Social Icons

Pages

Friday, October 15, 2010

காதல்ரோபோ(சவால் சிறுகதைப்போட்டி)



”எப்படிடா மச்சான் இப்படி ஒரு காரியம் செய்தே! சூப்பர்டா! நீ ஒரு ரோபோடிக் எஞ்சினீயர்னு தெரியும், அமெரிக்கால பஃபல்லொ
பல்கலைக் கழகத்துல ரோபோ டெக்னாலஜி படிச்சேன்னும் தெரியும் ஆனா இந்தியா வந்த உடனேயே இப்படி ஒரு அட்டகாசமான ரோபோவை தயாரிப்பேன்னு நினைக்கவே இல்லைடா பரத்! எல்லாம் எந்திரன் படம் பார்த்த பாதிப்பால தானே இப்படி ஒரு ரோபோ தயாரிச்சி வச்சிருக்கே?”

’வெறும் ரோபோ இல்லடா இது காதல் ரோபோ! ரோபோ டெக்னாலஜிக்குத்தேவையான கொஞ்சம் அறிவியல் கொஞ்சம் தொழில்நுட்பம் கொஞ்சம் கணிதம் கொஞ்சம் பொறி இயல் இவைகளை ஒண்ணாக் கலந்து legokitsவச்சிட்டுபன்னிரண்டுமாசமா -அதாவது ஒருவருஷமாஎந்திரன் படம் வர்ரதுக்கு முன்னாடியே ஆரம்பிச்சி படாதபாடுபட்டு நான் தயாரிச்சேன். இதான் எந்திரி.’

’எந்திரிக்கணுமா எதுக்கு?’

’இல்லைடா மாப்பிள்ளை, எந்திரனுக்கு ஆப்போசிட் எந்திரி.பெண் ரோபோஆன இது, உயிருள்ள ஜீவன் போல சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் ‘ஐசாய் 1’ என்ற ரோபோவை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது விஞ்ஞானக் கற்பனை அல்ல.. நிஜம் என்கிறார் இந்த ரோபாவை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் டீகோ கார்சியா. மனிதர்களுக்கு ஒரு துணையாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் உயிருள்ள நபர் போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையிலும், முடிவுகளை தாமாக சுதந்திரமாக எடுக்கும் வகையிலும் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் நிலவும் மகிழ்ச்சி, துக்க சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு செயல்படும் திறன் படைத்த ரோபோக்களை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி வராங்கன்னு கேள்விப்பதும் அமெரிக்கால எனக்கு நண்பனான ஸ்பெயின் நாட்டு அபிகைல் இந்த விஷயத்துல உதவறேனான். லெகோகிட்ஸ் உதவியோட நான் உருவாக்கினது அப்படியே என் காதலியப்போலவே பேசும் காமினின்னா திரும்பிப்பார்க்கும் அவளைப்பற்றிய எல்லாரகசியமும் எனக்கும் இதுக்கும் இப்போ தெரியும்’

’ரொம்ப விளக்கிட்டியேடா! புரியுதுடா பரத்! ரஜனியோட புதுப்பட வரவினால ரோபோ பத்தி இப்போ கிராமத்து மக்களும் அறிஞ்சிருப்பாங்க! சரி, இந்த ரோபோவை வச்சி உன்னோட காதல்ரோஜாவை நீ மீட்டுக்கப்போறே சரியா?’

’எக்சாட்லி சிவா. இதைவிட்டா வேற வழியே இல்லையேடா ..என் வருங்கால மாமனார் சொக்கநாதன் ரொம்ப கெடுபிடியா இருக்கிறாரே!’

’ஆமா! காமினி படிச்சது சென்னை காலேஜ்னாலும் பொறந்தது திருச்சிகிட்ட இருக்கிற குக்கிராமமாச்சே! இன்னமும் ஜாதி குலம்கோத்திரம்னு அவங்க வீடல் ஸ்ட்ரிக்டா இருக்காங்க.. படிப்புமுடிச்சதும் பொண்ணை ஊருக்கு கூட்டிப்போய்ட்டு காமிரா உள் காமினியாய் அடைச்சிட்டாங்க. கையில செல்லும் இல்ல வாயத்திறந்து பேச சொல்லும் இல்ல , அப்படி அடக்கிவச்சிருக்காரு சினிமா வில்லனாட்டம் இருக்கற அவ அப்பா சொக்கநாதன். இதையும் மீறி உங்க காதல் எந்திரன் படத்து விளம்பரம் மாதிரி எகிறிகுதிச்சி வளருதுன்னா அதுக்குக்காரணம் ராகினி! அவதான் வாரவாரம் உனக்காக சிநேகிதி காமினிக்கு காதல் தூது போகும் காதல்புறா! அவள் கொண்டுபோய் உன் காதல் கடிததை காமினிகிட்ட தரா. பதில்பெற்று வரா. எல்லா கதையும் எனக்குதெரியும்டா பரத்!’


’ராகினிக்கு இந்த ரோபோ காமினியோட நல்ல பழக்கமாகிடிச்சி உயிர்த்தோழிகளாகிட்டாங்க. இன்ஃபாக்ட் ராகினி உதவியோடதான் ரோபோவை கிராமத்துவீட்ல வச்சிட்டு என் காமினியைக்கடத்திட்டு வந்து ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கப்போறேன். கிராமத்துல ராகினி இதுகூட ஒருவாரம் தங்கி, ரோபோவை சந்தேகம் வராதமாதிரி அங்கபழக்கிட்டு வந்துடுவா..அப்புறமா ஒருநாள் ரோபோ’ பரத் இல்லாத வாழ்க்கை எனக்குத்தேவை இல்லை நான் சாகப்போறேன்’னு கடிதம் எழுதிவச்சிட்டு இங்க என்கிட்டயே வந்திடும்!’

“ஹாலிவுட்பட ரேஞ்சுல கதை விறுவிறுப்பாத்தான் இருக்கு சொதப்பாம திட்டப்படி நடக்கணும்”

’சரி வா உன்னை ரோபோக்கு அறிமுகப்படுத்தறேன் இங்க நீ வந்து ரொம்பநாள் ஆச்சில்ல நான் எல்லாம் சொல்லி வச்சிருந்தாலும் ராகினியைத்தெரிஞ்ச அளவு ரோபோக்கு உன்னைத்தெரிஞ்சிருக்காது ’

இப்படி பரத் சொல்லும்போதே

“எதுக்கு அறிமுகம் பரத் ? சிவா என்ன எனக்கு புதுசா? நடிகர் விவேக் மாதிரி துறுதுறுன்னு இருக்காரு பேச்சும் அதே!முதல்ல பார்த்ததே மனசுல பதிஞ்சிபோச்சே” என்று ரோபோ சிரித்தபடி கேட்கவும்,’பாத்தியா எல்லாம் இதுக்கு அத்துப்படி..காமினியாவே ஆகிடிச்சிபோல?’ என்றான் சிவா.

’ஆமா...முக்கா(ல்)மினி ! கிராமத்துக்குப்போனா முழுசாயிடும்! காமினியப்போலவே பாவாடைதாவணில்லாம் போட்டு முகத்துல மாஸ்க் எல்லாம் பொருத்திட்டேன் சிவா!எப்படிடா இருக்கு?’

’அசல் எந்திரன் ரஜினியேதான்! அங்க ஆண் இங்க பெண் அதான் வித்தியாசம்!’

நண்பர்கள் சிரித்துக்கொண்டார்கள் ரோபோவும் வெட்கப்பட்டு சிரித்தது.





அரங்கபுரம் .

திருச்சிஅருகே காவிரிக்கரையோரம் இருந்த அந்தகிராமத்திற்கு கோயிலைப்பார்க்கபோகிறவர்கள் போல பரத்தும் சிவாவும் காரில்பின்பக்கம் அமரவைத்த ரோபோவோடு போனார்கள்.ராகினி முதல்நாளே அரங்கபுரம் போய்விட்டிருந்தாள் இன்னும் சற்றுநேரத்தில் திட்டமிட்டபடி அவள் காமினியுடன் கோயிலுக்குவருவாள். நூற்றுக்கால்மண்டபத்தின் தூண்களைப்பார்க்கிற சாக்கில் அங்கே போகும்போது ரோபோவும் காமினியும் இடம் மாறிவிடும்

ராகினி காமினியோடு கோயிலுக்குள் நுழைந்தாள் .சுற்றுமுற்றும் பார்த்தபடி இருவரும் நூற்றூக்கால் மண்டபத்திற்குள் ஓசைப்படாமல் வந்தார்கள். அங்கே சிவா பரத் ரோபோ மூவரும் காத்திருந்தனர். அப்போது சட்டென
மண்டபத்திற்குள் இருந்த தூசியும் உதிர்ந்த பழைய காரை வாசமும் காமினிக்கு மூச்சடைக்க ’ஹா’ என்று மயங்கிவிழுந்துவிட்டாள்.

’ஐயோ என்னடா இது?’ சிவா அதிர்ச்சியுடன் பார்த்தான்.

’கைத்தாங்கலா கார்வரை கூட்டிப்போய்டுவோம் கோயில்ல யாரும் வர்ரதுக்கு முன்னாடி சீக்கிரமா போயிடலாம்’

காரில் ஏறியதும் பாட்டிலைத் திறந்து நீரை எடுத்துமுகத்தில்
தெளித்தான்பரத்.
மெல்லக்கண் திறந்தவள்,’ மூ ..மூச்சுவிட கஷ்டமாஇருக்கு” என்றாள் .

’டவுன்ல தில்லைநகர்ல நர்சிங்ஹோம் போங்க அவர்தான் எனக்கு ஆஸ்துமாக்கு எப்போவும் வைத்தியம் செய்ற டாக்டர். பேரு ஆத்மநாதன் ’.என்றாள்.

’ஆஸ்துமாநாதன்ன்னு பேர் வச்சிருக்கலாமோ?’ சிவா சிரித்தபடிகேட்கவும் பரத் அதை ரசிக்கும் நிலையில் இல்லாமல் விழித்தான்.

ஆத்மாநர்சிங் ஹோம்.

காமினியைப்படுக்கையில் படுக்கவைத்து சோதித்த அந்தடாக்டர் , சினிமா டாக்டரைப்போல மூக்குக் கண்ணாடியைக்கழற்றியபடி,” ஆல்ரெடி ஆஸ்துமா இருக்கிறபொண்ணு மூச்சுக்கு ரொம்ப சிரமப்பட்டிருக்கா நிலமை சீரிய்சாத்தான் இருக்கு..கொஞ்சம் ட்ரீட்மெண்ட் கொடுத்தாகணும் நீங்க வெளில வெயிட்பண்ணுங்க” என்றார்.

மூக்கில் மாஸ்க்கைப்போட்டு ஏதோ ஒயர்களை கைகளில் செருகிவிட்டு அவர் நகர்ந்துபோனார். அப்பாவிற்கு போன் செய்து விவரம் சொல்லிவிடுவாரோ என பயந்த காமினி தப்பிக்க தீர்மானித்தாள்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

அவள்குதிப்பதை அறைக்கதவைத்திறந்து அப்போதுதான் உள்ளே வந்த பரத் அதைப்பார்த்துவிட்டு அவனும் அதே வழியில் சென்று வெளியே குதிக்க சிவாவும் தொடர்ந்தான். நர்சிங்ஹோமின் வாசலுக்கு அவர்கள் வந்தபோது
.......


’தெரியும் உன்னை இவன் சிவப்பு கார்ல கடத்திட்டுவந்ததா ஊர்க் கோயில்குருக்கள் சொன்னாரு உடனே புயலாய் பொறப்பட்டேன் எவ்ளோ நாளா இந்தக்கதை நடக்குது ம்? ‘வில்லன் அப்பா எதிரில் வந்து கண்ணை உருட்டி உறுமினார்.

காமினி கைகளைப்பிசைந்தாள்

அருகில்நின்ற சிவாவும் பரத்தும்,’ இதென்னடா சேமிக்காமல் நாலுபக்கம் கதையை தட்டச்சிய நேரத்தில் கரண்ட் கட்ஆனமாதிரி?’ (எத்தனை நாளைக்கு வெண்ணை தாழிங்கறது ஹிஹி!)என்பதுபோல முழித்தார்கள்

’ஆஸ்பித்ரி வராம இருந்தா இந்நேரம்கார்ல சென்னைக்கே போய்ருக்கலாம் இப்போ ப்ளான் எல்லாம் ஏரோப்ளானாகிட்டது.’

யோசித்தவன் சட்டென பாண்ட்பாக்கெட்டில்கைவிட்டான், துப்பாக்கியை எடுத்தான்.


“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.தீபாவளிக்கு அக்காசுவாதியின் மகன் அச்சுதன் கேட்டான் என்று வாங்கின பொம்மைத்துப்பாக்கி தான் நிஜம்போலவே தத்ரூபமாயிருக்கவும் சொக்கநாதன் சோகநாதனாகி கை குவித்தார்.

’ஐயோ மகளைக்கொன்னுடாதே ’அலறினார் வில்லன்.

’அப்போ வழிவிடுங்க ’ என்று அதட்டினான் சிவா.

காரில் ஏறினார்கள் மூவரும்

’காரை தில்லைநகர் ஏழாம்கிராசுக்குகொண்டுபோங்க சீக்கிரம்’ என்று பரபரத்தாள் காமினி.

’எதுக்கு ?’

’சொல்றேன் அப்புறம் விவரம். இப்போ போகணும் அங்க முதல்ல’ என்றாள் காமினி அவள் அமமாவின் வயிற்றில் இருந்தபோது ஜூனூன் பார்த்த பாதிப்பில்

ஜோதிடபூஷணம் பரந்தாமன் என்ற போர்டு கொண்ட வீட்டுவாசலில்காரை நிறுத்தச்சொன்னாள்.

கார்நின்றதும் வேகமாய் இறங்கினாள் சேலைமுந்தானைமுடிச்சை அவிழ்த்து
ஒரு பொட்டலத்தை அவரிடம் கொடுத்தாள்.‘வர வழில போலீஸ் ஜீப் வேற நின்னுட்டு இருந்தது பயந்திட்டே இதை எடுத்துவந்தேன்” என்றாள் அவரிடம்.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே
” என்று பாராட்டினார் பரந்தாமன்.



’சார் போலீசு கண்ல மண்தூவறது கஷ்டம இல்ல எங்கப்பா கண்ல மண்ணைத்தூவிட்டு இந்த வைரத்தை அவர் பொக்கிஷ ரூம்லிருந்துஎடுத்ததைப் பாராட்டுங்க’

’என்னது வைரம் ?’முழித்தான் பரத்

’இது ஒரு துர் அதிர்ஷட வைரமாம்! இது இருக்கற இடத்துல பெரும் துக்கம் சூழுமாம் மனசுல நல்ல எண்ணத்தையே வரவிடாதாம்.ஒரு வீட்டையே இடிச்சிதள்ளிடுமாம் ஒருவருஷம் முன்னாடியே . ஜோஸ்யர்பரந்தாமன் எங்கவீட்டுக்கு வந்தப்போ எங்கப்பா கிட்ட சொன்னாரு இது மஹாளய அமாவாசைக்கு முன்னாடி வைரத்தை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தலேன்னா பெரிய கெடுதல் நடக்கும் அப்பா அதை நம்பலஅவர் கம்ப்யூட்டர் ஜோதிடர் சிதம்பரம் என்பவர் சொன்னதை நம்பி இதை பொக்கிஷ அறைல வச்சி பூஜை செய்ய ஆரம்பிச்ச நாள் முதல் வீட்ல பசுமாடு செத்துப்போச்சி பாட்டி தடுக்கி விழுந்தாங்க பணம் திருட்டுப் போச்சி ஆனாலும் அப்பாவை சிதம்பரம் தன் கைப்பிடில வச்சிருக்காரு. நான் பரந்தாமனின் ஜோதிடத்தை நம்பினேன் அதான் அப்பாக்குத்தெரியாம கோலிக்குண்டு சைஸ்ல இருக்கற இதைசிரமப்பட்டு எடுத்து வந்தேன்.’

’கல் ஜோசியமா ? ஆகா இனிமே ஜோதிடர் பரந்தாமனுக்கு யோகம்தான்’ சிவா சிரித்தான்.

’கிண்டல்செய்யாதப்பா சில வைரம் அமோகமா அதிர்ஷ்டம் கொடுக்கும் ஆனா சில வைரம் வாழ்க்கையே அழிச்சிடும். எனக்கெதுக்கு இது, இப்பொ இந்த வைரத்தை உங்ககண்முன்னாடியே நான் அகண்டகாவேரிலவீசிடறேன்பாருங்க.. ’

’ரொம்ப நன்றி அப்போ நாங்க வரோம் ’ என மூவரும் கிளம்பினர்.

சொக்கநாதன் கடுப்புடன் வீட்டிற்கு வந்தபோது மனைவி வாயெல்லாம் சமீபத்தில் கட்டிக்கொண்ட பல்லோடு வரவேற்றாள்.

“ராகினி நம்ம பொண்ணை கூட்டி வந்துட்டாங்க காமினி மனசு மாறிட்டாங்க சமைக்கிறா பாட்டெல்லாம் பாடறா !” என்றாள்.

’அப்படியா?’

(ரோபோ) காமினியைப்பார்த்துக் கண் பனித்தார் சொக்கநாதன். ”அம்மாடி ! ஜோசியர் சிதம்பரம் சொல்ற வரனுக்கு உன்னைக்கட்டிதருவேன்மா நான் அதுவரை காத்திரு காமினி!” என்றார்

ஆயிற்று ஒருவாரம் ரோபோகாமினிக்கு வீட்டையும் மனிதர்களையும் பழக்கிவிட்டு ராகினி திரும்பிப்போயிருந்தாள்.

அன்று பத்திரிகை செய்தியாக குடும்ப ஜோதிடர் சிதம்பரம் தனது போலி ஜோதிடத்தொழில் காரணமாய் பலரை ஏமாற்றியதில் போலீசில் மாட்டிக்கொண்டதை படித்தார்.

’அடப்பாவிமனுஷா! பெரிய கம்ப்யூட்டர் ஜோதிடன்னு சொல்லி என்கிட்ட ஏதோ வைரத்தைக்கொடுத்து உசத்தியானதுன்னு பல லட்சம் ரூபாயை வாங்கிக்கிட்டே! வீட்ல பொக்கிஷமா பாதுக்காக சொன்னே!அந்த வைரம் வீட்ல இருக்கக்கூடாது கெடுதல் நடக்கும்னு ஆப்த நண்பன் ஜோதிடன் பரந்தாமன் சொன்னதை நான் கேட்கல.உன் பேச்சை நம்பி அந்த வைரத்தை வீட்லயே வச்சிருந்தேன் மகளையும் அவள் ஆசைப்பட்டவனுக்குக்கட்டித்தரக்கூடாதுன்னு நீ சொன்னதையும் கேட்டேன் நீயே இப்போ போலின்னு தெரிஞ்ச பிறகு எனக்கு அந்த அதிர்ஷ்டமில்லாத வைரம் வேண்டாம் கைவிட்டுப்போன மகளுக்கு அவள் விரும்பினவனையே கட்டிதந்துடப்போறேன் ’ என்று பேப்பரை மூடிவிட்டு ’அம்மா காமினி காமினி’ என்று மகளின் அறைக்கு ஓடினார்

லோ பேட்டரியின் காரணமாக ரோபோ காமினி அங்கே படுக்கையில் அசையாமல் கிடக்கவும் பதறிப்போனவர் ரோபோமகளை அள்ளி எடுத்து காரில் கிடத்தி ஆஸ்பித்திரி நோக்கி விரைந்தார்.


ஆத்மா நர்சிங் ஹோம்.

மறுபடி ஆஸ்துமா தொல்லை காரணமாய் அங்கே நிஜக்காமினி அட்மிட் ஆகி இருக்க அவளைப்பார்த்து திடுக்கிட்டார் சொக்கநாதன் ’ காமினி காமினி’ என இருமுறை அலறினார்.

அதற்குமேலும் அப்பாவை ஏமாற்ற மனமில்லாத காமினி நடந்ததைச்சொல்லிவிட்டாள்.

’ரெஜிஸ்டர் கல்யாணம்தானே ஆகி இருக்கு பரவால்லமா நான் ஊரைக்கூட்டி எட்டுப்பட்டிஜனங்களையும் வரவழைச்சி ஜோரா கண்ணாலம் செய்துடறேன்’ என்றார்.

பேட்டரி சார்ஜ் ஆகி எழுந்து உட்கார்ந்த ரோபோகாமினி,”அப்போ நான்?” என்று கண்கலங்க,” அம்மாடி நீ எப்போதும் என்கூட கிராமத்துலயே இருக்கலாம்மா” என்ற சொக்கநாதனிடம் ,”ஸாரி மாமா...ரோபோ காமினியை உங்களால் கவனிச்சிக்கமுடியாது. நான் சென்னைக்கு கூட்டிட்டுப்போய் என் ஆராய்ச்சி சாலைல வச்சிக்கணும்” என்றான்

மாப்பிள்ளை ! அப்போ நாங்களும் கிராமத்தைவிட்டு சென்னைக்கே வந்துடறோம் எங்களால சொந்தமகளைக்கூடப்பிரிஞ்சி இருக்கமுடியும் ஆனா.. ஆனா.. ரோபோங்கறீங்களே இவளைவிட்டுப்பிரியமுடியாதுப்பா”

என்று அழ ஆரம்பித்தவரை அருகில்போய் தேற்ற ஆரம்பித்தார்கள் காமினிகள்!

--
மேலும் படிக்க... "காதல்ரோபோ(சவால் சிறுகதைப்போட்டி)"

Thursday, October 14, 2010

தசரா யானைகளின் அவஸ்தைகள்.




மைசூர் தசராவில் முக்கிய அம்சமாய் இடம் பெறுவது 'ஜம்புசவாரி' எனப்படும் யானைகளின் அணிவகுப்பும் அவைகளின் சாகசங்கள் கொண்ட விளையாட்டுக்களும்.

நாகரஹோலே காட்டிலிருந்து மைசூருக்கு 70 கிலோமீட்டர் கஜபயணம் நடைபெறும். 'பலராமா' என்ற யானையின் தலைமையில்
மற்ற யானைகள் தசராவிற்கு ஒருவாரம் முன்பாகவே மைசூர் அரண்மனை வாயிலுக்கு வந்துநிற்பது வழக்கம்.


பலராமா எனப்படும் மூத்த யானைக்கு தங்க முகப்படாம் அணிவிக்கப்படும்.
(இந்த வருஷம் பலராமன் பலமில்லாராமனாய் உடம்பு சரி இல்லாமல் இருப்பதாக் சொல்கிறார்கள்)
இதனால் யானை, மற்றவர்கள் பார்வையைக் கவர்ந்தாலும், படும்அவஸ்தையை அந்த யானைதான் உணரும்.

தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்தினால் வலி இல்லாமல் போகுமா?
அதுபோலத் தான். 750கிலோ எடை உள்ள சுமையான தங்கக் கவசம் அதன் வயோதிக உடலை வேதனைப்படுத்துவதை மிகச் சிலரே உணரமுடியும். இதே
அவஸ்தை தான் மற்ற யானைகளுக்கும், மைசூர்நகரத்தின் சந்தடித்தெருக்களீல் ஆறுகிலோமீட்டர் நெருசல்களினிடையே அவை பாகனின் கட்டளைக்கு பயந்து நடக்கும்.

தசரா வைபவத்தையொட்டி யானைகள் காட்டிலிருந்து வரவழைக்கப்படுகின்றன. அவைகளை ஒத்திகையின்போதே நகரத்தின் தார் சாலையில் ஏறத்தாழ 40கிலோமீட்டர் தினமும் நடந்து செல்ல பயிற்சி அளிக்கப்படுகிறது. காட்டின் அமைதியான சூழ்நிலையில் மிருதுவான சாலைகளில் நடந்துபழக்கப்பட்ட யானைகள் தார்சாலையின் காலடியில் கண்ணாடிச்சில்லுகள் குத்தியெடுக்க சிரமப்பட்டு நடப்பது
வேதனை. தினமும் 750 கிலோ எடை உள்ள தங்க முகப்படாமுடன் தலைமை யானை, பயிற்சிக்குச் செல்லவேண்டும். தினமும் சூரியவெப்பத்தின்கீழ் பாகனின் அங்குசத்திற்கு அடிபணிந்து அவஸ்தைகளை அழுத்திக்கொண்டு யானை
நிற்பது பரிதாபக் காட்சி.

அணிவகுப்பின்போது யானைகள் கூட்டதினரின் கூச்சலுக்கும் வானவேடிக்கை ஒலிக்கும் மிரண்டு சற்றே முரண்டு செய்தால் பாகனின் ஆயுதம் அவைகளின் உடலைப் பதம் பார்க்கும் அவைகளின் உடல் அழுத்தம் நீங்க அவ்வப்போது ரம், ஒப்பியம் அளிக்கிறார்கள், இது உடல்நலக்கேட்டை விளைவிக்கும் என அறியாமல்.

அணிவகுப்பிற்கென்றே அவைகளுக்கு செயற்கையாய் அலங்காரங்கள் செய்யப்பட அதற்கு 10லிருந்து 12 மணிநேரவிரயம். இதற்கு சம்மதிக்காத யானைகள் பாகனின் அங்குச மிரட்டலில் அடிபணிகின்றன.


வனவாழ்வுநலப்பாதுகாப்பு அமைப்பு (Wildlife Rescue and Rehabilitation Centre (WRRC) தலைமைப் பொறுப்பிலிருக்கும் சுபர்ணாபக்ஷி கங்குலி சொல்கிறார், "வனவிலங்கு நல்வாழ் உரிமைச் சட்டப்படி எந்த யானைக்கும் 400கிலோ எடைக்குமேல் பாரம் சுமக்க
அனுமதி இல்லை.காட்டிலிருந்து பிடிக்கப்பட்ட யானைகள் இந்தியா முழுவதும் மொத்தமாக 3000 வரை இருக்கலாம், இதில்
கேரளாவிலிருந்து மட்டுமே 800 யானைகளாம். பிடிக்கப்பட்டயானைகள் ஜெய்ப்பூரில் சுற்றுலாவாரியத்தில் 87ம், ராஜஸ்தானில் அம்பேர்கோட்டையின்கடின சாலையில் சுற்றுலா பயணிகளை சுமக்க 120 யானைகளும் உள்ளனவாம்.
தவிரகோயில்களுக்கு சில கொடுக்கப்படுகின்றன. கோயில் யானைகள் சங்கிலியால்பிணைக்கப்பட்டு கான்க்ரீட் தரையில் அதன் பாதம் பதிய நிற்கவைக்கப்
படுகிறது. இதை வனத்தில் வாழ்ந்த எந்த மிருகமும் தாங்கிக் கொள்ளாது. அரசுதான் இதைக் கருத்தில் கொண்டு கவனிக்கவேண்டும்" என்கிறார்.

தசரா கமிட்டிக்கும் Department Of Wildlife Rescue and Rehabilitation Centre (WRRC)- க்கும் சில ஆலோசனைகளை வைத்தாயிற்று.

1. தசரா நேரத்தில் யானைகளை உபயோகிப்பதை நிறுத்தவேண்டும்.

2. யானைகளுக்கு, சுமையான முகப்படாம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

3, 20 அல்லது 30 கிலோ எடைக்குமேல் உள்ள மர உருளைகளை யானைகள் தூக்கக்கூடாது.

4. யானைகளின்மீது வண்ணமிட்டு அலங்கரிப்பது கூடாது.

5. வன்மையான பயிற்சிகளைத் தடை செய்யவேண்டும்.

2003ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் மட்டும் யானைக் கலவரம் மூன்று முறை நடந்தது. அதில் கொச்சினில் கோயில் விழாவுக்குச் செல்லும் வழியில் பாகனைக் கொன்ற நிகழ்ச்சி மிகவும் வேதனையானது. அமைதியான மனித சஞ்சாரமற்ற
காட்டின் இயற்கைச் சூழலிலிருந்து நகரத்திற்கு கொண்டுவரப்படும் விலங்குகள் வன்மையாகவும் கொடூரமாகவும் செயல்படக் காரணம் அவற்றிற்கு நகரத்தின்
சந்தடியும் தங்களது தனிமை பறிபோவதாலும்தான்.
அன்று 'ஆதிமூலமே' என்று கஜேந்திரன் என்னும் யானை கத்தியதும் ஆண்டவன் ஓடிவந்து காப்பாற்றினார்;
இன்று அரசு அதைச் செய்யுமா?

இதோ மைசூரில் தசரா திருவிழா ஆரம்பமாகிவிட்டன!.
'மைசூருதசரா எஷ்டந்து சுந்தரா?' (மைசூரின் தசராப்பண்டிகை, எத்தனை அழகு!’
என்று ஒலிபெருக்கியில் பாடல் வீறிடுகிறது.

பயிற்சி யானைகள் அணிவகுப்புப் பாதைகளில் நடக்கத் தயாராகிவிட்டன!




--
மேலும் படிக்க... "தசரா யானைகளின் அவஸ்தைகள்."

Thursday, October 07, 2010

நவராத்திரி தகவல்1 செய்குதம்பி பாவலர்.

ஒரு நவராத்திரி விழாவில் சதாவதானி செய்குதம்பி பாவலரை அவரது நண்பர் இட்டாபார்த்தசாரதி நாயுடு என்பவர் பாடும்படி கேட்டபோது

“உருமகளை அயன் நாவில் உறைபவளை
பொறை மகளை உலகுக்கெல்லாம்
குருமகளை அன்பர் புகழ் குலமகளை
மலர்மகளை குறைதீர் செல்வத்
திருமகளின் மருமகளை நிலமகட்கும்
கலைமகளை செவ்வி வாய்ந்த
ஒரு மகளை எனக்கருள வருமகளை
பெருமகளை உன்னல் செய்வாய்!”

என்று பாடலைப்பாடினார்.

இந்து தெய்வத்தை இதுபோன்று எதுகை மோனையுடன் பாடிய இஸ்லாமியப்பெரியவர் செய்குதம்பி பாவலரின் நாவன்மையும் பாவன்மையும் அவர்தம் பெருந்தன்மையைப்போலவே சிறப்பாக இருக்கிறது அல்லவா?

இதை இங்கே உங்களுக்கு அளித்தவர்.....:)

ஷைலஜா(எ) மலைமகள்
மேலும் படிக்க... "நவராத்திரி தகவல்1 செய்குதம்பி பாவலர்."
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.