Tuesday, April 24, 2012

கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்!

சென்றவாரத்தின் ஆரம்பதினத்தில்  மதியம் ஒளிபரப்பாகும் என்று அறிவித்திருந்த  நிகழ்ச்சி பற்றி பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் முதல்
ஒ.பாமா(ஒரத்த நாடு பாமா! தூரத்து உறவினர்)வரை அனைவருக்கும்
தண்டோரா போடாத  குறையாக   அறிவித்துவிட்டுக்காத்திருந்தேன்.
அப்போது வரவில்லை.பிறகு திங்கள் இரவு  வழக்கம்போல  9-30க்கு ஒளிபரப்பாகும் என்று தகவல் வந்தது. கொட்டகொட்ட 11மணிவரை முழித்துக்கொண்டு இருந்ததுதான் மிச்சம்! வரவே இல்லை!

கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்  என்னும்  நிகழ்ச்சி யைப்பற்றி  பலர் அறிந்திருக்கலாம்.பொதிகை தொலைக்காட்சியில் ஒருவருடமாக  வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு 930லிருந்து 10வரை ஒளீபரப்பாகும்.
நிகழ்ச்சியை அமைப்பவர் இசைக்கவி ரமணன் .ரமணன் கவிஞர் பாடகர் இசை அமைப்பாளர் சொற்பொழிவாளர் 24தடவை இமயம் சென்றுவந்தவர், பாரதி பக்தர் பராசக்தி மைந்தர்! அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்பதே பெருமையான விஷயம்.

மார்ச்மாதம்  பொதிகை தொலைக்காட்சி நிலையத்தில்  நிகழ்ச்சிபதிவானது. வழக்கமாய்  திங்கள் கிழமை வரவேண்டியது சித்திரை புத்தாண்டிலிருந்து நாள்+நேரம் மாறிப்போனது.


என்னுடன் திரு ஹரிகிருஷ்ணன்(இலக்கிய ஆர்வலர்களுக்கு  இவரை கண்டிப்பாக தெரியும்) அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அப்படி இப்படிபோன செவ்வாய்க்கிழமை மதியம்
  4-10க்குஇஞ்சித்தேநீர்போட்டுக்கொண்டிருக்கிறேன்  குறுஞ்செய்தி மணியடித்தது  4 30க்கு  கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் நிகழ்ச்சி நீங்கள் பங்குகொண்டது வருகிறது என.

யாருக்கும் தெரிவிக்க  நேரம் இல்லை அப்படியும்  கொஞ்சம் பேருக்கு  தெரிவிக்கலேன்னா மண்டை வெடிச்சிடும்போலாகிவிட சொல்லிவிட்டேன்.
“அன்னிக்கே மத்தியானம்  ஒருமணீக்குமேல காத்திருந்து  ஏமாந்தோம்...என்னவோ போ” என்று அலுத்துக்கொண்டாள் காலனி சிநேகிதி

 விசிஆரை  உயிர்ப்பித்து காசட்டை நுழைத்து   அது மறுத்து திரும்பிவர
அதட்டிக்கெஞ்சி ஒழுங்காய் நிகழ்ச்சியை பதிவு செய்ய  உத்தரவு பிறப்பித்துக்காத்திருந்தேன்
நல்லவேளையாய்  430க்கு  நிகழ்ச்சி வந்தேவிட்டது.
பதிவும் செய்துவிட்டேன்   முப்பது நிமிஷ நிகழ்ச்சி,ஆனால்பாருங்கள்  அதை விசிடியாக மாற்றி யுட்யூப்பில் அளிக்க மறுநாள் ஆர்வமாய்   கடையில் கொண்டுகொடுத்தேன்  இரண்டொருநாளில் தருவதாக சொன்ன கடைக்காரர் கடையைப்பூட்டிக்கொண்டு எங்கேபோனாரோ தெரியவே இல்லை.செல்லில் ஒரு சொல்லும் கிடைக்கவில்லை!

அன்று திரு ஹரிக்ருஷ்ணன் அவர்களும்  நிகழ்ச்சியை பதிவு செய்திருந்தார் ஆனால் கடைசி சில நிமிஷங்களில்அவர் பதிவிலும் மின் தடை ஏற்பட்டுவிட்டது  பெரும்பாலும் நிகழ்ச்சிபதிவானதை யுட்யூப்பில் அளித்துள்ளார் இங்கே அதையே உங்களுக்கும் அளிக்கிறேன்.

பார்த்து கேட்டு  கருத்துகூறினால் மகிழ்வேன் நன்றி. இரண்டு சுட்டிகளும் அல்லது ஏதேனும் ஒன்றாகிலும்  வேலை செய்யும்!


கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் நிகழ்ச்சி இங்கே


அல்லது  இங்கே

http://youtu.be/0S4KJBwBF-0



Thursday, April 05, 2012

சேர்த்தி!

சக்கரவர்த்திதிருமகனிடமிருந்து பெற்றுக்கொண்ட சீதனத்தை
விபீஷணன்  தற்காலிகமாக இறக்கி வைத்த இடத்தினருகில், உறையூரினைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சோழப்பேரரசன் தர்மவர்மா  அருந்தவம் செய்து கொண்டிருந்தான். அவனது நிஷ்டை கலைகின்றது.

எதிரே அரங்கன் ஜ்வலிக்கும் ரெங்கவிமானத்துடன் எழுந்தருளியுள்ளார். அவனுக்குத் தான் கண்டது கனவா? அல்லது நினைவா? என்றே புரியவில்லை. நினைவு வந்த போதெல்லாம் அடிக்கடி மூர்ச்சையாகின்றான்.

    தர்மவர்மாவின் தவத்தினை நிறைவு செய்தான் அரங்கன்!விபீடணன் தனது அனுஷ்டானங்களை காவிரிக்கரையில் முடித்து விட்டு வந்து பார்த்தால் இங்கு ஒரே கோலாகலம்!.

விபீஷணன் மறுநாள் இலங்கைக்குச் சென்று ஆதிபிரம்மோற்சவம் நடத்துவதற்காக முற்பட்டான். தர்மவர்மா அவரை திருவரங்கத்திலேயே அந்த உற்சவத்தை நடத்தித்தர பிரார்த்தித்தான். வெகுவிமரிசையாக முதன்முதலாக திருவரங்கத்தில் ஆதிபிரம்மோற்சவம் நடைபெற்றது.


இன்று திருவரங்கத்தில் நடைபெறும் பிரும்மோற்சவங்களுக்கெல்லாம் ஆதியும் இதுவேயானது.

பிரும்மோற்சவம் முடிந்து விபீடணனால் விமானத்தினைத் தூக்க இயலவில்லை. அரங்கன் காவிரிக்காகவும், தர்மவர்மாக்காகவும், நமக்காகவும் நமது சந்ததியினர்க்காகவும் நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட தீர்மானித்துவிட்டார்.


   நாம் அனைவரும் அறிந்த அரங்கனின் பிரசித்தப்பெற்ற சேர்த்தி பங்குனி உத்திரம் மட்டும்தான். ஆனால் அரங்கன் நான்கு சேர்த்தி உற்சவம் கொண்டாடுகின்றார்.

இதில் சித்திரையில் இரண்டு! பங்குனியில் இரண்டு!. வருஷ ஆரம்பமான சித்திரையில் சித்ராபெளர்ணமியன்று காவேரிக்கரையில் முதல் சேர்த்தி. காவேரியில் பெருமாளின் மாலை மரியாதைகள் எல்லாம் சேர்த்து சேர்த்தி!.

   அதே மாதத்தில் ஸ்ரீராமநவமியன்று குலசேகராழ்வார் குமாரத்தியான சேரகுலவல்லியுடன் சேர்த்து. இரண்டாம் சேர்த்தி!.

  பங்குனி 6ம் திருநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் உறையூர் சோழராஜா குமாரத்தி கமலவல்லியுடன் சேர்த்தி! உத்திரத்தில் ரெங்கநாயகியுடன் சேர்த்தி! வருஷ ஆரம்பத்தினை கலயாணத்துடன் ஆரம்பித்து வருஷ முடிவினையும் கல்யாணத்துடன் முடிக்கின்றார் இந்த வைபோக ரங்கன்.

உத்திரத்தின் சேர்த்தி சேவை  உன்னதமானது உயர்த்தியானது. படிதாண்டா பத்தினியான அரங்கபிராட்டியார் இருப்பிடம் சென்று அங்கேயே சேர்ந்தருளுவார் அரங்கபெருமான். சேர்த்திமண்டபம்   வெறும் நாட்களிலும் சேவிக்கவேண்டிய திருமண்டபம்.


அகளங்கன் திருச்சுற்றில் ஸ்ரீரங்க நாச்சியார், (வில்வ மரத்தடியில்) தாயார் சந்நிதி அமைந்துள்ளது. பங்குனி உத்திர நாளன்று மட்டும், நம்பெருமாளும், தாயாரும் 'சேர்த்தியில்' ஒன்றாக எழுந்தருளி பக்தர்களை ஆசீர்வதிப்பது, சிறப்புடைய மிகப் பெரும் நிகழ்ச்சியாகும்!

அன்று பக்தர்கள் சக்திக்கேற்ப, வெண்ணெய், டைமண்ட் கல்கண்டு, திராஷை, முந்திரி, ஏலப்பொடி சேர்த்து வெள்ளிக் கிண்ணங்களில் அமுது படைப்பர் நிவேதனமாக. அன்று(இன்று) ஸ்ரீரங்கத்தார் இல்லங்களில் சக்கரைப்பொங்கலும் செய்வார்கள்.


பிரணய கலகம் என்றழைக்கப்படும் மட்டையடி நிகழ்ச்சி சேர்த்திக்கு முன்பாக நடக்கிறது. உற்சவ அரங்கன்  உலாப்பிரியர்..  ஒன்று உள்ளூரில் சுத்திக்கொண்டு இருப்பார் அல்லது  அன்பர்களின் இதயத்திற்குள் சுழன்று கொண்டிருப்பார். ஜீயபுரம் என்கிற சி்ற்றூரில்  ஒரு
 மூதாட்டி தன்பேரனை நீண்டநேரமாய் காணாமல் பதறித்தவித்து அவன் பெயரை அழகியமணவாளா என்றழைக்கவும் அவள் மனம்வேதனைப்படக்கூடாதென்று அரங்கன்  சிறுவன் வடிவில் சென்று தீந்தயிர் சோற்றுடன் கீரையும் வாங்கி உண்டான்.இன்றும்  வருடம் ஒருமுறை ஜீயபுரம் செல்கின்றான்.தேர்த்திருவிழா வீதி உலா என வருடம் முழுக்க அரங்கனுக்குக்கொண்டாட்டம்தான். ஆனாலும் உறையூர் இளவரசி கமலவல்லியை காதலித்து மணந்த நாளை மறக்கமுடியுமா அரங்கனால்? ஆகவே அந்ததினம் உறையூருக்கு ஓசைப்படாமல் போய்விடுவார்.

ரங்கநாதர் தான்  அணிந்து இருந்த மோதிரத்தை உறையூர்  கமலவல்லிநாச்சியாருக்கு அன்பளிப்பாக கொடுத்து இருப்பார். அவ்வாறு கொடுத்து விட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதாயாரிடம் வரும்போது மோதிரம் எங்கே? என்று ஸ்ரீரெங்கநாதரிடம் சண்டையிட்டு அவரை மட்டையால் தாக்கும் நிகழ்ச்சிதான் வருடா வருடம் நமக்கு

 நடித்து காட்டப்படும்.

இந்த வினோதமான நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஸ்ரீதாயார் சன்னதிக்கு வருவார்கள்.

ஸ்ரீரங்கத்தில் இருந்தவரை  இதற்கு நான் ஆஜராகிவிடுவேன்  தாயார் சந்தியிலிருந்து வேகமாக வாழைமட்டைகள்  அரங்கன் பல்லக்குமீது வீசிவர உடனே அரங்கன் பல்லக்கை மூடிக்கொண்டு பயந்தமாதிரி பின்னோக்கி நகர...இந்த வேடிக்கை விளையாட்டு ஊடல் காட்சிகள் கண்ணுக்கு ரம்மியமானவை..அனைத்தையும் தானே நடித்துக்காடும் அரங்கனின் குறும்பினை ரசிப்போம்.



நம்பெருமாள் சித்திரை வீதி மற்றும் உத்தர வீதிகளில் அரையர் இசையுடன் வலம் வந்தபிறகு, ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதிக்குள் போகையில் கதவுகள் சாற்றப்பட்டு புஷ்பங்களையும் பழங்களையும் எறிந்து நம்பெருமாளைத் தடுத்துவெளியே நிறுத்தி வைப்பார்கள். கதவுகள் திறக்கப்படும்போது பெருமாள்
உள்ளேபோக முயற்சி செய்வதும்  கதவு தடால் என சாத்தியதும் திரும்பவருவதுமாக  இருப்பார்.

கடைசியில் சமாதானம் ஆகும்.

நம்பெருமாளு்ம் சமாதானத்திற்கு அருளப்பாடு ஸாதித்து நம்பெருமாள் சொல்ல வேண்டியவைகளை அரையர்கள் தாள இசையில் இசைப்பர்.
 நம்பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே நிகழும் சொற்றொடர் பரிமாற்றத்தை தம்பிரான்படி பாசுரங்கள் கொண்டு சேவிப்பர்கள்.அரையர்கள் நம்பெருமாள் வார்த்தையை நம்பெருமாளிடம் விண்ணப்பித்து, தாயாரிடமும் விண்ணபிப்பார்கள்.
 பண்டாரிகள் சொல்லிய தாயார் வார்த்தையை அரையர்கள் நம்பெருமாளிடம் விண்ணப்பிப்பார்கள். (நம்பெருமாள் அஞ்சு வார்த்தை, தாயார் வார்த்தையானது இரட்டிப்பாகிறபடியால் அரையர்கள் 15 தடவையும் பண்டாரிகள் 5 தடவையும் நம்பெருமாள் மற்றும் ஸ்ரீரங்கநாச்சியார் வார்த்தைகளாகச் சொல்லுவர்.

ஸ்ரீரங்கநாச்சியாரால் அனுமதிக்கப்பட்ட பிறகு நம்பெருமாள் ஸந்நிதி வாசலில், எழுந்தருளி ஆழ்வாருக்கு மரியாதை செய்து அனுப்புவார்.
உடனே முதல் ஏகாந்தம் நடக்கும். தளிகை நிவேதனம் நடந்து பங்குனி உத்தர மண்டபத்திற்கு நம்பெருமாள் எழுந்தருளுவார், பிறகு இரவு 10 மணி வரை பொதுஜனஸேவை நடைபெறும்.

இரண்டாம் ஏகாந்தம்-தீர்த்தபேரர் பெரியகோயிலிலிருந்து புறப்பட்டு வடதிருக்காவிரியில் தீர்த்தவாரி கண்டருளி, நம்பெருமாளிடம் வந்ததும் கத்யத்ரயம் ஸேவிக்கப்படும்.
இராமாநுசர் அருளிச் செய்த கத்யத்ரயம் என்னும் க்ரந்தம் இன்றைய தினம்தான் அவதரித்தது. கத்யத்ரய சாற்றுமுறைக்காக இரண்டாம் ஏகாந்தத்தளிகை நிவேதனம் ஆனதும் தீர்த்தபேரர் பெரியகோயிலுக்கு எழுந்தருளுவார்



மூன்றாம் ஏகாந்தம் நம்பெருமாள் நாச்சியார் இருவருக்கும் பதினெட்டு ஆவர்த்தி திருமஞ்சனம் ஆகும். (எம்பெருமானார் திருக் கோட்டியூர் நம்பிகளிடம் பதினெட்டு ஆவ்ருத்தி நடந்த சிரமத்தை எம்பெருமானார்க்கு தீர்த்தருளுவதற்காக பதினெட்டு தடவை கைலி ஸமர்ப்பித்துத் திருமஞ்சனம் நடைபெறுகிறது)) திருமஞ்சன திருவாராதனத்தில் அரையர்களுக்கு “வசந்தனுக்கு அருளப்பாடு” என்று ஸாதித்து இசையில் தம்பிரான்கள் இயற்றிய வசந்தன் பாட்டு (கூடின காலத்தின் வர்ணனை) ஸேவிக்க இருவரும் கேட்டு மகிழ்ந்தருளுவர்.

 மூன்றாம் ஏகாந்தத் தளிகை நிவேதனம் ஆனதும், ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளே எழுந்தருளுவார். நம்பெருமாள் பங்குனி உத்தர மண்டபத்திலிருந்து புறப்பட்டுத் தாயார் ஸந்நிதிக்கு முன் ஸ்ரீரங்கநாச்சியாரைப் பார்த்து திரும்பிக் கொண்டு, பிரியமனம் இல்லாமல் ஒரு ஒரு அடியாக வைத்து வைத்து மெல்ல எழுந்தருளுவார்.



,



அரங்கத்தமாவென்றே மொழிந்தேனாக
 அரங்கனுடன் அரங்கத்து நாச்சியாரும்
இரங்கவெனை அழைத்தான் என்றென்முன் வந்தார்
இனிய தமிழ் மொழிநயத்தைத் தெளிந்திட்டேனே!

(புலவர் சக்திசரணன்)

--

Friday, March 30, 2012

அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற!

முடியொன்றிமூவுலகங்களிலும் ஆண்டுஉன்


அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த

படியில்குணத்துப் பரதநம்பிக்குஅன்று

அடிநிலை  ஈந்தானைப்பாடிப்பற

அயோத்தியர்கோமானைப்பாடிப்பற


காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு


ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும்

நேராஅவன் தம்பிக்கே நீளரசீந்த

ஆராவமுதனைப்பாடிப்பற அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற








ஆராவமுதனைப் பாடிப்பற அயோத்திய வேந்தனைப் பாடிப்பற என்கிறார் பெரியாழ்வார்.




எப்போது நம்மால் பறக்கமுடியும்?



மனம் இலேசானால்..



மனம் எப்போ லேசாகும்?



அழுத்தங்கள் அகலும்போதுதான்..



அழுத்தங்கள் எனும் பாரங்கள் எப்போது நமக்குள் வரும்?



கவலையும் கோபமும் சூழும்போது வரும்.



கவலை நம்மைத் தின்று விடுமாம். அதனால் தான் பாரதி என்னைக் கவலைகள் தின்னத்தகாதென்று நின்னைச் சரணடைந்தேன் என்கிறார்.



நம்மைக் கவலையும் கோபமும் ஆட்கொள்ளாமலிருக்க இறைவனை சரணடைய வேண்டுமாம்.



சரி, அந்த இறைவனுக்கே கோபம் வந்தால்..?
இறைவனுக்கு நம்மைப்போல காரணமேயின்றி கண்டதற்கும் கோபம் வந்துவிடுமா என்ன?


கருணையே உருவான கடவுளுக்கும் கோபம் வருமளவு நடந்து கொள்வதும் முறையா?

இந்தக் கோபம் சக்கரவர்த்தித் திருமகனை சிலநேரங்களில ஆட்கொண்டதாய் ராமாயணக் காவியத்தில் காண்கிறோம்.

அண்ணலை அந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் யாரார் எனப் பார்ப்போமா?



ராமனுக்கு இளவரசுப் பட்டாபிஷேகம் செய்வதாய் தீர்மானிக்கப்பட்டு விட்டது ...ஊரே உற்சாகத்தில் மிதக்கிறது.அரச சபையில் அனைவர் முகத்திலும் குதூகலம் நிரம்பிவழிகிறது. ராமனும் சீதையும் பட்டாபிஷேகத்திற்குரிய விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள்.



இதற்கிடையில் மந்திரையின் பேச்சில் புத்தி தடுமாறி கைகேயி தசரதனிடம் ராமன் 14 வருடங்கள் வனவாசம் போகவேண்டும் என்றும் தனது

மகன் பரதன் முடிசூட்டிக் கொள்ள வேண்டுமென்றும்( வரம்) கேட்டு அதனை பெற்றும் விடுகிறாள்.



இதைக் கேள்விப்பட்ட ராமன் சற்றும் கோபமடையவில்லையாம்.

தந்தை சொல்லைக் காப்பாற்றுவதைவிட சாம்ராஜ்யம் பெரிதல்ல என நினைத்தானாம். ராமனின் முகத்தில் கோபத்திற்கு மாறாக மகிழ்ச்சிதான் தெரிந்ததாம்...'அவ்வாசகம் உணரக்கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா' என்கிறார் கம்பர்.



எம்பெருமான் ஜிதக்ரோத: அதாவது கோபத்தைவென்றவன் ஆகிறார்.

சீற்றமில்லாதானைப்படிப்பற, சீதைமணாளனை பாடிப்பற! என்பது பெரியாழ்வார் வாக்கு.

கோபத்தை வென்ற தாசரதிக்கு எப்போது கோபம் வந்தது?




பிராட்டியை ராவணன் அபகரித்துப் போனதும் காணாமல் துடிக்கிறான் ராமன். மரத்தை, நதியை எல்லாம் கேட்கிறான். ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியை திகைத்தனை போலும் செய்கை என்று பின்னர் கிஷ்கிந்தா காண்டத்தில் கம்பர் கூறியதுபோல என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறான்.



கோபம் அதிகரிக்கிறது.

சக்கர்வர்த்தி திருமகனின் கோபத்தை ஒரு சர்க்கம் முழுவதும் ராமக்ரோத: என்று அரண்யகாண்டம் 64வது சர்கத்தில் வால்மீகி விவரிக்கிறார்.



ஒருகட்டத்தில் ராமன் "என்பிரியபிராட்டியை யார் கவர்ந்து சென்றார்? என்னிடம் திரும்ப ஒப்படைக்காவிட்டால் என்னுடைய பாணங்களால் மூவுலகங்களையும் அழித்துவிடுவேன்" என்று கோபத்துடன் சூளுரைக்கிறார்.



பிராட்டியின் பிரிவினால் மிகவும் கோபமாயிருக்கும் அண்ணனை இளையவர்(கோபத்திற்குப்பெயர்போனவர்)::0 அவரை சமாதானம் செய்கிறார்.

யாரோ ஒருவன் செய்த தவறுக்காக உலகத்திற்கு தண்டனை கொடுக்கலாகாது. கவர்ந்து சென்றவனைக் கண்டுபிடித்து அவனுக்கு

தண்டனை கொடுப்போம்.. ஆகவே நாம் தேடுதல் வேட்டையை செய்வோம்' என்றபின் சக்கரவர்த்தி திருமகனுக்குக் கோபம் தணிந்தது.

.



அடுத்து வனவாசத்தில் காகாசுரன் சீதையின் உடலைத்தீண்ட அதனின்றும் பெருகிய ரத்தம் கண்டு கட்டுக்கடங்காத கோபம் உண்டாயிற்றுராமனுக்கு.

காலசர்ப்பதைப் போல மூச்சு விட்டான் ராமன் என்கிறார் வால்மீகி.

ஒரு புல்லை எடுத்து பிரம்மாஸ்த்ர மந்திரத்தை அந்தக் காக்கையின் மேல் ஏவினான். அந்த அளவு கோபமுண்டாகிவிட்டது.



பிறகு காகாசுரன் அடைக்கலமாகி காலில் விழுந்ததும் அவனுக்கு கோபம் தணிந்து உயிர்பிச்சை அளித்தான். சரணம் என்றவரை தள்ளியதில்லை தசரத மைந்தன்.



அதேபோல இலங்கைசெல்ல கடல் அரசன் வழிவிடாதபோது கோபம் வந்தது.

'லட்சுமணா என் தனுசைக்கொண்டுவா.. கொல்லும் பாம்புகள் போன்ற குரூரமான பாணங்களையும் எடுத்துவா.. இந்தக் கடலை முற்றிலும் வற்றச் செய்துவிடுகிறேன். வானர வீரரகள் நடந்தே லங்கை செல்லட்டும் .."என்றதும் கடலரசன் அஞ்சி சரணம் எனப் பணிந்தான். அவனுடைய சரணாகதியை அண்ணலும் ஏற்றுக்கொண்டார்.




ராவணனுடன் போர் செய்கையில் அனுமனை தன் பாணங்களால் காயப்படுத்துகிறான் ராவணன். அதைக்கண்ட ராமனுக்குக் கோபம் வந்தது.




உடனே ராவணனின் ஆயுதங்களை அழித்து அவனை நிராயுதபாணியாக்கி ,'இன்று போய்நாளை வா' என்கிறான் .



இப்படித் தான் அடியார்க்கு தீங்கிழைத்தால் பெருமாளுக்குக் கோபம் மிகுந்து வருமென்பதற்கு பிரஹலாதன் பெரும் சாட்சி.


'அங்கண் ஞாலம் அஞ்ச 'என்றும் 'முளைத்த சீற்றம் விண்கடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்த அஞ்ச' என்று ஆழ்வார் அருளிச்செய்ததில் இதனை உணரலாம்.



தன் உயிரான இனிய சீதையைக் கவர்ந்ததும், தனக்காக் போராடிய வானர வீரர்களைக் கொன்று குவித்ததும் போன்ற தகாத செயலை செய்ததால் ராவணன் மீது ராமனுக்குக் கோபம் வந்தது. அதுவே ராவணனின் முடிவிற்கும் காரணமானது..



இதைத்தான் ஆண்டாளும், 'சினத்தினால் தென்னிலங்கை கோமானை செற்ற மனதுக்கினியானை' என்று திருப்பாவையில் சொல்கிறாள்.



இறைவனுக்கு நம்மீது கோபம் ஏற்படாத வகையில் நாம் நடந்துகொள்வோம் அப்படியே அறியாது தவறு செய்தாலும் அண்ணலின் பாதங்களை சரணமெனப்பிடித்துவிடுவோம்!

********************************************************************************



Thursday, March 22, 2012

தண்ணீர்!தண்ணீர்!








எந்த பத்திரிகை ஆனாலும் எந்த ஊடகங்கள் ஆனாலும் அறிவுசார் விவாதங்கள் ஆனாலும் உலக நாடுகளின் தலைவர்கள் ஆனாலும் விவாதிக்கப்படும் முக்கியமான பொருளாக புவி வெப்பமயமாதல் இடம் பெற்றுவிட்டது.
ஓசோன் படலம் பற்றி ஒன்றுமே அறியாத அந்த நாளைய மன்னர்கள் ராஜ்யபரிபாலனத்தில் தினமும் கேட்கும் கேள்வி மாதம் மும்மாரிபெய்கிறதா என்பதுதான்.
இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால் மாதம் மும்மாரியில் ஒரு மாரி குறைந்தாலும் ஆபத்துதான் என்பது.ஆக எப்போதோ மாதம் மும்மாரி பொழிந்தது. வானத்தில் புகைமூட்டம் இல்லை வாகன நச்சுப்புகை வளி மண்டலத்தை நிரப்பவில்லை மும்மாரி பொழிந்தது.குளிர்சாதன இயந்திரங்களின் கொடிய நச்சு வாயு வெளியேறவில்லை மனிதன் அமைதியாக வாழ்ந்தான் ஓசோனில் ஓட்டைவிழவில்ல, பூமி வெப்பம் அடையவில்லை ஆகவே மழை பொழிந்தது அன்று.
மாதம் மும்மாரி பொழிய வளிமண்டலம் சுத்தமாக அல்ல,பரிசுத்தமாக இருக்கவேண்டும். ஆனால் இப்போதோ கரியமில வாயு-மீத்தேன் நைட்ரஜன் ஆக்சைடு சல்பா ஹெக்சா புளோரைடு ஹைட்ரோ ஃப்ளோரைடுகார்பன், பெர்புளோரா கார்பன்கள் ஆகிய தீயநச்சுவாயுக்கள் பூமியிலிருந்து வளிமண்டலத்தை நோக்கி ஏவப்பட்டுள்ளது.
முன்னே வனங்கள் செழிப்பாக பசுமையாக இருந்தன மும்மாரி பொழிந்தன. இன்று விஞ்ஞான வளர்ச்சி என்னும் வரங்களே நமக்கு சாபங்களாகிவிட்டன.
இமயத்தில் பனிப்பாறைகள் உருகிக்கொண்டு இருக்கின்றன.பனிக்கரடி இனம் பூ்ண்டோடு அழிந்துபோய்விடும் அபாயம், அரிய தாவரங்கள் அழியும் துயரம்,. மனி்தனுக்கு குடிநீர் கிடைக்காமல்போகும் அவலம் ஏற்படும்.
மரங்களை பாதுகாத்து மரங்களை அதிகம் நட்டு இருப்பிடத்தை பசுமைக்காடாக மாற்றினால் கரியமில வாயு எனும் அரக்கன் ஒழிவான் ஓசோன் காப்பற்றப்படும். புவி வெப்பமய்மாகாது மாதம் ஒரு மாரியாவது பெய்யும்.தண்ணீர்கஷ்டம் தீரும்.


வரப்பு உயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும்.
நெல் உயர மணி உயரும். மணி உயர குடி உயரும்.
குடி உயர கோல் உயரும். கோல் உயர கோன் உயர்வான்.

ஔவை  வாக்கு மெய்ப்படவேண்டும்!
.
இந்த உலகில் 75% தண்ணீர்.இருக்கிறது.

இதில் 97% சமுத்திரம்.(உப்புத் தண்ணீர்.)
3% மட்டுமே குடிப்பதற்கு உபயோகப் படுத்தலாம்.

ஏறத்தாழ 75% நல்ல தண்ணீர் போலார் பகுதிகளில் ஐஸ் கட்டியாக உரைந்து கிடக்கிறது.

ஒரு மனிதனால் உணவு இல்லாமல் ஒரு மாதத்திற்கு மேல் உயிர் வாழ முடியும் ஆனால், தண்ணீர் இல்லாமல் ஏறத்தாழ ஒரு வாரம் தான் வாழ முடியும்.

ஒரு கேலன் தண்ணீர் என்பது 3.785 லிட்டர்கள் ஆகும்

பற்களை துலக்க தினமும் ஒரு மனிதன் 2 கேலன் தண்ணீர் செலவிடுகிறான்.

கழிவறையில் flush செய்ய 2-7 கேலன் தண்ணீர் உபயோகப்படுத்த படுகிறது.

குளிப்பதற்கு மட்டும் 25-50 கேலன் தண்ணீர் உபயோகப்படுத்த படுகிறது.

..

மனிதனால் உப்பு நீரை குடிக்க முடியாது.

நம் உடலானது 66% தண்ணீர்.

நம் இரத்தத்தில் 82% தண்ணீர் உள்ளது.
நல்ல தண்ணீரை நம்பி வாழும் விலங்கினங்கள் மற்ற விலங்குகளை விட 5 மடங்கு அதிகமாக மறைந்து வருகிறது.

இந்தியா என்ற நமது தேசத்தின் பெயர், இன்டஸ் என்ற நதியின் பெயரில் இருந்து உருவானது.

நமது தட்பவெப்பநிலையை தண்ணீரே தீர்மானிக்கிறது.
இந்த உலகில் பெரும்பாலான மக்கள் குடிக்கும் நீருக்காக 3 மணி நேரம் நடக்க வேண்டி உள்ளது.

இந்த உலகில் கால் வாசி மக்கள் பாதுகாபற்ற குடிநீரே குடித்து வாழ்கின்றனர்.

இன்றைய நிலை நீடித்தால் 2025 ஆம் ஆண்டில் உலகில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாய நிலை உருவாகும்.

உலகில் தினமும் 3900 குழந்தைகள் அசுத்த நீரை குடிப்பதாலும், சுகாதரமற்ற முறைகளாலும் இறக்க நேரிடுகின்றனர்.
கவிதை தாகத்தில் எழும் கவிதையோடு பதிவை முடித்துவிடுகிறேன்.
நீ தாய்
தவிக்கும்போதெல்லாம்
தாகம் தீர்ப்பதில்!
நீ மரம்
நெஞ்சுக்கு நிழலாக
இருப்பதில்!
நீ மொழி
அனைவரிடமும்
உலா வருவதில்!
நீ நடிகை
எல்லா பாத்திரங்களுக்கும்
ஏற்றதாய் வடிவெடுப்பதில்!
நீ மரம்
பலவகைகளில்
பயன்படுவதில்!
நீ தெய்வம்
மழையாகப்
பொழிகையில்!
நீ விளக்கு
வாழ்வின் ஒளியாக
இருப்பதில்!
நீ உயர்ந்தவள்
உலகில் பெரும்பகுதி
உன்னுடையதாயிருப்பதில்!
நீதான் நான்
என்னுள்ளே
கலந்து இருப்பதில்!

--







--




--


Tuesday, March 20, 2012

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?


சர்வதேச குருவிகள் தினமாக மார்ச் 20 ஐ பறவை, விலங்கின ஆர்வலர்கள் 2010 முதல் கொண்டாடி வருகின்றனர்.

சிட்டுகுருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா  உன்னைவிட்டுப்பிரியவே செல்போனைக்கட்டி அழுகிறோம் நாங்கள் என்று   இனி பாடவேண்டியதுதான்.

  சிட்டுக்குருவிகளை இன்று நகரங்களில் பார்க்க முடியவில்லை. குருவிகளின் உயிரை பறிக்கும்கோடரிகள் எவை தெரியுமா "மொபைல் போன் டவர்'களில் இருந்து வரும் ரேடியோ அலைகள் தான் என்கிறார் மதுரையில் பறவைஇனங்களை ஆய்வு செய்து வரும் டாக்டர் பத்ரி நாராயணன்.  அதுபற்றி நமக்கென்ன கவலை என்பதுபோல  கணந்தோறும் காதில் செல்போனை வைத்துக்கொண்டு நாம் அலைகிறோம்.


 காக்கா காக்காகண்ணுக்கு மைகொண்டுவா
குருவி குருவி  கொண்டைக்குப்பூ கொண்டுவா
கொக்கே கொக்கே குழந்தைக்கு தேன் கொண்டுவா
கிளியே கிளியே கிண்ணத்தில் பால் கொண்டுவா....


இப்படியெல்லாம் பாட்டுப்பாடி பறவைகளை அழைத்த காலமெல்லாம் கனவாகிப்போய்விடும் அபாயச்சூழ்நிலையில்  இருக்கிறோம்.

 நாம் பெரும்பாலும அழகானவற்றை ஏற்றுக்கொண்டு மிகவும் உபயோகமானவற்றை  கைவிட்டுவிடுகிறோம் என்னும் பிரெஞ்சுபழமொழிக்குஏற்ப வாசலில் இருக்கும்  பச்சைமரங்களை வெட்டிவிட்டு  வரவேற்பறையில் ப்ளாஸ்டிக் செடிகளை கொண்டு வைக்கிறோம் மரத்தைவளர்க்கத்   தெரியாத மனங்களுக்கு  பிளாஸ்டிக்  தாவரங்களில்   படிந்த   தூசியை துடைக்கத் தெரிந்திருக்கிறது.

 நாம் வளர்த்த  மரங்களின் எண்ணிக்கையைவிட  நாம்    தொலைத்த மரங்களின் எண்ணிக்கை அதிகம்.

சாலைகள் அமைக்க  ரயில்பாலங்கள்கட்ட குடிநீர் குழாய் அமைக்க குடியிருப்புகள் தொழிற்சாலைகள்   கட்ட   என்று  மரங்களை  வெட்டிசாய்த்துவிட்டோம்  அதனால் பறவைகளின் வீடுகளை அழித்துவிட்டோம் . வசிக்க இடமினறி அவைகள் காணாமல்போய்க்கொண்டிருக்கின்றன .


ஒருபறவை  பறந்து கொண்டிருக்கும்போது மிதந்துகொண்டிருந்தது கூடவே வானமும் , பறவையைச்சுட்டார்கள் விழுந்ததோ   துண்டுவானம் எனும் கவிதையைப்  படிக்கிறபோது  நம் மனமும்  சிதறி விழுகிறது.

பறவைகள் நம் சுற்றுச்சுழலின்நண்பர்கள் .செல்போன்களை நாம் அதிகம்   பயன்படுத்தத்  தொடங்கியதும் அதன் அலைவரிசைத்தாக்கம்  பொறுக்கமுடியாமல் சிட்டுக்குருவிகளின் இனம்அழிந்துவருகிறது .

ஒரு சிட்டுக்குருவியின் அழிவுக்கும் பிரபஞ்சத்தின் அழிவுக்கும் தொடர்பிருக்கிறது என்று பறவைஇயல் நிபுணர் சலீம் அலி எழுதுகிறார்.


மாதா பிதா குரு தெய்வம் என்னும் வரிசையில் இயற்கையும் இருந்திருக்கலாமோ அப்படி இருந்திருந்தால் இயற்கையை பூஜை செய்தாவது காப்பாற்றவேண்டிய +மதிக்கவேண்டிய சிந்தனை மனிதனுக்கு வந்திருக்குமோ?


பறவைகள் இந்த  உலகினை அ ழகுபடுத்துகின்றன ஆனால்சூழல் பற்றிய அக்கறையே இல்லாமல்  பறவைகளே இல்லாமல் போகிற உலகத்தை நாம் உருவாக்கிவருகிறோம் என்பது எவ்வளவு வருத்தமானது?

பறவைகளுக்கும் உணர்வு உண்டு.கோபதாபம்  காதல் அன்பு அச்சம்  உண்டு.

 ஏதாவது ஒருகாகம் நம்தலையை தட்டிவிட்டுப்போனாலே நாம் பதறிவிடுவோம் ஆனால் சாதுவான பறவை தன் இயல்பை மீறி தன் சகாக்களோடு  மனிதர்களைத் தாக்கத் தொடங்கினால்  எப்படி இருக்கும்?


அப்படி ஒரு திகிலான கதைதான் The Birds !



  சிலவருடம் முன்பு  வெளிவந்தது.


Alfred Hitchcok    இயக்கத்தில். இந்தப்படத்தின் ஒவ்வொரு நிமிடமும்   நம்மை  உறைய வைக்கும் இந்தப்படம் கோல்டன் க்ளோப் விருதுபெற்றது.
அதிகம் தொழில் நுட்ப வசதிகள் அதிகம்  இல்லாத காலத்தில் mattprinting உத்தியுடன்  தயாரிக்கப்பட்ட பறவைக்காட்சிகள் இப்போது பார்க்கும்போது ஆச்சரியம் அளிக்கின்றன படம் முழுக்க விதம்விதமான பறவைகளின் சத்தமே பின்னணி இசையாகப்பயன்படுத்தி இருந்தது.

துவக்கத்தில்  வீட்டுக்குள் நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகள் வருவதும் தீவிபத்து நடக்கையில் நகரத்தின் மேலிருந்து இறங்கி பறவைகள் தாக்கும் காட்சியும் சிலிர்க்கவைப்பவை. பறவைகள்   பற்றிய இந்தக் கதையில் மெலிதான காதல் மனித உறவுகள் குறித்த காட்சிகளும் திகிலோடு  இணைந்துவருகின்றன.

கதாநாயகனும் கதாநாயகியும் இருக்கும் இடத்திற்கே பறவைகள் வந்து  தாக்குதல்களை செய்கின்றன ஜன்னல் கதவுகளின் கண்ணாடியைக்கொத்திகொத்தி  கதவு உடையும்நிலைக்குவருகிறது....இன்னும் சிலநொடிகளில் கதவின் கண்ணாடி  உடைந்து நூற்றுக்கணக்கான் பறவைகள்   வீட்டிற்குள் வரநேரிடலாம் அந்த சுழலில் என்ன நடந்தது ?ஒருமுறை அந்தப்படம்   கிடைத்தால் வாங்கிப்பாருங்கள்...(இணையத்திலும் இருக்கலாம்)



எதற்கு இந்தப்படம்பற்றி   இப்போது  என்றால் பறவைகளுக்கும்உணர்ச்சி உண்டு என்பதை அறிந்துகொள்ளத்தான்.

மரங்கள் அடர்ந்த காட்டில்  குறுக்கும்நெடுக்குமாய் ஒழுங்கற்று நீண்டிருக்கும்  கூரியமுட்களின் இடையே  உடலைக்கொண்டுநுழைத்து வெளியேறி இரைதேடிப்   பசியாறிவரும்  பறவைகள் நமக்கு வாழ்க்கையின் வடிவத்தையும் வாழ்தலின் அர்த்தத்தையும் சொல்லுகிறது அல்லவா?



சிட்டுக்குருவிகளின் சுதந்திரத்தில் மனதைப் பறிகொடுத்த   பாரதி ,’விட்டுவிடுதலையாகி நிற்கவேண்டும் இந்தச்சிட்டுக்குருவிகளைப்போல’ என்றானே!


தோல்வியில் துவளும்போது ஃபீனிக்ஸ்பறவையைபோல சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவேன் என்கிறான் மனிதன். உதாரணங்களுக்கெல்லாம் இயற்கை வேண்டி இருக்கிறது பறவைகள் மரங்கள் என  எடுத்துக்கொள்வோம் ஆனால் ஓசோன் மண்டலத்தில் துவாரத்தையும் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடையும் தலைவிரித்தாடும் தண்ணீர்ப்பஞ்சத்தையும் வறட்சியின் உக்கிரத்தையும் கண்டுகொள்ளமாட்டோம்.  பூமி வெப்ப மயமாவதை தடுக்க மரங்கள் வளர்க்கவேண்டும் அதனை பாதுகாக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை என்றைக்கு வளர்த்துக்கொள்ளப்போகிறோம்?

நம்மைச்சுற்றிலும் பறவைகள் இருகின்றன அழகழகான நிறங்களோடு உருவங்களோடு அவை நம்மை வசீகரிக்கின்றன ! கவிதைகள் எழுதுவதற்கு கவிஞனுக்குப்பறவைகளே ஆதாரம் !எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்க அவன் பறவைகளை நோக்குகிறான். ஒரு பறவையின் பறத்தலை ரசிக்கத்தெரியாதவன் கவிஞனாக முடியாது.

ஆனால்  பறவைகளுக்கான  சுதந்திரத்தை நாம் எப்போதும்  மதிப்பதில்லை அவைகளை ஒரு பொருட்டாகக் கருதுவதுமில்லை.

விழாக்கால  இரவுகளில் நெருப்புகள் வெடித்துச்சிதறும் பேரதிர்வுகள் நமக்குக்கோலாகலம்!  ஆனால் பறவைகளுக்கு  திசைதெரியாமல் இருளினுள்   அவைபீதியுற்று கதறியபடி பறப்பதை நாம் பார்த்ததில்லை.


காகத்தின் கரைதல்விருந்தினர்வருவதற்கான அறிவிப்பு  என்கிறோம்.
நாராய் நாராய்  செங்கால் நாராய் பழம்படுபனையின் பழக்கூர்வாய் செங்கால் நாராய் என்றார்  ஒருபுலவர்.

பறவைகளைப்பார்த்தால் சிலருக்குபாட்டுவரும் .சிலருக்கு வயிற்றுப்பாட்டுக்கு ஆனதென்று தோன்றி  குறிவைத்து அடித்து வீழ்த்ததோன்றும்.

அன்பைக்கிளைகளாய் விரித்து மரம் சுமந்திருந்த பறவைகளை அதன் மொழிகளை கூவலை  மரங்களை வெட்டி சாய்ப்பதின் மூலம் பெரிதும் இழக்கிறோம். இரட்டிப்பு இழப்பு.

சாலைகள் இரயில்வேபாலங்கள் கட்டவும் தொலைபேசி குடிநீர்குழாய் அமைக்கவும் குடியிருப்பு்கள், தொழிற்சாலைகட்டவும்  மரங்களைவெட்டுகிறோம் .மரங்கள்போனால் பறவைகள் காணாமல்போகும். பாதிப்பறவை இனம் பூண்டோடு அழிந்துவிட்டது


தூக்கணாங்குருவி முதல் கட்டிட நிபுணர் !ஆகாயதோட்டி காக்கை !பல்லவி சரணம் பாடும் வானம்பாடி.!
கொக்கின் ஒற்றைக்கால்தவம்  எல்லாம்  இனி வரும் சந்ததியினருக்குப்பாடபுத்தகத்தில் மட்டும்  பார்க்க என்றாகிவிடுமா?

 ஆலாப்பறவை வேகமாய் பறக்குமாம் ‘ஏன் ஆலாய்ப்பறக்கறே?’ என்பார்களே இதனால்தான்! ஆல்பட்ரோஸ்  பறவை சிறகைவிரித்துவிட்டல்; ஏறத்தாழ ஐந்துவருடங்கள் பறக்குமாம் !புறாக்கள்  தூதுபோயிருக்கின்றன.

ஒற்றுமைக்கு காகம்! இனிமையாகப்பாடுபவர்களை குயில் என்கிறோம் !மழையை தோகை விரித்து அறிவிக்கும்மயில்! கழுகுப்பார்வை என்கிறோம்.
கொய்யாமரத்தில் எப்போது  பழுக்கும் எனத்தெரிந்த அணில்.  கல்யாணமுருங்கை   எப்போது பூபூக்கும் என அறியும் கிளிகள்.
தும்பிகளுக்கு மழைவருவது தெரியு!ம் களிமண்ணை பிரபஞ்சமாக்கி பச்சைப்புழுவைப்பறக்கவைக்கும் மந்திரம் குளவிக்குதெரியும்.
நமக்கு என்ன தெரியும்?


சிட்டுக்குருவிக்கு சின்ன கவிதையாவது எழுதி சமர்ப்பிக்கிறேன் இன்றைக்கு.

சிறகில் அடிபட்ட
சிட்டுக்குருவி ஒன்று
வீட்டு வாசலில் வீழவும்
சட்டென அதை எடுத்து
சேலைத்தலைப்பினைதூளியாக்கி
குருவியை படுக்கவைத்து
அருமையாய் வருடி கொடுத்து
மருந்திட்டுக்காத்துவந்தேன்
இரண்டுநாட்களுக்குள் குருவி
இல்லத்து மனிதர்களின்
உள்ளத்தில் ஒட்டிக்கொண்டது
சிறகுகள் சீரானதும் மனைச்
சிறைவைப்பது சரி இல்லையென
மனதைக்கல்லாக்கிக்கொண்டு
கையிலேந்தியபடி வான்நோக்கி
பறக்கவிடுகிறேன்
உற்சாகமாக உயரப்பறந்தகுருவி
திரும்பிவந்தாலும்
அறிந்துகொள்ளமுடியாத
ஊர்க்குருவியானது!


Monday, March 19, 2012

ஆண்டொன்று போனால்...!!

வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் கனவுகள் அல்லது பிரமைகள் என்கிறது ஜென் புத்தமதம். அப்படியானால் நமது பிறப்பு என்பதும் கனவா அல்லது பிரமையா? பிறந்து இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதால் கனவாய் இருக்க சாத்தியமில்லைஆயினும் கனவுகளில் நாம் பயணம் செய்வதை மறுக்கமுடியாது. எல்லாவற்றிர்க்குமே கனவு ஆதாரம் அது சில நேரங்களில் மெய்ப்படுகிறது.

பிரமை என்பது கொஞ்சம் ஒத்துக்கொள்ளகூடியதாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்வின் பலகணங்களை பிரமிப்போடுதான்கழித்துக்கொண்டிருப்பதாகப்படுகிறோம்.
புனரபி ஜனனம், புனரபி மரணம்
மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு. இந்த பஜகோவிந்த வரிகள் மனித வாழ்வை மட்டும் சொல்லவில்லை இந்த வரிகள் மிக ஆழமான அர்த்தம்கொண்டது.

பார்டிக்கள் இயற்பியல்,
காஸ்மாலஜி என்ப்படும் பிரஞ்சத்தின் தோற்றம், போன்றவைகள் எல்லாமே இதற்குள் அடங்கும்.
விஞ்ஞானிஐன்ஸ்டினின் பிரபல சமன்பாடு ( E = MC2) அணுவை பிளந்து சக்தியாக மாற்றி அணுசக்தியயை மனிதன் உபயோகிக்க வழி வகுத்தது. அணுகருவுக்குள் இருக்கும் துகள்கள் சக்தியாகவும், சக்தி மீண்டும் துகள்களாகவும் மாறிக்கொண்டுஇருக்கின்றன. இதுவே சிவசக்தி. சிவம் சக்தியாகவும், சக்தி சிவமாகவும்
மாறிக்கொண்டே இருக்கிறது. சிவதாண்டவத்தின் பின்னனி இதுவே.
குவாண்டம் மெக்கனிக்ஸ் விஞ்ஞானி நியல்ஸ்போர் 'இந்த மாதிரி தனிப்பட்ட துகள்கள் என்பதெல்லாம் ஒருவித கற்பனைதான். அவைகளை நாம் அறிந்து கொள்வதெல்லாம் மறைமுகமாகத்தான்.’ என்கிறார்.
.
'நம் எதிரே காணும் பொருள் தனிப்பட்ட ஒன்றல்ல. பிரபஞ்சத்தின்,
ஒரு பெரிய உண்மையின், நாம் உணரும்+ காணும் அத்தனையும் சேர்ந்த ஒரு மகா உண்மையின் வெளிப்பாடு' என்பது அரவிந்தர் வரிகள்.

என்ன திடீரென கனவு பிரமை, பிறப்பு மரணம் என்று பேச ஆரம்பித்துவிட்டேன் என்று பார்க்கிறீர்களா?:) காரணம்
கடைசியில் தெரிந்துவிடும்!


ஒப்பற்ற கவிதை ஒரு கவிஞனின் படைப்புத்திறனால்மட்டும் பிறப்பதில்லை உலகம் அதிர்ஷ்டம் செய்ததாலேயே பிறக்கிறது என்று சொல்வார்கள்.

எம் எஸ் அவர்களின் குறை ஒன்றும் இல்லை என்கிற பாடலைக்கேட்கும்போது பாடல்வரிகளின் எளிமை பாடியவரின் அசாத்திய திறமை இதெல்லாம் நாம் அதிர்ஷ்டம் செய்ததாலேயே கிடைத்ததாக தோன்றுகிறது.குறை ஒன்றும் இல்லை என்ற நினைப்பே நி்றைதானே!






அதுபோல நான் செய்த அதிர்ஷ்டம் எனக்குக்கிடைத்த நல்லபெற்றோர்கள். இங்கிவரை யான்பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் என்று தினமும் நினைத்துக்கொள்வதுபோன்ற அருமையான அப்பா அம்மா.
குழந்தை கண்ணனை இடுப்பில்வைத்துக்கொண்டு சந்திரனைப்பார்த்து தாய் சொல்லும் பாவனையில் பெரியாழ்வார் பாடிய பாடல் ஒன்று உண்டு.
எல்லா பக்கமும் ஒளி சூழ அதன் ஜோதி எங்கும் பரந்துஎன்ன செய்தாலும் அதெல்லாம் என் மகன் கண்ணன் முக ஒளிக்கு நேராகுமோ என்பதான பொருள்கொண்ட பாடல் . அதாவது முழுநிலவைப்போலமுகம் என்போம் அல்லவா? என்ன பிசாத்துமுழுநிலா நீ என் மகன் கண்ணன் ஜோதி முகம் முன்னாடி நீ ஒண்ணுமில்ல‘ என்கிறாராம் பெரியாழ்வார் பொங்கும் தாய்மைப்பரிவில்.

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து
சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யினும்
என் மகன் முகம் நேரொவ்வாய்

அப்படித்தான் நான் பிறந்த சில வருஷங்களுக்கு வீட்டில் தலையில்வைத்துக்கொண்டு கொண்டாடினார்கள்.இத்தனைக்கும் ஒன்றும் ராயல் ஃபாமிலி இல்லை..கூட்டுக்குடும்பம் கொண்ட நடுத்தர வர்க்கம்தான்..மாணிக்கம் கட்டி வைரம் இடைக்கட்டி ஆனிப்பொன்னால் செய்த தொட்டிலை ஓலைக்குடிசையில் இருந்துகொண்டு அண்ணலுக்கு பெரியாழ்வார் மானசீகமாய் அளித்தமாதிரி எங்கள் இல்லத்திலும்மகிழ்ச்சியை வானுயர அளித்தனர்..அப்புறம் உடன்பிறப்புகள் வந்ததும் பாசமும் அன்பும் பகிர்ந்துபோனது! ஆனாலும் இன்றைக்கும் பிறந்தவீட்டுக்கு விருந்தாளிபோல அவ்வப்போது போனாலும் அந்தப்பாசமும் அன்பும் சற்றும் குறைவில்லை. குறை ஒன்றும் இல்லை
உறவும் நட்பும் என்று வளர்ந்த நாட்களில் கிடைத்ததில் குறை ஒன்றும் இல்லை
பள்ளி ஆசிரியரிடமிருந்து வாழ்க்கைப்பாடமும் கற்கமுடிந்தது
தமிழை நேசிக்க வைத்த ஆதார வேர் பள்ளிக்கூடத்தில்தான் ஆரம்பமானது.
உதடுபடாமல் பேசாதே
உச்சரிப்புக்கொலை செய்யாதே
எதுவானாலும் மொழி அழகு
அதை மாற்றுங்கால் வரும் பிசகு
என்று இசைக்கவிரமணன் எழுதியதுபோல தமிழின் அழகை ரசிக்க இளம்வயதிலேயே முடிந்தது.
தமிழுக்கும் மதுவென்று பேர் என்றாரே பாரதிதாசன் !மதுமயக்கம் இன்னமும் தீரவில்லை!! தமிழ் கற்றால் குறை ஒன்றும் இல்லை.
புகுந்தவீடு கணவர் குடும்பம் குழந்தைகள் இங்கும் குறை ஒன்றும் இல்லை. கவலைகள் இல்லாமலே வளர்ந்தாயா அப்படியே இருக்கிறாயா என்றால் அது முழுக்க உண்மை இல்லை வருத்தங்கள் வார்த்தைகளால் காயங்கள் சோகங்கள் அவமானங்கள் சோர்வுகள் இல்லாமல்  வாழ்க்கை இல்லை. ஆனால் என்னைக்கவலைகள் தின்னத்தகாதென்று நின்னைச்சரணடைந்தேன் என்று பாரதி சொன்னதுபோலகவலைகளை மனதில்போட்டு உழன்றுகொள்வதில்லை.
எண்ணும் திறன் உள்ளவரை எண்ணுவோம், நமக்கு வசமாகி உள்ள கலைகளையும் காரியங்களையும் செய்வோம், நமக்கு முடிகிறவரையில் பிறருடன் நமது இன்பங்களையும் நாம் பிறருடைய துயரங்களையும் பகிர்ந்துகொள்வோம்’ மனதை மாத்திரம்புதிதாக வைத்துக்கொள்வோம் கர்மத்தொடர்பை ஆன்மா என்று எண்ணி விடக்கூடாது என்று அமரர் மகாகவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் சொல்வார்.
அதாவது நாம் செய்த செயல்களையும் அவற்றின்  விளைவுகளையும் தொகுத்துவைத்துக்கொண்டு அதுவே  நாம் என்று எண்ணிக்கொள்ளக்கூடாது.இப்படி வாழ்கிற வாழ்க்கைதான் வாழ்வாங்குவாழ்தல் என்கிறார் .
 அப்படி ஒரு வாழ்க்கை சித்தியானால் அது அமரவாழ்வு என்கிறார் பாரதி அதிமானிடவாழ்வென்றார் அரவிந்தர் அருள்வாழ்வென்றார் வள்ளலார்.

 விளங்கிக் கொள்ளமுடியாமல்  திணறுகிறோம் நாம்!
(இன்று (19.3.)புதிதாய்ப்பிறந்தேன் ஆகவே இப்படி ஒரு பதிவு எழுததோன்றியது)



--





Wednesday, March 14, 2012

கனவில் எழுதும் கடிதங்கள்!








கடித விருந்தாளியை
எதிர்பார்த்து
கதவைத் திறந்தே
வைத்திருக்கும்
தபால்பெட்டியின்
வீட்டிற்கு
முன்னெல்லாம்
கார்டுசித்தப்பாக்களும்
கவர் பெரியப்பாக்களும்
வாழ்த்து அட்டை வசீகரிகளும்
வந்தவண்ணம் இருப்பார்கள்!

சிலமணி நேரங்களாவது
உடல் பொங்கப்பூரித்திருப்பார்
தபால்பெட்டிக்காரர்.

விலைவாசி அதிகமோ
விருப்பம்தான் இல்லையோ
விருந்தாளிகள் வருகை
அத்திப்பூ போலஆகிப்போனது.

பறந்து சென்ற புறா ஒன்று
‘என் நிலமைக்கு நீயும் வந்துவிட்டாயா?’
என்பதுபோல்
பெட்டி அருகே எட்டிப்பார்த்தபடி
பறந்துபோயிற்று.

கால ஆட்சி மாற்றத்தில்
செல்போன் செங்கோலாக
கம்ப்யூட்டர் க்ரீடமாகிவிட்டன!


சிம்மாசன மின்சாரம்
பம்மாத்து  செய்துவிட்டால்
கடிதப்பலகைமீது தான்
காலமே வந்து உட்காரப்போகிறது.
பார்க்கலாம் அதற்குள்
நானும் எழுதிவிடுகிறேன்
 சில கடிதங்களை ,
கனவிலாவது!