Social Icons

Pages

Tuesday, June 11, 2013

தப்பு பண்ணியவர்கள்.





விடியலுக்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போதே சின்னசாமி அந்த பஸ் டெப்போவிற்கு வந்து விட்டான்.  முதல் நாள் இரவு கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டரும் நடந்தே வந்து அருகிலிருந்த ஊரிலிருந்து ரயிலில் பயணம் செய்து, நகரத்திற்கு வந்து, இறங்கிய போது கிராமவாசியான சின்னசாமிக்கு தன் ஐம்பது வயதின் பழைய சோற்றிலும், கேழ்வரகு கூழிலும் வளர்ந்திருந்த திடமான உடம்iபே தூக்கிப் போடுகிற மாதிரி இருந்தது.  சட்டெனக் கண்கள் கலங்கிப் போயின.
 
     பாவம், புவனாவுக்குப் பூஞ்சை உடம்பு.  அந்தப் புள்ளய நான் பட்டணத்துக்குப் படிக்க அனுப்பியிருக்கக் கூடாது.  கருக்கல்லுலேயே பட்டணம் இத்தினி பரபரப்பாயிருக்கும்னா, இது பட்டப் பகல்ல எப்படி இருக்கும்?  இந்தச் சூழ்நெலெயில என் பதினாறு வயசு மகளை இங்கிட்டுப் படிக்க அனுப்பின நான் பாவி, மகா பாவி!’’
 
     மனசு ஓலமிட்டது.
 
     ரயிலடியிலிருந்து விசாரித்துக் கொண்டு அந்த பஸ்டெப்போவிற்கு வந்தவன், ’ஹோஎன்றிருந்த அந்தப் பெரிய திடலில் அங்கும் இங்குமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களை ஒவ்வொன்றாய் அருகில் போய் பார்க்க ஆரம்பித்தான். 
 
சின்னச்சாமியின் தோளிலிருந்து நீண்டு தொடை வரை தொங்கிய அந்தத் துணிப் பையில் உருண்டையாய் ஏதோ ஒரு முடிச்சு அவனை உரசிக் கொண்டே வந்தது.  பையை கெட்டியாய் ஒரு கரத்தில் பிடித்தபடி, பைத்தியக்காரனைப் போல டெப்போ முழுவதும் சுற்றி வந்தவன் கடைசியில் கண் மலர்ந்தான்.
 
     இதான்... இதான்... புவனா காலேசுக்குத் தெனமும் ஏறிப்போற பஸ்ஸு.  என் செல்வ மகளை எமனுக்கு பலி கொடுத்த வாகனம்...
 
சின்னசாமி நெஞ்சு பதை பதைக்க அந்த பஸ்ஸிற்குள் ஏறினான்.  இருட்டில் தட்டுத் தடுமாறி ஓர் இருக்கையில் அமர்ந்தான்.
 
     தோள் பையைத் தூக்கி மடி மீது வைத்துக் கொண்டான்.  விரல்கள் வாஞ்சையுடன் அந்த பைக்குள்ளிருந்த அந்த சிறு மூட்டையைத் தடவின.
 
            அம்மாடி புவனா... பலி கொடுக்கத்தான் உன்னைப் பட்டணத்துக்குப் படிக்க அனுப்பினேனா இந்தப் பாவி அப்பன்?  எனக்கென்ன தாயீ தெரியும் பட்டிணமும்ல, பாழாப் போற பஸ் பயணமும், பசங்களோட கிண்டலும் கேலியும்? நல்ல மனுசங்கன்னு நினைச்சி கிராமத்துக்கு வந்துக் கேட்டுக்கிட்டவங்க பாதுகாப்புல உன்னை அனுப்பி வச்சேன்மா.. நீயும், ’அப்பா! நான் நல்லா படிச்சி தம்பி, தங்கைங்களைக் காப்பாத்தணும்பான்னு ஆசையா இந்தக் குடியானத் தகப்பன்கிட்டே சொன்னே மவளே! வீட்டு வேலை செஞ்சிட்டு மேல் படிப்பும் படிக்கத் தான் மக பட்டிணம் போறான்னு நெனச்சி அனுப்பினேனே தவுர இப்புடி ஆறே மாசத்துல மேலு லோகம் போகவா தாயீ உன்னை நான் பிரிஞ்சி அனுப்புனேன்?
 
     பொறுப்பை ஏத்துட்டப் பெரிய மனுஷங்க இப்ப எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு கையை விரிக்கிறாங்க... உரசிப் பாக்குற வரைக்கும் பித்தளை கூட தங்கம் மாதிரி தான் மினுமினுப்பாயிருக்கும் போல இருக்குது... இப்புடி உன் உயிர் போவும்ன்னு முன்னமே தெரிஞ்சிருந்தா கிராமத்துலேயே கூழோ, கஞ்சியோ குடிச்சிட்டு வயல் வேலை செய்யட்டும்ன்னு உன்னை வளர்த்திருப்பேனே தாயீ... ஒண்ணுந் தெரியாத படிக்காத பட்டிக்காட்டு அப்பனா இருந்துட்டு இப்புடி உன்னைப் பறி கொடுத்துட்டேனே, புவனா... ஐயோ!  நான் என்ன செய்வேன் தாயீ.  உன் நெனப்புல தான் நீ செத்த இந்த ஆறாம் நாள் உன் சாம்பலோட இந்த பஸ்சில வந்து குந்தறேன்.  தாயீ... அம்மாடீ! இந்த பஸ்ஸுல தான் நீ அன்னிக்கு என்னவோ கலாட்டாவாமே... அதைச் செஞ்ச ஈவு இரக்கமில்லாதவங்களாலே ஓடற பஸ்சிலிருந்து கீழே இறங்கி, மண்டை உடைஞ்சி மரணமடைஞ்சி போனே?
     எல்லா வெவரமும் நாலு நாளா புத்தகத்துல பேப்பர்ல வந்திடிச்சி... இது நியாயமா’?ன்னு மாதர் சங்கமெல்லாம் போராடறாங்களாம்... என்ன செஞ்சி என்னம்மா?  போன உசுரு வரப் போவுதா என்ன?
 
     யோவ், யாருய்யா அது? டெப்போவுலேந்து பஸ்ஸை எடுத்து வெளியேக் கொணாந்து பஸ்டாண்ட் போவுறதுக்குள்ள ஏறி உக்காந்திட்டு இருக்கறது, இறங்குய்யா, இறங்கு இறங்கு...’’
 
     காக்கி சட்டை போட்டு வாயில் பீடியை செருகியபடி ஒருவர் வந்து அதட்டவும் சின்னசாமி மிரண்டு போய் கீழே இறங்கினான்.
 
     என்ன அது பைல?’’ சந்தேகத்துடன் காக்கிச் சட்டை அதைப் பிடுங்கி உள்ளேப் பிரித்துப் பார்த்து, அவருவருப்புடன்’’ “என்னயா மண்ணெல்லாம் சுமந்துட்டு... சீ...’’ என்று சீறி விட்டுப் போனான்.
 
     மண் இல்லப்பா... மனசு... என் பொண்ணு புவனாவோட மனசு.  அவ கடைசியாய் நடந்த தடம் இந்த பஸ்ஸுல இருக்கும்ன்னு தான் தேடிட்டு நான் வந்தேன்.  பசங்க எல்லாம் ஒட்டு மொத்தமா அவளைச் சீண்டி சித்திரவதை செஞ்சப்போ பஸ் டிரைவரும், கண்டக்டரும் வாயை மூடிக்கிட்டு இருந்தாங்களாம்... காரணம் பஸ்ஸுல அப்போ பயணம் செஞ்ச பையனுகளுல ஒருத்தன் ஒரு பெரிய தலையோட மவனாம்.  பயணிகளும் பயந்து ஒடுங்கிட்டாங்களாம்... எல்லாம் பத்திரிகைக் காரங்கதான் சொன்னாங்க...
 
     எத்தினி கனவுகளோட புவனா இந்த பஸ்ஸுல காலேசுக்குப் படிக்கப் போனாளோ, பாவம்... அவ... சாம்பலும் இதே பஸ்ஸுல ஒரு நாள் பிரயாணம் செஞ்சிட்டுப் பெறகு ஆத்துநீர் எதிலாச்சும் கரைஞ்சி போவட்டும்ன்னு தான் நான் சாம்பலைத் தூக்கிட்டு இப்போ பட்டணம் வந்துருக்கறேன்...!’’
 
     சின்ன சாமி கண்ணீருடன் நடந்தான்.  அந்தக் குறிப்பிட்ட பஸ்  புறப்படும் நிலையத்திற்கு விசாரித்துக் கொண்டு வந்தவன் சரியாய் காலை எட்டு மணிக்கு ஏறி அமர்ந்தான்.
 
     புவனா தினமும் அந்த நேரம்தான் பஸ்ஸில் ஏறி அரை மணி நேரப் பயணத்தில் தன் கல்லூரியை அடைவதாக ஒரு முறை கிராமத்திற்கு வந்தபோது சின்னசாமியிடம் சொல்லி இருக்கிறாள்.
 
     பஸ் புறப்பட்டது.
 
     சின்னசாமி கல்லூரி பெயர் சொல்லி டிக்கெட் கேட்டு வாங்கவும், பையன்கள் சிலர் உரக்க சிரித்து விட்டு பெரிசு காலேஜ் போய் படிக்கப் போவுதுடா...!  அதுவும் லேடீஸ்காலேஜ்!’’ என்று கிண்டல் செய்தனர்.
 
     அவர்களை வெறுப்புடன் ஏறிட்டான் சின்னசாமி.  பாவி பசங்களா.. உங்களில் ஒருத்தன் தானடா என் மக உயிரைப் பறிச்சிருக்கீங்க....
 
     அடுத்தடுத்த நிறுத்தங்களில் கல்லூரி மாணவிகள் ஏறும்போது பையன்களின் கேலியும், கிண்டலும் எல்லை மீறவும் சின்னசாமி கொதிப்புடன், “தம்பீங்களா... உங்க போக்குக்கெல்லாம் எல்லையே கெடையாதுங்களா?’’ என்று கேட்டு விட்டான் ஆற்றாமை தாங்காது.
 
     அவ்வளவு தான்... கட்டம் போட்ட சட்டையும், ஜீன்ஸும் அணிந்த இளைஞன் ஒருவன் டிரைவரிடம் ஸ்டாப்என்று கூச்சல் போடவும், பஸ்  சட்டென  நின்றது.
 
     அவன் சின்னசாமியின் அருகில் வந்தவன் ஆக்ரோஷமாய் பார்த்துவிட்டு, “, பட்டிக்காடு... யாரப்பாத்து என்ன  கேள்வி கேக்கறே?  அதிலும் எல்லைஎதுன்னா கேக்கற?’’ என்று கூச்சல் போடவும் நண்பர்கள்  தினா... விடுடா.. கண்ட்ரீப்ரூட்.... அழுக்கு வேட்டியும், பச்சை மேல் துண்டுமா, முகத்துல மூணு நாள் தாடியோட பாக்கவே பரிதாபமா இருக்கிறான்டா....’’ என்று தடுத்தனர்.
 
     இவனுகளைத் தாண்டா தட்டி வைக்கணும்... படிப்பு அறிவு இல்லாதவன் தான் பல் உடையற மாதிரி கேள்வி கேட்பான்.  வயசுப் பசங்க குஷியா இருந்தா பொறுக்க மாட்டானுங்க... இவங்க வயசுல போடாத ஆட்டமா நாம இப்பப் போட்டுட்டோம்?’’
 
     லீவ் இட் யா!’’
 
     விடறதா, அதெல்லாம் நடக்காது.  என் எல்லைஎதுன்னு கேட்டுட்டான் இல்லே, அதை இப்போ அவனுக்குக் காட்டணும்!’’
 

     சின்னசாமி மிரட்சியுடன் பார்க்கும்போது அவன் தோளைப் பற்றி நிற்க வைத்தான்.
 
மேல் துண்டை சட்டென உருவிக் கீழே போட்டான் தினா.
 
     பார்ரா... பெரிசுக்கு சிட்டிக்கு வரப்போ ஷர்ட் போட்டுட்டு வரணும்ன்னு தோணலே?  இடியட், இதுல வாய் மட்டும் நீளுது?’’
 
     தினா... விட்டுத் தள்ளு.’’
 
ஒரு பையன் இப்படி அலட்சியமாய் சிரித்தபடி சொல்லவும் சின்னசாமி அடிபட்ட புலிபோல சிலிர்த்து உடம்பை உதறிக் கொண்டான்.  கண் சிவக்க உதடு துடிக்க தினாவிடம், “துண்டை உருவுனதோட உன் திமிரை அடக்கிக்க தம்பீ.. பட்டிக் காட்டானுக்கு உடை நாகரிகம் தெரியாது தான்... ஆனா, உள்ளத்து நாகரிகம் தெரியும்... அதனால தான் உன்னைக் காயப்படுத்த நெனைக்கல... என் பேச்சை மீறினா நீ விபரீதத்த சந்திக்கணும்... ஆமா?’’   என்று அழுத்தம் திருத்தமாய் சொன்னான்.
 
     அவ்வளவுதான்... தினா ஆவேசமாய் சின்னசாமியின் தோளிலிருந்து அந்தப் பையை உருவிக் கீழே போட்டுவிட்டு, “இப்ப என்ன சொல்ற பெரிசு?’’ என்று இடக்காய் கேட்டான்.
 
     சட்டெனக் குனிந்து பையை எடுத்தவன் உள்ளிருந்த மூட்டையை வேகமாய்ப் பிரித்து மகளின் அஸ்தியை அள்ளி எடுத்து அதை அப்படியே தினாவின் வாயில் கொண்டு அழுத்தினான் சின்னசாமி.
 
     தினா திமிறத் திமிற அவன் கைகளை வலுவுடன் தன் கரங்களால் அழுத்திப் பிடித்தப்படி, “உப்பைத் தின்னவன் தண்ணி குடிக்கணும்; தப்பை பண்ணியவன் மண்ணைத் தான் திங்கணும்... ஆமாண்டா, இது என் செத்துப் போன மவளோட உடம்பு மண்.  அவளை எரிச்ச சாம்பல் மண்ணு.  உன்னை மாதிரி ஒருத்தன் அவளைக் கிண்டல் செஞ்சி, பஸ்ல ஓட ஓட விரட்டி, படிக்கட்டுல தள்ளி, அவளைத் தடுக்கிக் கீழே விழுந்து சாக வச்சிட்டான்...
 
     எத்தினி கனவுகளோட என் மவ கிராமத்த விட்டுப் பொறப்பட்டு இங்கே வந்தா தெரியுமாடா?  குடியானவன் குடும்பமும் விளங்க நான் நல்லா படிச்சி, முன்னேத்திக் காட்டறேன்னு லட்சியத்தோட இங்க வந்தா...  வீட்டு வேலை செஞ்சி சம்பாரிச்சி அதுல கெடக்கிற துட்டுல படிக்கிறேன்பான்னு புறப்பட்டு வந்தா... அவளை ஈவு இரக்கமில்லாம சாகடிச்சது உன்னை மாதிரி இளைய தலைமுறைப் பசங்க தான்.
 
     காசு, கடவுளோட கண்ணைக் கட்டிப் போடாதுடா... அது பாத்துக்கிட்டே தான் இருக்கும்... தெய்வம் நின்று கொல்லுமடா... நின்னு கொல்லும்!’’ என்ற சின்னசாமியின் நெகிழ்ச்சியான கூக்குரல் தினாவை மட்டுமல்லஅங்கு அனைவரையும் உலுக்கிப் போட்டது.
                    **************************************************************************
 
     இப்போதெல்லாம் அந்த ரூட்டில் செல்லும் அந்த பஸ்ஸில் ஈவ் டீஸிங்சுத்தமாய் இல்லை என்று பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.
 
     சின்னசாமியை பேட்டி எடுக்க யாராரோ கிராமத்திற்கு வருகின்றனர்.  நன்றி கூறுகின்றனர்.
 
சின்னசாமியால்தான் எதுவும் பேச இயலவில்லை.
 
*****************************************************************************************************************
 
(இந்தக்கதை ஆறுவருடம் முன்பு தினமலர்  ராமரத்தினம் நினைவுச்சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு  பெற்ற கதை அந்த காலகட்டத்தில் ஈவ் டீசிங்  அதிகமாக  இருந்தபோது அதன்  பாதிப்பில் படைத்த கதை.  பெண்மணி மாத இதழ்  இந்தமாதம் இக்கதையை பரிசுபெற்ற சிறுகதைகள் என்ற  வரிசையில்  இம்மாதம் பிரசுரம் செய்துள்ளது)



(



--
***



--
 
 

7 comments:

  1. பரிசுகள் அள்ளித்தந்த
    கனத்த கதைக்குப் பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி ....

      Delete
  2. இந்த காலகட்டத்திற்கும் பொருந்தும். மனதைதொட்டது

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கேபி சார்!

      Delete
  3. சின்னசாமியின் உணர்வுகளை படிப்பவருக்கும் கடத்தியதில் உங்களுக்கு வெற்றிக்கா. மனதில் ஒரு கனமான உணர்வும் வருத்தமும் இப்போது படிக்கையிலும் ஏற்படுகிறது. பெண்மணி மீண்டும் பிரசுரம் செய்ததில் எங்களுக்குக் கிடைத்தது படித்து ரசிக்க ஒரு நல்வாய்ப்பு! (அதுசரீ.... அந்த பரிசுக் கவிதை...? எப்போ ரிலீஸ் பண்ணப் போறீங்க?)

    ReplyDelete
  4. வஞ்சம் நெஞ்சைத் தொடும் அரிய உதாரணம்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. நெகிழ்ந்து விட்டேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.