Social Icons

Pages

Saturday, February 28, 2009

இனி வரும் நாட்கள்....









முதல்வணக்கம்
****************************

உதிரத்தில் உருவமாக்கியதுமட்டுமின்றி
உலகத்திலும் உயரமாக்கிய
என் தாய் தந்தைக்கும்

காற்றில் மிதக்கும் அணுக்களை
அருகில் அழைத்து வந்து
அண்டத்தை அளவெடுத்துதரும்
என் எழுதுகோலுக்கும்

கவிதைக்கனவுகளில்
காலடிமண்ணைப்பதித்துப்போகும்
என் குருபாரதிக்கும்

கொண்டாடும் மழையென
நின்றாடும் அழகினிலே
வந்தாடுகின்ற தமிழுக்கும்.....

முதற் வணக்கம்.
********************************


சபைக்கு வணக்கமும், காப்பும்
******************************************
படிப்பும் துடிப்பும் கொண்ட
பண்பட்ட இளைஞர்களுடனே
நாவிற்கலைமகள் நர்த்தனம் செய்ய
நகைச்சுவைமிளிர் சொற்கள்கொண்ட
நற்கவிஞர் ஆசாத் போன்றோர்
நிறைந்த பண்புடனானஅவைதன்னில்

என்னைக்கவிபாட அழைத்ததுமே
ஏற்றுமகிழ்ந்து வந்துவிட்டேன் - நான்
கற்ற வித்தை கைகொடுக்குமென்று
மற்றவைகளைமறந்தும்விட்டேன்!

உடன்பாடோ எதிர்மறையோ அவையோரே
கடன் உங்கட்கு என்கவிதை!
கொட்டிடுவீர் கரவொலிகள்!
அரங்க நகர் வள்ளல் அருள்தரும்
திருவரங்க நாயகனே காப்பு!





கவிதைக்கு ஒருமுன்குறிப்பு.

(தர்மவர்மாவின் வம்சத்தில் வந்த நந்த சோழனுக்கு மகளாக திருமகளின் அவதாரமாக கமலவல்லி
எனும் அழகுதேவதை அவதரித்தாள். திருச்சி அருகே ஜீயபுரம் எனும் இடத்திற்கு திருவரங்கப்பெருமான் எழுந்தருளும்போது , தான் அரங்கனை விரும்பியதாகவும் அவள் மனம் அறிந்து,அவளை நந்தவனத்தில் வந்து சந்தித்துப்பின் திருமணம் செய்து கொண்டதாயும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இன்றும் திருச்சி உறையூரில் கமலவல்லிஅன்னை, தன் திருக்கோயிலில் அரங்கனுடன் மணக்கோலத்தில் காட்சிதருகிறார். இதையொட்டிய கவிதை இது. அரங்கனைக்கண்ட அரசியின் மனநிலை,தோழியர்கள் வாயிலாக கவிதையாக இங்கு வருகிறது)


இனி வரும் நாட்கள்
**********************************


அன்னாயிங் கிதுகேளாய் அன்றொருநாள் பிற்பகலில்

பொன்னனைய இளவரசி பூப்பறிக்க எமையழைத்தாள்

நீங்குகிலா தென்றுமவள் நிழல்போல விளங்குகிற

பாங்கியரேம் தாமுமவள் பக்கத்தில் சென்றிட்டோம்

மண்ணினிலே வந்திறங்கி நடைபயிலும் மதியம் போல்

பெண்ணரசி முன் செல்லப் பின்னேயாம் தொடர்ந்திட்டோம்

காவிரியின் வெள்ளத்தில் களிப்புடனே விளையாடிப்

பூவிரியும் சோலைக்குள் போயெங்கள் உடை மாற்றி

ஆடுவதும் ஓடுவதும் பாடுவது மாய்வனத்தில்

நீடியதாம் போதிருந்து நிறைந்தெங்கும் காண்கின்ற

மல்லிகையே முதலான மலர்களெலாம் பறித்தெடுத்து

நல்ல பல ஆரங்கள் நாராலே தொடுத்ததன் பின்

மாளிகைக்கு மீளவும்யாம் வரவெண்ணும் நேரத்தில்

காளைபோல் பெருமிதத்தன் கண்கவரும் தோளழகன்

விண்ணொத்த கருநீலம் மிளிர்கின்ற மேனியினான்

வெண்ணிறத்துப் பரியேறி விரைவாயெம் முன்வந்து

வேட்டைக்கு வந்தேன் நான் மெல்லியரே வேங்கையிக்

காட்டுக்குள் உள்ளதேல் காட்டுங்கள் என்றிடவும்

ஆங்குளது காணுமென அரசகுலத்திருமங்கை

ஓங்கியதாய்க் கிளைவிரித்தே உள்ளதொரு மரங்காட்ட

கொல் என்று யாம்சிரித்தோம் கொல்வான்போல் அவன் நோக்கி

வெல்லுஞ்சொல் சொல்லுவதே மெல்லியலுக் கழகென்றான்

பாரோர்கள் புகழுகிற பார்த்திபனின் மகளறியீர்

ஆரோநீர் என வினவின், அரங்கத்தான் என்றிட்டான்

தங்களுயர் இளவரசி முன்னுற்றுத் தாழ்கின்றேன்

இங்கிதுபோல் மணமாலை யானறியேன் என்பவனாய்

நங்கைதன் செங்கரத்து நறுமணமார் தொடையலினை

அங்கையால் பறித்தெடுத்தே அழகுறத்தன் தோள் சேர்த்துத்

தன்னெழிலார் ஆரத்தைச் சட்டென்று தானெடுத்து

அன்னவள்தன் கழுத்தினிலே அரைநொடிக்குள் சூட்டினனாய்

மின்னலெனப் பரியேறி விரைவாக மறைந்திட்டான்

என்னசெயல் என்றெண்ணி யாம்திகைத்து நோக்குகையில்

அன்னவனுக்காய் இனிவரும் நாட்களெனும் நினைவோடே

கன்னிகையின் நீர்மலிந்த கண்.


________வெண்கலிப்பா___________



{பண்புடன் குழுமத்தில் பொங்கல்கவியரங்கத்தில் இனிவரும் நாட்கள் என்னும் தலைப்பில் கவிதை பாட அழைத்தனர் அப்போது எழுதிய கவிதை இது)
மேலும் படிக்க... "இனி வரும் நாட்கள்...."

Wednesday, February 25, 2009

கருவில் உருவாய் வருவாயடி!







கனவில் மட்டும் வருகின்றாய்,
கைகொட்டித்தான் சிரிக்கின்றாய்!
நனவில் நானும் நானும்தான்,
நாளைவரும் எனும் நம்பிக்கைதான்,
கனவில் வந்த கண்மணியே,
நனவில் வரவும் தயங்குவதேன்?

நீ ...
தொலைந்து போயிருந்தால்
தேடி இருப்பேன்,
இறந்து போயிருந்தால்
வாடிப்போயிருப்பேன்,
இன்னமும் பிறக்காத
என் மகளே!

உன்னை உறங்கவைக்கத்தான்
தாலாட்டெல்லாம் பயின்றுவிட்டேன்
உன் முகம் பார்த்துப் பசியாற
பட்டினியாக இருக்கின்றேன்
எந்தன்கவலை புரியாமல்
எதற்கு இந்தகண்ணாமூச்சி!

கள்ளிப் பாலுக்கஞ்சித் தான்
காத தூரம் போனாயோ?
காலம் மாறிவிட்டதடி.
கண் கலங்க வேண்டாமடி,
கருவில் உருவாய் வருவாயடி
காத்திருக்கிறது
இந்தத் தாய் மடி!!
மேலும் படிக்க... "கருவில் உருவாய் வருவாயடி!"

Tuesday, February 24, 2009

Mills And Boon , 100!(நூறாவது ஆண்டில் மில்ஸ் அண்ட் பூன்!)


.








மில்ஸ் அண்ட் பூன் படிக்காமல் டீன் ஏஜைத்தாண்டினவங்க யாராவது இருக்கமுடியுமா!
அதனால புக்பத்தி இப்போ ஒண்ணும் சொல்லப்போறதில்ல!

விஷயம் என்னன்னா 1908ம் ஆண்டு தொடங்கின மில்ஸ் அண்ட் பூன் பதிப்பகம் இப்போ இந்தியால சென்னைல தனது கிளையைத்தொடங்கி இருக்காம்!

இங்கு கிளுகிளுப்புடன் ஆங்கிலத்தில் எழுதுகிற திறமைசாலியான எழுத்தாளர்களுக்கு வலை வீசிட்டு இருக்காம்!

முதல்ல இவங்க நாவல்களை பதிப்பிக்க முடிவு செய்தப்போ எழுத்தாளர்கள்கிட்ட செக்சியா நாவல்களை அனுப்பும்படி கேட்டுட்டதும் ஆயிரக்கணக்கான நாவல்கள் வந்து குவிஞ்சுதாம்!

ஆனா விஷய கனத்துடன்(அதெல்லாம் எனன்னு கேக்கக்கூடாது:)) ஆறுநாவல்களே தேறிச்சாம்!

இதுல என்ன ப்யூட்டீன்னா 75% பெண்கள் அந்தமாதிரி விஷயங்களை எழுதி இருந்தாங்களாம் அந்த நாளிலேயே!!!

சோபியா கோலி என்கிற இங்கிலாந்து அம்மணி இருளிலிருந்து அம்புகள்(Arrows From the Dark) அப்படீன்னு எழுதின நாவல் முதல் தகுதி பெற்றது.

ஆபாசமே இல்ல நாவல்ல ஆனா காமரசம் மட்டுமேநிறைய! அப்டீன்னு வாசகர்கள் அந்தக் கதையைபடிச்சி வரவேற்று சொன்னாங்களாம்!

இன்னிக்கு இளைய தலைமுறையினர் எல்லார் கையிலும் செல்போன் மாதிரி அப்போ இங்கிலாந்துல அவங்க கைல மில்ஸ் அண்ட் பூன் புத்தகம் இருக்குமாம்

இவங்கதான் படிக்றாங்கன்னுபார்த்தா நடுத்தர வயதானவங்க எல்லாருமே விரும்பிப்படிக்கிறதை பதிப்பாளர் கண்டுட்டார்.

அதனால் தேவை அதிகமாகிப்போக, அதை பூர்த்திசெய்யறது சிரமமாகிவிட ....ஆனால் வருமானம்மட்டும் உயர்ந்திட்டே போனதால சிரமம் ஒண்ணும் பெருசா தெரியலையாம்!

இந்தமாதிரி எழுதப்பலரைக்கேட்டுக்கொள்ள, சுவாரஸ்யமா பலரும் எழுதித்தந்தனராம்!

லிலியன் வாரன் என்னும் எழுத்தாளர் 3 வெவ்வேறு பெயர்ல எழுதித்தள்ளி இருந்திருக்காரு!
நம்மூர்ல எழுத்தாளர்கள் சிலர் பத்து புனைபெயர்ல கூட எழுதறாங்க அதனால நமக்கு இது
அதிசியம் இல்லதான்!


உலகத்தின் முக்கியமான நாடுகளில் எல்லாம் பதிப்பகத்தைதொடங்கின மில்ண் அண்ட் பூன் இந்தியாக்கு வந்து சிலவருஷங்கள் ஆகுது.

ஆனாலும் தமிழ்நாட்டுதலைநகருக்கு சமீபமாத்தான் நுழைஞ்சிருக்கு

தமிழ் மண்ணில் நடமாடும் கதாபாத்திரங்களைவைத்து ஆபாசம் இல்லாமல் ஆனால் சுவாரஸ்யமாக கிளுகிளுப்பாக வாசகர்களைகிறங்கடிக்கிறமாதிரி -தமிழ்ல இல்ல , கவனிங்க ஆங்கிலத்துல - எழுதும் ஆற்றலுடையவர்கள் தமிழ்நாட்லகிடைப்பாங்கன்னு கடைவிரிச்சிக்காத்திருக்கு.

மில்ஸ் அண்ட் பூன் பதிபப்கத்தாரைகவர்கிறமாதிரி யாரும் எழுதித் தந்தீஙகன்னா மிகபெரியவாசகர்வட்டம் மட்டுமல்ல உங்களுக்கு,மிக அதிக இலக்கங்களுடன் எழுதப்பட்ட செல்லுபடியாகக்கூடிய காசோலையும் காத்திருக்கு!



யாருங்க ரெடி? !
மேலும் படிக்க... "Mills And Boon , 100!(நூறாவது ஆண்டில் மில்ஸ் அண்ட் பூன்!)"

Monday, February 23, 2009

அன்பே சிவம்!







அன்பும் சிவமும் வேறென்பார் அறிவிலார்
அன்பேசிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே


என்பார் திருமூலர்.

அவற்றை நான் அனுபவிக்கும் முன்பாக எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக இருக்கிற இறைவனின் கருணையைக்காண்போம்

ஆதிகாலத்தில் ஜனகாதி முனிவர்கள் சிவபிரானை சந்தித்து ஒரு முக்கிய சந்தேகத்துக்கு விடை கேட்டனர்.

அதாவது ஆன்மாக்கள் இறைவனின் திருவடியை அடைய சரியான வழி எது என்பதில் எங்களுக்குள் சர்ச்சை இருக்கிறது தாங்கள்தான் அதனை விளக்க வேண்டும்
என்றனர்

அப்போது சிவபிரான் ஒரு மரத்தடியில் அமர்ந்து யோக நிலையில் மௌனமாக வலக்கை விரல்களால் அடையாளம் காட்டினார்.

இந்த சிவ ஸ்வரூபத்தில்தான் அவர் தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

அவர் காட்டிய அடையாளம் என்னதெரியுமா
அதுவே சின்முத்திரை!

சிவாலயங்களில் சின்முத்திரையுடன் கூடிய தட்சிணாமுர்த்தியை நாம் காணலாம். அவர் காட்டும் சின்முத்திரை என்பது
கட்டைவிரலில் ஆள்காட்டிவிரல் வளைத்து ஒரு வளையம் போல இணைந்திருக்கும் மற்ற மூன்றுவிரல்கள் மேல் நோக்கி நிமிர்ந்திருக்கும்.

எல்லாம் நம்கைக்குள்ளே என்று பெரியவர்கள் சொல்வது இதைத்தான்!


கட்டைவிரல் என்பது கடவுள் அது எந்தக்கடவுளாக இருந்தாலும் சரி
ஆள்காட்டிவிரல் என்பது ஆன்மா
அதாவது ஆன்மாவைத் தாங்கி இருக்கிற மனிதன் ஏதாவது ஒருபிறவியில் இறைவனது திருவடியை அடைய வேண்டும். அதனால்தான் ஆன்மாவுக்கு அடையாளமான ஆட்காட்டிவிரல்
வளைந்து கட்டைவிரலோடு இணைந்திருக்கிற சின்முத்திரைக்காட்சி.

ஆனால் நமது விரல் அமைப்பில் கட்டைவிரல் தனித்து நிற்கிறது ஆள்காட்டிவிரல் மற்ற மூன்றுவிரலக்ளோடு இணைந்திருக்கிறது. அதாவது இறைவனோடு(கட்டைவிரல்) இணையாமல் இருக்கிறது.

மனிதனுக்கு உலக வாழ்க்கை என்ற ஆசையைக்காட்டி கடவுளைப்பற்றி சிந்திக்க விடாமல் தடுத்துக்கொண்டிருப்பதுமூன்றுவிரல்கள்தான்.

அதாவது ஆணவம் தலைக்கனம் ஈகோ என்பவைகள்( எல்லாம் ஒரே அம்சம்தான்!)

ஓர் அறிஞர் சொன்னார்..

திறந்தே கிடக்கும் கோயிலுக்குள் ஆட்களே இருப்பதில்லை, மூடியே இருக்கும் சிறைச்சாலைக்குள் எப்போதும் ஆட்கள் இருக்கிறார்கள்.


தீப்பெட்டியும் தீக்குச்சியும் ஒருநாள்பேசிக்கொண்டதாம்..

நாம் இருவரும் உரசிக்கொள்கிறோம் ஆனால் நான்மட்டுமே தீப்பிடிக்கக்காரணம் என்ன என்றுகேட்டதாம் தீக்குச்சி

அதற்கு தீப்பெட்டி சொல்லியதாம்..

உன் தலைக்கனம்தான் காரணம் உன்னை இத்தனை நாள் பத்திரமாய் வைத்திருந்த என்னை நீ வெளியே வந்ததும் உரசுகிறாயே பாதுகாததவர்களைப் பதம் பார்த்தால் அழிவுதான் வரும்!


ஆகவே நம்மிடம் அகங்காரம் ஒழிய வேண்டும்
கிறிஸ்துவ மதத்தில் சிலுவைஅதைத்தான் சொல்கிறதாம் ஆங்கில \ஐ\ Iஅதாவது நான் இந்த அகந்தைபோகவேண்டுமானால் க்ராஸ்(+) செய்யவேண்டும் ஆணவம் அழிதலே சிலுவையின் அடையாளம்

இஸ்லாம்மததிலும் நான் செய்கிறேன் என்று ஆணவத்தோடு பேசக்கூடாது இன்ஷா அல்லா என்றுதான் சொல்லவேண்டும்!

நாம் அனைவரும் அன்பினால் ஒருமைப்படுவோம்!
மேலும் படிக்க... "அன்பே சிவம்!"

ஈசன் திருநாமம்!





பல்லவி

இமயம் செல்ல வேண்டும்-அதற்கு
சமயம் வந்திடுமா


அனுபல்லவி

உமையவள் நாதனை உண்மைப் பரம்பொருளை
இமைப்பொழுதேனும் கண்டு இன்னல் தொலைத்திடவே-(இமயம்)

சரணம்

ஆசைகளை அறுத்திட்டு அமைதியாய் வாழ்ந்தாலும்
ஓசைப்படாமல் ஒன்றன்பின் ஒன்றாய்தொடர்கிறதே
ஈசன் திருநாமம் இசைந்தே சொல்லிடவே
நேசம் மிகுந்த நெஞ்சம் ஏங்கித்துடித்திடுமே -எனவே(இமயம்)




http://www.gabcast.com/casts/6004/episodes/1235281571.mp3

(இந்தச்சுட்டியில் நான் எழுதிய இந்தப்பாடல்,என் குரலிலேயே(பாம்பேஜெய்ஸ்ரீ அல்லது மகாநதி ஷோபனா பாடினால் கண்டிப்பா இது நன்றாகவே இருந்திருக்கும்) வருகிறது!! பெஹாக் ராகத்தில்தான் ஆரம்பித்தேன் சரணத்தில் சற்றே அது ஜகா வாங்கிவிட்டது (ஜஹாக்:))மன்னிக்கவும்!)
மேலும் படிக்க... "ஈசன் திருநாமம்!"

Sunday, February 22, 2009

ஈசனே சிவனே போற்றி!










நீரினை சிரசில் கொண்டு

நெருப்பினை கையில் கொண்டு

பாரினில் பக்தர்தம்மை

பாசமுடனே காக்கும்


ஈசனே சிவனே போற்றி!

இறைவா உன் திருத்தாள்போற்றி!


வாசமாய் வாழ்க்கை மாறிட

வணங்குவோம் சிவனின் பாதம்




சிவம் என்று சொல்லும்போதே

சிந்தையது தெளிவு பெறும்

அவன் கருணைகங்கை

ஆறாகப் பாய்ந்துவரும்

நினைவெலாம் சிவமயம்

நித்தியமென்றாகிவிட்டால்

கனவிலும் எமபயமில்லை

கருத்தினில் இதனைக்கொள்வோம்!


அன்பிற்குமறுபெயராய்

அகிலத்தை ஆளுபவன்

என்புக்கு உள்கடந்துமனத்தில்

ஏகாந்தமாய் இருக்கின்றவன்

உருவமாய் உள்ளவனே

உள்ளத்தில் உறைவதை

உணர்ந்தபின் தாழ்வில்லை

உமாமகேசுவரனின்

கருணைக்கு ஏது எல்லை!
மேலும் படிக்க... "ஈசனே சிவனே போற்றி!"

Sunday, February 15, 2009

சிறுகொசுவும் துப்பு துலக்க உதவும்!

பின்லாந்து நாட்ல ஒரு கார் திருடு போயிடிச்சாம்
அது ஊரின் ஒதுக்குப்புறத்துல கண்டெடுக்கப்பட்டதாம்


யார் திருடி இங்க விட்ருப்பாங்கன்னு ஆராய்ச்சிபண்ணாங்களாம் அப்ப
காருக்குள்ள ஒரு கொசு சுத்திட்டு இருந்ததாம்.


லபக்னு அதப்பிடிச்சி அது கடித்த அல்லது குடித்த ரத்தம் எந்த நபருதுன்னு
டி என் ஏ ஆய்வு நடத்தினாங்களாம்.


ஒருபழைய கார்திருடனின் ரத்தத்தோட அது ஒத்துப்போகவும் அவனைப்பிடிச்சி
உள்ளபோட்டாங்களாம்..
\
ஆனா அவனோ காரைதான் திருடவேஇல்ல லிஃப்ட் கேட்டுத்தான் வந்தேன்னு ரீல்
விட்டுட்டே இருந்தானாம்!


இதுலிருந்து என்ன தெரியுது நமக்கு, சிறுகொசுவும் துப்புதுலக்க உதவும்!
ரைட்டா!
மேலும் படிக்க... "சிறுகொசுவும் துப்பு துலக்க உதவும்!"

இளமை!புதுமை!

ஸ்ரீனிவாஸ்மூர்த்தி மஞ்சுநாத் அஷாக்!


இவர்கள் மூவரும் கன்னட தூர்தர்ஷன்- நம்ம பொதிகைமாதிரி -, சந்தனா எனும்
சானலில் செய்தி வாசிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.


சரி இதுல என்னபுதுமை, ரிஷான்ஷெரீஃப் மாதிரி வித்தியாசமா செய்தி தரவேண்டாமான்னு
கேக்கறீங்களா!


புதுமை மட்டுமில்ல மிகவும் வியப்பான செய்திகூட இது!


ஆமாம் இவர்கள்மூவருமே பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள் பிரெய்ல்முறையில்
பட்டம்படித்து வரும் இருபது வயது இளைஞர்கள்.


இதில் மேலும் புதுமை என்னவென்றால்....
பிரெய்ல்முறையை அறிமுகப்படுத்திய லூயிபிரெய்லின் பிறந்த நாளான ஜனவரி நான்காம்
தேதி தான் இவர்கள் சந்தனா சேனலில் பணியில் சேர்ந்தனர்!
மேலும் படிக்க... "இளமை!புதுமை!"

Saturday, February 14, 2009

நீயும், நானும்!

நீ முதலில் பேசுவாய் என நானும்
நான் முதலில்பேசுவேன் எனநீயும்
காத்திருந்த போதில்
அலைகள் பேசிப்போயின.
மவுனத்திரையுடன்
ஓரங்கநாடகம்
மணல்வெளிஅறியும்
மர்ம சூட்சுமம்!
மேலும் படிக்க... "நீயும், நானும்!"

காதல்வந்ததும், காதல்வந்ததும்...!





காதல்!

இந்த மூன்றெழுத்து சொல்லுக்குத்தான் எத்தனை வலிமை !

காதல் என்பது என்ன?

பருவத்தில் வருவதா இல்லைஇல்லை.. காதலுக்கு ஜாதி இல்லை மதமும் இல்லை என்பதுபோல வயதும் இல்லைதான் போலும். எந்த வயதிலும் வருகின்ற ஒரு உன்னதமான உணர்வு காதல் எனலாமா?

சென்ற வருடம் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் THE NATURE OF THINGS என்னும் நிகழ்ச்சியை காட்டும்போது காதல் ஒரு மனோவியாதி என்பதை விஞ்ஞான ரீதியாக விளக்கினார்கள்.

ஒருவர் காதல் எனும் வலையில் விழுந்துவிட்டால் அவர் உலகத்தைப் பார்க்கும் கோணமே மாறிவிடுவதாக அந்த ஆராய்ச்சி கூறியது.

காதல் மலர்ந்தால் அதன் தாக்கம் ஆட்கொண்டவர்களை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறதென்பதை அனுபவத்தில் மட்டுமே உணர முடியும்.

காதலுக்காக தியாகங்கள் நடந்தகதை பல உண்டு.

காதலை இழக்க மனமின்றி தற்கொலைக்கு முயன்றவர்களின் சரித்திரம் அதிகம்.
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப்போலவே பாவை தெரியுதடி என்று பாரதியின் கண்ணம்மா என் காதலி பாடலில் வருவதுபோல,
காணுமிடமெங்கும் காதலனின் அல்லது காதலியின் தோற்றமே காதல் வசப்படவருக்கு ஏற்படுகிறது.

கண்டதும் காதல் ,காணாமலேயே இணையம்மூலம் காதல், நட்பாய் ஆரம்பித்து நேசத்தின் நெருக்கம் அதிகமாகி விட்ட நிலையில் மாறிய காதல், பரவசமன ஒரு தருணத்தில் நெஞ்சில் சட்டென மலர்ந்த காதல் ,அறிவின் மயக்கத்தில் புற அழகினைமறந்து அக அழகில் நாட்டம் கொள்ளூம் அதிசியக் காதல், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நெஞ்சை நெகிழவைக்கும் நிகழ்ச்சியில் மனதைப் பறிகொடுக்க அதில் மலர்ந்த
காதல், சிறுவயதுமுதலே உடன் பழகிய உறவுக்காதல்.......இப்படி காதலில் பலரகம் உண்டு.

காதல்வந்ததும் காளையர்க்கும் கன்னியர்க்கும் பிரிவில் கணம் யுகமாவதும், பார்த்ததும் பரவசமாவதும் இயல்பு.

நவீன யுகத்தில் காதல் தூது விட எத்தனையோ வசதிகள் வந்துவிட்டன.

காதலினால் மானிடர்க்கு இன்பமுண்டாம் என்கிறார்கள் கவிஞர்களும். ஆதலினால் காதல் செய்வீர்!

காதல், ஒரு வண்ணத்துப்பூச்சி .எப்போது எந்தமலரின்மீது வந்து அமரும் என்று யாருக்குத்தெரியும்?

ஆனாலும் காதலுக்கும், காதலிக்கும் நெஞ்சத்திற்குமாய் காத்திருப்பது சுகம்தானே?
மேலும் படிக்க... "காதல்வந்ததும், காதல்வந்ததும்...!"

Friday, February 13, 2009

பகலில் பத்மாவதியில்ல மத்யமாவதி!மாலையில் வசந்தா!




என்ன தம்பிராகவ்! ரொம்ப டல்லா இருக்கீங்களா ஆபீஸ்ல ஆணி அதிகமோ! சூடா காஃபி ஒண்ணு வெள்ளி டம்ளர்ல நுரைததும்ப ஸ்ட்ராங்கா \மய்யா\ ஹோட்டல் போய் அடிக்கவேணாம் !இப்பவே கேளுங்க பைரவி ராகம்! உடனடி சுறுசுறுப்புக்கு பைரவி ராகம் பெஸ்ட்!

என்னாச்சு மித்ரா உனக்கு ரத்தம்கொதிக்குதா அதுவும் இந்த டீன் ஏஜ்லயே தப்பாச்சே !அடடா ரத்தக்கொதிப்பை அடக்க அசாவேரி ராகம் உதவும்மா!


யாருக்காவது வீரதீரரசம் வேணுமா கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க ஹிந்தோளராகத்தை! இது மூளையின் ஞாபகசக்தியையும் கத்திமுனைமாதிரி கூராக்கிடுமாம்!

அஞ்சுகம்பாட்டிக்கு வாதநோயாமே பாவம் தீரதர்பாரி ராகம் கேக்க சொல்லணும் அவங்கள

கேஆர் எஸ் ! தலைவலியா உங்களுக்கு(எல்லாம் என் பதிவுகள் ஏதாவது படிச்சதால்தான் இருக்கும்! ஒரே ஸாரிடோன் தலைவலி நீக்கிடுமேன்னு டிவி விளம்பரம்பார்த்தாலும் போகலையா அப்ப என்ன பண்ணுங்க சாரங்கா ராகம்ல ஏதாவது பாட்லைக்கேளுங்க...

பொதுவா காலைல பூபாளம் பகலில் மத்யமாவதி மாலையில் வசந்தான்னு நம் முன்னோர்கள் இன்னன்ன நேரத்துக்கு இன்னன்ன மனநிலைக்கு இன்னன்ன ராகம்னு
பெரியபட்டியலே வச்சிருக்காங்க

பல்லாயிரக்கணக்கான திரைப்படங்களில்கூட அழகான ராகங்கள் பொதிஞ்சி இருப்பதால் நமக்கு வேண்டிய மனநிலைகளைத்தருது இல்லையா!

இசைப்பயணம் வழியா தியான நிலைக்குபோயி நம் நோய்களைப்போக்கிக்கலாமாம்!

இந்த உலகவாழ்க்கைல இன்பமும் துன்பமும் மாறிமாறிவந்துட்டே தான் இருக்கு இதுக்கு இசை ஒரு மருந்துன்னு விஞ்ஞான உலகமும் அடிச்சி சொல்லுது !விஞ்ஞானிகள் இப்போது பெயர் சூட்டி உள்ள(Binaural beats) இசைக்குள் ஏராளமாய் இருக்காம்!

எப்படீன்னா நம்ம மூளை இருக்கில்லையா அதனோட அலைகளின் அதிர்வெண்கள் நம்ம மனசு நிலைக்கு ஏத்த மாதிரி மாறிட்டே இருக்குமாம்.ஆராய்ச்சிகள்மூலமா சிலவிதமான ராக தாளங்களைக்கேக்கறப்போ மூளை மிகவும் ஓய்வான நிலையை அடையுது என்கிறதை விஞ்ஞானிகள் இப்போ,உறுதியா சொல்றாங்க...பத்து ஹெர்ட்ஸ்(hertz) அதிர்வெண் இருந்தாபோதும் மூளை அமைதியா இருக்கும் இசைதரும் இந்த அதிர்வெண் ஒருமாமருந்துன்னா இந்த வேகயுகத்துல அதுமிகையே இல்லைங்க

இந்த இசையையே தொடர்ந்துகேட்டா அதுஅடுத்த உயர்ந்த நிகையான ஆல்ஃபா நிலைக்கு உயர்த்திடுதாம்

1897- 1967 காலகட்டத்துல வாழ்ந்த பிரபல ஹிந்துஸ்தானி பாடகர் ஓம்கார்நாத் தாகூர் ஒருமுறை சர்வாதிகாரி முசோலினி கேட்டுட்டபடி அவருடைய தூக்கம்வராதவியாதி இன்சோம்னியாக்கு , பூரியா(இது ஹிந்துஸ்தானி பெயர்.இதுக்கு கர்னாடிக்ல என்னன்னு யாராவது சொன்னா உதவியா இருக்கும்)
ராகத்தை அவர் இசைக்க அரைமணில ஆழ்ந்த உறக்கத்துக்குப்போன முசோலினி இவர்கிட்ட(தூங்கி எழுந்துதான்!) இசைநுணுக்கங்களை கேட்டு அறிஞ்சாராம்!

ராமசரிதமானசை இருபத்தி ஐந்து வருடங்கள்தினமும் ஓதிய இசைவாணரான இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் அளித்ததோடு இவர்மறைவுக்குபிறகு தபால்தலையும் வெளியிட்டது நம்ம இந்திய அரசு.

சிகாகோல ஒருடாக்டர் , பேரு, டி ப்ரைன்சங்(பேரே வயலின்ல டங் குனு இழுக்குறமாதிரி இருக்கில்ல)
தன் பிரமாதமான த்வனிகளை வச்சி பலநோயாளிகளை குணப்படுத்தி இருக்காராம்!

ஈதல்(மற்றவர்களுக்குக்கொடுப்பது) இசைபடவாழ்தல்(புகழோடுவாழ்தல்) என்பார்கள்.

இசையோடு வாழ்தலும் நம் மனசையும் உடலையும் ஃப்ரெஷா வைக்கிறது என்கிறது உண்மைதான்.

பதிவப்படிச்சி,பிறகு எனக்கு இசைவாதானே பின்னூட்டத்துல சொல்லப்போறீங்க! (இதெல்லாம் ஓவரா ...ஒகே ஸ்டாப் பண்ணிட்றேன்!!

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா!

இந்தப்பாட்டு நினவுக்குவருதா

ஆனா யாழ் என்கிறகருவிதான் இப்பவும் இருக்கா,தெரியவில்லை, குறளில் தான் எப்பவும் இருக்கு!(குழலினிது யாழினிது....)
மேலும் படிக்க... "பகலில் பத்மாவதியில்ல மத்யமாவதி!மாலையில் வசந்தா!"

Wednesday, February 11, 2009

இரவுவானம்!(கவிதை)






மேகத்திரள்கள்
எழுகின்ற அலைகள்!


நட்சத்திரங்களோ
ஆழ்கடல்முத்துக்கள்!

பிறைநிலாதான்
கவிழும் படகு!

சாயம் இழக்கா
சமுத்திர வர்ணம்!

தலைகீழ்கடல்தான்
இரவுவானம்!
மேலும் படிக்க... "இரவுவானம்!(கவிதை)"

Sunday, February 08, 2009

இட்டார் தாழ்ந்தார், இடாதார் வாழ்ந்தார்!

திருமுருக கிருபானந்தவாரிசுவாமிகள் அவர்தான ஒருசமயம் நாகையில் சைவசமயத்தையும் நாயன்மார்கள் மகிமையைப்பற்றியும் பேசிய சொற்பொழிவினிடையே

திரு நீறு நெற்றியில் இட்டார் தாழ்ந்தார்
திருநீறு நெற்றியில் இடாதார் வாழ்ந்தார்
என்று சொல்லிமுடித்தார்.

கூட்டம் அப்படியே ஸ்தம்பித்துவிட்டதாம்.

என்ன இவர் இப்படிமுன்னுக்குப்பின்னாகப்பேசுகிறாரே இவ்வளவு நேரம் சிவபெருமான் பெருமையை திருநீறு மகிமையைக்கூறியவரின் வாயால் இப்படி எதற்கு அபத்தமாய் வருகிறது?

முணுமுணுத்தனர் பலர்

திருவாரியாரும் சிறிதுநேரம் கூட்டத்தினரை நோக்கி அமைதியாகவே வீற்றிருந்தார்
பிறகு,

திருநீறு நெற்றியில் இட்டு, யார் தாழ்ந்தார்?
திருநீறு நெற்றியில் இடாது, யார் வாழ்ந்தார்
?

பதில் இல்லை என்பதுதான்!’

என்று முடித்த

வாரியாரின் சிரிப்பு ஒலியோடு கூட்டத்தினரின் கைத்தட்டல் ஒலியும் சேர்ந்துகொள்ள அரங்கம் அதிர்ந்தது!
மேலும் படிக்க... "இட்டார் தாழ்ந்தார், இடாதார் வாழ்ந்தார்!"

Sunday, February 01, 2009

பூப்பூவா பறந்துபோகும் பட்டாம்பூச்சி அக்கா!

பட்டம் கொடுத்திருக்கும் இந்தப்பட்டாம்பூச்சிபற்றி நிறைய சொல்லலாம்!

அதற்க்கென்றே எழுத இருக்கும் தனிபதிவில் அவைகளை விளக்கறேன் .

இப்போ முதல்ல கனடா நண்பர் அனுப்பிய புகழ்பெற்ற வண்ணத்துப்பூச்சி வளாகத்திலிருந்து(WINGS OF PARADISE) எடுத்த சில புகைப்படங்கள் இங்கே உங்கள்பார்வைக்கு..









என்ன பார்த்தீங்களா அழகா இருக்கு இல்லையா?

கண்கொட்டாமல் நாம் பலமணிநேரம் பார்த்துமயங்குவது பட்டாம்பூச்சியின் பட்டு உடலைத்தானே?


சரி இங்க இருக்ற பட்டாம்பூச்சி.....


இது எனக்கு இப்போ கிடச்சிருக்கும் பட்டம்!! பட்டாம்பூச்சிப்பதிவர்விருது!





o Butterfly! o Butterfly! ஏன் விரித்தாய் சிறகை...

இனிமையான இந்தப்பாடலும் ஒரு பழையபாட்டு பூப்பூவா பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது அது யார் கொடுத்த சொக்கா வும் தான் இப்போ நினைவுக்கு வருகிறது!


அன்புச்சகோதரர் ஜீவா வெங்கட்ராமன் எனக்கு இப்போது பட்டாம்பூச்சி விருது கொடுத்து இருக்கிறார்!முதலில் நன்றி அவருக்கு. விருது கொடுக்கவும் மனம் வேண்டுமே!

பட்டாம்பூச்சிக்கு வண்ணத்துப்பூச்சின்னும் சொல்வாங்க இல்லையா?

பட்டாம்பூச்சின்னாலே பல நினைவுகள் நம்முள் சிறகடிக்கிறது!

பூச்சிகளில் அழகானது இது! இறைவனின் படைப்பில் பட்டாம்பூச்சிக்குமட்டுமே தனிகவனம் எனத்தோன்றுகிறது! மெல்லியஅதன் சிறகுகளில் வண்ணங்களை சேர்த்து அனுப்பிய இறைவனின் கைவண்ணம் கண்டுகளிக்கவேண்டிய ஒன்று.

சி்ன்ன வயசில் தோட்டத்துச்செடிகளில் இலைகளில் மலர்களில் வந்து அமரும்பட்டாம்பூச்சியை ஓசைப்படாமல் நெருங்கி அதன் சிறகுகளை விரல்களில் சிறைபிடிக்காத சிறுவர்சிறுமியர்கள் யார்!

கைக்குஅகப்படாமல் காற்றில்பறக்கும் பட்டாம்பூச்சி மலரில் அம்ர்ந்தால் ஓர் அழகு! காற்றில் பறந்தால் ஓர் அழகு! மென்மையான பூக்களுக்காகவே இந்த ஜந்துவையும் மென்மையாகப்படைத்தானோ இறைவன்? பின்னே பூக்களின் மீது தைரியமாய் அமரும் பெருமை வண்னத்துப்பூச்சிக்குமட்டுமேதான் உண்டு! இதன் அமர்வில் பூக்களுக்கும் காயமில்லை!

வண்ணத்துப்பூச்சியின் வரவுக்குக்காத்திருக்கும் மலர்களே அதிகம், சிலமலர்களுக்குத்தெரியவே தெரியாது, கறுப்புக்காலர்வைத்தபழுப்புசட்டைபோட்டுக்கொண்டு நேற்றுவந்த தன்னிடம் அளவளாவி தேன்குடித்துச்சென்ற வண்ணத்துப்பூச்சி இன்றைக்கு வேறு ஒருமலரை நாடிப்போய்விட்டது என்று தெரியாமல் காத்திருக்கும், பாவம்!

குழந்தைகளின் கண் இமைகள் பலநேரங்களில் பட்டாம்பூச்சியாய் காட்சி அளிக்கும் பார்த்திருக்கிறீகளா?காதலைச் சொல்லவரும்போது இதயம் பட்டாம்பூச்சியாய் அடித்துக்கொள்ளும் இல்லையா?!



்வீணைமேதை சிட்டிபாபுவின் கதனகுதூகலராகத்தில் ஒருபாடலுண்டு அதுக்கு பட்டர்ஃப்ளை டான்ஸ் என்று சாட்டீன் துணில சிறகுகள் கட்டிக்கொண்டு எட்டு சிறுமியராய் சேர்ந்து எட்டுவண்னத்துப்பூச்சிகளாய் பள்ளி நாட்களில் நடனம் ஆடியது நினவு வருகிறது!

கோலம் போடுவதில் இந்த பட்டாம்பூச்சிகோலம் மிக எளிதா போட்டுடலாம்! நாலுபுள்ளி நாலுவரிசைல அழகான பட்டாம்பூச்சி கோலம் ரெடி!

சரி..இப்போ......

இந்தப்பட்டாம்பூச்சிப் பதிவர் விருதினை நான் மூணுபேருக்குத்தரணுமாம்!

நிறையபேரு ஏற்கனவே வாங்கிட்டதா தெரிகிறது!ஆனாலும் நான் இவங்கமூணுபேருக்குக்கொடுக்கத்தான் போறேன் ஏற்கனவே கிடைச்சிருந்தாலும் கிடைக்கலேன்னாலும் நான் கொடுக்கறத இவங்க ஏத்துப்பாங்கன்னு தைரியத்துல!

என்னை பெற்ற தாயார்( http://srivaradharajan.blogspot.com/) என்ற வலைத்தளம் வைத்திருக்கும் என் அன்புத்தம்பியும், சற்றே குறும்பான இளைஞனும்,வரத்ராஜபக்தனுமான யமுனேஸ்வரத்துறைவனான ராகவ் அவர்களுக்கு இந்தப்பட்டாம் பூச்சிப்பட்டத்தையும்

அடுத்து
திரு அண்ணாகண்ணன் (http://annakannan.blogspot.com/) எனும் எண்ண இயலாத பெருமைகொண்ட தமிழ்ப்பாவலர் புலவர்
சிஃபிதள ஆசிரியர் இளமையிலேயே முதிர்ந்த ஞானம் கொண்ட நல்நண்பர் அவர்களுக்கும் பட்டம் தரப்போறேன்!

கடைசியா என் அன்புத்தோழி சுவாதி- மைத்துளியாய்(http://my-thulikal.blogspot.com/) தன் வலைதளத்தில் தமிழ்க்கடலை வைத்திருக்கிறார்கள். பிரச்சினைகளையும் புன்முறுவலால் வெல்லும் திறன்கொண்டவர்! நான் செய்து இன்னும் சாப்பிட்டுப்பார்க்காத இணையப்புகழ்மைபா எனும் மைசூர்பாக்கின் மீதுமட்டும்
தீராக்காதல்(பகை?:) கொண்டவர் ....அவருக்கும் பட்டாம்பூச்சிவிருதை அளிக்கிறேன்!

இவங்க மூவரும் என்ன செய்யணும்னா....

இந்த விருது - ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக்கிட்டு போறது போல - அதனால, பின்பற்றவேண்டிய சில விதி முறைகள் இருக்காம்!: (

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)



ரொம்ப நன்றி பட்டம்கொடுத்த ஜீவா வெங்கட்ராமனுக்கு!
வாழ்த்துகள் இதை என்னிடமிருந்து பெறப்போகும் மற்றமூவருக்கும்!



விடைபெற்று பறக்கும்

’பட்டர்ஃப்ளை’ஜா!
மேலும் படிக்க... "பூப்பூவா பறந்துபோகும் பட்டாம்பூச்சி அக்கா!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.