Social Icons

Pages

Tuesday, October 29, 2013

ரூபனின் தீபாவளிச் சிறப்புக்கவிதை போட்டி.

     




ஒளி காட்டும் வழி!
************************

இருளும் ஒளியும்
 
இணைந்தது வாழ்க்கை!
 
ஒளிமயமான எதிர்காலம்
 
ஒருநாள் வருமென்பதே நம்பிக்கை!
 
ஓலம் கேவல் பெருமூச்சென்றே
 
காலம்  ஓடிக்கொண்டிருக்க
 
கண்முன் கருமை படர்கிறது,
 
எண்ணற்றக்கவலை பிறக்கிறது.
 
விறகாய் எரியும் பண்புகள்,
 
வெறியாய் மீறும் புனிதங்கள்.
 
சிறகைவிரிக்கும்  கழுகுக்கூட்டம்,
 
உறவெனச்சொல்லிப்போடும் ஆட்டம்.
 
கண்கள் முன்னே கறுப்புச்சாயம்
 
காலம் இதனால் மாறிய மாயம்!
 
’பாரதநாடு பழம்பெரும் நாடு
 
நீரதன் புதல்வர் ’என்றான் பாரதி!
 
நேரெதிர்மோதிடும் தீமை இருளை
 
நெஞ்சம் சேர்ந்து விரட்டிடுவோம்
 
நேர்மைப்பாதையில் நடந்திடுவோம்!
 
பாரதநாட்டினில் பிறந்த நமக்கு
 
பந்தம் சொந்தம் மறந்திடுமோ?

வருடம் ஒருநாள்வரும் தீபாவளி
 
வாழ்நாளுக்கான ஆயத்த ஒளி!  
 
ஒன்றிய கைகள் ஏற்றிடும் ஒளியில்
 
ஓடிவிடாதோ  இருள்தடுமாறி?
 
ஒற்றுமைதான் உயர்வென்றானால்
 
ஓங்கிய ஒளிதான் வழிகாட்டாதோ!



 
மேலும் படிக்க... "ரூபனின் தீபாவளிச் சிறப்புக்கவிதை போட்டி."

Thursday, October 24, 2013

திகட்டாததே திவ்யப்பிரபந்தமே!

 
 
 
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்ப்படுத்த
விமலன் விண்ணவர்கோன்  விரையார் பொழிலவேங்கடவன்*
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்* திருக்கமலபாதம் வந்தென் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே.
 
முதல் வரியைப்பாருங்கள் அமலனாம் ஆதிபிரானாம்
 
அவன்அடியார்க்கு ஆட்படுத்த..வேண்டுமாம்
 
//பூதாதி: நிதி: அவய்ய:
 
பூதாநாம் ஆதிகாரணத்வாத் பூதாதி:’ என்பது ஸ்ரீ பகவத் பாதரின் உரை. 
 
 வெறுமனே ஆதி அன்று. பூதங்கள் எல்லாம் சென்று சேரத் துடிக்கும் லட்சியமான ஆதி. அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து விருப்பங்களையும் அளிக்கும் ஆதி. எது இருந்தால் உலக இன்பங்கள் கூட இனிக்குமோ, எது இல்லையென்றால் வேறு எது இருந்தும் இலலமையே மிஞ்சுமோ அப்படிப்பட்ட ஆதி, உண்டான பொருட்களுக்கு இந்த பூதாதி: என்கிறார் ஸ்ரீபராசர பட்டர்.// என்று  விஷ்ணு சஹஸ்ரநாம விளக்கத்தை  அருமையாக  எழுதிவரும் அன்பரின் மடலில் இதை வாசிக்கவும்  ஆதிபிரானைப்பற்றி  இன்று  எழுத ஆரம்பிக்கவும் சரியாக இருக்கிறது!
 
 
ஆண்டவனைப்பாடுமுன் அவன் அடியார்களைப்பாடுகிறார்  வணங்குகிறார் ஆழ்வார் பெருமான்.. அதைதானே அண்ணல் விரும்புவான்?
 
அமலன்  விமலன்  நிமலன் நின்மலன்  என்று  அண்ணலை நான்குமுறை  திருப்பாணாழ்வார் ஏன் அழைக்கிறார்?
 அமலன்..பரிசுத்தமானவன்; குறைகள் அற்றவன்; மேலும் பிறர் குறைகளையும் களைபவன்.

விமலன் - அண்டியவர்களிடம் குற்றம் காண்பது என்ற குறை இல்லாதவன்.

நிமலன் - அடியார்கள் வேண்டினால் தான் உபகாரம் செய்வேன் என்ற குறை இல்லாதவன். எதையும் எதிர்பாராதவன்.

நின்மலன் - அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை "அவர்கள் பேறு பெறுவதற்காக" செய்வதாக நினைக்கும் குறை இல்லாதவன்.
அதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்
 
”என்னையா என்னையா  அரங்கன் அழைத்துவரச்சொன்னான்?” என்று நம்பமுடியாமல் கேட்டு  தலையைத்தூக்கிய ஆழ்வார்பெருமானுக்கு  மலையப்பன்  கண்முன் வந்துவிட்டான்.உயரேஇருப்பவன் அவந்தானே ?

அவனைத்துதித்து  முடிக்கவும்அரங்கனின்  பாதம் விழிகளின் வசம்  அங்கு வாசம்!
ஆதிபிரானை வேங்கடவனை முன்வைத்து அரங்கனை  பாதம்  தொழுகிறார் திருப்பாணாழ்வார்.

அரங்கனின் சந்நிதிக்குள்  நுழையுமுன்பாக வலப்புறம்  வேங்கடவனின்    சித்திரம்  காட்சி அளிக்கும்
 
(என் குருவின் அன்பு ஆணைப்படி   இன்றுமுதல் இந்தத்தலைப்பில்  ஆழ்வார்களை  அன்போடு   மேலும் மேலும் ஆராதிக்க அரங்கன்  அருளவேண்டும்)



--
 
 
மேலும் படிக்க... "திகட்டாததே திவ்யப்பிரபந்தமே!"

Monday, October 14, 2013

சக்திவருகிறாள் சக்திவருகிறாள்!

 
 
 
 
சக்திவருகிறாள் சக்திவருகிறாள்
முக்தியதை நமக்களித்திடவே பரா
சக்தி  வருகிறாள் சக்தி வருகிறாள்
 
கூறுவோம் அவள்பேரை  காலைமாலை இடை
யூறெல்லாம் தேடிப்போகுமிடம் பாலை
 
யாதுமாகித்தான்  நிற்பவள் அறிவாள்  நம்துன்பம்
ஏதும் இல்லாமல் அதை அழித்துச் செறிவாள்
 
 ஆலம்குடித்தவன் ஆயுள் வளர்த்தவள் மகாசக்தி அவள்
சீலம் மிக தந்து சிந்தையைவளர்க்கும்  ஆதிபராசக்தி!
 
எங்கும் எதிலும்  வெற்றியே பெற்றிட  வேண்டிவணங்கிடுவோம்
மங்களம்பாடியே  அன்னை திருப்பாதம் பணிந்திடுவோம்!
மேலும் படிக்க... "சக்திவருகிறாள் சக்திவருகிறாள்!"

Sunday, October 13, 2013

ஆதலினால் வேண்டுகின்றேனே!

கமலமே  உந்தன் வெண்ணிறமே
அமரவே  என்  உள்ளமே
உயருமே  உவகை கொள்ளுமே!

வீணையே உன் வடிவு விந்தையே
ஆணையாய்  உன் ஒலியிலே
இருப்பவள் தன்னையே
அருள்தரச்சொல்லுவையே!

கவிதை  வடிக்கும் பாவலரே
தவிக்குமெனக்கு அவள்தங்கும்
உள்ளமதை தாருமே!

நான்மறையே நல் வேதமே
உன் உள்செல்ல வழிதாயே(ன்)
ஒளிர்நின்றிருக்கும் ஒரு மகளை
தெளிவுற யான்நோக்கவே!

கருணை வாசகமே
அ்ருந்தவம் செயும் முனிவாழுமிடம்
எனைக்கடத்தே(ன்) கலைமகள்
தனைக்காண தயை செய்யே(ன்)!

 தீம்குரல் இசைக்கும் மாதே
இம்மாதுக்கும்  உன் பாட்டை அருளே(ன்)
மழலை மக்களே உங்கள் பேச்சினில்
வாழும் அவளை க்காணவையுங்களே(ன்)!

கீதம் பாடும் குயிலின் குரலே
கிளியின் நாவே! தேடிதன்
இருப்பிடம்  எனவந்த இனியவளைக்
கருத்துடனே தான்காட்டுங்களேன்

குலவு சித்திரமே கோபுரமே கோயிலே
புலவன் பாரதி சொன்னானே
ஈதனைத்திலும் எழிலிடை உற்றாளேயென்று
ஆதலினால் வேண்டுகிறேனே!

 
மேலும் படிக்க... "ஆதலினால் வேண்டுகின்றேனே!"

Saturday, October 12, 2013

கலைவாணி அருளாலே.....

 
 
 
 
 
கற்ற கல்வி கூட வரும்
கலைவாணி அருளாலே
சிலைபோலஞானம் உறுதி பெறும்
 
அடியெடுத்துப்பாடுங்கால்
முடித்துவைக்க துணைபுரிவாள்
 
எதுகையொடு மோனையும்
அதுவதுவாய் பொருந்திவரும்
பாக்கள் எனும் பூக்கள் விரிய
ஆக்கசக்தி தந்து  ஊக்குவிப்பாள்
வெண்பூவில் வீற்றிருக்கும் தெய்வப்
பெண்பூவின் அருளிருந்தால்
புலமையது புகுந்துகொள்ளும்
அளவற்ற புகழ் தேடிவரும்
மேலும் படிக்க... "கலைவாணி அருளாலே....."

Friday, October 11, 2013

வாணி வரம் தருவாய் நீ!


 
 
 
வாணி வரம்  தருவாய் நீ
காணி நிலம் கேட்ட கவிஞனின்
நாவில் நர்த்தனம் செய்த தேவி நீ
 
கல்விக்கு அதிபதி கருணைக்கடலும் நீ
செல்வமாய் உன் அருளிருப்பின்
கொள்ளூமோ பழவினைதான்?
 
பாமரனாயிருந்தவனுக்குப்
பாட்டுக்கனிகுலுங்கும்
பா  மரமாக்கிவைத்த பாரதி!
 
 
அறிவைப்பெருக்கும் அருவி நீ
செறிந்த ஞானம்தரும் செல்வி நீ
உரிய நேரத்திலே உயரக்கொண்டுசென்று
அரிய புகழ் அளிக்கும் சரஸ்வதி !
 
மேலும் படிக்க... "வாணி வரம் தருவாய் நீ!"

Thursday, October 10, 2013

கனா கண்டாளின் கழல் போற்றி!



நிலமங்கைக்கு
 நீண்டநாள் ஆசை
பொறுமையின் சிகரத்திற்கு
 பூமியில் செய்யவேண்டுமாம்
பூவண்ணனுக்குப்பூசை
அண்ணலின்  ஒரு தாரம்
நிலமகள் அவதாரம்
ஜனகனுக்கு சீதை
அண்ணல்புகழ்பாடும்
 ஆழ்வாருக்கு கோதை
நிலமகள் என்னும் தையல்
துளசிதளத்துப்புதையல்
சூடிக்கொடுத்தாள் பூமாலை
பாடிக்கொடுத்தாள் பாமாலை
 
 
கோதையெனப்பெயர்பெற்றாள்
திருப்பாவையெனும்
வேத சாரமதைத்தந்தாள்
மானிடர்க்கென வாழ்கிலேன்
என விரதம் பூண்டாள்
மாலவனையே கரம் பற்றக்
கனா கண்டாள் ஆண்டாள்
அரங்கனை மட்டுமா
அன்பர்மனத்தையும்  ஆண்டாள்!
மேலும் படிக்க... "கனா கண்டாளின் கழல் போற்றி!"

Wednesday, October 09, 2013

பொன் மகள் வந்தாள்!

 
 
 
எனதுனதென்பதெலாம் கனகமகள்
தனது திருவடியினில்சரணமென
மனமதுவும் நினைத்துமிக நெகிழ்ந்துவிட
கணப்பொழுதில் கரைந்துவிடும்
தினமுமருள் சேர்ந்துவரும்
மாதவனின்சக்தியவ்ள்
பாதமதைப்பணியுங்கால்
பாதகங்கள் பறந்துவிடும்
சேதமதுவாழ்க்கையிலே
 சேராது  தடுத்துவிடும்
கற்பகமே கனியமுதே
கண்டோர்கள் கையெடுக்கும்
 சிற்ப வடிவழகே
பொற்புடைய பொன்மகளைப்
போற்றிப்பரவிநின்றால்
நிற்காது துன்பத்தீ தூய
நீராகும் அவளாலே!
மேலும் படிக்க... "பொன் மகள் வந்தாள்!"

Tuesday, October 08, 2013

படிதாண்டா பத்தினி!

to தமிழ், vallamai, மின்தமிழ், தமிழ்
 
 
சீரார் மதில்கள் சூழ் திருவரங்க மாநகரில்
காரார்ந்த மேனியனின் கன்னல் கண்மணியை
வேரதைவாழ்த்தும் விருட்சமாய் வாழ்த்துவேன்
சீரதாய் தமிழை என் சிந்தையிலே வைத்தவளை வாழ்த்துவேன்!
 
. .தேரெழுந்தூர் பெற்ற தமிழ்ச்செல்வமது
பாரெல்லாம் புகழ்கின்ற  ராமகாதைதன்னை
அரங்கேற்றம் செய்திடவே அலைந்திட்டபோது
அரங்கநகர் அன்னை தன் எதிரிலேயே அமரவைத்து
கரங்கொண்டு ஆசிசெய்தாள் கம்பனுக்கு நரசிம்மமும்
சிரக்கம்பம்செய்து  சிரித்து ஆமோதித்தார்
படிதாண்டாபத்தினி !அவள் பாதம் பற்று நீ!
 
மேலும் படிக்க... "படிதாண்டா பத்தினி!"

Monday, October 07, 2013

உமையவளோ உண்மைப்பரம்பொருளோ!





உமையவளோ உண்மைப்பரம்பொருளோ
எமைக்காக்கும் சமயபுரத்தவளோ
உக்கிரம் கொண்டவளோ  உலகில் நிறைந்திருக்கும்
வக்கிரமனத்தோரின் வலிமையை அழிப்பவளோ
சக்கரசங்கக்கரத்தானின் சகோதரியோ   சகலகலாவல்லியோ
எக்கரம் ஏந்தி நிற்பினும்  அருள்பிச்சையை  ஈந்திடும் எம் தாயோ?
 
 
மாவிளக்கேற்றிவைப்போர் வாழ்வில் மனையிலே வளம் வைப்பவளோ
பாவிளக்கேற்றிவைத்தால்  பாழும் இருள் அகற்றி ஞானத்
தூவிளக்கேற்றிவைத்து துயரெனும் இருட்டைத்துரத்து்பவளோ
காலம் முழுதும் நம்மைக்காப்பவளோ காவலாய் இருப்பவளோ
ஞாலம் அனைத்திற்கும் மூலமோ
 ஞானமின்றி நான் இன்னும் புலம்புவதோ?!
மேலும் படிக்க... "உமையவளோ உண்மைப்பரம்பொருளோ!"

Sunday, October 06, 2013

நம் அன்னை மீனாட்சி!

 
 

 
 
 
வாராத  கல்விவரும் வளர்பிறைபோல் பொருளும் வரும்
கூராகும் புத்தியும் நல்லோர் கூட்டமும் சேர்ந்துவரும்
யாராலும் பயமில்லை நம் அன்னை மீனாட்சிதன்
பாதார விந்தங்களை ப்பற்றிப்பணிவோர்க்கு என்றும்!
மேலும் படிக்க... "நம் அன்னை மீனாட்சி!"

Saturday, October 05, 2013

வானம் சக்தி ஆழ்கடலும் சக்தி!

எங்கெங்குகாணினும் சக்தியடா!
என்றவன் எங்கள்பாரதியடா!
அங்கங்கே அவன்கண்ட ஓவியமே
தங்கக்கவிதையாய் தரணியில் நின்றதுவே!
 
சக்திதனை துணையாக்கிக்கொள்வான்
பக்திப்பாமாலை பலபடைப்பான்
 
திக்கெட்டும் வெற்றிக்கொடிகட்டென்பான்
தக்கத்திமியென்றே குதிப்பான்!
 
சக்திக்கென்றால் அவன் எழுதுகோலும்
திக்குமுக்காடித்தான்போகும்!
 
வானம் சக்தி ஆழ்கடலும் சக்தி
கானமயிலும் சக்தி மோனத்தவமும் சக்தி
யானை சக்தி சிறுபூனை சக்தி
பார்க்கும் பொருளெல்லாம் சக்தி
களிப்பில் கூத்தாடி நிற்கும்
கவிஞனுக்கே அவள்மீது பக்தி
மேலும் படிக்க... "வானம் சக்தி ஆழ்கடலும் சக்தி!"

Friday, October 04, 2013

சக்தி ரதம்.

சென்ற ஆண்டி ல்இதே  மஹாளய அமாவாசை தினம் ஆரம்பித்து  நவராத்திரியின் ஒன்பது நாட்களில்  அன்னைமீது பாடல்கள் எழுத அவள்  அருள அது இனிதாய் நடந்தது இ்ந்த ஆண்டும்  அவள் தாள் வணங்கி சக்தி ரதம்  என தலைப்பிட்டு தினம் ஒரு கவிதையாக  வழங்க எண்ணம்   எண்ணிய முடிதல் வேண்டும்!

காப்பு
 
ஆனைமுகங்கொண்ட ஞான முதலோனே
பானை வயிற்றுக்குள்ளே பாரைக்காப்போனே
ஞானமேதுமின்றிலும் பாடமுனைகின்றேன்
தேனாய்ப் பெருகிடவே  தேவே அருள்வீரே!



-
_____________________________________________

 நெல்லுக்குள் மணியாக இருக்கின்றாள் -சக்தி
நீருக்குள் சுவையாக  இனிக்கின்றாள்-அவள்
பண்ணுக்குள்பாட்டாக இசைக்கின்றாள்-இசைப்
பாட்டுக்கு யாழாக ஒலிக்கின்றாள்
 
சொல்லுக்குப்பொருளாக திகழ்கின்றாள்-சக்தி
சோர்வுக்குத் தெம்பைத் தருகின்றாள்-அவள்
கற்பகத்தருவெனக் கொடுக்கின்றாள்-கரு
காப்பதைப் பணியாகக் கொள்கின்றாள்.
 
பேரொளியின் ஜோதியாய் நிற்கின்றாள் -சக்தி
பேர்தனிலே வலிமை சேர்க்கின்றாள் அவள்
கார்வண்ணக்காளியாய் சிரிக்கின்றாள் -எல்லைக்
காவல்தெய்வமாயும் காக்கின்றாள்!
___________________
நவராத்திரி குறிப்பு...
 
உடுப்பிகிருஷ்ணன்  கோவிலில் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் கிருஷ்ணருக்கு புடவை அணிவித்து அலங்கரிப்பார்கள் இவைகள் மைசூர் மகராஜா வழங்கினார் என்று சொல்லப்படுகிறது.
. .
மேலும் படிக்க... "சக்தி ரதம்."
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.