Social Icons

Pages

Saturday, December 22, 2012

இதுவும் ஒரு கணக்கு!




நாள்தோறும் கிழக்கே உதித்து
மேற்கே மறைகின்ற
பகலவன் என்று ஒரு கணக்கு!
திங்கள் தோறும் தேய்வது என்றும்
வளர்வது என்றும்
வான்மதி என்று ஒரு கணக்கு!
எண்ணிலா நட்சத்திரங்கள் கோள்கள்
எல்லாமே கணக்குத்தான்!
எதற்காக இவை
என்றெண்ணிப்பார்த்ததில்
இத்தனையும்
இறைவன் போட்ட கணக்கு
என்பது புரியலாகும்!
சீனிவாச ராமானுஜன்
என்றொரு கணிதமேதை
நானிலத்தில் இனியதமிழ்நாட்டில்
பிறந்ததுமோர்
கணக்கே என்பேன்!
பதினொன்றாம் வயதுக்குள்
ராமானுஜன்
பதித்தார் கணக்கிலேதன்
மேதைமையை!
புதிதுபுதிதாய்
இலக்கணங்கள் பலவற்றை
கணிதமேதை ஆக்கிவைத்தார்!
முன்னொரோர் ராமானுஜன் உதித்து
வைணவத்தை வளர்த்தார்
பின்னர் வந்த ராமானுஜன்
கணிதத்தை வளர்த்தார்!
மேதைகள் நெடுநாட்கள்
வாழ்வதில்லை
இப்படியும் ஓர்
கணக்குண்டோ
இ்றைவனுக்கு?
கணக்கிலடங்காப்புகழ் குவித்த
கணிதமேதை ராமானுஜனை
தாரணியும் தவிப்போடு
இழந்ததன்றோ?
உடல்நிலைகுன்றிய நிலையி்ல்
உற்ற நண்பர் ஹார்டி பார்க்கவந்தவர்
குரல் உடைந்து
‘நான் வந்த காரின் எண் 1729ன்
துரதிர்ஷ்டம் போலும்’
என வருந்தி நிலைகுலைந்தார்
ராமானுஜரோ
அந்த அ ந்திம திசையிலும்
’நண்பரே வருந்தல் வேண்டா
1729 அற்புதமான எண்ணே ஆகும்!
1729 அற்புதமான எண்ணே ஆகும்!
1x1x1+12x12x12=1729
9x9x9+10x10x10=1729
என்றார் சிரித்தவாறே!
அதுகேட்டு
ஹார்டியும்
வியந்தேபோனார்!
மேதைபோட்ட கணக்கு
பிசகாதன்றோ?
மேன்படுவோம் அவர்தம்
கணக்கை வாழ்வில் கொண்டு!
(இன்று கணிதமேதையின் பிறந்தநாள்! கூகுளை யாரும்கவனித்தீர்களோ ?:)
மேலும் படிக்க... "இதுவும் ஒரு கணக்கு!"

Tuesday, December 04, 2012

ஓடினேன் ! ஓடினேன்!

   chennai IIT  யில் நுழையவேண்டும் என்ற கனவு டிசம்பர் இரண்டாம் தேதி
மெய்ப்பட்டது! அறிவுஜீவுகள் படித்த, படிக்கும், படிக்கப்போகிற இடத்தில்
எப்படியாவது நுழைய வேண்டும் என பலநாளாய் சதித்திட்டம் தீட்டி இருந்தேன்.:)

அதற்கான வேளை வந்தது!

ஆமாம் விப்ரோ கம்பெனி ஏற்பாடு செய்திருந்த மாரத்தானில் கலந்துகொண்ட
நாலாயிரம் பேரில் நானும் ஒருத்தி! என் பெரிய மகள் 42கிமீக்கு சவால்விட்டாள்!

வெற்றிகரமாக அதை ஐந்துமணிநேரத்தில் முடித்தும்விட்டாள் பெண்களில்
ஐந்தாவதாய் வந்தாள்.மூன்றாவதாக வந்திருந்தால் பத்தாயிரம் பணம் அள்ளி
இருக்கலாம்!!

 நானும் என் கணவரும் பேராசைப்படவே இல்லை! 10கிமீக்குப்பேர்
கொடுத்து ரிஜிஸ்டர் செய்திருந்தோம்.

டிசம்பர் ஒண்ணாம்தேதியே போய் டீஷர்ட், ட்ராக்கிங் சிப்(Chip time is another
way of saying "net time," or the actual amount of time it takes a runner to
go from the starting line of a race to the finish line. Many races feature
a timing technology in which all participants run with a computer chip
attached to their running shoe. When you register for a race, you receive
your borrowed chip, programmed with your information, at the same time you
get your race bib. The chip usually attaches to your shoelaces) எனக்கான்
மாரத்தான் எண் பெயர் அடங்கிய பாட்ஜ் இன்னபிற அடங்கிய ரன்னிங் கிட் ஒண்ணுகொடுத்ததை வாங்கிவந்தாயிற்று.



அந்த டீஷர்ட்டைப்போட்டுக்கொள்ள நான் ஒரு இரவில் இருபதுகிலோ இளைக்க வேண்டிஇருந்ததால் அது சாத்தியப்படாததால் ட்ராக் பாண்ட், சூடிதார் டாப்சில்பேட்ஜைக்குத்திக்கொண்டுவிட்டேன்!


காலை சீக்கிரமே எழுந்து மொட்டைமாடிக்குபோய் மாரதான் ஒத்திகை பார்த்தபோதுபின்னாடியே ஒருகுரல் கேட்டது” ஜாக்கிரதை ரொம்ப இப்பவே நடந்துகிடந்துஅசந்துபோய்விட்டால் அங்கே போய் உன்னால் நடக்கமுடியாது”

முன் ஜாக்கிரதைமுத்தண்ணாவான என் பதியின் குரல்தான் அது என்பதை சொல்லவும்வேண்டுமோ?:)


“ஏதும் லைட்டா நாலு இட்லி ஒரு கப் பொங்கல் சின்னதா லோட்டால ஹார்லிக்ஸ்குடிச்சிட்டுப்போறீங்களா?” என்று சென்னை உறவினர்வீட்டு தாய்க்குலம் பரிவுடன்கேட்க, வெண்பொங்கலில் நெய்யில் மிளகும் முந்திரியும் வறுபடும் வாசனை நாசியை
வருட சபலமடைந்த நாக்கை ‘அடங்கு’ என அடக்கிவிட்டு வெறும் ஸ்ட்ராங்கஃபில்டர்காபியுடன் புறப்பட்டேன்.

சென்னையில் இப்படி ஒரு க்ளைமேட்டா? சுவிஸ் கெட்டதுபோங்க அப்படி ஒருமிதமான அழகான weather! ஐஐடி காம்பஸ் பற்றிக்கேட்கவே வேண்டாம்.
இயற்கைகாடு இது! ஆலமரம் மட்டும் நூற்றுக்கணக்கில் இருக்கும்போலிருக்கிறது.





ஸ்டார்ட் மூஜிக்லாம் போட்டு சின்னப்பசங்கபொண்ணுங்க ஆடறதை பெருமூச்சுடன்பார்த்தபடி அப்போதும் மனம் தளராமல் ஒரு சில நிமிஷங்கள் பயிற்சியோடுசின்னதாய் ஆடி(சிலர்  சிரிப்பது கேக்குது:))) விட்டேன்:)

10கிமீ மக்களில் யார் 30நிமிஷத்துல இலக்கை அடையப்போறீங்கன்னு மைக்கில்குரல்வந்ததும் ஓசைப்படாமல் பின் வரிசைக்குப்போய்ட்டேன்

celebrities இருக்காங்க கூட்டத்துல அவங்களை எல்லாம் தொல்லை செய்யாம
போகணும் ப்ளீஸ் என்றார்கள் ஆங்கிலத்தில்

"தெரிஞ்சுதா டோண்ட் டிஸ்டர்ப் மீ 'என்றேன் அருகிலிருந்த சென்னைத்தோழி
அகிலா சட்டென சிரித்துவிட்டாள்:)



நெக்ஸ்ட் 45 நிமிஷங்களில் யாரார்?


அதுக்கும் ஒரு 500பேரு போனாங்க...

ஒனவர்ல யாரு?

அதுக்கு பலபேர் முந்திக்கொள்ளவும் நானும் அந்த ஜோதியில்
ஐக்கியமானேன்..


.”முடியல்லேன்னா பரவால்லபின்னாடி வாங்க ஆண்ட்டி” என்றாள் என்
மகளின் சிநேகிதி.


“நான் முன்னாலே போறேன் நீ பின்னால வாரியா\?’ என்று பாடாத
குறையாக பதி என்னவோ உப்புசத்யாக்கிரக காந்திபோல தடதடவென நடக்க ஆரம்பித்தார்.

எங்களைக்கடந்து முன்னே சென்ற காரின் பின்பக்கம் மூட்டைமுடிச்சுவைக்கிறஇடத்தில் முழு உடம்பையும் பொருத்தி அம்ர்ந்திருந்த ஒருவர்,எங்களை சுட்டுக்கொண்டே வந்தார் வீடியோ காமிராலதான்!


திடீரென காரினின்றும் ஒருவர் இறங்கி, செந்தமிழில் மாரத்தான் பற்றி
சிலாகித்துப்பேசிக்கொண்டே போனார்.புதிய தலைமுறை டிவியாம்! லைவ் ஓடிட்டுஇருக்குன்னாரு ..


யாராவது ஷைலஜாவைப்பார்த்தேன்னு உடனே குறுந்தகவலில் மனதை
குதூகலப்படுத்துவாங்கன்னு பார்த்தா எல்லாரும் பொன்னான விடுமுறைநாள் எனதூங்கிட்டாங்கபோலும்! சல்தா ஹை!


ஜாக்கிங் பண்ணின காலம் மீண்டுவருமோ என முயற்சி செய்தேன் ஜோக்கிங் ஆகும்போலஇருக்கவே கைவிட்டுவிட்டு வழக்கம்போல விரைவான நடைபோட்டேன்! கால்நடந்தாலும்
மனம் கற்பனைக்குதிரையில் எங்கங்கோ ஓடினது!
congratulations!
"shylaja(Mythili) runs IIT!
headlines
!

பராசக்தி வசனம் நினைவுக்கு வந்தது ஓடினாள் ஓடினாள்.....:)

இது பாரா சக்தி - ஊரின் எல்லைக்கே ஓடினாள் என்று தமிழ்நாளிதழ்களில் செய்திவருமோ?!


”only two things run in IIT - deer and monkeys ” என்று எழுபதுவயது
பெரியவர் சொல்லிக்கொண்டே ஓடினார்.

- மான்கள் அந்தப்பக்கம் ஓட இந்தப்பக்கம் நாங்கள் ஓட, கணவரை செல்லில் அழைத்து,

‘அந்தமானை எனக்காகப் பிடித்துத்தரமுடியுமா?’என்று ஓட்டினேன்

.”ஒழுங்கா
10கிமீ ஓடியோ நடந்தோ வந்து மெடலைவாங்கப்பார் எனக்கு இன்னும் நாலேகிமீதான்ஹஹ்ஹா” என்று வீரப்பா சிரிப்புசிரித்து வெறுப்பேற்றினார்.

‘ஆமைமுதல்ல மெதுவாதான் நடக்கும்டா..ஆனா எப்பவும் முயல் ஜெயிக்கறதில்லைதெரியுமா?’ என்று ஒரு இளைஞன் நண்பனிடம் சொல்லிக்கொண்டுவந்தான்.

  யாரை ஆமைஎன்றான் என்று எனக்குப்புரியவில்லை ஆனால் அதனால் ஒருவேகம் காலுக்கு அதிகம்வர டக்டக் என நடையை துரிதப்படுத்தினேன். ஒருவாரமாய் வாட்டும்இருமலைத்தணிக்க கையோடு பங்கஜ் கஸ்தூரி சாஷே பாகெட் கொண்டுபோனதை எடுத்து
பல்லால் கஷ்டப்பட்டுபிரிச்சி அந்ததூளை வாயில்போட்டுக்கொண்டு நடப்பதை அருகில்ஒருபெண் திடுக்கிட்டுப்பார்த்தாள். ஏதோ போதைப்பொருள்பொட்டலம் எனநினைத்துவிட்டாளோ என்னவோ?:)
இருமல் மருந்து பாக்கெட் என சத்தியமா செய்யமுடியும் சொல்லுங்க?:)

21கிமீட்டர் வாக்காளப்பெருமக்கள் சிலர்எங்களைக்கடந்து
முன்னேறிக்கொண்டிருந்ததை அவர்கள் அணிந்திருந்த நம்பர் பாட்ஜ்
உறுதிப்படித்தியது.ஆஹா நமக்கு முன்னாடி ஓட ஆரம்பித்து இலக்கை அடையநமக்குமுன்னால் வருகிறார்களே என வியப்பாக பெருமையாக இருந்தது.

“ நோடப்பா ஈவத்தே நானும் ஊருக்கு ஹோக்பேக்கு..மாரதான்கோசர சென்னை பந்த்தினி
அஷ்டே’

 என்ற கஸ்தூரிக்கன்னடம் இடையில் கேட்க முகம் மலர்ந்தது.
 என்னஇருந்தாலும் பெண்களுக்கு புகுந்த இடத்துப்பெருமை இருக்கத்தானே வேண்டும்?:)

நிறைய வெளிநாட்டவரக்ளும் பங்கேற்றிருந்தனர். ஆனாலும் உகாண்டாபிரஜைகளுக்கு,கங்காரு கால்கள்தான் சும்மா தாவிதாவிப்போகிறார்கள்! பெங்களூர் மாரத்தானில்
வேடிக்கைபார்க்கப்போனப்போவே இதை கவனித்தேன் .amazing really!

குரங்குகள் சில குறுக்கே போனது. ஒண்ணுகூட பெஸ்ட் ஆஃப் லக் சொல்லக்காணோம்!

அங்கங்கே எங்களுக்காக குடிக்க நீர் பிஸ்கட் வாழைப்பழங்கள் என இருந்தன..
நைசாய் நடுவே நாலுவாழைப்ப்ழம் இரண்டுகிலோம்மீட்டருக்கு ஒண்ணு என்றகணக்கில்எடுத்துக்கொண்டேன்.


பத்தாவது கிலோமீட்டரை ஒண்ணேமுக்கால் மணி நேரத்தில் கடந்து மெடலையும்வாங்கிட்டேன்!

கனவா நனவா தெரியவில்லை என எனக்கே பின்னாடி டவுட் வரும்னுதான் கையோட போட்டோஎடுத்துட்டேன்! மைதிலி என்னும் ஷைலஜா  இங்கே  நானே!



இனி அடுத்து 21 கிமீதான் என்ன சொல்றீங்க?:)


மேலதிக விவரங்களுக்கு>>>>


http://www.thehindu.com/sport/athletics/ismail-wins-chennai-marathon/article4157107.ece


மேலும் படிக்க... "ஓடினேன் ! ஓடினேன்!"

Thursday, November 29, 2012

பாணரின் பக்தி!

ஆழ்வார்கள் பதின்மரில் மிகக்குறைந்த பாசுரங்களில் அரங்கனைத்துதி செய்தவர் திருப்பாணாழ்வார்.


திருப்பாணாழ்வார் வரலாறு தனிச்சுவை நிறைந்தது. தொண்டர் குலமே தொழுகுலம் ,’பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்’ என்று பெரிய பெருமாளே சங்கொலித்த வரலாறு. பாணரின் வரலாறு. அத்தொழுகுலத்திற்கு தீக்காப்பிடத்தேவை இல்லை வைதீகச்சடங்குகள் தேவை இலலை.
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து ’ என்று சொல்லப்பட்ட பஞ்சம வர்ணத்தில் நம்பாடுவான்போல அவதரித்த பாணர் பெருமானை அரங்கன் ஆட்கொண்ட அழகுதான் என்னே!
ஸ்ரீரங்கத்தை அடுத்த உறையூர் இங்கே இதேபோல ஒரு கார்த்திகைமாதம் இன்றையதினம் போல ஒரு ரோகிணி நட்சத்ரத்தில் அவதரித்தவர் பாணர். இவர் பிறந்த குலத்திற்கு ஏற்றபடி யாழ்ப்பாடலில் தேர்ச்சி பெற்றார் நாரதர்போல ஞானவைராக்கியங்களுடன் திகழ்ந்தார்.
இறைவன் திருவருளால் சிறுவயதிலேயே அனைத்தும் அறிந்தவராகி இறைபக்தி மேலோங்க காவிரியில் நீராடி காவிரிக்கரையில் தனது இசைக்கருவியுடன் அமர்ந்து அரங்கன்மீது மனமுருகப்பாடிவந்தார்.
இவரது தூயபக்தியைக்கண்ட பிராட்டியார் அரங்கனிடன்” வெகுகாலமாய் நம்மைப்பாடிவரும் இவரை புறத்தே வைத்துப்பார்க்கலாகுமோ “ என்று விண்ணப்பம் செய்தார்.
பாணரின் பெருமையை உலகோர் அறியச்செய்யவும் இறைவனைப்பற்ற பிறப்பு முக்கியமல்ல பக்தியே முக்கியம் என்பதை நடத்திக்காட்டவும் தமது கோயிலின் அணுக்கத்தொண்டரான சாரங்கமுனிவரின் கனவில் தோன்றி,” நமக்கு நல்லன்பரான பாணரை நாளை நீர் உமது தோளிலே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு சந்நிதிக்கு வாரும்” எனநியமித்தார் அரங்கப்பெருமான்.
சாரங்கரும் மறுநாள் காவிரிக்கரை ஓரம் அமர்ந்து கண்மூடி அரங்கனைதியானித்திருந்த பாணரிடம் ,”தாங்கள் அரங்கன்சந்நிதிக்கு வரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
பாணர்திடுக்கிட்டு,” நானா?நீசனான நான் காவிரிக்கரைதாண்டி அரங்க மாநகர்மண்ணைமிதிக்கலாமோ? பிரும்மாதி தேவர்கள் வணங்கும் சந்நிதிக்கு நான் வரக்கூடாது” என்று பயத்துடனும் பணிவுடனும் மறுத்துவிட்டார்.
இதுபோல இருமுறை மறுத்துவிடவும் லோக சாரங்க மகா முனிவர் அரங்கனிடம் இதை விண்ணப்பித்தார்.
பெருமாள் அன்றிரவு இருவருக்கும்கனவில் நியமித்தார். அதன்படி மறுநாள் மகாமுனிவர் அனைவருடன் காவிரிகரைக்குச்சென்று பாணரைப்பணியும்முன்பே அவர் இவர்களைக்கண்டு வணங்கிவிழவும்” நமது
அ ந்தரங்கபக்தனான திருப்பாணாழ்வாரை உமது தோள்களிலே வைத்துவீதியை வலமாக வந்து நமதுசந்நிதியில்விடும்” என்று அருளீச்செய்ததை கூற,”ஐயோ இதென்ன அபசாரம் எம்பெருமானே இதென்ன திருவிளையாடல்” எனக்கூறி சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கிய பாணரை அப்படியே தன் தோளீல் எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வீதி வலமாகசென்றார் .,கருடன் திருமாலைத்தோளீல் ஏற்றியதுபோல!.
அப்போதே பெரியபெருமாள் அவருக்கு ஞான சாக்ஷாத்காரமாக தன்னைக்காட்டிக்கொடுக்க பாணரும் தாம் அகக் கண்ணால் அனுபவித்தை பாசுரமாகப்பாடினார்
கருவறையில் நுழைந்ததும் பெரியபெருமாளின் வடிவழகைக்கண்ணாலே கண்டு,” எழில் நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே” என்று நெகிழ்ந்தார்.
 
 
 
 
 
பெரிய பெருமாளைக்கண்ணாரக்கண்ட பாணர் வாழ்க்கை நியதியைப்பாடவில்லை பாசுரம்தோறும் பலன் சொல்லவில்லை திவ்யதேசங்களின் இயற்கை அழகை வர்ணிக்கவில்லை நாயக நாயகி பாவத்தில் உளம் செலுத்தவில்லை.. பெருமாளே தரிசனம் தந்தபிறகு அவை் எதற்கு? பாதாதி கேச வர்ணனையாக பத்தே பாசுரங்களில் இறைக்காட்சிபெற்றுவிட்டவருக்கு எங்கும் நிறைந்த பரம் பொருள் அவர் உள்ளே புகுந்தபின்பு பழவினைக்கு அங்கு வேலை ஏது? மற்ற உலகாய்த விஷயங்கள் தான் எதற்கு?
திருக்கமலபாதம் அரை சிவந்த ஆடை எழில் வந்த திருவயிற்்று உதர பந்தம் திரு ஆரம் கண்டம் செய்யவாய் ..அந்தக்கண்கள் கரியவாகி புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப்பெரியவாய கண்களாம்!
.பெரியபெருமாளும் ஆழ்வார்திருமேனியை தீக்காப்பிடாமலும் வைதீகசடங்குகள் ஏதுமில்லாமலும் திருமேனியை அப்படியே அங்கீகரித்து அருளினார் அப்போது ஆழ்வார் பெருமான் அனைவரும் காணும்படியாக பெரிய பெருமாள் திருவடிகளில் ஐக்கியமானார்.ஆண்டாளைபோல இப்பேறு பெற்ற இந்த ஆழ்வாரின் சந்நிதியை திருவரங்கத்தில் ஆண்டாள் சந்நிதிக்கு எதிரே காணலாம்.
இதன்காரணமாக இன்றும் அரங்கநாதப்பெருமாளை சேவிப்பவர்களுக்கு ஆழ்வார் எழுந்தருளியுள்ள திருவடியிலிருந்து தீபம் ஆரம்பித்து திருமுடிவரை காட்டி சேவிக்க வைக்கப்பட்டுள்ளது இந்த நடைமுறையைத் திருவரங்கத்தில் மட்டும்காணமுடியும்.
இவ்வாறு ஆழ்வார் அரங்கனைதான் கண்ட அனுபவத்தை பத்தே பாசுரங்களில் பாடிக்காட்டுகிறார் சகலவேத சாரமான ஓங்காரத்தில் அடங்கி உள்ள அகாரம் உகாரம் மகாரம் ஆகிய மூன்று எழுத்துக்களைக்கொண்டு முதல்மூன்று பாசுரங்களில் தொடங்குவதால் இப்பிரபந்தம் ஓங்காரத்தின் சாரமானது என்று ஆழ்வாரே உணர்த்துகிறார். நாம் பற்ற வேண்டியது எம் பெருமானின் பாதுகையே என்பதை ஐந்து ஆறு ஏழாவது பாசுரங்களில் முதல் எழுத்துக்களில் உணர்த்துகிறார்
காண்பனவும் உரைப்பனவும் மற்றொன்றிக்
கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல்
பாண்பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழமறையின் பொருள் என்று பரவுமின்கள்
என்று சுவாமி தேசிகரும் போற்றுகிறார்.






பாரமாய பழவினை பற்றறுத்து* என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்*
கோரமாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான்* திரு
வாரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே
திருப்பாணாழ்வார்


மேலும் படிக்க... "பாணரின் பக்தி!"

Wednesday, November 28, 2012

கலியன் என்னும் கண்ணன் மனம் கவர் கள்ளன்!

கார்த்திகை மாதம் கிருத்திகா நட்த்திரத்தில் அவதரிதத இவர் முகத்தில் நல்ல தேஜஸ், வiீிர்யம், எதிரிகளுக்கு எமன்போல தோற்றமளித்ததால் இவர் தந்தை இவருக்கு பரகாலன் எனப்பெயர் வைத்தாராம்/
 
 
மகாபுத்திசாலியாய் வளர்ந்த இவரை தஞ்சை மன்னன் தனது அவையில் சேனாதிபதியாக வைத்துக்கொண்டார்.
 
 
இவரது குதிரைக்கு ஆடல்மா என்று பெயர்.நர்த்தனம் செய்யும் குதிரையாம்! இவர் ஏறி உட்கார்ந்தால் நாலுகாலும் பூமியில் இருக்காதாம் அப்படி ஒரு வேகம். இவரது பராக்கிரமங்களைக்கண்டு குறுநிலமன்னராக ஆக்கினான். திருமங்கை மன்னன் எனப்பெயர்பெற்றார் கலியன்.
திருவரங்கத்தில திருமதில் கைங்கர்யம் செய்தவர்(திருமங்கை மன்னன் திருச்சுற்று)
நீலன் என்கிற பேர்ல கள்ளனாய்
நீலவண்ணக்கண்ணனின் திருவடியைத்தொட்டு
மகிழ்ந்த பேறு பெற்றவர்
சார்ங்கம் எனும் மாலின் ஆயுதத்தின் அவதாரம்
குமுதவல்லி என்னும் அரங்கபக்தையின்
ஆருயிர்க்கணவன்!
அரங்கனிடம் தன் சிந்தையைப்பறிகொடுத்த ஆழ்வார்!
அந்த ஆழ்வாருக்கு இன்று பிறந்தநாள்!
பன்னிரு ஆழ்வார்களில் கடைக்குட்டி! அதிகபிரபந்தங்களை-பெரிய திருமொழி திருநெடுந்தாண்டகம் திருக்குறுந்தாண்டகம் திருவெழுக்கூற்றிருக்கை சிறிய திருமடல் பெரியதிருமடல் ஆறு பிரபந்தங்களை அருளிச்செய்த ஆழ்வாரும் இவரே! 1084 பாசுரங்கள். வேதாந்த ஞானம் ஆதம் ஞானம் தத்துவ ஞானம் நிறைந்த பாசுரங்கள். கலியனின் அறிவியல் விளக்கம் கொண்ட பாசுரங்கள் பல உள்ளன.
கடைக்குட்டிகளுக்கு பெற்றோரிடம் சலுகை அதிகம்தானே இவரும் திருமாலிடம்,’ இதோபார் எனக்கு ஒன்றும் நீ யசோதைக்கு பண்ணினதுபோல லீலை காட்டவேண்டாம் தேவகியிடம் அவதாரமாய் வந்ததைப்பண்ணிக்காட்டவேண்டாம் சத்ருக்களை வதம் செய்து மார்பிலே ரத்தத்தைக்காட்டவேண்டாம் எம்பெருமானே நீ உன் திருமேனியக்காட்டினால் போதும் எனக்கு சேவை சாதிக்கவில்லை என்றால் ஈஸ்வர தத்துவத்தையே அழித்துவிடுவேன்’ என்று மடல் எடுக்கிறார்!
பரகால நாயகியாய் எம்பெருமானிடம் தூது அனுப்ப அன்னம் வேண்டாம் அது பிரிக்கிற இனம் கிளீயை அனுப்பலாமென்றால் அது ரசமான வஸ்துவை கொத்தித்தின்னும். அதுவும் வேண்டாம் என் மனசையே தூது போகச்சொல்கிறேன். ஆனால் தூது போன மனசும் பரகால நாயகியை மறநது அங்கேயே தங்கிவிட்டதாம்!
 
காதல் மனைவி குமுதவல்லியால்  மாலின்  தீவிர பக்தனானவர் கலியன்.
ஸ்ரீரங்க நகரில்கோயில் மதில் கட்டியவர். கூலி கொடுக்க பணமின்றி ஆட்களிடம் 'பணம் வேணுமா.. இல்லே மோட்சம் வேணுமா' என்று கேட்டதாகவும் மோட்சம் என்று அவர்கள் சொல்ல பரிசலோடு கொள்ளிடத்தில் கவிழ்த்து விட்டதாகவும் ஒரு கதை உண்டு! உண்மையா பொய்யா தெரியவில்லை. ஆனா வழிப்பறி நடத்தி அதுல வந்த நிதியை கோவில் திருப்பணிக்கு அளித்த மகாதிருடர் கலியன்!அந்த கால ராபின்ஹுட் தான் திருமங்கை ஆழ்வார்!
ஒருமுறை ஒரு கல்யாண கோஷ்டி வருகிறது. ஜோய் அலுக்காஸ் விளம்பரம் போல நகைகளை அணிந்தபடி உல்லாசமாய் ஒரு புதுமணத்தம்பதிகள் நடந்துவருகிறார்கள். ஆஹா தெற்குச்சுவர்மதில் கட்ட தேட்டை போடவேண்டியதுதான் என நீலன் மனம் கணக்குபோடுகிறது. அவர்களைத்தடுத்து நிறுத்தி நகைகளை கழற்றித்தர சொல்கிறான். அனைத்தும் அவன் கைக்குவர தம்பதிகளில் கணவனாய் வந்த மாலின் கால் விரலில் உள்ள ஒரு நகையை அவரால் கழற்ற இயலவில்லை.”இதையாவ்து விடப்பா எனக்கு கழற்ற முடியவில்லை’ என்றார்,
“ஆ எப்படிவிடுவது அதை வைத்து நாலு கருங்கல் வாங்கிவிடுவேனே சரி நானே கழற்றுகிறேன்” என்ற கலியன்

வழிப்பறியின் போது, பரமனின் காலில் உள்ள மெட்டியைத் திருடுவதற்காகத் தொட்டார்! வாயால் கடித்து இழுத்துப்பார்த்தார் ஊஹூம் அது விரலைவிட்டு வரவே இல்லை. “என்னய்யா மந்திரம் போட்டாய் இப்படி உன்னோடு இறுகிக்கிடக்கிறதே?’ என்று கலியன் கோபமாய் மாலிடம் வினவ அவரும்,’காதைக்கொடு கலியா உனக்கு அந்த மந்திரத்தை நானும் உபதேசிக்கிறேன்’ என்று அவன் செவியில் அதை ஓதினார். அடுத்தகணம் கலியன் அதிர்ந்து மகிழ்ந்து அண்ணலை வணங்கி எழுந்தான். எந்த ஆழ்வாருக்கும் கிடைக்காத இந்தப்பேறு கலியன் எனும் திருமங்கை ஆழ்வாருக்கே உண்டு
குலம்தரும் செல்வம் தந்திடும்
–அடியார் படுதுயர் ஆயினஎல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
–அருளோடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
–பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
அஷ்டாட்சர மந்திரப்பெருமைதனை உரைக்கும் இந்த ஒருபாடல் ஒன்றுபோதும் மாலின் மேல்ஆழ்வார் கொண்ட ஆழ்ந்த பக்தியினை நமக்கு எடுத்துச்சொல்ல
இவர் கால்படாத திருத்தலம் தான் உண்டா? .
மிக அதிகமான திவ்ய தேசங்களைப் பாடியது இவர் ஒருவர் தான்!வைணவத்தை ஒரு மக்கள் அமைப்புக்குள் கொண்டு வந்தவர்.
சம்பந்தப் பெருமானின் திருக்கை வேலைப் பரிசாக வாங்கியவர்!
இன்று திருவரங்கம் கோவில் இப்படிப் பரந்து விரிந்து நிற்கிறது என்றால், அதற்கு முழுக்காரணம் இவரே! இவர் துணைவியார் குமுதவல்லி நாச்சியார், இவருக்கு உற்ற துணையாய், இறைப்பணிகள் அனைத்துக்கும் கைகொடுத்தார். ஆழ்வார்களிலேயே, தம்மோடு தம் மனைவிக்கும் சேர்த்தே, சிலையும் வழிபாடும் இருப்பது, இவருக்கு மட்டும் தான்!

.
‘தமிழ்கவி கற்கணுமா வா என்கிட்டே” என்று பெருமாளிடமே உத்தரவு போட்ட ஆழ்வாரும் இவரே! கடைக்குட்டி இளம்கன்று பயம் அறியுமா என்ன?!
பெரியதிருமொழியில் இவர்,
“மெய்ம்மை சொல்லில் வெண்சங்கமொன்றேந்திய
கண்ண! நின்தனக்கும் குறிப்பாகில்
கற்கலாம் கவியின் பொருள்தானே”
என்று திருக்கண்ணமங்கை பெருமான் கண்ணன் தம் திருமொழியின் அர்த்தங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுவதை அவன் திருமுகக் குறிப்பிலிருந்து கண்டு,”நீ என்னிடமிருந்து கவியின் பொருளைக் கற்றுக்கொள்ளலாம்” என்று நியமித்தார்
அதற்கு பரம ரசிகனான கண்ணனும்.” அவசியம் உம்மிடமிருந்து கற்கிறேன் ஆனால் இப்போது அர்ச்சாவதாரமாகையாலே அது கூடாது.பின்னொருசமயத்திலே நீர் உமது அவதார நட்சத்திரமான கார்த்திகையில் கார்த்திகைநாளிலே உமது திருநாமமான’திருக்கலிகன்றிதாசர்’ எனும் திருநாமத்துடன் இந்தச் சோழ நாட்டிலே அவதரிக்கபோகிறீர் அப்போது நான் ஆவணி ரோஹிணியில்(கண்ணன்) கிருஷ்ணன் என்னும் பெயரோடு அவதரித்து உம்மை ஆசார்யனாகக் கொண்டு ஆழ்வார்கள் அனைவருடையவும் ஆண்டாளுடையவும் அருளிச் செயல்களின் பொருள்களையும் மற்றும் ரஹஸ்யார்த்தங்களையும் ஸ்ரீ ராமாயணார்த்தங்களையும் உம்மிடம் இருந்தே கற்றறிந்து உலகுய்ய வெளிப்படுத்துவேன்” என்று அருளிச்செய்தான்.அதன்படியே கலிகன்றாகிய திருமங்கையழ்வார் திருக்கலிகன்ற தாசராகிய நம்பிள்ளையாகவும் கண்ணன் ஸ்ரீமத் கிருஷ்ணமாஹ்வரான(கிருஷ்ண சூரி என்னும்) பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதரித்தனர் என்று பெரியோர் பணிப்பர்.
கலியனின் அறிவியல் நம்மை அதிசயக்க வைக்கிறது.
வெற்றிடத்தில் அதாவது வெற்று ஆகாசத்தில் ஒலி கேட்காது என்று சொல்கிறார்கள் இந்த அறிவியலை நாம் ஆராய வேண்டி உள்ளது ஆகாயத்திலிருந்து வாயுவும் வாயுவிலிருந்து அக்னியும் அக்னியிலிருந்து நீரும் நீரிலிருந்து மண்ணும் இறைவனின் கருணையில் சிருஷ்டிகளாயின.
மண்ணிற்கு ஐந்துகுணங்கள்... ஒலி தொடுகை ரூபம் ரஸம் கந்தங்கள்
நீருக்கு ஒலி தொடுகை(ஸ்பரிசம்) ரூபம் ரஸங்கள்
அக்னிக்கு ஒலி தொடுகை ரூபங்கள்(வடிவங்கள்)
வாயுக்கு இரண்டு குணங்கள். ஒலி , தொடுகை.
ஆகாயத்திற்குமட்டும் ஒலி மட்டுமே குணம். குணம் எனில் இயற்கையான தன்மை எனலாம்.
திருமழிசையும், பூநிலாய் ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய் தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய் மீநிலாயதொன்றுமாகி,,,,’ என்று பஞ்சபூதக்கொள்கையை அருளிச்செய்துள்ளார்.
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வர நவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற...
என்று நம் குலபதியான நம்மாழ்வாரும் அருளி உள்ளதில் விசும்பு எனப்படும் ஆகாயத்திற்கு நவில்= சப்தகுணம் என்று அர்த்தம். ஆனால் விஞ்ஞானிகள் ஆகாயத்தில் ஒலி கேட்காது அதாவது வெற்று ஆகாயத்தில் சப்தம் பரவாது என நிரூபித்துவிட்டார்கள்.
காற்றுள்ள இடத்தில்தான் ஒலி ஊடுருவும் என்பதை எல்லோரும் அறிவார்கள். அப்படியானால் வைதீக சித்தாந்தத்தில் தத்துவ விசாரங்கள் செய்யும் இடத்தில் ஆகாயத்தின் குணம் சப்தம் என்று சொன்னது எப்படிச்சரியாகும்? இந்தபிரச்சினையை ஸ்ரீ தேசிகன் திருவாக்கான அறிவுதரும் பெரிய திருமொழி என்றான இந்த பாசுரம் நமக்கு விளக்குகிறது இதை அருளியவர் திருமங்கை ஆழ்வார்தான்.
பெரிய திருமொழியில் ஏழாம் பத்தில் தேரெழுந்தூர் பாசுரம் இது..
திருவாழ் மார்வன் தன்னைத் திசை மண் நீர் எரி முதலா
உருவாய் நின்றவனை ஒலி சேரும் மாருதத்தை
அருவாய் நின்றவனைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே.
விளக்கம்/பஞ்சபூதங்களாய் இருப்பவன் பிரானே திசைகளாய் இருப்பவன் அவனே அதாவது ஆகாயத்தை சொல்கிறார். அதேபோல நிலம் நீர் தீயாய் இருப்பவனும் அவனே இந்த நான்கையும் கூறியவர் அவற்றின் குணங்களைக்கூறாமல் ஒலி சேரும் மாருதத்தை என்கிறார். அதாவ்து மாருதம் எனில் காற்று, காற்றில்தான் ஒலி என்கிற குணம் தெளிவாக இருக்கும். ஒரு பொருள் என்றால் அதற்கு ஏதாவது குணம் இருக்கவேண்டும். பூமிக்கு 5 நீருக்கு4 நெருப்புக்கு 3 வாயுக்கு இரண்டு என்கிறபோது ஆகாயம் என்கிற பொருளுக்கு என்னதான் குணமாக இருக்கமுடியும்?ஆகாயத்தைத்தொட முடியாது. ஆக தன் குணம் ஒலியாகத்தான் இருக்கமுடியும். அதுவும் வாயு எனும் தத்துவத்தில்தான் ஒலி சேர்கிறது. பஞ்சபூதங்களில் ஆகாயம் மிகவும் சூட்சமமான பொருள். அது மனிதனுக்கு அவ்வளவு எளிதில் விளங்காதுதான். ஆகவே ஒலி சேரும் மாருதம் என்கிறார் என்ற விஞ்ஞானக்குறிப்பை இங்கே வைக்கிறார் ஆழ்வார் பெருமான்.
ஆகாயத்தின் குணமான ஒலியை காந்த அலைகளாக்கி கேட்கவைத்துவிட்டார்கள் நெருப்பின் குணமான ஒளீயை அதாவது காட்சியை உலகெங்கும் தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள் இதேபோல காற்றின் குணமான தொடு உணர்ச்சி நீரின் குணமான சுவை மண்ணின் குணமான வாசனை எல்லாவற்றையும் வேறு வேறு அலைகளாக்கி எங்கும் ஏற்றுமதி செய்யவும் முடியலாமோ? அல்லது அப்படி நடந்துதான் விட்டதோ?:)
மறுபடியும் கலியனின் கல்யா்ண குணத்திற்கு வருவோம்.
தன் குலதெய்வம் என்று திருமங்கைஆழ்வார் யாரைச்சொல்கிறார் தெரியுமா?
தான் அவதரித்த அருகில் உள்ள திவய்தேசமாகிய திருவாலிதிருநகரப்பெருமானையா?
திருக்குடந்தை ஆராவமுதனையா?
நரையூர் நின்ற நம்பியையா?
திருக்கண்ணபுரம் பெருமாளையா?
கலியுகத்தெய்வம் வேங்கடவனையா
தனக்கு நிதிகாட்டிக்கொடுத்த பேரருளாளனையா
பூலோக வைகுந்தம் ஆளும் அரங்கனையா?
இவர்களில் யாரையுமே இல்லை!
யாரைத் தன் குலதெய்வம் என்கிறார்?
///
எதிரிகளை அழித்து அவர்களுடைய சரீரங்களை நாய் நரி விலங்குகள்: விரும்பிஉண்ணும்படியாகவும் மெல்லிய சுவாபமுடைய பெண்கள் தங்களே விரும்பி அணைக்க மிடுக்குடைய இலங்கேஸ்வரனான ராவணனுடைய மார்பகத்தை அக்கினியானது ஏறி வதம் செய்துகொடுமையான யுத்தத்தைப்பலரும் காணும்படிசெயதவராய் அந்த சிரமம் தீரும்படி திருக்கடல் மல்லையில் ஸ்தல சயனத்தில் பள்ளிகொண்டிருக்கும் எம்பெருமானை மனதாரக்கொண்டாடும் அடியவர்கள் எவர்களோ அவர்கள் எங்கள் குலத்துக்கு தெய்வர்கள் ஆவார்கள்.
விண்டாரை வென்றாவி விலங்குண்ண . மெல்லியலார்
கொண்டாடும் மல்லகலம் அழலேற வெஞ்சமத்துக்
கண்டாரை, கடல்மல்லைத் தலசயனத்துறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையாரவர்கள் எங்கள் குலதெய்வமே
(பெரிய திருமொழி2.6.4)
கலியன் தோண்ரிய கார்த்திகைத்திருநாள் இன்று.
ஆழ்வார் திருவடிகளே சரணம்!




--

 
மேலும் படிக்க... "கலியன் என்னும் கண்ணன் மனம் கவர் கள்ளன்! "

Monday, November 19, 2012

நெஞ்சில் உரமுமின்றி....





”ஒரு வழியா நம்ம ரங்கப்ரசாத்துக்கும் பொண்ணு கிடச்சி கல்யாணம் நிச்சயம் ஆகிடிச்சிப்பா...    இவன் இப்படியே நாலைஞ்சிவருஷம் இருந்து அப்புறம் கல்யாண்ம் செஞ்சிட்டுக் குழந்தையைப் பெத்துக்கிட்டா அந்தக்குழந்தை, இவனை ’அப்பா‘ன்னு சொல்லாமல் ’தாத்தா’ன்னு தான் சொல்லிடும்”
ராம்குமார், ரங்கப்ரசாத்தை பார்த்தபடி இப்படி உரக்க சொன்னதும் கூடி இருந்த அவன் நண்பர்கள் எல்லாரும் கையிலிருந்த கண்ணாடி டம்ளரை டீபாய்மீதுவைத்துவிட்டு ஏதோ ஜோக்கைக்கேட்டதுபோல கை தட்டி சிரித்தார்கள்.
”டேய்,டேய் என்னங்கடா உங்களுக்கெல்லாம் என் வீட்டுமொட்டைமாடி ல பேச்சிலர் பார்ட்டி கொடுக்கிற இந்த பொன்னான நாளில், என்னைப்போயி இப்படி கிண்டல் அடிக்கறிங்களே! நான் என்னடா செய்யறது, உங்களுக்கெல்லாம் பொறுப்பா உங்க அப்பா அம்மா பொண்ணு பாத்து கல்யாணம் செய்துவச்சிட்டாங்க..எனக்கு அப்பாவும் இல்ல அம்மாவும் இல்ல லவ் செய்ய எந்தப்பொண்ணும் கிடைக்கல...வரவர பொண்ணு கிடைக்கறதே பெரும்பாடா இருக்கு ...தூரத்து உறவுக்காரங்க . அப்படி இப்படி முப்பத்தி ஆறு வயசுல எனக்கும் கல்யாணம் நிச்சயம் செய்துட்டாங்க...”
ரங்க்ரசாத் வெட்கமும் தயக்கமுமாய் பேசிக்கொண்டிருக்கும்போது மோகனின் செல்போன் குரல்கொடுத்தது.முதல் நாள் மழையில் தவறுதலாய் செல்போனை நனைத்துவிட்டதால் ரிப்பேருக்குக்கொடுத்தது அன்று மாலைதான் கைக்கு வந்திருந்தது.
..
“ யாருடா இந்த அர்த்தராத்திரில? உன் ஒய்ஃப் ஜனனிதான் கீழே ஹால்ல மத்த லேடீஸ்கூட டிவி பார்த்துட்டு இருக்காங்க... ..அடிக்கடி போன் செய்ற நாங்க
நாலு பேரும் இங்க இருக்கோம், வேற யாருடா உனக்கு இந்தமும்பைல இந்த நேரத்துல போன் செய்யறது?” கண்ணடித்தான் விட்டல்.
செல்போனை எடுத்து திரையில் ’வாசுதேவன்’ என்ற பெயரைப் பார்த்ததும் முகம் சுளித்த மோகன்,” அட சட்’ என்று சலித்துக்கொண்டான்..
”யாருடா?”
” ஒரு ரம்பகேஸ் .... திருச்சில என் சில அப்பாவோட ஜிக்ரி தோஸ்த்து. பேரு வாசுதேவன் ...அப்பப்போ போனைப்போட்டு அறுக்கும் ...இந்தாளுக்கெல்லாம்
எங்கப்பா என் போன் நம்பரைக் கொடுத்திருக்கார்.. “ பல்லைக் கடித்தான் மோகன்.
அடித்து ஓய்ந்ததும் பாண்ட்பாக்கெட்டில் செல்போனை திருப்பிப் போடுவதற்குள் மறுபடி அழைப்பு வரவும் எடுத்தான். அவரேதான்.
“ அதே ஆளாடா மோகன்? பேசாம போனை சைலண்ட்மோட்ல போடு”
”அதான் பண்ணனும்” என்று மோகன் கடுகடுத்தபோது மாடிப்படி ஏறி அங்கு வந்த அவன் மகன் ஆதர்ஷ்,’அப்பா” என்று கூவினான்.
”என்னடா மணி பதினொண்ணாகுது, இன்னும் நீ தூங்கலையா?”மோகன் தனது ஐந்துவயது மகனை தூ்க்கி எடுத்துக்கொண்டபடி கேட்டான்.
“ எனக்கு தூக்கம் வரல.. மம்மியும் ஆண்டீஸ் எல்லாரும் தூங்கிட்டாங்க.. நிகிலும் வர்ஷாவும் ஆளுக்கொரு செல்போன்ல கேம் விளையாடறாங்க...அம்மாகிட்ட
கேட்டா திட்டுவாங்க அதான் உங்ககிட்ட கேக்கவந்தேன்..அப்பா நானும் விளையாடணும்ப்பா ப்ளிஸ்பா”
”நல்லதாப்போச்சி, நானே இப்போ போனை எங்கடா வைக்கலாம்னு நினச்சிட்டு இருந்தேன்,,, இந்தா ஐபோன் உனக்குத்தான் போன் கால் எதுவும் வந்தால்
அட்டென்ட் பண்ணாத...நான் அப்புறம் மிஸ்டு கால்ல பாத்துக்கறேன் என்ன?
“சரிப்பா”
செல்போனை வாங்கிக் கொண்டு ஆதர்ஷ் திரும்பிப்போனதும் மொட்டைமாடியில் பார்ட்டி களைகட்ட ஆரம்பித்தது.
மூன்றுமணிக்கு எல்லோரும் லேசான தள்ளாட்டத்துடன் கீழே இறங்கிவந்தனர்.
ரங்கப்ரசாத் கேட்டுக்கொண்டபடி எல்லாரும் அவன் வீட்டிலேயே ஹாலில் உருள ஆரம்பித்தார்கள்.
ஜனனி தூக்கக் கலக்கத்தில் மகனிடமிருந்து மோகனின் செல்போனை வாங்கி தலைகாணிக்கு அடியில் வைத்தாள்.
நிதானமாக காலை எழுந்துகொண்டு ஒருவருக்கொருவர்‘ குட்மார்னிங் ! ஹாவ் எ குட் டே!’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பல்லைத்தேய்த்து
காபியைக்குடித்தபடி அரட்டைஅடித்துமுடித்து்க்கிளம்பும்போது மணி ஒன்பதாகிவிட்டது.
செல்போனை உயிர்ப்பித்து வந்த குறுஞ்செய்திகளைப்பார்த்த மோகன் வீறிட்டான்.
”ஐய்யெயொ அப்பா நேத்து மதியமே செத்துப்போயிட்டாராம்”
ஜனனி திடுக்கிட்டு நின்றாள்.
ஆதர்ஷ், ‘தாத்தாவா? திருச்சி தாத்தாவா செத்துப்போயிட்டார்?இனிமே எனக்கு யாருப்பா தெனாலிராமன் கதை சொல்வாங்க ஊஉஊ” என்று அழ
ஆரம்பித்தான்.
“என்ன நேத்து பகலே இறந்துட்டாரா ? மோகன் போனைப்போட்டுக்கேளு சீக்கிரம்” நண்பர்கள் கவலையுடன் பரபரத்தார்கள்.
வாசுதேவனுக்கு போன் செய்தான் மோகன்.
” ஹலோ?என்னாச்சு மாமா ஏன் எனக்கு உடனே சொல்லல்ல?” துக்கமும் கோபமுமாய் கேட்டான்.
“நேத்து மதியத்திலேருந்து பலதடவை முயற்சி செய்தேன்ப்பா..போன் ஸ்விச்டு ஆஃப்னு வந்தது...”
“ஐயோ போன் ரிப்பேர் அதான், சரி , சாயந்திரம் ஏழுமணிபோல சரியாத்தானே இருந்தது அப்போ செய்யக்கூடாதா?”
”ஏழுமணிக்கு உன் வீட்டுல உறவுக்காரங்க எல்லாரையும் ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்டுன்னு கொண்டுவிடப்போகவேண்டி இருந்ததுப்பா.....அப்புறம்
பத்துமணிக்கு மேலன்னு நினைக்கிறேன் மூணுவாட்டி செய்தேனே கட் ஆகிட்டதுப்பா....கடைசில எஸ் எம் எஸ் கொடுத்தேன்பா...”
” ஓ ஆமாம்....இப்போ நினைவுக்கு வருது அப்போ நான் ஆபீஸ் மீட்டிங்க்ல இருந்தேன் அதான் எடுக்க முடியல...சரி டெட்பாடி இருக்கில்ல நான் பொறப்பட்டு
வரேன் இப்போவே, ஆனா ஜனனி ஆதர்ஷ் வரது டவுட்டு..ஆதர்ஷுக்கு எக்சாம் டைம் இப்போ”:
” மோகன், ஒரு நிமிஷம் உன் அம்மா பேசணுமாம்” என்றார் எதிர்முனையில் வாசுதேவன்.
அம்மா என்றதும் மோகனுக்கு வியர்த்தது. அப்பா திருமலை சாது, அதிகம் பேசமாட்டார்.
எத்தனையோ தொழில் இருந்தும் தான் ஆசிரியப்பணியைமேற்கொண்டதை மட்டும் அடிக்கடி பெருமையாக சொல்லிக் கொள்வார்
’கல்வி என்பது ஆழ்வார் பேசுவதுபோல ஞான ஒளி இன்றுவரை அறிவியல் விளக்கமுடியாத ஒரு அதிசியம் தீபம் எப்படி தன்னில்குறையாமல் எப்படி மற்றொரு விளக்கிற்கு ’ஒளியைப்பரப்புகிறது என்று அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாய் இன்புறுகிச்செயும் கல்வி தான்தீபம் .அது தனக்கும் ஒளிகாட்டும் மற்றவர்க்கும் ஒளிகாட்டும் என்பார். அ்ம்மா தைரியசாலி. வீட்டில் முழுப்பொறுப்பும் அம்மாவுடையது. தவறுகளைச்சுட்டிக்காட்டத்தயங்கமாட்டாள். வைராக்கியமும் தன்னம்பிக்கையும் அம்மாவிற்கு அதிகம் என்பதை மோகன் அறிவான்.
”ஹலோ அம்,,, அம்மா” என்றபோது நா தழு தழுத்தது. சதைஆடியது.
”அட , அம்மா அப்பாவையும் நினைவில் இருக்காப்பா? இருந்தால் ஆறுமாசம் மு!ன்னாடி உங்கப்பா திடீர்னு ஸ்ட்ரோக்ல படுக்கைல விழுந்ததும்
வந்துபார்த்திருக்கலாமே? பாவம் கண்காணாத தூரம் ! விசாகிடைக்கணும் அதான் வரலை!. ஒருத்தர். உயிரோடு இருக்கிறபோது அவங்களைவிட்டு ஒதுங்கிப்போகிற உறவுகளை அவர் இறக்கிறபோது தொலைவில் தள்ளிடும் முகமுழிகூட கிடைக்கவிடாது தெரியுமா?”
மோகனின் அம்மா வசந்தா எதார்த்தமாகத்தான் கேட்டாள் மோகனுக்கு சுர்ரென கோபம் தலைக்கேறி விட்டது.
”அம்மா, இந்த நேரத்துல இது தேவையா? பம்பாய் வந்தது முதல் ஆபீஸ்ல கொள்ளையாய் வேலை.அதான் மாசாமாசம் சுளையா மூணாயிரம் ரூபா
அனுப்பறேனே ஒரு நாள் மறந்தாலும் வாசு மாமா போன் பண்ணிடுவாரே ? சரி சரி... நான் கிளம்பி வரேன் எப்படியாவது”
” ஆஹா!வந்து உன் பங்குக்கு சாம்பலைக்கரைச்சிடு...நம்ம ஊர் காவேரிலபோதும்பா.. கங்கைக்கெல்லாம் போயி சிரமப்டாதே என்ன?”
”என்னது சா..சாம்பலா ? அப்போ அப்பாவை தகனம் பண்ணியாச்சா?”
”ஆச்சு...உனக்கு தகவல் சொல்லத்தான் முடியவே இல்லையேப்பா? வாசு மாமாவுக்கு உனக்கு போன் பண்ணிப்பண்ணி விரலே தேஞ்சி போயிருக்கும்”
”அய்யோ அம்மா போன் தண்ணி பட்டு கெட்டுப்போயிருந்ததும்மா....நானே ஜனனி செல்லுலதான் மேனேஜ் பண்ணினேன் தெரியுமா?”
”அந்த செல் நம்பரை எங்களுக்கு நீயோ அவளோ கொடுக்கலையே! வேற எப்படி யாரைக்கொண்டு உனக்கு தகவல் சொல்றது?..மனம் போல மாங்கல்யம்!”
“என்னம்மா இப்ப போய் இடக்கா?”
”இயற்கைதானே இதுல இடக்கு எங்கப்பா வந்தது?”
”சரி நான் வரேன்”
திருச்சி ஏர்ப்போர்ட்டிலிரு்ந்து வாடகைக்காரில் உறையூருக்கு வந்தான். வீட்டிற்குள் நுழைந்ததும் கூச்சலிட்டான்.
”மூத்தபிள்ளை நான் வந்து கொள்ளிபோடணும்னு உங்களுக்குத்   தோண வேண்டாமா? ஐஸ் பெட்டில வச்சிருக்கவேண்டியதுதானே??”
“உனக்காக அந்தி சாயறவரைக்கும் காத்திருந்து தகவலும் கொடுக்க வழிதெரியாமல் தவிச்சி வேற வழி இல்லாம சின்னவனை விட்டு காரியத்தை முடிக்க வச்சேன்..பகலில் இறந்தவர்களை மூன்றரை மணி நேரம் வைத்திருக்கலாம் அதற்குமேல் வச்சிருந்தா இறந்தவர் இருந்தபோது செய்த
புண்ணியங்களுக்குப் பலன் இருக்காது. இறந்தவர்களின் இறுதிப்பயணத்தை தாமதப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.என்கிறது தர்ம சாஸ்திரம்” அழுத்தமாய்  சொன்னாள் வசந்தா.
அம்மாவின் தீர்க்கமான குரல் மோகனை எரிச்சலூட்டியது”‘ஏம்மா உனக்கு அப்பா போன சோகமே கிடையாதா? என்னைக்கண்டதும் கட்டிண்டு அழுவாய்னு பார்த்தா தர்மம் சாஸ்த்திரம்னு பேசறே?”
“அதெல்லாம் சினிமா அம்மாக்கள் செய்யலாம்.எதார்த்தத்துல தங்களை தவிக்கவிட்டுட்டுப்போன பி்ள்ளைகளை நினைச்சி ஒவ்வொரு பெத்தவயிறும்
புழுவாய்த்துடிக்கும்,. உனக்கு நிஜமாவே பிரியம் இருந்தால் ரிடையர் ஆகி வீட்டோடு கிடக்கும் அப்பாவுக்கு ஒரு சிநேகிதனாய் துணைக்கு
இருந்திருக்கமாட்டியா? திடீர்னு பம்பாய் ஒருகோடி வேலை மாத்திண்டு போகத்தோணுமா? மூளை நோயால் பாதிக்கப்பட்டுதன்னாலே எதையுமே
 செய்துகொள்ள முடியாமல் கிடக்கும் உன் இருபத்திஆறுவயது தம்பியை இப்படி விட்டுப்போகத்தான் முடியுமா?அப்பாவை தன்னிடம் அழைத்துக்கொண்டது கடவுளின் விருப்பம். இன்னும் படுக்கையில் கிடந்து அவஸ்தைப்படவேண்டாம்னு அந்தக் கடவுள் தன் நிழலுக்குக்கூட்டிக்கொண்டதுக்கு நான் ஏன் அழணும்? ’அமரபதவி’ன்னா சும்மாவா? என்னடாது அம்மா இப்படிக்கேக்கறேனேன்னு நினைக்கிறியா? அடிப்படையில் அன்பும் ஆதரவும் கொண்டவள்தான்.
 ஆனால் .வாழ்வின் அமைப்பும் சிக்கல்களும் என்னை ரொம்பவே மாத்திட்டது.. இப்ப என்னைச் சுற்றி ஒரு கடினத்தோல். நத்தைக்கும் ஆமைக்கும் ஏன் கடுமையான/கெட்டியான மேல் கூடு? முள்ளம்பன்றி சிலிர்த்தால் ஏன் அதன் முட்கள் வெளிப்படுகின்றன அப்படித்தான்னு வைத்துக்கொள்”
”அம்மா.! உன்னைப்போல எனக்குப்பேசத்தெரியாது ஆனாலும். உனக்கு என்னிக்கும் தம்பி மேலதான் பாசம் அதான் அவனைவிட்டு கொள்ளிபோட
 வைச்சிருக்கே?”
“நான் பாசத்துக்கு முன்னுரிமை கொடுப்பதே இல்லை. அதில் வழுக்கிவிழுவது அபத்தம். அறிவுபூர்வமா சிந்திச்சதுல கடமை என்பதைத்தான் நான் மதிக்கறேன்.உன் அ்ப்பாவிற்கான என் கடமையை சரியா முடிச்சேன் ..உன்னைப்படிக்கவைச்சி கல்யாணம் செய்கிறவரைக்குமான என் கடனையும்  முடிச்சேன்.கடைசியாய் இப்படி மூளைவளர்ச்சி இல்லாத பையனை காப்பது என் கடமை.. ஸ்பாஸ்டிக் என்றால் ஒரு குணப்படுத்த முடியாத நோய்,அவர்களுக்கு ஆதரவான தேவைகள் இருக்கும் பட்சத்தில் நீண்ட நாட்கள் வாழ முடியும்..இந்த நோய் உனக்கு வந்தாலும் என்கடமையை செய்வேன்”
”சரி ....நீ புலம்பிக்கொண்டே இருக்கிறாய், நான் சாம்பலைக்கொண்டு காவேரில கரைச்சிட்டு பத்தாம் நாள் வரேன் ,என்ன?”
கொள்ளிபோட்டவன் கைலயே அதையும் செய்யவைப்பேன்... உனக்கு ஒழிஞ்சா திரும்பிவா”
”என்னம்மா கிண்டலா? எனக்கும் கடமை இருக்காதா?”
”ஆமாம்பா கல்யாணமான இந்த பத்து வருஷத்துல உன் கடமையைதான் நான் பார்த்திட்டுவரேனே உன் அப்பா ஒரு அப்பாவி வாயில்லாப்பூச்சி ,,பக்கவாதம்வந்து படுக்கையோட கிடந்தவரைபார்க்க வராமல் போன உன் கடமையைத்தான் கண்ணால் பார்த்தேனே... மாசாமாசம் அதுவும் வாசுமாமா போன்பண்ணி நினைவுபடுத்தினால் பாங்குக்கு பணம் அனுப்புவாய் கடனேன்னுதான்! கடமையின் நிறம் கருப்பு போல இருக்கு.
 கருப்பு ஒண்ணுதான் நிறம். மத்த எல்லா வண்ணமும் சாயம்தான்.. எதுவுமே அக்னில போட்டா கருத்துப் போயிட்றது இல்லயா.. ஆனா சாயம்
 கருத்துப்போறதுன்னு சொல்றதில்லையே.. வெளுத்துப் போறதுனு சொல்றா!.”
”அம்மா! ஓவரா பேசாதே. இனி உன்னையும் தம்பியையும் நான் தானே பார்த்துக்கணும்? ”
”எப்படிப் பார்த்துக்கொள்வாயப்பா? உன் பம்பாய் ஃப்ளாட் ரொம்ப நாகரீகமானவங்க வாழும் இடமாமே? அங்கே இந்த மூளை வளர்ச்சி இல்லாத தம்பியைக்கூட்டிட்டுப் போகமுடியாதுன்னு உன் பொண்டாட்டி சொல்லிட்டாளே அன்னிக்கே.?.அவளுக்கு எல்லாமே அழகாய் இருக்கணும்னு அடிக்கடி சொல்வா..அம்மாகூட இப்போ பழைய அழகில்லை, இனிபூவும்பொட்டும் போய் அசிங்கமாயிடுவேன். ஆனா நெஞ்சுல உரம் இருக்குப்பா... கணவனை இழந்த பெண்களுக்கு இது கொஞ்சம கூடுதலாகவே வந்துடும். அதனாலதான் புருஷன் போனாலும் தனி ஒருத்தியா குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிவிடுகிறாள் ஒரு பெண். அந்த நெஞ்சுரம் தான் பல எதிர்ப்புகளை தாங்கிக்கொள்ள உதவியா இருக்கு.. அப்பாவை நீ உயிரோட இருந்தப்போ வந்து பார்க்காததையும் நான் இப்போ குத்தமாசொல்லலை...உன் பாட்டியோடு இருந்த சமயத்தில், (அவருக்கு அப்போது 106 வயதுக்கு மேல்) சிவப்பெறும்பு அவரைக் கடித்துவிட்டது. மெல்ல கடிபட்ட
 இடத்தைத் தடவி, எறும்புக்கு மென்னி கின்னி முறிந்துவிடாமல் எடுத்துப் போட்டார். பிறகு சொன்னார். ‘வெய்ய காலம். சின்ன ஜீவன். அதென்ன பண்ணும் பாவம். எத்தயாவது பிடிச்சுண்டா தேவலாம்போல இருக்கோ என்னவோ...‘. அப்படித்தான் பிள்ளைகளின் அலட்சியத்தையும் பெத்தவங்க
 நினைக்கிறாங்கப்பா...“
வசந்தா நிதானம் இழக்காமல் இப்படிச்சொல்லி முடிக்கும் போது வக்கீல் உடையில் ஒரு இளைஞன் வீட்டிற்குள் நுழைந்தான்.
வாசுதேவன் தனது அறுபது வயதைக்கடந்த நிலையிலும் ஓட்டமாய் ஓடி அவனை வரவேற்றார்.
“வாப்பா மாதவா உன்னைத்தான் எதிர்பார்த்திட்டே இருக்கோம்.... ” என்றார் உற்சாகமாக..
“எங்க வாத்தியார் விஷயமாச்சே டிலே பண்ணுவேனா அங்கிள்? அவரால படிச்சி முன்னுக்குவந்த மாணவன்..இன்னிக்கு திருச்சில பிரபல வக்கீலா நான்
 இருக்கேன்னா அது திருமலைசார் அன்னிக்குப்போட்ட கல்விப்பிச்சை.“ என்று நெகிழ்ந்தான்.
வசந்தா அவனைப்பார்த்து புன்னகை செய்தபடி,” இப்படித்தாம்பா அன்னிக்கு அமெரிக்காலேருந்து சதீஷ்னு ஒரு பையன் வந்தான்...அவன் வந்தவேளை எங்கவாழ்க்கைலயும் வெளிச்சம் வந்துவிழுந்தது. அப்போ உங்க வாத்தியாருக்கு கைகால் சுவாதீனமாகத்தான் இருந்தது ..சதீஷ் ஆர்வமாய் தன் வாத்தியார் செய்யும் பூஜையையும் அன்னிக்குப்பார்த்தவன் சட்டுனு கண்மலர்ந்தான் அன்னிக்கு பூஜை த்தட்டில் இருந்த அந்த சாளகிராமங்கள் சில அவன் கண்ணில் பட்டதும், அவைகளைப்பற்றி அவன் பூரித்துச்சொன்னதும் அப்புறம் அந்தக்கல்லை கின்னஸுக்கு தெரியப்படுத்தியதும் எதிர்பாராமல் நடந்தவைகள்.. “ என்றாள் பெருமூச்சுவிட்டபடி.
.
”சதீஷால் திருமலைசாருக்குக்கிடைச்சது ஒரு கோடி ரூபாய்!
 
 World largest Ruby and Saphire weighing 2805 carats in original form, the worth was equal to U.S Defence budget.
 The Guenness Book of world records lists these gems as the largest gems in the world!
 
  ஆமாம் உலகிலேயே பெரிய அளவிலான மாணிக்கக்கல்லும் பச்சைமரகதக்கல்லும் என் ஆசானின் வீட்டில் பூஜை அறையில் வழிப்பாட்டுக்கற்களா இருந்து பூஜிக்கப்பட்டு வந்திருக்கு! பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது எத்தனை நிதர்சனமான உண்மை! சதீஷ் விவரம் சொன்னதும் திருமலை சார் அதைக்கொடுக்க முன் வந்ததே எதிர்பாராததுதான்! ஆனா உயிலைப்படிச்சா
 காரணம் விளங்கிடும்!உடனே திருச்சி தில்லை நகர்ல அப்போ விலைக்கு வந்த வீட்டை வாங்கிப்போட்டுட்டார் .திருமலை சார். பிறகு ஒருநாள் என்னை
 வைத்துக்கொண்டு இரண்டு சாட்சிகளுடன் உயில் எழுதி வச்சிருக்கார்.. அதை வாசிக்கத்தான் வந்திருக்கிறேன்!” மாதவனபெருமையுடன் இப்படிச்சொன்னதும்  மோகன் பொறுக்கமுடியாமல் கேட்டுவிட்டான்,
”இவ்வளவு நடந்திருக்கு இந்தவீட்டின் மூத்தபையன்னு எனக்கு எதுவுமே சொல்லலையே! போகட்டும் உயிலையாவது என் முன்னாடி
 வாசிக்கறீங்களே அது போதும்..அப்பாவுக்குப்பெருந்தன்மை அதிகம்.. அவர் பாரபட்சமாக எல்லாம் நடந்திருக்கமாட்டார் தன் உயிலில்.” என்றான் உறுதியான குரலில்.
ஆனால் உயிலை மாதவன் வாசித்து முடித்ததும் முகம் வெளிறிப்போனவனாய்,” எ என்ன ? அந்த வீட்டை ஸ்பாஸ்டிக் சொசைட்டிக்கு எழுதி வச்சிட்டாரா?  மனசுல என்ன பெரிய பாரி வள்ளல்னு நினைப்பா? மும்பய்ல நான் ஒரு ஃப்ளாட் வாங்க நினச்சிருக்கேன் அதுக்காவது உதவி இருக்கக்கூடாதா? பிள்ளைகளை படிக்க வச்சா மட்டும்போதுமா சொத்து சுகம்னு சேர்த்து வைக்கணும்னு பெத்தவங்களுக்குத்தோணாதா? “என்று ஆவேசமாய் கூச்சல் போட்டுக்கொண்டே இருக்க, வீட்டைக்காலிபண்ணிக்கொண்டு சின்னப்பையனுடன் அந்த மாற்றுத்திறனாளிகளின் மையத்தில் நிரந்தரமாய் தங்கி சேவை செய்ய, வசந்தா ஆயத்தமானாள்.
*************************************************************************************************************************************************************************************************
 
 
மேலும் படிக்க... "நெஞ்சில் உரமுமின்றி...."

Wednesday, November 14, 2012

குழந்தைகள் தினக்கவிதை!






நல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும்
நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும்
உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும்
உத்தமராய் உலகினிலே திகழ்ந்திடவேண்டும்

இளமையிலே கல்விதனை  கற்றிடல் வேண்டும்
இன்முகத்துடனே பழக அறிந்திடல் வேண்டும்
தெளிவுடனே ஏடுகளைப்படித்திடல் வேண்டும்
தேர்ந்த கல்வி கொண்டபின்னும் அடங்கிடல் வேண்டும்

சொல்லும் செயலும் தூய்மையுடன் விளங்கிடல்வேண்டும்
சோர்வு அயர்வு சோம்பலுமே நீக்கிடல் வேண்டும்
கடமையதை தவறாமல் செய்திடல் வேண்டும்
காரியத்திலென்றும் நல்ல உறுதியும் வேண்டும்





வைகறையில்துயிலெழுந்து கொள்ளவேண்டும்
வாழும்வகைத்திட்டங்களை வகுத்திடல் வேண்டும்
மெய்வளர விளையாடித்தீர்த்திடவேண்டும்
மேன்மைமிகு கலைகளையும் கற்றிடல் வேண்டும்

இனிய சொல்லைமட்டும் நா இயம்பிடவேண்டும்
இயன்றவரை அடுத்தவர்க்கு உதவிட வேண்டும்
கனிவுகொண்ட நெஞ்சம்கடைசிவரை இருந்திடவேண்டும்
கருணை ஒளி கண்களிலே திகழ்ந்திடல் வேண்டும்

தாய் தந்தையேநம் தெய்வம் என உணர்ந்திடல் வேண்டும்
தாய்நாட்டின் சிறப்பதனை போற்றிட வேண்டும்
அறிவுதந்த ஆசானையே  வணங்கிடல் வேண்டும்
அன்பினாலே உலகம் தன்னை ஆளவும் வேண்டும்

நாடு நமது நாடு என்ற எண்ணம் வேண்டும்
நன்மையான செயல்கள் மட்டும் செய்திடல் வேண்டும்
ஒற்றுமைப்பயிரினையே வளர்த்திட வேண்டும்
ஒப்புயர்வற்றவர்களைச் சார்ந்திடவேண்டும்

நன்னெறிக்கு  ஒளிகொடுக்கும் வள்ளுவர்  வாக்கு- உயர்
ஞான ஒளி காட்டும் புத்தர் அன்புப்பெருக்கு
உள்ளம் கருணை நிலவும் காந்தி உண்மை விளக்கு
உணர்ந்து நடந்தால்  உண்டு பல நன்மை நமக்கு!
 
மேலும் படிக்க... "குழந்தைகள் தினக்கவிதை!"

Thursday, November 08, 2012

ஆணி முத்தே!



ஆனி(ணி) முத்தே*! என் அருமை அப்பாவே!
வானிலே யார் காண விரைந்தாய் நீ?

தேனினும் இன் தமிழில்
திகட்டாக்கவிதைதந்த
திருலோக சீதாராம் எனும் உன்
குருநாதரைக்காணவா அல்லது
வாழ்ந்திட்ட நாளெல்லாம்
தாழ்வில்லா தமிழுக்கு
சாரதியாய் திகழ்ந்திட்ட
பாரதியைப்பார்க்கப்போனாயா?

உலகத்துச்செய்திகளை எல்லாம்
ஊன்றிப்படித்து உடன்
உணர்வோடு பகிர்ந்து கொள்வாய்
ஒரு நாள் நீயே
செய்தியாவாய் என்று
நினைத்தே பார்க்கவில்லை அப்பா.

இளம் வயதில் உன் தோளில்
ஏறியது குடும்பச்சுமை
இயல்பாக ஏற்றுக்கொண்ட
உன் அதரத்தில்
இறக்கும் வரை
இருந்ததென்னவோ
மாறாத புன்னகை.

வாடிய மனிதருக்கெல்லாம்
வாய் வார்த்தையாலே
ஆறுதல் அளிப்பாய்
வாழ்க்கை அலுத்துவிட்டதாய்
ஒரு நாளும் நீ
வாய்விட்டு சொன்னதில்லை
பாழாய்ப்போன காலன்
பறித்துக்கொண்டானே உன்னை.

உன் ஆறடி உயரத்தில்
அழகிய வதனத்தில்
முத்துப்புன்னகையில்
கனிவான பேச்சினில்
காலனும் மயங்கினனோ
கவர்ந்துதான் போயினனோ?

யாரையும் தாழ்மைப்படுத்திப்
பேசாத நற்குணம் உனக்கு
எவரிடமும் குற்றம் காணா
குழந்தை உள்ளம் உனக்கு
பத்துவயதில்
நான் எழுதிய
சொத்தை ஜோக்கினை
மெத்தப்புகழ்ந்தாய்
நீ தந்த
ஊக்கத்தில்தான்
என் விரல்களுக்கும்
எழுதத்துணிவு வந்தது.

எழுத்துலகில் பிரவேசிக்கையில்
ஏஎஸ் ஆர் மகள் என்ற
அடையாளம் ஏற்றம் தந்தது

”செய் வனத்திருந்தச்செய்
செய்யும் தொழிலே தெய்வம்
அன்பினால் உலகை ஆள்”
இம்மூன்றும் உன் தாரக மந்திரம்
இவற்றை இனிக்கடைப்பிடிப்பதான
உறுதிமொழி தான் அப்பா
உன் மறைவிற்கு
நான் செய்யும்
உண்மையான அஞ்சலி.

********************

* ஆனிமுத்தே என்று ஆரம்பித்தமைக்குக்காரணம்முத்தான என்  அப்பா ஆனிமாதம் பிறந்து ஆனிமாதம் மறைந்தார் என்பதால் ஆ்ணி முத்து சிறப்பானது என்பதும் இன்னொரு காரணம்.

இன்றோடு என் தந்தை மறைந்து நான்கு மாதங்கள் ஆகின்றன.
மேலும் படிக்க... "ஆணி முத்தே!"

Monday, November 05, 2012

மனிதன் என்னும் புதினம்.

”ஒருவன் தனது மனசாட்சியை ஏமாற்றி வாழமுற்பட்டாலும் அவனது வாழ்வு முழுமைஅடைவதில்லை அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான் என்பதுதான் நிதர்சனமஇந்தக்கதையில் மைதிலி பூமா புவனா ஆகியோர் லஷ்மி சரஸ்வதி மற்றும் சக்தி ரூபமாக வலம் வருகின்றனர். நூலாசிரியர் 15நாவல்கள் 250சிறுகதைகள் நுற்றுக்கும்மேற்பட்ட வானொலிநாட்கங்கள் படைத்துள்ளார் அரவிந்தரிடமும் பாரதியிடமும் மட்டற்ற ஈடுபாடுகொண்டவர் ஆன்மிகத்தில் தோய்ந்தவர் இந்த மனிதன் வாசிப்பவர்களை பண்பட்ட மனி்தர்களாக ஆக்க பெரிதும் உதவி செய்யும் என்பது உறுதி.”


 
                                                                                                

இப்படி ஒரு அணிந்துரையுடன் அப்பாவின் நாவல் ’ மனிதன்’ அண்மையில்
திருமகள்பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது.. பல வருடங்கள் முன்பு விகடன் போட்டியில் பரிசு பெற்ற நாவல் .பலரின் இதயங்களை கொள்ளை கொண்ட புதினம்.!. விகடனுக்கு தந்தை சார்பில் நன்றியை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

 அப்பாஉயிரோடு இருக்கும்போதே இந்த ஆண்டு அவரது (ஜூன்19) பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ்கிஃப்டாக கொடுக்கவேண்டும் என என் சகோதரர்களும் கசின் பிரபல எழுத்தாளர்இந்திரா சௌந்தர்ராஜனும் ரகசியமாக இந்த முயற்சியில் ஈடுபட்டதை அப்பா ஒருநாள் கண்டுபிடித்துவிட்டார்! அவருக்கும் இனிய அதிர்ச்சி. மனிதன் நாவல்தான் அந்தநாளில் அவரை வெளி உலகிற்கு அதிகம் அடையாளம் காட்டிய நாவல். அது மறுபடியும்
புத்தகமாக வருவதில் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

கோவை மெர்க்குரி பதிப்பகத்தார் முதலில் இதை அழகாக வெளியிட்டிருந்தனர்
பேராசிரியர் அ சீனிவாசராகவன் அவர்களின் ஆத்மார்த்தமான முன்னுரையுடன் நூல்வெளிவந்திருந்தது.

 1977ல் ஸ்ரீரங்கத்தில் காவிரியில் வந்தது பெருவெள்ளம்.
பொன்னிக்கு அன்று என்ன தோன்றியதோ ஊருக்குள் உற்சாகமாய் வளைய வந்தாள்.

வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது

என்பது ஔவை வாக்கு. ஆனால் அப்பாவின் மனிதன் நாவல் மற்றும் பல எழுத்துக்கள் கவிதைகள் அனைத்தையும் காவிரி அடித்துக்கொண்டுபோய்விட்டது. வீட்டிற்குள்புகுந்து அப்பாவின் அலமாரியைக்குடைந்து திரைக்கையால் அள்ளிக்கொண்டு அன்று அவள்
போனதில் அந்த மனிதன் நாவலும் அடக்கம். அதனாலே இந்த நூலை மறு பதிப்பாகவெளிக்கொணர என் சகோதரர்கள் முன்வந்தார்கள்.

புத்தகத்தின் முகப்பு அட்டைக்காகந்தமிழ்ப்பத்திரிகை உலகின்பிரபல ஓவியரைஅணுகிக்கேட்டபோது அவர் ஒப்புதல் தந்தார் ஆனால் சொன்ன நாளில் தரவில்லை.

அதற்குள் அப்பா ஒரு நாள் கீழே விழுந்து இடுப்பில் எலும்பு
முறிந்து ஆஸ்பித்திரியில் சேர்ந்தார்.ஆபரேஷன் நன்கு முடிந்ததும் அங்கே
படுத்தபடியே மனிதன் நாவலின் மறுபதிப்பைப்பற்றி மகிழ்வுடன்
பேசிக்கொண்டிருந்தார்.

அப்பா உடல்நலன் சரியாகி அவர்மீண்டும் நடப்பதற்குள் புத்தகம் வந்தால்
நல்லதென ஓவியரை மறுபடி அணுகி நிலைமையைக்கூறினோம். அவர் முடியாதென்றுசொல்லாமலேயே நாட்களைக்கடத்தினார். வேறுவழியின்றி அந்த யோசனையைக்கைவிட்டோம்.

எழுத்தாளரும் எனது ஒன்றுவிட்ட சகோதரருமான இந்திரா சௌந்தர்ர்ராஜன் அவர்களின்பெருமுயற்சியால் திருமகள் பதிப்பகம் மனிதன் எனும் புதினத்தை அண்மையில்வெளியிட்டுவிட்டது..


மனிதனைக் கையில்பெற மாமனிதரான என் தந்தைதான் இன்று உயிரோடு
இல்லை. ஜூலை8ம்தேதி அமரராகிப்போன அவரது ஆசையை அவரது புத்திரசெல்வங்களான நாங்கள் நிறைவேற்ற விரும்புகிறோம்.. ஆம் அவரது உன்னதக்காவியமான மனிதனைஉலகிற்கு கொண்டு செல்லப்போகிறோம்.

தமிழ்ஆர்வலர்களே! வாசிப்பில் நேசம் கொண்ட வாசகர்களே! நீங்கள் யாவரும் எனதுதந்தை திரு ஏஎஸ்ராகவன் அவர்களின் இந்த மனிதன் நாவலை வாசிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்

நூல் பற்றிய விவரங்கள்...

*மனிதன்.*
**
**
நாவலை எழுதியவர்... ஏஎஸ் ராகவன்
விலை 190ரூ(360 பக்கங்கள்)
திருமகள் நிலையம்..
,
சுகான்ஸ் அபார்ட்மெண்ட்ஸ்,

13 சிவப்ரகாசம் சாலை
தி நகர்
சென்னை 17

தொலைபேசி 24342899

பிகு..நாவலை  சற்று  சலுகை விலையில் பெற
எழுத்தாளரும் என் உடன்பிறப்புமான  வெங்கடேஷ்(ராஜரிஷி  எழுத்தாளர்)
என்பவரை  இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்  நன்றி
அலைபேசி எண்... 9176846599


--
 
மேலும் படிக்க... "மனிதன் என்னும் புதினம்."

Wednesday, October 24, 2012

அன்னை பராசக்திக்கு அவனியே மணமேடை!


 
 
 
 
 
 
 
 
 
வானச்சீலை!
 
நட்சத்திர மாலை!
 
சூரிய மோதிரம்!
 
பிறைச்சந்திரப்பொட்டு!
 
மின்னல் தண்டை!
 
அன்னை பராசக்திக்கு
 
அவனியே மண மேடை!
 
ஆழ்கடல் அலைகள்
 
இசை ஒலி எழுப்பும்,
 
மலைமேளந்தன்னை
 
காற்று வருடிப்போகும்!
 
காட்டுத்தீ சற்றே,
 
வேள்விக்குத்துணையாகும்!
 
நங்கையவள் கரந்தன்னை
 
நற்சகோதரன் நாரணன்
 
அண்ணல் சிவபெருமான்
 
பொன்கரந்தனில்இணைக்க
 
பூமாரிதனை தேவர்கள் தான் தூவ
 
கல்யாணம்தான் எங்கள்சக்திக்கு
 
காண்போர்க்கு மகிழ்ச்சிப்பெருக்கு!


(தினம் ஒரு தேவி துதியாக மகாளய அமாவாசை தினம்  ஆரம்பித்ததை அம்பிகை அருளால்  இன்று  முடிக்க இயன்றது. ..)

--


மேலும் படிக்க... "அன்னை பராசக்திக்கு அவனியே மணமேடை!"

Tuesday, October 23, 2012

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்!





சங்கீதத்தின் உயிர்நாடியாக விளங்குவது வீணை. வீணையை உற்பத்தி செய்வதும் சரி, பயில்வதும் சரி கடினமானது. வீணை, ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் அதிபதியாய் விளங்கும் சரஸ்வதி தேவியின் திருக்கரங்களில் தவழும் உன்னத வாத்தியமாகும். தமிழ் இலக்கியங்களிலும், பண்டைய சிற்பக்கலையிலும், ஓவியக்கலையிலும், அதி முக்கிய வாத்தியமாக அன்றும், இன்றும் விளங்குவது வீணை தான்.
வீணை மிகவும் தொன்மை வாய்ந்தது. ஆன்மீகம் சார்ந்தது, வரலாற்றுப் பெருமைமிக்கது. இலங்கை மன்னன் இராவணன் வீணை வாசிப்பதில் உயர்ந்தவனாகவும்  அவனது வீணை இசையில் எல்லாம் வல்ல சிவபிரானே லயித்ததாகவும் புராணக்கதை கூறும்.
 
வீணா  வேணு வினோத  மண்டித கரா   என ராஜராஜேஸ்வரியைப்போற்றுகிறோம்.
வீணா வேணு மிருதங்க வாத்ய ரசிகாம் என்கிறார் மீனாக்ஷி பஞ்சரத்னத்தில் ஆதிசங்கரர்.
 
 
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் என்று சரஸ்வதியை துதிக்கிறார் மகாகவி பாரதி.
 
 

இன்றும் திருவரங்கம் அரங்கன் கோயிலில் இரவு திருவரங்கனுக்கு ஏகாந்த வீணை இசை வாசிக்கப்படுகிறது.(வேறு கோவில்களிலும் இருக்கலாம்)
 
 
இன்று தமிழ் கலையுலகில் அரங்கத்தை அலங்கரிக்கும் அதி சிறப்பு வாத்தியங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடித்துள்ள வாத்தியமாக விளங்குவது வீணை…
 
 பலா மரமே இவ்விசைக் கருவியினை வடிவமைக்க பெரிதும் பயன்படுத்தப்படும் என்றாலும் ஒவ்வொரு வகையான வீணையைப் பொறுத்து வீணை  செய்யப்பயன்படுத்தப்படும் மரமும் மாறுபடுகிறது.. கலைவாணி சரஸ்வதிதேவியின் திருக்கரங்களில் காணப்படும் வீணையானது சரஸ்வதிவீணை           அல்லது இரகுநாத வீணை அல்லது தஞ்சாவூர் வீணையென்று அழைக்கப்படும். தஞ்சையை ஆண்ட மன்னனான இரகுநாத மன்னனின் காலத்தில் சிறப்புற வடிவமைக்கப்பட்ட வீணையே மேற் குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய வீணை இசைக் கருவியாகும். இது தவிர நடைமுறையில் பல வகைப்பட்ட வீணை இசைவாத்தியங்கள் இன்று வழக்கத்தில் இடம்பெற்ற போதும் பொதுப்படையில் மேலே குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய தஞ்சாவூர் வீணையே புழக்கத்திலும் தமிழரின் பாரம்பரிய நாரிசை வாத்தியமாகவும் பிரபல்யம் பெற்று விளங்குகின்றது.
மேற்குறிப்பிடப்படும் வீணை ஆனது உற்பத்தி செய்யப்படும் இடத்தின் தன்மைக்கு ஏற்ற வகையிலும் அதன் ஒட்டு மொத்த அழகியல் அலங்கரிப்பு உருவஅமைப்பிலும் தஞ்சாவூர் வீணை சிறந்த அலங்கரிப்புடன் எடை கூடியதாகவும் விளங்குகின்றது. அதே சமயம் மைசூர் வீணையானது அலங்கரிப்பிலும்,வடிவமைப்பிலும் குறைந்ததாகவும், முன்குடமானது அளவில் பெரியதாகவும் விளங்குகின்றது. அவ்வாறே தஞ்சாவூர் வீணையின் (சரஸ்வதி வீணை)
மற்றுமொரு உற்பத்தி பூமியாக திருவனந்தபுரம் விளங்குகின்றது. திருவனந்தபுர வீணை எடையில் குறைவானதாகவும் நீளத்தில் கூடியதாகவும் விளங்குகின்றது. தஞ்சாவூர் வீணை (சரஸ்வதி வீணை), மைசூர், மற்றும் திருவனந்தபுரம், ஆகிய இடங்களை உற்பத்தி மையமாகக் கொண்டு விளங்குவதுடன் அடிப்படையில்அதன் அலங்கரிப்பு, உருவ வடிவமைப்பு என்பன மாற்றம் பெற்ற போதும் அதன் பாவனை, நுட்பவியல், நுணுக்க வடிவமைப்பு என்பனவற்றில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை.
 
கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப்பெற்ற வீணை தஞ்சாவூர் வீணை அல்லது சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை எனப் பல வகைப் பெயர்களால் குறிப்பிட்டு அழைக்கப்படினும் யாவும் ஓரே வகையான வீணையே ஆகும். பொதுவாக சாதாரண மக்களால் வீணை வாசித்தல் என சொல்லப்பட்டாலும் வீணை மீட்டலே சரியான வார்த்தை ஆகும் .

வீணைகளையும் தம்புராக்களையும் உற்பத்தி செய்யும் தொழிலில் திருச்சியும் நாத பரம்பரையை வளர்ப்பதில் தன்னாலான தொண்டு புரிந்து வருகிறது. பல வெளிநாடுகளுக்கு இந்த வாத்தியங்களை ஏற்றுமதி செய்துவரும் ராம்ஜீ கம்பெனியை திருச்சி ஆண்டார் தெருவில் மிக எளிமையான தோற்றத்துடன் ஆனால் உள்ளே கலையின் சாங்கோபாங்கமான விளக்கமுடன் இருப்பதை சிறுமியாய் இருக்கும்போது அப்பாவுடன் சென்று காண நேர்ந்தது. அப்போது அதன் உரிமையாளராக இருந்தவர் அப்பாவிடம்,” இதை தொழில்னு சொல்லமுடியாதுங்க சார் உயிர்த்துடிப்புள்ள கலைன்னு தான் சொல்வேன் வீணை தம்புராக்கள் செய்யறது மட்டுமில்ல அவைகளை ரிப்பேருக்கு யாரும் கொண்டுவந்தா என் சொந்த செலவுலயே செய்து் தந்துடுவேன்” என்றார் மகிழ்ச்சியாக.

ஒலிநயத்தைப்பற்றியும் சங்கீததைப்பற்றியும் நூற்றுக்கணக்கான நூல்கள் அந்ததொழிலகத்தின் சிறிய நூல்நிலையத்தில் இருந்தன உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் அந்த நூல்களைப் பார்த்துதான் சரி செய்துகொள்கிறார்களாம். அந்த வாத்திய தொழிலகத்தின் பின்பக்கம் உள்ள கூடத்தில் முதல் உற்பத்திக்கூடங்கள் இருந்தன ஒருவர் தண்டியை சரி செய்துகொண்டிருந்தார் இன்னொருவர் யாளிமுகப்புக்கு ஃபினிஷிங் டச் கொடுத்தார். வேறொருவர் சுருதிக் கம்பிகளை இணைத்துக்கொண்டிருந்தார் . உற்பத்திக்கட்டங்கள் பலவாறாகக் காணப்பட்டன.
சாதகத்தால் பலம் பெறுகிறது சங்கீத ஞானம் அதேபோல ஆற அமர சிந்திச்சி செதுக்கி நகாசுகள் செய்து நாதப்பரிசோதனை செய்து பெருமை பெறுவதுவீணையாகும்” என்றார் அங்கிருந்த ஒருவர். மேலைநாட்டு சங்கீதவிற்பன்னர்கள் திருச்சியின் இந்த இசைக்கருவி தொழிற்கூடத்திற்குவந்து நாதப்பரிவர்த்தனை செய்து சென்றிருக்கிறார்களாம். பிரமாண சுருதி என்றும் சுருதி ஆனந்தம் என்றும் பெரியோர் கூறுவார்கள் நாதத்தின் உயிர் நாடியே சுருதி தானே!

உற்பத்தியாளராக வியாபாரியாக மட்டும் இல்லாமல் தன்னை ஒரு கலைஞராயும் அமைத்து தாம் உற்பத்திசெய்யும் தம்புரா வீணைகளை சுருதி மீட்டி சரி பார்த்தார் அன்று நான் சென்றபொது இருந்த அந்த உரிமையாளர்(பெயர் மறந்துவிட்டது)ஆண்டார் தெருவில் தயாராகும் வீணையைப்பற்றி அப்போது திருச்சி தொழிலதிபர் இப்படிக்கூறினார் என அப்பா விவரித்தார்,” வீணை இங்கே உற்பத்திச் செய்து விற்கப்படுகி்றது ஆனால் மறக்கப்படுவது கிடையாது! (A Veena is sold here, but is not forgotton)
 
 
இசைக்கருவிகளில் வீணை சிறந்தது ஏன் என்றால் அதை எளிதிலே உண்டாக்கிவிட முடியாதாம் நல்ல மரத்தைதேர்ந்தெடுத்து வெவ்வேறு பகுதிகளையும் அமைத்து அவற்றை இணைத்து தந்தி பூட்டி உருவாக்கவேண்டும். அழகிய பருவ மங்கைபோல் விளங்கும் வீணை கமகத்தில் சிறந்தது. எந்தக்கருவிக்கும் இல்லாத சிறப்பு வீணைக்கு உண்டு , ஆம், மற்ற கருவி்களை இயக்கும்போது ஒலிக்கும் விரல்களையோ வாயையோ எடுத்தால் ஒலி நின்றுவிடும் ஆனால் வீணையை மீட்டியவிரலை எடுத்த பிறகும்  அதன் கார்வை இனிதாக ஒலித்துக்கொண்டே இருக்கும் , பெண் மனம் போல!
 
மேலும் படிக்க... "வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்!"

Monday, October 22, 2012

வெள்ளைத்தாமரைப்பூவினிலே....!

 
 
 
 
 
வெளைத்தாமரைப்பூவினிலே
வீற்றிருக்கும் அவள் முழுவதனம்!
வேதநாயகன் தேவிதனை பக்தர்
வேண்டுதலில் வரும் அருள் சீதனம்!
 
வீணை ஏந்தும் திருக்கரத்தில்
விளைந்தே வரும் ஏழுஸ்வரம்!
கலைமகளை நாம் துதிக்கையில்
கனிந்தே தருவாள் கல்வி வரம்
மேலும் படிக்க... "வெள்ளைத்தாமரைப்பூவினிலே....!"

Sunday, October 21, 2012

அன்னை அலைமகளே!





விண்ணவ ரெல்லாம் விரும்பிடும் அமுதே
மண்ணவர் நாடும் ஆருயிர் மணியே!
அன்னை அலைமகளே!
நண்ணி நினைந்துன்னை நாடிப்பணிவோம்
புண்ணியம் தந்து புகல்தருவாயே!
மேலும் படிக்க... "அன்னை அலைமகளே!"

Saturday, October 20, 2012

அரங்கத்து அன்னையே!



                                          






ஏழ் திரு மதில் நடுவே
எழிலாக வீற்றிருப்பாள்
எதிராசர் தேசிகனொடு
ஆழ்வார்கள் சூழ்ந்திருக்கும்
அரங்கமதில் குடி இருப்பாள்
படி தாண்டா பத்தினிக்கு
பார் எங்கும் பக்தர்கள்
பரிவான அவள் பார்வை
பட்டாலே தீரும் வினைகள்
அரங்கனுக்கு நாயகி
அருள் தருவதில் தயாபரி
அன்னை திருமகளை சரண் புகுவோம்
ஆனந்த வாழ்வினை அடைவோம்!
மேலும் படிக்க... "அரங்கத்து அன்னையே!"

Friday, October 19, 2012

மாதவன் சக்தி .





மாதவன் சக்தி மகாலஷ்மி
மலர்த் தாமரையில் வீற்றிருப்பாள்
மனம்  மகிழவே நல் வரம் அருள்வாள்
மாமலையெனப்பொருள் அளிப்பாள்
மங்கயவள் தாளதனை சரண் புகுவோமே!
மேலும் படிக்க... "மாதவன் சக்தி ."

Wednesday, October 17, 2012

அழகு என்பாள், கவிதை தந்தாள்!

 

சொல்லும் பொருளும் கொடுத்த சுந்தரியே உன்
வெல்லும் திருக்கடைக்கண் வீச்சுக்கிலக்காயின்
கல்லும் கதிர்மணியாம் காஞ்சிரமும் சந்தனமாம்
அல்லும் பகலும் தொழுவேன் அன்னை அபிராமித்தாயே!
பாடாமல் உன் சீர் பகராமல் உன்னடிகள்
நாடாமல், கூடாமல்,நலிந்து கிடந்தேனை
காடாகப்புதராக கல்மனம் கொண்டேனை
தேடாமல் ஆட்கொண்ட தெய்வத் திரு நிறையே!
வாக்கில் இதம் இல்லை வாழவழியும் தெரியவில்லை
காக்க நீ இருக்க கவலையில்லை கடையூர்க்கரசி!
நோக்கில் இனி உன் போலொரு தெய்வமும்தான் உண்டோ
போக்கினியேது தாயே, பொன்மகள்துதிக்கும் மாயே!
நாவில் நயந்துப்போற்றி நற்கவிகள் சாற்றாமல்
பாவியாய் அலைந்தேனை பரிவோடே காத்திட்டு
ஆவியே அழகே என்பாள் ஆறத் தழுவிக்கொள்வாள்
சாவிலும் மறக்கவொண்ணா தமிழ்க்கவிதைதந்தாளே!
 
(Navarathri 3rd day)
மேலும் படிக்க... "அழகு என்பாள், கவிதை தந்தாள்!"

Tuesday, October 16, 2012

அகிலாண்ட நாயகி!


காவிரி நீர் பாயும் திருவானைக்கா நகரினிலே
பூவிரியும் சோலை சூழ் பொற்கோவிலிலே வீற்றிருப்பாள்
தீ விரியும் நம் வினைகள் தீர அருள் புரிவாள்
நாவிரியும் கீர்த்தியினால் நாம் பாடி நோற்போமே!
 
 
 
(நவராத்திரி இரண்டாம் நாளுக்கு)
மேலும் படிக்க... "அகிலாண்ட நாயகி!"

அம்பிகை நேரில் வந்தாள்!

அங்கையற்கண்ணியை தரிசிக்க
மங்கையிவள் சென்றேன்
பூமாலை வாங்கிக்கொள்ள
அவகாசமில்லாமல் மனத்தில்
பாமாலை துதித்தபடி
வெறுங்கையாய் சென்றதற்கு
வேதனையில் தவிக்கையிலே
ரோஜாப்பூமாலையொன்று
எதிர்பாராமல் கரத்தில் விழ
ஏறீட்டேன் வியப்போடு
அர்ச்சகர் புன்சிரிப்பில்
அன்னை முகம் தெரிந்தது
அவள் அணிந்த பூமாலை
என் கையில் கிடக்கையிலே
கண்ணிலோ நீர் மாலை!
 

 
நீர்த்திவலையினூடே
எங்கே எ்ன் அன்னையென்று
எட்டுத்திக்கும் கண்கள் பார்க்க
சிலையாக நின்றிருந்த
சிங்காரியினைக்கண்டவிழி
கிறக்கத்தால் தான் மூட
‘காணவில்லை காணவில்லை’
என்று யாரோ
என் பெயர் சொல்லி
இருமுறை அழைக்க
சுதாரித்து சில நொடியில்
கண்திறந்துபார்த்து நான்
‘தேடுவது யார் நான்
இருக்கின்றேன் இங்கே தான்’’
எனக்கூறி நிமிர
குரல் கொடுத்த நபரில்லை
கூட வந்தவரும் சொன்னார்
’கூப்பிட்டபடி வந்தாள்
கும்பிடும் உன்னைக்கண்டாள்
இங்கேதான் இருக்கின்றாள்
என்ற என் சொலலையும் கேட்காமல்
எட்டி நடை நடந்துவிட்டாள்.!”
வந்தவள் தான் யாரென்று
குழப்பமுடன் நிற்கையிலே
‘்
வெளியே சென்றேதான்
அறிந்திடுவீர் அவளை’
என்றார்கள் அங்கிருந்தவர்கள்.
 
உள் நின்று நான் அழுதேன்
உன்னதத்தை தரிசிக்கத்தவறிய
உன்மத்தப்பெண்ணாக.
(சிலவருடங்கள் முன்பு மதுரையில் எனக்குக்கிடைத்த உண்மை அனுபவம்)திரு ஜிஎம்பி அவர்கள் வரைந்த அன்னைப்படம் இணைத்துள்ளேன்)

--
மேலும் படிக்க... "அம்பிகை நேரில் வந்தாள்!"

Monday, October 15, 2012

சக்தியின் ராஜ்ஜியத்தில்....!







சக்தியின் ராஜ்ஜியத்தில்
சங்கடங்கள் ஏதுமில்லை
பக்தியுடன் நாம் பணிந்தால்
பலவரங்கள்   தந்திடுவாள்
முக்திக்கு வழி கூறும்
முழு நிலவு முகமுடையாள்
சக்தியின் தாள் ஒன்றே
சரணமென்று  உரைப்போமே!
மேலும் படிக்க... "சக்தியின் ராஜ்ஜியத்தில்....!"

Sunday, October 14, 2012

சமயபுரத்து ராணி!


 
 
 
 
அரங்கனுக்குத்தங்கை
அழகுநிறை மங்கை
ஆண்டுக்கு ஓரு முறை
அண்ணன் சீர் பெறும் உமை
பயிருக்கு மாரி
பக்தருக்கு மகமாயி
கலங்கும் நெஞ்சிற்குக்காளி
கள்ளம்புரிவோரவள்முன் காலி
சமயபுரத்து ராணி
சட்டென் எம்மைக்காக்க வா நீ!
 
(நவராத்திரி முடியும் வரை   தினமும் தேவியர் மீதான  கவிதைகளை  எழுத  அன்னை அருளவேண்டும்)

அம்மன் படம் பதிவர் மதிப்பிற்குரிய திரு ஜி எம் பாலசுப்ரமண்யம் அவர்கள்  வரைந்தது.எத்தனை அழகு பார்த்தீர்களா?
மேலும் படிக்க... "சமயபுரத்து ராணி!"

Saturday, October 06, 2012

கலங்கும் காவிரி.







காலை  வழக்கம்போல அருகில் உள்ள பார்க்கிற்கு வாக்கிங் போகக்கிளம்பும்போது செல் கூவியது.

 என்னோடு தினமும் காலையில் நடக்கும் இன்னொரு வாக்காளர்  வந்தனாராவ்  போனில்,” வாக் போகமுடியுமா   இன்னிக்கு?ஒண்ணும் கலாட்டா இருக்காதே ஷைலஜா?’ என்று கவலையுடன் கேட்டாள். கர்னாடகமண்ணின் மகள் எனது இருபதுவருடத்தோழி.

“இந்தக்காலை நேரம் ஆறுமணிக்கு  என்ன கலாட்டா இருக்கப்போகுது வந்தனா?    நாம்  நடக்கலாம்  வா”
என்றேன். உள்ளுற  உதறல் திலகம் என்றாலும் வெளியே வீரமங்கைபோல காட்டிக்கொள்வது வழக்கம்.

கார்டன் சிடியான பெங்களூரில்  பார்க்குகளுக்குப்  பஞ்சமில்லை எங்கள் காலனியிலும் நாங்கள்  வாக்  செல்ல  அழகான் பார்க் இருக்கிறது பெரிய பெரிய மல்டிநேஷனல் கம்பெனிகள்   பார்க்குகளை தத்தெடுத்து வளர்க்கிறார்கள் ஆகவே செடி கொடிகள் எல்லாம்  காம்ப்ளான் குடித்தமாதிரி கன்னாபின்னாவென வளர்ந்திருக்கும்

காலைநேர சில்லென்றகாற்றில் வாக்கிங் போவதைப்போவதைப்போல சுகம் எதுவுமில்லை. பொதுவாய் வாக்பொகும்போது நான் மௌனம் காப்பது வழக்கம் அதனால் காது திறக்கிறது  அரசியல் பேசும்ஆண்களின் பேச்சுக்களையும் அடுப்படிமற்றும் குடும்பவிஷயம் பேசும் பெண்களின் பேச்சுக்களையும் ரசிக்கமுடிகிறது வாக்கிங்கில் இது எல்லாஇடத்திலும் பொது என்றாலும் பெங்களூரில் இதையே  வெவ்வேறுமொழிகளில் கேட்டு ரசிக்கலாம்.


அப்படித்தான்  இன்று காலை நாங்கள்  வாக் போகிறபோது   காவேரி பிரச்சினையை  கன்னடக்காரர்கள் சிலர் அலசிக்கொண்டு  போனார்கள்.கொஞ்சம் காட்டமாக கொஞ்சம் வருத்தமாக பேசிக்கொண்டுபோன காலனி மக்களில் கன்னட  எழுத்தாளர்  திம்மண்னா என்பவர் நடந்துகொண்டிருந்த என்னைப்பார்த்து”நமஸ்காரா” என்றார்.

“நமஸ்காரா” என்றேன்  புன்னகையுடன். எனது  தமிழ்க்கதை  ஒன்றை கன்னடத்தில்  மொழிபெயர்த்தவர் திம்மண்ணா அவர்கள்.  நட்சத்திர எழுத்தாளர் இல்லை என்னபோலத்தான் அவரும்.  எழுத்தை தவமாய் நினைத்து பலவருஷமாய்  கன்னடத்தில் புதினங்கள் எழுதுபவர்.

நடக்கும் போது மனம் யோசித்தபடி கால்களோடு பயணித்தது.

காவேரி பிரச்சினை  என்னவென்று புரிந்திருக்கிறது. கடைகள்  எல்லாம் இன்று மூடிவிட்டார்கள் நடைபாதைக்கடைக்காரர்களிலிருந்து  நகைக்கடைக்கடை மால்  என்று அனைத்து கடைகளையும் அடைத்துவிட்டார்கள்..பஸ்கள்  தமிழ்நாடு எல்லையில் நிறுத்தப்பட்டுவிட்டன. பள்ளி கல்லூரி அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை. அங்கங்கே கல்வீச்சு  நடக்கிறது. சாலை மறியல் நடக்கிறது. கர்னாடகக்கொடியை எந்தியபடி மக்கள்  உத்வேகமான வசனங்களுடன் சாலையில் நடக்கிறார்கள். நடைபாதைக்கடைக்க்காரர்களை  நியாயமாய் அதட்டுகிறார்கள்.

தமிழ்ப்படங்கள்  நிறுத்தப்பட்டுவிட்டன.தொலைகாட்சியில்  பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட சானல்கள்  நிறுத்தப்பட்டுவிட்டன  தமிழ்சானல்கள் அனைத்திற்கும் தடை. நியூஸ்9 சானல்  லைவாக  நகர நிலைமையைக்காட்டுகிறது/ டயர்களை எரிக்கிறார்கள் கோஷங்கள் கூச்சல்கள்!


இங்கே நீர் கொடுப்பதற்கு இல்லை என்கிறார்கள் கொடுக்காவிட்டால் பயிர்கள் வாழ வழி இல்லை என்கிறார்கள் அங்கே. 

காவிரி பிறந்தவீட்டிலேயே  இருக்கப்போகிறாளா புகுந்தவீட்டிற்கு வரப்போகிறாளா?
.

அனைவரின்  துயரத்தையும்  மழை  பெய்து காக்கவேண்டும். மாமழையில் மக்கள் யாவரின் துயரும் மறைந்துபோகுமே.

பிரார்த்தனைதவிர வேறொன்றும்  தெரியாத நிலையில் வீட்டில் பாத்திரங்களை விளக்கிவைத்த வேலைக்காரி ரங்கம்மாவிற்கு  காலை டிபனை  கொடுத்தேன்.

அடுத்து காபியைக்கலக்கும்போது ரங்கம்மா  கூவினாள்.”அம்மா  நீர் கொட்ரீ”
(நீர் கொட்ரீ=தண்ணீர் கொடுங்க)

‘ஓ தண்ணீர்  எடுத்து வைக்க மறந்துட்டேன்னா ரங்கம்மா  இதோ தரேன்”

என்று கன்னடத்தில் சொல்லியபடி  குழாயைத்திறந்தேன்.

கையில் தெறித்த காவிரி கூட  கொஞ்சம் கலங்கித்தான்  தெரிந்தது.

.



 
மேலும் படிக்க... "கலங்கும் காவிரி."

Thursday, October 04, 2012

ரங்கதாசி(சிறுகதை)


 
 
திருவரங்கம் கோயிலை ஒட்டிய முதல்வீதியான கீழஉத்திரவீதியின்

வெள்ளைகோபுரவாசலில் அந்த கார் வந்து வந்து நின்றது.
எதிராஜ் பின் இருக்கையினின்றும் நகர்ந்து கதவைத் திறந்து வெளியே

இறங்கினார். மாலைநேரக் காற்று இதமாக வீச ஆரம்பித்தது.
“ஐயா! இந்த கிழக்குவாசல்வழியே உள்ளேபோனால் அதிக நெரிசல்

இல்லாமல் போகலாம்னு கேள்விப்பட்டுருக்கேன் அதான் இந்த வழில

கொண்டுவிடறேன்” என்ற அந்த வாடகைக்காரின் ட்ரைவர், கேட்டதற்கு

அதிகமாகவே எதிராஜ் பர்சிலிருந்து பணத்தை எடுத்துக்கையில் கொடுக்கவும்

அதை கண்ணில் ஒற்றிக்கொண்டான்.
எதிராஜ் தலையாட்டினார்.
அவருக்கு இது ஒரு எதிர்பாராத பயணம். அறுபதுவருஷ வாழ்க்கையில்

எதுதான் அவர் எதிர்பார்த்தபடி நடந்திருக்கிறது?
எதிராஜிற்கு ஸ்ரீரங்கம் என்ற ஊருக்குள் நுழைந்ததும் நினைவுகள்

 பின்னோக்கிப்போக காரணம் இருக்கிறது.
பள்ளிநாட்களில் எதிராஜிற்கு ஓவியத்தின்மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது.


 கண்காண்பதை விரல் அப்படியே சித்திரமாய் தீட்டும் ஓவியக்கலை அவரிடம்

 ஏழுவயதிலேயே ஒட்டிக்கொண்டது. ரியலிஸ்டிக் ஓவிய முறையில்

அப்போதே நிறைய வரையத்தொடங்கினான் சிறுவன் எதிராஜ். வீட்டிற்கு

யாராவது வந்தால் அவர்களை பத்துநிமிஷத்திற்குள் படமாய்

வரைந்துவிடுவான். பள்ளிக்கூடத்தில் டீச்சர் வீணாபடேல் சொல்லுவாள்.

”எதிராஜ் நீ பள்ளிப்படிப்பு முடித்ததும் ஓவியக்கல்லூரில சேர்ந்து படிக்கணும்

   உனக்கு இந்தக்கலை கைவசமாய் இருக்கிறது!”
ஆனால் அவன் அப்பா இதை ஆரம்பத்தில் எதிர்த்தார்..
“நாமெல்லாம் மிடில்கிளாஸ் நமக்கெல்லாம் படிப்புதாண்டா நல்லது. வேலை,

 உத்யோகம், சம்பாத்தியம்னு கொடுக்கும் ,இதெல்லாம் பைசா காசுக்கு

பிரயோசனம் கிடையாது. ..’என்று முளையிலே அவர் கிள்ளி எறிய

முற்பட்டாலும் வெட்ட வெட்ட துளிர்க்கும் மரக்கிளையாய் ஓவிய ஆர்வம்

  எதிராஜை டில்லியில் பாங்க்பணிக்கு சென்ற அந்த இருபத்தி இரண்டுவயதில்

 மாலைநேரத்தில் ஓவியக்கல்லூரிக்கு செல்ல வைத்தது. அதற்கு அவன்

அம்மா சுசீலாவின் பெருமுயற்சி உதவியது. சுசீலா அந்த நாளிலேயே தமிழ்

இலக்கியம் படித்தவள்.பாரதியையும் கம்பனையும் கரைத்துக்குடித்தவள்.

கலைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்டவள்.
“அவந்தான் வேலைக்குப்போக ஆரம்பிச்சிட்டானே இன்னமும் அவனை

 சின்னப்பையன் மாதிரி நினச்சி விரட்டறீங்க, உங்க சொல்லுக்கே

கட்டுப்படணும் என்கிறீங்க... ஒவ்வொருத்தன் மாதிரி சிகரெட் சினிமான்னு


அலையறானா எதிராஜ்? அவன் ஆசைக்கு இனியும் தடை சொல்லாதீங்க”

என்று சற்று இயல்பைமீறி கணவரிடம் கூச்சலிட்டாள்.
ஓவியக்கல்லூரியில் சேர்ந்தவனுக்கு சிறுவயதிலிருந்து மனித

உருவங்களையே வரைந்திருந்ததாலும் கல்லூரில் சேர்ந்தபிறகுதான்

அனாடமி பற்றி முழுமையாக அறியமுடிந்தது. கண்களையே ஸ்கேல் ஆக

வைத்துக்கொண்டு மனித உடலை வரையக் கற்றுக்கொண்டான்.

 அனாயாசமாக போர்ட்ரைட்டுகளை வரைந்துதள்ளினான்.
பிறந்தது வளர்ந்தது எல்லாம் வடக்கே டில்லியில்தான் என்றாலும் எதிராஜின்

 அப்பாவிற்கு பூர்வீகம் சேலம் அருகே ஒரு கிராமம்தான்.அம்மா

சுசீலாவிற்கும் கிருஷ்ணகிரி என்பதால் இரண்டுதாத்தாபாட்டிகளும் உயிரோடு

 இருந்தவரை அடிக்கடி தென்னக விஜயம் செய்திருந்தான் எதிராஜ்.. வீட்டில்

சரளமான தமிழ் பேசியும் தமிழ் புத்தகங்கள் வாங்கி வைத்திருந்ததாலும்

எதிராஜுக்கு தமிழ்மீது ஈடுபாடு இருந்தது. அம்மாவிடம் நிறைய

பாசுரங்களைக் கற்றுக்கொண்டிருந்தான். தென்னகத்துக் கோயில்களைப்பற்றி

 அவைகளின் சிற்ப ஓவியப்பெருமைகளைப்பற்றி அவன் அம்மா சுசீலா


விவரமாய் சொல்லி இருந்தாள்.அதனால் தென்னகத்துக்கோயில்களைப் பார்த்துவர ஆவலானது

.”போய்வா எதிராஜ்..பாங்கில் லீவ் கொடுக்கும்போது யோசிக்காம உடனே

புறப்பட்டுடணும்..எனக்குத்தான் உன்கூட வரமுடியவில்லை..உன் அப்பா

உடம்பு அலைய அனுமதிக்காதபோது அவரை நான் கூட இருந்து

பார்த்துக்கணும்.அதனால நீ மட்டும் போய்ப்பார்த்துவா...” என்று சுசீலா மகனை

 அனுப்பிக்கொடுத்தாள்.
முதலில்மதுரையை முடித்துவிட்டு அங்கே கண்ட அந்தபிரமிப்பு அகலாமல்

திருச்சி வந்தவனை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சித்திமகன் திவாகர்

பிடித்துக்கொண்டான்.
”ஹேய் எதிராஜா நீ எங்க இந்தப்பக்கம்? தாத்தா பாட்டிகள் இறந்து போனதும்

 நாலுவருஷமா நீ சேலம் கிருஷ்ணகிரி பக்கம்கூடவரலையே?”
”ஆமா திவாகர்....என்னவோ முடியாமல்போய்ட்டது. பிகாம் முடிச்சதும்

டில்லிலயே வேலை கிடச்சிருத்து எனக்கு. இப்போ பாங்க்ல வேலை”
”ஓ வெரிகுட் !பாங்க் வேலைன்னா நிரந்தரமான சம்பளம்டா! எனக்கும்

ஆசைதான் ஆனா எனக்கு அரியர்ஸ் பாக்கி இருக்கு உன்னை மாதிரி நான்

 அழகனும் இல்லை;அறிவாளியும்இல்லையே அதோட நீ

 அதிர்ஷ்டக்காரனும்கூட! சரிசரி திருச்சில என்ன வேலை விஷயமா

வந்திருக்கே?”
”வேலை விஷயமாக ஏதுமில்லை.... சும்மா கோயில்

பார்க்கதான்..மலைக்கோட்டைபோய் தாயுமானவர் தரிசனம்,

உச்சிப்பிள்ளையாருக்கு கும்பிடு போட்டு அப்புறம் ஸ்ரீரங்கம் போய்ட்டு மறுபடி

 மெட்ராஸ் வழியா க்ராண்ட் ட்ரக் எக்பிரஸ் ரயிலைப் பிடிச்சி

 டில்லிக்குப்போகணும்”
 
”அப்போசரி உனக்கு மலைக்கோட்டை ஸ்ரீரங்கம்லாம் நான்

சுத்திக்காட்றேன்..திருச்சில தங்கை வரன் விஷயமா ரயில்வேஸில் ஒர்க்

பண்ற ஒருத்தரை பார்க்க வந்தேன் அவர் ஊர்ல இல்லையாம். அதனால

 உன்கூட கொஞ்சநேரத்துக்கு சுத்தறேன்..எனக்கு ராத்திரிதான்

 கிருஷ்ணகிரிக்குப் போகணும்”
”திவா, உனக்கு எதுக்குடா சிரமம்?”
”அதெல்லாம் ஒண்ணுமில்ல....சௌத் பக்கம் வந்தவன், இப்படி கிருஷ்ணகிரி

 வராமயே போறே நீ.........அம்மாக்கு தெரிஞ்சா கண்டிப்பா தன் அக்காவை


அதாவது உன் அம்மாவை திட்டுவாங்க?”
”இன்னொரு சமயம் கண்டிப்பா வரேன்னு சொல்லு திவா ”
திருச்சியில் மலைக்கோட்டைமேல் நின்று இயற்கைகாட்சிகளை ரசித்த

 எதிராஜ் கையோடு கொண்டுபோன ட்ராயிங் உபகரணங்களை அங்கே

 பரப்பிவைத்தான் மடமடவென வரைய

ஆரம்பித்தான் ..கோயிலுக்குவந்தவர்கள் எல்லாம் வியந்து

பாராtடிப்போனார்கள். சிலர் அவனை போட்டோ

எடுத்துக்கொண்டுபோனார்கள்.
”அடேயப்பா! அச்சு அசலாய் அப்படியே பார்த்ததை தத்ரூபமாய்

வரைந்திருக்கியே எதிராஜ்! கலைகளிலே ஓவியம்தான் சிறந்ததுன்னு

சொல்வாங்க ...ஓவியத்திறமை உன்கிட்ட அபாரமாய் இருக்குடா... சரி ,

அடுத்தது ஸ்ரீரங்கம் கோயில் போகலாம் வா..” திவாகர் உற்சாகமாய் அவனை


உடன் அழைத்துக்கொண்டு போனான்.

 
ஸ்ரீரங்கம்!.

 
கோயிலுக்குள் நுழையும்போதே திவாகர் உரத்தகுரலில் விவரிக்க

ஆரம்பித்துவிட்டான்.” நான் அடிக்கடி வரும் ஊருடா...இதுபூலோக

வைகுண்டமடா எதிராஜ்!   கோவிலில்  சேஷராயர் மண்டபத்துல  நீ ரசிக்க

அபாரமானசிற்பங்கள் இருக்கும்,பார்க்கலாம் வா”  என்று அங்கே

அழைத்துக்கொண்டுபோனான்.
 

அங்கிருந்த சிற்பங்களைப் பார்த்து அப்படியே நெக்குருகி நின்றான் எதிராஜ்.

 சிலமணிநேரங்கள் அங்கே அந்தக்கல்மண்டபத்திலும் எதிரே

மணல்வெளியிலும் அமர்ந்து படங்களை வரைய ஆரம்பித்தான். அருகில்

 அமைதியாய் நின்று கொண்டிருந்த வெள்ளைகோபுரத்தின் வரலாற்றினையும்

 கேட்டபடி கோபுரத்தை அட்டகாசமாய் வரைந்துமுடித்தான்.
“அடுத்து உள் ஆண்டாள் சந்நிதில உள்ள வெளி மண்டபத்துலெல்லாம்

அட்டகாசமான சிற்பங்கள் இருக்கும் அதை நீ பார்த்தபடியே அங்கேயே

  வாசலில் உக்காந்து வரையலாம் !”
எதிராஜ் ஆசைதீர எல்லா இடங்களையும் பார்த்து பலவற்றை வரைந்து



சிலவற்றை மனதில் படம்பிடித்துக்கொண்டான்.
”திவா! ஸ்ரீரங்கம்கோயில்ல ஏதோ ஆகர்ஷணம் இருக்கு என்னை இது மறுபடி


 இழுக்கப்போகிறது” என்றான் உணர்ச்சி நிறைந்த குரலில்.
“சரிடா நீ நிதானமா இன்னும் சிற்பங்களையும் ராமானுஜர் சந்நிதில இருக்கிற

ஓவியங்களையும் பார்த்துவா...எனக்கு நேரமாறது,.நான் கிளம்பறேன் என்ன?”
திவாகர் விடைபெற்றுக்கொண்டான்.
எதிராஜ் உள் ஆண்டாள் சந்நிதியின் வாசலுக்கு வந்தபோது

கையில்பூத்தட்டுடனும் துளசி மாலையுடனும் ஒரு சிறுமி


எதிர்ப்பட்டாள்.பன்னிரண்டுவயதிருக்கும்.சீட்டித்துணியில் பாவாடையும்


 அதேதுணியில் பெரிதான சட்டையும் அணிந்திருந்தாள்.உடம்பு

ஊசிபோலிருந்தது பார்வையில் ஏதோ வசீகரம் தெரிந்தது.’’அண்ணே

அண்ணே துளசிவாங்கிப்போங்கண்ணே மொழம் ரெண்டணாதான்” என்றாள்

 கெஞ்சுதலான குரலில்..
கேட்டபடியே எதிராஜின் கையிலிருந்த பென்சில்ஸ்கெட்ச்

ஓவியங்களைப்பார்த்துவிட்டாள்.விழிமலர,”நீங்களா வரைஞ்சீங்க? ரொம்ப

ஜோரா இருக்கே...அதிலயும் அந்த குதிரைவீரன் அப்டியே கோவில் உள்ளாற

இருக்குற சிலைபோலவே இருக்குதே...அண்ணே நானும் படம்

வரைவேன்...வீட்ல வச்சிருக்கேன்...”என்றாள் மகிழ்ச்சியான குரலில்.
“அப்படியா? ‘
“ஆமா..ஆனா வீட்ல நான் வரையத்தொடங்கினாலே நாலு

 சாத்துசாத்துவாங்க ...’அனாதைதுக்கிரிக்கு ஓவியம் கேக்குதோ, போடி போயி

வெராட்டிதட்டி பூவு பறிச்சி தொடுத்து வியாபாரம் செஞ்சி துட்டு

சம்பாரிச்சிவாடி’ன்னு திட்டுவாங்க...நான் யாருக்கும் தெரியாம கோவில்

உள்ள எங்காச்சும் ஓரமா உக்காந்து வரைஞ்சிடுவேன்....”
“பாவம்..ஆமா ஏன் உன்னை வீட்லதிட்றாங்க?”குழப்பமாய் கேட்டான் எதிராஜ்.
 
அதான் சொன்னேனே நான் அனாதையாம் குப்பைத்தொட்டில

கெடச்சவளாம்..”
“அய்யோ பாவம்...படிக்கலயா பள்ளிக்கூடம் போகலையா?
“ம்ம் போனேன் அஞ்சாவதுவரை படிச்சேன்.ஐஸ்கூலெல்லாம்

அனுப்பலண்ணே....வெரட்டி தட்டவும் பூக்கட்டவும்தானே நேரம் சரியா


இருக்குது?”
எதிராஜிற்கு அந்தப்பெண்ணைப்பார்க்கவே பரிதாபமாகிவிட்டது... “படிக்க

உனக்கு ஆசை இருக்கா?” என்று கேட்டான்.
“ம் இருக்குண்ணே...”
“உன் பேர் என்னம்மா?”
“பூங்கோதை”
“ஒருநிமிஷம் இரு... இங்க வெளில கடைல போன் இருக்கா ஊருக்கு


எங்கம்மாகிட்ட பேசணும் உன்னைப்பத்தி..”
“இருக்குண்ணே...தெற்குவாசல்ல கடைல போன் இருக்கு..வாங்க

கூட்டிப்போறேன்..”
ஒடிசலான உடம்பு துறுதுறுவென்ற கண்கள் சுருட்டையான கேசம் என்றிருந்த

 பூங்கோதை விறுவிறுவென முன்னே நடக்க எதிராஜ் தொடர்ந்தான்.
போனில் சுசீலா,”நல்ல காரியம்டா எதிராஜா...அன்ன சத்திரம் ஆயிரம்

 வைக்கிறதைவிட ஒரு ஏழைக்கு கல்விக்கு உதவறதை பாரதி சிலாகிச்சி பாடி

 இருக்காரே! சென்னைல என் சிநேகிதி ஒருத்தி சமூக சேவகி. நகரில் பிரபல

புள்ளி அவள் கண்டிப்பா நமக்கு உதவுவா..நான் இப்போவே அவகிட்ட விவரம்

சொல்லிடறேன்...பூங்கோதையை அவளை வளர்த்தவங்ககிட்ட நல்லபடி

சொல்லி சென்னைக்கு கூட்டிப்போயி சேர்த்துடு. தேவையான பணம் அந்த

ஏழைக்குடும்பத்துக்குக் கொடுத்துட்டு வா...எல்லாம் நல்லபடியா முடியட்டும்

 அந்த ரங்கன் க்ருபைல..” என்றாள் நிறைவான குரலில்.
விட்டது சனி என்பதுபோல பணத்தை வாங்கிக்கொண்டு பூங்கோதையை


வளர்த்தவர்கள் அவனோடு அனுப்பிவைத்தார்கள்.
சென்னையில் அந்த அனாதைகளுக்கான பள்ளியில் பூங்கோதை

ஆறாம்வகுப்பில் சேர்ந்தாள். நாலைந்துவருடங்கள்வரை டில்லிக்கு

எதிராஜனுக்கு தவறாமல் கடிதம்போடுவாள். நன்றி தெரிவித்துக்கொண்டே

 இருப்பாள் ஒவ்வொரு கடிதத்திலும். அவளது ஓவியத்திறமையை பள்ளியில்

ஊக்கப்படுத்தி பலபோட்டிகளுக்கு அவளை அனுப்பியதில் பரிசுகள்

வாங்கியதை எல்லாம் எழுதுவாள். திடீரென மாரடைப்பில் எதிராஜின் அப்பா

இறந்துபோனதற்குக்கூட மிகவும் வருத்தப்பட்டு ஒரு கடிதம் எழுதி இருந்தாள்.
பத்தாம்வகுப்புபடிக்கிறபோது திடீரென அவள் பள்ளியிலிருந்து ஒருநாள்

தந்திவந்தது. பள்ளிக்கூட உல்லாசப்பயணமாய் இரவு ரயிலில்

திருச்சிக்குப்போகிறபோது வேடிக்கைபார்க்க கதவருகில் நின்ற பூங்கோதை

காவிரிப்பாலத்தில் கால்தடுக்கி விழுந்து ஆடிமாத வெள்ளத்தில்


அடித்துக்கொண்டு போய்விட்டாள் என்று.
எதிராஜிற்கு அப்போதுதான் கல்யாண நிச்சயம் ஆகி இருந்தது.பூங்கோதையை

தன் தங்கையாய் கல்யாணத்தில் தாலிமுடிக்கு அழைத்துக்கொள்ளலாம் என


 நினைத்திருந்தான் சுசீலா அவளுக்கு பட்டுப்புடவையெல்லாம்


வாங்கிவைத்திருந்தாள்.இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்திவந்ததும் தாயும்

 மகனும் அலறிப்புடைத்துக்கொண்டு ஓடினார்கள். ஒருவாரம் தேடியும்

 பூங்கோதை உடல் அகப்படவே இல்லையாம்..புதைமணலில் சிக்கி உள்ளே

 போயிருக்கும் என்று முடிவுகட்டினார்கள்.
அவ்வளவுதான் பூங்கோதை என்பவளின் சரித்திரமே முடிந்துவிட்டது என

நினைத்து பெருமூச்சுவிட்டார்கள் சுசீலாவும் எதிராஜும்.
அடுத்த ஒருமாதத்தில் எதிராஜுக்கு திருமணம் நடந்துவிட அவன் மனைவி

மீராவிற்கு எந்தக்கலைகளிலும் நாட்டமுமில்லை சராசரிப்பெண்ணாக

குடும்பம் நடத்தவும் முடியவில்லை. எதிராஜ் பல நேரங்களில் ஓவியம்


மற்ரும் தூரிகையுடன் இருப்பது கண்டு கோபம்வர அது ஹிஸ்டீரியாவில்


கொண்டுவிட வீட்டில் எப்போதும் சண்டைதான், சச்சரவுதான். எதிராஜ்

 வெறுப்பில் வரைவதையே நிறுத்திவிட்டான்.
சுசீலாவுடன் அவன் மனைவி மீரா ஒத்துப்போகவில்லை. ‘நீயாவது அவளோட

  சந்தோஷமாய் இருப்பா நான் காசி ராமேஸ்வரம்னு சுத்தப்போறேன்’ என்று

சுசீலா புடவைமற்றும் புத்தகப்பையுடன் கிளம்பிவிட்டாள். காசிபோகும்

வழியில் பஸ் விபத்தில் இறந்தும் போனதாய் தகவல் வந்தபோது எதிராஜ்

 நிலைகுலைந்துபோனான்.
ஆயிற்று பல வருஷம் கழித்து அரவிந்தன் பிறந்தான் .அம்மாவைப்போல

 இல்லாமல் அவன்பாட்டியைப்போல வளர்ந்தான்.அப்பாவின் மனதை அவன்

புரிந்துகொண்டிருந்தான்.அதனால்தான் அன்று .”அப்பா உங்களோட

சஷ்டியப்தபூர்த்தியக் கொண்டாடவேண்டாம்னு சொல்லிட்டீங்கப்பா... அம்மா

 மட்டும் உயிரோட இருந்தா ஜாம் ஜாம்னு கொண்டாடி இருப்பேன். . ஆனா


அம்மா கான்சர்ல தன்னோட முப்பதிஅஞ்சுவயசுலெயே போவாங்கன்னு

  எதிர்பார்க்கவே இல்லயே. அப்பா! நேத்து உங்க பழைய ஓவியங்களை

எல்லாம் பார்த்தேன் அதுல அரங்கன் கோயில் சிற்பங்களை நீங்க அனுபவிச்சி

வரைந்த விதமே சொல்லுகிறது உங்க மனம் அங்கயே இருக்கிறதென்று.

இதை நான் எப்போதோ செய்திருக்கணும் இப்போ உங்களின் அறுபதாவது

பிறந்தநாளை முன்னிட்டு நீங்க தெற்கே சிலகோயில்கள் போய்ட்டுவர

ஏற்பாடு செய்துட்டேன்....டில்லியைவிட்டு நாம் சென்னைக்கு வந்த இந்த

ஒருவருஷமா நீங்க வீட்லயே முடங்கி இருக்கீங்க..உங்கள் தாயாரின்

படத்தைப்பார்த்துப்பார்த்து கண்கலங்கறீங்க....உங்க மனசு வயசானகாலத்தில்

உற்சாகமாக இல்லை.. அதுக்கு ஓவியக்கலையை நீங்கமறுபடி

ஆரம்பிக்கணும்ப்பா... அதுக்கு அரங்கன்கோயில் போய்வந்தா அது ஒரு

உந்துதலா இருக்கும் உங்களுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும். ஆபீஸ்

வேலைகாரணமா நானும் உடன் வரமுடியாத சூழ்நிலை..நீங்கள் அவசியம்

போய்வாங்கப்பா மனமாறுதலாகவும் இருக்கும் இந்தப்பயணம்!” என்று

ரயிலுக்கு டிக்கட் வாங்கி கையில்கொடுத்தான்.
எதிராஜனுக்கும் எப்போதும் எதையோ இழந்ததுபோன்ற உணர்வாகவே

இருந்தது. யாருடனான போட்டிக்காக நினைவுகளை அசைபோடாமல்

 தனிமையில் உழன்று எதிலும் பற்றில்லாத நிலையில் இருக்கிறோம்?

ஜீவிதம் என்பது போட்டியல்ல. சேர்ந்தும் சார்ந்தும் வாழ்வதே ஜீவிதம். என்று

 தோன்றியது. நல்ல நினைவுகள் என்பது வியர்க்கிறபோது வீசுகிற காற்று

மாதிரிவிரும்புகின்ற மணம் மாதிரி.வீணையை யாராவது போகிற போக்கில்

மீட்டிவிட்டுப்போனால் வீசும் இளந்தென்றலில் மெல்லியதாய் அதன் அதிர்வு

கேட்டுக்கொண்டே இருப்பதுபோல மகனின் பேச்சு எதிராஜனை யோசிக்க

வைத்தது.
எதிராஜ் புறப்பட்டுவிட்டார்.
வெள்ளை கோபுர வாசலில் நுழைந்ததுமே பின்னோக்கிப்போன நினைவுகளை

  மணல்வெளியில் அடித்த காற்றின் ஸ்பரிசம் மீட்டுக்கொண்டுவந்தது.
வலப்புறம் எதிரே சேஷராயர்மண்டபம் கண்ணில்படவும், அந்த இடத்தில்

  முன்பு திவாகருடன் நின்று ரசித்த சிற்பங்களையும் உடனே ஓவியம்வரைய

 மணல்வெளியில் உட்கார்ந்ததையும் நினைத்துக்கொண்டார் அப்படியே

உடையவர் சந்நிதியில் உட்பிராகாரத்து ஓவியங்களில்

மனதைசெலுத்தினார் .பாதி ஓவியங்கள் சிதிலமாகி இருந்தன.
அரங்கனை தரிசிக்க கருடமண்டபம் வழியே உள்ளேபுகுந்தார் . தர்ம தரிசன

க்யூவில் அரங்கனின் அன்பர்களோடு அன்பராய் கால்கடுக்க நின்று பின் க்யூ

நகர்ந்து சென்றதில் கடைசியாய் கண்குளிர அரங்கனை தரிசித்துக்கொண்டார்.

 தங்கவிமானத்தைப்பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டார். கிளிமண்டபம்

 வழியே வெளியே வந்தார்.
தாயாரை சேவித்து ரங்கவிலாசக்கடைகளை நோட்டமிட்டபடி உள் ஆண்டாள்

சந்நிதியை நெடுங்கினார்.
சந்நிதி உள் அடங்கி இருந்தது. ஆண்டாள் அரங்கனுடன் ஐக்கியமாகும்வரை


பிரவாகமாய்பொங்கினாள். மேகத்தை,மழையை,மயிலைக்குயிலை என்று

அனைத்தையும் அரங்கனின் காதலுக்கு தூதுவிட்டாள். அவன் கோயில்

 வந்தபிறகு அவனுக்கு உடையவளானதும் சந்நிதியின் உள்பக்கமாய் அடங்கி

அமைதியாய் இருக்கிறாள். ஆழ்வார்களில் ஆண்டாள் சந்நிதிக்கு மட்டுமே

  இத்தனை பெரிய வெளிவாசல்!
எதிராஜ் சென்றது வார நாள் ஆனதால் வெளி வாசலில் அதிகம்கூட்டமில்லை

. அதனாலேயே அமைதியாய் அனைத்தையும் ரசித்து ஆழ்ந்து

அனுபவித்துப்பார்த்தபடி வந்தவருக்கு, ஆண்டாள் சந்நிதி நுழைவு வாசலில்

  மெல்லியகுரலில் பாசுரம் கேட்கவும் நின்றார்..

 
பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்..’
குரல் வந்த திசையைப்பார்த்தார். அங்கே சிறு மரஸ்டூலில்மூங்கில்கூடையை

 வைத்து அதில் பரவி இருந்த உதிரிப்பூக்களை வாழைநாரினால் குனிந்ததலை


நிமிராமல் தொடுத்துக்கொண்டிருந்த அந்தப்பெண்மணியை நெருங்கினார்.
“பூக்காரம்மா நல்லா பாசுரம் சொல்றீங்களேம்மா...காதுக்கும் இனிமை

 ஆழ்வார்பாசுர வரிகள் மனசுக்கும் இனிமை” என்றார் .
‘கோரமாதவம் செய்தனன் கொல்...’என்று பாடிக்கொண்டேவந்த

 அந்தப்பெண்மணி சட்டென பாட்டை நிறுத்திவிட்டு நிமிர்ந்தாள்


. ஐம்பதுவயதிருக்கலாம் மெலிந்த உடல்வாகாய் தெரிந்தது. அரக்கிலும்

மஞ்சளிலுமாய் கட்டம் போட்ட நூல் புடவையை தோளோடு

இழுத்துப்போர்த்தி இருந்தாள். நரைத்த அடர்த்தியான

சுருட்டைத்தலைமயிரை அழுந்தவாரிக்கொண்டை

.நெற்றியில் சிவப்பு நிறத்தில் நீளத்திலகம். மருவும் கனகாம்பரமும்

மல்லிகையும் சேர்ந்து கட்டிய பூச்சரத்தை கையிலெடுத்தவள்.”பூ வேணுமா

சாமீ?” என்று கேட்டாள்.
வயதானாலும் துறுதுறுவென்றிருந்த அந்த விழிகளைப் பார்த்த எதிராஜ்

சட்டென அதிர்ந்தார். அதற்குள் அவளும் அவரைக்கூர்ந்து பார்த்துவிட்டு,”அ,

  அண்ணே எதிராஜ் அண்ணனா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டாள்
பூ பூங்கோதை நீ நீ,,,,,,?” என்று சந்தேகமும் வியப்புமாய் கேட்கும்போதே ‘

குப்’பென வியர்த்தது, எதிராஜனுக்கு. அதே குரல்! அதே முகம்!எத்தனை


வருடங்கள் ஆனால் என்ன நெஞ்சில்பதிந்த சில முகங்களின் நினைவு

வற்றுவதே இல்லைதான்.
”பூங்கோதை.... நீ,,,, நீ.... இ்றந்துட்டதா...?” குழப்பமும் திகைப்புமாய் எதிராஜன்


கேட்டார்.
பூங்கோதை பூச்சரத்தை கூடையில் போட்டுவிட்டு எழுந்து நின்று


கைகுவித்தாள். கண்கள் கலங்க ஆரம்பித்தன. கை நடுக்கத்தை மறைத்தபடி

 பேச ஆரம்பித்தாள்.
” அண்...அண்ணே...எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா? ஆமாண்ணே.

நன்றி மறந்தவளா நான் உயிரைவிட்டுவேனோன்னு

நினச்சேன்...நல்லவேளை என் அரங்கன் என்னை அந்த பாதகத்திலிருந்து

காப்பாத்திட்டான். நான் இறந்துட்டதா ஊர் உலகம் நம்பினதை நீங்களும் நம்பி

 இருப்பீங்க...ஆனா அன்னிக்கு உல்லாசப்பயணம் போன ரயிலில் பாதிராத்திரி

 அந்தபள்ளி ட்ராயிங் மாஸ்ர் என்கிட்ட தவறா

நடக்கவந்தாரு...அதுக்குமுன்னாடி பலதடவை அவர் பள்ளிக்கூட

ஹாஸ்டல்ல தனியா என்னைப்பார்க்கவரப்போ நான் அவரை


எச்சரிச்சிருக்கேன் ஆனா அவருக்கு நான் அனாதை கேட்க யாருமில்லை

என்கிற தைரியம். அரசியலில் செல்வாக்குள்ள மனுஷன் ஒருத்தர்கிட்ட நான்

 தாசியாப்போகணும்னு மிரட்டினாரு. திட்டம்போட்டு தனக்கு சாதகமான

 சூழ்நிலையை ரயிலில் ஏற்படுத்திட்டு என்னை நெருங்க வந்தாரு.

... அப்போதான் நான் ஒரு முடிவெடுத்தேன்.அரங்கன் காலடிலபோய்

சேர்ந்துடலாம்னு அந்த அயோக்கியனிடமிருந்து

என்னைக்காப்பாத்திக்கொள்ள வேற வழிதெரியாம காவிரில

பாய்ஞ்சிட்டேன்..ஆனா காவிரி என்னைக்கொண்டுபோயி ஒருநல்லவர்

கைலஒப்படைச்சிட்டா... ஆமாம்...அந்த நடுஇரவுல காவிரியின் மறுகரைல

 அதன் அழகை ரசிச்சி கவிதை பாடிக்கொண்டிருந்த ஒரு காஷ்மீரத்து மனிதர்

நான் மிதந்துவருவதைப்பார்த்து நீர்ல பாய்ந்து என்னை உடனே

காப்பாத்தினார் .பக்கத்துல ஒரு நர்சிங்ஹோம்ல சேர்த்து சாகக்கிடந்த உயிரை

 மீட்டார்.அவர்கிட்ட நான் நதியில் குதித்த காரணத்தை சொன்னேன்..என்னால

திரும்ப சென்னைக்குப்போக முடியாத நிலைமையை விவரிச்சேன். என்னை

அவர் ஓசைப்படாமல் காஷ்மீருக்குக்கூட்டிப்போனார். அன்பான குடும்பம்

அவருடையது அங்கே நான் அவருக்கு இன்னொரு மகளா வளர்ந்தேன்.‘.பூ’

 என்ற புனைபெயரில் சித்திரங்களை வரைந்தேன். வெளிநாட்டில் எல்லாம் என்

 சித்திரங்கள் விலைபோனது. நிறைய சம்பாதித்தேன்..அந்த காஷ்மீரத்து

மனிதர் எட்டுவருஷம் முன்பு இறந்ததும் அந்தக்குடும்பத்திடம்விடைபெற்று

மறுபடி இங்க வந்தேன் ...அண்ணா...உங்க டில்லிவீட்டுமுகவரி எல்லாம்

 நினைவில் இல்லாமல்போய்விட்டது. மேலும் நான் இறந்துவிட்டதா

எல்லாரும் நினச்சிட்டு இருக்கிறதை உயிர்ப்பித்து குழப்பம்

உண்டாக்கவேண்டாம்னு நினச்சேன்..ஆனால் உங்களுக்கு நான் ஏதோ

துரோகம் செய்துவிட்டதாகவே உறுத்தல் இருந்தது. உயிர்போவதற்குள்

என்றாவது உங்களை சந்திக்க அரங்கன் வாய்ப்பளிப்பான் என்று நம்பித்தான்

இங்கே உங்களை நான் முதலில் சந்திச்ச இதே இடத்தில்

 உட்கார்ந்திருக்கிறேன்.....”
நிதானமாய்ப்பேசினாலும் உணர்ச்சிவசப்பட நீண்ட நேரம் பேசியதில்

 பூங்கோதைக்கு மூச்சிறைத்தது.
எதிராஜிற்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் எதுவும் பேச இயலாதவராய்

அமைதியாய் அப்படியெ நின்றார்.
”கோபமா அண்ணா என் பேர்ல?”
“இல்லையம்மா...என்ன பேசறதுன்னே தெரியல.....” என்றவர் அவள்

கழுத்தில்தெரிந்த மஞ்சள் சரடினைப்பார்க்கவும் பூங்கோதை மெலிதாய்

சிரித்தாள்.
“அண்ணா! இது அந்தரங்கத்தாலி! ஆமாம் அந்தட்ராயிங் மாஸ்டர் அன்னிக்கு


யார்யாருக்கோ தாசியா இருக்கச்சொல்லி மிரட்டினான். நான் என்னிக்கும்


அரங்கனுக்குதான் தாசி. அரங்கனையே மானசீகப்புருஷனாய் நினைச்சி நானே

 எனக்கு ஒரு பாதுகாப்பாய் தாலியைக்கட்டிக்கொண்டேன். ”
பூங்கோதை இப்படிச்சொல்லி முடிக்கவும் யாரோ இரண்டு இளைஞர்கள்

 அங்கே வந்தார்கள்.


குனிந்து ஏதோ ஃபைலைத்திறந்து காட்டி அவளிடம் கையெழுத்து வாங்கிக்

 கொண்டார்கள்..
 
 
 
அவர்களிடம் பூங்கோதை எதிராஜை தான்முதலில் சந்தித்தது முதல்

எல்லாவற்றையும் சொல்லி அவரை அறிமுகப்படுத்தினாள்.

உடனே அவர்கள் எதிராஜைப்பார்த்து பணிவுடன்,”ஐயா! டவுனில் இருக்கிற

நம்முடைய எதிராஜ் அனாதை இல்லம், சுசீலாம்மா ஓவியப்பள்ளி இவை

இரண்டையும் நீங்க அவசியம் வந்து பார்த்துப்போகணும்” என்று

கேட்டுக்கொண்டார்கள்.
எதிராஜ் சட்டென பூங்கோதையை ஏறிட்டுப்பார்க்க அவள் புன்னகையை

பதிலாக்கி அமைதியாய் நின்றாள்.
“ஒவியப்பள்ளியை பார்ப்பது மட்டுமல்ல பூங்கோதை, இனிமே என் பணி

அங்கே தான்” என்ற எதிராஜின் முகத்தில் நீண்ட நாளைக்குப்பிறகு சிரிப்பு

மலர்ந்தது.
 
****************
இந்தக்கதை ஆக்ஸ்ட் தென்றல் இதழில் வெளிவந்தது  .பரிசுக்கதை தவிர பிரசுரத்திற்கு ஏற்ற கதையாக  சிறப்பு பெற்றது  .தென்றலுக்கு நன்றி.
கதைக்கான  சுட்டி இங்கு  ..ஒலிவடிவிலும் கேட்கலாம்.கதையை வாசித்தவருக்கு நன்றி.
 
மேலும் படிக்க... " ரங்கதாசி(சிறுகதை)"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.