடினியா?”

“தேடி அங்க அ வ னைப் பார்த்தும் ஆச்சி… வா போகலாம்”

ஹைட்ரஜன் திரவஎஞ்சினை இருதயப்பகுதியில் தாங்கி இருந்த அந்த அதிநவீன சொகுசுக்கார் வேகமாக மேல் தளம் ஏறியது. பார்க்கிங் ஸ்லாட்டில் காரை செருகிவிட்டு இருவரும் மூச்சிறைக்க வந்தார்கள்,

அங்கே இருந்த சின்ன பிள்ளையார் கோயிலில் உட்கார்ந்து நெற்றியில் விபூதிப்பட்டை,இடுப்பில் பட்டு வேஷ்டியுடன் பாலும்தெளிதேனும் த ருவதாகவும் பதிலுக்கு சங்கத்தமிழ் மூன்றும் தரும்படியும் மெய்மறந்து பிள்ளளயாரிடம் கேட்டுக்கொண்டிருந்தான் தர்ம்.

“ஹாய் தர்ம்?”

யார் இந்த கணபதி பூஜையில் கரடி என அதிர்ந்து நிமிர்ந்தான் தர்ம்.

அனிஅவன் அருகில் சென்றாள்..ஜோ தான் போவதாயும் தர்மை சரிக்கட்டும்படியும் ஜாடைகாட்டிவிட்டு நகர்நதாள்.

“தர்ம் நான் ரெடியா… டேட்டிங்லாம் எனக்கும் பிடிக்கல வச்சிகிட்டாலும் அது உன்கூடத்தான்.. நம்ம கல்யாணம் எப்போன்னு சொல்லேன் ப்ளீஸ்?”

“லுக் மிஸ் அனிதா…எனக்கு இந்தக்கண்டதும்காதலில் நம்பிகை இல்ல…உன் பார்வைல நான் முப்பதுவருஷம் முன்னாடி இருந்திருக்கவேண்டிய மனுஷன் தான்..அப்படியே இருக்கட்டும்…என்னால உங்க மாடர்ன் லைஃபுக்கு ஈடுகொடுக்கமுடியாது…இதை பலதடவை சொல்லியும் இப்படி நான் எங்கே போனலும் தொடர்ந்து வந்து இப்படிக் கேட்டுதொல்லை பண்றீங்களே?”

“தர்ம் ஐ லவ் யூ.நீ இல்லாம என்னால் வாழவே முடியாது உன் உருவம் என்மனசிலயே பதிஞ்சிருக்கு அங்க வேற யார்க்கும் இடம்இல்லை”

“இந்த வசனமெல்லாம் பழைய தமிழ்சினிமாக்கு லாயக்கு… என்னைவிடு தாயே !நான்போறேன் “

பட்டு வேஷ்டிதடுக்கத் தடுக்க எழுந்த தர்ம் வேகமாய் எஸ்கலேட்டரில் இறங்கி ஓடி பேஸ்மெண்ட்டிலிருந்து காரில் ஏறிக் கொண்டான்.

அனிதா திகைப்புடன் அப்படியே நின்றவள் தன் செல்போனில் அவன்கார்போகும்பாதையை கவனித்தாள்.

கார் ஜெய்நகர் பகுதியில் பத்மஜா வீட்டுவாசலில் நிற்கவும் அதிர்ந்தாள்

“வாட் த ஹெல் இவன் கார்போய் அவ வீட்ல நிக்குது?’

பத்மஜா மௌண்ட்கார்மல் கல்லூரியில் அனியுடன் படித்தவள்.பக்கா பட்டிக்காடு. பாவாடை தாவணி என்று அணிந்து பாவயாமி ரகுராமம் பாடிக்கொண்டிருப்பாள். தன் பெயரை யாராவது பத்து என்று அழைத்தால்,"அபசாரம் ...சுவாமிக்கு ஆகாது" என்று புலம்புவாள்.
அவள்வீட்டிற்கு தர்ம் ஏன் போகிறான்?

அடுத்த பத்தாவது நிமிடம் அனி ,தர்ம் முன் ப்ரசன்னமானாள்.
“தர்ம் திஸ் ஈஸ் டூ மச் .இந்த bad m a ja க்காகவா என்காதலை நீ நிராகரிச்சே ?இவ என்னைவிட எதில உ சத்தி ? பலூன் மாதிரி இருக்கா இந்த பேட்மஜா?”

“பத்மஜா என்றால் பத்மமான தாமரையில் அமர்ந்திருக்கும் திருமகள்.என்று பெயர் .உனக்கு செம்மொழி தமிழும் சரியா தெரியாது தேவமொழி சம்ஸ்க்ருதமும் புரியாது…நுனிநாக்குல ஆங்கிலம் பேசும் நவநாகரீக மங்கை நீ!” தர்ம் சீண்டினான்.

“ ஏய், பேட்மஜா! என் ஆளுடிஅவன் விடு அவனை” என பத்மஜாவை பிடித்துத்தள்ளினாள் அனிதா.

“ மிஸ் அனிதா இதப்பாருங்க….நான்பொறுமையான ஆண்பிள்ளைதான் ஆனா என் காதலிமேல யார் கைவச்சாலும் வெட்டிடுவேன் ஆம்மா?”

தர்ம் உறுமவும் அனிதா அவமானத்தில் முகம் சிவக்க வீடுவந்தாள்.

ஆனால் மறுநாளே ஒரு விபரீதமுடிவெடுத்தாள்.
***************************************************

டிசம்பர்மாதத்திய பனிப்புகை, சாலையில் பரந்து சூழ்ந்திருக்க
அந்த நடுநிசியில் அனி, காரில் ஏறி புறநகர்ப்பகுதியில் இருந்த அந்த மேலைநாட்டுவாசனை கொண்ட காலனிக்குள் காரை செலுத்தினாள் தர்ம் வீட்டுவாசலில் காரை ஓசைப்படாமல் நிறுத்தினாள்.

மெல்ல காம்பவுண்டுக்குள் குதித்தாள்.

நல்ல வேளை வள்கம் சொல்லும் நாய்கள் ஏதுமில்லை

மெல்லிய கான்வாஸ் ஒலியோடு இருபக்கமும் கண்களைத் துழாவினாள், ஹாலின் ஜன்னல் வெண்டிலேட்டரின் கண்ணாடிகளை ஓசையின்றி அகற்றினாள்

மெல்ல உள்ளே உடலை நுழைத்து வளைந்து இறங்கினாள்.

ட்ராயிங் ஹால் ரீடிங் ஹால் அடுத்து வீடு நடுவில் தெரிந்த மாடிக்குச்செல்லும் படிகளில் ஏறி சன்ன நீல நிற வெளிச்சம் தெரிந்த பெட்ரூமுக்குள் போனாள். அங்கு கட்டிலில் கழுத்துவரை கம்ஃபர்ட்டரைப் போர்த்திக்கொண்டு தர்ம் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தான்.

அனி அவன் அருகில்வந்து நின்றாள்.

“ஹேய் ஹாண்ட்சம் .தூக்கத்திலயும் நீ அழகுடா செல்லம்!இந்த அழகு எனக்குக்கிடையாதா?அப்படி என்றால் அந்த பேட்மஜாக்கும் கிடைக்கக் கூடாது ,, காதலுக்காக கொலையும் செய்வா இந்த மிஸ்அனி,ஆமா.. ஒழி நீ செத்துப்போ உனக்கு என்கையால்தான் முடிவு”
குனிந்து பலத்தையெல்லாம்திரட்டி கைகளை அவன்கழுத்தில் வைக்கும்போது அவள் கழுத்தை ஒரு வலியகரம் சட்டெனப் பற்றியது

“அவுட்ச்!” சன்னமாய் கூவியபடி திரும்பினாள்.

அவளைஅப்படியே ஓசைப்படாமல் வரும்படி ஜாடைகாட்டி அடுத்த அறைக்கு இழுத்துப்போன உருவம் அங்கு லைட்போட்டது .

வெளிச்சதில் அனிபார்த்தாள். அது ஒரு பெண். ஜீன்ஸும் டிஷர்ட்டும் அணிந்து நரைத்தபாப்தலைக்கு கணிசமாய் டை அடித்திருந்தாள்.வயது அறுபதுகளில் இருக்கலாம்.
பெரியசாமி அந்த நாளில் தான் மிகவும் சிலாகித்துரசித்ததாய் சொன்னதால் அனிதா நெய்ல்டாப்பில் கஷ்டப்பட்டுப்பார்த்த ஏய் படத்து நடிகை நமீதாபோலவும் தெரிந்தாள்.

“நான் தர்ம்மின் மாம்..நீ யார்?” என்றாள் அதட்டும்குரலில்

“நான் ,நா…ன்…” திணறினாள் அனி.


“பார்த்தா நல்லபடிச்சபொண்ணா தெரியற… நீ காரைநிறுத்தி உள்ளகுதிச்சி ஹால்ஜன்னல் கண்ணாடிகளைநகர்த்தி என் சன்னோட ரூம் போகிற வரை நான் உன்னை கவனிச்சிட்டு தான் இருந்தேன் ..இங்க எல்லாஇடத்திலும் அலார்ம் இருக்கு..விரல அமுக்கினா போலீஸ் வந்துடும் ..செக்யூரிடி துப்பாக்கி உன்மேல நீண்டுடும ஆ னா நான் செய்யல பிகாஸ் உன் துணிச்சல் எனக்குப்பிடிச்சிருக்கு. ப்ரேவ்கேர்ல்! உன்னைமாதிரி நானும் துணிச்சல்காரிதான்
சரி எதுக்குவந்தே ?ஏன் என் பையனைக்கொலைசெய்ய நினச்சே?”

அனி தயங்கிப்பிறகு விவரம் சொன்னாள்.கடைசியில்
“அத்தை என்னைப் புரிஞ்சுக்குங்க உங்க மகனை உயிராகக் காதலிக்கிறேன்…தர்ம் இல்லேன்னா எனக்கு வாழ்வேஇல்ல”கண் பனித்தாள்.

“ரொம்பதமிழ் சினிமா பார்த்திருக்காங்க உன் அம்மா,நீ வயத்துல இருகக்றப்போன்னு நினைக்கிறேன்..தர்ம் மீது நீ கொண்ட காதலை நான் மதிக்கிறேன் …சரி இப்போ என்னோடுவா” என்றாள்.



அவளோடு அந்த அறையில் நுழைந்த அனி, அங்கு நிறைய சோதனைகுழாய்கள் பிப்பெட்டுகள்,ப்யூரெட்கள் இருப்பதையும்பார்மலின் நெடி அடிப்பதையும் உணர்ந்தாள். .கண்ணாடிஜாடிகளில் ரசாயனதிரவத்தில் தவளைகள் மிதந்தன சதைத்துணுக்குகள் பாலிதீன்பைகளில் ..மூட்டைமூட்டைகளாய்.

குரங்கு ஒன்று விட்டத்திலிருந்து க்ர்ர் என்று அசிங்கமாய் சிரித்தது. கேரட்டைக்கடித்துக்கொண்டு வெள்ளை முயல்கள் இரண்டும் கூண்டிற்குள் ஓட்டப்பந்தயம் நட த்தின. ஒரமாய் சின்ன மேஜைமீது சாதுவாய் வெள்ளைஎலிதூங்கிக்கொண்டிருந்தது.

“மேடம் நீங்…. நீங்க?”குழப்பமும் திகைப்புமாய் அனி கேட்டாள்.

“நான் ஒரு சயின்டீஸ்ட் பேர் குந்தளா தேவி.செல்லமா’குந்த்!’ அனி! என்கதை ரொம்ப சோகமானது முப்பது வருஷம் முன்னாடி எனக்கு கல்யாணமாகி அந்த உறவில் பிறந்த குழந்தை இறந்துபோனது அதில் ரொம்பமனம் உ டைஞ்சிபோனேன்.
அ ப்போது என் கவனத்தை திசைமாற்ற க்ளொனிங் துறையில் கவனம் செலுத்தினேன். என் கணவரும் இதுக்கு சம்மதித்தார். என்னோட ரண்டாவது குழந்தையை க்ளோனிங் முறைலதான் பெற்றேன் அவன்தான் தர்ம்… அடுத்து அர்ஜ் ,பீம் .நகுல், சகா ன்னு மொத்தம் அ ஞ்சுபையன்கள் எனக்கு .

எல்லாருமே ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருப்பாங்க .அதனால குழப்பம் வேண்டாம்னு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு ஊ ர்ல அனுப்பி படிக்கவச்சிட்டேன். தர்ம் மட்டும் இங்க பெங்களூர்ல என்கூட இருக்கான்..வருஷம் ஒருமுறை எல்லாரும் இங்க வருவாங்க.. ஒருவாரம் வீட்லயே இருப்பாங்க சேர்ந்து வெளில போக மாட்டாங்க…..இப்போ இங்க தான் இருக்காங்க….

அனி! உனக்கு தர்ம் கிடைக்கலேன்னா என்ன, மீத நாலுபேர்ல யாரையாவது செலெக்ட் செஞ்சிக்கோயேன்? எல்லாருமே க்ளோனிங் கைஸ்! லுக்கிங் நைஸ்! அவங்களில் ஒருத்தனுக்கு கண்டிப்பா என் கண்ணுக்குபழையநடிகை ஐஸ்வர்யாராய் மாதிரி இருக்கற உன்னைப்பிடிச்சிடும். நான் கல்யாணம் செஞ்சிவைக்கிறேன்…”

குந்தளாதேவி இபடிச்சொல்லும்போது, “ஹாய் மாம் யாரோட பேசிட்டு இருக்கிங்க?’ எனக்கேட்டபடி வந்த நால்வரையும் பார்த்தாள் அனி, அடுத்தகணம் மயக்கம்போட்டு விழுந்தாள்.



*****பிகு:)************************************************************
ஓண்ணு ரண்டுவார்த்தைகள்+தலைப்பில் மட்டும் மாற்றம் செய்து மீள்பதிவு! .
மேலும் படிக்க... "2050 லவ்ஸ்டோரி!"

Wednesday, August 19, 2009

GEMSHOW (அல்லது) கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆகுமா?!






கோயம்பேடு மார்க்கெட்டுல கூறுகட்டி காய்கறிவிக்கறமாதிரி முத்து பவழம் கிறிஸ்டல் ஜேட் ப்ளூசஃபையர் இன்னபிற கற்களை அமெரிக்கத்தலைநகரில் (வாஷிங்டன்)விற்றுக்கொண்டிருந்த இடத்துக்கு ஒரு நன்னாளில் போனதை விவரிக்கவே இந்தப்பதிவு!


நவரத்தினங்களில் இந்த மாணிக்கம் என்கிற கல்லுக்கு ரொம்பவே மதிப்பு! Ruby இதுக்கு ஆங்கிலத்துலபேரு.

மாணிக்கத்திலும் பல தினுசுகள்.


Adelaide ruby" is a common name for almandine garnet,
"Cape ruby" is a common name for pyrope garnet found in South Africa; "Arizona ruby" and "Colorado ruby" are common names for pyrope garnet.

"American ruby" and "Mont Blanc ruby" are really garnet or rose quartz.

"Bales Ruby" is really pale red spinel.

"Bohemian ruby", "Montana ruby" and "Mountain ruby" are really red garnet.

"Brazilian ruby" is really pink or "fired" topaz, or pink tourmaline.





இப்படி ஒவ்வொரு கல்லுக்கும் பலதினுசான வடிவங்கள் தோற்றங்கள் அவைகளை பல்லாயிரம் அல்லது லட்சக்கணக்கில் வியாபாரத்திற்க்கொண்டுவந்து வைக்கும் இடம்தான ஜெம் ஷோ!







அதைக்கொட்டியும் மாலையாய் கட்டியும் வச்சிருக்காங்க ! வைரம் பிளாட்டினம் எல்லாம் கண்ணாடி ஷோகேசிலிருந்து கண்ணடித்தது.

.


எதைப்பார்க்க எதைவிட? ஜம்னு தான் இருக்கு ஜெம்ஷோ!


அமெரிக்கால இருக்கறவங்களுக்கும் அவங்கவீடுகளுக்கு என்னைமாதிரி வந்துபோறவங்களுக்கும் இதுதெரிஞ்சிருக்கும்

அதனால அப்படிப்பட்டவங்க அடுத்த சிலவரிகளை ஸ்கிப் பண்ணிடுங்க!

அமெரில்லால 30முக்கிய ந்கரங்களில் இந்த ஜெம் ஷோ சில(1967முதலாம்) வருஷங்களா நடத்தறாங்க...நம்ம ஊர் கல்யாணமண்டபம் மாதிரி நாலுமடங்கு பெருசா இருககற கட்டிடத்துல நூத்துக்கண்க்கான ஸ்டால்கள்.

உலகத்தின் அத்தனை விதமான கற்களும்(கூழாங்கல்போன்ற ஏதோகல்லில் கூட மோதிரம் கைக்குப்ரேஸ்லெட் என்றுசெய்து வைத்திருந்தனர். ”wow! amazing! awesome!" என்று அதனை அந்நியமக்கள் சிலர் சிலாகித்துக்கொண்டிருந்தனர்).

ஜெம்ஷோ நடக்கும் இடத்துக்குள்

உள்ள நுழைய ஆறுடாலர் நுழைவுக்கட்டணம் முன்னே இருந்ததாம் இந்தவாட்டி இலவசக்கூப்பன் கொடுத்திருந்தாங்க. அதைக்காண்பிச்சி நுழைஞ்சா வாயிலில் ஒரு காவல்காரர் கூப்பனைவாங்கிட்டு இடதுகைமணிக்கட்டுல OK அப்படீன்னு entryஸ்டாம்ப்பினால் ஒத்தி எடுத்தார்...(.மறுநாள்குளிக்கிறவ்ரை இது தேர்தல்ஓட்டுமசி மாதிரி ஒட்டிட்டு இருக்கு!)

பேருக்கு ஐஞ்சாறு ரோஸ்நிற உடம்பு போலீஸ்காரர்கள் நுழைவு வாயிலில ஒருஓரமா பயமுறுத்தாமல் கருணைக்கண்களோடு நிக்கிறாங்க.

இவங்களை நம்ம ஊர்க்காரங்க மாமா என்கிறாங்க பெண்போலீசை மாமிங்கறாங்க அங்கேஒரேஒரு அழகானமாமிகண்ல தென்பட்டாங்க,

உள்ள நுழைஞ்சதும் ஏதோ தேவலோகம்மாதிரி காட்சி அளித்தது. பலஸ்டால்களில் மணிகளின் விறபனைக்கு அழகழகான பெண்(மணிகள் பள) பலர்!...

.கல்யாணத்துக்கு வைரமோதிரத்தை செலெக்ட் செய்துகொண்டிருந்தது வைர ஸ்டாலில் ஒரு அமெரிக்கஜோடி .

pretty! wow ! என்று இருவரும் சில மோதிரங்களை அணிந்துபார்த்தபடி புகழ்ந்துகொண்டார்கள்..




முத்தானமுத்தல்லவோன்னு பாடலாம்போல முத்துச்சரக்கள் ஆயிரக்கணக்கில் சரம் சரமா
கோல்கேட்வெண்மையில், தந்தக்கலரில் லேசா மஞ்சள்பூச்சோடு என காணப்பட்டது கோலிக்குண்டு சைசிலிருந்து கடுகு அளவுவரை எல்லா மணிவகைகளும் இருந்தன. ஒரிஜினலைபோல டூப்ளிகேட் கற்களும் சொன்னாலேதவிர தெரியாத வகையில் ஏமாற்றின:).


எத்தனை வண்ணங்கள் அப்பப்பா!

சிவப்புன்னா அதுல அடர்த்தியான சிவப்பிலிருந்து மிகமென்மையான சிவப்புவரை ஏழுவிதங்கள் அதுபோல எல்லா வர்ணங்களிலும்.

இயற்கையில் இத்தனை நிறங்களான்னு கவிதை எழுதலாம்போல கைதுறுதுறுத்ததுன்னா பாத்துக்குங்களேன்!

எதைபாகக்றது எதைவிடறதுன்னே தெரியல!

மாணிக்கச்சரங்கள் (தங்கத்தில் கட்டிய சரமாகவோ நெக்லசாகவோ இல்லை அப்படியே இயற்கையாக ஒரு நூலில்மட்டும் கோக்கப்பட்டு) அந்த விளக்குவெளிச்சத்தில்கண்ணைப்
பறித்தன.

இந்த ஸ்டாலில் நல்லகூட்டம் நானும்
எட்டிப்பார்த்தேன்.

இக்கட ச்சூடு அக்கடச்சூடு என்று ஒரே சுந்தரத்தெலுங்கு நிறையவேகேட்டது.
கடைக்காரர் ஜப்பான்காரர்போலத்தெரிந்தார்

அவர் ஸ்டாலில் ரூப் தேரா மஸ்தானான்னு பாடலாம் போல ரூபி சிவந்திருந்தாள்.

ஆஹா!

மாணிக்கம்!
எத்தனை உசத்தியான கல் இது! அபிராமிபட்டர் அன்னையைப்பாடும்போது முதல்பாடலிலேயே உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்கிறாரே!

மாணிக்கங்கட்டி வயிரமிடைகட்டி. ஆணிப்பொன்னாற்செய்த என்று பெரியாழ்வார் இந்தக்கலைத்தான் முதலில் கொண்டுவந்து கண்ணனுக்கு வண்ணத்தொட்டில் கட்டுகிறாரே!


சிலம்பில்மாணிக்கப்பரல்! (சிலப்பதிகாரமும் கண்ணகியும் நினைவுக்கு வரணுமே இங்க?) எனக்கு பூம்புகார்படம் புகையாய் ரீவைண்ட் ஆகியது. லேசா விஜயகுமாரியின் நீண்ட(ஒட்டு? கூந்தலும் உருட்டுமுழியும் கூடவே நினைவில்வந்தன!

மனிதருள்மாணிக்கம் என்கிறார்கள்



கல்லெல்லாம் மாணிக்கக்கல் ஆகுமா?


ஆகாதுதான் கண்ணதாசரேன்னு கவிஞருக்கு பதில் சொல்லியபடி


மாணிக்கத்தைப்பார்ததும் மலர்ந்த நான் என் கணவரைத்திரும்பிப்பார்த்தேன் ..காணவில்லை அங்கு.

தெரியுமே,.

இதுமாதிரி இடங்கள் துணி,நகைக்கடைகள் எல்லாம் உடன்வந்தால் எனக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாததுபோல வேறுபுறம் வேடிக்கைபார்த்து நிற்பார். துப்பறிந்து அவரை இழுத்துவந்து .”மாணிக்கம் பாருங்க”

என்றேன் கிசுகிசுப்பானகுரலில்.

”ஆ மாணிக்கமா? என்கூட பெங்களூர்ல ஒர்க் பண்ணிட்டுவேறகம்பெனிமாறிபோன அந்த டூல்ரூம் டிபார்ட்மெண்ட்மாணிக்கமா ? வாவ் ! அதுவும் இங்கயா? நல்லவேளை..பொழுதுபோகாம இந்தமணிக்கூட்டதுல மாட்டிட்டு தவிச்சிட்டு இருக்கோமேன்னு நினச்சேன் பேச்சுத்துணைக்கு நல்ல ஆள் கிடைச்சாரு..எங்கே மாணிக்கம் எங்கேமாணிக்கம்(maani come)! ” என்று பரபரத்தார்.

இடுக்கண்வருங்கால்மட்டுமல்ல இப்படியொரு இக்கட்டான நிலமையிலும் சிரிச்சிப்பழக்கம் எனக்கு ஆகவே சிரித்துதொலைத்துவிட்டு விவரம்கூறினேன்

‘ ரூபி அதாவது மாணிக்கம் இதான்பாருங்க அழகா இருக்கு என்ன ஒரு ஒளிபாருங்க? ஜோரா இல்ல? ”!


ஏதோ துர்வஸ்துவைப்பார்க்கிறவர்
போலபார்த்துவிட்டு.” ஓ இதானா? மஞ்சளா இருந்தா தங்கம் அதுதான் உன்னைக்கல்யாணம் செய்தபின்னாடி தெரிஞ்சிட்டேன் மத்தபடி நான், இந்த நவரத்தின கல் பத்தின அறிவு இல்லாத ’கல்’ லாதவன்” என்று சொல்லி நகர்ந்தார் என் தங்கமான புருஷன்!

மாணிக்கத்தின விலையைக்கேட்டதும் அதை எனது இந்திய மூளை ரூபாயில் பெருக்கிப்பார்த்து அம்மாடியோவ் என வாய் முணுமுணுத்து மனசு இப்ப வேணாம் என்று முடிவெடுத்தது.


ஏதேதோ கொழுக்மொழுக்கென்றமணிகள் மாலைகளை எல்லாம் அசராமல் வெளிநாட்டுப்பெண்கள் வாங்கிப்போகிறார்கள்.கழுத்திலிட்டு அழகுபார்க்கிறார்கள். தரம் குணம் பார்த்துப்பலர் நிதானமாய் பொறுமையாய் வாங்கிறார்கள்

வழக்கம்போல இந்தியஸ்டாலில் நம்ம மக்கள்கூட்டம் அலைமோதியது.

பவழங்களை ரோஜாப்பூபோல செய்து செயி்னில்பதித்து பரப்பி இருந்தார்கள்.

பவழமா பழவமா எதுசரி?

‘நற்பவழம் இங்ககிடைக்குமாடீ புவனா ?”என்று ஒருமாமி அடுத்தவாரம் பிரசவிக்க இருக்கிற தன்மகளிடம் ஆர்வமாய்க் கேட்டுகொண்டிருந்தார்

காதில்தேன் பாய்ந்தமாதிரீ இருக்கவும் அந்த செந்தமிழுக்குச்சொந்தக்காரர்களைப்பார்த்து புன்னகைத்தேன்.அவங்க வேற ஏதோநகைபார்ப்பதில்பிசியா இருந்ததால் என்புன்னகையை கண்டுக்கல!

சர்தார்ஜீஒருத்தர் ஜீ என்றார் என்னைப்பார்த்து அவர்ஸ்டாலுக்குபோனதும்...தெரிஞ்ச
ஹிந்திலகொஞ்சம் அவர்கிட்டபேசினேன். வடக்கத்திக்கார நகைகள் ராஜஸ்தானி நகைகள் 18கேரட் தங்க நகைகள் என ஏதேதோ இருந்தன. ஆனால் மாணிக்கத்தைக்கண்ட என்கண்கள் மற்றொன்றினைப்பரவசமாய்க்காணவிரும்பவில்லை

இருந்தாலும் வந்ததுக்கு ஏதும் வாங்கணுமே! இந்தியா போனா காலனி சிநேகிதிங்க கேப்பாங்க இல்ல ?:)

அடுத்து இனனொரு ஸ்டால்ல கருப்பில் ஒருக்றிஸ்டல் சரம், முத்துசரம், சிவப்பு மணிமாலை அஞ்சுடால்ர்னாங்க அதுல நாலுசரம் வாங்கினேன்.

இன்னும் கைப்பைகள் கிஃப்ட்பொருட்கள்
இவைகளுக்கு தனி ஸ்டால்கள்!

எழுபதுவயது கொரியப்பெண்மணி சுறுசுறுப்பாய் கல்லாப்பெட்டில உட்கார்ந்தபடி ஐபோனில் பேசிக்கொண்டிருந்தார்.

அழகான டப்பாவில் மடித்தபொட்டலத்தில் கற்கள் மணிகள்! மணி (money) மட்டும் நம்மகிட்டகொள்ளையா இருந்தா போட்டுத் தாக்கலாம்..அப்படி ஒரு வெரைட்டி!

ஒருஇடத்தில் சட்டென மெல்லிய துணியில் ஸ்டால்களின் பாதை நடுவே திரைபோட்டிருந்தார்கள்.

திரைக்குப்பின்னால் என்ன நடக்கிறதென.
தெரிஞ்சிக்கலேன்னா டைலினால் மாத்திரையைமுழுங்கினாலும் தலை வெடிச்சிடும்போல இருக்கவே திரைக்குமுன் சின்னமேஜைஅருகே நாற்காலியில்அமர்ந்திருந்த அந்த அயல்நாட்டுமனிதரைக்கேட்டேன்

ஹோல்சேல் பிசினஸ் அதாவது மொத்தவியாபாரமாம் ஜுவல்லரிக்கடைக்கார்கள் வியாபரிகள்மட்டும் தங்கள் அடையாள அட்டையைக்காட்டிட்டு உள்ளபோகலாமாம்.

நன்றிகூறிவிட்டு வேற பெரிய நகைக்கடைக்கெல்லாம் சொந்தமில்லை என்பதால் ட்ரேட்மார்க் புன்னகையைமட்டும் சிந்திவிட்டு அங்கேருந்து நகர்ந்தேன்.






2டாலர்கள்( அமெரிக்கப்பணமில்லைஇது செயின் டாலர்) 2 வெள்ளிமாதிரியான உலோகமோதிரங்கள் ஏழெட்டு மணிமாலைகள் ஒரு கார்னெட்பேஸ்லெட் மட்டும் அந்த் ஐந்துமணிநேரத்தில் இருபதுடாலர்களைகொடுத்துவாங்கி மகிழ்ச்சியாய் வீடுவந்தேன்.

அன்று வீட்டுக்குவந்த விருந்தினர்கூட்டதில் ஒருபெண்.தானும் மதியம் ஜெம்ஷோபோய் மாணிக்கச்சரம் வாங்கி வந்ததை கழுத்தில்போட்டுக்காட்டினாள்

’நல்லாருக்கு’ என்றேன் நான் கண்களைவிரித்தபடி

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஷைலஜா?!

அந்தப்பெண் தொடர்ந்தாள்

’என்னவோபோங்க வாங்கிட்டேனே தவிர அசல்மாணிக்கமான்னு டவ்ட்டாவே இருக்கு, அவ்ளோவிலைகொடுத்தது தரமானதுதான்னு வித்தவங்க சொல்றாங்க. இருந்தாலும் நம்மூர் நாதெள்ளசம்பத்துசெட்டிக்கடைலயோ இல்ல ஜாயலுக்காஸ்லயோ தங்கமாளிகைலயோ வாங்கீனா ஒருத்ருப்திதான்.மேலும்...ராசிக்கேத்த கல்போடணும்னு ஒருதமிழ் வெப்சைட்ல படிச்சது வீடுவந்ததும் நினைவுக்கு வந்தது. மாணிக்கம்னாலும் இந்தக்..கல்லுபோட்டதிலிருந்து ஒரே குழப்பமா இருக்கு... என்னஎன்னவோ சிந்தனைகள்”
என்றாள்கவலையோடு.

அடப்பாவமே மனசு தெளிவில்லேன்னா எந்தக்கல்லுல நகைபோட்டுட்டாலும் குழப்பம்தான்னு புரிஞ்சிக்கவேண்டாமோ?

மனசுக்குள் சொல்லியபடியே


அந்தப்பெண்ணை நான் வியப்பாய் நிமிர்ந்து பார்த்தபோது அவள் கழுத்திலிருந்த மாணிக்கங்கள் எதுக்கும் கவலைப்படாமல்இயல்பாக மின்னிக்கொண்டே இருந்தன.!









!



!:)



--
மேலும் படிக்க... "GEMSHOW (அல்லது) கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆகுமா?!"

Monday, August 17, 2009

முள்ளும் மலரும்


மறுக்கமுடியாது
முள்ளைமுள்ளால்தான்
எடுக்கமுடியும் என்பதை.

நியாயம் பேசும்
துலாபாரத்தில்

நிமிடம் காட்டு.ம்
கடிகாரத்தில்.

பூக்களின் சாம்ராஜ்யத்தில்
முள்கூட
முடிவெடுக்கிறது!

பாதுகாப்பிற்கு
முள்வேலி

பூக்களைப்போல
முட்களை நாம் நேசிப்பதில்லை
இதனாலோ என்னவோ
பாதைமுள்ளாய் வந்து
பாதத்தைப்பதம்
பார்க்கிறது!


கண்மீன்களில்
தெரியும் பார்வைமுள்

முட்கள் பூக்களைப்போல்
வாடுவதில்லை

முள்ளும் மலரும்
மலரும்முள்ளாகும்
மனிதமனச்செடியில்மட்டும்!




--
மேலும் படிக்க... "முள்ளும் மலரும்"

Thursday, August 13, 2009

மணற்கேணி2009.

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும்
மாபெரும் கருத்தாய்வுப்போட்டிக்கு உங்கள் படைப்புகளை அனுப்பிவிட்டீர்களா?
ஆகஸ்ட் 15 படைப்புகளை அனுப்ப கடைசிநாள்!
பிரிவு3 இலக்கியம் எனும் வரிசையில்,

தமிழர் இசை எனும் தலைப்பில் நான் அனுப்பி இருக்கிறேன்..பதிவினை போட்டி முடிவு வரும் வரை வெளியிடக்கூடாது என்பதால் இங்கு பதியவில்லை.

தமிழ் அன்பர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்!
வெற்றிக்கு வாழ்த்துகள்!
நாம் யாராவது வென்றால் சிங்கப்பூரில் சந்திப்போம்!:)
மேலும் படிக்க... "மணற்கேணி2009."

Wednesday, August 05, 2009

ஆயிரம் நட்சத்திர விருந்து!





பட்டு மெத்தை வேண்டாம்
அம்மாவின்
இடுப்பே போதும்

மயிலிறகுவேண்டாம்
மடியிலிட்டு
விரலில் வருடினாலேபோதும்

அம்மாவின்உள்ளங்கை
தொட்ட சுகம்
வேறெதிலும் கிட்டாது

கண்ணுக்குத்தெரியாத
கருணை உணர்வை
கன்றான தன் மகவிற்கு
கனிவுடன் தருவாள்

வாய் நனைத்து மட்டுமல்ல
வயிற்றையும் நிறைத்துவிடுவாள்

எந்த ஐந்துநட்சத்திர ஓட்டலில்
இந்த ஆயிரம் நட்சத்திரவிருந்து கிடைக்கும்?

இயற்கையின் நூதனமா இங்கு
தாய் தரும் சீதனம்?

பனிக்குடம் உடைந்தவுடன்
பால்குடங்கள் திறந்துவிடும்

தாய்தரும் பாலில்
அன்பின் அடர்த்தி அதிகம்

உதிரம் பெயர்மாறும்
உடம்பின் இரண்டாவது திரவம்
எட்டடுக்கு மாளிகையின்
கட்டான அஸ்திவாரம்.
*************************************************************************************



(வருடந்தோறும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது)
மேலும் படிக்க... "ஆயிரம் நட்சத்திர விருந்து!"

Monday, August 03, 2009

காவிரிப்பெண்ணே வாழ்க!







நீரின்றி அமையாது உலகு!

பொதுவாக தண்ணீரை சக்தியின் மறுவடிவமாகவே பார்க்க வேண்டும். வன தேவதைகளைப் போல் ஆற்று தேவதை, நதி தேவதைகளும் உண்டு என்று பெரியவர்கள் கூறுவார்கள்.நம்பாரத நாட்டில் நதிகளை நாம் புனிதமாகவே கருதுகிறோம்.

ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது கூட தண்ணீரை தெய்வமாக மதிப்பதன் உள்அர்த்தம்தான்!




ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் 18 ஆம் தேதியன்று வரும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள்.


பதினெட்டு என்கிற எண்ணுக்குத்தான் எத்தனை சிறப்பு!
,
18 நாட்கள் போர் மகாபாரதத்தில்
18 பாகங்கள் பகவத்கீதைக்கு
18 சித்தர்கள்
18 படிக்கட்டுகள் சபரிமலைதெய்வத்திற்கு
இன்னும் பல இருக்கலாம் இவ்வகையில் ஆடிக்குப்பதினெட்டாம் நாள் சிறப்பு!

இன்று ஆடிப்பதினெட்டு!




இந்த தேதியில் தான் மழை நீர் சேகரித்து வைத்து, மேட்டூர் அணை திறந்து விட பட்டு காவிரியில் கலக்கிறது. அப்படி கலந்து விட்டபின் காவிரி நதி கூடுதலாக பெருகி,
அதிகரித்து ஓடும். இதனால் தான் பெருக்கு என்ற பெயர் வந்தது. இதனால் உழவர்கள் தங்கள் நெல் விதைக்கும் வேலையை ஆரவாரத்துடன் ஆரம்பிக்கிறார்கள். இப்பொழுது நெல், கரும்பு முதலியவையை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றாத இந்த ஜீவ நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் வேலையை தொடங்குவார்கள்.



அதே போல் நம் ஊர்களிலும் பல பெண்கள், நதிக்கு பூஜை செய்து வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் சந்தோஷம், செல்வம் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை!




பதினெட்டாம் பெருக்கன்று திருச்சி தஞ்சைப்பகுதி மக்கள் கோலாகலமாய் காணப்படுவார்கள்
அம்மாமண்டபம் கல்லணைமுக்கொம்பு என திருச்சியைச்சுற்றிய பகுதிகள் திருவிழா போல மாறிவிடும்.

படித்துறையில் மக்கள் வெள்ளம் காவிரிவெள்ளத்தை ஆர்வமுடன் கண்டு களிக்கும். மிட்டாய் பலூன் கடைகள் முளைக்கும்

கலந்தசாதங்கள் சக்கரைப்பொங்கல் வடாம் வற்றலுடன் படித்துறை வளாகத்தில் உட்கார்ந்தபடி சாப்பிடுவோம்.



திருவரங்கத்தில்

ரங்கநாதர் காவிரிக்கு சீர் கொடுப்பது வழக்கம். தென்னீர் பொன்னி திரைக்கையால் அடிவருடுகிறாளே தினமும் அவளுக்கு பதில் மரியாதை தர வேண்டாமா?

இவ்விழாவன்று ஸ்ரீரங்கம் அம்மாண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். அன்று காவிரித்தாய்க்கு அவர் சார்பில் புடவை,வளையல் ,குங்குமம் மற்றும் வெற்றிலை ஆகிய பொருள்கள் சீதனமாக தரப்படுகிறது.இச்சீதனம் யானையின்மீது கொண்டுவரப்பட்டு ஸ்ரீரங்கம் காவேரி ஆற்றில் மிதக்க விடுவார்கள்!



கவி உள்ளம் கொண்ட தமிழ்மக்களுக்கு காவிரி ஆடியில் அசைந்துவரும்போது சூல்கொண்ட பெண்ணாக காட்சி அளிக்கிறாள்.



மேட்டிலும் படுகையிலும் பாய்ந்து மண்ணைப்பொன்னாகி மகிழ்ச்சி விளைவிக்கும் காவிரியை வாழி என வாழ்த்துகிறார்கள்!மஞ்சள் குங்குமம பூமாலை தந்து கருகமணிபோட்டு அனுப்புவார்கள். அந்திசூரியனின் நிறம்பட்டு மேனிக்கு இளம்சிவப்புவண்ணச்சேலையை சுற்றிவிட்டதுபோல ஆடிச்செல்வாள்.

காவிரியில் நீர் வற்றி மணலில் ஊறும் எறும்புகள் தெ்ரியும் காலம் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கிறது அப்போதெல்லாம் நம் கண்களில்தான் காவிரி.





உற்சாகமாய் தன்போக்கில் வரும் நதிகள் எல்லாமே

கடைசியில் கடலில்தான் கலக்கின்றன.

காவிரியும் நுரைமலர் குலுங்க காதலைத்தேடி கடல் நோக்கிச்சென்று கொண்டிருக்கிறாள்!



காவிரிப்பெண்ணே நீ வாழி!
மேலும் படிக்க... "காவிரிப்பெண்ணே வாழ்க!"

Saturday, July 25, 2009

கனாக்கண்டேன் தோழீ நான்!











வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப்புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி

(ஆண்டாள்-நாச்சியார் திருமொழி.)


வாரணம் என்றால்யானை

பன்மையில் சொல்லவேண்டுமானால் யானைகள்.,

பாடலில் வாரணங்கள் ஆயிரம் என வரவேண்டும் (,யாப்பிற்காக எண் வழுவமைதி) ஆயிரம் சூழ வலம் செய்து, என்று வருகிறது

நாரணநம்பி ( சிறந்த கல்யாண குணங்களை உடைய நாரணன்) எதிரில்
நடக்கின்றான்
(எனவே எதிர்கொண்டழைக்க)

பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன்

நீர் நிறைந்த தங்கக்குடங்களை பூரண கலசங்களாய்வைத்தபடி அவ்னை வணங்க மக்கள் காத்திருக்க,
எங்கும் அலங்காரத் தோரணம் நட்டிருப்பதாக கனவுகண்டேன்

தோழீ ( தோழியின் மீதான விழிப்பு தோழீ)

நான்’

இப்படி ஆண்டாள் சொல்வதாக பாடல் அமைந்திருக்கிறது.

----------------------------------------------------------------
ஆண்டாளின் அறிவுக்கூர்மைதான் வாரணம் , அதுவும் ஆயிரம் வாரணம்.

அதாவது பெருகிய அறிவுக்களம். (யானை அறிவுக்கு உருவகம், விலங்குகளின் நல்ல அறிவுடையது யானை)

வெளியெங்கும் விரிகிறது. அவள்பார்வை.

விரிதலின் முடிவு ( இதற்கு உருவகம் நாரணன் நம்பி) உணர்வுகளுக்கு அருகிலேயே,எதிரிலேயே உள்ள தளத்தில், ஆனால் அந்தத் தளமும் இயங்கிக்கொண்டேயுள்ளது.


பேரானந்தவெளியில் அகமிருக்க, அவள் புறமெங்கும் வெளியாய், ஆனந்தம் விரிகிறது.புறத்திலும் ஆனந்த வெள்ளம்!
எதிரில் மனம் கவர்ந்த மதுசூதனன் வருகின்றான். ஆனந்த எல்லை அது!

( அவள் தன் அனுபவத்தை
சொல்லெடுத்து சேர்த்து வார்த்தைகளாக்கி சொல்லவேண்டியதால் - வார்த்தைகளின் உட்பொருளாய்-மனக்கண்ணின்
தரிசனமாய்- அவளுடைய கனவுக்காதலை தோழியிடம் சொன்னாள் என்பது நேரடிப் பொருளானது.

ஆண்டாள் உலாவிய தளங்கள் வித்தியாசமானவை. அதில் அவள் பெற்ற அனுவங்கள் வித்தியாசமானவை

அகத்தின் ஆனந்தமே புறத்தில்பேரானந்தமாக அதன் பூரணத்தை அலங்காரத்தோரணங்களான வார்த்தைகள் வழியாக தோழியிடம் கூறுவதாக நம் கற்பனையும் விரிகிறது!


ஒவ்வொரு இலக்கியத்தின் பின்னும் அதை எழுதியவன் மறைந்து நிற்கிறான் என்கிறார் ஹட்ஸன்.( ...behind the every book that is writer lies the Personality of man who wrote it.... =Hudson .."An introduction to the study of literature" அவ்வாறே ஆண்டாளின் ஒவ்வொரு பாடலுக்குப்பின்னும் அவளது மனநிலை மறைந்திருக்கும்.!
மேலும் படிக்க... "கனாக்கண்டேன் தோழீ நான்!"

Sunday, July 19, 2009

கம்பனும், கீட்சும்!

இலக்கியத்தின் வசந்தகாலம் கவிஞர்களின் பாடல்களில்தான் இருக்கிறது.

அந்தவகையில்,ஆங்கிலத்தில் கீட்சும் தமிழில்கம்பனும் நம்மில்
பெரும்பாலரின் மனதைக் கவர்ந்துவிடுகிறார்கள் !

அதிகம் கரைத்துக்குடிக்கவில்லை எனினும் கண்டுகளித்தவரை கீட்சும் கம்பனும் அவர்களின் மொழிகளில் சொல்லோவியத்தைக்காட்டி இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது.


சொல் ஓவியம்!

பார்த்தீர்களா. சொல்சிற்பம் என்று வருகிறதா ஓவியம் என்றே சொல்லின் பெருமைக்கு சிறப்பு சேர்க்கிறது!


ஆம்!..கம்பனும் கீட்சும் ஓவியத்தை தங்கள் பாடல்களில் ஒளித்துவைத்ததை சற்றே பார்க்கலாமா?

ஆயகலைகள் அறுபத்திநான்கு! சிற்பம் ஓவியம் நாட்டியம் எழுத்து பேச்சு, மகிழ்வு ஊட்டும் கருவிகள் என்று ..
இவைகளில் ஓவியம் ஒருதனிச்சிறப்பைப்பெறுகிறது.


குறிப்பாக காதல்நோயில் வீழ்ந்தவர்களுக்கு ஓவியம் ஒருசிறந்த உறுதுணையாக அமைகிறது.

ஆணாயினும். பெண்ணாயினும் தங்களுடைய அன்புக்குரியவர்களின் முகத்தினன நினைத்து,படத்தினைப் பார்த்து மனம் மகிழ்கின்றனர்.

நடைமுறைவாழ்க்கையில் சிறந்தபொருளை நமக்குஒருவர் கொடுக்ககவிட்டால் உடனே,' அதென்ன பெரிய ஓவியமோ?' என்று கேட்கிறோம்.

கதைகளில்கூட அவள் அஜந்தாஓவியம்போலிருந்தாள் எனக்தாசிரியர்கள் எழுதுவார்கள் அழகுச்சித்திரம், சித்திரம் பேசுதடி,காதல் ஓவியம் என்றெல்லாம் பாடல்களில் கேட்டுவருகிறோம்.

மக்கள்தங்களுக்கென்றுமொழி உருவாகாத காலத்தில் குகைகளில் சித்திரங்களைவரைந்து அதன்மூலம் உணர்சிகளை வெளிபடுத்திக்கொண்டார்கள்.

. உணர்ச்சிபூர்வமான சிறந்தஓவியம் பல கதைகளை நமக்குச்சொல்லிவிடும்.


அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியம் ஒன்றினை புலவன் கீட்ஸ் காண்கிறான்

அந்தஓவியம் வரையப்பட்டிருந்தது ஒரு தாளில் அல்ல..குகைச்சுவர்களில் அல்ல.அல்லது மரத்தூண்களில் அல்ல.மாறக ஒருதாழியில் !(URN)

அந்தத் தாழி,கிரேக்கநாட்டுச் சார்புடையதாக அவனுக்குத் தோன்றியது எனவே அந்தப்பானைக்கு Greecian Urn என்று பெயர்வைத்தான்' அந்ததாழியை வ்ரலாற்று

ஆசிரியனாகவும் (Sylvan Historian)நினைத்து அதனுடன் பேசுகிறான்

காதலன் காதலிக்கு ஊதுகுழல் ஊதி மகிழ்வித்து அவளைப் பின் தொடர்ந்து தன் அருகில் அழைத்திடுவதுபோன்ற ஓவியம் .

அவன் அழைப்பதை செவிசாய்க்காமல் அவனுடைய இன்னிசையைக்கேட்டு இசைவுகொடுக்காமல் தப்பி ஓட முயற்சி செய்கிறாள் அந்தப்பெண்

ஒருமரத்தடியிலே இந்தக்காதல்நாடகம் நடக்கிறது ,இந்த நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஓவியம் கீட்சின் சிந்தனையைக் கவர்கிறது.


அந்தஓவியக்காதலனிடம் கீட்ஸ் பேசுகிறான்

"இந்தமரத்தினடியில் நீ எப்போதும் நின்றுகொண்டிருக்கலாம் நீபாடுகின்றபாட்டினைக் கேட்காமல் அவள் எங்கேயும்தப்பித்துப்போகமுடியாது. இந்தமரங்களும் உன்னுடையபாட்டைக்கேட்டுப்பழக்கப்படவேண்டியதுதான்.
நீ அவளைமுத்தமிடமுயற்சிக்கிறாய் ,ஆனால் முடியாது.
நீ உனதுகுறிக்கோளில் வெற்றிக்குப்பக்கத்தில் நிற்கிறாய், அதற்காகபயப்படாதே !
அவளும் உன்னைவிட்டுமறைந்துவிடமுடியாது. எப்பொழுதும் உனது காதல் இருந்துகொண்டே இருக்கும் அவளும் அழகு மாறாமலே இருப்பாள்'

என்னும்பொருள்பட தாழியிலுள்ளஓவியக் காதலர்களைப்
பார்த்துச்சொல்லுகிறான் கீட்ஸ்.


அமரத்துவம் வாய்ந்தகாதல் ஓவியம் அழியாதது!
அந்தக்காதலர்களுக்கு மூப்புஇல்லை என்பதைகீட்ஸ்மறைமுகமாகசொல்கிறார்..

அதனைக்கீழ்கண்ட ஆங்கிலவரிகள் நமக்கு உணர்த்திவிடும்.



Thou still unravish'd bride of quietness,
Thou foster-child of silence and slow time,
Sylvan historian, who canst thus express
A flowery tale more sweetly than our rhyme:
What leaf-fring'd legend haunts about thy shape
Of deities or mortals, or of both,
In Tempe or the dales of Arcady?
What men or gods are these? What maidens loth?
What mad pursuit? What struggle to escape?
What pipes and timbrels? What wild ecstasy?

Heard melodies are sweet, but those unheard
Are sweeter; therefore, ye soft pipes, play on;
Not to the sensual ear, but, more endear'd,
Pipe to the spirit ditties of no tone:
Fair youth, beneath the trees, thou canst not leave
Thy song, nor ever can those trees be bare;
Bold Lover, never, never canst thou kiss,
Though winning near the goal yet, do not grieve;
She cannot fade, though thou hast not thy bliss,
For ever wilt thou love, and she be fair!
(From "ode on a Grecian urn"by John Keats)





கீட்சின் இந்தவிவரிப்பும்,கம்பனின் காவியத்தில் ஒரு நிகழ்ச்சிகோர்வையையும் பார்த்தால் ஓவியக்கலையின் சிறப்பை
நாம் இன்னும் உணரமுடியும்.

ஆற்றமுடியாத துயரத்துடன் அசோகவனத்தில் அன்னை சீதை இருக்கிறாள்.

"இராமன்வருவானா? என்னைமீட்பானா?


என் தலைவன் இராமன் நல்லவன்! பேரழகன்!

ஆமாம்! அரசாட்சியை ஏற்றுக்கொள் என்றபோதும் ராஜ்ஜியம் உனக்குஇல்லை என்றபோதிலும் அவன்முகம் சித்திரத்தில்மலர்ந்த செந்தாமரையாகவே இருந்தது. "

அந்தமுகத்தை எண்ணுகிறாள் சீதை. வறண்டபாலையாய் இருந்த அவள் உள்ளத்தில் வசந்தம் எட்டிப்பார்க்கிறது.




"மெய்த்திருப்பதம் மேவு என்ற போதிலும்
இத்திருத்துறந்து ஏகென்ற போதிலும்

சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருந்த முகத்தினை உன்னுவாள்
"

கம்பன் காட்டும் இந்த சொல் ஓவியம் இதுதான்!


ஓவியக்கலையின் சிறப்பை மிக நுணுக்கமாக பொதித்துவைக்கிறான் கம்பன் இங்கு,

அரசுரிமையைத்துறந்து காட்டிற்குச்செல்லவேண்டும் என்றுகைகேயிகூறியபோது 'அன்றலர்ந்த தாமரையினை வென்றதம்மா' என்று இராமனின்முகத்தை வர்ணிக்கிறார்.


கைகேயின் சுடு சொல் கேட்டமுகம் அன்றுமலர்ந்த தாமரையாம்.
. அன்றுமலரும்தாமரைக்கு உயிருண்டு ..நேரமாகிவிட்டால் வாடிவிடும் .

ஆனால் சீதையைப்பற்றி கம்பன்கூறும்போது 'சித்திரத்தில் அலர்ந்ததாமரை' என்கிறார், இராமனின் முகவதனத்தினை!

சித்திரத்தாமரைக்கு அழிவில்லை என்றும் மலர்ந்தே இருக்கும்.
சீதை தனிமையில் இருக்கும்போது அவளுக்கு மகிழ்ச்சி அளிப்பது என்றும் மலர்ந்திருக்கும் இராமனின் திருமுகம்!

அதுமட்டுமல்ல சித்திரச்செந்தாமரைமுகத்தை நினைக்கும்போது சீதைக்குஇன்னொன்றும்தோன்றி இருக்கவேண்டும் அந்த அழகான முகத்தை சூர்ப்பனகை போன்ற அரக்கியர்களால் காணநேர்ந்துவிட்டால், அவர்களால் கண்டுமட்டுமே மகிழலாம் என்றும் எண்ணிக்கொள்ளலாம்!


கம்பன்காட்டிய சொல்லோவியத்தையும் தாழியில்வரையப்படிருந்த காதலர்களின் உள்ளப்பாங்கினை கீட்ஸ் நமக்கு உணர்த்தும் உருவகமும் நாம் படித்து மகிழ வேண்டிய சுவையான காட்சிகள் !


கலைகளில்பலபிரிவுகளில் ஓவியம் ஓர் உயர்ந்த இடத்தைபிடிக்கிறது என்பதில் ஐயமே இல்லை.

இதனால்தானோ என்னவோ, கம்பனையும்கீட்சையும் பின்பற்றி கண்ணதாசனும் இப்படிப்பாடினான்?

காலங்களில் அவள் வசந்தம்!
கலைகளிலே அவள் ஓவியம்!
மேலும் படிக்க... "கம்பனும், கீட்சும்!"

Thursday, July 09, 2009

அபி அப்பாவா. ஆண்டாள் அப்பாவா?!








முன்குறிப்பு..1 பிரபலபதிவர் அபி அப்பாக்கும் இந்தப்பதிவுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை.
மு.கு 2....
ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் - பெரியாழ்வார் திருநட்சத்திரம் - பிறந்த தினம் - (ஜூலை3ம்தேதி இடவேண்டிய பதிவு இது,,சிலகாரணங்களினால்தாமதமாகிவிட்டது)

முகு3..தவறாம பின்குறிப்பு படிங்க!
**********************************************************************


நிறையப்பேசின ஆழ்வார்கள் மூவர்!

ஸ்ரீநம்மாழ்வார் ஸ்ரீகலியன் ஸ்ரீபெரியாழ்வார்,முறையே 1296 , 1253, 473 பாசுரங்கள் அருளியுள்ளனர்.

’ஒளிபுத்தூர் வித்தகன் விட்டுச் சித்தன் விரித்த தமிழ்’ என்று பெரியாழ்வார் தன்னை வித்தகன் என்று சொல்லிக்கொள்கிறார் ஒருபாடலில். வித்தகன் என்றால் கெட்டிக்காரர் என்று அர்த்தம். பாண்டியன் சபையில் வாதத்தில் வென்ற வித்தகராயிற்றே!


புதுவைக்கோன்பட்டன் புதுவைமன்னன் பட்டர்பிரான் என்று பெரியாழ்வார் வில்லிபுத்தூருக்கே ராஜாவாக இருந்திருக்கிறார்.

பெரிய ஆழ்வார், பெரியாழ்வார் மட்டுமே!
விஷ்ணு சித்தன் இவர் தம் இயற்பெயர்! பட்டர்பிரான் என்பது சிறப்புப் பெயர்!

திருவரங்கம் மற்றும் அதன் தொடர்புள்ள எல்லாமே "பெரிய" என்று தான் அடைமொழியப்படும்!
பெரிய கோவில் - திருவரங்கம்
பெரிய திருவடி - கருடன்
பெரிய அவசரம் - திருவரங்க நிவேதனம்
பெரிய பெருமாள் - அரங்கநாதன்
பெரிய பிராட்டி - அரங்கநாயகி
அந்த வரிசையிலே, அவனுக்குப் பெண் கொடுத்த பக்தரும்
பெரிய ஆழ்வார் - பெரியாழ்வார்!


மற்றவர்களுக்கு எல்லாம் வெறும் பரிவு தான், இறைவனிடத்தில்!
இவருக்கு மட்டுமே பொங்கும் பரிவு!
தாய் போல் பொங்கும் பரிவு! குழந்தையை நினைக்கும்போதே தாய்க்கு நெஞ்சகம் பொங்கிவிடும்! தாய்ப்பால் பொங்கும் பரிவு! - அதனாலேயே அவர் பெரிய ஆழ்வார்!





பெருமாளுக்கே தாய் ஆனதால் பெரிய ஆழ்வார்!
ஆண்டாள் பூமித் தாயின் அம்சம்! அந்த தாய்க்கே தந்தை ஆனதால் பெரிய ஆழ்வார்!
இப்படி இவர் ஒருவரே,
அவனுக்குத் தாயுமாகி, அவளுக்குத் தந்தையும் ஆனதால் பெரிய - பெரிய ஆழ்வார்






தமிழில் அபியும் நானும் என்று சிலநாள்முன்பு ஒருபடம் வந்தது.அப்பா-மகள் பாசம்பற்றிய கதை.

ஆண்டாள்்மீது பெரியாழ்வார் கொண்ட பாசத்தின் முன்பு அபியாவது அவள் அப்பாவாவது! வேறெந்த தந்தை-மகளுக்கிடையே இப்படி ஒரு பாசப்பிணைப்பு இருக்குமா என்றால் அது சந்தேகமே!

ஆண்டாளைப்பற்றிப்பாடும்போது ’பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!’ என்கிறார்கள். இத்தனைக்கும் அவர் துளசிக்குவியலில்தான் ஆண்டாளைக்கண்டுபிடித்திருக்கிறார். பெற்ற பெருமை இல்லாதவருக்குக்கிடைத்த பேற்றினைப்பாருங்கள்!

’பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலைமுப்பதும் தப்பாமே’ என்கிறாள் ஆண்டாளே தான் வடித்த திருப்பாவைப்பாடலில். அப்பாவும் பெண்ணும் மாறிமாறி அன்பைப்பரிமாறிக்கொள்கிறார்கள்.

தான் சூடிய மாலையை இறைவனுக்குச்சூட்டிட அதனை தந்தையிடம்கொடுத்த துணிச்சல்காரியான பெண் ஆண்டாள்.

அந்த நாளிலேயே பெண் சுதந்திரம் இருந்திருக்கிறதென்பதற்கு ஆண்டாளின்
நாச்சியார் திருமொழி வாசகங்களே போதும். அப்படி ஒரு சுதந்திரத்தை அவளுக்கு அளித்தவர் பெரியாழ்வார் என்றால்மிகை இல்லை.


மகளின் ஆசையைபூர்த்தி செய்து அவளை திருமாலுடன் சேர்த்துவைத்து வீடுவந்தவர் மகளின் பிரிவில் மனம் தவிக்கிறார். செங்கண்மால்தான் கொண்டுபோனான் என மனதைத்தேற்றிக்கொள்ள பிரயத்தனப்படுகிறார்.ஆனாலும் பாசம் மனசை வழுக்கிவழுக்கி நினைவுகளை பின்னோக்கி இழுத்துச்செல்கிறது.மகளோடு கூடிக்கழித்த நாட்களை அசை போடுகிறது.

’நல்லதோர் தாமரைப்பொய்கை
நாண்மலர் மேல்பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு
அழகழிந்தாலொத்ததாலோ
இல்லம் வெறியோடிற்றாலோ
என்மகளை எங்கும் காணேன்
மல்லரையட்டவன் பின்போய்
மதுரைப்புறம் புக்காள்கொலோ’


கண்ணில் நீர்மல்கப்பாடுகிறார் பெரியாழ்வார்.
கண்பனித்தது என்பார்கள்.
ஆமாம் பெரியாழ்வாருக்கு மகள் மணமாகிசென்றதும் கண்பனித்துத்தான் போனது.
அவரது விழிகளாகிய தாமரைக்கு மகள் எனும் சூரிய ஒளி இல்லாமல்போய்விட்டதாம்.
பனிவந்து தாமரையைச் சூழ்கிறதாம். பனிகண்டமலர் விரியுமோ?

பெண்ணிருந்தவரை இல்லம் தாமரைப்பூத்த பொய்கையாய் அழகாக இருந்ததாம்.இப்போது பனிபெய்வதால் இதழ்கள் உருகிக்கருகிவிட்டதாம்,கொடி மொட்டையாய் நிற்கிறது இதுபோல வீடு அழகழிந்து வெறியோடிவிடுகிறது.

நம் மனதிற்குப்பிரியமானவர்கள் பிரிந்துவிட்டால் இல்லமென்ன நம் உள்ளமே ’வெறிச்’ என்றுபோய்விட்டதாய் சொல்கிறோம் அல்லவா? அதைத்தான் ஆழ்வார் இந்தப்பாடலில் சொல்லி இருக்கிறார்.




பொய்கையின் படம் பெரியாழ்வாரின் சொற்சித்திரத்தில் மனதில் பதிந்துவிடுகிறது.கவிதைக்கென்று தனி வார்த்தைகள் இல்லையென்று காட்டிவிட்டார் பெரியாழ்வார், ஆமாம் உலகத்தில் வழங்கிவரும் சொற்களை வைக்கிற இடத்தில் வைத்தால் அவைகளுக்கு அபூர்வ சக்தி ஏற்பட்டுவிடுகிறது என்பது உண்மைதானே!

பின்குறிப்பு
எனக்குத்திருமணம் முடிந்து என்னை திருவரங்கத்திலிருந்து பெங்களூருக்கு அனுப்பும்போது தன் கண்ணீரைபேனாவில் நிரப்பி என் தந்தை எழுதிய பாடல் இது!


மணமகளாய் என்மகள்தான்
மணம்முடித்துச்செல்கின்றாள்
குணம் நிறைந்த கணவருடன்
குதூகலமாய்ச் செல்கின்றாள்
இத்தனை நாள் நான் வளர்த்த
என் இனியத்திருமகள்
இன்றென்னைப்பிரிந்து
தொலைதூரம் செல்கின்றாள்
வரும் நாளில் அவள் நினைவில்
வாடித்தான் இருப்பேனோ
வசந்தமான நினைவுகளை
அசைபோட்டுத்தான் இருப்பேனோ?
மறுபடியும் சந்திக்கும்
நாளுக்குக் காத்திருப்பேன்
மனமெல்லாம் மகள்நினைவில்
மானசீகமாய் வாழ்வேன்!


*********************************************
மேலும் படிக்க... "அபி அப்பாவா. ஆண்டாள் அப்பாவா?!"

Wednesday, June 24, 2009

J.ஜனனி D/O K. ஜகதீசன்(உரையாடல் சமூகக்கலைஅமைப்பு-சிறுகதைப்போட்டி)

J.ஜனனி
D/O
K.ஜகதீசன்

(சிறுகதை .உரையாடல் போட்டிக்கு)
***************************



” ரிசப்ஷனுக்கு மணப்பொண்ணும் மாப்பிள்ளையும் தயாராகி நாற்காலில உக்காந்திட்டாங்க நாம நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமா , நீதான் முதல்ல கடவுள் வாழ்த்துப்பாடல் பாடணும்,ரெடியா, ஜனனி?"

' மாலைத்தென்றல் ’ மெல்லிசைக்குழுவின் இசைஅமைப்பாளர் ரங்கப்ரசாத இப்படிக்கேட்கவும்,’ ஒருநிமிஷம்!’ என மைக்கின் முன்பாக விரல்களைமூடியபடி சன்னமான குரலில் சொன்ன ஜனனி,மேடை ஓரமாய் நகர்ந்தாள்.

அங்கிருந்த தன் கைப்பையிலிருந்து தண்ணீர்பாட்டிலை எடுத்தாள். மூடியைத்திறந்து கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டு திரும்பினாள்.”ம்ம் ,ரெடி ஸார்!” என்றாள்.

கீபோர்டில் விரல்களைப்பதித்துக்கொண்டிருந்த ஆகாஷ்
” உன்பேரை ’ஜனனி ’என்பதற்குபதிலா 'ஜலம்நீ' அப்படீன்னு வச்சிருக்கலாம். எப்போபார்த்தாலும் வாட்டர்பாட்டிலும் கையுமாவே இருக்கிறே” என்றான்.

ஆகாஷ், ஜனனியைப்போல சென்னையில் முன்னுக்குவந்துகொண்டிருக்கும் ’மாலைதென்றல்’ என்னும் மெல்லிசைக்குழுவின் ஒரு பாடகன், இருபத்தி நாலுவயது இளைஞன்.

உரிமையாளரும் இசைஅமைப்பாளருமான ரங்கப்ரசாத், தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கும், சிலமெகாதொடர்களுக்கும் இசை அமைப்பவர். அவரது குழுவிலிருந்து பல இசைக்குயில்கள் திரைப்படத்திற்குபறந்துவிட்டன..இன்னும் சில நாட்களில் ஜனனிக்கும் அந்தவாய்ப்புவரப்போகிறதென்பதை ரங்கப்ரசாத் யூகித்துவிட்டார். ஆனால் ஜனனிதான் ’முதல்லபடிப்புமுடியட்டும் ஸார்” என்பாள்.

பிஎஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் கடைசிவருஷம் படிக்கும் ஜனனிக்கு நல்லகுரல்வளம். பாட்டுக்கற்றுக்கொள்ளவசதி இல்லாத சூழ்நிலையில் சின்னவயதிலிருந்தே காதால்கேட்டே இசைஞானத்தை வளர்த்துக்கொண்டு தன்னைத்தானே மெருகேற்றிக்கொண்டவள்.

ஜனனிக்குஅப்பா ஜகதீசன் தான் எல்லாம்.

அப்பாவும்பெண்ணுமாக சென்னைபுறநகர்ப்பகுதியொன்றில் சிறியவாடகைவீட்டில் வசிக்கிறார்கள் ஜகதீசனுக்குவாட்ச்மேன் உத்தியோகம்.

ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண்கள் வாங்கிய மகளை இஞ்சினீயரிங்படிக்கவைக்கமுடியாத தன் நிலைக்கு அடிக்கடி புழுங்கிப்போவார் ஜகதீசன். எத்தனை பேரிடம் கையேந்தி யாசகம் கேட்டிருப்பார்? ’வாட்ச்மேன்மகளுக்கு மேற்படிப்பா ?’என்கிறமாதிரியான கிண்டல்பார்வைகள் ஏச்சுப்பேச்சுக்கள்தான் கிடைத்தன!

ஜனனிதான் அவரிடம்,” அப்பா! ஷேக்ஸ்பியரின் வரிகள் தான் நினைவுக்கு வருது இப்போ.
‘வாட்டர் வாட்டர் எவ்ரி வேர்! பட் நாட் எ ட்ராப் டு ட்ரிங்க்’(water water everywhere but not a drop to drink) என்பார் . கடலில் செல்லும் அந்தக்கவிஞர், ’சுற்றி எங்கிலும் எட்ட்டுதிக்கிலும் நீர்இருந்து என்னபயன் ஒருதுளியாவது குடிநீராக இருக்கிறதா அருந்துவதற்கு?” என்று கேட்கிறார் .அதுமாதிரி நம்மைச்சுற்றி இத்தனை மனிதர்கள் இருந்தும் என்ன, உதவி செய்ய யாருக்கும் மனம் என்கிற மார்க்கம் இல்லாதபோது? அதனால் ஒன்றும்பாதகமில்லையப்பா. இந்தப்படிப்புக்கு ஏற்றமாதிரி கிடைக்கிற வேலையில் நான் சம்பாதிச்சி உங்களை உக்காரவச்சி சோறுபோடுவேன்.” என்பாள்

’இப்பவே பலசெலவுகளுக்கு நீ பாடி சம்பாதிச்சி தர்ரியே ஜனனீ? கூர்க்கா வேலைல எனக்கென்ன பெருசா காசுகிடைக்குது? ஹ்ம்ம்” மனசுக்குள் அழுவார் ஜகதீசன்

”ஆஹா ’ஜலம்நீ’! அஷோக்நல்லபேருதான் வச்சிருக்கான் உனக்கு!”

ரங்கப்ரசாத் சிரித்தபடி ஜனனியை ஏறிட்டார்.பிறகு அவரே,

” நானும்சும்மா சொன்னேன் ஜனனி ! உன்னை கிண்டல் செய்யறதுன்னா என்மகளை கிண்டல் செய்றாப்பலதானே! வாஸ்தவத்துல இந்தக்காலத்துல உன்னை மாதிரிப்பெண்கள் ரொம்ப அபூர்வம்.நாகரீகமோகத்துல கண்டபடி அலங்காரம் செஞ்சிக்காம சேலை பூ பொட்டுனு வலம் வரும் இளம் பெண் நீதான்மா. படிப்புபாட்டு குடும்பம்ன்னு அடக்கமா அழகா அதேசமயம் அனாவசிய அச்சமும் இல்லாமல் உன்னைமாதிரி இருக்கிற பெண்களைப்பாக்றதே நிறைவா இருக்கு.நிஜம்மா பாரதி சொன்ன புதுமைப்பெண் நீதான்!” என்று நெகிழ்ச்சியான குரலில் சொன்னார்

”என்னைப்புகழறதுல நீங்க வள்ளல்தான்! சரி ஸார்!நாம ஆரம்பிச்சிடலாம். கல்யாணத்துல கச்சேரின்னா எல்லாரும் பேசிட்டு இருப்பாங்களே தவிர நம்மையே கவனிப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியாதுதான் அதுக்காக நாம டைமுக்கு ஆரம்பிக்காம இருக்கக்கூடாதது. ஆங்..அப்றோம் ஸார்...சரியா ஒன்பதுமணிக்கு நம்ம நிகழ்ச்சிமுடிஞ்சிடும் இலலையா ?”

”முடிஞ்சாலும்முடியலென்னாலும் உன்னை டையத்துக்கு வீட்டுக்குஅனுப்பிடுவேன் ஜனனி ... உனக்கு உன் அப்பா பத்திகவலையாயிடும்னு எனக்குதெரியாதா?”

” நிஜம்தான் ..ஆனா இன்னிக்கு அப்பாவீட்ல இருக்கமாட்டார். செங்கல்பட்டுல அவர் ஃப்ரண்டு பொண்ணுக்குகல்யாணம்னு போய்ட்டு நாளைக்கு தான் வரேன்னு சொல்லிட்டார். ”

கல்யாண மண்டபத்தில் அனைவரும் மாலைத்தென்றல்குழுவின் நிகழ்ச்சியைக்காணவும் கேட்கவும் தயாராகவும், மைக் அருகில் வந்து நின்ற ஜனனி,” ஜனனீ ஜனனீ ஜகம் நீ அகம் நீ” என்றுபாட ஆரம்பித்தாள்

ஜனனி பாடிக்கொண்டிருக்கட்டும், நாம் இப்போது அவள் அப்பா ஜகதீசனைத் தொடர்வோம்

”ஐயா! இதான் மீராம்பிகா அபாட்மென்ட்ஸ் ! இங்கதான் உங்களுக்கு இன்னிக்கு நைட் ட்யூட்டி.”செக்யூரிடி ஆபீசர் அந்த மூன்றுமாடிகள்கொண்ட கட்டிடத்தினுள்ளே ஜகதீசனோடு நுழையும்போதே சொல்லிக்கொண்டுவந்தார்.

அறுபதைவயதை நெருங்கும் தன்னிடம் மரியாதையாகப்பேசிய அந்த இளைஞனைப்பார்த்து கண்பனித்தார் ஜகதீசன்.

பொதுவாக”வாட்ச்மேன்! ஏய் கூர்க்கா!” இப்படித்தான் யூனிஃபார்மிலிருக்கும்போது தன்னைப்பலர் அழைக்கக்கேட்டிருக்கிறார் ஜகதீசன்.


“ இங்க நைட் வாட்ச்மேனா ஒருவாரமா குமரவேல்னு ஒருத்தர்தான் பாத்திட்டு இருந்தாரு.குமரவேலின் அம்மா சடனா இறந்துட்டாங்கன்னு ஊருக்குப்போயிட்டதினால் வேறயாரும் தற்சமயம் இல்லாததால உங்களை இன்னிக்கு ஒருநாளைக்குமட்டும் நைட்வாட்ச்மேன் பணிக்கு நியமிச்சிருக்கேன்.பொதுவா நீங்க அதிகம் நைட்ல வேலை செய்யறதில்லனு தெரியும் பட் இப்போ உங்களைவிட்டா யாரும் சரியா இல்லை,அதான்.
ஏற்கனவே இதெல்லாம் உங்களுக்கு சொல்லி இருந்தாலும் நீங்களும் சரின்னு ’அக்சப்ட்’ பண்ணிக்கிட்டதுக்கு தாங்க்ஸ் ஐயா! வாங்க, அபார்ட்மெண்ட்ல நாலுபேர்கிட்ட உங்களை அறிமுகப்படுத்திட்டு நான் கிளம்பறேன்”

”ம்” என்று தலையாட்டியபடி ஜகதீசன் கால்கள் நடந்தாலும் மனசு அதட்டலாய்கேட்டது.

’ நீ இப்படி காசு அதிகம் கிடைக்கும்னு நைட் வாட்ச்மேன் வேலைக்கு வந்திருப்பது உன் மகள் ஜனனிக்குத் தெரிஞ்சா துடிச்சிபோயிடுவாளே. அவகிட்ட செங்கல்பட்டுல கல்யாணம்னு திட்டம்போட்டு மதியமே பொய் சொல்லி இருக்கே! இத்தனை நாளாய் நீ கடைப்பிடிச்சிட்டு இருந்த உன் சத்தியம் தர்மம் நேர்மை எல்லாம் இப்போ காத்துலபறந்திடிச்சா ஜகதீசா?”



செக்யூரிடி ஆபீசர் அந்த பன்னிரண்டு குடி இருப்புகள் இருந்த மீராம்பிகா ஃப்ளாட்டில் ஏழெட்டுவீடுகளின் கதவைத்தட்டி அவர்களிடம்ஜகதீசனை அறிமுகப்படுத்திவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.

ஜகதீசன் காம்பவுண்ட்கேட்டை அடைத்துவிட்டு அங்கே கூடைவடிவிலிருந்தபிரம்பு நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.

கைகடிகாரத்தில் மணிபார்த்தார். ஒன்பதரைஆகியிருந்தது.

’இந்நேரம் கச்சேரிமுடிஞ்சி ஜனனி கார்ல கிளம்பி இருப்பா... ரங்கப்ரசாத், நல்லமனுஷர். ஜனனியை பெத்த மகளா கவனிச்சி அவ வளர்ச்சில அக்கறைகாட்டுறார். எனக்குத் தான் கோழை மனசு. பொண்டாட்டி போனபிறகு வாழ்க்கையே இருட்டா இருக்கறமாதிரி அடிக்கடி நினச்சிக்குவேன். இருட்டைப்பாத்து பயப்படும்போதெல்லாம் ’இருளாயிருக்கறதனாலதான் நட்சத்திரங்களை ரசிக்கமுடிகிறது அப்பா’ன்னு ஏழுவயசிலேயே எனக்கு வாழ்க்கைப்பாடம் நடத்தினவள் என் மகள். மெலிந்த தேகம் ஆனா கம்பீரமான சாரீரம்! ’துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா ?’என்கிற பாட்டை ஜனனி பாடினா கண் குளமாயிடும். பாடிப்பாடி தொண்டைதான் ஜனனிக்கு வறண்டுபோயிடும். கண்ட தண்ணீ ஒத்துக்காது,வீட்ல நல்லா துளசி சுக்கு சீரகம்எல்லாம் போட்டு காய்ச்சி வடிகட்டினதண்ணியத்தான் எப்பவும்கைப்பைல எடுத்திட்டுப்போவா. ..’


’பாம்பாம்’

கார் ஹார்ன் அலறவும் ஓடிப்போய் கேட்டை அகலத்திறந்தார் ஜகதீசன். காரை நோக்கி விறைப்பாய் சல்யூட் அடித்தார்.

காரின் பின்கதவைத்திறந்து இறங்கிய ஒரு வயதான மனிதர்,”யாருப்பா புது வாட்ச்மேனா? குமரவேல் போயாச்சா என்ன?”எனக்கேட்டார்.

“ஆமாங்க இன்னிக்கு மட்டும் நான் இருப்பேன்.”

‘அப்படியா? தூங்கிடாம கார் வண்டிங்களையும் பாத்துக்கப்பா..வரவர இந்த ஏரியால ரொம்ப திருட்டுபயமா இருக்கு”

“சரிங்கய்யா பாத்துக்கறேன்”




அபார்மெண்டின் கார்கள் பல வந்துகொண்டிருந்தன. பத்தரைமணிக்கு வந்தகாரிலிருந்துஇறங்கிய ஒருநடுத்தரவயது பெண்மணி ஜகதீசனைபார்த்து,” என்கிட்ட போன்ல செக்யூரிடி ஆபீசர் சொன்ன புது வாட்ச்மேன் நீங்கதானா?” எனக்கேட்டாள்.

ஜக்தீசன் பணிவாய் தலை அசைத்தார்.

அவள் தொடர்ந்து,
“ நான் இந்த ஃப்ளாட்ஸ்ல செகண்ட் ஃப்ளோர்ல இருக்கேன். மூணு ஃப்ளோர்லமொத்தம் பன்னிரண்டுவீடுகள்னாலும் மேல்மாடில இப்போ யாருமே இல்ல. காரணம் அங்கே ஒரு ஃப்ளாட்டை செல்வராஜ்னு ஒரு அரசியல் செல்வாக்கு உள்ள ஆளு சொந்தமாக்கிட்டு அக்கிரமம் பண்ணிட்டு இருக்கான். தட்டிக்கேட்க ஆள் இல்ல.போலீஸ் மந்திரிங்க எல்லாரையும் கைல போட்டு வச்சிருக்கான் அவன் அட்டூழியம் தாங்கமுடியாம மூணாவது ஃப்ளோருக்கு யாருமே குடிவர்ரதில்ல வந்தாலும் நிலச்சி நிக்கறதில்ல.எதுக்கு சொல்றேன்னா அந்த ராஸ்கல் நடு நிசில இங்க என்னிக்கு வேணாலும் வருவான் முழு போதைல பலநேரம் அருகாமைல பொண்ணுங்க யாருடனாவதும் வந்திடுவான், நீங்க புதுசு அவன்கிட்ட பாத்து நடந்துகுங்க அதான் எச்சரிக்கலாம்னு சொன்னேன்” என்று அலுப்பும்
வெறுப்புமாக சொல்லிவிட்டு காரை பார்க்கிங் ஸ்லாட்டில் நிறுத்திவிட்டு நகர்ந்தாள்.

”நன்றிம்மா..சரிங்கம்மா”

அவளுக்கு சல்யூட் அடித்துவிட்டு

காம்பவுண்ட்கேட்டை மறுபடிசாத்திவிட்டு தன் இருப்பிடத்தில்வந்து அமர்ந்துகொண்டார் ஜகதீசன்,

.

ஜகதீசனுக்கு தூக்கம்வரும்போலிருந்தது. ஜனனி தூங்கி இருப்பாள். செல்போன் ஒன்று தன்கையில் இருந்தால் இந்நேரம் மகளோடு பேசி இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டார். ’ஜனனிக்கே செல்போன் இல்லையாம் நாலுஇடம்போய்வருகிற பொண்ணு !நமக்கென்ன அது வேண்டிக்கெடக்கு?” என முணுமணுத்துக்கொண்டார்.


மணி பதினொன்று

அபார்ட்மெண்டின் எல்லாவீடுகளிலும் ஒவ்வொருவிளக்குகளாய் நிறுத்தப்பட்டன. செக்யூரிடி சொன்ன இடத்தில் கார்பார்க்கிங்பகுதியிலே ஒரு ஓரமாய் அங்கிருந்த பாயைவிரித்துப்படுக்க ஆயத்தமானார் ஜகதீசன்.

சட்டென மின்சாரம் பறிபோனது.

கும்மிருட்டில் அப்படியே உட்கார்ந்தவர் பிறகு தூக்கம்கண்களை அழுத்தவும் பாயில் தலையை சாய்த்தார்.

அப்போது வாசலில் கார் ஹார்ன் நாராசமாய் கேட்டது.

ஜக்தீசன் தூக்கிவாரிப்போட்டவராய் இருட்டில்தட்டுத் தடுமாறி நடந்து பின்ஓடிப்போய் கதவைத்திறந்தார்

பாம்பாம்!பாம்பாம்!

கார் ஜன்னல்கண்ணாடியைதிறந்துகொண்டு தலையை நீட்டிய உருவம்,” ஏய் அறிவிருக்கா உனக்கு? ஒருவாட்டி ஹார்ன் அடிச்சா ஓடிவரவேணாம்?” என்று அதட்டியது.

’தட்’டென ஓசைப்படுத்தியபடி உள்ளேகாரைக்கொண்டுவந்து ஒருபக்கமாய் நிறுத்தியவன், ஜகதீசனிடம்” எப்போ கரெண்ட் போச்சி? ந்நான் சென்ஸ்! இந்த ஃப்ளாட்ல ஒருத்தருக்கும் பொறுப்பில்ல பவர் இல்லேன்னா போன் செய்யறதில்லையா எலெக்ட்ரிசிடிபோர்டுக்கு ஹ்ம்ம்?:” என்று சீறினான்.

பிறகுபின்கதவைத்திறந்து, கைகளை கூப்பிய நிலையில்,”நீ இறங்கு ஏஞ்சல்!” என்று
கெ(கொ)ஞ்சினான்.

ஜகதீசனுக்கு காரினின்றும் யாரோ ஒரு பெண் இறங்குவது அரைகுறை இருட்டில் லேசாய்
தெரிந்தது. ஆனால் முதலில் இறங்கி அதட்டிய ஆண் உருவம், அந்தப்பெண்மணி எச்சரித்தசெல்வராஜ்தான் என்று புரிந்துபோனது.

மீண்டும் மின்சாரம்மீளவும் ,லிஃப்ட் நோக்கி நடந்த அவர்களை கவனித்த ஜகதீசன் திடுக்கிட்டார். அவர்பார்வை அந்தப்பெண்ணின் பின்புறமாய் தொங்கிய அந்தக்கைப்பையிலும் அதில் தலை நீட்டிக்கொண்டு தெரிந்த அந்த பாட்டிலின் மீதும் பதிந்து குத்திட்டது. அரைக்கணத்தில் அவர்கள் லிஃப்டில் ஏறிவிட ஜகதீசனின் வாய் அரற்றியது.


”ஜ..ஜ ஜனனீ?”




ஐயோ ஜனனீ நீயா?

ஜனனி ஜனனி இவன்கிட்ட எப்படிம்மா நீ ஏமாந்தே? ஐயோ தெய்வமே!
இப்ப நான் என்ன செய்வேன்?
ஜகதீசன் செய்வதறியாது திகைப்பிலும் வேதனையிலும் ஒரு நிமிடம் அப்படியே நின்றார். பிறகு,

லிஃப்டில் ஏறி மூன்றாவது மாடியில் இறங்கி செல்வராஜின் ஃப்ளாட் வாசலுக்கு வந்து காலிங்பெல்லை அழுத்தினார்.திறந்த செல்வராஜ் விழிகள் சிவக்க சீறினான
”ஏய் ஓல்ட்பிட்ச்! எதுக்கு பெல் அடிச்சே ? டிஸ்டர்ப் பண்ணாமா ஒழுங்கா போயிடு இந்த ஃப்ளாட்லயே என்னையாரும்கண்டுக்கமாட்டாங்க பழையவாட்ச்மேனுங்கள்லாம் காசைவீசினா, பல்லைஇளிச்சிட்டுப்போய்டுவானுங்க உனக்கு இப்பஎத்தினி வேணூம்?”

”அ..அ.. அந்தப்பொண்ணூ?”

”ஆமா இன்னிக்கு ராத்திரிக்கு என்கூடதங்கிப்போக வந்திருக்கா....பட்சி கிடைக்கவே பலமாசம் ஆகி இப்பத்தான் என் வலைல விழுந்திருக்குது இந்த நேரம் பாத்து நீ தொல்லை செய்யாதே போய்த்தொலை” பட்டென கதவை ஓங்கி சாத்தினான்.

ஐயோ ஐயோ!

முகத்திலடித்துக் கொண்டு கீழேவந்தார் ஜகதீசன்.

யாருகிட்ட சொல்றது? எங்கே போறது? போலீசில் சொல்லலாம்ன்னா அவன் எல்லாரையும் கையில் போட்டுட்டு இருக்கறதாஅந்தபெண்மணி சொன்னாங்களே? அதைமீறி நான் ஏதும் செய்ய என்மகளை அவன் பழிவாங்கிட்டா..? ஐயோ தெய்வமே!

ஜனனீ உன்னை புத்திசாலிப்பொண்ணுனு நினச்சேனேம்மா நீயும் சராசரிப்பொண்ணா இப்போ சீரழிஞ்சிவரப்போறியாம்மா? ஜனனீ ..ஜனனீ.. ஜனனீ...

பிதற்றியபடியே நெஞ்சைப்பிடித்துக்கொண்டு அப்படியே கீழே சாய்ந்துவிட்டார் ஜகதீசன்.

அரைமணி ஆகி இருக்குமா?

உடம்பை யாரோ உலுக்கிதட்டுவதுபோலிருக்கவும் மெல்லக்கண்விழித்தார்.

எதிரே ஜனனீ நின்றுகொண்டிருந்தாள்.

”அப்பா! அப்பா! எப்படிப்பா இருக்கீங்க? அதிர்ச்சில உங்களுக்கு ஒண்ணும் ஆகலியே?”

கலங்கியகுரலில் மென்மையாய் கேட்டவளை வேதனையுடன் பார்த்த ஜகதீசன், ”ஜனனீ ! ஜனனீ நீயா..?” என்றார் அதற்குமேல்பேசமுடியாதவராய் அப்படியே அதிர்ந்துபோயிருந்தார்.

‘சொல்றேன்பா....ஆறுமாசமா இந்த செல்வராஜ் என்னை காலேஜ்போறபோதும் ம்யூசிக்ப்ரொக்ராம் நடக்கிற இடங்களுக்கும் பின்தொடர்ந்துவந்திட்டு இருந்தான்.... அரசியல்செல்வாக்கு நிறைய இருக்கற ஒரு பிரபலத்தின் மகன் இவன்னு தெரிஞ்சுது. பலபெண்களின் வாழ்க்கையை நாசம் செய்தவன்னும் தெரிஞ்சிட்டேன்.இவனை நான்காதலிக்கலைன்னா இவன்கூட நான் ஒரு ராத்திரியாவதுகூட இருக்கலேன்னா
ஹைதராபாத்ல சிலமாசம் முன்னாடி ஒரு காலேஜ்பொண்ணு மேல, ஒரு பையன் தன்னிடம் அவள் ஐலவ் யூ சொல்லாததினால ஆசிட்கொட்டி பழிதீர்த்துக்கிட்ட மாதிரி என்னையும் அழிச்சிடப்போறதா அன்னிக்கு ஒருநாள் பஸ்ஸ்டாண்டுல நிக்கறப்போ என்காதுபடவே தெலுங்குல அவன் ஃப்ரண்டுக்குபோன்ல சொல்லிட்டுஇருந்தான் .அப்ப்பவே நான் ஒரு முடிவெடுத்துட்டேன் .

இன்னிக்கு ப்ரோக்ராம்முடிச்சி ரங்கப்ரசாத்சாரின் கார்ல வீடுவந்து வாசல்பூட்டை திறக்கிறபொழுதுல சட்டுனு எதிர்ல வந்திட்டான்.

”சரிவரேன் உன்கூட.. ஒரு நிமிஷம் சேலைமாத்திட்டுவரேன்”ன்னு நான் சொல்லிட்டு உள்ளே போயிட்டு திரும்ப வந்து அவனோட கார்ல ஏறினேன். இங்கே காம்பவுண்ட் கேட்டை நீங்க திறக்கிறதைபோதே இருட்டுல காருக்குள் உக்காந்திருந்த எனக்கு காரோட ஹெட்லைட் , அது நீங்கதான்னு வெளிச்சம் போட்டுக்காட்டினது.

கொஞ்சம் அதிர்ச்சியாயும் திகைப்பாயும் இருந்தாலும் அடக்கிட்டு,பவர் கட் காரணமாய் நீங்க என்னைப்பார்த்திருக்க வாய்பில்லைன்னு நினச்சேன். ஆனா மேல போனதும், நடுவில ஃப்ளாட் கதவைதட்டியது நீங்கதான்னு உள்ள இருந்த என்னால உணர முடிஞ்சிது.
பதட்டத்தை வெளில காண்பிக்காமல் அவனை சாகசமாய் ஏமாத்த நினச்சேன்.

நல்லகுடிபோதையை அவனே ஏத்திக்கிட்டான் .அப்பத்தான்அவன்,”உன்பாட்டைக்கேக்கணும் முதல்ல..என் மெய்மறக்க உன் தேன்குரல்ல பாடு” அப்டீன்னான்.

”கண்டிப்பா மெய்மறக்கபாடுவேன்..அந்த நேரம் நீயும் கையையும் மெய்யையும் கட்டிட்டு கண்மூடி கானத்தைக் கேக்ணும்” என்றேன்.

அவன் இருந்த நிலைமை என் சொல்லுக்கு தலையாட்டவச்சது. கர்சீப் ரண்டு எடுத்து அவன் கைகால்களை நல்லா இறுக்கக் கட்டிட்டு பாட ஆரம்பிச்சேன்.

’ஆஹா ஓஹோ’னு போதைல உளறினான் .

சட்டுனு பாட்டை நிறுத்தினேன்.

”ஏஞ்சலே! ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்?உன்தேனினுமினிய குரலைக் கேட்கவே உன்னை இந்த இடத்துக்கு அழைச்சிட்டுவந்தேன்... இந்த இடம் சௌண்ட்ப்ரூஃபான இடம். ஆமா ஏஞ்சல், என்ன சத்தம்போட்டாலும் வெளில யாருக்கும் கேட்காது.. அதனால நீ பாடு நல்லா பாடு”ன்னான் உற்சாகமா.

”ஒருநிமிஷம் ... எனக்கு அடிக்கடி தொண்டை வறண்டு போயிடும் . தண்ணீ - அதுவும் நான் எப்போதும் குடிக்கிற சீரகத்தண்ணீ- குடிச்சாதான் குரல் சீரா இருக்கும் குடிச்சிட்டுவந்து பாட்டைதொடர்ந்திடறேன்” ன்னுசொல்லியபடியே என்கைப்பையிலிருந்த பாட்டிலை எடுத்தேன்.

அவன் போதைல கண்ணைமூடிட்டு ஏதேதோ உளறிட்டு இருக்க, அப்போ நான் கையிலிருந்தபாட்டிலைமூடியத்திறந்து சட்டுனு அவன்மேல வேகமா சாய்ச்சேன்.

”ஐயொ ஐயோ”ன்னு அலறினான்.

கட்டப்பட்ட கைகால்களை வேகமா உதைச்சிட்டு கூச்சல்போட்டான்.

தலை முகம் நெஞ்சு கால்னு எல்லா இடங்களும் அமிலம் பட்டு பொசுங்கி,கருக ஆரம்பிச்சது .

நான் கவனமாய் தடயங்களை அழிச்சிட்டு கதவை சாத்திட்டு இங்கஉங்களப்பாக்க ஓடிவந்தேன்.”

ஜனனி நிதானமாய் சொல்லிமுடித்தபோது ஜகதீசன் கண்கள் பனிக்க,”ஜ ஜனனீ?” என்றார் நெகிழ்ந்தகுரலில்.

”ஆமாம்ப்பா அவன் மனுஷனா இருந்தா திருத்தி இருக்கலாம் ஆனா செல்வராஜ், அசுரனா இருந்தான் .அதான் வதம் செஞ்சிட்டேன்.வீட்ல முன்னயே நான் வாங்கிவச்சிருந்த ஆசிடை என் தண்ணீ பாட்டில்ல ஊத்திட்டுத்தான் அவன்கூட வர்ரப்போ எடுத்திட்டு வந்திருந்தேன் ...திட்டம் சரிவர நடக்குமான்னு மனசுக்குள்ள பயம் இருந்தது இங்கே உங்களைபார்த்ததும் அது அதிகமாகவும் ஆனது. ஆனா தர்மத்தின் வாயதனை சூது கவ்வும் முடிவில் தர்மமே வெல்லும்னு வாழ்க்கை நெறி இருக்கே!நான் செய்தது தப்பாப்பா? சொல்லுங்க?”

’இ.. இல்லம்மா நாந்தான் ஒருநிமிஷம் உன்னைதப்பா நினச்சிட்டேன் ...பாவி நான்மகாபாவி’

ஜகதீசனின் மனது ஓலமிட்டது.

”நான் உங்கபொண்ணுப்பா .. ஏழையா இருந்தாலும் நாமெல்லாம் தர்மம் சத்தியம் நேர்மைன்னு வாழறோம். கண்முன்னாடி ஒரு அயோக்கியனை, அதர்மசெயல்கள் செய்கிறவனை நான் எப்படிப்பா மன்னிக்கிறது ?”

ஜனனி,சொல்லிமுடித்தபோது வானில்கருப்புமேகங்களின் பிடியிலிருந்து விடுபட்ட முழுநிலா, தன் வெளிச்ச முகத்தைக் காட்ட ஆரம்பித்தது.

*************** ******************************
மேலும் படிக்க... "J.ஜனனி D/O K. ஜகதீசன்(உரையாடல் சமூகக்கலைஅமைப்பு-சிறுகதைப்போட்டி)"

Thursday, June 18, 2009

வார்த்தை!(கவிதை)

வாளாகும்,
வருடும் மயிலிறகாகும்.
யாழையும்குழலையும்
ஓரங்கட்டிவிடும்
மழலையின்
சொல்லாகும்.

இதன் வழிகள் மூன்று.
கனியும்; காதலாகிக்கசியும்;
கடிந்தும்மிரட்டும்
என சிறுவாசல்கொண்ட
விழிவழிமுதல்வழி.

தொலைவிலிருந்தாலும்
குரல் அடையாளம்காட்டும்
உணர்வுக்கு ஏற்றபடி
ஒலிவடிவத்தை
மாற்றித்தரும்
சாமரமும் வீசும்
சாட்டையாய் அடிக்கவும் செய்யும்
நாவின் துணையோடுவரும்
இதழ்வழி,
இதன் இரண்டாம் வழி

முதலிரண்டையும்
முட்டாளாக்கிவிடும்
முழுமையான உணர்வுகளை
முக்கியமாய் தெரிவிக்கும்
தொடுகைவழி அதுவே
மூன்றாம் வழி.

அரிசி சிந்தினால்
அள்ளிவிடலாமாம்
இது சிதறினால்
அள்ள இயலாதென்று
வாழ்க்கைப்பாடத்தில்
முதல்பக்கத்தில் இது
இருப்பது இதன்
தனிச்சிறப்பு
அதை மனதில்கொள்வது
மனிதருக்கு மதிப்பு.

தேகத்தைக்
குதறவும் செய்யும்
குதூகலமாக்கி
உற்சாகத்தைக்
கொடுக்கவும் செய்யும்.

அகத்தில்
பெருமௌனவெளியில்
உலாவரும்
புறத்தில் ஒலிவடிவங்களுக்கு
உயிரைத்தரும்.

கவிஞர்களுக்கு
களிமண்ணாய்க்
குழைந்துவரும்.

வார்த்தைஇல்லா உலகில்
வாழ்வதும்
சாத்தியமா என்ன?
மேலும் படிக்க... "வார்த்தை!(கவிதை)"

Monday, June 08, 2009

கமகமன்னு ஒருபதிவு!(சமையல்குறிப்பு இல்லை:)











மரங்களிலே விலை உயர்ந்த மரம் எதுன்னா சந்தனமரம்தான் (என்பதை மறைந்த சந்தனக்கடத்தல் வீரப்பன் புராணமே நமக்குச்சொல்லிடும்!)

இந்தியா-குறிப்பா காவிரி உற்பத்தியாகும் கர்னாடகாதான் இதுக்கு- தாய்வீடு.அடுத்து தமிழ்நாடு. உலக்த்திலேயே இந்தியா இலங்கை பிலிஃபைன்ஸ் என மூணு நாடுகளில்தான் சந்தனமரங்கள் வளர்கின்றன.

உயிரோட இருக்கிறவரை பார்க்கவும் ஒன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரி அழகில்லாத ஒரு ம்ரம் எதுன்னா அதுதாங்க சந்தன மரம்! அதுமட்டுமில்ல சந்தனமரம்லாம் உயிர் இருக்கிறவரைக்கும் ஒரு வாசனையையும் கொடுக்காதாம். நல்லா சிவப்புகலர்ல பூக்களோட இருந்தாலும் அந்தப்பூக்களில் மணமே இருக்காதாம்.

12முதல் 40மீட்டர் வரை வரை வளரும் இந்த மரங்களுக்கு டீன் ஏஜ் முடிஞ்சதும் அதாவது 20வயசுல வேரோட வெட்டி வெய்யில்ல காயவைக்கிறாங்க. மரம் நல்லாக் காய்ந்தான் மணம் ஜோரா வர ஆரம்பிக்கும்.


கொஞ்சம் உசத்தியானதெல்லாமே சொகுசாகவும் இருக்கும் இல்லையா இந்த சந்தனமரமும் அப்படித்தான். மத்த எந்தச்செடியாவது இது பக்கத்துல இருந்துதுன்னா நைசா அந்தச் செடிகளின் வேர்களை உறிஞ்சிடும். அவைகளை வளரவிடாம செஞ்சிடும். செடிகளில் தாதா இது!

ஒரு டன் சந்தனமரத்தின் விலை நான்கு லட்சம் ரூபாயாம்!

மரத்தின்பருமனுக்கு ஏற்ப விலை கூடும். (காட்டிலா அதிகாரியும் பிரபல எழுத்தாளர் இணையதள வலைப்பதிவருமான திரு லதானந்த இதுபற்றி இன்னும் விவரம் சொல்லுவார் என எதிர்பார்க்கலாம்)

வெளிஉபயோகம் மட்டுமில்லாமல் உள் மருந்தாகவும் சந்தனம் பயன்படுகிறது.

சந்தன எண்ணை மரத்தின் மையப்பகுதியில் கிடைக்கிறது, வேர்ப்பகுதியிலும் கிடைக்கிறது.

நேபாளம் வழியா சீனாக்கு சந்தனம் கடத்தறாங்களாம்...சந்தனக்கடத்தலில் ஒரு வீரப்பன் பிடிப்பட்டாலும் இன்னும் பல வீரப்பன்கள் இருக்கறாங்கன்னு தினசரி கடத்தலில் மாட்டிக்கிறவங்களப்பற்றி செய்தி படிக்கறப்போ தெரியுது.

சந்தனம் தமிழர்வாழ்வில் முன்காலத்திலிருந்தே பயன்படுத்தப்படுகிறது ..தாம்பூலம் போல சந்தனமும் மங்கலப்பொருள். இறைவனுக்கு உகந்தது. குருராகவேந்திரர் சந்தனக்கட்டையை கல்லில் இழைத்த கதை அற்புதமானது. குருவாயூர் போல சிலகோயில்களில் சந்தனமே முதன்மைப்ப்ரசாதமாக பக்தர்களுக்குத்தராங்க.

மொட்டை அடிச்சா தலைல சந்தனம் தடவறாங்க..கோடைக்கட்டி வந்தா குளிர்ச்சிக்கு சந்தனம் பூசறாங்க....

எங்க வீட்டுக்கல்யாணங்களில் நலங்கு என்ற சடங்கின்போது மணப்பெண் மணமகனின் கழுத்து கைகளீல் சந்தனம் பூசவேண்டும். பக்கத்துல இருக்கறவங்க செய்ற கேலிகிண்டல்ல்ல நாணத்தைதான் மணப்பெண் பூசிக்கணும்!

சந்தனக்காற்றே, சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து, சாந்துபொட்டு சந்தனப்பொட்டு...இப்படி
சந்தனம் மணக்கும் திரைப்பாடல்கள் பல இருக்கு!

சந்தனசிந்தூர குங்கும பூஷணீ என்று ராகமாலிகைல கர்னாடிக் மியூசிக்ல ஒருபாட்டு தெரியும்.சரிசரி முறைக்காதீங்க, பாடிபதிவு செய்து படுத்தலைங்க!


இங்க பெங்களூர்ல 10வருஷம் முன்னாடி வனத்துறை இலாக்கிவினர் ஒருநாள் டெம்போல நிறைய சந்தனச்செடிகள் கொண்டுவந்து ஒவ்வொருத்தர் வீட்லயும் அவங்களே நட்டாங்க..

”என்னது இது சந்தனச்செடியா?” ஆச்சர்யமாய் கேட்டேன்.

”ஆமாங்க..இதை பாதுகாப்பா வளர்க்கணூம் நீங்க. ஆனா இது அரசுக்கு சொந்தமானது என்கிறதையும் நினைவுல வச்சிக்கணும்”

”ஓ அதனால என்ன நாளைக்கு சந்தனமரமாகி வெட்டி கட் செய்யறப்போ கால்டன்னாவது வளர்த்த நன்றிக்கு தரமாட்டீங்களா என்ன ?” என்று மனசுக்குள்ள சொல்லிக்கொண்டேன்.

ஊருக்கு விஷயத்தை போனில் சொன்னதும் அம்மா” ஒரு சந்தனக்கட்டை எனக்கு எடுத்து வச்சிடு. ஆத்துல இருக்கறது தேஞ்சி நோஞ்சானா இருக்கு.” என்றாள்

“ஹேய் ஷைலஜா ! எனக்கு சாண்டல்னாஉயிர்டி. சந்தன எண்ணை எனக்கு அட்லீஸ்ட் 100கிராமவது நீ தரணும் என்ன?” திருச்சி தோழியின் கோரிக்கை.

“ நல்ல தச்சனை விட்டு சந்தன மாலை செஞ்சி வாசல்ல நுழைஞ்சதும் நிலைப்படில மாட்டிவை உள்ள நுழையறப்போ எட்டூருக்கு மணக்கும்!” மாமியாரின் உத்தரவு.

எனக்கு கனவில் சந்தனக்காடாய் வரும்.சந்தனக்காற்றை சுவாசித்தபடி சந்தனப்பேனாவால் சந்தனக்கவிதை ஒன்று ’தந்தன தந்தனம் சந்தம் வரும் அதில் மந்திரதந்திர ஜாலம் வரும் ’என்று இஷ்டத்துக்கு எழுதுவேன்! எல்லாம் கனவில் எழுதிமடித்த கவிதைகள்!!

“அம்மா! சந்தனச்செடிக்கு நாந்தான் தண்ணீ ஊத்துவேன்... “ என் சின்னப்பெண் பிடிவாதமாய் செடிமூழ்க மூழ்க நீரை ஊற்றிவிடுவாள்.இலவச இணைப்பாய் மழைவேற
அடிக்கடிவந்துவிடும். .

எக்ஸ்பையரி தேதியைத் தாண்டின பழைய டானிக்பாட்டில்களை மகள்கள் அக்கறையாய் செடிக்குழிக்குள் ஊற்றி உரமிட்டனர்.

அக்கம் பக்கம் பலர்வீடுகளீல் சந்தனசெடி எவ்வளோ சென் ட்டிமீட்டர் உயர்ந்துள்ளது என்பதை சின்னமகள் பார்த்துவருவாள்.

ஒருவாரத்தில் ஒரு சின்ன துளிர் தலைகாட்டவும் ஆர்வம் தாங்காமல் அதை மெல்லத்தேய்த்து நாங்க முகர்ந்து பார்த்தோம் முன்னே ஒருமுறை கருவேப்பிலைச்செடில நாலு இலை வந்தபோது ஒரே கிள்ளுதான் இலை கைமுழுக்க மணத்துபோனதினால் அதே நினைப்பில் இந்த இலையைக்கிள்ளினோம்.

அப்போல்லாம் தெரியாது சந்தனச்செடி என்பது மரமாகி 20வயசுலதான் மணக்கும் அதுவும் வெட்டிக்காய்ந்ததும்னு!

“என்னாச்சு சந்தன இல்லைல வாச்னையே இல்லயேம்மா”

“ ஐயோ ப்ரியா....கொஞ்சம் வெயிட் பண்ணு அது மரமாகும் நாலஞ்சிவருஷத்துல அப்றோம் சந்தனம்தான் நம்மவீட்ல! சந்தனக்குழம்புகூட செய்யலாம்”

“சந்தன ரசம் சந்தனப்பொறியல் சந்தனப்பச்சடி செய்வியா?” கணவர் தன்பங்குக்கு கடித்தார்.(சாதாரணமா மனுஷனுக்கு சிரிக்கவே சில்லறைதரணும் ....கம்பன்வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல கடிமன்னியான எனக்குக்கணவரானதால் அப்பப்போ இப்படிக்கடிஜோக்குகளை வீசுவார் வீட்டுக்காரர்!)

சந்தனச்செடியின் மகத்தான முப்பதாவது நாள்!

அன்றுகாலை எழுந்ததும் நாங்கள் வாசல் தோட்டத்தில் நட்டிருந்த சந்தனச்செடியின் அரை அங்குல வளர்ச்சியைக்காண ஆவலோடு போனோம்!

ஆனா அங்க செடி பொசுக்கென்று தலைகுனிந்து வாடி இருந்தது.

“ஐய்யெயோ செடிக்கு என்னாச்சு?”

இப்படி அக்கம்பக்கம் எல்லாருமே கூவினர்.

ஆமாம் காலனில 150பேர் வீட்ல ஒருத்தர்வீட்லயும் செடி வளரலை. பொசுக்கென வாடி வதங்கி உயிரைவிட்டிருந்தது.

“வன இலாக்கா ஆளுங்களுக்கு என்னபதில் சொல்றது?”

“ ஆமாம் இந்த செடி சொகுசா இருக்கு. இதுக்கு ரொம்ப வெப்பமும்கூடாதாம் ரொம்ப குளிரும் கூடாதாம் ரொம்ப மழையும்கூடாதாம் தரை ஈரமாகவே இருக்கவும்கூடாதாம் சுமாரா மழைபெய்து உடனே உலரமாதிரி இருக்கணுமாம். ராஜகுமாரியைக்கொண்டுவந்து குடிசைக்குள்ள உக்காரவச்சிமாதிரி இருக்கு..பெங்களூர்ல வெயில் அடிக்கறதேன்னு நினச்சா மழைபெய்யும்.,மழைல நனயறோமேன்னு குடைய விரிக்கறதுக்குள்ள வெய்யில் விஜாரிக்கும் நமக்கெல்லாம் இதுசரிப்படாதும்மா.. இது எந்தகாலத்துல வளர்ந்து நாம எந்தகாலத்துல சந்தனக்கட்டையை கண்லபாக்கறது? இது அக்கம் பக்கம் எல்லா செடியோட வேர்களையும் உறிஞ்சி அதையும் வள்ரவிடாம தடுக்குது..போனா போவட்டும் விடுங்க...அவங்க வந்தா உண்மையைசொல்லிடலாம், எங்களுக்கு இது சரி இல்லப்பான்னு”

காலனி மக்கள்,தமிழில் ஹிந்தியில் கன்னடத்தில் தெலுங்கில் மலையாளத்தில் ஏகமனதாக முடிவெடுத்தோம்.

வனத்துறை இலாக்காவினர் வீடுவந்து ஏதும் அதட்டுவாங்களோ என்றும் பயமாக இருந்தது.
ஆனால் அவர்களும் இதை ஒரு முயற்சியாய் சோதனையாய்த்தான் செய்ததாய் சொல்லிபோனதும் நிம்மதியானது .

ஆனாலும் சந்தனக்கனவுகள் கண்ட அந்த சில நாட்களை மறக்கமுடியவில்லை.

இப்போதும் சந்தனபொம்மைகள் சந்தன சீப்பு டூத்ப்ரஷ் சந்தன மாலைகள் என்று சகலமும் சந்தனத்தில் செய்து யானைவிலையில்(சந்தன யானை விலையைக்கேட்டா நிஜயானை வாங்கிடலாம்:))) காவேரி கைத்தொழிலகம்(கர்னாடகா)
கண்ணாடி ஷோகேசில் வைத்திருப்பதைப் பார்க்கும்போது அன்று செடியை இன்னும் பார்த்துகவனமாய் வளர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது!

தன்னை
வெட்டிவீழ்த்தும்
கோடாரியையும்
மணக்கச்செய்கிறது
சந்தனமரம்!

எப்படி கமகமன்னு இருக்கா இந்தப்பதிவு?!
























.
மேலும் படிக்க... "கமகமன்னு ஒருபதிவு!(சமையல்குறிப்பு இல்லை:)"

Monday, June 01, 2009

உலகின் முதல் வசந்தம்!






''உலகின் மீது கடவுள் கொண்டிருக்கும் நம்பிக்கை இன்னும் வற்றவில்லை என்பதன் அடையாளம்
தான் பூக்களும் குழந்தைகளும் ' ' என்கிறார் தாகூர்.



நீ அசைந்தாய்
நானும்
புதிதாகப்பிறந்தேன்
அப்பாவாக!

என்கிற கவிஞர்தமிழ்முருகனின் பரவசம் எல்லா பெற்றோர்களுக்கும் உரியது.



செடிகளைப்போல அன்றாடம் பூத்துவிடுகிற மலர்ச்சியுடன் அலைகிற வித்தை குழந்தைகளுக்கே சாத்தியம்.

ஒருகுழந்தை , பேருருகொண்ட இறைவனின் சிறுவடிவம்போன்றே தோற்றம் தருகிறது. ஒரு சின்னஞ்சிறு
மழலையின் வரவு இல்லத்தை பூக்கள் நிரம்பிய தோட்டம்
ஆக்குகிறது.

அன்பின் தூதுவர்கள் குழந்தைகள்!


குழந்தைகள்மீது பெற்றோர் கொள்ளும் பாசம் அடர்த்தியானது.



(இன்று என்னகுழந்தைகள் தினம் கூட இல்லையே எதற்கு

இப்படி ஒரு பதிவு என்கிறீர்களா? ஒரு குழுவில்' வா வா
வசந்தமே ' என்ற தலைப்பிற்கான போட்டிக்கு அனுப்பிய என் கவிதை பரிசுக்குத் தேர்வானதும் குழந்தைபோல மனம் குதூகலித்தது!அதனால் அந்தக் கவிதையை அளிக்குமுன்பாக ஒருமுன்னுரை!)


இனி அந்தக் கவிதை!










அழகிற்சிறந்த மழலைகள்
அகத்தைக்காட்டும் கண்கள்
பொழியும் அருவித்தேன்கள்
புதையலோ குழந்தைகள்!


கொடிபோல் இழையும்கைகள்
கொழுகொழுவெனும்கன்னங்கள்
பிடித்திட ஓடிடும் வேளையில்
நடித்துச்சிரிக்கும் கள்வர்கள்!

கருவிழிகளில் என்றும் களிப்பு
கட்டியணைத்திடல் என்ன மறுப்பு?
புருவவளைவிலும் துறுதுறுப்பு
புன்னகையோ ஆண்டவன் படைப்பு!

பெண்மைக்குப்பெருமை சேர்க்கும்
கண்ணசைவினில் கதைநூறு சொல்லும்
உண்மையில் மழலைகள் மட்டுமே
உலகின் முதல் வசந்தம்!
மேலும் படிக்க... "உலகின் முதல் வசந்தம்!"

Friday, May 15, 2009

ரியாத் கவியரங்கமேடையில் வாசிக்கப்பட்டகவிதை

நட்பு.

(இந்த தலைப்பில் நான் எழுதிய கவிதையை ரியாத் கவியரங்கமேடையில் வாசித்தவருக்கு நன்றி. எழுதவைத்த சகோதரர் ஷாஜகானுக்கு மிக்க நன்றி)



தமிழ்வாழ்த்து.

பிறந்ததும் செவியில் விழுந்தது தமிழ்
வளர்ந்ததும் இன்னும் வளர்ப்பதும் தமிழ்
தமிழென்பது ஒரு சர்க்கரைக்கடல்
அமிழ்ந்து குளித்துமுத்தெடுக்கமுத்தெடுக்க
விழுந்துவிடுவதில்லை தமிழ் நம்மை
வீழ்த்தியும் விடுவதில்லை
உலகெங்கும் ஒலிக்கும் தமிழுக்கு
தலை சாய்த்து வணக்கம் சொல்வேன்



அவை வாழ்த்து



பல்வேறுபடிப்பினராய்
பண்பட்ட இளைஞர்களாய்
நல்ல செயல்களிலே
நாட்டம் கொண்டவராய்
அயல்நாடு சென்றிடினும்
முயன்றுதமிழைப்பேணும்
மணியான நட்புக்கூட்டம்.
சொற்பொழிவும் சொற்போரும்
கருத்தரங்கும் காண்பவராய்
உழைக்கும் அன்பர்களே!
உங்களுக்கு முன்தோன்றி
உளறிவைக்க ஒரு வாய்ப்பு
எனக்குக்கொடுத்துள்ள
எல்லோர்க்கும் என் வணக்கம்!



அவைத்தலைவருக்கு வணக்கம்.


சிறுமை கண்டு சீறும்
சீர்திருத்த செம்மல்
இழிவுகண்டால்பொங்கும்
இரும்பு நிகர் நெஞ்சம்
இன்னல்கண்டால் நோகும்
இரக்கம் அதில் மிகுதி
பகுத்தறிவு பெரியாரின் மூச்சு- பொய்மைப்
பகட்டிற்க்கு இவர் ஏச்சு.

இடித்துரைக்கும் நகைச்சுவைக்கு
ஈவேராபெரியாரைப்போல் யாருண்டு?
ஆணித்தரமான பேச்சால் கருத்தை
ஆழமாகப்பதியவைத்தார்
அச்சமில்லாத்தலைவர்
அவர்தம் கொள்கைபோற்றும்
அவருக்கு ஒரு தாசன்
அவையரங்கத்தலைவர்
திரு பெரியார்தாசனுக்கு
அன்பும் பண்பும் கலந்த
அடக்கமானஒருவணக்கம்.

*******************


இனி கவிதை.....


**************************



வாடாத பூ இது.

உயிர்ச்செடியில் பூத்த
உன்னதப் பூ இது.
இதன் பெயர் நட்பு.

இந்த நட்பூக்களை
நரம்பு நாரினில்
தொடுக்கின்றோம்
அதனால்தான்
உற்சாக வாசம்
உள்ளம்வரை வீசுகிறது!

கர்ப்பத்தைப்பரிசோதிக்க
நாடிபார்ப்பார்கள்
நட்பைப் பரிசோதிக்கவும்
நாடி பார்க்கலாம்
அதுவும் துடிக்கும்.

நட்பு நமக்கு நம்(பிக்)கை!
பலவிரல்கள் கொண்டது!
அதனால் அடையும் செயல்வேகம்
அதன் பொருட்டு வரும் பீமதேகம்!

மழைக்குமட்டுமே விரியும்
குடையல்ல நட்பு,
அழைக்கும்போதெல்லாம்
அன்பைத்தயங்காமல்தரும்
இன்னொரு தாய்மை!


நட்பில்மட்டுமே
ஆண்பாலும் பெண்பாலும் சேர்ந்து
திரண்டுதரும் திரட்டிப்பால்!
திகட்டுமே தவிர
திரிந்துபோகாது!

சாபங்களே வாழ்க்கை என்றநிலையில்
உற்சாக ஊற்றினை
உருவாக்கிய கடவுள்
அதனை நட்பென்ற நீர்த்துளியில்
அனுப்பிவைக்கின்றான்.

காதலில்தான்
காமம் கோபம்
ஏக்கம் ஏமாற்றம்
நட்பில் கிடைப்பது
ஒன்றேஒன்றுதான்
அதன் பெயர் நிறைவு.

நட்பில் அந்தரங்கம்
பகிரங்கமாகாது

கொடுக்கலும் வாங்கலும்
கொடைபோல நடக்கும்
அன்பும் வாழ்த்துகளும்
அளவின்றி கிடைக்கும்

இதர உறவுகள்
காய்ந்த வைக்கோல்பிரி
போலானாலும்
நட்புக்கயிறு என்றும்
இறுகியே கிடக்கும்.

திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுமாம்!
சொர்க்கத்தைவிட
மேலான இடம் உண்டு
என்பதை
அங்கு உருவான
நட்பு நிரூபிக்கிறது!

உறவுகள் பட்டியலில்
நட்புக்கு இடமில்லை
அதனால் என்ன
உள்ளத்துப்பட்டியலில்
அதுதானே முதலிடம்!
மேலும் படிக்க... "ரியாத் கவியரங்கமேடையில் வாசிக்கப்பட்டகவிதை"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.