Social Icons

Pages

Friday, August 28, 2015

ஓங்கி உலகளந்த உத்தமன் வருகின்றான்!

ஓங்கி உலகளந்த உத்தமன்!




  சூடிக்கொடுத்த சுடர்க்கொடி,தன் பாசுரத்தில்  வேறு எந்த அவதாரத்தையாவதுவேறு  எந்த இடத்திலாவது,  உத்தமன் என்று  அழைத்துப் பாடி இருக்கிறாளா  என்று தெரியவில்லை ஆனால்  வாமனனை மட்டும்  ஓங்கி உலகளந்த உத்தமன் என்கிறாள்!  உலகளந்த என்று மட்டும் சொல்லாமல்  முதல் சொல்லாக  ஓங்கி என்றாள் ஏன்? அந்த சொல்லின் வீச்சு அற்புதமானது!

.பாரதி  ..."ஓங்கி வளர்ந்ததோர் கம்பம். அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே...’ என்கிறபோது  கம்பத்தின்  கம்பீரம்  காட்சியாகிறது.

மகளைப்போல  தந்தை,பெரியாழ்வாரும் உத்தமன் என்கிறார் ஒருபாசுரத்தில் .
,
” பாடிப்பாடி வருகின்றாயைப்
பற்பநாபன் என்றிருந்தேன்
ஆடிஆடி அசைந்து அசைந்திட்டு
அதனுக்கு ஏற்ற  கூத்தை ஆடி
ஓடிஓடிப்போய்விடாதே
 உத்தமா.....  என்கிறார். 

நம்மாழ்வாரோ

விதியினால் பெடை மணக்கும் மென்நடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு ..
என்கிறார்.

கள்வன் என  குற்றமாய் சொல்லவில்லை. ’திருடனே’ என உற்றவர்களை  செல்லமாய் உரிமையாய் அன்பாய் அழைப்பதுபோலத்தான் இதுவும்..
 

 மேலும்...
மன்னவன் பெரிய வேள்வியில் குறள் ஆய் 
      மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழ் உலகும் ஈர் அடி ஆக 
      பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்-

என்றுதான் திருமங்கையாழ்வாரும் அருள்கிறார். நிமிர்ந்தோன் என்பதைவிட ஓங்கி உலகளந்தான் என்கிறபோது  அவதாரத்தின்  பிரும்மாண்டம் கண்முன் விரிகிறது.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி.....என்கிறது திருப்பாவை பாசுரத்தின் ஆரம்ப வரிகள்.

ஆண்டாள்  பூர்ண அவதாரங்களான ராம-கிருஷ்ண அவதாரங்களப் பாடாமல்,த்ரிவிக்ரமன் பேர் பாடச் சொல்கிறாள். இதே த்ரிவிக்ரம அவதாரத்தை 17வது பாசுரத்திலும்(அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே(மறுபடி ஓங்கி உலகளந்த என்கிறாள்பாருங்கள்) என்றும், 24வது பாசுரத்தின் முதலடியிலும்(அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி! என்றும் ஆண்டாள் போற்றுகிறாள்! 
 ராம-கிருஷ்ண அவதாரங்களில் முறையே ராவணன்,கம்சன் தவிரவும் பல அசுரர்களை அண்ணல் வதம் செய்கிறார்.  இந்த அவதாரத்தில் மட்டும்(மகாபலியை அழிக்கவில்லை ஆனால்அவன் அகந்தையை அழித்துஅவனைத் திருத்தி தடுத்தாட் கொண்டார் ஆகவேஅந்தக் கருணை வடிவமான வாமன அவதாரமே அவளைப்பெரிதும் கவர்ந்திருக்கவேண்டும்.
 
மஹாபலி பக்தனாயிருந்தும் அவன் செயல்பாடுகளில் அத்து மீறிய அதிகார துர் உபயோகமும் அட்டூழியமும் இருந்ததால் இப்படி அவனை அப்புறப் படுத்த வேண்டி வந்தது. அதிகாரக்குவிப்பு எதை வேண்டுமானாலும் செய்யச் சொல்லும் அதற்குத் தடைஅவசியம் என்பது எல்லாகாலங்களிலும் பொருந்துகிறதே!

பெருமாள் நெடியவர், குறுகி அறியாதவர்; எல்லா உயிர்களுக்கும் அவை வேண்டும் வரங்களை வாரி வழங்குபவர்; யாரிடமும் எதையும் கேட்காதவர்.இந்திரனுக்காக மகாபலியிடம் சென்றபோது நெடியவர் குறுகி வாமனனாகச் சென்றார். இல்லறத்தார் பிரம்மச்சாரியானார்; வாரிக் கொடுப்பவர்வெறும் மூன்றடி நிலம் கேட்கிறார்.

கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தூக்கியதில் இந்திரன் அவரோடு மாறுபட்டு அபசாரம் செய்தான். அப்படி தமக்கு அபசாரம் செய்தவனே, மகாபலியினால் தனது ராஜ்யத்தை இழந்து துன்பப்பட்டு பிரார்த்தித்த போது, அவனுக்காக மகாபலியிடம் செல்கிறார்.
 `அகலகில்லேன் இறையும்' என்று உனது மார்பை விட்டகலாத திருமகளை மறைக்க மான் தோலை மூடிக்கொண்டு நீ பிரம்மச்சாரியாகிவிட்டாய்' என்றார் வேதாந்த தேசிகர்



ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்ததில்
குறள்  சொல்லும் பாடம் இது!

(மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்து அளந்தான்...திருவள்ளுவமாலை)



பிச்சை எடுக்கும்போது ஒருவனுடைய கல்வி, கேள்வி,புகழ்,சாதுரியம்,மற்றும் வெற்றி என்ற ஐந்து தேவதைகளும் அவனை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து மீண்டு வர இயலாத தூரத்துக்கு விலகுகிறார்கள் என்பது தெரியாதா ? அதையும் செய்தான் பெருமாள். அது வாமனாவதாரம். அவன் உத்தமன்.எனவேதான் `ஓங்கி உலகளந்த உத்தமன்' என்றார் நாச்சியார். 
பல வைணவக்கோவில்களில்  இந்தப்பாசுரத்தைசொல்லியபடியே நம் கையில் அர்ச்சனை பிரசாதங்களை தருகிறார்கள் அதுவும் ஸ்ரீவில்லிபுத்தூரில்  ஓங்கிஉலகளந்த  என்னும் பாசுரம்  எல்லா சந்நிதிகளிலும்  யாராவது ஒருவர் பாடிக்கொண்டே இருக்கிறார்கள்! தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரியும் நீங்காத செல்வமும் எங்கும் நிறைந்திருக்க  ஆண்டாள் அண்ணலிடம் விரும்பிக்கேட்டு அருளிய பாசுரம் இது!
 ` ( மகாபலி கேட்டுக்கொண்டபடி  வருடம் ஒருமுறை அவன் தன் மக்களைக்காண வரும் திருநாள்தான்  ஓணத்திருநாள்! இன்றைய நன்னாள்!

மேலும் படிக்க... "ஓங்கி உலகளந்த உத்தமன் வருகின்றான்!"

Tuesday, August 11, 2015

பிரார்த்தனை..சிறுகதை

ரொம்ப நாளைக்குப்பிறகு வழக்கமான  நீண்டகதையினின்றும் சிறிது தடம்
 மாறி  ஒருபக்கக்கதை  ஒன்று எழுதி அனுப்பினேன் இன்றைய ராணி இதழில்
 அது பிரசுரமாகி இருக்கிறது...!  யாரும் ராணி பக்கம் திரும்பமாட்டீங்கன்னு
 தெரியும்
 அதனால்...
 விடாம  இங்கே கொடுத்திருக்கிறேன்:):)


 “ரம்யா.. நான் கோயிலுக்குப் போயிட்டு வரேன்..” 

 எட்டு முழ வேட்டியும், முழுக் கை சட்டையுமாய், நெற்றி
 நிறைய திருநீறுடன்…முகமெல்லாம் சிரிப்புடன் சமையலறைக்குள்
 எட்டிப்பார்தான் கோகுல்.

 ”ம்....செண்ட் மணம்  ரொம்பவே கமகமக்குது.
.கோயிலுக்குத்தான் போறியா.. இல்லே...?”ஓடிக்கொண்டிருந்த
 மிக்ஸியை நிறுத்தி விட்டு கிண்டலாகக்கேட்டாள் சகோதரி 
 ரம்யா..





“கோகுல்..! போறதுதான் போறே..உங்கப்பாவையும்
 கையோடு கூட்டிட்டுப் போயேன்.. பாவம் சொல்லிக் கிட்டே இருந்தாரு…யாராவது துணைக்கு இருந்தா தான் 
 அவரால போகமுடியும்.. நீதான் போற இல்ல, உன்னொடு
 சேர்ந்து அவரும் சாமி கும்பிட்டமாதிரி இருக்கும்….…. இன்னிக்கு ப்ரதோஷம் வேற….” அம்மா சொன்னாள்.

”. என்னது அப்பாவைக் கூட்டிக்கிட்டுப் போகச் சொல்றியா..?
என்னால முடியாதும்மா....ரொம்ப நிதானமா நடக்கறார்.. எனக்கு
 அந்த அளவு பொறுமை இல்ல..”

”வயசாயிருச்சில்லையா கோகுல்..அப்படித்தான் நடப்பாரு.
..நாமதான் பொறுமையா கூட்டிட்டுப்போகணும்”

”அதெல்லாம்  வேண்டாம் அவர் வீட்டிலேயே இருக்கட்டும்…”

”காரை எடுத்துக்கிட்டுப் போயேன் கோகுல்..”

“கார் கோயில் வரைக்கும் தான் போகும்..உள்ளே வெகு தூரம் நடக்கணும்..”

“அவர்  மெல்லநடந்து வருவார்.. உனக்கு வேற எந்த சிரமமும் இருக்காதுப்பா...”

”இன்னிக்கு. எனக்கு நிறைய வேலை இருக்கு சீக்கிரமா
 போகணும்,, அவர் நடக்கற நடைக்கு  நானும் நடந்தா எந்த
 வேலையும் நடக்காது” 
.’  அவசரமாகக் கிளம்பி வெளியே வநதவன் அதே வேகத்தில்
 நடந்து கோயிலுக்குள்ளும் சென்று சிறப்பு தரிசனம் டிக்கெட்
 வாங்கி பதினைந்தே நிமிடத்தில் சாமி கும்பிட்டு விட்டு
 வெளியேயும் வந்து விட்டான்…
அப்பாவுக்காக  பிரார்த்தனைகூடப்பண்ணவில்லை.

அப்பாவைக் கூட்டி வந்திருந்தால்.. இந்நேரம்  சாமி கூட பார்த்திருக்கமுடியாது.’என்று நினைத்துக்கொண்டே
 நடந்தபோது அவன் பேரைச்சொல்லி ஒருவர் அழைத்ததும் திரும்பிப்பார்த்தான். அப்பாவின் ஆத்ம நண்பர்!

” கோகுல்!..எப்படிப்பா இருக்கே.?. பார்த்து ரொம்ப நாளாச்சு
  அப்பா எப்படியப்பா இருக்கிறார்?”

” நல்லாஇருக்கார் மாமா.. ஆனா நடக்கக்கொஞ்சம் சிரமப்படுறார்”

” எப்படி கம்பீரமா நடந்தவரு!உனக்கு அப்போ ஏழு, இல்ல 
எட்டு வயசிருக்கும்.. முகத்துலபெரியம்மை மாதிரி
 போட்டிடுச்சி உடனே…   நடந்தே  
சமயபுரம் கோவிலுக்கு வர்ரதாவேண்டிக் கிட்டார்.
சென்னை எங்கே.. திருச்சி எங்கே.! 
.வேண்டிக்கிட்ட மாதிரி நடந்தே போயிட்டு வந்தார்.. 
நல்ல வேளை.. பெரியம்மை குணமாகி உன் முகத்திலே..
 எந்த வடுவும் இல்லாம தப்பிச்சிட்டே..எல்லாம் உங்க 
அப்பாவோட பிரார்த்தனைதான்”’

கோகுல் தன்னையும் அறியாமல் தன் கன்னத்தை தடவிக்
கொண்டான்..!
***************************************************************************
மேலும் படிக்க... "பிரார்த்தனை..சிறுகதை"

Friday, August 07, 2015

வங்கம் தந்த தங்கமே!





ரவீந்திரநாத் தாகூர்!

பாரததேசத்தின் புகழை உலகமறியச்செய்த  உன்னத மனிதர்  ரவீந்திரநாத் தாகூர்! வங்கம்  தந்த தங்கக்கொடை! கீதாஞ்சலி எனும் சாகாவரம்பெற்ற கவிதைத்தொகுப்பினை அளித்த கவிமேதை!

வங்கமொழியில்  அங்கொன்றும் இங்கொன்றுமாக தாம் எழுதிய கவிதைகளைத்தொகுத்து  ’கீதாஞ்சலி ’என்றபெயரில்  வெளியிட்டார்  தாமே ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து உலக இலக்கிய மேதைகள் அனைவரையும் திரும்பிப்பார்க்கவைத்தார்  ரவீந்திரநாத் தாகூர்.

பல ஆங்கில அறிஞர்கள்  தங்களிடம்  அவர்  கீதாஞ்சலியின் வங்கமொழியாக்கத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கக்  கேட்டுக்கொண்டபோது  அவர்கள் இப்படிப் பணிவோடு மறுத்துக்கூறினார்கள்

”கவிப்பேரரசே! கீதாஞ்சலி உங்கள் உயிர்மூச்சின் வெளிப்பாடு அதனை நீங்கள் மொழிபெயர்த்தால் அந்த ஜீவன் இருக்கும்!:


 உண்மைதான்! வங்கமொழியின்  அதே உயிர்த்துடிப்பு ஆங்கிலமொழியாக்கத்திலும் வெளிப்பட்டது. படித்த அங்கில அறிஞர்கள் வியந்தனர்.!

 இந்தக்கவிதைகளை ஆங்கிலமொழி இலக்கிய மேதைகள் முன்னிலையில்  ஆங்கிலேயநாட்டிலேயே அரங்கேற்ற வேண்டுமென அனைவரும் ஆலோசனை சொல்லினர்.அதன்படி ரவீந்திரநாத் தாகூர் லண்டன் மாநகர் சென்றார்.. அங்கு ஆங்கில இலக்கிய மேதை கீட்ஸ் போன்றவர்களுடன் அன்பொழுகப்பழகினார் 

தாகூரின் கீதாஞ்சலி ஆங்கிலமொழியிலான தொகுப்புக்கவிதை அரங்கேறியது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு  கீதாஞ்சலிக்குக் கிடைத்தது.

அறிவாயுதமே  வறுமையை விரட்டும் சாதனம் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்த தாகூர் சாந்திநிகேதனைப் படைத்தார் விஸ்வபாரதி என்ற அந்த பல்கலைக் கழகம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை  உருவாக்கி அனுப்பிக்கொண்டிருக்கிறது.

 தாகூரின் விஸ்வபாரதிக்கு காந்தி நேரு இந்திராகாந்தி போன்ற அரசியல்  பிரமுகர்கள் வந்திருக்கின்றனர்.

ஒரு மரத்தடியில் ஐந்தே மாணவர்களை வைத்துக்கொண்டு வகுப்பை நடத்ததொடங்கினார் அன்று! இன்றும் அந்தப்பகுதியை அதன் இயற்கைத்தன்மை மாறாது  பாதுகாக்கின்றனர்.

 தாகூர் சிறந்த ஓவியரும் கூட! ஓவியப்பள்ளி ஆரம்பித்து  மாணவர்களுக்கு ஓவியக்கலையை கற்பித்திருக்கிறார்.அவரது ஓவியங்கள் லண்டனில் கண்காட்சியாக்கிப்  பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.


விஞ்ஞானி ஐன்ஸ்டின் இலக்கியமேதை பெர்னாட் ஷா ஆங்கிலக்கவிஞர் கீட்ஸ் போன்ற உலக மகா அறிஞர்களுடன் எல்லாம் நெருங்கிப்பழகும் வாய்ப்பு பெற்றிருந்த தாகூர் கிராமமக்கள் ஏழை எளியவர்களிடமும் மிகுந்த அன்போடு இருந்தார் என்பதற்கு  ஒரு நிகழ்வை மட்டும் இப்போது  பார்ப்போம்.

கிழக்கு வங்காளத்தில் பிரபல நகரம் டாக்கா.  அங்கே இலக்கிய
 மாநாட்டு கூட்டவேண்டுமென சில றிஞர்கள் ஏற்பாடு செய்தார்கள்.
 கவியரசர் ரவீந்திரநாத் தாகூரை அதற்குத் தலைமை தாங்க
 அழைத்திருந்தார்கள்.  அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார் 

கவியரசர்.,அப்போது அவருடைய வேலையாள் ஒருவனுடன்  தனது 
 கிராமத்தில் ஏதோ அலுவலக வேலையா  தங்கி இருந்தார்மாநாடு
 கூடுவதற்கு இரண்டுநாட்கள் முன்பாக வரவேற்புக்  குழுவின் 
செயலாளருக்கு ரவீந்திரரிமிருந்து இப்படி தந்தி ஒன்று வந்தது
 
.” அசந்தர்ப்பமாகிவிட்டது வர இயலவில்லை

 
செயலாளர்  கவியரசரோடு நெருங்கிப்பழகியவர்அதனால் விஷயம்

 என்னவென்று   நேரில் காண விரும்பினார் அந்தக்கிராமத்துக்குப் 

புறப்பட்டார்.
 
அங்கே நுழைந்தபோது மனிதசந்தடியே இல்லை.  ஊர் வெட்டியான் 

மட்டும் தட்டுப்பட்டான்.  அவனை விசாரித்ததில்  அங்கே கிராமம்

 முழுவதும் காலரா கண்டிருப்பது தெரிய வந்தது.

 காலரா  என்பது அந்த நாளில் கலவரமான நோய்.அதனால் திகிலுடனே 

ரவீந்தரரின்  வீட்டுக்குள் நுழைந்தார் நண்பர்.
 
 கவியரசர் அவரைக்கண்டதும்வரவேற்றார்.கீழே ஓர்  அறைக்கு அவரை 

அழைத்துப்போய்,” வேலைக்காரருக்குக் காலரா போட்டிருக்கிறது.”


 என்று தெரிவித்தார்.  
 
நண்பருக்கு ஒரே நடுக்கம்.
 
 ரவீந்தரரே தன்கையால்   நண்பருக்கு பழமும் சுடச்சுடப்பாலும்

 கொண்டுவந்து கொடுத்தார்.

மறுபடி வேலைக்காரரை கவனிக்கபோய்விட்டார்நண்பருக்கு மிகவும்

 ிகைப்பானது.  இரவு அவருக்குத்தூக்கமே வரவில்லைவிடிந்தபோது

 ரவீந்திரர உதயகீதம் பாடிக்கொண்டே நண்பரின் அறைக்குள் நுழைந்தார்.

 
சிரித்தபடி,” ஆள் தேறிவிட்டான்ஆனாலும் மிகவும் பலவீனமாகவது சரியா சொல்லுங்கள்?” என்று

 கேட்டார்.


கவியரசருக்கு எளியவரிடம் எத்தனை அன்பு உண்டு என்பதையும் 
 அவரது நெஞ்சுரத்தையும் அறிந்து நண்பர் வியந்தார்காலரா எனக்கேட்டதுமே  வேலை ஆளைப்பார்க்கவே தான் அஞ்சியதை நினைத்து 
வெட்கினார்.   ஊர் திரும்பியதும் அந்த மாநாட்டை  இரண்டு
 மாதங்களுக்கு  ஒத்திப்போட்டுவிட்டு பிறகு கவியரசர் 
தலைமையிலேயே அதனை நடத்தினார்.

  கருணை மனம் கொண்ட கவியரசரின்  போராட்டசிந்தனைகள்தான் கீதாஞ்சலியாக  உருப்பெற்றது.  

சுதந்திரம் கிடைக்குமுன்பாகவே அதாவது 1941ம் வருடம் ஆகஸ்ட் ஏழாம் தேதி தன் இறுதிப்பயணத்தில் ஆழ்ந்த அந்த நல்லமனிதர் தனது கீதாஞ்சலியில் வர்ணிக்கும் வறியநிலையானது, சுதந்திரம்கிடைத்துஇத்தனைவருடங்களாகியும்  மாறாமல்பெருகிக்கொண்டு போகிறது என்றால் நாம் பெற்ற சுதந்திரத்தைப்பேணிக் காக்கவில்லை என்றுதானேபொருள்?

தாகூரின் கீதாஞ்சலியிலிருந்து...

https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif
 எங்கே மனம் அச்சமற்றுத்திகழ்கிறதோ
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ

குறுகிய சாதி சமயப்பிளவுகளால்
எங்கே உலகம் உடையாமல் இருக்கிறதோ
எங்கே உண்மையின் அடியாழத்திலிருந்து
சொற்கள் உதிக்கின்றனவோ

எங்கே தளராத முயற்சி
பூரணத்தை நோக்கிக்கை நீட்டுகிறதோ
தெளிந்த பகுத்தறிவு நீரோடை
மூடப்பழக்கவழக்கம் பாலை மணலில்
பாய்ந்து வற்றாமல் எங்கே இருக்கிறதோ

என்றென்றும் விரிந்து செல்லும்
எண்ணத்தை, செயலை, நோக்கி
என் உள்ளத்தை
எங்கே உன்னருள் அழைத்துச் செல்கிறதோ
அந்த சுதந்திரச் சுவர்க்கத்தில்
என் தந்தையே,
எனது நாடு விழித்தெழுவதாக!

மேலும் படிக்க... "வங்கம் தந்த தங்கமே!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.