Social Icons

Pages

Thursday, December 19, 2013

ஆழிமழைக்கண்ணா!

பெரியாழ்வார்  இன்றைக்கு சீக்கிரமே எழுந்துவிட்டார் உண்மையில் அவர் தூங்கவே இல்லை ..மகளுக்கு முன்பாய்  எழுந்து அவளிடம் தான் எழுதிய ஒருபாடலைக்காட்டவேண்டும் என்னும் பரபரப்பு.அதிலும் தமிழுக்கே  அழகுதரும் ‘ழ’ என்ற எழுத்தை வைத்து  தான் எழுதிய பாசுரத்தை  வாசித்துக்காட்டும் ஆவலில்  இருந்தவரை  கோதை நோக்கினாள்.
 
 
“என்ன அப்பா  இன்று தங்கள்முகத்தில்  இத்தனை  சுறுசுறுப்பு! கண்கள் அலைபாய்கின்றன வாய் ஏதோ சொல்லத்துடிக்கின்றன?”
 
மகள் கேட்கக்காத்திருந்தவர்போல  ஆழ்வார் பெருமான்    சொல்ல ஆரம்பிக்கிறார்.
 
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்
      கோவிந்தனுடைய கோமள வாயிற்
குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்
      கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக்
குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்
      விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினராகிச்
      சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே             
 
”ழகரத்தை  பத்து முறை  பயன்படுத்தி எழுதினேன் அம்மா! ”என்றார் பரவசமாக
 
“அப்படியா  அப்பா! நீங்கள் எட்டடிபாய்ந்தால் நான் பதினாறடி பாயமாட்டேனா என்ன?!  கேளுங்கள் இன்றைய பாசுரத்தை” என்று குறும்புதவழ  சொன்னாள்  கோதை. புன்னகை மாறாமல்  ஆழ்வாரை ஏறிட்டுவிட்டு பாசுரத்தை வாசித்தாள்.
 
 
 
 
“ஆஹா!  கோதை!! என் பாட்டினில் ‘ழ’ பத்துமுறைதான் வருகிறது உன் பாட்டிலோ 11 முறை வருகிறது! பூமகளை  பூமனிதன்  வெல்லமுடியுமா  ? அருமை அம்மா!”
 
”அப்படியில்லை அப்பா...  உங்களிடம் நான் கற்ற பயிற்சியின் தேர்ச்சியே இது! அப்பா! நான்  அண்ணலை கண்ணா என்று  செல்லமாய் அழைக்கலாம் தானே?’
 
“கூடாது என்றால் நீ  அழைக்காமலா போய்விடுவாய் கோதை?”
 
“போங்கள் அப்பா...சின்னக்கண்ணனைக்கொஞ்சிக்கொஞ்சி உங்களுக்கு எப்போதும் குறும்புதான்.
பக்தியும் ஞானமும்  பிரேமையாக வரவேண்டும். சிருங்காரம் சேரும்போது  அந்நியோன்னியம் அதிகரிக்கும் அன்பு ததும்பும்   பக்தி என்றால் காதல்.  பெருமானிடம் நாம் கொள்ளும் காதல். கண்ணனுக்கே ஆமது காமம்..அதனால்தானே ஆழ்வார்பெருமான்கள் சிலர் நாயகிபாவத்தில்  அண்ணலை தன் வசமாக்குகிறார்கள்.? நானோ நிஜத்தில் பெண்.நான் எப்படி  பிரேமையின்றி  பாடல் எழுத முடியும்? ஆனால் பிரேமையே  எல்லா  பாடல்களிலும் ஆக்கிரமிக்காது அப்பா. வேத சாரத்தைப்பிழிந்துதர நினைக்கிறேன்...சரி  பாடலை நான் விளக்குவதைவிட  என்பாடலைக்கேட்ட  ஒரு  பக்தையின்  விமர்சனமாக  இனி கேளுங்கள் அப்பா...”
 
“உத்தரவு தாயே!”
********************************************************
 
ஆயர்பாடித்திருநகரில் மார்கழி பிறந்துவிட்டது  பனி இல்லாத மார்கழியா?பனிக்காலம் வந்தால் மழை இருக்காது அடுத்து கோடைவந்தால் மழைக்கே இடமில்லை. மழை இல்லாவிட்டால்  மாடு கன்று மக்களின் கதி என்ன? முதல்பாட்டிலேயே  பாவையரை நீராட வரச்சொல்லி அழைத்தாயிற்று  யமுனையோ வற்றிக்கிடக்கிறது  மழை பெய்தால் நீர்நிலை நிறையும் நாட்காலே நீராடலாம். பரமனடி பாடலாம். நெய் உண்ணாமல் பால் உண்ணாமல் மை எழுதாமல் பூச்சூடாமல் வம்பு பேசாமல் புலன்களைக்கட்டிவைத்து புருஷோத்தமனை வழிபடலாம்.  எல்லாவற்றிர்க்கும் மழை பிரதானம் அல்லவா? தோழிகள்  கேட்பார்களே”ஏனடி  கோதை நீராட அழைக்கிறாயே  யமுனையில் மண்ணில்தான் புரளவேண்டும்.”என்று பரிகாசம் செய்வார்களே!
 
மழைதெய்வத்தை வேண்டிக்கொள்வோம் என முடிவெடுக்கிறாள் கோதை
 
ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழிமுதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
 
.
ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்!



இதுல வரும் ஆழி-மழை-கண்ணா யாராக இருக்கும்?


கண்ணா என்பது அன்பாக விளிக்கும் சொல்லும் கூட! அதிலும் பெண்களுக்கு  மனதுக்குப்பிடித்தவர்களை  இப்படி அழைக்க மிகவும் பிடிக்கும்!

 மழைக்கண்ணனாமே அப்படியானால் நீர்த் தெய்வம் வருணனா? இல்லை மழைத் தெய்வம் இந்திரனா? :)

* இந்திரனா? அவனைத்தான் அன்று  தோற்கடித்து கோவர்த்தன மலையைத் தூக்கி குன்றுக் குடையாய் எடுத்தாய் குணம் போற்றியாகிவிட்டதே.. கண்ணனின் எதிரி அவள் எதிரியும் தானே? அவனைப் போய் கூப்பிடுவாளா? :)

* வருணனா? அவனோ  அன்று  கடலில் அலையே இல்லாமல் பண்ணியபோது  ராமனிடம் சரணடைந்தவன் ஆயிற்றே ! சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி! மனத்துக்கு இனியான் இராமன்! ! அந்த  இராமனின் எதிரி  வருணன் அவள் எதிரியும் தானே?   பிறகு  கோதை,  வருணனைக் கூப்பிடுவாளா? :)


எப்போது குன்றம் வணங்கிக் குன்றம் எடுத்தானோ, அப்போதே இந்திரனையும் வருணனையும் அடக்கி, மழைக்கும் அவனே நேரடியான அதிபதி ஆகி விட்டான்! சாதாரணப்பெண்ணா கோதை  அறிவால் வாழ்பவள் அல்லவா?எனவே கண்ணனையே மழைக் கடவுளாக  அழைக்கிறாள்!
 
கண்ணனின் கண்களில்  கருணை மழை எப்போதும் உண்டே! உண்மையான பக்தர்களைக்காணும்போது அவன் கண்களில் ஆனந்த மழையென  நீர் பொழியுமாம். எப்படி என்கிறீர்களா?
 
குசேலர் அன்று கிருஷ்னனின் திருமாளிகைக்கு வருகிறார்.தன் நண்பனும் பக்தனுமான  குசேலன் வருவதை அறிந்த  கிருஷ்ணன் அதிவேகமாய்   எழுந்து நடக்கிறான்.  எதிர்கொண்டு அழைத்து பக்தனை  இறுக அணைக்கிறான்.
ப்ரீதோவ்ய முஞ்சத் அபீந்தூன் நேத்ராப்யாம் புஷ்கரேக்ஷண:
பரமபக்தனானான். செந்தாமரைமலர்கள் போன்ற இருகண்களாலும் ஆனந்தக்கண்னீரை வர்ஷித்தான். குசேலருக்கு வரப்போகிற பெரிய ராஜ்ஜியத்திற்கு பட்டாபிஷேகம் செய்தது போலிருந்தது என்கிறார்  சுகப்பிரம்மம்  .அவரது  வாக்கினால் வந்த விஷயம் இது ! ஆழிமழைக்கண்ணா என் ஆண்டாள் விளித்தது சரிதானே!
 
.ஆழி என்பதற்கு  அநேக அர்த்தங்கள்
 
 பொய்கைபெருமான்  அருள்வாரே முதல்பாடலிலேயே
 
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்யக்கதிரோன் விளக்காக செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று
 
என்கிறார்
 
இதில் முதல் ஆழி  சக்கரம் இரண்டாம் ஆழி கடல்.
ஆழி எனும் சக்கரம் பெருமானின் பஞ்ச ஆயுதங்களில் தலைமையானது.சக்ராயுதம்  தான் சக்கரத்தாழ்வார் என்றும்  போற்றப்படுகிறார். சுதர்சன சக்கரம் வலிமையானது துன்பம் போக்கக்கூடியது.  சக்கர பிம்பத்தில் அதைச்சுற்றி ஒருவளையமும் தீக்கொழுந்துகளும்   இருக்கும். சூர்யகோடி ஸம்ப்ரபம்  என்பார்கள் . அத்தகைய  ஒளியும்  வலிமையும் கொண்டது.
 
 
 
 
ஆழிமழைக்கண்ணா என்னும் ஆரம்ப வார்த்தைக்கு கடல்போன்ற கம்பீரமான  தோற்றத்தை உடைய மழைக்குத்தலைவனான  கண்ணனே!
ஒன்றும் நீ கைகரவேல்... நீ ஒன்றையும் ஒளிக்கக்கூடாது
ஆழி உள் புக்கு = கடலில் புகுந்து முகந்து கொடு = அள்ளிக் கொண்டு
 ஆர்த்து ஏறி = சத்தமாக/அணிந்து ஏறி
ஆர்த்தல் = ஒலி எழுப்பல் எனக் கொள்ளலாம்!

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் = ஊழிக் காலத் தோற்றம் போல், மேகம் கறுத்து....காளமேகப்பெருமான்.
பாழி அம் தோளுடைப் பற்பனாபன் கையில் = பாழி என்றால் வலிமை/குகை! அம் என்றால் அழகு! வலிமையான, அதே சமயம் அழகான தோள்! மல்லாண்ட திண் தோள் என்கிறார் ஆண்டாளின் அப்பாவும். தோள் கண்டார் தோளே கண்டார் என்கிறார் பின்வந்த கம்பரும். ஆணுக்கு அழகு தோள்.

பற்மநாபன்=பற்பநாபன்! தமிழாக்குகிறாள் கோதை! நாபிக்கமலத்தையுடையவன்..

ஆழி போல் மின்னி = சக்கரத்தின் ஒளியைப் போல மின்னி,,,
வலம்புரி போல் நின்று அதிர்ந்து = சங்கின் ஒலியைப் போல இடி இடித்து(வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ  என்பாள்  பிறகு ஒருபாட்டினில்.. சங்குக்கு அழகு முழங்குவது)

முதலில் மின்னல்! அப்புறம் இடி- என  விஞ்ஞானம்  கற்பிக்கிறாள் கோதை!
ஒளி, ஒலியை விட வேகமாகச் செல்ல வல்லது!

தாழாதே சாரங்கம் உதைத்த சர மழை போல் = சாரங்க வில்லில் இருந்து புறப்பட்டு விழும் அம்பு போல, சரம் சரமா சேர்ந்து குத்துகிறது மழை!
 
 வாழ உலகினில் பெய்திடாய்! =  அம்புச்சரமாய் மழை மட்டும் வரட்டும் அது அழிவாகாமல் நல்லபடியாய்  பெய்து நாங்கள்  எல்லாரும் வாழ,  மழை பெய்யட்டும்!
 
 

இந்தப் பாசுரத்தில், பெருமானின் பஞ்சாயுதங்களில்,
மூன்றைச் சிறப்பித்தும் சொல்லி விடுகிறாள்!
1. சுதர்சனம் என்னும் திருவாழி (சக்கரம்)
2. பாஞ்சசன்னியம் என்னும் சங்கு
3. சாரங்கம் என்னும் வில்
 

நாங்களும் மார்கழி நீராடமகிழ்ந்தேலோரெம்பாவாய் = மழை பெய்தால் தானே,  ஆன்மீக விஷயமெல்லாம் ஒழுங்கா நடக்கும்! மகிழ்ச்சிவரும்? மார்கழியில்  மகிழ்ந்துநீராடுவோம்   எம் தோழிப்பெண்களே!


ஆழிம‌ழைப்பாட‌லை ம‌ழைவேண்டிபாட‌லாம் என்கிறார்க‌ள்
.

8 comments:

  1. அருமையான விளக்கங்கள்..

    ஆழிமழைக்கண்ணா பாடலை மழை வேண்டி ஆலயங்களில் குழுக்களாக இணைந்து பாடுவார்கள்.. மழை பெறுவது நிச்சயம் ..!

    ReplyDelete
  2. அற்புதமான விளக்கம்.
    ழ தமிழின் சிறப்பு
    எனச் சொன்னதும்
    கண்ணனை
    ஆழி மழைக் கண்ணா எனக்குறிப்பிட்டு
    மழைக்குக் குடை பிடித்தவனை
    மழையே உன் கருனையினால்தானே
    என ஏங்கவும் செய்துவிட்டீர்கள்.

    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
  3. சிறப்பான விளக்கங்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. கருமையான எந்த நிறத்திலும் கண்ணனை காண்கிற ஆண்டாள் வானத்தில் அவள் கரிய மேகத்தில் பார்த்த ஆழி மழை கண்ணனிடம் இன்னும் ஊழி முதல்வன் போல கறுத்து,கடலிலிருந்து நீர் எடுத்து இடியும் மின்னலும் கூடி சர(அம்பு) மழைபோல் பெய்து நாங்கள் மார்கழி நீராட உதவ வேண்டும் என்கிறாள் இந்த பாசுரத்தில்.
    எல்லோரும் இன்று இந்த பாசுரத்தை பாடி இருப்பார்கள் என்பது திண்ணம்..நம் தமிழ் நாட்டுக்கு மிக தேவையான மழை பொழியட்டும்.
    ரொம்ப ஒசத்தியாக விளக்கம் கூறி உள்ளீர்கள்.நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம்

    அருமையான விளக்கம்..வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. மிகவும் ரசித்தேன். தமிழ் வல்லார் என்பதில் கிடைக்கும் கர்வம் கொஞ்சம் சுகமாக இல்லை?

    ReplyDelete
  7. மனம் கனிந்த நன்றி திரு அப்பாதுரை திரு ரூபன் திரு கேபி சார் திரு சுப்புத்தாத்தா டிடி மற்றும் திருமதி இராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  8. ழகரம் தமிழின் பெருமை... அதை அப்பாவும் பெண்ணும் போட்டி போட்டு பயன்படுத்தி சிறப்பான பாசுரங்கள் பாடியிருப்பது சிறப்பு.

    நல்ல விளக்கத்திற்கு நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.