Social Icons

Pages

Saturday, January 30, 2010

தாமரைக்கன்னங்கள்!




பூக்களிலே பெண்கள் தலையில் சூட முடியாத மலர் தாமரை. அதன் வடிவம் மகா அழகு.
சின்ன வயதிலிருந்தே நம்மில் பலருக்கு தாமரைப்பூவினை வரைவது பிடிக்கும். இதழ் விரிந்து மலர்ந்த தாமரைக்கோலங்கள் கண்ணைக் கவர்ந்து விடும்.



தேவ மலர் என்று தாமரையை சொல்கிறார்கள். அதன் இளம் சிவப்பு நிறம் மென்மையான ஆனால் இதயத்தை ஊடுருவும் நறுமணம் அடுக்கடுக்கான அதன் இதழ்கள்
நீர்நிலையில்மட்டுமே காணும் அதன் தன்மை நீரில்வாழ்ந்தாலும் தனது இலைகளின் மீது அதனை பரவ அனுமதிக்காத ஆளுமை ...இதெல்லாம் தாமரையின் சிறப்புகள்.

வள்ளுவர் கூறுவாரே "வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்க்கு உள்ளத்தனையது உயர்வு" என்று. தாமரைமலரை மனதில் நினைத்தே அவர் இப்படிக்கூறி இருக்க வேண்டும். உள்ளத்தைப்பொறுத்தே உயர்வு என்பதை விளக்க உள்ளத்துக்கே உவமையான தாமரையைக் கையில் எடுத்தார் போலும்! தாமரையின் உயரத்தை தண்ணீரே நிர்ணயிக்கிறது. எனவே தண்ணீரின் உயரம் தாமரையின் உயரம், அதுபோல நம் எண்ணத்தின் உயரமே நம் உயரம் என்கிறார் குறளில்.

பெண்கள் மலர் போன்றவர்கள் என்பதால் தாமரை மலரை உவமைக்கு சொல்வார்கள். தாமரை என்ற பெயர் பெண்ணுக்கு உண்டு.அதன் சம்ஸ்க்ருத வடிவச் சொல் பத்மா நளினி சரோஜா பங்கஜம் எனப் பல,...தாமரைமலர்மீது திருமகள் அமர்ந்திருப்பதால் தாமரை தெய்வமலராகிறது. தாமரைக்கு மருத்துவ குணமும் உண்டு.


கம்பராமாயணத்தில் பெண்கள் ராமனை ,’தாமரைக் கண்ணினால் நோக்கினார்கள் ’என்ற இடம் வருவதை ஒருவர் சொற்பொழிவில் சொல்லும்போது ரசிகர் ஒருவர் குறுக்கிட்டாராம்.

"அந்நிய ஆடவனை பெண் விழி திறந்து பார்க்கமுடியுமா என்ன? நாணம் தடுக்காதோ? பாதி திறந்தும் பாதி மூடியும்தானே பார்க்க இயலும்?" என்று கேட்டாராம்.

சொற்பொழிவாளரும் சட்டென தயங்காமல்,"அதைத்தான்
நானும் சொல்ல வந்தேன்...அதற்குள் நீங்கள் அவசரப்பட்டுவிட்டீர்களே! பெண்கள் தாம்+அரைக்கண்ணால்நோக்கினார்கள்" என்று சமாளித்தாராம்!! தாமரை பாதி மலர்ந்தாலும் அதுவும் வசீகரமானது தானே?

தாமரைக்கன்னங்கள் என்று ஆரம்பிக்கும் பழைய சினிமா பாடல் உண்டு. (தாமரை இடம் பெறும் வேறு திரைப்பாடல்கள் ஏராளமாய் இருக்கும் இல்லையா?)அதன் இளம் சிவப்பு நிறம் பெண்களின் கன்னத்தில் இருந்தால் அது ஒரு தனி கவர்ச்சிதான்!!
மேலும் படிக்க... "தாமரைக்கன்னங்கள்!"

Thursday, January 14, 2010

மணத்துடன் மலருமே!(உரையாடல் கவிதைப்போட்டி)

வீமனப்போல் மிகுந்த பலம் பெற்றாலும்

காமனைப்போலக் கவினுடலம் உற்றாலும்

வில்விசயன் போலவே வெற்றியினைக்கொண்டாலும்

கல்விச்சிறப்பினில் கம்பனைப்போலானாலும்

குற்றமிலாச்செல்வம் குபேரன்போல் சேர்த்தாலும்

எற்றைக்கும் இந்திரன்போல் ஏற்றமுற வாழ்ந்தாலும்

நெஞ்சில் சிறிதும் செருக்கடைந்து நில்லாமல்

அஞ்சிக்கடல்போல் அடக்கமாய் வாழ்ந்திடுக.

கற்றுயர்ந்த சான்றோரைக்கண்டு வணங்கிடுக

ம்ற்றன்னார் சொல்லை மதித்து நட்ந்திடுக

அன்புற்றடியவரை ஆண்டவனாய் எண்ணிடுக

பின்புற்றவர்க்குப் பெருந்தொண்டு செய்திடுக

எல்லோரும் இன்புறவே என்றென்றும் எண்ணிடுக

நல்லோரை எந்நாளும் நண்பராய்க் கொண்டிடுக

பாரோருக் கெல்லாம் பலனும் அளிக்கின்ற

சீரார் திருவரங்கத் தெய்வத்தை சிந்தித்து

நாவார நாளெல்லாம் போற்றிடுக நல்லமணப்

பூவாலே என்றென்றும் பூசிக்க பூவுலகீர்

இங்கிந் நெறியில் இன்புறு வீர்க்குச்

செங்கண் திருமால் அருளால்

மங்கல வாழ்க்கை மணத்துடன் மலருமே!

********************************************

(மரபுக்கவிதை---மருட்பா வியனிலை வகையைச்சேர்ந்தது)
மேலும் படிக்க... "மணத்துடன் மலருமே!(உரையாடல் கவிதைப்போட்டி)"

Thursday, January 07, 2010

நானும் , சங்கரா தொலைக்காட்சியும்!

ஒருவாரமாய் ஆனந்தவிகடன் கல்கி குமுதம் இன்னபிற பத்திரிகைகள் என்று எதுவுமே படிக்காமல், இணையக்குழுக்களில் கவிதை எழுதி துன்புறுத்தாமல், சாட்டில் யாருடனும் அதிகம் அரட்டை அடிக்காமல் ஆழ்வார்களைத்தேடினேன் ...அரங்கநகர்ப்பெருமை மிகும் கதைளைப்படித்து பரணிலிருந்த பழையஆன்மீகபுத்தகங்களை ஹச் என்றுதும்மிக்கொண்டே தூசிதட்டிப்பிரிச்சிக் குறிப்பெடுத்து ஊர் உலகத்துகெல்லாம் போன் ,மெயில் என்று தகவல் சொல்லி ஆர்வமாய் காத்திருந்தேன்.

”என்னது! சங்கரா டிவில் ஸ்ரீரங்கத்திலிருந்து வரும் ராப்பத்து உற்சவ நேரிடை ஒளிபரப்புக்கு நீ மூணுமணிநேரம் வர்ணணை செய்யப்போறியா? பாவம் அரங்கன்!” என்று கிண்டல் செய்தாள் ஆத்ம சிநேகிதி!

”வாவ் க்ரேட்! பட் பாத்துகவனமா பேசு , செல்போனை ஆஃப் பண்ணி வச்சிட்டு மைக்கிலிருந்து கொஞ்சம் எட்டவே இரு ..சில டைம் லைவ் ல பேசறவங்க மூச்சுக் காத்தெல்லாம் காதுல விழும் அதை தவிர்க்கணும் அப்றோம்குறிப்பு நோட்டை தவறவிட்டுடாதே, ” என்றார் முன் ஜாக்கிரதை முத்தண்ணா(என் பதி).


”சங்கரா டிவியா அதெல்லாம் இங்க எங்களுக்கு வராதே அப்பாடி தப்பிச்சேன்!”...உடன்பிறப்பு!



கோடிவீட்டு தாத்தா என் நாவல்களைப்படித்துபலமுறை கண்கலங்கி(எதுக்கோ?:) வாழ்த்துவார் அவரிடம் விஷயம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கப்போனேன்.

பிடி அட்சதையைக் கையிலெடுத்துதலையில் போட்டவர் அப்படியே குனிந்த என் சிரசை நிமிர்ந்தவிடாமல் கையைஅழுத்தி வைத்து தன் கண்களை மூடிக்கொண்டு ஏதோ வாழ்த்து சுலோகம் சொல்ல ஆரம்பித்தார் ...இதோமுடிச்சிடுவார் அதோமுடிச்சிடுவார்னு க‌ஷ்டப்பட்டு குனிஞ்சிட்டே இருந்தேன் அப்படிஇப்படி 6நிமிஷம் கழிச்சி 'தீஈஈர்ர்க்கசுமங்கலிபவ' ன்னு முடிச்சி கண்ணைத்திறந்தார் அப்பாடி இந்த் ஒருவார்தையோட சொல்லி முதல் அரை வினாடில என்னை அனுப்பி இருக்கலாமேன்னு நினச்சாலும்” சுலோகம் திவ்யமா இருக்கு”ன்னு சொல்லி வந்தேன்.



ராப்பத்துவிழாவின் கடைசி நாளில் பேசவேண்டியதில் பிரதானமாய் சொல்லவேண்டியது நம்மாழ்வாரின் கீர்த்திகள் அவரது மோட்சப்பெருமை வரலாறு முதலியன.


நம்மாழ்வார் மோட்சம் என்பது ஸ்ரீரங்கத்தில் நடுஇரவுக்குபிறகு ஆரம்பமாகும் நிகழ்ச்சி .அதனால் ஒலிப்பதிவு. இப்படி நடு நிசியில் செய்யவேண்டியதாகிப்போனது.

மாலை 6மணிவரை ஒழுங்காக இருந்த என் திருவாய்க்கு என்ன ஆச்சொ சட்டென நாக்கெல்லாம் குடிகுட்டிக்கொப்பளங்கள். சின்ன சிவப்பு மாதுளைமுத்துக்களாய் வந்து ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் ஆகும்போல ஆகிவிட்டது. வீடல் எல்லார்கிட்டயும் ஜாடைலபேச ஆரம்பிச்சேன்.(அப்பாடா என்று என் கணவர் உள்ளூற மகிழ்ந்திருக்கலாம் யார் கண்டா?!)

. ஐய்யோ எப்படிஅங்கே போய் சொற்பொழிவாற்றுவது? இதுக்குத்தான் அதிகமா ஆசைப்படக்கூடாதுஙக்றது ஒழுங்கா அப்பப்போ ஏதோ அஞ்சுபத்துநிமிஷம் கால்மணி என்று விளம்பரப்படத்தோடு இருந்திருக்கலாம் குறும்படமும் அதிகபட்சம் நாப்பது நிமிஷம்தான் இப்படி ரெண்டரைமணிநேர நிகழ்ச்சிக்கு வந்து சொல்றீங்களான்னு கேட்டதும் பறந்திட்டு மகிழ்ச்சியாய் தலையை ஆட்டிவிட்டு இந்த அரங்கப்ரியாக்கு வந்த சோதனையைப்பாருங்க!

ரங்கா உனக்கு சொல் அலங்காரம் செய்யகூட நான் லாயக்கில்லைன்னு என்னை இப்படிசெய்துட்டியா என்று மனம் வருந்தினேன்

ஆனாலும்இடையில் மின் தமிழ் நம்பிக்கைகுழும உறுப்பினரும் குடும்ப நண்பருமானமோகனரங்கனிடமும் பிரபல ஆன்மீகப்பதிவர் கேஆரெஸிடமும் அன்புத்தம்பிராகவ்விடமும் நம்மாழ்வார்பற்றிய அதிகப்படி தகவல்களை வாய் சரி இல்லைன்னா என்ன காது நன்றாக இருக்கென்று போனில் பேசி அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டேன்.

வாய்ப்புண் வலி அதிகரித்தது.

ஆன்லைனில் சாட்டில் வந்த முத்தமிழ் உறுப்பினரும் குடும்ப நண்பருமானடாக்டர் சங்கர்குமாரிடம், இந்தப்பெண்லைன்(ச்சும்மா ஒருபேச்சுக்கு பெண்சிங்கம்!) ”டாக்டர் டாக்டர்!வெளிலபோக அவகாசமில்லைசீக்கிரம இதுக்கு ஒருவழி சொல்லுங்கனேன் ” என்று கேட்டேன்.

அவர் வென்னீரில் உப்புபோட்டு வாயைக்கொப்பளிக்கச்சொன்னார் பிறகு டிஸ்ப்ரின் மாத்திரை வைத்தியம் சொன்னார். அது என் ஏராள வாய்ப்புண்ணின் நிலைமையை 5% காப்பாற்றியது.

அக்கம்பக்கம் மாமிகள் சொன்னார்கள் இப்படி...

“நல்லெண்னை விட்டுக்கோ தேங்காண்ணை விட்டுக்கோ வாய்ல”

அதையும் செய்தேன் எண்ணைதான் வேஸ்ட் ஆனது

:”நெய் அல்லது தேன் தடவிக்கோ”

தடவினதை ருசித்து சாப்பிட்டுவிட்டேன்!

”தேங்காயை மசிய அரைச்சி பாலெடுத்து வாய்ல விட்டு சுழட்டினாப்ல வச்சிக்கோ”

அது சரி .....தேங்கா உடச்சி அரைச்சி பாலெடுத்து..எங்க நேரம்னு அட்வைஸ் பண்ணினவஙக்ளுக்கு மொழி படத்து ஜோதிகாவா மாறி ஜாடைல நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிட்டேன்!

“ ழையோ ழெப்படி பேயபோயேனோ?’என்று வாய்குளறினதை நானே சகிக்கமுடியாமல்கேட்டேன்.

மணி 8 45

வாசலில் சங்கரா டிவி என்றுமூணுபக்கமும் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு ஜென் கார் ஜம் என்று வந்துவிட்டது அக்கம்பக்கம் எல்லாரும் வேடிக்கைப்பார்க்க ஏறினேன்.


ரெகார்டிங் ரூமில் பாதிபேர் கன்னடக்காரர்கள்.” ராப்பத்து ஏனு பகல்பத்து ஏனு?” என்று ஏற்கனவே பேசத்தவித்த என் வாயைக்கிண்டினார்கள். “அப்றோமா சொல்றேன்” என்று மட்டும் சொல்லவும் அவர்கள்”ஆமா இப்பவே நீஙக் ரொம்ப பேசினா அப்றோம் வாய்ஸ் கட் ஆகிடும் .நோ ப்ராப்ளம்” என்றார்கள் பாவம் அவர்களுக்கு நான் வாய்ஸ்லெஸ் உமன் என்று தெரிய வாய்ப்பில்லைதான்!

மணி 12வரை ஸ்ரீரங்கமிருந்து நேரடி ஒளிபரப்பு கனெக்‌ஷன் சங்கராடிவிக்காரர்களுக்குவரவே இல்லைஏதோ சிக்கல் என்றார்கள்.


. ஒருமணிக்குஎனக்கு தூக்கம் கண்களை இறுக மூடவைக்க, அப்படியே நர்ற்காலியில்சாய்ந்து விட்டேன் !திடீரென ”மேடம் வந்தாச்சு வந்தாச்சு லைவ் டெலிகாஸ்ட்! சக்ஸஸ் சக்ஸஸ்!”என்றது ஒரு குரல்!

அப்பாடி மணி என்ன என்றுபார்த்தால் இரண்டே கால்..சரிதான் இன்னிக்குத்தான வைகுண்ட ஏகாதசிபோல் இருக்குனு சிரித்துக்கொண்டே ஆரம்பித்தேன் எனது வர்ணணையை. என்ன அதிசியம்! தூங்கி எழுந்ததும் கொஞ்சம் வாய்ப்புண் சரியாகி நாக்கு புரண்டு கொடுக்க ஆரம்பித்தது!

எல்லாம் ரெடிபண்ணி குறிப்பு எடுத்து வைச்சதையும் கொஞ்சம் சொந்த சரக்கும் சேர்த்து அந்த சிற்றஞ்சிறுகாலைல நான் அந்த லைவ் ரிலேயில் சொன்னதை யாரும் பார்த்திருக்கலேன்னாலும் கேட்லைனாலும்அரங்கன் கண்டிருப்பார்! கேட்டிருப்பார்!

இரண்டரைமணிநேரம் முடித்ததும் அந்த ஒலிப்பதிவு அறையில் எல்லாரும்” அருமை! ”எனப் புன்னகைத்தார்கள் ,நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன்! ஆனால் அது ’புண்’னகை’ என யார் அறிவார்கள்?!
மேலும் படிக்க... "நானும் , சங்கரா தொலைக்காட்சியும்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.