Social Icons

Pages

Tuesday, May 28, 2013

கோடை தந்த கொடை!

கோடையில்  நாலுநாள் வெளியூர் சென்றே ஆகவேண்டிய கட்டாயம். என்னதான்  கல்யாண சாவு என்று வயதான அந்தப்பெண்மணி  இறந்துபோனதை சொன்னாலும் துக்கவீட்டில் கலகலப்பாய் பேசக்கூடாது என்று வாயைக்கட்டிப்போட்டுக்கொண்டபோது  அந்த வீட்டின்பரணிலிருந்து பழையபுத்தக வாசனை வீசியது!
 
 ஆர்வமாய்  விழிகளை  நிமிர்த்தி , உயர(கவனிங்க உயர் இல்ல  உயர:):)வகைப்பெண்குலமாதலால் அதிக சிரமமில்லாமல் எட்டிப்பார்த்தபோது அங்கே கட்டுக்கட்டாய்  பழையபுத்தகங்கள் தூசிப்போர்வையில்  மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டிருப்பதைக்காண முடிந்தது.
 
“எல்லாம்  இந்தவீட்டுப்பெரியவங்க அந்த நாளில்(அதாவது19 70வருஷம் முதல்) வாங்கிப்படித்தபழைய  புத்தகங்கள் பத்திரிகைகள்... எல்லாத்தியும் பேப்பர்க்காரனுக்குப்போடலாம்னா அதுக்கு வேளையே வரலை.. வீடு மாத்தறபோது தூக்கிக்கடாசணும்” என்றாள் அந்தவீட்டு மருமகள்.
 
ஐயொ என பதட்டமாய் அலறியே விட்டேன்... ‘ஒரு பார்வை நான் அவைகளைப்பார்க்கலாமா?’ என்று கேட்டவுடன் அனுமதி கிடைத்தவுடன்  தூசிக்கட்டை இறக்கித்தட்டி போத்தீசின் புதிய டிசைன் பட்டுப்படவையை பார்க்கும் சேலைப்ரியாக்கள்  போல பரவசமானேன்.
 
 
பொக்கிஷங்கள் எல்லாம்  உயர்ந்த இடத்தில்  தான் இருக்கின்றன என்பது எவ்வளவு உண்மை!
 
ஏகப்பட்ட  ரீடர்ஸ் டைஜஸ்ட்கள்  நடுவில்  , விகடன், கல்கி இதழ்களின்  பழைய  சிக்  வடிவம்!முதசுரபியும் கலைமகளும்  தூசி படிந்து  சற்றே நைந்துமிருக்க  ரகசியமாய்  காதல் என்ற பத்திரிகை  ஒன்று எட்டிப்பார்த்தது !
 
காதலை நகர்த்திவிட்டு.....
 
எட்டு தும்மலுடன்  நாலைந்து   இதழ்கள்  தேறினதை எடுத்துக்கொண்டு நன்றி சொன்னேன்
 
 
தமிழில் சொல் இன்பம் என்று நீதிபதி மகராஜன்  அவர்கள் எழுதி இருக்கிறார்  பாருங்கள்   ஆஹா  யாம் பெற்ற இன்பம்  இணையலோகமும்  பெறவேண்டுமல்லவா?
 
 
 
 அதாவது  கவிஞர்கள் உலக அனுபவங்களைத் தாயன்போடும் பரிவோடும் அனுபவித்து அவற்றைத் தமதாக்கிக்கொண்டு பின் தம் அபாரமான சொல்லாற்றலால் கவிதையாக்கி அவற்றை எடுத்துச்சொல்லும் போது  சொல் இன்பம் நமக்குக்கிடைக்கிறதாம்!
..
 
கோழி முட்டையிடுகிறது முட்டையை உடனே உடைத்துப்பார்த்தால் வெறும் தண்ணீர் போலத்தான் இருக்கும்  உள்ளே இருப்பதை 21 நாட்கள் எச்சரிக்கையோடு அடை காத்துக்குஞ்சு பொரிக்கிறது கோழி. அந்த 21நாட்களும்  ஓர் அற்புத நாடகம் நடக்கும். ஒருபக்கத்தில் உள்ள  நீர் அணுக்கள் மஞ்சள் நிறஅலகாகவும் வேறொரு பக்கத்தில் உள்ள அணுக்கள் சிவப்புநிறக்கால்களாகவும் மற்ற அணுக்கள் கோழிக்குஞ்சின் உடம்பாகவும் மெல்ல மெல்ல மாறிக்கொண்டே வரும். கடைசியில் கோழிக்குஞ்சு முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறதாம்,,தூணைப்பிளந்துகொண்டு நரசிம்மம்  வந்ததுபோல!
 
இது  போலத்தான் ஒரு உண்மையான கவிஞனின் இதயத்திலே ஓர் உணர்ச்சி மிக்க கருத்து கருத்தரிக்கிறது சூல் கொண்ட நேரத்தில் அருவ நிலையில் இருக்கிறது. கவிஞன் அதை அடைகாத்துக்கொண்டே இருக்கிறான். சூடு ஏற ஏற கவிக்கரு நுண்ணுருவம்  பெறுகிறது. சொல்லுருவம் அடைகிறது. இப்படியாக முட்டைக்குள் நடந்த அற்புத நாடகம் கவிஞனின் இதயத்திற்குள் நடககிறது.
 
 
தமிழ்நாட்டின் ஆறுகளின் பெயர்களை சொல்லச்சொன்னால் பலசரக்குக்கடைப்பட்டியலைப்போல இருக்கும்.  பாரதிபோன்ற கவிஞர்கள் இவற்றை  வரிசைப்படுத்தும்போது எத்தனை அழகாய்  வருகிறது பாருங்கள்!
 
காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
      கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
      மேனி செழித்த தமிழ்நாடு
 
 
நாம் தமிழ் நாட்டை நிலப்பரப்பாகப்பார்க்கி்றோம்    ஆறுகளை நீர்ப்பரப்புகளாய்ப்பார்க்கிறோம் ஆனால் கவிஞனின் பார்வையில்  தமிழ்நாடு என்பது திருமேனியாம்!ஆறுகளால் அது  செழித்துள்ளதாம்! உள்ளத்திலே இருந்த இன்பம் சொல்லிலே  பாய்ந்து ஆறுகளை  வரிசைப்படுத்தி நிறுத்துகிறது!
 
 
 

  மஞ்சுமஞ் சுங்கைப் பரராச சேகர மன்னன் வெற்பில்
பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள் பகழி
அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட லஞ்சுமஞ்சும்
நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுமது நயனங்களே
 
 
இந்தப்பாடலை யாரும் கேள்விப்பட்டதுண்டா? மஞ்சு  பஞ்சு அஞ்சு நஞ்சு முதலிய  மென்மையான  ஒலிகளைப்பாடலில்  தூவிவிட்டுச் சொல்  இன்பத்தை  உண்டாக்குகிறார்  ஒரு கவிஞர்.(பாடலுக்கு அர்த்தம்  ஜீவ்சு சொல்லுவார்)
 
சொல்லிலே இருக்கும் பொருள்  வேதனையைக்கொடுப்பதாக இருந்தாலும் கவிச்சொல்லின் ஒலி அந்த வேதனையையும் மாற்றிக்கேட்பவர்களுடைய இதயத்திலே இன்பத்தையே   கொடுக்கிறது. Beneditto Croce என்ற இத்தாலிய அழகியல் புலவர் ,’There is nothing like aesthetic pain' என்று சொன்னார். அதாவது வேதனையான பொருளைக்கூட கலைஞன் தன்  கலைத்திறனால் ஆனந்தத்தைக் கொடுக்கும் முறையிலே சொல்லிவிடுகிறான். இன்பத்தைக்கொடுக்கும் நிகழ்ச்சியை  கலைத்திறமை இல்லையெனில் துன்பத்தைக்கொடுக்கும் முறையில் சொல்லிவிடலாம்.
 
 
இங்கே ஔவையார் பாட்டு யாருக்காவது நினைவுக்கு வருகிறதா?பாண்டியன் கல்யாணத்தில் தான் பட்ட பாட்டை   அதாவது தொல்லையை சொல் இன்பத்தோடு நமக்குப்பரிமாறும்  பாடல் அது!
மேலும் படிக்க... "கோடை தந்த கொடை!"

Sunday, May 05, 2013

ஓட்டுப்போட்டாச்சு!





முகு>>
 
(election   அதவாது ಚುನಾವಣೆ  அதாவது தேர்தல் கன்னடத்தில் சுனாவனே!(cunāvaṇe)  இன்னிக்கு நடக்கிறது  பெங்களூரில். )
 
                     
இரண்டுவாரங்கள் முன்பு யோகாவகுப்பில் சிக்கலான ஒரு ஆசனம் செய்துகொண்டிருந்தபோது செல்  சிணுங்கியது.


யோகா மாஸ்டர்(பெண்)மூஞ்சியைக்கெ(கொ)ஞ்சலாய்ப்பார்த்துவிட்டு கண்ணாலேயே ஏதும் அவசர கால் ஆக இருக்குமோ என்னவோ சீக்கிரம் முடிச்சிடறேன் மேடம் என்று சொல்லிவிட்டு போனை அந்த சிக்கலான நிலையிலேயே கையில் எடுத்துக்காதில்வைத்து ஹலோவினேன் .


உடனே எதிர்முனையில்,’நானு குமார சாமி தேவகௌடாவின் மகன் பேசறேன்’ என்றுகன்னடத்தில் குரல் வந்ததும் சிக்கலை வி டுவித்து பவ்யமாய் எழுந்துகொண்டு “நமஸ்காரா” என்றேன்.


மனசுக்குள் ஒரே குறுகுறுப்பு  என்னடாது  நாம்பிரபலமாகிவிட்டோமா எந்தக்கதையாவது கன்னடத்தில் மொழியாக்கமாகி  என்பேர் புகழ் கன்னட உலகில்பரவி , பெரிய அரசியல்தலைவர்களெல்லாம் அதைப்படித்துப்பாராட்டுகிறார்களா ? ஒருக்கணம்  (தோட்டம் பக்கம் யோகா வகுப்பு இல்லையெனினும்) புல்லரித்தது.


எனது நமஸ்காராவிற்கு எதிர்முனையில்பதிலே இல்லை குமாரசாமிபாட்டுக்கு பேசிக்கொண்டே போனார்  கடைசியில் ஆகவே எங்கள் கட்சியை ஆதரியுங்கள் என்று சொல்லி  முடித்தார் ஆஹா அப்பதான் தெரிஞ்சுது அது ஆடமாடிக்காய் வந்த  ஓட்டுகேட்கும் யுத்தி என்று!

அசடு வழிய நான் நிற்க வேறு சிலயோகாபெண்மணிகள்,” யாரு  குமாரசாமியா?தேவகௌடா பிள்ளை அவரு! நல்லா எலெக்‌ஷன் கான்வாசிங்  செய்றார் எங்களுக்கும் அடிக்கடி இப்படி கால் வருது”  என
    அலுத்துக்கொண்டார்கள்.

அடிக்கடி  குமாரசாமி போன் செய்துகொண்டே இருந்தார்!
 

ஒருதடவை,”நானு குமார்..”என்றதுமே போனை கட் செய்துவி்ட்டேன்.
கடைசில   பார்த்த அந்தக்குமார் என்று ஆரம்பித்தவர் என் தோழி சுமதியின் (கன்னடக்)கணவர்!
\
 அவர் மனைவியும் என் அருமை சிநேகிதியுமான சுமதி  என்னிடம்,”  ‘3பேர் 3காதல் படம் உன் நண்பர் வசந்தின(சந்தடிசாக்குல  சுயப்ரதாபம் சொல்வதில் ஷைலஜாக்கு இணை யாரு?:))படமாச்சே வரியான்னு கேட்க  என் போன்ல சார்ஜ் இல்லைன்னு குமாரைவிட்டு கேட்க சொன்னா அவர்நான் குமார்ன்னு சொன்னபோதே கட் பன்ணியாமே?”  என்று அதட்டினாள்..

”ஐயெயொ சாரிடி“ நிலைமையை சொன்னேன்


பரவால்லபோ படம்  சுமார்தான் அதனால்  தப்பிச்சே
 
இப்போ எல்க்‌ஷனுக்கு வருவோம்
 
குமாரசாமியையப்போல இதரகட்சிக்கார வேட்பாளர்கள் போனில் துரத்தல்லை


ஆனால்  சாலை மூலையில் ஒரு  பெரிய காரில்  கதவுகளைத்திறந்து வைத்துக்கொண்டு  அவர்களின்தொண்டர்கள் மைக்கில் ஆதரவு கேட்பார்கள் கூடவே கன்னடப்பாட்டு  எட்டூருக்கு முழங்கும்.

ஒரு வேட்பாளருக்கு விசில் சின்னம் அவர் ஓட்டுக்காக  ஆதரவு கேட்டுவரும்போதெல்லாம் அவர்தம் தொண்டர்கள் விசிலை அடிப்பார்கள் பாருங்கள் காது கிடுகிடுத்துப்போய்டும்.’அண்ணா  விசில் அண்ணா  நனகே ஒந்து..” என்று சில சிறுவர்கள்  ஓடிப்போய் கேட்டு வாங்கிக்கொண்டு நாள் முழுக்க  கண்டக்டர் பணி செய்வார்கள்.

:
 
வீட்டில் அந்தந்தக்கட்சிக்காரர்களின் கைகுவித்தபோட்டோவு்டன் நோட்டீஸ்கள் வந்தவண்னமாகவே இருந்தன அதைசேர்த்து வைத்துப்பார்த்ததில் முக்கால்கிலோ எடை தேறியதுன்னாபார்த்துக்குங்க:)
 
 
 
இன்னிக்கு எல்க்‌ஷனுக்காக நேத்து இரவு பெங்களூரில் அடைமழை பொழிந்துதள்ளிவிட   காலைநேரம் ஜில்லென்றிருக்கவே ஓட்டுச்சாவடிக்கு   காலனிமக்கள்  பலரும்பலமொழிகள் பேசிக்கொண்டே க்யூவில்போய்நிற்க ஆரம்பித்தோம்.

வோட்டர் ஐடி  கொண்டுவரதவர்களை திரும்ப வீட்டிற்குப்போகவைத்துவிட்டார்கள்.

“என்ன  எலெக்‌ஷனோ என்னவோ  யாருக்கு வோட்டு  போட்டு என்ன யார் வந்து என்ன கிழிக்கப்போறாங்க?’என்று அலுத்துக்கொண்டே  ஒரு பெரியவர்  சின்னதாய் அரசியல்பேச ஆரம்பிக்க ”உஷ் அதெல்லாம் இப்பபேசக்கூடாது ”என்று போலீஸ்கார இளைஞர் அதட்டினார்.

இன்னொருவர் தன்மகள் முதல்தடவி ஓட்டுப்போட வருவதால்  அதன் விதிமுறைகளைவிளக்கும்போது,”கையில் விரல்ல மசி வைப்பாங்க..ஞாபகம் வச்சிக்கோம்மா கை  கை” என்றார் இரு முறை அவ்வளவுதான்  ஓட்டுச்சாவடி பிரமுகர் ஒருவர் கோபமாய்,”கை கைன்னு சொல்லக்கூடாது இங்க” என்றார்.

‘நல்ல வேளை ‘கால்’சின்னம்  யாரும் வைச்சிக்கல  இல்லேன்னா  க்யூல  அவங்களாலபோன் ‘கால்’அட்டெண்ட் பண்ண முடியாது/  ஒருக்கால்  மரக்கால் என்றெல்லாம்  தமிழில்  சகஜமாய்  தமிழர்கள்  பேசமுடியாது  கால்நடை என்று ஒரு ஆடு மாடைப்பார்த்தா  சொல்லிடமுடியாது. மாதவிப்பந்தல் மேல்.பல்கால்குயிலினங்கள் கூவின   என்று நான்  திருப்பாவைகூட பாடமுடியாது  என்ன சொல்றீங்க?” என்று கண்வரிடம் ஜோக்கடித்தேன் அவர் சீரியஸ் சிகாமணியாய்  சிரமப்பட்டு  தூரத்துமரத்தின் நுனியைப்பார்த்தார்.இப்படித்தான் வீட்டு முல்லைகளின் மணம்  வீட்டில் இருப்பவர்களுக்கு எங்க தெரியுது?:)

அப்புறமா அந்த வைகுண்ட ஏகாதசிக்யூவில் கால் வலிக்க நின்று  ஓட்டுப்போட்டு  வெளியே வந்தோம்.


பிகு..
மோதிரவிரலில் மசி(மை?)  வைத்தார்கள்.சாதாரணமாக ஆள்காட்டிவிரலில்தானே வைப்பார்கள்? அல்லது நான் தான் எல்க்‌ஷனுக்குப்பிறகு மக்களை மறக்கும் அரசியல்வாதி மாதிரி இந்த மை மசி சமாசார்ங்களை மறந்துவிட்டேனா?:)

 

 
 
 

--
 
 

 
 
மேலும் படிக்க... "ஓட்டுப்போட்டாச்சு!"

Wednesday, May 01, 2013

உழைப்பாளிகள்!

 
 
 
 
 
கருப்பு நிறத் தார் உருக கற்சரளை மேல் பரவச்
செருப்பின்றி மேல்நடந்து சாலைப்பணி செய்தபடி
நெருப்புமிழும் கதிரவனின் கனல்வரியைத் தாங்கி நின்று
இருப்பவனைக் காணுங்கால் கண் கலங்கிப் போகிறதே
 
சட்டியிலே கல் அடுக்கி சாரத்தின் மேலேறி
சுட்டெரிக்கும் வெய்யிலிலே சுமையோடு நடந்திட்டுக்
கட்டிடத்தில் வேலை செய்யும் கன்னியரைக் காண்கையிலே
கொட்டும் இமை கூடத்தான் குத்திட்டு நிற்கிறதே
 
 
 
 
ஊற்றுகின்ற வேர்வையிலே உடை முழுதும் நனைந்திடவே
காற்றசைவு கணப்போது கனலோடு வந்திடவே
சேற்றினிலே கால்வைத்து சிந்தையதிலே செலுத்தி
நாற்று நடுகின்றவரைக் கண்டு நா அசைய மறுக்கிறதே
 
ஆலையிலே அனல்வீசும் உலையிலே உழைப்பவரை
காலை முதல் மாலைவரைகழனியிலே உழுபவரை
சாலையிலே வண்டிகளைத் தள்ளிச் செல்பவரை
சோலையிலே நான் நின்று காண நெஞ்சம் குறுகுறுக்கிறதே..
 
மேலும் படிக்க... "உழைப்பாளிகள்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.