Social Icons

Pages

Monday, September 16, 2013

ஓண நினைவுகள்!

 
 
 
காலனியில் எங்கள்   குடும்ப நண்பர்களின் வீட்டில் நவராத்திரி நாட்களுக்கு  குடும்பத்தலைவர்கள்   எங்களோடு  என்னவோ  தூக்கு மேடைக்குச்செல்லும்  கைதிகள்போல சோகமாய் வருவார்கள். நவராத்திரி என்றால் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வீட்டில்  மாலை எங்கள்குடும்பங்கள் கூடி பக்திப்பாடல்கள் பாடிவிட்டு  2ஜி 3ஜி  என பல ஜீக்கள்,கருணாநிதி ஜெயலலிதா  எடியூரப்பா பங்காரப்பா ராஜ்குமார் வரை  என்று ஆண்கள் அரசியல் பேச நாங்க பிசிபேளாபாத் ஆலு பரோட்டாவிலிருந்து ஆனந்தவிகடனில் வந்த கதைகள்,சினிமாவிமர்சனம் வரை எல்லாம்  அலசி   சுண்டல்+ டின்னரை முடித்துக்கொண்டுஇரவு வீடு திரும்புவோம்.
 
சிலவருடங்கள் முன்புஓமனா என்று ஒரு மலையாளப்பெண்  காலனியில் குடிபுகுந்து எங்களுக்கு தோழியானாள். அவள்கணவரும்  எங்கள் கணவர்களுக்கு நண்பரானார். 
 
ஓணத்திருநாள் வருவதால் அன்றைக்கு விருந்துக்கு நாங்கள் எல்லாரும் வரவேண்டுமென ஓமனா கேட்டுக்கொண்டாள்.. ’ கூடிய சீக்கிரமே கணவருக்கு துபாயில் வேறு்  நல்ல வேலைகிடைத்துப்போய்விட இருப்பதால் இந்த ஓணம்  க்ராண்டா செய்றோம் வழக்கத்தைவிட குடும்பமே கூடுகிறது நீங்களும் வாங்க; என்று அழைத்துவிட்டாள்.
 
எங்காவது  எங்களோடு வெளியே ஷாப்பிங்கிற்கு மால் என்று வந்துவிட்டால்  எங்களுக்கு ஏதோ தூரத்து உறவு போல   அதுவும் புடவைக்கடைப்பக்கம்  வந்தா்ல்  போதும்,விரோதிபோல  முகத்தை வைத்துக்கொ்ண்டு ஒரு மூலையில் நிற்கும் எங்கள்  பதிகள்
 
 ஓணம் பண்டிகைக்கு தோழி ஓமனா வீட்டுக்கு  விடிகிறபோதே எழுந்துகொண்டுவி்ட்டார்கள்.பளிச்சென  பட்டுவேட்டி (ஜரிகைபோட்டது)   பட்டு சட்டை கட்டிக்கொண்டு(மச்சினர்கள் கல்யாணத்தின் போதெல்லாம் இதைக்கட்டிக்கொள்ள தோன்றாது என்னவோ பிறந்துவளர்ந்ததே  இங்கிலாந்தில்போல  பேண்ட்டும் இன் செய்த ஷர்ட்டுமாய் போட்டுக்கொண்டு எப்போதோ பம்பாயில் வேலைபார்த்த தோரனையில்  ஹிந்தியில்  பல வார்த்தைகளுடன் சொற்ப தமிழில்  பேசி அலட்டல்மன்னராய் இருக்கும் என் சு பதி(சுபுத்ரமாதிரி சு பதி:)ஓணத்தன்று  மல்லுவாக  மாறி நின்றார். மற்ற    தோழிகளின் கணவர்களும் மலையாளஆ்ண்களாய் அங்கே காணவும் தெரி் ந்துபோனது முதல்நாள் இவர்கள் எல்லாரும்  சலூனுக்கு      திட்டமிட்டு  போன காரணம்  எதற்கு என்று:)
ஓமனாவின் வீட்டில் ஓணத்தன்று அவள் குடும்பமே  கூடி விட்டது..பெண்வாசனை அதிகம் தெரிந்தது!
 
 ‘நாட்டிலிருந்தால் இப்படித்தான்  அத்தரைபேரும்  கூடிக்கொண்டாடுவோம் இப்போள்  இவ்விட பெங்கலூரில் ஆளுக்கொரு திசைல இருக்கோம்  ஓணம் சமயம் எங்க குடும்பமே  கூடிக்களிப்போம் டான்சும் உண்டாக்கும்” என்று ஓமனா  புத்தாண்டுதினம் நடந்த சந்திப்பில் சொல்லிவிட்டாள்..
 
குடும்பப்பொறுப்புகளில் ஆண்களின் பங்கு என்பதைப்பற்றிக்  காட்டுக்கத்திப்  பட்டிமன்றம்  : நடத்தும் போதெல்லாம் கேட்காத எங் கள் பதிகளின் செவிகள்  ஓமனா முணுமுணுத்ததை கேட்டுவிட்டதுபோலும்!  உடனேயே,’உங்க குடும்பமா எதுக்குப்பிரிக்கறீங்க மேடம் எங்க குடும்பமும் அதுதானே.?”   என.எது என்னுதோ அது உன்னுது எது உன்னுதோ அது என்னுது  என்கி்ற விளம்பரப்பாடல்  போல  சுதாவின் கணவர் ஜோக்கடித்தார்.
 
 
மனுஷனுக்கு வீட்டைவிட்டுவெளியே வந்தா    ஜோக்கா  கொட்டுமே-----  சுதா பல்லைக்கடித்தாள்.
 
ஆண்கள் உலகில் இதெல்லாம் சகஜம்டி என்று  ஜனனி அவளை சமாதனப்படுத்தினாள்.
 
மலையாள மக்களைகுஷி்ப்படுத்தவோ என்னவோ”உங்க கேரளா  தமிழுக்கு எவ்வளவு  கொடுத்திருக்கு!!  ஆஹா  அன்று பத்மினி ராகினி  இன்றுஅசின், கோபிகா, நயன்தாரா, பாவனா, மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர்னு தமிழுக்கு அவங்க தமிழ் உலகுக்குஆற்றியுள்ள சேவைகள் கொஞ்சமா நஞ்சமா?’ என்று  சுரேஷ் ஆரம்பித்தார்.
 
ஆஹா  ஒரு ஆம்பிளை  பெயர் நினைவிருக்கா பாரேன் இவங்களுக்கு?  கிசுகிசுத்தாள் விஜி.
 
ஓம்னா வீட்டு வாசல்  நிறைய  பூக்கோலம் பார்த்ததும்  ” ஆஹா  பூலோகமே இங்கு  வந்ததோ?” என்று கவிதை பாடாதகுறையாக  வியக்கவும்  விஜி”போதுமே  கிருஷ்ண ஜெயந்திக்கு மாஞ்சிமாஞ்சி  குட்டிக்குட்டிக்கால் எல்ல்லாம் போட்டு  வீட்டில்  ஒருத்தியாய்  அத்தனையும் செய்வேன் அப்போ  கண்டுக்கிட்டதே இல்லையே நீங்க இப்ப என்ன  பூக்கோலம் பார்த்து பூ  லோகம்னு  ரொம்பத்தான்  வழியல்?”  என்றாள்.
 
.
 
 
சுரேஷை  மிஞ்சினார்  ஆதித்யா  ///ஓமனாவின் ஒன்றுவிட்ட சகோதரிஎன ஒரு இளம்பெண்  கூந்தலை  விரித்து நுனிமுடிச்சிட்டு அதில்  மல்லிகைப்பூ சுற்றிக்கொண்டு மலையாள  பாணி உடையில் குனிந்து கோலம்போடவும், 
 
 கோலம்போடக்குனிகின்றாய்
 கோலம் அழகா
உன்கோலம் அழகா
 
என்று கவிதைஎ ழுத கைதுறுதுறுப்பதாய் ரகசியமாய் நண்பர்களிடம் சொல்ல  கேட்ட  என் தோழி அவர் மனைவி சசிகலா, ’வீட்டில் புது்சாவாங்கி இருக்கற பூந்துடைப்பமும் அழகு ’ என்றாள்  சிரித்தபடி.
 
ஆக  நாங்கள் எல்லாம் தமிழ்ப்பெண்களாய்  பட்டுசேலை பின்னிய தலை என்று அவர்கள் வீட்டில் நுழைய எங்கள் பதிகள்  வேஷ்டி பட்டுஷர்ட்டுடன் நெற்றியில் சின்ன சந்தனப்பொட்டையும் தீற்றிக்கொண்டு  தொடந்தனர்.
 
உள்ளே யேசுதாஸ் பாடிக்கொண்டிருந்தார்  ஏஷியா நெட்டில்
 
 யேசுதாஸ் பாட்டுக்கு சில மோகினிகளே மோகினி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
 
 ”அடடா! கண் கொள்ளா காட்சி! என்ன நெளிவு சுளிவு! என்ன லாவகம்!!”
வழக்கம் போல ஆண்களில்  ஒரு குரல்  பாட்டை  ரசித்தமாதிரி தெரியவில்லை.
 
 
ஏஷியா நெட்  சானல்தான்  பெஸ்ட் என்ப்துபோல  பேசிவிட்டு  ஓமனாவின் குடும்பத்தார் சிலரோடு  எங்கள்  பதிகள்  அரைகுறை்மலையாளத்தில்பேச ஆரம்பித்தனர்.
 
என்ன ஆச்சு இவங்களுக்கு என நாங்கள்: கிண்டலாய்  கேட்டு சிரித்தபடி  ஹாலில் அமர்ந்தோம்.
 
ஓ ?
ஒ!
 
என் கணவர் சம்மந்தமே  இல்லாமல் மைக்கேல் மதனகாமராஜன் பார்த்த பாதிப்பில்  குரல்கொடுத்தார்,.
 
‘இவள் என் கசின்  பேரு வனஜை  பாலக்கோட்டில்  இருக்கா  தமிழ்  பேசும் உங்களாட்டம்” என்றாள் ஓமனா.
 
பார்க்க   வனஜா சற்று துறுதுறுப்பாக இருந்தாள்..  அவள் நகர்ந்தும் ஹாலில்  ஜொள் பெருகியதால் நாங்கள்”   நினைவில் வச்சிக்குங்க ரெண்டு வளர்ந்த  குழந்தைங்க” என்றோம்
 
“அட  ரெண்டு வளர்ந்த குழந்தைக்கு வனஜை அம்மையோ   ஓ நம்ப முடியவில்லை வில்லை வில்லை” என்றார் ஆதித்யா.
 
“ அட  ரெண்டு வளர்ந்த குழந்தைன்னு சொன்னது  உங்களுக்கெல்லாம்...” என்றேன் நான்.
 
 
கைகொட்டுக்களி  நடனத்தைப்பார்க்கும் போது ,” ஆஹா எத்தனை எளிமையான உடை  மலையாள மங்கயைர்க்கு!
பண்டிகைனாலும் நம்மவீட்டு மாதர்குல திலகங்கள் போல பத்தாயிரத்துக்கு பட்டுபுடவை வாங்காம, சிம்பிளா சந்தன கலரில் பொன் பார்டர் போட்டு அவங்க பாரம்பரிய புடவையில கலக்குறாங்களே””என்று  தங்களுக்குள் பேசிக்கொள்வதாய் நினைத்துக்கொண்டு
 காமிராவுடனிருந்த  எங்கள் கணவர்கள் அனைவருமே  பிசி ஸ்ரீராம் சந்தோஷ் சிவன் பாலும்மகேந்திரா, கேவி ஆன்ந்த ஆனார்கள்.. பத்திரிகைக்குக்கொடுக்க என்னை நல்லபோஸ்ல நல்லதாபோட்டோ எடுங்கன்னு நான் கரடியா கத்தினதை நினைத்துக்கொண்டேன்::)
 
 கை கொட்டுக்களிமுடிந்ததும்,’ எத்தரை சுந்தரமாயிட்டு?” என்று  தைரியமாய் ,மலையாளத்தில் பேச ஆரம்பித்தார்  ஆதித்யா.
 
”சூர்யா டிவில  நயனதாரா  க்ளோபல்வாமிங் பத்தி  ரொம்ப சிந்திச்சிப்பேசாறாங்க  அதைவைங்க ”என்று  விரட்டினார் சுரேஷ்
 
பேசறதைக்கேட்கவா அல்லது பார்க்கவா என்று ஜனனி சீண்டினாள்..
 
 
”க்ளோபால் வாமிங்! இட்ஸ்  சீரியஸ் யு  நோ?ஏந்தான் இப்படி அவேர்னெ்ஸ்சே இல்லாம் இருக்கீங்களோ நம்ம லேடீஸ்லாம்    சரி சரி  கமான் யார் லெட்ஸ் வாட்ச்  சூர்யா சானல்”
 
’ஓ’  என்றேன் நான் நமுட்டு சிரிப்பு சிரித்தபடி
 
 எசியா நெட்ல   மோகன்லால்  மமுட்டி ப்ருத்விராஜ் இன்னும் சில  ஹாண்ட்சம் ஆண்கள் வராங்களாம்,நாங்க கேக்கணுமே என்ற  எங்கள்  குரல்களை ’  கடலினக்கர போனோரே காணாப்போயினபோனோரே  என்ற  பழைய பாடலை  தாளம்போட்டு ரொம்ப அனுபவித்துத்தப்பும் தவறுமாய் பாடிய அவர்களின் குரல்கள்  அமுக்கிவிட்டுவிட்டன:)
 
ஓமனாவின்  சமையல்  அட்டகாசமாய் இருந்தது  அதிலும்ஓணப்பண்டிகையின் முக்கிய அம்சமே ஓண சத்ய என்று அழைக்கப்படும் தடபுடல் ஓண விருந்தாகும் என்று அதைப்பற்றி அவள்  விவரித்தாள்.
 
. உண்டறியணும் ஓணம் என்று கேரளாவில் கூறுவர். தலைவாழை இலைபோட்டு 15க்கும் மேற்பட்ட கூட்டுக்கறிகளுடன் விருந்து படைக்கப்படும். ஓண விருந்து பரிமாறுவதிலும், சாப்பிடுவதிலும் வழிமுறைகள் வகுத்துள்ளனர். தலைவாழை இலையில்தான் ஓண விருந்து பரிமாறப்படும். காரம், புளி, உப்பு, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு அடங்கிய அறுசுவைகளும் ஓண விருந்தில் இடம்பெறும். அவியல், சாம்பார், பருப்பு, எரிசேரி ஆகியவையும், 4 வகையான உப்பு இடப்பட்ட கறிகளும் உண்டு. தரையில் பாய் விரித்து அமர்ந்துதான் உண்ண வேண்டும். இலையில் இடது ஓரத்தில் முதலில் அப்பளம், அதற்கு மேல் பழம், அப்பளத்தின் வலது புறம் சிறிது உப்பு வைக்க வேண்டும்.
இலையின் இடது புறத்தின் மேல்பகுதியில் நேந்திரங்காய் உப்பேரியும், அதற்கு கீழே சர்க்கரை வரட்டியும், இடது புறத்தின் மேல் உப்பில் இட்ட கறிகளான எலுமிச்சை, மாங்காய், இஞ்சிக்கறி பின்னர் ஓலன் எரிசேரி, அவியல் கிச்சடி, பச்சடி, துவரன் ஆகியவை பரிமாறிய பின்னர் கடைசியில் சாதம் பரிமாறப்படும். இதற்கு பிறகுதான் பருப்பு, சாம்பார், காளன், பாயாசம் அடுத்தடுத்து பரிமாறப்படும். முதலில் சாதத்துடன் பருப்பும், நெய்யும் அப்பளமும் சேர்த்து சாப்பிட்ட பின்னர், சாம்பார் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாயாசமும், அடை பிரதமன், கடலை பிரதமன், பருப்பு பாயாசம், அரிசி பாயாசம், பாலடை என்று பல வகைகள் உண்டு. பாயாசத்திற்கு பின்னர் ரசத்துடன் சிறிது சாதம். இந்த ரசம் சேர்த்து சாப்பிடும் வழக்கம் தென் கேரள பகுதியில் மட்டுமே காணப்படும். இதன் பிறகு கடைசியாக சிறிது மோருடன் சாதம் சாப்பிடுவதுடன் நிறைவு பெறுகிறது. வட கேரள பகுதிகளில் ஓண சத்யவுக்கு முன்பே இலையில் பழம், அப்பளம், நெய், சீனி ஆகியவற்றை கலந்து பிசைந்து சாப்பிடுவர். அதன் பின்னர் ஓண சத்ய உண்பர். கொல்லத்தில் பைன் ஆப்பிள் கொண்டு தயார் செய்யப்பட்ட சாராயம் கண்டிப்பாக இருக்கும்(எங்களுக்கு இல்லை சத்தியம்:)). மரச்சீனி கிழங்கும் வைப்பது
 
 ஒமனாவின் ஒன்றுவிட்ட தங்கை அசப்பில் மீ  ரா ஜாஸ்மின்போலதுறுதுறுவென்றிருந்தாள்.. அவள்  சுரேஷுடன் வந்த தம்பியைப்பார்த்து ,’நீங்க அப்படியே ப்ரித்விராஜ்போல இருக்கீங" எனப்புகழ்ந்துவிட்டாள்.
 
ஆஹா...   இந்த மொழி  சத்தம்போ்டாதே படத்தில நடிச்ச ப்ருத்விராஜையா சொல்றீங்க
நம்பமுடியாமல் கேட்டார்  சுரேஷ்.
 
அதே அதே என்று அந்தப்பெண் அநியாயத்துக்கு வெட்கப்பட்டாள்
 
மொழி ஜாதி  மாறினால் என்ன  நாமெல்லாம் இப்போ ஒரே குடும்பம் இந்த மீரா  ஜாஸ்மினை நம்மப்ருத்விராஜுக்கு  முடிச்சால் என்ன?
 
 
சுரேஷ் ஏதோ கணக்குபோட ஆரம்பித்தார்.
 
சாப்பாடு ஆனதும்மறுபடி அந்தமீராஜாஸ்மின் சுரேஷின் தம்பியை’ எத்தரை ஸ்மார்ட்டாயிட்டு?” என்றோஎன்னவோ மலையாளத்தில் புகழ்ந்தாள்.
 
ஆஹா  காதல் வந்திருச்சா?
 
சுரேஷ் என் கணவரிடம்,”பௌர்ணமிபோல  என்ன ஒரு பளிச்  லுக்!அந்தப்பெண் நம்மகுடும்பத்துக்கு வந்தா எவ்வளவு  நல்லாயிருக்கும் சொல்லுங்க ?  ஆனாலும்பாருங்க  நமக்கும் வாய்ச்சீருக்கே..?”  என்று முனகினார்  அவர் மனைவி,”்ஹலோ மாசத்துல ஒரு்நாள்தான் பௌர்ணமி     பளிச் லுக்காம் பளிச் லுக்!  அமாவாசைக்குபோனாலும்வானத்தைகைவிடாம மறுபடி வளர்ந்திட்டே வர்ர நிலாத்துண்டங்கள்  நாங்க!!   பௌர்ணமி ஒரு நா வந்து தலையகாமிச்சிட்டுப் போய்டும்  இளமையும் நில்லா யாக்கையும் நில்லா...  அடிகளார் பாட்டு்  தெர்யுமில்ல?”!
 
ஆனாலும் சுரேஷின் தம்பியைவிடவும் சுரேஷ்  இப்படி ஒரு வாய்ப்பைதவறவிடக்கூடதென நினைத்தார்போலும்
 
 நல்ல நாள் இன்னிக்கு ஓணம் அதிலும் திருவோணம் ஆஹா  என்றார்  புதிதாய் கண்டுபிடித்த மாதிரி!
 
மதியம் மணி 3 ஆனதும்விடைபெற்றுக்கொண்டோம் .
 
 அப்போது மீரா ஜாஸ்மின் சுரேஷிடம்,” உங்கப்ரதர் ரொம்ப ஸ்வீட்  ...  ஐ லைக் ஹிம் சோ மச்”. என்றாள்
 
இதான் சமயம் நழுவவிடாதே சுரேஷ்  உன் தம்பியும்  மௌனமா இருக்கான் மௌனம் சம்மதம்  .. மனசிலாயி? என்று
 
ஆதித்யன்  உசுப்பினார்
 
 
சுரேஷ்  ஓமனாவிடம் சென்று,” உங்க கசின்  அதான் மீரா  ஜாஸ்மின் மாதிரி  இருக்காங்களே  - அவங்க---?” என இழுத்தார்.
 
“ ஆமாம்.. அவ  வாயாடி ஏதும் பேசிட்டாளா எசகுபிசகா?  ஏய்  இவ்விட  வா”
என்று அவளை அழைத்துவிட்டாள்.அதற்குள் அவள் ஓ்டி வந்தபடி,” சேச்சி...  சுரேஷ் அங்கிள்  தம்பிய  நீங்க பார்த்தீங்களா?  அப்படியே  ப்ருத்விராஜ் போல  இருக்கார் இல்லையா?” என்றாள்
 
“ஓ ஆமா  அப்படியே  அவர்தான்  அதான் சேட்டன் நினைவு வந்துதா உனக்கு?  அது ஒண்ணுமில்ல சுரேஷ்  இவள் காலேஜுக்கு  திருச்சூர்க்கு  விழாக்கு ஒருவாட்டி ப்ருத்விராஜ் வந்தாராம்  இவளைப்பார்த்து  ஏதோ சொன்னாராம்  அன்னிலிருந்து  இவள் அவரை சேட்டன் என்பாள்.. இப்போ அவர் மாதிரி இருக்குற உங்க தம்பியை  தனக்கு சேட்டன்னு சொல்றா”
 
சேட்டன்?
 
என்ன அர்த்தம்?
 
திரும்ப வீடு் வரும்போது சுரேஷ் கேட்டார்.
 
சேட்டன்னா அழகன்னு  அர்த்தம். என்றோம் நாங்கள்  வேண்டுமென்றே.
 
 
ஓ?
 
என்ற சுரேஷைப்பார்த்து  எல்லோரும் சிரித்துவிட்டோம்!!! 
 
 இப்படியாக எங்களின் ஓணத்திருநாள் அமைந்தது.
 
 
 
 
 
 




--
 
 
மேலும் படிக்க... "ஓண நினைவுகள்!"

Monday, September 09, 2013

தோள் கண்டார் தோளே கண்டார்!




அறத்தை  நிலைநிறுத்தத்தோன்றிய இரு காப்பியங்கள்  ராமாயணமும் மகாபாரதமும். காலம் பல கடந்தும் அவைகள்  இன்றும் நம்மிடையே  பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.
 
விஞ்ஞான முன்னேற்றத்தில் உலகமே ஒரு சிறு கருவிக்குள் கைக்கு அடக்கமாக வந்துவிட்டது.இளமையில் செல் (cell)என்றாகிவிட்ட இந்த நவீன யுகத்தில் தர்மங்களும் நியாயங்களும் கூட  மெல்ல மெல்ல சென்றுகொண்டுதான் இருக்கின்றன.ஆனாலும்  கற்றறிந்த சான்றோர்கள் அவற்றை  இழுத்துப்பிடித்து வைத்திருக்கின்றனர். அறம் நெறி  நீதி நியாயம் என்பதை வலியுறுத்தும் பெருமைகளை  கூறிவருகின்றனர்.
 
ராமாயணத்தைக்கம்பன் தேர்ந்தெடுத்தமைக்குக்காரணம் தன் திறமையை
முற்றிலும் வெளிப்படுத்துவதற்காகத்தான் என்று  சொல்லுவார்கள்.
இந்தக்கதை காலத்தினால் மட்டும் பெரிதல்ல இராமன் பிறப்பதற்கு முன்னால் தொடங்கும் கதை. இராமன் முடி சூட்டி தன்னுடன் இருந்தவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பும்வரைஎன்று வடக்கே இருக்கும் கோசலநாட்டிலிருந்து ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள இலங்கைவரை நீடிக்கிறது.
 
இராமாயணம் போன்ற  ஒரு காப்பியத்தை கம்பன் பாடப்புகும்போது
பல பாத்திரங்களைப்பற்றி யும் பல தேசங்களைப்பற்றியும்,பல்வேறுபட்ட மனிதர்களைப்பற்றியும் அரக்கர்களைப்பற்றியும்மட்டுமல்ல பலவிலங்குகள் பறவைகள்  பற்றியு்ம்  விவரிக்க வேண்டி உள்ளது.
 
அத்தனையையும்  கம்பன்  விளக்குகிறான்.
 
அவன் காட்டும் திறமைக்கூறுகளையும் அவை மிளிரும் கதைப்பகுதிகளையும்  கூறவேண்டுமானால் அதற்கே பல நூல்கள் எழுதவேண்டும் என்பார்முன்னாள்  நீதிபதி திரு இஸ்மாயில் அவர்கள்.
 
பொழுதுபோக்கிற்காக சொல்லப்படும் கதைகள் அல்ல  இரு காப்பியங்களும்நிரந்தரமாக என்றும் அழியாத  ஓர் உண்மையை  ஒரு தர்மத்தை வலியுறுத்துவதற்காகவே இந்தக்கதைகள் 
தோன்றியிருக்கின்றன.
 
தனது முதல்பாடலில் கம்பர் ‘

உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,


அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
அன்னவர்க்கே சரண் நாங்களே"
என்று ஆரம்பிக்கிறார்! 
 
 ஆண்டவன் சுவாமிகளை ஒருமுறை தரிசி்க்க சென்றபோது  ஒருவர்  கம்பன் ஏன் இப்படி  தாம் உள ஆக்கலும் என்றார் எனக்கேட்க அதற்கு வடமொழியிலும் தமிழிலும் மிகப்புலமை நிறைந்த  அந்தஆச்சாரியசுவாமிகள் சொன்னார்.
 
**” இருப்பதை ஆக்கினால் எப்படி ஜகத் காரணத்வம் வரும்? ஸூக்ஷ்ம சிதசித்விசிஷ்டனானவன்   ஸ்தூல சித சித் விசிஷ்டனாக மாறுகிறான்” என்றார்.(இதன் அர்த்தம் கடைசியில்)
 
வாழ்வியலை அவன் கூறுவது இருக்கட்டு்ம் தேசம் பற்றி கூறுவது இருக்கட்டும்
 
பெண்ணின் மனநிலையை  அப்பட்டமாக கூறுகிறானே அதைத்தான்  ஒரு பெண்ணாக என்னால்வியக்காமல் இருக்கமுடியவில்லை!
 
 
மிதிலைவீதியில் தேரில்-கவனியுங்கள்-தேரில்தான் இராமன் வருகிறானாம். அவனைப்பார்க்க பேதைமுதல் கடைப்பேரிளம் பெண் வரை  வீதியில் வநதனர் என்று மட்டும் எதிர்கொள் படலத்தின் கடைசிபாடலில்  சொன்னவன்  பிறகு அடுத்து  வரும்உலாவியற்படலத்தில்  மகளிர் அனைவரும்  ராமனைக்காண  மொய்க்கும் விதத்தை   பெண்பாத்திரமாகவே மாறி சொல்கிறான் அல்லது செல்கிறான்!!
 
பார் என்றது பருவம்    என்று ஒரு திரைப்பாடல்கூட உண்டே!
 
.இராமனைக்காண வந்த மகளிரின் தன்மைகளை  ‘தமை வலித்தவன்பாற் செல்லும்உள்ளத்தைப்பிடித்து நாமென்றோருகின் றாரு மொத்தார்’என்கிறார். ராமனைக்காண அவர்களுக்கு முன் அவர்களின் உள்ளம்  ஓடுகிறதாம்  அதைப்பிடிக்க ஓடுகiிறார்களாம்!
 
 
17பாடல்களில்  கம்பனின் கைவண்ணத்தில் அந்தமகளிரின்  உடல்கோலமும்  உள்ளக்கோலமும் மிளிர்கின்றன!
 
 
கடைசியiில் இப்படி சொல்லி முடிக்கிறார்!
 
 
""தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரோ வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்தன் னானுருவு கண்டாரை யொத்தார்''

__________________________________________________________________________________

**சிதசித்விசிஷ்டம் = சித் + அசித் + விசிஷ்டம்
ஸ்ரீ ராமாநுஜ ஸித்தாந்தம் சித், அசித், ஈச்வரன்
எனும் மூன்று தத்வங்களை ஒப்புக்கொள்கிறது -

சித் - ஜீவன், ஜீவகோடிகள்
அசித் - உயிரற்ற பிரபஞ்சம்
ஈச்வரன் - ஸ்ரீமந்நாராயணன்
இம்மூன்றும் அழிவற்றவை.

பிரளய காலத்தில் அனைத்தும் உருவத்தை
இழந்து நுண்ணிய நிலைபெற்று ஈச்வரனான
நாராயணனிடம் ஒடுங்கும். [அழிவதில்லை]
படைப்பின் போது உருவம் பெற்று தூல
வடிவுடன் கண்ணுக்குப் புலப்படும்.

அதைத்தான் ”ஸூக்ஷ்ம சித் அசித் விசிஷ்டனானவன்
ஸ்தூல சித் அசித் விசிஷ்டனாக மாறுகிறான்” என்று
ஸாதிச்சிருக்கிறார் ஆண்டவன் சுவாமிகள். பர தத்வம் என்றால் மூன்றும் எப்போதும்
பிரிக்க முடியாத வண்ணம் சேர்ந்தே இருக்கும் நிலை.

உலகம் யாவையும்  தாம் உள ஆக்கல் - படைத்தல்
நிலை பெறுத்தல் - காத்தல்
நீக்கல் - அழித்தல்
ஆக முத்தொழில்
 
இப்படி எண்ணற்ற உலகங்களை ஆக்கி, அழிப்பது
அலகிலா விளையாட்டு!
 
(கம்ப  மகா சக்கரை சமுத்திரத்திலிருந்து ஒரு துளி .இன்றைக்கு!)
 
 
மேலும் படிக்க... "தோள் கண்டார் தோளே கண்டார்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.