Social Icons

Pages

Saturday, December 10, 2011

பாரதி நீ இன்றிருந்தால்..?

பாரதி!


நீ இன்றிருந்தால்

என்ன செய்வாய்?


தேமதுரத்தமிழோசையினை

உலகமெலாம் பரவச்செய்ய வேண்டும் என்றாய்

தமிழ்த் தொலைக்காட்சிகளில்

தடுமாறும் தமிழினைக்கேட்டுவிட்டால்

திரும்பிப்பார்க்காமல் போய்விடுவாய்!


பாரதியின் கவிதைத்தோட்டத்தில்

ஏகாதிபத்தியக்கழுகுகள்

அமர்ந்து ஆட்சிஒலியை இசைத்தாலும்

அவற்றில் ஒன்றால்கூட

உன்னைப்போல்

ஆன்மாவைத்தொடமுடியவில்லை.


கந்தல்கோட்டணிந்தகவிஞனே

நீ

பாரதவீணையின்

சுதந்திரத்தந்திகளைப்

பாழாக்கிய வெள்ளைக்கரங்களை

எரிமலை எழுதுகோலால்

தகர்த்து எறிந்தவன்!

இன்று அந்த நல்லதோர் வீணையில்

நலிந்துகிடக்கின்ற

ஊழல் புழுதிகளைக்கண்டால்

உன் நாடிநரம்புகள் துடிக்குமையா!


எண்ணியமுடிதல்வேண்டும் என்றாய்


’என்றும் அதுபகல்கனவு’ என

அடுத்த வாக்கியம் அமைத்திருப்பாய்!

ஏனெனில் யாரும் இங்கு

எண்ணுவதே இல்லை!



வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத்தாயை


வணங்குதல் என்போம் என்றாய்



வந்தே மாதரம் என்பது

 ‘வந்து ஏமாத்தறோம்’ அல்லது


வந்து மாத்தறோம்(ஆட்சியை)

 என்றாகிவிட்டதை அறிவாயா?



சுதந்திரம்கிடைக்குமுன்னே

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாய்

களி நடனம்புரிந்தாயே!

வா பாரதி,வந்து எங்கள் சட்டசபைக்குள்

பார்வைக் கணைகளைஓடவிடு.

கூச்சல் இரைச்சல் கொட்டாவி குழப்பம்

சிலநேரம் கைகலப்பு

சட்டென்ற வெளிநடப்பு

இவைகளோடு முன்னெல்லாம்

பாதரட்சை கூட பறந்திருக்கிறது!


எல்லோரும் இந்நாட்டுமன்னர் என்றாய்

உண்மைதான்!

ஐந்தாண்டுக்கு ஒருமுறை

வாக்குச்சாவடியில்மட்டும்

நாங்கள் மன்னர்கள்தான்!

ஓட்டுகேட்கும்போது

அரசியல்வாதிகளின் ஒத்திகைக்கே

ஆஸ்கார்விருதுகொடுக்கலாம்!

ஆம்

தேர்தல் நாடகத்தில்

பிச்சை எடுப்பதுபோல கைகுவிப்பார்,

 எங்கள் முன்னே!

இச்சையாய் அவருக்குப் பதவி

கிடைத்தபின் நன்கு குவிப்பார் பொன்னே!


’ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்

.. ஜன்மம்இத்தேசத்தில் எய்தின ராயின்

வேதிய ராயினும் ஒன்றே - அன்றி

.. வேறு குலத்தின ராயினும் ஒன்றே’

என்றஎங்கள் பாரதியே!

 இன்றைய அரசியல்வாதிகளோ

ஜாதி-மதங்களைப் பார்ப்பார் ! - அதைச்

 சாற்றியே தேர்தலில் வெற்றியைச் சேர்ப்பார்!

நித்தம் மாறுவார் கட்சி! - அதில்

.. நேர்த்தியாய் செய்வார்புரட்சி!


பள்ளிச்சாலைகள் செய்வோம் என்றாயே பாரதி!

இன்று

கல்விச்சாலையிலெல்லாம் பணம் தான் ஆட்சி

.கையில்  காசிருந் தால்தான்  மனிதனுக்கு மாட்சி!


நிமிர்ந்த நன்னடை நேர்கொண்டபார்வையும்,


நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவதில்லையாம்

 என்றுபுதுமைப்பெண்களை நிலைநிறுத்தினாய்

ஆனால் பாரதி நீ

விருப்பியதுஒன்று

ஆனல் இன்றுநடப்பதே

சில இடங்களில்

வேறொன்று!

உடைகளில்மட்டும்

புதுமை செய்யும்

சிலபெண்களைக்கண்டால்

பொங்கி எழுந்திடுவாய்


எட்டயபுரத்து முண்டாசுக்கவிஞனே

நீ ஒருதீர்க்கதரிசி!

ஆன்மாவிலிருந்து

ஆகாயத்திற்கு விடியல்களை

வினியோகித்தவன்!

அதனால்தான் சிங்களத்தீவினுக்கு

பாலம்அமைக்கச்சொன்னாய்!

இன்று இலங்கைத்தீவின்

எம்இன மக்களுக்காய்

கண்ணீர் வடித்தபடி

மனத்தாலேயே ஒரு

துயரப்பாலம் கட்டிவருகிறோம்


ஒன்றுபட்டாலுண்டு வாழ்வே - நம்மில்


ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த

ஞானம் வந்தால் பின்நமக் கெது வேண்டும்"

என்று நீ பாடினாய்

ஞானம் இன்னும் வராததால்

ஆறுக்கும் நதிக்குமாய்

அடித்துக்கொள்கிறோம்

இங்கிதைக்கண்டால்

உன் கண்கள்தான் கடலாகும்.

 இன்றுசென்று விடு 

என்றாவது

அன்பினால் பாரதம்

ஒன்றாகி ஒற்றுமையாய்

வென்று உயரும்போது

மீண்டு(ம்)  வா பாரதி!
****************************

(டிசம்பர்11..மகாகவியின் பிறந்தநாளுக்கு கவிதை சமர்ப்பணம்)



28 comments:

  1. தலை மகனுக்கு தலை தாழ்த்தி வணக்கம்.

    நன்றிகள் அக்கா. உரிய முக்கியத்துவம் தந்ததற்கு.

    (நாளைக்கு வெளியிட்டிருக்கலாமோ!?)

    ReplyDelete
  2. ரசிகன் said...
    தலை மகனுக்கு தலை தாழ்த்தி வணக்கம்.

    நன்றிகள் அக்கா. உரிய முக்கியத்துவம் தந்ததற்கு.

    (நாளைக்கு வெளியிட்டிருக்கலாமோ!?)

    8:04 PM

    >>>>>>பாரதி பிறந்தநாளை ஒருவாரமாகக் கொண்டாடுகிறார்களே ரசிகன்! ஒருநாள்தான் முன்னாடி பதிவிட்டிருக்கிறேன்..நன்றி மிக வருகைக்கு.

    ReplyDelete
  3. பாவேந்தனுக்கு பிறந்த நாள் நினைவாக
    தாங்கள் படைத்துள்ள கவிதையின் தாக்கம்
    நிச்சயம் படிப்பவர்களை இரண்டு நாள் தூங்கவிடாது
    மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
    அருமையான பதிவு.வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  4. கவிதையின் வேந்தனை அழகான கவிதையால் பாடியிருக்கிறீர்கள். எனக்கு கவிதை வராது என்பதால் மீசைக்காரனின் உரைநடையை இன்று பதிவிட்டுள்ளேன். நல்லெண்ணங்களை விதைத்த (க)விதை அருமை அக்கா...

    ReplyDelete
  5. ஆன்மாவிலிருந்து

    ஆகாயத்திற்கு விடியல்களை

    வினியோகித்தவன்!

    ஆஹா.. அருமை.

    ReplyDelete
  6. Arumaiyana pakirvu. Nanri. BHARATHI ku Je!

    ReplyDelete
  7. அருமை... உண்மை சுடுகிறது. உங்கள் சொல்லாட்சி மிளிர்கிறது.

    "பாப்பா பாட்டு பாடிய பாரதி நாந்தானே
    நான் பாடிய பாட்டு படுகிற பாட்டை கண்டேனெ...
    மீண்டும் சென்றேனே"

    என்ற பாடலில் நினைவிலாடுகிறது.

    ReplyDelete
  8. ஆகா அருமை.

    சட்டசபைக்குள் பார்வைக் கணைகளைஓடவிடு.//

    Class.

    ReplyDelete
  9. ஆஹா.. என்னவொரு சிந்தனை..
    என்னதொரு கவிதை.. வெல்டன்..

    ReplyDelete
  10. மிக அழகாக மனக்குமுறல்களை வெளிபடுத்தி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  11. பின்னூட்டமிட்டுப்பாராட்டிய அன்பு உள்ளங்களான திருவாளர்கள் பார்த்த்சாரதி ரிஷபன் கணேஷ் மன்னைமாதவன் துரைடேனியல் ரமணி சாம்ராஜ்யப்ரியன்(தினேஷ்) டிவி ராதாக்ருஷ்ணன் மற்றும் அன்புத்தோழி சக்திப்ரபாக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. முண்டாசுக்கவிஞனை மீண்டும்
    அழைக்கும் இனிய கவி சகோதரி..

    ReplyDelete
  13. ஆதங்கம் தெறிக்கும் வரிகளின் முடிவில் கீற்றாய் வெளிப்படும் எதிர்கால நம்பிக்கையின் வெளிச்சம் கண்டு மெல்லிய ஆசுவாசத்துடன் மகிழ்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அற்புதம் சைலஜா.பாரதி இருந்தால் இன்னும் ரௌத்திரம் சொல்லித் தந்திருப்பான் !

    ReplyDelete
  15. உங்களின் உள்ளக் குமுறல்களை அவன் முன்னமே கொட்டி விட்டீர்கள்...

    அந்நியனிடம் இருந்து விடுதலை...
    ஆண்டான், அடிமை என்றில்லாமல் யாவரும் சமம் என்று சமுதாய விடுதலை...
    இவைகள் யாவும் பெற்றதால் மட்டும் ஒருபோது கிடைக்கப் போவதில்லை விடுதலை...
    என்றே அடுத்ததாக ஒரு முழுமையான, அவசியமான ஒன்றை செய்வதே பூரண விடுதலைக்கு பாதை வகுக்கும் என்றே மகாகவி வகுத்துச் சென்றான்... அது தான் பெண் விடுதலை... விடுதலை பெறுவது, கல்வி கேள்விகளை முழுமையாகப் பெறுவது... அப்படி பெரும் பொது அவள் ஆணோடு பெண்ணாக சமமாக அமர்கிறாள்...

    இது புதிது அல்ல, வேதகாலத்தில் நம்முன்னோர்கள் செய்ததே என்பதையும் கூறி....
    அப்படிப்பட்ட பெண்ணால் தான் இந்த சமூகத்திற்கு நல்ல ஆண்மக்களைப் பெற்றுத் தந்து அவர்களை உருவாக்கவும் முடியும் என்கிறான்.... அதோடு மட்டும் அல்ல... எவ்வளவு கல்வி கேள்விகளைப் பெற்றாலும் உலக ஞானம் பெற்றாலும், ஆன்ம ஞானம் பெறவேண்டும்.. அது தான் மனித லட்சியம், அதை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்... அப்படி புலன்களை கட்டுபடுத்தி.... அன்பால் சக்தியைப் பற்றியே, ஈசனென்னும் தெய்வமான பேரறிவை நாம் அடைய வேண்டும்... அதாவது அந்த பேரொளியில் கலக்க வேண்டும்.... அதாவது வாழும் போதே ஜீவன் முக்தி பெறவேண்டும்... அப்படி பெரும் பொது அங்கே கலி இறந்து போகிறான்... இது தான் பாரதி கூறிய, விரும்பிய, வேண்டிய பிறப்பறுக்கும் விடுதலை... இதற்கு தான் அவன் பாடுபட்டான்... நமக்கும் வழி காண்பித்தும் சென்றுள்ளான்.

    ரஷ்ய புரட்சி... ஆஹா! வென எழுந்தது ஒரு புரட்சி.... அங்கே ஆரம்பம் இவனின் எண்ணம்... அப்படி கலி வீழும் போது.. இங்கே மீண்டும் கிருதயுகம் பிறக்கிறது.... அப்படிப்பட்ட ஒரு நிலை மீண்டும் இந்த புவியில் வரும் அதை இந்த உலகிற்கு, இந்தியா அளிக்கும், ஆம்!... ஆம்...ஆம்!!.... ஆம்,..ஆம்...ஆம்!!! இந்தியா உலகிற்கு அளிக்கும் என்றே இந்த யுகபுருஷன், தீர்க்கதரிசி..உலகத்தையே உள்ளங்கையில் வைத்து பார்த்த மகாபுருஷன் அறுதியிட்டுக் கூறி நம்மோடு வாழ்கிறான்... நல்லது எங்கு வரினும் கேட்டவன் அதை பாராட்டியவன்... அதே நேரம் தீயது யாதாகினும் அதை நேராகச் சுட்டவன் இந்த ஞானச் சூரியன்..

    ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
    அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
    பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
    போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
    நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
    ஞான நல்லறம் வீர சுதந்திரம்
    பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
    பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ! 4

    நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
    நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்

    தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
    சாலவே யரி தாவதொர் செய்தியாம்;

    குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்;
    கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
    நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
    நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ! ௫

    உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
    ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
    இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
    யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
    திலக வாணுத லார்நங்கள் பாரத
    தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்;
    விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
    வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம். 8

    சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;
    சவுரி யங்கள் பலபல செய்வராம்;
    மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
    மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
    காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
    கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
    ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
    இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ! 9

    தங்களின் ஆதங்கம் எல்லாம் உண்மையே அவைகளை " மாதர் தம்மை (தாமே) இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தினால்" அத்தனையும் சாத்தியமே.... காட்சிக்கும், கவர்ச்சிக்கும், வெறும் பட்டுப் புடவைக்கும் மயங்கிப் போகாமல் புதியதோர் உலகை உருவாக்க சக்தி அம்சம் கொண்ட அன்னைகளான, புதுமைப் பெண்களின் கையில் தான் இருக்கிறது "வேதம் புதுமை செய்ய" வேண்டியவைகள் எல்லாம்....

    அதற்கு நாம் அனைவரும் இயன்றவரை பாடுபடவேண்டும்... பாரதி விரும்பிய கிருத யுகம் ஒருநாள் மலரும்...

    நல்லப் பதிவு.... அவனைப் பற்றிய சிந்தனையை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு பெற்றேன் இது என் பேறு..

    வாழ்க!வளர்க!!பாரதியின் புகழ்!!!

    நன்றி சகோதிரி...

    ReplyDelete
  16. முண்டாசுக் கவிஞரைக் கொண்டாடி
    குமிறி, நேரில் வரின் திண்டாடித்
    திசை அறியாமல் ஓடுவாரென
    கவிதைச் செண்டாக்கித் தந்தீர்
    நன்றி!

    த ம ஓ 2

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. உணர்ச்சிப் பெருக்கில் பாரதியை அகல உரைத்து உங்களின் கவிதை நயத்தை நன்கு பாராட்டாது போனேன்!...

    ////ஞானம் இன்னும் வராததால்

    ஆறுக்கும் நதிக்குமாய்

    அடித்துக்கொள்கிறோம்

    இங்கிதைக்கண்டால்

    உன் கண்கள்தான் கடலாகும்.

    இன்றுசென்று விடு

    என்றாவது

    அன்பினால் பாரதம்

    ஒன்றாகி ஒற்றுமையாய்

    வென்று உயரும்போது

    மீண்டு(ம்) வா பாரதி!////

    பாரதியின் எண்ணம் போலே அந்த நாள் விரைவில் வந்திடவே நானும் உங்களோடு அன்னை பராசக்தியை வேண்டுகிறேன்.
    அவன் சொன்ன புதுமைப் பெண்ணாய் பிரதிபலிக்கும் உங்கள் கவிதையை பாராட்டி முடிக்கிறேன்...
    வாழ்க! வளர்க!! உங்களின் பாரதி பற்று. நன்றிகள் சகோதிரி....

    ReplyDelete
  18. பாரதியைத் திரையில் பார்க்கும்போதே
    இன்றைய அவலத்தை
    அவர் காணாமல் மறைந்தாரே என்று நிம்மதிப்படுகிறது மனம். அதை அழகிய உணர்ச்சிமிகு க் கவிதையாகவே வடித்திருக்கிறீர்கள் ஷைலஜா.
    பாரதி மீண்டு வரவாவது நாடு உருப்படட்டும்.

    ReplyDelete
  19. மகேந்திரன் said...
    முண்டாசுக்கவிஞனை மீண்டும்
    அழைக்கும் இனிய கவி சகோதரி..

    8:29 AM

    ......

    நன்றி மகேந்திரன் அவன் மீண்டுவந்தால் நம் இனம் நீண்டு வாழும் நல் சிந்தனையுடன்.

    ReplyDelete
  20. கீதா said...
    ஆதங்கம் தெறிக்கும் வரிகளின் முடிவில் கீற்றாய் வெளிப்படும் எதிர்கால நம்பிக்கையின் வெளிச்சம் கண்டு மெல்லிய ஆசுவாசத்துடன் மகிழ்கிறேன். வாழ்த்துக்கள்.

    3:13 PM

    <<<>>>

    ஆம் கீதா நம்பிக்கை வெளிச்சம் வரவேண்டும் கருத்துக்கு நன்றி மிக

    ReplyDelete
  21. //ஹேமா said...
    அற்புதம் சைலஜா.பாரதி இருந்தால் இன்னும் ரௌத்திரம் சொல்லித் தந்திருப்பான் !

    9:05 PM

    /////
    <<<<

    ஆமாம் ஹேமா//சில நேரங்களில் ரௌத்திரம் தேவையாகவே உள்ளது. பொறுமைக்கும் அளவு உண்டே..நன்றி கருத்துக்கும் வரவுக்கும்

    ReplyDelete
  22. தமிழ் விரும்பி said...
    உங்களின் உள்ளக் குமுறல்களை அவன் முன்னமே கொட்டி விட்டீர்கள்...


    தங்களின் ஆதங்கம் எல்லாம் உண்மையே அவைகளை " மாதர் தம்மை (தாமே) இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தினால்" அத்தனையும் சாத்தியமே.... காட்சிக்கும், கவர்ச்சிக்கும், வெறும் பட்டுப் புடவைக்கும் மயங்கிப் போகாமல் புதியதோர் உலகை உருவாக்க சக்தி அம்சம் கொண்ட அன்னைகளான, புதுமைப் பெண்களின் கையில் தான் இருக்கிறது "வேதம் புதுமை செய்ய" வேண்டியவைகள் <<<<

    //

    அற்புதமான விளக்கமான பின்னூட்டம் தமிழ்விரும்பி...நன்றாக சொன்னீர்கள் புதியதோர் உலகம் செய்ய புதுமைபெண்களால் தான் இயலுமென்று மேலும் உங்கள் சிந்தனை விரிந்த விளக்கம் அருமை மிக்க நன்றி

    ReplyDelete
  23. //புலவர் சா இராமாநுசம் said...
    முண்டாசுக் கவிஞரைக் கொண்டாடி
    குமிறி, நேரில் வரின் திண்டாடித்
    திசை அறியாமல் ஓடுவாரென
    கவிதைச் செண்டாக்கித் தந்தீர்
    நன்றி!

    த ம ஓ 2

    புலவர் சா இராமாநுசம்

    11:27 AM

    ///
    \ஆஹா கவிதை நடையிலேயே அழகான பாராட்டு நன்றி புலவர் ஐயா.

    ReplyDelete
  24. /தமிழ் விரும்பி said...
    உணர்ச்சிப் பெருக்கில் பாரதியை அகல உரைத்து உங்களின் கவிதை நயத்தை நன்கு பாராட்டாது போனேன்!......//


    >>>>பாராட்டி இருக்கிறீர்களே மறுமுறை நேரம் எடுத்து இங்கே கருத்துக்கூறுவதற்கு நான் தான் தங்களைப்பாராட்டவேண்டும்



    ///பாரதியின் எண்ணம் போலே அந்த நாள் விரைவில் வந்திடவே நானும் உங்களோடு அன்னை பராசக்தியை வேண்டுகிறேன்.
    அவன் சொன்ன புதுமைப் பெண்ணாய் பிரதிபலிக்கும் உங்கள் கவிதையை பாராட்டி முடிக்கிறேன்...
    வாழ்க! வளர்க!! உங்களின் பாரதி பற்று. நன்றிகள் சகோதிரி....

    4:19 PM>???

    ஆம் எண்ணிய முடிதல் வேண்டும் சகோதரரே நன்றி மிக/

    ReplyDelete
  25. //வல்லிசிம்ஹன் said...
    பாரதியைத் திரையில் பார்க்கும்போதே
    இன்றைய அவலத்தை
    அவர் காணாமல் மறைந்தாரே என்று நிம்மதிப்படுகிறது மனம். அதை அழகிய உணர்ச்சிமிகு க் கவிதையாகவே வடித்திருக்கிறீர்கள் ஷைலஜா.
    பாரதி மீண்டு வரவாவது நாடு உருப்படட்டும்.

    5:00 PM

    //வல்லிமா வாங்க/பாரதி மீண்டு வர ஆசையாய் காத்திருப்போம் நன்றி கருத்துக்கு.

    ReplyDelete
  26. எல்லா தமிழ் நெஞ்சங்களிலும் எரிகின்ற தீ பாரதீ ... கவிதைக்கு நன்றி ...

    ReplyDelete
  27. அருமை அருமை

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.