Social Icons

Pages

Thursday, November 07, 2013

மாறநேர் நம்பி .

மாறனுரை செற்றதனில் தேனிருந்தான் வாழியே
நம்மாழ்வார் அவதார ப்ரதிநிதியோன் வாழியே
யாமுனாரின் வினையனைத்தும் தான் தரித்தான் வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைத்திட்டான் வாழியே!
..காழியூர் மன்னார் அனந்தாழ்வார்--


 மாறநேர் நம்பி ஆளவந்தாரின் அந்தரங்க சீடர்களில் முக்கியமானவர். இவர் பஞ்சகுலத்தவர். இவரது சரித்திரம் ஆழ்வார்கள் ஆசாரியர்களின் வாழ்க்கையைப்போலவே போற்றத்தக்கது.
மாறநேர் நம்பி ஒரு முறை மிகவும் பசித்த போது வாய்க்கால் நீரை சேற்றுடன் அள்ளி குடித்தாராம்.. அதைக் கண்டு வியந்து வினவிய ஆளவந்தாரிடம் ‘கஞ்சிக்குக் காத்திருந்தேன் வரவில்லை. எனவே இந்த மண்சுவருக்கு(உடம்பிற்கு) மண்ணிட்டேன்” என்றராம். உலகப்பற்று அறுத்த உத்தமர். தம் உணர்வில், நம்மாழ்வாரை ஒத்திருந்ததால் ‘மாறன்நேர் நம்பி” (மாறனுக்கு இணையான நம்பி) என   அவரை அழைத்த ஆளவந்தார்,” மாறநேர் நம்பியே! இனி நீர் இந்த கிராமத்தில் வயலில் பணி செய்யவேண்டாம் என்னோடு ஸ்ரீரங்கம் வாருங்கள்” என்றார்.

“சுவாமி  நான் தங்கள் அருகில் கூட நிற்கத் தகுதி இல்லாதவன் தாழ்ந்தகுலத்தைச்சேர்ந்தவன்”

“ஜாதி குலம் ஆசாரம் இவைகளுக்கு அப்பாற்பட்ட ஞான தேசிகனாய் இருக்கிறாய் அப்பா! இனி நீர் எமது கோஷ்டியில்தான் சேரவேண்டும் “ என்று கட்டளையிட்டார் ஆளவந்தார்.

 குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ண்ற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் அடியார், எம்அடிகளே

என்ற நம்மாழ்வாரின் பாசுரம் இங்கு சிந்திக்கத்தக்கது.

காவிரிநதிக்கரையில் குடில் அமைத்துக்கொண்டு ஆளவந்தாரையே ஆசாரியராகக்கொண்டு அவருக்கு வழுவிலா அடிமை செய்து வந்தார் மாறநேர்நம்பி.

கீழச்சித்திரை வீதியில் (தற்போது சித்திரைத்தேர் நிற்குமிடத்திற்கருகில்)  திருமாளிகையமைத்து ஒரு பிரவசனக்கூடமும் (உபதேசிக்கும் மண்டபம்) அமைத்தார். மறுநாள் அதற்கு  ஒரு சுத்தப்படுத்தும் வைதீக காரியம் நடத்த உத்தேசித்திருந்தார் ஆளவந்தார்.

 நள்ளிரவில் ஒரு கரிய உருவம் வீட்டினுள் புகுந்து அங்குமிங்கும் அலைந்து எல்லாவற்றையும் நன்கு பார்த்து விட்டு வெளியேறியது. ஆளவந்தார் இதனைப் பார்த்து விட்டார். யாரென கேட்க  முற்படுகையில் அது மாறநேர்நம்பியெனவும், தாம் தாழ்ந்தகுலம் என்பதால் அடுத்த நாள் காலை சுத்தம் செய்யும் வைதீகக்காரியம்  நடந்துவிட்டால் பார்க்க இயலாதாகையினால் இரவே வந்து பார்த்துவிட்டு சென்றதாயும் அறிந்தார். ஆளவந்தார் கண்ணீர் சிந்தினார்.” மாறநேர் நம்பி திருவடிகள் பட்டதே போதும் – இந்த இடம் மிக மிக புனிதமாகிவிட்டது. இனி புனிதப்படுத்துவதற்காக புண்யாஹம் தேவையில்லை” என்று மறுநாள் காலை நடக்கவிருந்த நிகழ்ச்சியினை ரத்து செய்து விட்டார்.


ஆளவந்தாருக்கு ராஜபிளவை நோய் தாக்கியது. தம் ஆச்சார்யனுக்கு ஏற்பட்ட இப்பெரும் தீங்கைக் கண்டு துடித்தார் மாறநேர்நம்பி. அரங்கனிடம் வெகுவாக மன்றாடினார். இறுதியில் வென்றார். அவரது நோயை தாம் பெற்றார் அரங்கனிடம் பிரார்த்தித்து. தமக்கு இந்த ‘ராஜபிளவை’ நோய் வந்தபோது அதனை ‘ஆச்சார்ய பிரஸாதம்’ என்றெண்ணி பெருமிதம் கொண்டார். ஆளவந்தார் மாறநேர்நம்பியிடம் ,”என்னே கருணை என்னே குருபக்தியப்பா உனக்கு! என் பிறவிதனை போக்கவந்த கொடுநோயை நீ எடுத்துக் கொண்டாயே!’ என்று வருத்தப்பட்டாராம். தமது பாட்டனாரும் ஆசாரியாருமான நாதமுனிகளின் தாள்களை மனத்தில் இருத்தியபடியே பெரியபெருமாள் திருவடிகளைச்சேர்ந்தார் ஆளவந்தார்.(பிதா மஹம் நாதமுனிம் ப்ரஸீத மத்வ்ருத்த ம சிந்தயித்வா--ஸ்த்தோத்திர ரத்னம் 65)

மகாஞானியானவரும் மகாபூரணருமான பெரியநம்பிகளால் நீராட்டி, புண்ணுக்கு மருந்திட்டு, உணவு ஊட்டப்பட்டு அன்போடு ஆதரிக்கப்பட்டார் மாறநேர்நம்பிகள்.

“பெரிய நம்பி சுவாமிகளே! தங்கள் பணிவிடைகட்கு  என்னென்று நன்றி கூறுவேன்? நா தழுதழுக்கிறது. அடியேன் இன்னும் மூன்றுநாட்களே தேகவாசம் செய்வேன் ப்ராணப்ரயாண சமயத்தில் கேசவா கோவிந்தா மாதவா என்று கூறி உயிர் பிரிந்தால் என்னுடைய உடலை எரித்து புஷ்கரணியில் தீர்த்தாமாடி வீடு திரும்பவும், அன்றியும் ஆழ்வார்கள் புகழ்பாடும் தருணம் உயிர்பிரிந்தால் உடலை எரித்து கண்டஸ்நானம்(கழுத்தளவு குளியல்) பண்ணிவிட்டு வீடு திரும்பவும். இவை இரண்டுமின்றி ஆச்சாரியன் ஆளவந்தாரின் திருநாமங்களை ஜபித்துக்கொண்டிருக்கையில் உயிர் பிரிந்தால் உத்தம வைஷ்ணவர்களுக்குப் பண்ணுவது போல ப்ரும்மரதமேரருளி அந்திம காரியங்களைச்செய்யவும். ” என்று எடுத்துக்கூறினார்.

மாறநேர் நம்பியின் குருபக்தியைக்கண்டு பெரிய நம்பிகள் மிகவும் வியந்துபோனார்.

அந்த அந்திம நேரமும்  வந்தது.

மாறநேர் நம்பி ஆளவந்தாரையே மனதில் நிறுத்தி அவர் நாமத்தை ஜபித்துக்கொண்டே ஆசாரியன் திருவடியை அடைந்தார்.
மனம் வருந்திய பெரியநம்பி சுவாமிகள், நம்பி கூறியபடி  உயர் அந்தணர்களுக்குச் செய்யும் அந்திமக்காரியங்களை மாறநேர்நம்பிக்குச்செய்ய ஆயத்தமானார்..  ஸம்ஸ்காரங்களனைத்தும் மாறநேர்நம்பிகளுக்கு செய்தார்.
ஆனால் மாறநேர்நம்பிகள் என்ற தாழ்ந்தகுலத்தவருக்கு ஸம்ஸ்காரம் செய்து வைத்தபடியால் இவரை சக அந்தணர்கள் ஒதுக்கினர் தம் சமுதாயத்தினை விட்டு.

. இது குறித்து இராமனுஜர் வினவுகின்றார்.”நம்மிடம்
 தெரிவித்திருந்தால் நாமே சம்ஸ்காரத்தை பூர்த்தி பண்ணியிருப்போமோ  தாங்கள் அபவாதததை ஏற்கவேண்டுமா?” என்று கண்பனித்தார் பாஷ்யக்காரர்.


  ‘ஜடாயுவிற்கு ஸ்ரீராமபிரான் பண்ணவில்லையா? விதுரருக்கு தர்மர் கொள்ளிபோடவில்லையா?.ஜடாயு, விதுரரையும் விட எந்தவிதத்திலும் எந்தன் மாறநம்பி தாழ்ந்தவரில்லை  ..ஸ்ரீராமனையும் யுதிர்ஷ்டிரனையும்விட அடியேன்  அந்த தகுதி உடையவனுமல்லன். பயிலும் சுடரொளி நெடுமார்க்கடிமை பாசுரங்களின் பொருள்பட நடப்பவன் அடியேன். திருவாய்மொழி மறவாது மொழியும் என்னை தூஷிப்பவர்களின் கூச்சல் கடல் ஓசையைப்போல பயனற்றுப்போகும்” என்றார் பெரியநம்பி.

 உடையவரும் மனம் நெகிழ்ந்து பெரிய நம்பியை வணங்கி நின்றார்.
பெரியநம்பி  இப்படிமாறநம்பிக்கு  அந்திமக்காரியங்கள் செய்ததால் ஊர்மக்களின் பகைக்கு ஆளானார்.

திருவரங்கத்தில் நான்கு சித்திரைவீதிகள்(கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு) நான்கு கோபுரங்களைக்கொண்டது, இந்தவீதிகளில் ஆச்சார்ய புருஷர்கள் என்று அழைக்கப்படும் வைணவசமயத்தலைவர்களின் திருமாளிகைகள் அமைந்துள்ளன. சித்திரைதேரடியும் கிழக்கு சித்திரைவீதியில் இருக்கிறது. தேரடி அருகே பெரியநம்பியின் திருமாளிகையும் அவருக்கென்று சிறு சந்நிதியும்  இன்னமும் உள்ளது.

 அன்று சித்திரைத்தேர்..தேர்த்திருவிழா என்றால்  ஊரே இரண்டுபடும். பெரிய நம்பியின்மீது பகைகொண்டவர்கள் அவர் இல்லத்து  வழியாக தேர் செல்வதை விரும்பவில்லை.. அவர்களின் முணுமுணுப்பை நம்பியின் மகள் அத்துழாய் கேட்டுவிட்டாள்.  மானசீகமாய் நம்பெருமானிடம் வேண்டுகோள் விடுத்தாள்”அரங்கா! என்  தந்தை செய்தது தவறில்லை என்று உனக்குத்தெரியும் அப்படியானால் அவருக்கு தரிசனம் தராமல் உனது தேர் நகரக்கூடாது” என்றாள்.

திருத்தேர் நகராமல் நின்றது.


பின்னர் ஊர்மக்கள் பெரியநம்பிகளின் உயர்ந்தகுணத்தை எம்பெருமானே ஏற்றுக்கொண்டதை அறிந்து தங்கள் தவறினுக்கு  வணங்கி அவரிடம் மன்னிப்புகேட்டார்கள். அவரை அன்போடு  தேருக்கு அழைத்து  வந்தார்கள்.
பெரிய நம்பியும் எம்பெருமானின் தரிசனம் பெற்று பெருமகிழ்ச்சி அடைந்தார்

 தேர் நின்ற இடமே தேரடியானது. அதன் மிக அருகிலேயே பெரிய நம்பிதிருமாளிகை!   இவை இரண்டையும் திருவரங்கம் கிழக்குச்சித்திரைவீதியில்  இன்றும் காணலாம்!




 எனது இக்கட்டுரையை வெளியிட்ட விஜயபாரதம்  தீபாவளிமலர்2013க்கு நன்றி

 









--
 
. .


--

9 comments:

  1. பெரிய நம்பிய்யின் பெருமை பேசும்
    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. Anonymous7:38 PM

    வணக்கம்
    பதிவு அருமை வாழ்த்துக்கள்... தொடருகிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு அக்கா!!... பாராட்ட வார்த்தைகளில்லை.. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. அருமையான பதிவு. இந்த காலத்தில் ஞாபகப்படுத்த வேண்டிய விஷயமும் கூட. எதிர்ப்பு இருதாலும் அப்போதும் குணத்தால் கொண்டாடப்பட்டார்கள் பெரியவர்கள் என்று அழகாய் எடுத்துக் காட்டி விட்டீர்கள்

    ReplyDelete
  5. இதுவரை அடியேன் அறியாததோர் கதை. அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பெரிய நம்பி + மாறநேர் நம்பி ஆகியோரின் பெருமைகளை உணர முடிந்தது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. இந்தக்கட்டுரை விஜயபாரதம் தீபாவளிமலர் 2013 இல் வெளிவந்துள்ளதற்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    தேர் படத்தேர்வு ஜோர்.

    ReplyDelete
  7. பின்னூட்டமிட்ட வைகோ சார் ரிஷபன் ரூபன் பார்வதி இராஜேஸ்வரி அனைவர்க்கும் நன்றி மிக

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரி.
    தங்கள் தளத்திற்கு முதல் வருகை. நம்பிகளின் வரலாற்றை அழகாக படம் பிடித்து காட்டுகிறது தங்கள் பதிவு. தொடர வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர் பாண்டியன் அவர்களுக்கு

      Delete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.