Social Icons

Pages

Saturday, April 23, 2016

புத்தக வீடு!

“There is no friend as loyal as a book.”  என்கிறார் Ernest Hemingway.
வாசித்தல் தவமா தாயின் மடியா, வாசித்தல் சுவாசித்தலா சுகமான அனுபவமா  என்பதையெல்லாம்  கவிதைவரிகளாய் பலர் எழுதிவிட்டனர். புத்தகம் வாசிப்பதே இப்போது குறைந்துபோய்விட்டது என்றும் சிலர் புலம்புகிறார்கள்.முன்பெல்லாம்  ரயில் பஸ்பயணங்களில்  புத்தகம் வாசிக்காமல்  செல்லும் பயணிகள்  மிகக்குறைவு.தினத்தந்தி போன்ற நாளிதழாவது சிலர் கைகளில் தவழும் இப்போது அந்தப்பழக்கம் கைபேசியால் கைவிடப்பட்டுவிட்டாலும் முற்றிலும் மறையவில்லை. அடிக்கடி  பயணம் மேற்கொள்வதால்  என்னால் இதனை உறுதியாகவும் சொல்ல இயலும். புத்தகம் வாசிப்பவர் இல்லாமலா  கடைகளில்  இத்தனை  மாத வார இதழ்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும்? இயற்கை சக்திகள் போல  இயல்பானதாக  என்றும் இருப்பது  புத்தகம் வாசிக்கும் பழக்கமும். இணையமும் kindle  இன்னபிற நவீன சாதனங்கள்  வந்தாலும்  ஒரு புத்தகத்தை கையில் எடுத்துவைத்துக்கொண்டு  அதை மெல்லப்பக்கம் பக்கமாய் திருப்பி  வாசிக்கும் அனுபவத்திற்கு ஈடு இணை ஏது?
 என் அப்பா  எந்தப்புத்தகமானாலும் அதை பிறந்த குழந்தையைப்போல  புத்தகத்திற்கு வலிக்காமல் மென்மையாய் எடுப்பார்.  சடசடவென பக்கங்களைப்புரட்டுவது, புத்தகத்தை  பாய்போல சுருட்டுவது, பக்க ஓரங்களை மடிப்பது, அவசரவசரமாய்  கடைசிபக்கத்திலிருந்து  ஆரம்பித்து  விரைந்து படிப்பது, படித்ததும் புத்தகத்தை தொப் என தூக்கிக்கடாசுவது என்பதெல்லாம் அப்பாவிற்கு  சுத்தமாய் பிடிக்காது. அவர் வாசிக்கும் அழகைப்பார்க்கவே நானும் என் உடன்பிறப்புகளும் தூர நின்று கவனிப்போம்.

பூஜைக்கென்று  தியானத்திற்கென்று  படுக்கவும்சமைப்பதற்ககும் என்றும் குளியல் இத்தியாதிகளுக்கு என்று பிரத்தியேக இடம் உள்ளதுபோல புத்தகங்களுக்கென்று நாம்   வீட்டில்இடம் ஒதுக்கி இருக்கிறோமா! 
  
புத்தகங்களுக்காகவே வாழ்ந்தவர்கள் வாழ்கிறவர்கள் பலர்.

கர்னாடகாவில் ஒருவர் புத்தகங்களூக்கு என்றே  வீடு கட்டி இருக்கிறார்  ஸ்ரீரங்கப்பட்டிணம் அருகே பாண்டவபுரா என்னும் இடத்தில் வீடுமுழுக்க புத்தகங்கள்  நூலகம் எனலாம் பழையவேதங்கள் முதல் மென்பொருள்  (கணிணி) பற்றிய பல்வகைப்புத்தக்ங்கள் ஷேக்ஸ்பியர்முதல் ஹாரிபாட்டர்வரை என சம்பத்தித்ததில் தனக்கென ஒருவண்டிகூடவாங்கிக்கொள்ளாமல் புஸ்தகங்களாகவாங்கிவிடுவார் அங்கேகவுடா.
வயது 68 தனியார் நிறுவனத்தில்  பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
வேலையில் இருந்தபோது போனஸ்  உபரிப்பணம் என்று கிடைப்பதை புஸ்தகங்களாகவாங்கிவிடுவாராம்.
“என் கணவர் ரயில்வே ஸ்டேஷன்லிருந்து சாக்கு மூட்டையில் புஸ்தகங்களாக  தோளில் சுமந்து வருவார்..இவருடன் வேலைபார்த்தவர்கள் எல்லா கார் ஸ்கூட்டர் நிலம் என்றுவாங்கிவார்கள் இவருக்குப்புஸ்தகங்கள்தான் எல்லாமே” என்கிறார் இவர் மனைவி விஜய லஷ்மி.


“என்னிட நாலுபாண்ட் நாலுஷர்ட் தான் இருக்கின்றன,. பத்துவருஷம் முன்பு ஒருநிலத்தை பத்துலட்சத்துக்கு(இப்போது அதன் மதிப்பு ஒருகோடிக்குமேல்) விற்று நூலகத்தை கவனிக்க  விருப்பஓய்வும் பெற்றுக்கொண்டேன்” என்கிறார் அங்கே கவுடா
ஹரிகோட்டா என்ற பிசினஸ் புள்ளி ஒருமுறை கிருஷ்ணராஜ் சாகரில் கோவிலை புனருத்தாரணம் செய்யவந்தபோது இந்த நூலகத்தையும் வந்துபார்த்தாராம் அப்போது 70000 புத்தகங்கள் இருந்தனவாம். அவரே இந்த இடத்தில் 2005ல் நூலகமாய் கட்டிக்கொடுத்தாராம்.
அப்போதைய முதலமைச்சர் அங்கேகவுடாவைப்பாராட்டி 2கோடி நன்கொடைதருவதாக வாக்களித்தாராம் ஆனால்கிடைத்தது 25லட்சம் மட்டுமே!
பல எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள் படிப்பாளிகள் இங்குவந்துபோகின்றனர். வெளிநாடுகளிலிருந்தும் சிலர் வந்துபோகிறார்கள்.
அமெரிக்காவிலிருந்து இங்கேவந்து இந்த நூலகத்தைப்பார்த்த ரன்மல்ஸ்மித் என்பவர் பார்வையாளர்கள் புத்தகத்தில்,” இந்தியாவில் உயர்ந்தது தாஜ்மகால்மட்டுமல்ல இந்த நூலகமும்தான் .தாஜ்மஹாலைவிடவும் உயர்ந்தது என்பேன் அங்கே கவுடாவிற்கு எந்த உதவும் கிடைக்காதது துரதிர்ஷடம்தான்’என எழுதி உள்ளார்.

இந்த நூலகத்தில் காந்தீஜிபற்றிய 2500புத்தகங்களும் பகவத்கீதை பற்றி 2500புத்தகங்களும் 250000 உலக இதழ்கள் உலகநாடுகள்பற்றி 7000வரைபடங்கள் வேதங்கள் உபநிஷத்துகள் புராணங்கள் இவைபற்றி 2000 நூல்கள் ஆங்கில எழுத்தாளர்களின் 2லட்சம் புத்தகங்கள் இந்துகிறிஸ்துவ ஜைன இஸ்லாமிய புத்தகங்கள் பிரபலங்களின் அபூர்வபுகைப்படங்கள் பழையகால நாணயங்கள் கன்னடமொழி நாவல்கள் சிறுகதை தொகுப்புகள் கவிதைகள் கலை இலக்கியபுத்தகங்கள் தவிர தமிழ் மராட்டி ஒடிசி உருது பெர்சியன் அராபிக் தெலுகு வங்காளம் சீனா ரஷ்ய மொழி புத்தகங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கன.


-

மேலும் படிக்க... "புத்தக வீடு!"

Friday, April 22, 2016

பூமியைவாழவிடு!

பூமியைவாழவிடு!  World Earth Day!



புன்னகையை  முற்றிலும்
 இழக்குமுன்னமே
எனக்குப் புதை குழி
தோண்டப் போகிறீர்களா மனிதர்களே?
புகையிலைப் படுக்கையை
தயார் செய்து
ஆலைப் புகையிட்டு
பிளாஸ்டிக் மாலை அணிவிக்க
ஆயத்தமாகி விட்டீர்கள்!

என் கொடையாய் ஆறுகளைத்தந்தேன்
அழகுமிகு சோலைகளை உருவாக்கினேன்
பூலோக சுவர்க்கமாய் மாற்றினேன்
கனிகளை காய்களை பயிர்களை வளர்த்தேன்
வனங்களை அமைத்தேன் விலங்கு
இனங்களுக்கு அடைக்கலம் தந்தேன்


முன்னொருகாலத்தில்
இங்குஎன் குழந்தைகளான
 ஆறுகளில்நீரின் ஓயாத ஓட்டம்
பறவைகள்  பறந்துதிரிந்தபின்
இலைகள் அடர்ந்த மரங்களில் வசித்தன.
வனங்களும் பச்சைவயல்களும்
வயல் வரப்புகளும் வாய்க்கால்களும்
வளமாகவே  என்றும்இருந்தன

நாட்டுப்பற்றுகொண்ட
தியாகிகளையும் தலைவர்களையும்
புலவர்களையும் புரவலர்களையும்
என்று நல்லோர்கள் பலரைக்
கண்ட புண்ணியத்தாய் நான்!

இன்று..

தர்மம் தலைகுனிகிறது
ஊழல் உற்சாக ஊற்றாய்
ததும்பி வழிகிறது.

அஹிம்சை அழிந்து
அன்பும் மனிதநேயமும்
அற்பமாகிவிட்டது.

தீவிரவாதிகளுக்குப்
புகலிடமாய் இந்த
பூமித்தாய் ஆகலாமா?.

என்னைக் கண்டபடி
கூறு போட்டு
அடுக்குமாடிக் கட்டிடங்களை
அண்ணாந்து பார்க்குமளவுக்குக்
கட்டிவிட்டீர்கள்

என்கோபத்தை
 கோபக் குலுக்கலில்
சிறுபுருவ நெரிப்பில்
நியாயமாய் தெரிவித்தேன்
புரிந்து கொள்ளவில்லை நீங்கள்
.அல்லது
புரிந்தும் புரியாதது போல்
அலட்சியமாய் இருக்கின்றீரோ?
இரண்டுமே மெய்தான்.
.
என் மூச்சு எங்கே எனத்
தேடுகிறீர்களா என்ன?
அதைத்தான் கார்பன் மோனாக்சைடில்
பத்திரப்படுத்தி விட்டீர்களே!


தாயென்கிறீர்கள் என்னை
பேணிக்காக்கத்தான்
மறந்துவிட்டீர் மைந்தர்களே!


ஆறுகளை நீரற்ற சகதி 
சேறுகளாக்கிவிட்டீர்,
 விலங்கினங்களைத்துரத்தி
வனத்தினில்புகுந்து
வான் உயரக்கட்டிடங்கள் எழுப்ப
 மானிடர்கள் வந்துவிட்டீர்கள்.



விட்டுவிடுதலையாகிப்பறந்த
 சிட்டுக்குருவிகள் எல்லாம்
விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவுகளில்
கண்கட்டுவித்தைபோல
காணாமல்போய்விட்டனவே!

ஓசோன் ஓட்டை ஆனதனால்
உலகின் வெப்பமும் கூடியதே!
பருவத்தில்பெய்தமழையை
 வருமோஇனி மழை
என ஏங்கி நின்று
வான்பார்த்து
வருத்தத்தில்
 வாடி நிற்கிறீர்கள்!

மேனியெங்கும் பாளம்பாளமாய்
வெடிப்புவந்து  வேதனையுற்று
மூச்சுவிடவும் முடியாமல்
முனகும் இந்த பூமித்தாயினை
தவிக்கவிடும் மானிடரே!
எந்தையும்தாயும்
மகிழ்ந்துகுலாவி
இருந்த நாடென்று இதனை
உமது சந்ததியினருக்குக்
கைகாட்டிடவும்
பொய்யாய்க்கனவாய்
பழங்கதையாய்
பூமித்தாயின்  வரலாறு
 போகாதிருக்கவும்
புரிந்துகொண்டு வாழுங்கள்.



வெறும் வேஷமிட்டுவாழும்
வாழ்க்கையினின்றும்
வெளியே வாருங்கள்!
வேருக்குத்தான் நீர் தேவை எனும்
விவேகச்சிந்தனைஉங்களுக்கு
விரைவில்தானே வந்துவிட்டால்
பூமித்தாயாம் நானும்தான்
பூமியைவாழவிடு’ என்று
பூகம்பமுழக்கமிடமாட்டேன்
பூப்போலே  பூமண்டலத்தை
புரிந்து என்றும் காத்திடுவேன்!


-- (  முன்புபரிசுபெற்றகவிதையை  கவிஞர்வைரமுத்து பாராட்டியதும் இணைப்பில்)

மேலும் படிக்க... "பூமியைவாழவிடு!"

Thursday, April 21, 2016

அண்ணிக்கும் அமுதூறும்!

நம் பாரத தேசத்தில்குப்தர்களின் காலம் பொற்காலம் என்றால்தென் பாரதத்தில் அதாவது தமிழ்கூறும் நல்லுலகில் ஆழ்வார்களின் காலம் அமுதமயமான பொற்காலம் எனலாம்.அருளிச்செயல் என்ற அமுதம் பிறந்தது இந்தக்காலத்தில்தானே!





 பைந்தமிழும் பலவளமும் நிறைந்த பாண்டியநாட்டில் திருக்கோளூர் என்னும் ஊரில்  கிபி ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்இன்றைய நாள்போன்ற சித்திரைத்திங்களில் சித்திரை நடசத்திரத்தில்திருஅவதரித்தவர்.

தமிழிலும் வடமொழியிலும் சிறந்த புலமைபெற்று தமிழில் மதுரமான   அதாவது இனிமையான கவிதைகள் பலதந்தவர் அதனாலேயே மதுரகவி என அழைக்கப்பட்டார்.
புண்ணியப்பதிகள் எனப்படும் அயோத்தி மதுரா கயா காசி காஞ்சி அவந்தி துவாரகா என  எல்லா இடங்களையும் சென்று சேவிக்கப்புறப்பட்டார். 

அயோத்திக்குவந்தவர் இராமபிரானை அர்ச்சாவதாரத்தில்  சேவித்து பின் அங்கேயே  தங்கலானார். ஒருநாள் தன் சொந்த ஊர் திருக்கோளூர் திசைநோக்கி  தென் புறமாக கை  குவித்துத்தொழுதபொழுது அங்கே வானில் ஒரு பேரொளியைக்கண்டார்  ஏதும் கிராமம்தான் தீப்பற்றி எரிகிறதோ என அஞ்சினார்.ஆனால் அந்த ஒளியின் சுடர்  இரண்டுமூன்றுநாட்களுக்கும் அப்படியே அழகுடன் பொலிந்துதெரியவும் அந்ததிசை நோக்கி ஆர்வமுடன் நடக்கலானார். நெடுவழி நடந்து ஒளி தெரிந்த திருக்குருகூரை அடைந்தார்.

அப்போது அந்த ஒளி ஊர்க்கோயிலிலுக்குள் புகுந்து  சென்றதும்மறைந்துவிட்டது
 அந்த ஊர்க்காரர்களிடம் அந்த ஊரின் சிறப்பு பற்றி விஜாரித்தார்,. புளியமரத்துப் பொந்தில் சின் முத்திரையோடு ஒருவர் எழுந்தருளியிருக்கிறார். அதுதான் விசேஷம் என்று அவ்வூர்க்காரர்கள் சொன்னதும் அந்த மரத்தினை அடைந்தார்.

ஒளிபொருந்தியதேகத்துடன்மௌனமாக இருந்த நம்மாழ்வாரைக் கண்டு ஆச்சரியப் பட்டார் மதுரகவிகள். இவருக்குக் கண் பார்வை உண்டா, காது கேட்குமா என்று கண்டுபிடிக்க ஒரு பாறாங்கல்லைத் தூக்கிக் கீழே போட்டார். ''செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?'' என்று கேட்டார் மதுரகவியார். 

''அத்தைத் தின்று அங்கே கிடக்கும்'' என்றார் ஆழ்வார் (இந்த விவரம் நம்மாழ்வார் சரிதத்தில் வருகிறது)
விடையில் இரு தத்துவம் புதைந்துள்ளது. செத்ததின், அதாவது உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன் என்னும் சிறியது பிறந்தால், பாவ புண்ணியங்களின் பயன்களை நுகர்வதே அதற்கு வாழ்க்கையாக இருக்கும். தன்னை பற்றிய அறிவு, பரமாத்வான திருமாலை பற்றிய அறிவற்ற ஜீவனுக்கு, பரமாத்மாவை பற்றிய அறிவு ஏற்பட்டால், அதைக்கொண்டே பக்தி வளரும்.பதிலின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்ட மதுரகவிகள், நம்மாழ்வாரின் மேதாவிலாசத்தை புரிந்துக்கொண்டு அவரின் சீடரானார்.
  1. மதுரகவியாழ்வாருக்கு நம்மாழ்வாரின் பாசுரங்களில் பற்று ஏற்பட்டது.  மாலைப்பாடி வந்த மதுரகவியார் நம்மாழ்வாரையே பதினோரு பாசுரங்களால் ஆன பாமாலை ஒன்றால் பாடித்துதித்தார். அப் பாமாலையின் முதற்பா ''கண்ணிநுண்சிறுத்தாம்பு'' எனத்  தொடங்குவதால்  அதற்குக்  'கண்ணிநுண்சிறுத்தாம்பு'   என்பதே  பெயராயிற்று
(இந்த கண்ணி நுண் சிறுத்தாம்பு எனத்தொடங்கும் 11 பாடல்களை பல்லாயிரம்முறை  தியானித்து நம்மாழ்வாரை தரிசித்து நாலாயிரம்தமிழ்ப்பாசுர ரத்தினங்களை பிற்காலத்தில் நாதமுனிகள் மீட்டது  தனிக்கதை)(காணாமல்போன பொருள் கிடைக்க இப்பாசுரம் சொல்வது பல இல்லங்களில் இன்றும் வழக்கம்)
  1. .கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
    பண்ணிய பெருமாயன் என் அப்பனில்
    நண்ணித்தென் குருகூர் நம்பி என்றக்கால்
    அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே.
அண்ணிக்கும்  என்றால் தித்திக்கும்... கண்ணிகள் கொண்ட சிறு தாம்பக்கயிறினால்  கட்டப்பண்ணிக்கொண்ட பெருமாயனான  கண்ணனைவிடவும்  விரும்பி  தென்குருகூர் நம்பி என்னும் நம்மாழ்வார் என்று சொல்லும்போது  நாவில்  தித்திப்பாகும் அமுது ஊறுமாம்! அண்ணலைவிடவும் ஆச்சார்யன்(குரு) உயர்வானவர் என்று மதுரகவி  பாடும் இந்த 11பாடல்களின் சிறப்பு  சொல்லிமாளாது இவற்றை 10000முறை சொன்னால் நேரில் நம்மாழ்வார் சேவை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
.
 நம்மாழ்வாரிடமிருந்து பலவற்றையும் அறிந்துகொண்டு அவரையே துணைவராகக் கொண்டு அவருடைய புகழையே பாடி வந்தார். நம்மாழ்வார் திருநாடு அலங்கரித்த பின்னர், அவருடைய அர்ச்சை வடிவ உருவத்தைத் திருக்குருகூர் நகரில் எழுந்தருளச் செய்து போற்றி வந்தார்.

நம்மாழ்வாரின் பெருமை வானளவா கடலளவா எனில் அதனினும் பெரிது எனலாம்.

 வேதங்கள் நான்கு  நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ்பிரபந்தங்கள் நான்கு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேதத்திற்கு சமமானது.
 திருவிருத்தம்....ரிக்வேத சாரம்
திருவாசிரியம்...யஜுர்வேதசாரம்
பெரியதிருவந்தாதி.,,,அதர்வ வேதசாரம்
திருவாய்மொழி...ஸாமவேத சாரம்

இதில் ஸாமவேதசாரமான திருவாய்மொழிக்கு தனிப்பெருமை உண்டு.’வேதாநாம் ஸாமவேதோஸ்மி’ வேதங்களில் நான் ஸாமவேதமாக இருக்கிறேன் என்பதுதானே கண்ணனின் கீதோபதேசம்!


மற்றபிரபந்தங்களை பெருமாள் திருவீதி எழுந்தருளும்போது சேவிக்கலாம் ஆனால் திருவாய்மொழி பெருமாள் முன்பு அதாவது ஆஸ்தானத்தில் மட்டுமே ஸேவிக்கப்படவேண்டும்.

வேதங்கள் என்னும்கரும்பினை சுவைப்பது நம்மில் பலருக்கு இயலாத ஒன்று எனவேதான் வேதங்களின் சாரத்தை செந்தமிழில் அழகான பாசுரங்களாக கொடுத்துள்ளனர் ஆழ்வார்பெருமக்கள். ஆழ்வார்களின் அருளிச்செயல்களை தினமும்  ஆராதிக்கும்போது ‘தமிழ்மறையோன்’என்று அறிமுகப்படுத்திக்கொள்வதில் தனக்குப்பெருமை என்கிறார் சுவாமிதேசிகனும்.

இப்படி ஒரு ஆழ்வாரின் பெருமையை உலகறியச்செய்தவர் மதுரகவிஆழ்வார்தான்.



மதுரகவியார்,  நம்மாழ்வாருக்கு நித்திய ஆராதன விழாக்களையெல்லாம் சிறப்புற நடத்தி வந்தார். அத்திரு விழாக்களில் ’வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார்;  திருமாலுக்குரிய தெய்வப் புலவர் வந்தார்;  அளவிலா ஞானத்து ஆசிரியர் வந்தார்’ என்பவை முதலாகப் பல விருதுகளைக் கூறித் திருச்சின்னம் முழங்கினார். 

இதைக்கேள்விப்பட்ட மதுரைச்சங்கத்தார்,
''உங்கள் ஆழ்வார் பக்தரே அன்றி பகவானல்லரே. இவர் சங்கமேறிய புலவரோ? இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்று. இவரை வேதம் தமிழ் செய்தவர் என்று புகழ்வதும் தகுமோ?'' என்று பலவாறு பேசி விருதுகளைத் தடுத்துரைத்தனர்.

அதற்கு மதுரகவிகள் மனம் பொறாமல் வருந்தி,  ''இவர்களின் கர்வம் பங்கமாகும்படி தேவரீர் செய்தருள வேண்டும்'' என்று நம்மாழ்வாரைத் துதித்தார்.

நம்மாழ்வாரும் ஒரு கிழப்  பார்ப்பனர் வடிவம் ஏந்தி வந்து,  திருவாய்மொழியில் 'கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே' என்ற பாசுரத்தின் முதலடியை ஒரு சிற்றேட்டில் எழுதிக்கொண்டு சென்று,  சங்கப் பலகையின் மீது வைத்தால் அவர்கள் செருக்கு அடங்கும் என்று கூறியருளினார். 
அவ்வாறே மதுரகவியும் நம்மாழ்வாரின் கண்ணன் கழலிணை பாசுரத்தை எழுதிய ஏட்டை எடுத்துக்கொண்டு மதுரைச் சங்கம் போய்ச் சேர்ந்தார். அங்கு சங்கப் பலகையில் ஒரு முனையில் கண்ணன் கழலிணை பாசுரம் எழுதி வைத்த நறுக்கு ஓலை வைக்கப்பட்டது.  மறுமுனையில் புலவர்கள் ஏறி அமர்ந்தனர். அந்த அளவில், சங்கப் பலகையானது, பொற்றாமரைப் பொய்கையில் மூழ்கி, தன் மேலிருந்த புலவர்களையெல்லாம் நீரில் வீழ்த்தி, உடனே மேலெழுந்து தன்மீது வைத்த சிறு முறியை மாத்திரம் ஏந்திக் கொண்டு மிதந்தது.

அப்போது நீரில் விழுந்து தடுமாறி எழுந்து, மெல்ல நீந்திக் கரை சேர்ந்த சங்கப் புலவர்கள், வேதம், வேதத்தின் முடிவுப் பொருட்கள் முதலான யாவற்றையும் பிறரால் கற்பிக்கப்படாமல் தாமேயுணர்ந்த நம்மாழ்வாரது இறைமை எழில் பொருந்திய திறனைத் தெரிந்துகொண்டு செருக்கு அழிந்தனர்.
சங்கப்புலவர்கள் நம்மாழ்வாரது பெருமையைக்குறித்து தோத்திரமாக  பாடல்கள் பாடிவெளியிட்டனர்.

...சேமங்குருகையோ செய்யதிருப் பாற்கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோதாமந்
துளவமோ வகுளமோ தோளிரண்டோ நான்கும்
உளவோ பெரும உமக்கு...

என்ற இப்பாடல்வடிவாக  ஆழ்வாரின் தெய்வத்திரு உருவைப்போற்றி வியந்தனர்.
தமது குரும் தெய்வமுமான நம்மாழ்வாரை  குற்றம் சொல்லியவர்களை  நோக்கி மதுரகவி இப்படிப்பாடினார்

ஈயாடுவதோ கருடர்க்கெதிரே !
இரவிக்கெதிர் மின்மினி ஆடுவதோ !
நாயாடுவதோ நரகேசரி முன் ?
அழகூர்வசி முன் பேயாடுவதோ !
பெருமான் வகுளாபரணன் அருள்
கூர்ந்தோவாதுரை ஆயிரா மாமறையின்
ஒருசொற் பொருமோ உலகிற்கவியே !




  பிறகு மதுரகவியாழ்வாருடன் சேர்ந்து சங்கத்தாரும்நம்மாழ்வாரின் விருது கூறல் முதலியவற்றை முன்னிலும் சிறப்பாக நடத்தி வந்தனர்.

தொடர்ந்து, மதுரகவியாழ்வார் தமது குருவாகிய நம்மாழ்வாருக்கு பலவகை விழாக்களையும் ஆராதனைகளையும் நடத்தி வந்ததோடு, ஆழ்வாரது அருந்தமிழ் மறைகளின் பொருட்களைப் பலரும் உணரும்படி உரைத்து சிலகாலம் எழுந்தருளியிருந்தார்.  சில காலத்துக்குப் பின்பு பேரின்பப் பெருவீட்டை அடைந்தார்.


மதுரகவிகளை ஆழ்வார்கள் வரிசையில் சேர்த்துக் கொள்வதற்கு முக்கியக் காரணம், அவர் நம்மாழ்வாரின் பிரதம சீடராக இருந்து திருவாய்மொழியை நெறிப்படுத்தினார் என்பதோடு, அதைப் பரப்பி ஒழுங்காகப் பாராயணம் செய்ய ஏற்பாடுகளும் செய்தார் என்பதனால்தான்!

மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் !
மேலும் படிக்க... "அண்ணிக்கும் அமுதூறும்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.