Social Icons

Pages

Sunday, April 26, 2009

ஓரு குச்சிக்கு இரண்டுமுனையாமே!

ஜென் சூபி போன்ற மதங்களில் ஒரு சிறப்புஉண்டு அவை உவமை மற்றும் சிறு கவிதைகள்கூறி மனிதர்களை நீங்களே சிந்தியுங்கள் என்று சொல்லி விடும்.

அப்படி ஒரு சுவாரஸ்யமான கதையைப் பாக்கலாமா!



ஒருகுச்சின்னா அதுக்கு ரெண்டுமுனை இருக்கும்..

ஆமா..இது எங்களுக்குத்தெரியாதா என்று கேட்கிறீர்கள்! அதான் சிந்தியுங்கள்னு முதல்லயே சொல்லிட்டேனே!

சரி இப்ப ஒருகுச்சியை எடுத்துக்குங்க.

பாத்தீங்களா அதுக்கு ரெண்டுமுனை இருக்கு இப்ப அதை ரண்டா உடையுங்க
அப்போ ரெண்டுகுச்சி தனித்தனியா ரெண்டா பிரிஞ்சுருக்கா அதுல ஒருகுச்சியைகவனிங்க .

அட , அதுக்கும் ரெண்டுமுனை இருக்கும்! அதையும் உடையுங்க..
அட , மறுபடி அந்தக் குச்சிலயும் ரெண்டு முனைகள்!

அப்படியே நீங்க எவ்வளவு சின்ன துண்டாகக் குச்சியை உடைத்துக்கொண்டே போனாலும் ஒவ்வொருகுச்சிக்கும்ரெண்டு முனைகள் இருக்கும்.

பொறுமை இல்லாம ஓஓஓஒ ன்னு சத்தம்போடாமல் இப்போ மேல(ஐமீன் கீழ இனிமே நான் தட்டச்சப்போகிறதை )கவனிங்க:):)

அதாவது குச்சியை எவ்வளவு சின்னதா உடைச்சாலும் அதுக்கு ரெண்டுமுனைகள் உண்டு அல்லவா
இதான் நீங்க கத்துக்கவேண்டியது.

எப்படிக்குச்சிக்கு ரெண்டுமுனைகள் உள்ளதோ அதுபோல மனிதனுக்கும் இன்பம் துன்பம் என்று இரண்டுமுனைகள் உண்டு. சின்னவங்களோ பெரியவங்களோ அவங்களுக்கும் வாழ்க்கைல ரெண்டும்
உண்டு என்பதைத்தான் இந்தக்குச்சி உதாரணம் உணர்த்துகிறது.

இப்படி தத்துவம் பேசினதுக்காக என்னை யாராவது குச்சி எடுத்து அடிக்க வரதுக்கு முன்னாடி...............

எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!!!!:)
மேலும் படிக்க... "ஓரு குச்சிக்கு இரண்டுமுனையாமே!"

Saturday, April 25, 2009

நல்ல பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே!







அறுபது ஆண்டுகளில் ஒருமுறை மிகச் சிறப்பான அட்சயத்ரிதீயை தினம் வருமாம்!

மேஷமாசம் வைசாக சுக்ல த்ருதியை வெள்ளிக்கிழமை ரோஹிணிநட்சத்ரம் என எல்லாம் சேர்ந்துவரும் இந்தசுபதினத்தைவிட உயர்ந்தது வேறெதுவும் இல்லையாம்!

யோகமான நாளாம் அது !

27- 4 -09 வரும் அட்சயதிருதீயை அப்படி அமைந்திருக்கவேண்டும் ஆனால் ஒன்றுதப்பிவிட்டது அதுதான் கிழமை! திங்கள்கிழமையாகி
விட்டது!

ஆனாலும் ஐந்தில் நாலுகொண்ட இந்த அட்சய்த்ருதியையும்அபூர்வமான சிறப்பான சுபமானநாள்தான் என்கிறார்கள் சாஸ்திரம் அறிந்தபெரியோர்கள்.

வருடாவருடம் வரும் அட்சயத்ருதீயை எனும் தினம் ஆண்டின் மங்களநாள்.



பார்வதிதேவியின் பிறந்தநாளும் கல்யாணம் ஆனநாளும் அட்சயத்ரிதீயைநாளில்தான்.

பலராமனின் அவதாரதினம் அட்சய்த்ருதீயை சேர்ந்த ரோஹிணிநாளில்.

மங்கலமானதினம் அட்சயத்ரிதீயை என்று பெருமாளும்
தாயாரும் தேர்ந்தெடுத்து அவதரித்த நாள் இந்த பொன்னாள்!



இன்னும் பற்பல சிறப்புகளைக்கொண்டநன்னாள் இது!

ஷய்ம் என்றால் குறை,

ஷயரோகம் என்கிறோம் அல்லவா

அட்சயம் என்றால் குறைவில்லாதது.

அன்று செய்யும் எந்த செயலும் குறைவில்லாதுப் பெருகும்!

பொன் வாங்க இந்தநாளை அதனால்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

பொன்வாங்கலாம்தான் ஆனாலும் அதேநேரம் தானம் செய்யவும் இந்த நாளைத்தேர்ந்தெடுக்கலாம், கொஞ்சம் தானம் செய்தாலும் மேருமலைபோல் புண்ணியம் சேரும் என்கிறார்கள் இத்தினதினச் சிறப்பை அறிந்த சான்றோர்கள்.


குருவினிடத்தில் வித்யைகளைக் கற்றுக் கொள்ளவும் ஏற்றநாள்.இத்தினத்தில்குருவின் திருவடிகளில் வணங்கி எழுந்தால் கோடிநன்மைகள் கிடைக்கும்.

அட்சயத்ருதீயை தினம் செய்யும்தர்மங்கள் கொடுததவ்ர்க்கே திரும்பவும் பலமடங்காய்திரும்பிவிடும்.

கொடுத்துவைத்தவர்கள் எனச்சிலரை நாம் சொல்வதுஇதனால்தான் ! அவர்கள் இம்மாதிரி தானதர்மங்கள் கொடுத்திருப்பார்கள் அதனால்தான் இப்போது அதனைப் பெறுகிறார்கள்.

சித்திரைமாதம் அமாவாசைக்குப் பிறகு வளர்பிறையில்வரும் இந்த அட்சயத்ரிதீயை , கலைகளை, மனமுவந்து நாம் செய்யும் தானதர்மங்களை மேலும்மேலும் வளர்க்கிறது.


அரிசிபருப்பு பானகம் நீர்மோர் விசிறி செருப்பு பால் என இயன்றவைகளைவாங்கி ஏழைகளூக்கு அளிக்கலாம்.

இந்த நாளில்வீட்டில் சிறிதேனும் அரிசி பருப்பு வெல்லம் முதலியன வாங்கிக்கொள்வதால் இல்லத்தில் வற்றாத நிலை இருக்கும் என ஞான நூல்கள்சொல்கின்றன.

காசி முழையூர் விளங்குளம் திருப்பரங்குன்றம் திருச்சோற்றுதுறை - இந்த ஐந்து திருத்தலங்கள் இறைவனின் திருவிளையாடல்கள் நிகழ்ந்ததால் இவை அட்சயத்ரிதியை திருத்தலங்கள் என அழைக்கபடுகின்றன .இந்தத்தலத்து தெய்வங்களை தரிசித்தல் புண்ணியம்
ஆகும்.

.
அனைத்திலும் மிக உயர்ந்தபுண்ணியம் ஏழை ஒருவருக்கேனும் வயிறார உணவிடுவதுதான்!

************************************************************************************

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13303&lang=ta&Itemid=73


இந்த சுட்டிலயும் இது இருக்கு!!!
மேலும் படிக்க... "நல்ல பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே!"

Saturday, April 18, 2009

மணக்கும் மரபுக்கவிதைகள்!

ஏப்ரல் 18ஆம் நாள், உலக மரபு தினமாகக் கொண்டாடப்படுகிறது! இதற்காக, பழைய நினைவுச் சின்னங்கள், புதையல்கள், பொக்கிஷங்கள் இவற்றைப் போல பெயரிலேயே மரபினைக் கொண்ட மரபுக் கவிதைகளையும் நாம் நினைத்துப் பார்க்கலாம்.

முன்பெல்லாம் அரங்க சீனிவாசன், திருலோக சீதாராம், சக்தி சரணன், மீ.ப.சோமு, மஹி, நா.சீ.வரதராஜன் போன்ற உயர்தர மரபுக் கவிஞர்கள் தமிழ்ப் பத்திரிகையுலகைத் தங்களின் இலக்கணம் சார்ந்த மரபுக் கவிதைகளால் பெருமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இப்போதும் சில நேரங்களில் தீபாவளி மலர்களில் மரபுக் கவிதைகளைப் பிரசுரிக்கிறார்கள்.

சௌந்தராகைலாசத்தின் இனிய மரபுக் கவிதைகளை மறக்க முடியாது.

புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன் போன்ற ஆழ்ந்த இலக்கியவாதிகளெல்லாம் மரபுக் கவிதை அன்பர்கள் தான்.

திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைபெயரில் சிதம்பர ரகுநாதன் எழுதிய உயர்தர மரபுக் கவிதைகளை யார்தான் மறக்க முடியும்?

பெற்றோர்கள் கலைத் துறையில் இருந்தால் சிறு வயதிலேயே அவர்களின் வாரிசுகளுக்கு கலைத் துறையில் பலரது சகவாசம் கிடைத்துவிடும்.
அப்படி எனக்குக் கிடைத்த பலரில் ஒருவர்தான் அரங்க சீனிவாசன் என்னும் அற்புதக் கவிஞர், அப்பாவின் அருமை நண்பர்.

இவர் அந்நாளில் சிறந்த மரபுக் கவிஞர். தமிழ் இவரது வாயில் வற்றா கங்கை! வீட்டிற்கு வந்தவரை அந்தப் பத்து வயதில் அரங்கநகர் கோயிலைச் சுற்றிக் காட்ட நான் அவருடன் கோயிலுக்குப் போனேன்.

அரங்கனைச் சேவித்து அன்னையை மற்றும் ஆழ்வார்களை அடியார்களின் சந்திதிகளை வணங்கி, கம்ப மண்டபம் அருகே வந்தபோது கம்பனின் பாடலுக்கு அன்று சிரக்கம்பம் செய்த மேட்டு அழகிய சிங்க நரசிம்மபெருமானின் சந்நிதியை நோக்கியவர் அடுத்த கணம் கண்மூடி இப்படிப் பாடலைப் பொழிந்துவிட்டார். பச்சை மண்ணாயிருந்த என் மூளையில் அந்தப் பாடல் அன்றே பதிந்துவிட்டது!

இதான் அந்தப் பாடல்!

பாட்டியல் அறிக் கம்பத் திருநாடன்
நாட்டிய தமிழ் கண்டிட்டு அருளாலே
ஆட்டிய சிர கம்பப் பெருமானே!
மோட்டு அழகிய சிங்கப் பெருமாளே
!

அன்றைய ஆழ்ந்த இலக்கியவாதிகளில் பலர் மரபுக் கவிதையை ஆதரித்ததோடு மரபுக் கவிதையை எழுதவும் செய்தார்கள்.

இப்போதும் அமுதசுரபி போன்ற பத்திரிகைகள் வெண்பாப் போட்டிகளை நடத்துகின்றன. ஈற்றடி கொடுத்து வெண்பாப் போட்டிகளை வெளியிட்டு வருகிறார்கள். அதற்கு மரபுக் கவிதை ஆர்வலர்கள் வெண்பாக்களை எழுதியும் வருகிறார்கள். இலக்கியபீடம் போன்ற சிற்றிதழ்கள் சில மரபுக் கவிதைகளை அவ்வப்போது வெளியிடுகின்றன. ஆயினும் புதுக்கவிதை எனும் சுனாமி முன்பு மரபுக் கவிதை எனும் மலர்கள் காணாமலே போய்விடும் அபாயமும் தெரிகிறது.

அமெரிக்காவில் உள்ள சிவசிவா, மரபுக் கவிதை எழுதுவதில் வல்லவர் என்பதை அவர்தம் யமகங்கள் மற்றும் யாப்பில் அமைந்த கவிதைகள் நமக்குத் தெரிவிக்கின்றன. திருவாளர்கள் ஆசாத், ஹரிக்ருஷ்ணன், ரமணன், பசுபதி, இலந்தை ராமசாமி, எழிலரசு, சந்தர் இவர்கள் எல்லாம் இப்போதும் எப்போதும் மரபில் கொடிகட்டிப் பறக்கிறவர்கள்! ஷாஜகான், அண்ணாகண்ணன், அகரம் அமுதா, இப்னுஹம்துன் கேவிராஜா போன்றவர்களின் மரபுக் கவிதைகள் என்னை ஈர்த்திருக்கின்றன.

மரபுக் கவிதை என்பது புள்ளி வைத்த கோலம்போல. ஓர் இலக்கில் ஆரம்பித்து இலக்கில் முடிந்துவிடும். சிக்கல்களையும் புள்ளி எனும் இலக்கணம் இணைத்துவிடும்.

எந்தக் கவிதையாயினும் அதனை அழகுபடுத்துவது அல்லது கவிதையைக் கவிதையாக்குவது மூன்று. அவை:

உருவம்

உள்ளடக்கம்

உணர்த்தும் முறை

அப்பரின் தேவாரக் கவிதையை இங்கே பார்க்கலாம்

"முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெம்மான் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள் தன் நாமங்கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே!"


பெண் ஒருத்தி, காதலனை நேசித்த பாங்கைப் படிப்படியாக இப்பாடல் விளக்குகிறது. காதலனின் பேர், ஊர், இயல்பு கேட்டு, அவனையே நினைத்து வாடும் காதல் பைத்தியமாக ஒரு பெண் மாறியதை இப்பாட்டு எடுத்துக் காட்டுகிறது.

நெஞ்சைச் சுழல அடிக்கும் காதல், இப்பாடலின் கருப்பொருள் - உள்ளடக்கம்.

அவனைக் கண்டு, கேட்டு, பழகி, நேசித்து, உறவைத் துறந்து ஏன் தன்னையே மறந்து, தலைவன் மயமாகி ஆகிவிடும் ஒருமைப்படுதலை நிலையை உணர்த்தும் பாவமே கவிஞனின் உணர்த்தும் முறை.

காதற்பொருள் நினைவில் நிலைக்கும் பாவத்தில் சொல்லப்பட விருத்த யாப்பு வடிவம் கையாளப்பட்டிருக்கிறது. எண்சீர் விருத்தம் யாப்பே இங்கே பேசப்படும் உருவம் ஆகும்

குறிப்பிட்ட சீர், தளை, அடி முறைகள் வரம்பு மீறாமல் இங்கே பின்பற்றப்பட்டுள்ளன. பாட்டின் ஓசை ஒழுங்கை, முன்னம் பின்னை அன்னை தன்னை என்ற எதுகைகளும் வரிதோறும் அமைந்துள்ள மோனைகளும் நிமிரச் செய்துள்ளன.

***********************************************************************



http://www.chennaionline.com/tamil/newsitem.aspx?NEWSID=7b76fc93-5517-46d1-b18a-6401170d3a26&CATEGORYNAME=TCHN
இன்று சென்னை ஆன்லைன்ல படிக்க இங்க சுட்டவும்!
மேலும் படிக்க... "மணக்கும் மரபுக்கவிதைகள்!"

Thursday, April 16, 2009

அக்காக்களும்,தம்பிகளும்!


அக்காக்களை அதிகம் நேசிப்பவர்கள்
தம்பிகள் மட்டுமே!
அக்காவின் ஆழ்மன உணர்ச்சிகள்
தம்பிகளுக்கு மட்டுமே
அதிகம் தெரிந்திருக்கிறது

அண்ணாக்களைப்போல அதிகாரம்
செய்வதில்லை அக்காக்கள்
என்பதாலேயே இழைந்து
நேசிக்கும் தம்பிகளை
அக்காக்கள் ஒருபோதும்
வெறுப்பதில்லை

கல்லாமண்ணா
ரைட்டா தப்பா
ஒருகுடம் தண்ணி ஊத்தி
ஒருபூ பூத்தது
தாயம், அஞ்சுகல்லு ஆட்டம்
பல்லாங்குழிச்சோழி

ஊஞ்சல் ஓட்டம்
உல்லாசக்கண்ணாமூச்சி

அக்காக்களின் பிரத்தியேக விளையாட்டுகளை
ஆதரிப்பது தம்பிகளே!




கோயிலுக்குக்கூடவந்து
சிதறத்தேங்காய் உடைத்து'
சிரித்துப்பெருமையுடன் நிற்கும்
சின்னத்தம்பிகளை நினைத்தாலே
சிலிர்க்கிறது அக்காக்களுக்கு

பட்டுப்பூச்சிகளைத்
தொட்டுப்பிடித்து
மெல்லத்தலைசீவி
வண்ணச்சிறகுகளை
வலிக்காமல் வருடுவதுபோல
வளர்க்கிறார்கள் தம்பிகளை
அன்பான அக்காக்கள்

தங்கள் கனவுகளையும்'ஆசைகளையும்
சேமித்துக்காப்பாற்றும் தம்பிகளை
அக்காக்கள் மறப்பதில்லை


அக்காக்களின் கனவுகளுக்கு
விடிந்தபின்னும் தம்பிகள் மட்டுமே
விளக்கம் சொல்லுவார்கள்

அரைநிஜார் அணிந்த தம்பிகள்
அர்த்தராத்திரியில் கிற்றுக்கொட்டாய்
சினிமாபார்த்துத்திரும்புகையில்
சிங்கம்போல வழித்துணையாய்நடந்துவர
அங்கமேபூரித்துப்போகும்
அக்காக்கள் பலருக்கு!


மத்தாப்புச்சூடுகண்ட தம்பியின்விரல்நுனியும்
முதல்முத்தம்வாங்கிய பாண்டியாட்டச்சில்லும்
மயிலிறகைமறைத்துவைத்த கணக்குப்புத்தகமும்
வண்ணத்துப்பூச்சியைப்பிடித்து,
வால்பையன்களோடுசேர்ந்து
வத்திப்பெட்டியில் அடைத்தநிகழ்வும்
தாவணி அணிந்த முதல்நாளும்
தம்பிகளோடு கூடிக்களித்த நேரங்களும்
அக்காக்களின் அன்றாட வாழ்வில்
அடிக்கடி வந்துபோகும் நினைவுகள்
மேலும் படிக்க... "அக்காக்களும்,தம்பிகளும்!"

Tuesday, April 14, 2009

புத்தாண்டுக்கு சிறப்பு ஆயுள் ரெசிப்பி!

தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள்!


இனிப்பு புளிப்பு உப்பு காரம் கசப்பு துவர்ப்பு !


இப்படி அறுசுவை கலந்தது நம் உணவுவகைகள்!


வாழ்க்கைல எல்லாசுவையையும் ஏற்கப்பழகிக்கணும்னுதான்
இன்னிக்கு வெல்லம் போட்ட மாங்கா பச்சடில லேசா உப்பு போட்டுமாங்காயையும்
அதன் ஓட்டினை(துவர்ப்புக்காக) நீக்காமல் வெட்டிப்போட்டு கடைசில வேப்பம்பூவை
வதக்கி சேர்க்கிறது வழக்கம்!


ஆமா அதென்னாஆயுள் தண்டனைபோல ஆயுள் ரெசிப்பி என்கிறீர்களா?


அல்லது ஆயில்(எண்ணை) ரெசிப்பி என்பதை தப்பா தட்டச்சிடேனோன்னு
நினைக்கிறீங்களா:))ஏன்னா வேற யாரவது எழுதினா அடியேன் இப்படித்தான்
நினைப்பேன்!!! என் புத்தி அப்படித்தான்:):)


சரி எதுக்கு சஸ்பென்ஸ் சொல்லிடலாமே இப்போ!!


ஆனா நாம எல்லாரும் இதை கண்டிப்பா செய்யணும் அப்போதான்


மகிழ்ச்சி என்கிற சொர்க்கவாசலின் கதவு நமக்குத்திறக்கும்ன்னு இந்த


ரெசிப்பிய எனக்கு சொல்லித்தந்த பெரியவர் சொன்னார்.


சரிம்மா வளவளன்னு பேசாம ரெசிப்பிய சொல்லுங்கன்னு யாரோமுணுமுணுக்றீங்க!


ஓகே ஸ்டார்ட் ம்யூசிக்!(புத்தாண்டு இன்னிசை!)


முதல்ல 12மாசங்களையும் எடுங்க.


அதுல இருக்கற வெறுப்பு பொறாமை பகைமை போன்றவைகளை சுத்தமா கழுவிடுங்க.


29 ,30 , 31(தேதிகளை) என்று எல்லாத்தயும் பலவகையா துண்டுகள் போடுங்க..

இப்ப அதுல ஒவ்வொரு நாளும் ஒருதுளி நம்பிக்கை ஒரு துளி சகிப்புத்தன்மை ஒ்ரு துளி தைரியம் பலதுளி உழைப்பு போட்டுக் கலங்க.

இதுல தியானம் பக்தி என்கிற உபரிச்சுவைகளை சேருங்க.

மறக்காம நாலுகரண்டி சந்தோஷம் கலங்க, என்ன?

முக்கியமா அதிக நகைச்சுவை உணர்வை நல்லா அதுல மிக்ஸ் செஞ்சேஆகணும்!

இவை எல்லாத்தியும் அன்பு என்கிற பாத்திரத்துல பரப்புங்க.

ஒளிநிறைந்த உற்சாக நெருப்புல உணவை, பதமா சமைச்சிடுங்க!

இதைக்கடைசில புன்னகையால் நன்கு அலங்கரிச்சி தாராளமாய்ப் பரிமாறுங்க!

பிறகென்ன ஆயுள்முழுவதும் உங்களுக்கும் , உங்களால் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதானே?!
மேலும் படிக்க... "புத்தாண்டுக்கு சிறப்பு ஆயுள் ரெசிப்பி!"

Monday, April 13, 2009

சித்திரைப்பெண்ணே! சித்திரைப்பெண்ணே!

மெல்லசிவந்த மாங்கொழுந்தும்
மண்ணில் சிதறிக்கிடக்கும் வேம்பூவும்
கொள்ளை அழகாய் நறுமலர்கள்பூக்கக்
கொண்டாடிவரும் வசந்தமுடன்
மஞ்சள்பலாவும் பலஇன் கனியும்
மக்கள் மகிழத் திருவிழாக்களும்
பஞ்சமின்றி பாரில் தந்திடவே
பாவை சித்திரை வருகின்றாள்.

உண்ணும் உணவிலும் வாழ்க்கையின்
உயர்ந்த தத்துவம் பல உண்டு
எண்ணிப் பார்க்கையிலே அதுவும்
எளிதில் நமக்கு புலனாகும்
அருமையான வாழ்க்கை என்றைக்கும்
இசைந்தே கசப்பையும் ஏற்றுவிடும்
விரும்பி வெல்லம்மாங்காய்சேர்ந்த
வேப்பம்பூபச்சடியதை உணர்த்திவிடும்

ஊழிக்கால ஓவியத்தேரை
ஒவ்வொருவருடமும் ஓட்டிவரும்
வாழி சித்திரை !வாழிய நீ!
வாழ்வில் வளமே தங்கும் இனி!
மேலும் படிக்க... "சித்திரைப்பெண்ணே! சித்திரைப்பெண்ணே!"

Sunday, April 05, 2009

தேடிப்பற!

தேடித்தேடி
அலைந்த என்னை
கும்பல்சேர்ந்து
கேள்விகேட்டது.

'தேடும்பொருளின்
பெயர்தான் என்ன?'

என்றே என்னிடம்
கேட்பவர்களிடத்தில்
நானும்,

'தேடும்பொருளின்
பெயரை அறியேன்'

என்றதும்
பார்வையாலே
என்னை பரிகசித்துப்
'பைத்தியம்' என்று
பட்டமும் சூட்டி
பரபரவென்று
கலைந்ததுகும்பல்!

பெயருள்ளபொருளையே
தேடும் உலகில்
பெயரற்ற பொருளைத்
தேடுபவர்களுக்கு
கிடைக்கும் பெயர்தான்
பைத்தியம்போலும்!
மேலும் படிக்க... "தேடிப்பற!"

Thursday, April 02, 2009

அண்ணலும் நோக்கினான்;அவளும் நோக்கினாள்!









ஜனகமகாராஜனின் அரசவை.

ராம,லஷமணர்களோடு விஸ்வாமித்திரர் அரசவையில் வீற்றிருக்கிறார்.

அப்போது அந்த வில் வண்டி வருகிறது, ஆம் சிவதனுசு எனும் அசாத்தியப்பெருமைகொண்ட வில் அது!

எட்டு சக்கரம் கொண்ட வண்டியில் அதனை வைத்து,


'உறுவலி யானையை ஒத்த மேனியர்
செறிமயிர்க்கலெனத்திரண்ட தோளினர்'

எனக்கம்பன் வர்ணிக்கும் பலசாலியானவர்கள் இழுத்துக்கொண்டுவருகின்றனர்.

சபைமுழுவதும் ஆர்வமாய் காத்திருக்கிறது. வேடிக்கைபார்க்க மக்கள் எல்லாம் அங்கும் இங்குமாய் கூடி அமர்ந்திருக்கிறார்கள்.

"என்ன வில் இது !ஆகாசத்தைத் தொடுவதுபோல இப்படி கம்பீரமாய் இருக்கிறதே!"

என்று பேசிவியக்கிறார்கள்.

திண்நெடு மேருவைத்திரட்டிற்றோ.....மேருமலைத்திரட்டி இந்தவில்லைப்பண்ணினார்களா?

வண்ண வான்கடல் பண்டுகடைந்த மத்தென்பர்......கடலில் மந்தரமலையைக்கடைந்த அந்தமலையே திரும்பவும் வந்துவிட்டதா?

அண்ணல் வாள் அரவினுக்கு அரசனோ?.........பாம்புக்கெல்லாம் அரசனாக இருக்குமோ?

விண் இரு நெடிய வில் வீழ்ந்ததோ?..... வானவில் என்று சொல்வார்களே அதுதான் கீழே வீழ்ந்து இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறதா?



ஏன்?'இது கொண்ர்க' என இயம்பினான் என்பார்
மன்னவர் உளர்கொலோமதிகெட்டார்? என்பார்.....

கம்பர் அழகாக வர்ணனை செய்திருப்பதைக்கவனியுங்கள்

"என்ன இது எதுக்கு இதைக்கொண்டுவந்திருக்காங்க எப்படி இதைப்போய் வளைக்கமுடியும் அரசனுக்கு புத்தி கெட்டுப்போய்விட்டதா?"என ஒருவரைஒருவர் பார்த்துப்பேசிக்கொள்கிறார்களாம்.


இப்படி அனைவரும் பார்த்து பிரமிக்கும் வில்லை வளைப்பவனுக்குத்தான் மகளைத்திருமணம் செய்துகொடுப்பதாய் ஜனகன் முடிவெடுத்ததற்குக் காரணம் இருக்கிறது..


சீதை ஒருநாள் அம்மானை ஆடினாளாம்.முணுகாயைவைத்துக்கொண்டு அதுகீழே விழாமல் ஆடுவது அம்மானை எனும் ஓர் பெண்கள் விளையாட்டு.. ஆடும்போது ஒருகாய் கீழே விழவும் அது , சிவதனுசு வைக்கப்படிருந்த பெட்டிக்குக்கீழே உருண்டு ஓடிப்போனதாம்.

இதை ஜனகர் பார்த்துக்கொண்டே இருந்தாராம்.சீதை அடுத்தகணமே தன் இடதுகையால் அந்தப்பெட்டியை சற்றும் சிரமமின்றி அனாயாசமாய் நகர்த்திவிட்டு அமமானையைக் குனிந்து பொறுக்கிக்கொண்டாளாம். மலையைத்தூக்கிவைக்கும் வலிமைகொண்ட தன் மகளுக்கு அப்போதே எப்படிப்பட்ட மாப்பிளையைப்பார்க்கவேண்டுமென ஜனகர் தீர்மானித்துவிடுகிறார்.அதனால்தான் சிவதனுசை யார் எடுத்து வளைக்கிறார்களோ அவருக்கே என்மகளை மாலையிடச்செய்வேன் என்று நினைத்துக்கொள்கிறார்.

இப்போது வில் சபை நடுவில் வீற்றிருக்கிறது.

ராமன் உட்கார்ந்திருக்கும் விதத்தைப்பார்த்தால் அவன் எடுத்து முறித்துவிடுவான்போல இருக்கிறதாம்..

ஜனகர் விஸ்வாமித்ரரிடம் ,"இதுதான் சிவதனுசு !" என்கிறார்

வில்லைப்பார்த்தவிஸ்வாமிதரர் "குழந்தாய்: என்று அழைக்கிறார்,உடனே லஷ்மணன்
ஆர்வமாய் எழுந்திருக்கவும், "உன்னை இல்லை லஷ்மணா ! ராமனைஅழைத்தேன்" என்கிறார்.

ராமர் எழுந்துநிற்கிறார்.

விஸ்வாமிதரர் கோபக்கார ரிஷி என்ன சொல்லப்போகிறாரோ எனதயங்கி நிற்கிறார்.


அப்போது ராமரின்பார்வை சட்டென மாடத்தின்மீது பாய்கிறது.


அங்கே நின்றிருந்த சீதையும் ராமனையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

'வில்லைப்பார் என்கிறார் விஸ்வாமித்ரர். தநு:பஸ்ய என்பது வால்மீகி வாக்கு.
ராமன் வில்லைப்பார்க்காமல் வேறு ஒன்றைப்பார்ப்பதை ரிஷி கண்டுகொண்டார். இங்கே தான் வால்மீகி இத்துடன் நிறுத்திக்கொள்கிறார் என்றால் கம்பர் சீதையைப்பார்க்கும்படலமாய் அழகாய்விவரிக்கிறார்.

சீதையும் ,' எத்த்னயோபேர்வந்தார்கள் சென்றார்கள்!இவரையும்பார்ப்போமே!'என்றுதான் வருகின்றாள்.

ஆயிரம்கோடிமின்னல்களூக்கெல்லாம் அரசியாக வந்து நிற்கிறாளாம். அந்தப்ரகாசத்தில் மெய்மறக்கிறது ராமனுக்கு.

ராமனைக்கண்ட சீதைக்கும் இனம்புரியாத பரவசம் ஏற்படுகிறது.


...கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.(கம்பர்
)

கண்ணால் கவ்வுகிறார்களாம்! இருவரின் நிலையும் ஒன்றேபோல இருக்கிறது.ஒருவர்பார்த்து மற்றவர்பார்க்காமல்போனால் அது உபயோகமில்லையே!


கண்வழி இதயம் இடம் மாறுகிறதாம் .விழியில்விழுந்து மனதில் நுழைந்து....

வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும் இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்


அப்புறம் என்ன ஆனதாம்?

கம்பர் இந்தவரிகளைஎழுதும்போது அவருடைய சிஷ்யன் அருகிலிருந்தவன் கேட்டானாம் "அப்புறம் என்ன ஆயிற்று குருவே?"

"அதை நான் எழுதத்தயாராக இல்லை எழுதுகோலைக்கிழே வைத்துவிட்டேன் "என்றாராம் கமபர்.

பிறகு சொல்கிறார்.

"'பிரிந்தவர் கூடினால் பேசல்வேண்டுமோ? ரொம்பநாள்கழித்து அவங்க சந்திக்கிறாங்க இங்க... நான் என்னப்பா பேசறது ?"



'ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்
கருங்கடல்பள்ளியில் கலவி நீங்கப்போய்ப்
பிரிந்தவர்கூடினால் பேசல் வேண்டுமோ'

என்று எழுதிவைக்கிறார்.

அண்ணலும் அன்னையும் பிரிந்து பன்னிரண்டு வருடமாகி இருக்கிறதாம்.
'நீ அயோத்திக்கு சென்று ராமாவதாரம் எடு .நான் மிதிலையில் மைதிலியாக வருகிறேன்' என்று சீதா சொல்லியதை நினைக்கிறாள்.வந்திருப்பது யாரெனப்புரிகிறது.

'கருங்கடல்பள்ளியில் கலவிநீங்கப்போய்...'

அந்தக்கருங்கடலிலிருந்து பிரிந்துபோனவர்கள்மீண்டும் ஒன்றுசேர்கிறார்கள்.

அதென்ன பாற்கடலில்லையா கருங்கடல் என்கிறர் கம்பர்? திருப்பாற்கடலில்பள்ளிகொள்பவன் அல்லவா பரந்தாமன்?

கருங்கடல் என்னும்பதத்தை ஆழ்வாரிடமிருந்து கம்பர் எடுத்திருக்கிறார்.

'மாலும் கருங்கடலே என் நோற்றாய் வையகமுண்டு
ஆலினைத்துயின்ற ஆழியான் -கோலக்
கருமேனி செங்கண்மால்கண்படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப்பெற்று.(முதல்திருவந்தாதி)'

நவரத்தினங்களில் பச்சைக்கல்லினை அசல் தானா என்று சோதிக்க அதனைஎடுத்துப்பாலில்போட்டால் அந்தப்பால்முழுவதும்பச்சையானால் அது அசல் மரகதப்பச்சை என்பார்கள்.

அதுப்போல கார்மேகவண்னனின் அண்மையினால் அவன் தேஜசினால் பாற்கடல் கருங்கடலானதாம்!

'ஒருங்கிய இரண்டுஉடற்கு உயிர் ஒன்று ஆயினர்'

"சரீரம் இரண்டு, ஆத்மா ஒன்றாகிவிட்டதப்பா ஆகையினால் என்னாலினி பேசமுடியாது"

வில்லைப்பார் என்று விஸ்வாமிதரர் சொல்ல நடந்தார்ராமர்.

நின்றார் . எடுத்தார் .முறித்தார்.

கையால் எடுத்ததுகண்டார், இற்றதுகேட்டார்.

தடுத்துஇமையாமல் இருந்தவர்..கண்கொடாமல்பார்த்தார்களாம் ..


ஒன்றுமே தெரியவில்லையாம்.

எடுத்தது கண்டனர் ;வளைத்துஒடித்த சத்தம்கேட்ட்னராம் !

சபை ஆரவாரமாய் கைதட்டியது

'பூமழை சொரிந்தோர் விண்ணோர் பொன்மழை பொழிந்தமேகம்!'
எனமுடிக்கிறார் கம்பர்.

**********************************************************************
மேலும் படிக்க... "அண்ணலும் நோக்கினான்;அவளும் நோக்கினாள்!"

Wednesday, April 01, 2009

அன்றைக்கு ஏன் அந்த ஆனந்தமோ!:)

அமெரிக்காவில் லாஸ்வேகாஸ் (சுற்றுப்பயணம்) வந்திருக்கிறேன்.வந்த
இடத்தில் எனக்கு.....?


என்னஆயிற்று என்று கூறுமுன் ஊர்பற்றி சிறு அறிமுகம்..நகரத்தைப்
பார்த்துவிட்டவர்கள் கண் மூடிக்கலாம்.


கலிஃபோர்னியாவின் கனவுலகம் லாஸ் ஏஞ்சலஸ் என்றால் களிநகரம் லாஸ்வேகாஸ்
எனலாம்.

எனக்கு லாஸ்வேகாஸ், இன்று லக்'வேகாஸ்!

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ?

ஆமாம்...இங்குவந்த இடத்தில் எனக்கு.. எனக்கு......

அவசரமில்லை பிறகு சொல்வேன்..

இருங்க அதற்குமுன் ஊர் உலா போகலாம்.

பாலைவனப்பிரதேசம்போல உள்ள லாஸ்வேகாசில் காசினோக்கள் தான் கவர்ச்சி
அம்சம் ,அழகான இளம் பெண்களுக்குப்பிறகு(முன்னேன்னும் சொல்லலாம்)..காசினோ
காம்ப்ளிங் தான் பிரபலம் இங்கே!

'ஹோட்டல் சர்க்கஸ்' என்ற ஹோட்டலில்தான் நாங்கள் தங்கினோம். அதற்குள்
சர்க்கஸில் இருப்பதைப்போலவே அமைப்பில் தரை சுவர் அறைகள் லாபி என
அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் தள ஓரமாய் குட்டி சர்க்கஸ் மேடை. நிஜப்புலிக்குட்டிவேறு உர்
என்கிறது.

இளம்பெண்கள் அழகாய் சிக்கனமான உடையில் காசினோபார்களில், பார்வைக்கு
இதமாய் கையில் மதுக்கோப்பை(ஃப்ரீ இல்லை..
கொள்ளைவிலை என நம்ம ஊர் குடிமகன் ஒருவர் முணுமுணுத்தது காதில் விழுந்தது)
ஏந்தியபடி வருகிறார்கள்.

ஆணாயிருந்தால் இவர்களின் அநியாய அழகுக்குக் கவிதை எழுதிவிடுவார்கள்.
அட்லீஸ்ட் அவர்கள் உடையைப் போல ஒரு ஹைக்கூ
வாவது!
ஆனால் இன்று எனக்கு இந்த நாளே இனியநாள்!கவிதையான நாள்! என்ன அதுவா?
இருங்க கடைசில சொல்லிடுவேன்.

லாஸ்வேகாஸ் நைட்க்ளப்ஸ் பிரசித்தம்! கேளிக்கையும் உல்லாசமும் நிறைந்த
நகரம்! ஒரு நீளவீதியில் ஏகப்பட்ட ஹோட்டல்கள்! காசினோ.சூதாட்டம் !பகலில்
வெய்யில் கொளுத்துகிறது;இரவில் எங்கிருந்தோ குளூமை வந்துவிடுகிறது. ஜகத்
ஜோதியாய் திருவிழாபோல தெரு காட்சி அளிக்கிறது.

சூதாட்ட நகரினில் இம்சை செய்யாமல் ஒரு இந்திய ஹோட்டல் பெயர் காந்தி.

ரோம சாம்ராஜ்ய பாணியில்ஹோட்டல் சீசர்ஸ்பாலஸ்,
நியுயார்க்நியூயார்க், எம்ஜிஎம் க்ராண்ட், ட்ரஷர் ஐலண்ட், ஹோட்டல்
எக்ஸ்காலிபர்( இன்னும் நிறைய இருக்கு)..எல்லாம் பெயரோடு சம்பந்தப்பட்ட
அமைப்பில் உட்புறம் அமைக்கப்பட்டு இருக்கும்.நியூயார்க் நியூயார்க்
ஹோட்டலுக்குள் போனால் அசல் நியூயார்க் நகரத்தில் இருப்பதுபோல இருக்கும்.
மொத்தத்தில் இளமைக்கு லாஸ்வேகாஸ் நகரம், ஒரு சொர்க்கபூமி!

ஒரு ஹோட்டலைச் சுற்றீப் பார்க்கவே அரைநாளாகிறது .தீம்பார்க்,
3நீச்சல்குளங்கள், இதர விளையாட்டு அரங்கங்கள் என நம் ஊரில்
பொருட்காட்சிசாலை பார்த்த உணர்வு. நிறைய ஹோட்டல்களில் குறைந்த பட்சம்
1000அறைகள் உள்ளன.அமெரிக்காவில் எல்லாமே
பிரும்மாண்டம்தான்!

காந்தி ஹோட்டலில் மட்டும் நோ காசினோ!

கஜல் காதில் ஒலிக்க கண்ணுக்கு நிறைவாய் ராஜஸ்தானி ஓவியம் தெரிய
வயிற்றுக்கு இதமாய் வெஜிடபிள் புலாவ் கிடைத்தது.

ஒருவர்," இங்கதான் நம்ம சாப்பாடு நல்லாருக்கு"என்றார்
செந்தமிழில்.,அடுத்த மேஜையில்.

தேன் வந்து காதில் பாய" ஹலோ நீங்கதமிழரா?' எனக்கேட்க விரைந்த என்னை கசின்
அடக்கிவிட்டாள்.

"அரட்டை அடிக்க ஆரம்பிக்காதே.. காசினோல போயி விளையாடலாம்..
50செண்ட் போட்டு அள்ளாலாம் ஆயிரம் டாலர்!" என்றாள்.

அதிர்ஷ்டம் என்னைப்பார்த்துக்கண் அடிப்பதை நான் உணரவேஇல்லை அப்போது

.என்ன அதிர்ஷ்டமா என யாரோ கேக்கறீங்க..ஆமாம்
விவரம் கடைசில.
தொடர்ந்து படிங்க..


என்ன 50ல்1000ஆ? "என்று கேட்டேன் அதிர்ச்சியோடு.

'லட்சம் கூட வரும்..வா வா"

ஆஹா!

மகிழ்ந்து குலாவி அவளுடன் காசினோவிற்குள் பி.டி உஷாவாய் ஓடிப்புகுந்தேன்.

ஆயிரக்கணக்கான மெஷின்கள்! ஆயிரக்கணக்கான மனிதர்கள்! நிதானத்தில் சிலர்!
போதையில் பலர்!

எல்லார்கண்களிலும் அதிர்ஷ்டதேவதையின் வரவிற்குக்காத்திருக்கும் ஆர்வ ஒளி!

டடட்ங் என மெஷின்களில் டாலர்நாணயங்கள்கொட்ட மனசை உலுக்கியது அந்த ஒலி!

நானும் அங்கே இங்கே பார்த்து அமர்ந்தேன் ஒரு மெஷினில்.

மெய்மறந்து கேட்டால் ஓம்ம் என்பதுபோல அந்த இயந்திரங்கள் ஒலிக்கும்.
எல்லாம் மாயை!

என் அருகில் இருந்த சிற்றிடை கொரியன் பெண்ணுக்கும் எதிரிலிருந்த பருத்த
பப்பாளிப்பழ ஜெர்மானிய மனிதருக்கும் நாணயம்
கொட்டியது.அள்ளினார்கள்.

நான் 50டாலர்வரை பரிட்சித்து
ஏமாந்தேன்..

சுத்தம்.

போட்டதெல்லாம் அசுரப்பசியோடு விழுங்கிய
இயந்திரத்தைப்பார்த்து முறைத்தேன். கசினுக்கு 10டாலர் லாபம். சே
எனக்குத்தான்..

ஆனால் அதிர்ஷ்ட தேவதை அருகில் வருவதை அப்போதாவது உணர்ந்தேனா?

அதிர்ஷ்டமா நிஜமாவா என மறுபடி ஒரு அமானுஷ்யக்குரல் கேட்கிறது.இனியும்
மறைக்கலாமா? மேலே படிங்க.

ஆசைஆசை பேராசை! அனைத்தும்தொலைத்து எழுந்து நிற்கையில் கசின் கடைசி
பத்து டாலர்(காசினோ நாணயங்கள்) கொடுத்து விளையாடு என ஊக்கப்படுத்தினாள்

.
ஒருடாலர் நாணயத்தை எடுத்து கோபமாய் மெஷின் வாயில் செலுத்தி பட்டனை
விருட்டென எரிச்சலுடன் அமுக்கினேன்.உனக்காச்சு எனக்காச்சு..


ஆஆஆஅ !!!


என்ன சத்தம் இந்தநேரம்!

ஓயாமல்விடாமல் 7.02நிமிடங்களுக்கு!!

கனகதாரமழை!

ொன்மகள் வந்தாள் பொருள் கோடிதந்தாள்!

எண்ணீ எண்ணி(கவனிங்க இது வேற எண்ணி) மகிழ்ந்தேன்.

ஆமாம் அடித்தது அதிர்ஷ்டம்!

அட் எ டைம் 10000டாலர்கள் எனக்கு !(ஒருடாலர்
இந்தியகணக்கில்47ரூபாய் பக்கமா அமெரிக்க
நண்பர்களே?)

கங்க்ராட்ஸ்மேடம்!

ஆர் யு ஃப்ரம் இண்டியா? வாவ்!"

கைத்தட்டல்!பாராட்டு!

எனக்கு நம்பவேமுடியவில்லை இன்னமும்.

என்ன நீங்களாவது நம்பறீங்களா:)

*********************************************************


(2007 ஏப்ரல்1 முத்தமிழ் குழுல இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ என்ற தலைப்பில் இட்ட கட்டுரை இந்த நாளுக்காக மறுபடி:):)
மேலும் படிக்க... "அன்றைக்கு ஏன் அந்த ஆனந்தமோ!:)"

ஒபாமாவிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு!














ஒபாமாவிடமிருந்து நேற்றுஎனக்கு போனில் அழைப்பு வந்தது

ஏப்ரல்முதல்தேதி என்பதால்

ஏதோநான் ஏமாத்தறதா யாரும்நினைக்க வேண்டாம்

நிஜமாத்தான்.

2வருஷம்முன்பு அமெரிக்காபோனபோது வாஷிங்டன்ல செர்ரிப்ளாசம் பூக்களைப்பார்த்து வந்து பூலோகம் பற்றி அப்போது குழுவிலும் அதையே ஆங்கிலத்தில் FLOWERS OF THE WORLD என்றும் எழுதி வாஷிங்டன்போஸ்ட் என்ற ஆங்கில நாளிதழுக்கும் அனுப்பி இருந்தேன் .
.
அதை தற்செயலாய் இப்போதுதான் படிக்க நேர்ந்து கட்டுரையின் மெல்லிய நகைச்சுவையை தான் மிகவும் ரசித்ததாய் சொன்னார் ஒபாமா.

என் எழுத்து ஒபாமாவிற்கும் பிடித்திருக்கிறது என்பதில் எனக்குஎதிர்பாராத மகிழ்ச்சியாக இருக்கிறது!

வழக்கமாய் டெலிபோனில் அதிகம்பேசி எதிர்முனைக்காரர்களை பேசவே விடாத நான் நேற்று இந்தஆனந்த அதிர்ச்சியில் மௌனமாகிவிட்டேன், அது ஒபாமாவின் சிறப்பு அழைப்பு என்றபோதிலும்.

என்ன நம்பமாட்டீங்களாக்கும் போன்ல பேசினதை ரெகார்ட் செய்துவச்சிருக்கலாம். ஆனா திடீர்னு அமெரிக்காவிலிருந்து அவங்க என்னை அழைப்பார் என்று எதிர்பார்க்கவில்லையே நான்!

என்னவோ எல்லாம் கனவுபோல 2நிமிஷத்தில் நடந்துமுடிந்துவிட்டது.

விவரமாக இதோ ஒபாமாவிற்கு நான் மின்மடல் அனுப்பிக்கொண்டிருக்கின்றேன். ஆகவே பிறகு மேலும் விவரம் சொல்கிறேன்.

அதற்குமுன்பாக இந்தப்பின்குறிப்புகளைமட்டும் பார்த்துவிட்டுப்போகவும்!

பிகு1...ஒபாமா என்பதில் ஒ,பக்கதுல சின்ன புள்ளி வைத்துப்படிக்கவும் என் கணிணி சில நேரங்களில் புள்ளிராணியாக இருப்பதில்லை!!

அதாவது ஒ.பாமா(ஒரத்தநாடுபாமா), என் தூரத்து உறவினர்! இப்போது
அமெரிக்காவில் தன் மகள் பிரசவத்துக்காக வாஷிங்டன் சென்று உள்ளார்.

பிகு2....வாஷிங்டன்போஸ்ட்க்கு நான் அப்போதேசெர்ரி ப்ளாசம் கட்டுரையைஅனுப்பினேன். அது உண்மை. ஆனால் அவர்களுக்கு அதைப்பிரசுரம் செய்யக்கொடுத்து வைக்கவில்லை!!முத்தமிழ் குழுமத்துலதான் படிச்சாங்களாம்:):)

பின்குறிப்பு3... அந்த செர்ரிப்ளாசக்கட்டுரை இங்கே மறுபடி அளித்துள்ளேன் அப்போ படிக்காதவங்க இப்போபடிச்சிக்கலாம்!

****************************************************************************************************

மலர்களே !மலர்களே!

செர்ரி ப்ளாஸங்கள் பூத்துவிட்டன! ஆமாம்,

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசியில் வருடா வருடம் ஸ்ப்ரிங்சீசனில்செர்ரிப்ளாசம் மலர்கள்சொல்லிவைத்த மாதிரி பூக்கின்றன.
மாதக்கணக்கில் கடும்பனியில் அதிகம் இலைகளை இழந்து மொட்டைமரமாய் விண்நோக்கி தியானித்தமரங்கள் எல்லாம் மார்ச் கடைசிவாரத்தில் மக்களால் கவனிக்கப் படுகின்றன.. சின்ன சின்ன வெள்ளைப்பூக்கள் கொத்து கொத்தாய் மரம்முழுவதும் காணப்படுகிறது. வெட்கப்படும் புதுமணப் பெண்போல வெள்ளைபூக்களில்
மிக இலேசான செம்மை. சில இடங்களில் மட்டும் முழுவதும் ரோஸ்நிறத்திலானபூக்கள்.

இந்த வருடம் செர்ரிப்ளாசம் திருவிழா மார்ச் 31முதல் ஏப்ரல் 15வரை நடக்க இருக்கிறது பாரேட் எனப்படும் அணிவகுப்பு நிகழ்ச்சி ஏப்ரல் 14 நடக்க இருக்கிறது. 10லிருந்து 15நாட்கள்தான் இந்த மலர்க்காட்சி.அதற்குப்பிறகு மலர்கள் அனைத்தும் கொட்டி மரம் முழுவதும் இலைகள் வந்துவிடுகின்றன.

அதிசயமாய் சூரியன் வெளியே வந்த அந்த ஒரு நாளில் நாங்களும் மலர்களைக்காணப் புறப்பட்டோம். நாங்கள் இருந்த இடத்திலிருந்து (வியன்னா)
வரை(ஒருமணி நேரப்பயணம்) வரை ரயிலில் சென்று அங்கிருந்து பொடி நடையாக நான்குமைல்(அமெரிக்காவில் கிலோமீட்டர் கணக்கே இல்லை!) நடந்தபடியே செர்ரிப்ளாசங்களை சென்ற இடமெல்லாம் பரவலாய்க்கண்டுமகிழ்ந்தோம். இலைகளேஇல்லாமல் மரம் முழுவதும் பூக்கள்தான்.அருகருகே அடர்த்தியாய் பார்ப்பதற்கேரம்மியமாய் இருக்கிறது.

ஜார்ஜ் வாஷிங்டன் நினைவுக்கட்டிடம் வழியாக எங்கள் நடைப்பயணம் தொடங்கியது.

போகும் வழியிலெயே நிறைய மரங்கள் பூக்களைப்போர்த்திக்கொண்டு இருக்கின்றன.

வாஷிங்டன் நினவுக்கட்டிடம் கான்கிரீட்டில் செய்த பெரியபென்சிலை சீவி
நிமிர்த்தி வைத்தமாதிரி இருக்கிறது

. அதற்கு ஒருபுறம் எதிரில் காபிடல்ஹில். மறுபுறம் ஆப்ரஹாம் லிங்கன்நினவுக்கட்டிடம் .இடதுபக்கம்
தாமஸ்ஜெஃப்ர்சன் நினைவுக்கட்டிடம். வலதுபக்கம் பொடாமக் ஆற்றின் வளைந்தநீரோட்டம்.( டைடல் பேசின்)

இந்த ஆற்றினைச்சுற்றிலும் செர்ரிப்ளாசமரங்கள்பூத்துக்
குலுங்குகின்றன .ஆற்றில் ஒருவகை வாத்துக்கள் மௌனமாய் மிதந்து செல்கின்றன.

கழுத்துப்பகுதி மயில்பச்சையிலும் உடல் வெளிர்நீலத்திலும் முகம்
கருப்புமாக அவைகள் வண்ண வாத்துக்களாய் தெரிந்தன.

ஜெஃப்ர்சன் கட்டிடத்தின் விளிம்பத் தொட்டுச் செல்வதுபோல் ஆறு வளைந்துஓடுகிறது. மோட்டார்படகுகளிலும் தானியங்கி படகுகளிலும் தனியாகவும் ஜோடியாகவும் பலர் ஆற்றினில் சென்று பூக்களை அருகில்போய் பார்க்கலாம்
.
ஆற்றின் ஒருபக்கத்து பாலத்தின்மீது நின்று வேடிக்கைபார்த்தபோது
தலைக்குமேல் மூன்று நான்கு ஹெலீகாப்டர்கள் பறந்துபோயின. ஏதும் மருத்துவ அவசரம் என்றால் இப்படி ஹெலிகாப்டர்கள் உதவப் போகுமென உடன்வந்த உறவினர்சொன்னார்.

சில நேரங்களில் ஜனாதிபதி புஷ் அவர்களும் சிறப்பு ஹெலிகாப்டரில்
செல்வார் என்றார். மேலே அப்படி நான் ஒரு ஹெலிகாப்டரை
அண்ணாந்துபார்த்தபோது ஜனாதிபதி கை அசைத்து," ஹலோஷைலஜா!
நலம்தானா?' என்று கேட்பது போல இருந்தது.!(ஓவர்?):)


நிறைய டூரிஸ்டுகள் செர்ரிப்ளாசம் பார்க்க வருகை தருகின்றனர்.

இந்த புகழ் பெற்ற மரங்களை 1912ல் ஜப்பான் ஜனாதிபதியின் மனைவி,
அமெரிக்காவிற்கு அன்பளிப்பாய் தந்தவைகளாம்.

மக்கள் இதனைப்பார்க்க வந்துகொண்டே இருக்கின்றார்கள்..
ஜெஃப்ர்சன் நினைவுக்கட்டிடத்திற்கு எதிரே பெரிய வளாகத்தில் செர்ரிப்ளாசசிறப்பு நிகழ்ச்சிகள் தினமும் நடக்கின்றன. இம்முறை இந்திய நாட்டியநிகழ்ச்சிகளும் இடம் பெற இருக்கின்றன.

செர்ரிப்ளாசம் சிறப்பு உணவுகள் என்று ஹோடல்களும், சிறப்பு விற்பனை என பலகடைகளும் இதைக் கொண்டாடுகின்றன.

மிகக்குறைந்த நாட்கள் தான் தங்கள் வாழ்க்கை என்றாலும் மற்றவர்களை
மகிழ்விக்க மலர்ந்து சிரித்துக் கொண்டே இருக்கின்றன செர்ரிப்பூக்கள்!
***************************************************************************­
மேலும் படிக்க... "ஒபாமாவிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.