Social Icons

Pages

Tuesday, November 15, 2016

நம்பிக்கை நாயகர்கள்!(நன்றி கிழக்குவாசல் பத்திரிகை)

கிழக்குவாசல் உதயம்  நவம்பர்
மாத இதழில்   வாட்ஸப்  சாதனையாளர்கள் பற்றிய எனது கட்டுரை
       

இன்னும் இரண்டுபக்கங்கள் உள்ளன  வலையேற்றுகிறேன்!!
  
மேலும் படிக்க... "நம்பிக்கை நாயகர்கள்!(நன்றி கிழக்குவாசல் பத்திரிகை)"

Friday, October 28, 2016

கணக்குகளும் விடைகளும்.

தீபாவளி
மலரில் வெளியாகி உள்ள என் சிறுகதை..


கணக்குகளும் விடைகளும்.

ஷைலஜா
           
’அரங்காகேட்டரிங் ’ என்ற கொட்டைஎழுத்துக்குக் கீழேதனது போட்டோவுடன் பெயர் கொண்ட பேட்ஜினைத்தாங்கிய  சாடீன் ரிப்பன் மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டான் கோபி.  ஆகாய நீலநிறத்தில் ஷர்ட்டும், அடர்நீல நிற பாண்டுமாக  தொழிலுக்குப்புறப்பட ஆயத்தமானவனை  கண்கொட்டாமல் பார்த்த அவன் மனைவி மீனா. ‘  இந்தபேட்ஜைமட்டும் நீங்க கழுத்துலபோட்டுகலைன்னா  ஒரு ஆபீசுல மானேஜர் வேலைபாக்கறவர்னு சொல்லிடலாம்! சத்தியமா உங்கள  ஒரு சமையற்காரர்னு யாரும் சொல்லமுடியாதுங்க….. ”என்றாள் பெருமையுடன்


“உடை  உடல் உள்ளம் எல்லாம்  சுத்தமா இருக்கணும் என்பது எங்க’அரங்கா கேட்டரிங்’ கொள்கை!அதிருக்கட்டும் ..எனக்கு ராத்திரி எல்லாம்   நம்ம பிள்ளை ஹரிக்கு  காலேஜில் சேர்க்க எப்படிப்பணம்புரட்டறதுன்னு  ஒரே கவலை.ஏழை மாணவர்களுக்கு உதவணும் என்றே சில அமைப்புகள் இருக்கு..அவங்க ஆரம்பத்தில்  கொடுத்தாலும்  தொடர்ந்து அளிக்குமா என்பது சந்தேகம்.கல்விக்கடன் கொடுக்கிற பாங்குகள்,கல்லூரிகள் நிர்ணயிக்கும் நியாயமான  கட்டணங்களைக்கூட பலமாணவர்களுக்கு முழுமையா வழங்கறதில்லையாம் .உலகம் உயர்ந்தோர்மாட்டு  என்பது பழந்தமிழ்வழக்கு.ஆனா நிஜத்தில் உலகம் பணமுடையோர் மாட்டு  தான் மீனா:நம்ம பொழைப்புதான் சமையல் என்றாகிப்போச்சே மகனாவது  பெரிய ஆளா வரணும்னு நினக்கிறேன் அவனும் பொறுப்பா படிச்சி நல்லமார்க் எடுத்திருக்கான். மேலே படிக்க  ஆசைப்படறான். அவன் விருப்பத்தை நிறைவேத்தாம போயிடுவேனோன்னு பயமா இருக்கு மீனா”என்றான் கோபி.



”நீங்க வேலைபார்க்கிற அரங்கா கேட்டரிங் உரிமையாளர் சாரங்கன் மாமாகிட்ட கேட்டுப்பாருங்களேன்”


”மீனா! உனக்கு என் சுபாவம் தெரியாதா ? நான் யார்கிட்டயும் கடன் கேட்கமாட்டேன் அவங்களா பிரியப்பட்டு கொடுத்தால் வாங்கிக்கறேன். அப்படித்தான்  சிலகல்யாணங்களில் நான் செய்கிற சமையலில்,பரிமாறுகிற  விதத்தில்  ரொம்பவும் மகிழ்ந்துபோய்  ஒரு சிலர் அன்பளிப்பாக வாட்ச் ,  துணிமணி  சில நூறு ரூபாய்கள் என்றெல்லாம் கொடுத்தாங்க.. இப்ப நம்ம தேவை  ரொம்பபெரிசு.இதை எனக்கு யார்கொடுக்கப்போறாங்க? எனக்கு நம்பிக்கை இல்லை மீனா!”


”பொட்டு நகை என்கிட்டயும் இல்லை… இருந்தா அடமானமாவது வைக்கலாம்..ஹரி மாதிரி  உத்தமகுழந்தையைப்பெத்த நமக்கு ,அவன் ஆசையை நிறைவேத்தக்கூட  வக்குஇல்லாமல் இருக்கோம்னு  கஷ்டமா இருக்குங்க”


” என்ன செய்றது?சரி நான்  வேலைக்குக்கிளம்பறேன்  இன்னிக்கு  கல்யாணத்துல எல்லாம்  சரியா அமையணும்னு  சாரங்கன்மாமா  ரொம்ப கவனமா இருக்க சொல்லி இருக்கிறார். வழக்கத்தைவிட்ட இன்னிக்கு  கூடுதல் சம்பளம் கிடைக்கும்னு நினைக்கிறேன். என் பணில பிரமிச்சி அவர்  கூட்டிக்கொடுக்கவும் வாய்ப்பிருக்கு. அதேபோல சாப்பாட்டுப் பந்தில யாரும்  மகிழ்ந்துபோய்  சன்மானமா  ஏதும் கொடுக்கலாம்..கணிசமா தொகைவரும். நீயும்  பட்சணம்  நிறைய செய்து கடைலகளில் கொண்டு கொடுக்க ஆரம்பி. ஒருவாரம் டைம் இருக்கு அதுக்குள்ள  பணம் சேர்த்துடலாம் ஆனாலும் நம்பிக்கை பெருசா இல்லைதான். நம்மைமாதிரி லோயர் மிடில் க்ளாஸ் ஜனங்களுக்கு வாழ்க்கையே தொங்கலில் இருக்கு. அன்றாடக்கூலி ஜனங்கள்எதுக்கும்கணக்கிட்டு  வாழ்வதில்லை கணம் தோறும் வாழுகிறார் கள்       கணக்கிட்டே நாம் வாழுகிறோம் ஆனா  நம் கணக்கில் விடையில்லை” விரக்தியாய் சொல்லிவிட்டுகல்யாணமண்டபத்துக்குவந்தவன் வாசலிலேயே பரபரப்பாய் சாரங்கன் நிற்கவும் தயக்கமுடன் கைகுவித்தபடி,”  மாமா! நான் லேட்டா வந்துட்டேனா மன்னிக்கணம்:   என்றான்
”இல்ல கோபி நீசரியான டைத்துக்குதான் வந்திருக்கே.. இந்த மளிகைசாமான் காய்கறி பொறுப்பில் இருக்கும் பட்டாபியைத்தான்காணல  நேத்தே  ராத்திரி  மண்டபத்துல கொண்டு சேர்த்துடறேனான். இன்னும் காணல,போன் பண்ணாலும் எடுக்கல..” விசனப்பட்டார் சாரங்கன்.


”அப்படியா  நான்  நேர்லபோய்பார்த்துட்டுவரட்டுமா மாமா?” கோபி இப்படிக்கேட்க காத்திருந்தமாதிரி சாரங்கனும்,”அவன் வீடு   தாம்பரம் பக்கம் இருக்குடாகோபி. இந்தக்கல்யாணமண்டபம் இருக்கிறது வில்லிவாக்கம் பக்கம்  ரொம்ப நாழி ஆகுமேடா. உன்னாலமுடியும்னா நேர்லபோய்ட்டுவர்ரதே  உசிதம்” என்றார்.


”சட்டுனு ஆட்டோபிடிச்சிபோய்ட்டு  விவரம் கேட்டுட்டு கையோடகூட்டிண்டே வரேனே”


”ஆமா அதான்சரி ”


கோபி ஆட்டோக்காரர் பேசிய  நானூறு ரூபாய்க்கு மறுபேச்சேபேசாமல் ஏறிவிட்டான். இப்போது  பேரம்பேசி  நேரத்தைவீணடிப்பதைவிட பட்டாபியை  பார்ப்பதேமுக்கியம்.
பட்டாபியின் வீட்டுவாசலில் நெருப்பு ஒரு மண்சட்டியில் கணகணப்பதை ஆட்டோ தெருவில் நுழையும்போதே  பார்க்கவும்பகீரென்றதுகோபிக்கு.


வீட்டிற்குள்போனதும்தெரிந்தது பட்டாபியின் மனைவி  இரவு மாரடைப்பில்காலமாகிவிட்டாள் என்று.மனைவிபிணத்தின்முன்பு அதிர்ச்சியில் எதுவுமே ஓடாமல் அப்படியே சுவரில்  சாய்ந்துகிடந்தவனிடம் கோபி என்னவென்று பேசுவதெனததெரியாமல் விஷயத்தை சாரங்கனிடம் தன் செல்போனில் சொன்னான்.


”அடடே அப்படியா  சரி நீ அதே ஆட்டோல உடனே புறப்பட்டு வா. பொங்கல்கொத்சு  கேசரி  கார்த்தால பிள்ளையாத்துகாரா வரதுக்குமுன்னாடி ரெடிபண்ணனும் ..பட்டாபி வேலைதான்.அதை நீ  ரெடிபண்ணிடு..நான் பட்டாபிவிட்ட மிச்சவேலையை போன் போட்டு கவனிக்கறேன் என்ன?”


கோபி  கைவசம் வீட்டுவாடகை கொடுக்க வைத்திருந்த எண்ணூறு நூபாயில் மீத  நானூறு ரூபாயை ஆட்டோக்குக்கொடுத்துவிட்டு மண்டபம் வந்துசேர்ந்தான் .

சமையற்கட்டுவேலையும் ,பந்தி பார்த்துபரிமாறுகிறவேலையும் சேர்ந்துகொள்ள  கோபிக்கு அன்றையப்பொழுது உடலை சக்கையாக்கியது  மண்டபத்து உக்கிராண அறையில் நடுநிசிக்குவந்து தரையில் படுத்தவன் மீனாவிற்குபோன் செய்து,”என்னாச்சு பட்சணம்கொண்டுகடைல வித்தியா எவ்ளோ தேறினது?” என்று கேட்டான்.

”ஆயிரத்துமுன்னூறு ரூபா  வந்திருக்கு.சரி .வீட்டுக்காரரைப்பார்த்து வாடகையை கொடுத்துட்டீங்களா?”



”இல்லை நாளைதான் கொடுக்கணும்.சாரங்கன் மாமாக்காக அதை செலவு பண்ண நேர்ந்து  போச்சு.விவரம் நேர்ல சொல்றேன்.ஆனா  எனக்கும் இன்னிக்கு டபுள்வேலை நாளைகல்யாணமுடிஞ்சதும்  எனக்கான வரவும் டபுளா கொடுப்பார் சாரங்கன்மாமா,  அதைஎடுத்துண்டுவரேன் ”


மறுநாள்  முகூர்த்தநேரத்துக்கு கூட்டம்  அலைமோதியது.  அதை சமாளிக்க கோபியும் சாரங்கனும் பெரும்பாடுபடவேண்டி இருந்தது ருசியும் குறையக்கூடாது அதேசமயம் இருக்கிற  சாமான்களைக்கொண்டு சமையலை செய்துமுடிக்கவேண்டும் சாரங்கனுக்கு முழி பிதுங்கிவிட்டது.


அடுப்பில்  கொதிக்கும் எண்ணையில் வடையைத்தட்டிப்போட்டபடியே  சொல்ல ஆரம்பித்தார்.,


” கோபி!என்னடா  வேலை இதுன்னு  அலுப்புமட்டும் வந்துடக்கூடாதுப்பா..  நாமாய்  ஆயிரம் பேருக்கு அன்னதானம் பண்ண  சாத்தியமில்லை . நான் எப்படி இந்ததொழிலுக்குவந்தேன் தெரியுமோ?எனக்கு ஏழு வயதாயிருக்கும்போது சங்கர மடம் கும்பகோணத்தில் இயங்கி வந்தது. மஹா பெரியவாள் அங்குதான் இருந்தார். தினமும் மதியம் பன்னிரண்டு மணி தொடங்கி நாலுமணிவரையில் அன்னதானம் ஜேஜேவென்று அங்கே நடக்கும். இதுக்காக மூட்டை மூட்டையாக அரிசி வந்து குவியும். மடத்தில் அப்போது பெரிய சமையல்காரர் — கபிஸ்தலம் வெங்கட்ராமய்யர். அவருக்கு உதவியாக என் அப்பா. என்னைப் போல் சின்னப் பையன்கள் நிறையப் பேர் எடுபிடிகளாக இருந்தோம்.
ஒவ்வொரு பந்திக்கும் சாப்பாடு முடிந்ததும் அந்த இலைகளை அள்ளி எடுத்து மூங்கில் கூடைகளில் நிரப்பி எடுபிடி பையன்களில் தோளில் வைப்பார்கள். பாரமா  இருக்கும். இரண்டு கைகளால் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு
 கொட்டிய கையோடு, காவிரியில் குளித்துவிட்டு தயாராக வந்து நிற்க வேண்டும், அடுத்த பந்தியின் இலையை எடுப்பதற்கு!
இந்த மாதிரியான கலகலப்பான சூழல்களைவிட்டு என் வாழ்க்கை அப்படியும் இப்படியும் திசை மாறியது. திருமணமாகி என் மனைவியோடு சென்னையில் வசிக்க ஆரம்பித்தபோது எனக்கு வயது இருபத்து மூன்று. ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. என் வாழ்க்கையில் அதுபோல் கடினமான ஒரு கட்டத்தை நான் அனுபவித்ததில்லை. வறுமை எங்களைப் பிடுங்கித் தின்றது.
‘வேண்டாம்….இதற்கு மேலும் நம்மால் வாழ்வது என்பது முடியாது. வறுமையை எதிர்த்துப் போராடுவது இனி நடக்காத காரியம்!’ என்று நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம்.
இடையில் இத்தனை வருஷம் ‘டச்’ விட்டுப் போயிருந்த மடத்துக்கு ஒரே ஒரு முறை போய், மஹா பெரியவரைப் பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம். இப்போது மடம் காஞ்சிபுரத்தில் இருந்தது.

காஞ்சிக்குப் போனேன். பெரியவரை தரிசனம் செய்தேன். என் மனசு கலக்கத்தை வாய்விட்டு அவரிடம் சொன்னேன்.

எல்லாத்தியும் கேட்டவர்  எதிரில் மூங்கில் தட்டிலிருந்த பதினோரு ரூபாய் பணத்தை எடுத்து எங்களிடம் கொடுக்கச் சொன்னார். ‘போ! எல்லாம் சரியாயிடும்! ‘ என்று கையை உயர்த்தி ஆசீர்வதித்தார்.

என்னுள் புது நம்பிக்கை துளிர் விட்டது. ‘வறுமையை எதிர்த்துப் போராடலாம். . வெற்றி நிச்சயம் கிடைக்கும்’ என்ற உறுதி பிறந்தது.
அன்றிலிருந்துதான் என்னைப் பற்றியிருந்த வறுமை கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக ஆரம்பித்தது. கல்யாண வேலைக்குக் கூப்பிட்டு, மெள்ள மெள்ள ஆள் வர ஆரம்பித்தனர். அன்றாட ஜீவனத்துக்குக் காசு புழங்க ஆரம்பித்தது. அரங்கா கேட்டரிங் என்று சொந்தமா  ஆரம்பிச்சேன்.எதுக்கு சொல்றேன்னா நம்பிக்கைதான் வாழ்க்கை. “ என்று முடித்தார்.

ஆனால்  கல்யாணம் முடிந்தபிறகு  வழக்கமான சம்பளத்தைவிடவும் குறைத்தே கொடுத்தார்


.” கல்யாணப்பொண்ணோட  அப்பா என் பழைய நண்பன். அதிக வசதி இல்லாதவன்  கடன்வாங்கிகல்யாணம் பண்றான்.நம்மாலானது  என்று  வழக்கமான ரேட்டை நான் பாதியாக்குறைச்சிண்டேன் அன்னதானப்பலனில் நமக்கும் கொஞ்சம் கிடைக்குமோல்லியோ?” என்றார் சாரங்கன்.

“இந்தாளுகிட்ட  இருந்தா பிழைக்கத்தெரியாம நாமும் ஓட்டாண்டியா ஆகிடுவோம்போல இருக்கு.ஏண்டா கோபி  உன் பையனுக்கு காலேஜில் சேர்க்க நீ தவிக்கறயே , அதைவாய்விட்டு சொல்லி  சாரங்கன்மாமாகிட்ட பணம் ஜாஸ்திவாங்கி இருக்கக்கூடாதா ஏண்டா இப்படி லூசா இருக்கே?” என்றுவெளியே வந்ததும் ராஜப்பா சீறினான்.


கோபி திருதிருவென விழித்தான்.

 பிறகுநடந்தேவீட்டிற்குவந்தான்.சின்னபோர்ஷன்.தான்.வரிசையாய்  எட்டுபோர்ஷன்கள். நுழைந்ததும் சிறு கூடம் அதை ஒட்டி சமையல் அறை.  குளியல் கழிப்பறை எல்லாம்  அங்குள்ள எட்டுபோர்ஷன்களுக்கு பொதுவாக இருக்கும்.

ஹரி,கூடத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு பாடம் சொல்லிகொடுத்துக்கொண்டிருப்பது காதில் விழவும்  வாசற்கதவுக்குப்பின்னே அப்படியே நின்றான்.


அப்போதுதான்கூடத்திலிருந்து தரைவழிப்பயணத்தில்  எறும்பு ஒன்றுதன்னை விட பல மடங்கு பெரிய  ஒரு  இறகை இழுத்து, சுமந்து கொண்டு வாசலுக்குப்போவதில் முழு முயற்சியோடு ஈடுபட்டிருந்தது. வெளி வாசலில் ஒரு செடிக்கு பின்னால் சிறு மண் புற்று.   அங்கு கொண்டு செல்ல  பிரயத்தனம்.  யார்காலிலும் காலால்  மிதி படக்கூடாது.  சுவற்றில் சுற்றிக்கொண்டிருந்த  பல்லியிட ம் சிக்காமல்,  இறகைச் சுமந்து வேறு போகவேண்டும்.  எறும்பின் செய்கையைகோபி  மௌனமாய்பார்த்துக்கொண்டே இருக்கையில்எறும்பு வாயால் கவ்விய  இறகை கீழே போட்டுவிட்டு அதைச் சுற்றி சுற்றி வந்தது.    எப்படி  மீதி வழி செல்வது என்று யோசனையாக இருக்குமோ?

மீண்டும்  அதை  எங்காவது ஒரு இடத்தில் கடித்து  இழுத்துக்கொண்டு போயிற்று. அதன் வழியில்  வீட்டின்  வாசல் கதவு.  அதன் இடுக்கில் செல்லவேண்டும். திறந்திருக்கும் கதவு காற்றில் அசைந்து தானே மூடிக் கொண்டால்  எறும்பின் வாழ்க்கைப் பயணம்  முடிந்துவிடும்.


 எல்லாவற்றிற்கும் மேலாக மீனா பார்த்துவிட்டால்
பெருக்கித்  ​தள்ளிவிடுவாளே. அடித்தாலும் அடிப்பாள் . வாசல் சுவற்றுக்கும்  கதவு நிலைக்கும் இடையே  ஒரு  சின்ன இடைவெளி. அங்கே ஒரு  பெருத்த பல்லி தன் குடும்பத்தோடு நடமாடும்  இடம்.  சுவர் காங்க்ரீட்டில்  ஒரு  கீறல்  இடைவெளி.  அது  சிறிய பாதை வழி. பெரிய பாதையில் போனால்  பல்லியால் ஆபத்து.

அது சரி. எறும்பு  அந்த காங்க்ரீட் கீறலில்  நுழைந்து போய்விடும். அது தூக்கிச் செல்லும்  இறகு? இவ்வளவு கஷ்டப்பட்டு  சுமந்து வந்து அதை கோட்டை விடுவதா? மெதுவாக தான்  முதலில் அந்த கீறலில் நுழைந்து, பிறகு  உள்ளே மீண்டும் புகுந்து அந்த இறகின் ஒரு முனையை  அந்த  கீறலின் வாயில் வைத்து பின்னோக்கி  நடந்து வாயினால் கடித்து இழுத்துக்கொண்டு சிரமப்பட்டது


கோபியின் கவனம் சட்டெனஉள்ளே கூடத்தில்  உரக்கக்கேட்டஹரியின் குரலுக்குத்தாவியது.

 ஹரியைச்சுற்றி தரையில் அமர்ந்திருந்தஎல்லாருமே ஏறத்தாழ  பத்துவயசு சிறுவர்கள், சிறுமியர்கள்.ஹரியிடம் ட்யூஷன் பயிலவேண்டும் என்றே  பலபெற்றோர்கள் கொண்டுவிடுவார்கள் .


”உங்க பையன் ஹரி  பாட சம்பந்தமான ட்யுஷன் மட்டுமாஎடுக்கறான் , நல்ல  பக்தி கதைகள் சொல்றான் எங்க குழந்தைகள்அதைக்கேட்டு வீடுவந்தால்  உற்சாகமா இருக்காங்க..நல்லபழக்கவழக்கம் வருகிறது ”என்று மீனாவிடமும்கோபியிடமும் புகழ்வார்கள்.


இதோ  இப்போதுகூட ஹரி ஏதோ பக்திக்கதைதான் குழந்தைகளுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறான்.கோபியும் கூர்ந்துகேட்கத்தொடங்கினான்.


”உலக  வாழ்க்கையிலே கஷ்டம் இல்லாதவர்களே கிடையாது.  எல்லோருக்குமே  அளவில்லாத கஷ்டங்கள்  இருக்கு.  பணக்காரர், பெரிய பதவியில் உள்ளவர் எல்லாம் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் வேண்டுமானால்  நினைக்கலாம். ஆனால், அவர்களைக் கேட்டால் தான்  தெரியும் அவர்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்று.   திண்ணையில் இருக்கிறவர்கள் கீழே விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடு சரி.   அவர்கள் மேலே மூணாவது மாடி பால்கனியில் இருக்கிறார்கள். விழுந்தால் எலும்பு முறிந்து விடும். உயிருக்கே ஆபத்து வரலாம். எனவே  உயர்ந்த நிலையில் இருப்பவர்கள்  பணம், பதவி,  செல்வம் உள்ளவர்கள்  அதிகம் ஒழுக்கம்  காக்க வேண்டும்,  மற்றவர்க்கு பரிவு காட்டவேண்டும்'.


 இந்த உயர்ந்த எண்ணம் மிகவும் உயர்ந்து, விரிந்து எடுக்கிற உருவமே  எல்லா உயிர்களிடமும் அன்புகாட்ட வைக்கும்  அன்பு சகலரிடமும்  பரவ  உதவும்.  இது  மெதுவாகத்தான்  வளரும். ஒரே   ராத்தரியில் மந்திரத்தால்  மாங்காய்  இல்லை.''  என்று முடிக்கவும் ஒரு சிறுவன் கேட்டான்.



எப்படி  அண்ணா  இதை  ஆரம்பிக்கவேண்டும்?''

''ஒவ்வொரு குடும்பத்திலும், குடும்பத்தில் உள்ள  அனைவரும் சேர்ந்து  வீட்டிலேயே  மாலை  வேளைகளில் ஒரு   பத்து நிமிஷமாகவாவது இறைவனைப்பற்றி வாய்விட்டுப்பேசவேண்டும் அல்லது. பாடத்தெரிந்தால்  பாடலாம்.  பாடுவதற்கு எதற்கு  வெட்கம்?  சங்கீத ஞானம்,  , சாரீர வசதி இல்லாவிட்டாலும், பரவாயில்லை.  பக்தி, பாவனை  தான் முக்கியம்.   எங்கோ ஏதோ ஒரு விளையாட்டில்  ஈடுபட்டு இருக்கும்  குழந்தை  அம்மாவின்  நினைவு வந்ததும், " அம்மா, அம்மா" என்று கத்துகிறதல்லவா? தேடி  ஓடிவருகிற தல்லவா. அதில் என்ன  வெட்கம்?     பாஞ்சாலி அன்று கோவிந்தா என்று கதறு கைதூக்கி அழைச்சதும்தான் கண்ணன்  வந்தான் .இறைவன் நம் அழைப்புக்குக்காத்திருக்கிறான். எனக்குக்கூட  இஞ்சினீயரிங்படிக்க ஆசை. நல்லமார்க் எடுத்திருக்கிறேன்,ஆனா என் அப்பா அம்மாகையில் அவ்வளவு பணமில்லை கடன் வாங்குவது எங்கள்குடும்பத்தில் வழக்கம் இல்லை. உதவும் அமைப்புகள்  கடன் கொடுக்கும் வங்கிகள் என் படிப்பு முடியும்வரை கைவிடாமல் இருக்குமா என்பது நிச்சயமில்லாத நிலைமை.அதனால் அருமைக் குழந்தைகளே உங்களிடம் வாய்விட்டுகேட்கிறேன்  நீங்கள் என் கண்முன் தெய்வங்கள்தான் . உங்கள் குடும்பத்தில் யாருக்காவது  படிப்பிற்கு பணதானம் செய்கிற மனம் இருந்தால் எனக்கு உதவச்சொல்லுங்கள். இதே உதவியை  பிற்காலத்தில் என்னைமாதிரி ஏழைமாணவர்கள் பலருக்கு நான்  திருப்பிச்செய்வேன்” நெகிழ்ந்தகுரலில் ஹரி பேசிமுடித்தான்.

”கண்டிப்பா  செய்வோம் அண்ணா. இன்றைக்கே எங்கவீட்டில்போய் சொல்றோம்.நீங்க இஞ்சினீயர் ஆகப்போறீங்க , நிச்சயமா  ஆகிறீங்க”

குழந்தைகள்  நம்பிக்கை நிறைந்த குரலில் கூவினர்.
 
கோபிக்கு ஹரியின் வெளிப்படையான  பேச்சு தன் மனவெளியை உடைத்ததுபோலானது. சாரங்கன் தன் கதையை சொன்னபோதிலும்,ராஜப்பா சீறியபோதிலும் உதிக்காத ஞானம் இப்போது மெல்லத்தலை எடுத்தது.

.இந்தக்குழந்தைகளின் வாக்கில் வரும்  முயற்சியும் ஆர்வமும் எனக்கு ஏன் தோன்றவில்லை? இந்த நம்பிக்கை எனக்கு ஏன் உதயமாகவில்லை?

கோபி தன்னையே நொந்தபடி  கீழே குனிந்தான்.

 எறும்பு பட்டசிரமம் வீண் போகவில்லை. இறகின் ஒரு நுனி கீறலில் நுழைந்து சுவற்றுக்கும் மரக்கதவின்  நிலைக்கும் இடைவெளியில்  துளித்துளியாக  நுழைந்து அந்தப் பக்கம் தலையை காட்டியது.  எறும்பு இப்போது வெளியே இருந்து  அந்த இறகை இழுக்க  மெதுவாக  இறகின் பயணம் முடிந்தது.  இனி செடிக்குப் பின்னால் உள்ள  மண் புற்றுக்கு  இழுத்துச் செல்வது அவ்வளவு கடின பயணம் இல்லையே!
*************************************************************************************************************************



.
​'


மேலும் படிக்க... "கணக்குகளும் விடைகளும்."

Monday, October 10, 2016

நீருக்குப்பேதமில்லை. சிறுகதை

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=33722&ncat=2
ஞாயிறு தினமலர்வாரமலரில் வெளியான  சிறுகதை!



பாட்டி... இன்னிக்கு ராத்திரி, அப்பா உங்கள சித்தப்பா வீட்டுக்கு பெங்களூருக்கு அனுப்பப் போறாங்களாம்... நானும், சாயந்திரம், ஸ்கூல், 'எக்ஸ்கர்ஷ'னுக்கு டில்லி போறேன்; வர்றதுக்கு ஒரு வாரம் ஆகும். இந்த ஆறு மாசமா இலக்கியம், கலாசாரம், கிராமம், ஊர் திருவிழான்னு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கீங்க... இப்போ நீங்க ஊருக்கு போறத நினைச்சா கவலையா இருக்கு,'' என்று சிணுங்கினாள், பேத்தி மீனா.


வேறு சமயமாயிருந்தால், உடனே பேத்தியை சமாதானம் செய்திருப்பாள், விசாலம். இப்போது, அவளது சிந்தனையெல்லாம், 'இன்னைக்கு தன்னை ஊருக்கு அனுப்ப இருப்பதாக, மகனும், மருமகளும் ஒரு வார்த்தை கூட சொல்லலையே...'என்பதாக இருந்தது. 'அதுசரி... எதை தான் அவர்கள் என்கிட்ட சொல்லியிருக்காங்க... தூரத்து பச்சையாய் தெரிகிறதெல்லாம் பக்கத்துல வந்தவுடன் தூர்வாராத கேணியாக நாறத் தான் செய்யுது. இதெல்லாம் தெரிஞ்சுதான், 'சாகும் வரைக்கும் கூழோ, கஞ்சியோ கிராமத்திலேயே இருக்கலாம்'ன்னு சொன்னாரோ அவர்...' என்று நினைத்தவளுக்கு தன்னை அறியாமல் பெருமூச்சு வந்தது.


உள்ளே மகன் தன் மனைவியிடம், ''லதா... 11:00 மணிக்கு அம்மாவுக்கு பஸ்... 9:00 மணிக்கே அம்மாவ பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்டு, நாம அப்படியே என் பிரண்ட் வீட்டு, 'பெர்த்டே' பார்ட்டிக்கு போயிடலாம்,'' என்று கூறுவது, விசாலத்தின் காதில் விழுந்தது.


''பார்ட்டி முடியற நேரந்தான் நாம போய் சேருவோம்; வேற வழி... உங்க தம்பி தான், கரெக்ட்டா ஆறு மாசம் முடிஞ்ச பின்தான் அம்மாவை தன்கிட்ட அனுப்பணும்ன்னு, கண்டிஷனா சொல்லிட்டாரே... ஒருநாள், ரெண்டு நாள் முன்னே போனால் என்னவாம்; உங்க தம்பி பொண்டாட்டி கெட்டிக்காரி; நான் தான் அசடு,'' என்று அடிக்குரலில் முனங்கினாள் லதா.



''என் தம்பியும் கெட்டிக்காரன் தான்; அம்மா இங்கே இருக்கிறாளேன்னு, ஒரு பத்து பைசாவது அனுப்பினானா... அப்பா உயிரோடு இருந்த வரை, அவருக்கு பயந்து, மாசா மாசம் கிராமத்துக்கு பணம் அனுப்பிச்சுட்டு இருந்தான். அப்பா இறந்தபின், அம்மாவ ஆளுக்கு ஆறு மாசம் கூட வச்சுக்கணும்ன்னு பேச்சு வந்ததும், நீ தானே மூத்த பையன்னு என்கிட்ட தள்ளிட்டான். இந்த ஆறு மாசத்துல ஒரு நாளாவது திருச்சிக்கு வந்து எட்டிப் பாத்துருக்கானா... நானும், இப்போ, அம்மா கையில, பஸ் டிக்கெட் தவிர, 50 ரூபா தான் கொடுத்தனுப்ப போறேன்,'' என்றான்.





மகனின் பேச்சைக் கேட்டு, அதிர்ந்து போகவில்லை விசாலம். இந்த ஆறு மாதங்களில் எல்லாமே அவளுக்கு பழக்கமாகி விட்டது. விருந்தும், மருந்துமல்ல, தாயும், தந்தையும் கூட மூன்று நாட்களுக்குத் தான் என்கிற கால கட்டம் இது! 'எல்லா வீடுகளிலும் மனிதர்கள் இருக்கின்றனர்; தனித்தனி தீவுகளாய்...' என்று எங்கோ எதிலோ படித்தது நினைவிற்கு வந்தது.


வெளியூர் பேருந்து நிலையத்தில், விசாலத்தை இறக்கி விட்டு, ''பஸ் இங்க தான் வரும்; டிக்கெட்டை காமிச்சு, எந்த பஸ்ல ஏறணும்ன்னு யாரையாவது கேட்டுட்டு ஏறு. ஜாக்கிரதையா போய்ட்டு வாம்மா... உன் சின்ன மருமக கொஞ்சம் கடுமையா பேசுவா... லதா மாதிரி இல்ல, அட்ஜஸ்ட் செய்துக்கோ,'' என்றான், மகன்.


'உன் பொண்டாட்டி மொழுக்கு பூனைப்பா; பேசாமலேயே காரியத்தை சாதிச்சுப்பா...' என்று சொல்ல வந்ததை சொல்ல முடியாமல், ''சரி,'' என்றாள் விசாலம்.


''லேட் ஆறது... பார்ட்டிக்கு கிளம்பறேன்; பஸ், 11:00 மணிக்கு கிளம்பிடும். ரொம்ப விடியலில் இருட்லயும், பனியிலயும் போக வேணாம்ன்னு தான், லேட் பஸ்ல அனுப்புறேன்... கடைசி ஸ்டாப் கலாசிபாளையத்துல இறங்கு; நடுவுல இறங்கிடாதே... தம்பி வந்து உன்னை அழைச்சிட்டு போவான்,'' என்றான் மகன்.

''சரிப்பா... பைக்ல பாத்துப் போ... வேளைக்கு சாப்பிடு; மறக்காம இருமல் மருந்து எடுத்துக்க,'' என்று கூறி, கண்ணில் துளிர்த்த நீரை, புடவை தலைப்பில் துடைத்தபடி, அங்கிருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தாள், விசாலம். 


பேருந்து நிலையத்திற்கே உரிய இரைச்சலும், ஜன நடமாட்டமும் அதிகமாயிருக்க, அந்த இரவு நேரத்திலும், ''ரெண்டு முழம் பத்தே ரூபா வாங்கிக்கம்மா,'' என்று கெஞ்சினாள் வயதான பூக்காரி. பஸ் டிக்கட் தவிர, விசாலத்தின் கைப்பையில், 50 ரூபாய் தான் இருந்தது.


பத்து ரூபாய்க்கு மல்லிகைப் பூ வாங்கி போய், சின்ன மருமகளை திருப்தி செய்ய முடியாது என்றாலும், தன்னை விட, வயதில் மூத்தவளாய் தெரியும் இவளுக்கு உதவலாம் என்று தோன்ற, 10 ரூபாய்க்கு பூ வாங்கினாள். மீதம், 40 ரூபாயை கைப்பையில் போட்ட போது தான், தண்ணீர் பாட்டிலை எடுத்து வராதது நினைவிற்கு வந்தது. பேத்தி மீனா இருந்திருந்தால், பஸ்சில் ஏறும் வரைக்கும் கூடவே, துணையாக இருந்திருப்பாள். வறட்டு இருமல் இல்லாவிட்டால், தண்ணீர் தேவை இருக்காது. அப்போது, விசாலம் அருகே ஒரு இளம்பெண், கைக்குழந்தையுடன் வந்து, உட்கார்ந்தாள்.

அழுகிற குழந்தையை, மடி மீது கிடத்தி, அதன் மார்பில் கை விரல்களால் தட்டியபடியே,''பெங்களூரு பஸ் எப்போ வரும்?'' என்று கேட்டாள்.

''தெரிலம்மா... மணி, பத்தரையாகப் போகுது இன்னும் வரக்காணோம்...'' என்றாள்.
''ஆம்னி பஸ்சுன்னா கரெக்டா வரும்; சரியான நேரத்துக்கு கிளம்பும். இது, ஏதோ லொடக்கானி பஸ்சு. எப்போ வேணா வரும்; எப்போவேணா கிளம்பும். டிக்கட் சல்லிசுன்னு எம் புருஷன் இதுல தான் என்னை அனுப்பும். என்ன செய்யறது... பேய்க்கு வாக்கப்பட்டா, முருங்க மரத்துல தானே ஏறியாவணும்...'' என்று சலித்துக் கொண்டாள்.


''தண்ணீர் பாட்டில் வாங்கி வர்றேன்... அதுக்குள்ள பஸ் வந்துடாதே...''

''வந்தா தான் உடனே கிளம்பிடுமா... நீங்க போயிட்டு வாங்க; நான் இங்க தான் உக்காந்துருப்பேன். இந்த சனியன், 'நொய்நொய்'ன்னு அளுவுறான். அப்படியே அவங்க அப்பனாட்டம் அழிச்சாட்டியம்,'' என்று, குழந்தையின் மார்பில், 'பட் பட்' என்று, வேகமாய் தட்ட ஆரம்பித்தாள்.


விசாலம், தண்ணீர் பாட்டிலுடன் திரும்பி வந்த போது, இன்னொரு வயதான தம்பதி அங்கே அமர்ந்திருந்தனர். விசாலம் கைப்பையுடன் நிற்கவும், ''நீ ஏம்மா நிக்கிறே... கொஞ்சம் நகர்ந்துக்கச் சொல்லி உட்காரு,'' என்றாள், கைக் குழந்தைக்காரி.


''ஏம்மா... பஸ்சு வந்தா சொல்லுங்க... எங்க ரெண்டு பேருக்கும், கண்ணு சரியா தெரியறதில்ல... குழந்தை குட்டி இல்லாத பாவிங்க நாங்க...'' என்றார், அருகில் அமர்ந்திருந்த முதியவர் நடுங்கும் குரலில்!

''பிள்ளை குட்டி இல்ல; கண்ணு தெரியலங்றீங்க... பெங்களூருக்கு யார் வீட்டுக்கு போறீங்க...'' என்று கேட்டாள், கைக்குழந்தைக்காரி.

''அங்க, என் பால்ய நண்பன், அவன் பொண்ணு வீட்டுல இருக்கான். எங்களையும் அங்க வந்து இருக்கச் சொல்லி, அவன் பொண்ணு சொல்றா... அதான் போறோம்.''

''இந்த காலத்துல, பொண்ணை பெத்தவங்க தான் அதிர்ஷ்டசாலிங்க; எனக்கு அந்த அதிர்ஷ்டம் கூட இல்ல... மொடாக்குடியன கல்யாணம் செய்து, அவன் வாரிசா ஆம்பிளைபிள்ளை தான் பொறந்திருக்கு. இந்த ஆறு மாச குழந்தைக்கு அரை பவுனுல செயின் செய்து தரணுமாம், என் அப்பன். 'போய் கொண்டுவாடி'ன்னு கழுத்தைப் பிடிச்சு தள்ளிட்டான், புருஷன். அங்க, கட்டட வேலை செய்யுது, என் அப்பன். அவங்களுக்கே சோத்துக்கு திண்டாட்டம்; தங்கத்துக்கு எங்க போறது... என்னவோ போங்க.''


அப்போது, இஞ்சி மொறப்பா விற்றுப் போன சிறுவனை அழைத்த அப்பெண், ''நாலு வில்லை கொடு... பஸ்சுல போன, பாழாப் போன வாந்தி வந்து தொலைக்கும்,'' என்று முணுமுணுத்தபடி பர்சை திறந்து, 50 ரூபாயை எடுத்தாள்.


''சில்லரை இல்லக்கா... நீ தான் முதப் போணி,'' என்றான் இஞ்சி மொறப்பா விற்ற சிறுவன்.
''அடி செருப்பால... போணியாமுல்ல... ராவுல என்னடா போணி...''

''எக்கா... என் வியாபாரம், ராவுல தான்; பகல்ல, ஸ்கூலுக்கு போறேன்,'' என்றான்.

'பாவம் படிக்கிற பையன் போலிருக்கு... ஏழ்மையில இப்படி வேலை செய்து பொழைக்கிறானே...' என்று நினைத்து, ''பையா... இந்தாப்பா எவ்ளோ தரணும்...'' என்று தன் சிறு பர்சை, திறந்தபடி கேட்டாள், விசாலம்.

''நாலு ரூபா பாட்டிம்மா.''

''ஐயோ... என்னம்மா நீங்க தர்றீங்க...'' அலறினாள், கைப்பிள்ளைக்காரி.

விசாலம் சில்லரையை கொடுத்து, ''அதனால் என்னம்மா... ஆயிரம் ரூபாயா தந்தேன்; வெறும், நாலு ரூபா தானே பரவாயில்ல,'' என்றாள் புன்னகையுடன்!

அப்போது, 'பாம்... பாம்...' என்று, 'ஹார்ன்' அடித்தவாறு மஞ்சள் நிற பஸ் வந்து நிற்கவும், குழந்தையை வாரி, தோளில் போட்டுக் கொண்ட அப்பெண், ''இருங்க... நான் போயி, இது நாம போற பஸ்சான்னு விசாரிக்கிறேன்,'' என்று எழுந்தாள்.

''குழந்தையை என்கிட்ட குடும்மா... பாவம், கை வலிக்கப் போறது,'' என்றாள் பரிவுடன், விசாலம்.
அதற்குள், சிட்டாய் பறந்து, பஸ்சை நெருங்கி விசாரித்து வந்தவள், ''பெங்களூர் பஸ் தானாம்... வாங்க...'' என்றவள், ''இந்த பஸ் பாசஞ்சர் ரயிலு மாதிரி, எல்லா ஊர்லயும் நிப்பாட்டி, புளி மூட்டை மாதிரி ஆளுங்கள ஏத்திக்கிட்டுத்தான் போய்ச் சேருவான்... புறப்படற நேரமும், போய் சேருகிற நேரமும், நிச்சயமே இல்ல... ஆனா, கண்டிப்பா போயிடுவான்,'' என்று சொல்லி சிரித்தாள்.
அவள் சொல்லியது போலவே, இரவு, 11:30க்கு கிளம்பிய பஸ், வழி நெடுக நிறுத்தி, ஆட்களை ஏற்றி, சேலத்திலும், கிருஷ்ணகிரியிலும் காபிக்கு என்று அரைமணி நேரம் நிறுத்தி, ஓசூர் வந்த போது, மணி காலை, 7:30 ஆகியிருந்தது.

 அதற்குள் பஸ்சில் பலரது மொபைல் போன்கள் இயங்கிக்கொண்டே இருந்தன. விசாலத்திற்கு இரவு முழுவதும் வறட்டு இருமலில், தூக்கம் கெட்டு, விடியும் பொழுதில், கண் செருக ஆரம்பித்தது.


''அம்மா... இறங்குங்க, பஸ் பெங்களூர் போவாதாம்...'' என்று, அவளை எழுப்பினாள், கைக் குழந்தைக்காரி.

''என்னாச்சு...'' பதற்றமாய் கேட்டாள் விசாலம்.

''காவிரி தண்ணிக்கு கலாட்டாவாம்... பஸ், பெங்களூரு போவாதாம். கர்நாடகா பஸ்சு வேணா, ஒண்ணு, ரெண்டு போகுமாம்... கார், வண்டியெல்லாம், கல்லெடுத்து அடிக்கிறாங்களாம்,'' என்றாள் கலவரமான குரலில்!


''எதனால இப்படி...'' கவலையுடன் கேட்டபடி, இருக்கையில் இருந்து எழுந்தாள் விசாலம். 

ஞாபகமாய், காலடியில் வைத்திருந்த, கைப்பையை எடுத்துக் கொண்டாள்.


''என்ன இழவோ, எல்லாம் அரசியல்வாதிங்க செய்யுற வேலை. பந்து மாதிரி அடிப்பாங்க... கெடந்து திண்டாடுறது, நம்மள மாதிரி பொதுமக்க தானே...''


''என் பேத்தி, டில்லிக்கு போறா... அங்க எதுவும் இருக்காதே...''

''அங்கெல்லாம் இல்ல; இங்க தான்; அதுவும் 'திடுதிப்பு'ன்னு காலையில அறிவிச்சுருக்காங்க. எறங்கி, நாம வேற பஸ்சு பிடிச்சு தான் ஊர் போவணும்.''


பயணிகள் சிலர் பஸ் கண்டக்டரிடம், சண்டை பிடிக்க ஆரம்பித்தனர்.

''அதெப்படி... பெங்களூர் வரை முழு டிக்கட்டுக்கு காசு வாங்கிட்டு, இப்போ ஓசூர்ல இறக்கிவிட்டா எப்படி... திரும்ப டிக்கட் எடுக்க அதுக்கு வேற, 30 - 40 ரூபா ஆகுமே...''


''அதுக்கு நாங்க என்ன செய்யுறது... இங்கயிருந்து எந்த பஸ்சாவாது தைரியமா எல்லை தாண்டி, ஊருக்குள்ள போகுதுன்னா, அதுல ஏறிப்போங்க. இல்லாட்டி, கர்நாடகா பஸ்சுல போங்க...'' அலுப்புடன் சீறி விழுந்தார் கண்டக்டர்.

''இப்ப என்னம்மா செய்யுறது... நீங்க, யார் வீட்டுக்கு போறீங்க?'' என்று கேட்டாள், கைக்குழந்தைக்காரி.

''மகன் வீட்டுக்கு,'' என்றதும், ''போன் போட்டு, விவரத்த சொல்லுங்க... நான் எதாவது ஒரு பஸ்சுல தொத்திட்டுப் போறேன்...'' என்று, அழும் குழந்தையை, தோளில் போட்டு, பஸ்சை நோக்கி, வேகமாய் நடக்க ஆரம்பித்தாள்.

முன்பு எப்போதோ மீனா தன் மொபைல் எண்ணை எழுதிக் கொடுத்ததை பர்சில் வைத்திருந்தாள். அதைக் எடுத்து, அருகில் உள்ள ஒரு பெட்டிக் கடைக்குச் சென்று தொலைபேசியில் மீனாவிடம் விவரம் சொன்னாள்.

''பாட்டி... பயப்படமா இருங்க; சித்தப்பா நம்பர் சொல்றேன் குறிச்சுக்கங்க; நானும் சித்தப்பா கிட்ட பேசுறேன்; அங்கேயே இருங்க எங்கேயும் போயிராதீங்க,'' என்றாள்.

விசாலம், தன் இளைய மகனுக்கு போன் செய்த போது, அவன் எரிச்சலாய், ''அம்மா... அந்த மடையனுக்கு, உன்னை வசதியா அனுப்ப துப்பு இல்லயா... இப்போ பாரு, நானும் வீட்டை விட்டு வெளியில வர முடியாது; 'டிவி'ல ஒரே கலவரமா இருக்குன்னு காட்றாங்க. பஸ், பைக், கார் எல்லாத்தையும் எரிக்கிறாங்களாம். என் காரையும் எரிச்சிட்டா, நான் என்ன செய்றது... பேசாம, திருச்சிக்கு போயிட்டு, அடுத்த வாரம் புறப்பட்டு வா... அதுக்குள்ள இங்க எல்லாம் அடங்கிடும்,'' என்று போனை வைத்தான்.


மனசும், உடம்பும் சேர்ந்தாற் போல தளர்வடைய, அப்படியே மயங்கி சரிந்தாள், விசாலம்.
''ஐயோ... அந்தம்மா விழுந்துட்டாங்க.... மயக்கம் போலிருக்கு யாராச்சும் தண்ணி தெளிங்க முகத்துல,'' அருகில் நின்ற வயதான ஒருவர் அலறவும், பல கரங்கள் நீர் கொண்டு வந்தன.

அதில், எது காவிரித் தண்ணீரோ!
மேலும் படிக்க... "நீருக்குப்பேதமில்லை. சிறுகதை"

Monday, September 05, 2016

கண நாதனைப்பணி மனமே!








பல்லவி..

கண நாதனைப்பணி மனமே- அனு
தினமும் ஒருக்கணமேனும். (கணநாதனை)

அனுபல்லவி
மனம் தூய்மையாகும் மகிழ்ச்சி மிகப்பெருகும்
வனவேழ முகந்தன்னை வணங்கிட வினை அகலும்(கண நாதனை)

சரணம்

ஆற்றங்கரை இருப்பான் அழகுச்சோலையிலுமிருப்பான்
போற்றித்துதிப்போர்க்கு ‘போதும்’எனும்வரை அளிப்பான்
ஔவைக்கு அருள் செய்த ஆனை முகத்தானை
எவ்வண்ணம்  தொழுதாலும் ஏற்றுக்கொள்ளுவான்(கண நாதனை)

_______________________________________________________

வினாயகர் சதுர்த்திக்கு  இன்று எழுதிய பாடல்  சுப்புத்தாத்தாவின்  இசையமைப்பில்  கேட்கவேண்டுமே!

மேலும் படிக்க... "கண நாதனைப்பணி மனமே!"

Thursday, August 25, 2016

ஆலைக்கரும்பின் மொழியனைய அசோதைநங்காய்!




பாலைக் கறந்து அடுப்பேற வைத்து
  
பல்வளையாள் என் மகளிருப்ப
மேலையகத்தே நெருப்பு வேண்டிச் சென்று
  
இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமமுடைய நம்பி
  
சாய்த்துப் பருகிட்டுப் போந்துநின்றான்
ஆலைக் கரும்பின் மொழியனைய 
   
அசோதைநங்காய் உன்மகனைக் கூவாய்!

யசோதையிடம்  பொல்லாதக்கண்ண்ணனைபற்றி புகார் சொல்லவருகிறாள் ஒருத்தி. எடுத்த எடுப்பிலேயே  பாலைக்கறந்து அடுப்புல வச்சேனா என ஆரம்பிக்க  யசோதை எங்கோ பார்த்தபடி அதைக்கேட்கிறாள்.அவளுக்குத்தெரியும்  வந்தவள்  தன் மகனைப்பற்றி ஏதோ சொல்லப்போகிறாள் என்று. துறுதுறுவென  ஒரு குழந்தையைக்கண்டால்  பொறுக்காதே சிலருக்கு. அதிலும் கண்ணன், கண்டகி நதியில் கிடக்கும்  சாளகிராம்கற்களைப்போல  கருப்பாய் அழகாய் இருக்கிறானா  அவனை ஏதாவது சொல்லாவிட்டால் இந்த ஆயர்பாடிப்பெண்களுக்குத்தூக்கம்வராதே..

யசோதையின்முகமாற்றம் வந்தவளுக்குத்தயக்கத்தை ஏற்படுத்த  விஷயத்தை சுற்றிவளைத்து  சொல்லத்தொடங்குகிறாள்

நிறையவளையல்போட்டிருக்கிற என் மகளை அடுப்புகிட்ட காவலுக்கு நிக்கவச்சேன்...


அதுக்கென்ன இப்போ என்பதுபோல யசோதை  கண்கேட்கிறது. 


மேற்குபக்கம் இருக்கிற பக்கத்துவீட்டுக்குபோய் அடுப்பு பற்றவைக்க  நெருப்பு (குச்சி?)வாங்கப்போனேன்


இரவல்வாங்குவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை…யசோதயின்  வாய் முணுமுணுப்பதுபோல  பட்டது.

அப்புறம்..கணப்பொழுது பேசிநின்றேன்


கைல நெருப்பாம் வாயில் பேச்சாம்  வேறென்ன  பத்தவைக்கும் வேலைதான் இவளுக்கு!

யசோதை  உதட்டை சுழிக்கிறாள்.

அதற்குள் உன் மகன்  கிருஷ்ணன்(சாளக்கிராமமுடைய நம்பி—)பாலை சாய்த்து  குடிச்சிட்டுபோய்ட்டான். என்று சொல்லி யசோதையைப்பார்க்கிறாள்.

தன்குழந்தையை குற்றம் சொன்னால் எந்தத்தாய் தாங்கிக்கொள்வாள் கண்ணில்  நெருப்பு உமிழப்பார்க்கிறாள் வந்தவள் வெலவெலத்துப்போய்விடுகிறாள்

ஆகவே அடுத்தவரியில்  ஆலைக்கரும்பு போல இனியமொழிஉடையவளே யசோதை நங்கையே  உன் மகனைஅழைத்து சொல்லிவையேன் என்றுகெஞ்சுகிறாளாம்.

யசோதைக்கு ஐஸ்  ஆலைக்கரும்பு மொழி அனையவளாம்.

 பெரியாழ்வாரும் ஆண்டாளும் உரிமையாய் கடிந்துகொள்வதிலும் பின்னாடி குழைவதிலும் வல்லவர்கள்.. 

பேய்ப்பெண்ணே என்று திட்டிவிட்டு தேசமுடையாள் அதாவது தேஜஸ் ஒளி கொண்டவளே கோதுகலமுடையபாவாய் என்றெல்லாம்  ஆண்டாள் புகழ்வதுபோல  பெரியாழ்வார் இந்தப்பாடலில்  யசோதையை  வெறும் கரும்பின்  மொழியாள் என்சொல்லவில்லைபாருங்கள் ஆலைக்கரும்பாம்  அதாவது  நன்கு பக்குவமான  ரசம் அதிகம் கொண்ட கரும்பினைத்தான் ஆலைக்கு அனுப்புவார்கள். காய்ந்து நலிந்துபோனதெல்லாம்  தள்ளிவிடுவார்கள் ஆலைக்கரும்பு சுவையானது  

அப்படி இனிய  வார்த்தைகொண்ட  யசோதை நங்காய் என்கிறாள் நங்கை எனில்பெண்ணில் சிறந்தவள் என்னும் பொருளும் உண்டுஇப்படிப்  பாடி  உன் பையனைக்கூப்பிடம்மா  என்கிறாளாம்.

 பெரியாழ்வார் பாசுரங்கள்  ஒவ்வொன்றுமே ஆலைக்கரும்புதான்!!

பிகு..
(சாளக்கிராமமுடைய நம்பி...முக்திநாத் பெருமானைக்குறிக்கிறது)
மேலும் படிக்க... "ஆலைக்கரும்பின் மொழியனைய அசோதைநங்காய்!"

Monday, August 15, 2016

இந்தியத்தாயே பார்த்தாயா!








எழுபது வயது  அன்னை  இன்று
ஏக்கமாய் நிற்கும் பலியாடு.
அரசியல் சூதாட்ட அரங்கினிலே
அக்கிரமக்காரர்களின் விளையாட்டு.
 
 
 
ஒருமைப்பாடு என்பது எல்லாம்
ஒடுங்கிப் போனதில் வந்தது குறைபாடு.
ஓசைபடாமல் சத்திய தர்மம்
 ஓடிச் சென்றதென்னவோ சுடுகாடு!
 
கொள்ளை கொலை ஜாதிச்சண்டைகள்
 குடியைக்கெடுக்கும் மதுக்கடைகள்
அடிக்கடி நடக்கும் அராஜகங்கள்
அடியோடு புதையும்  முழு நிஜங்கள்.
 
 

தர்மம் என்பதை  கைகேயியைபோல்
துரத்தி் அனுப்புவர் வனவாசம்.
இந்தியத்தாயே பார்த்தாயா!
இதுவா அம்மா உன் தேசம்?
 
ஊழல்செய்யும் பேர்களுக்கு
உற்சாகமாய்   தருவர் பரிவட்டம்!
உண்மைபேசும்  அப்பாவிகளோ
அழிந்தே போவார் தரைமட்டம்.
 
 
 
 
ஒடுங்கி அடங்கிக்கைகுவித்தே
ஒருநாள் கேட்பான் தன் ஓட்டு
பதவி கிடைத்த உடனேயே 
பறப்பதில் அவனும் தான் சிட்டு!
 

நாக்கே வாயை விழுங்கிவிடும்
 நகமே விரலைச்சுரண்டிவிடும்
போக்கே சரியா தலைமையினால்
புரண்டு அழுகிறாள் பாரத அன்னை!

 
ஏய்ப்பவர் அமரும் கோபுரத்தை
இடித்துதள்ள வேண்டும் ஓர் புறத்தில்.
மேய்ப்பவன் புலியாய் இருந்துவிட்டால்
மேயும் ஆடுகள் பலியாகும்
 
சிறுமைகளுக்கும் சில்லறைகளுக்கும்
சிறப்பு சேர்க்க விடுவோமா
பெருமைக்குணங்கள்: கொண்ட பழம்
பெரும்தலைவர்வழியில் வாழ்வோமா!
 
தியாகிகள் உரைத்தது வந்தே மாதரம்!
அரசியல் திருடர்கள் உரைப்பது
வந்து ஏமாத்தறோம்!
ஏத்திப்பிழைக்கும்  ஈனர்களை
சாத்தித்துரத்த இளைஞர் அணி
சடுதியில்வந்தால் நாட்டிற்கு
சட்டெனக்கிடைக்கும் பெருமை இனி!
 
மேலும் படிக்க... "இந்தியத்தாயே பார்த்தாயா!"

Saturday, August 13, 2016

அரங்கத்திருவே!

பல்லவி.

அரங்கத்திருவே!  கற்பகத்தருவே!
வரங்கள் அளிக்கும் வரமஹாலஷ்மியே!(அரங்க)

அனுபல்லவி
பரமன் அரங்கனின் பட்டமகிஷி தேவி
கரங்கள் கூப்பி அவளை தினம் சேவி!(அரங்க)

சரணம்.

சகல  உயிர்களையும் காத்திடுகின்றாள்.
அகலகில்லேன் அம்மா உன் திருவடிதனைப்பிரிந்து.
நிகழும் அனைத்தும் நின் செயல் அன்றோ?
புகழ்வது உன் நாமமெனில் புல்லரிக்கின்றதன்றோ!
(அரங்க)

...திருவரங்கப்ரியா(ஷைலஜா)  எழுதியது.

மேலும் படிக்க... " அரங்கத்திருவே! "

Monday, August 01, 2016

நட்பென்பது......


"ஹார்ட் அட்டாக்... தூக்கத்திலேயே உங்க அப்பாவுக்கு உயிர் போயிருச்சு கணேசா... மனசை திடப்படுத்திக்க. எனக்கு தெரியும், நீ நிலை குலைந்து போவன்னு. ஒற்றுமையான, பாசமான குடும்பத்தின் ஆணி வேரா இருந்த அற்புதமான மனுஷர் உங்கப்பா; இனி, அவர் நம்ம கூட இல்லையேங்கிறத குடும்ப டாக்டரான என்னாலேயே தாங்க முடியல. உங்க எல்லாருக்கும் இது ரொம்ப கஷ்டம் தான். என்ன செய்ய... காலம் தான் இதுக்கு மருந்து,'' என்றார், கணேசனின் குடும்ப டாக்டர்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் விஷயம் தெரு முழுவதும் பரவி, கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது.

'வாத்தியார் ராமநாதன் போயிட்டாராமே... தங்கமான மனுஷன்...'
'நேத்து கூட என்னை பாத்து, பிசினசில் நஷ்டமானதுக்கு ஆறுதலா பேசினாரே...' என்று ஆளாளுக்கு ராமநாதனை புகழ்ந்தபடியே, துக்கத்தை கொட்டினர்.

அப்பா இறந்து விட்டதாக நினைக்க, கணேசனுக்கு சிரமமாக இருந்தது. இன்னமும் அவர் தூங்குவது போலவே இருந்தார். இரவு தூங்கப் போகும் முன், முகம் கழுவி, தலைவாரி, சின்னதாய், நெற்றியில் விபூதி பூசி கொள்வார்; தூய வெள்ளை வேட்டி, வெள்ளை நிற அரைக் கை கதர் சட்டை அணிவார்.
'உடம்பும், மனசும் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணும். பேரழகா இல்லன்னாலும், பாக்கற மாதிரியாவது இருக்கணுமில்ல...' என்று, ஒருநாள் அப்பா தன்னிடம் சொன்னதை நினைத்து பார்த்தான்.

'ஜனனத்தை வரவேற்கிற மாதிரி, மரணத்தையும் வரவேற்கணும் கணேசா... மரணங்கிறது கல்வியில் ஒரு கூறு...' என்று அப்பா கூறியது நினைவுக்கு வர, ''கற்றுக் கொள்ளத்தான் அமரலோகம் போயிட்டீங்களாப்பா...'' தந்தையின் பாதங்களை, இரு கைகளிலும் பிடித்தபடி, உடல் குலுங்க அழுதான், கணேசன்.

அப்பாவிற்கு அழுவது பிடிக்காது. 'எதையும் இயல்பாய் எடுத்துக்கணும்...' என்பார்.

ஆனாலும், அவர் சற்று அதிகம் கலங்கியதை, இரண்டு முறை பார்த்துள்ளான். பத்து ஆண்டுகளுக்கு முன், கேன்சரில் அம்மா இறந்த போது, மிகவும் கலங்கி போனவர், 'கணேசா... உங்கம்மாவுக்கு நான் எதுவுமே செய்யலயப்பா... அவளாய் எதுவும் கேட்டதும் கிடையாது. அவள் ஆசைகளை நானாவது கேட்டு செஞ்சிருக்கணும். எதையுமே இழந்த பின் தான், அதோட மதிப்பு இரட்டிப்பாகிறதுங்கிறது உண்மையாப் போச்சே... உன் அம்மாவோட நினைவு, இப்போ எனக்கு அப்படித்தான் இருக்கு...' என்று நெகிழ்ந்த குரலில் சொல்லிய போது, அவர் முகம் கலங்கியிருந்ததை கவனித்தான், கணேசன்.

அதற்கு முன்பும் ஒரு முறை அவர் கண் கலங்கியதை பார்த்துள்ளான். அச்சம்பவம் அவன் நினைவிற்கு வந்தது...

அப்போது கணேசனுக்கு, 15 வயது; அவன் தம்பிக்கு, 10 வயது. அன்று, கணேசனின் தம்பியும், அவனோட நண்பன் நரேந்திரனும் ஆடிப்பதினெட்டாம் பெருக்குக்கு ஆற்றில் குளிக்கப் போன போது, ஆற்று வெள்ளத்தில் சிக்கினர். படித்துறையில் சிலர் அமர்ந்திருந்தாலும் நீச்சல் தெரியாததால், கையை பிசைந்தபடி, வெறுமனே பதறினர்.

அச்சமயம் அந்த பக்கம் வந்த ராமநாதன் விஷயம் கேள்விப்பட்டு, ஓடி வந்து ஆற்றில் குதித்தவர், முதலில் மீட்டது, நரேந்திரனை தான்.
அடுத்து, தன் மகனை காப்பாற்ற முனைந்த போது, அவன் பிணமாகத் தான் கிடைத்தான்.

'என் பிள்ளைய காப்பாத்திட்டு, உன் பிள்ளைய பறி கொடுத்திட்டியேடா...' என்று தலையில் அடித்தபடி அழுதார், ராமநாதனின் நண்பர் பரமசிவம்.
பள்ளியிலிருந்து சுற்றுலா சென்றிருந்த கணேசன், விஷயம் கோள்விப்பட்டு, பாதியிலேயே திரும்பி வந்தவன், 'பெத்த மகனை முதல்ல காப்பாத்தணும்ன்னு தோணலயா... என் தம்பி இப்ப இறந்துட்டானே...' என்று கோபத்துடன் கேட்டு, அழுதான்.

மகனை, நிதானமாய் ஏறிட்ட ராமநாதன், 'கணேசா... உன் கோபம் நியாயமானது தான்; ஆனா, எனக்கு அந்த நேரம் பரமசிவத்தை தான் நினைக்க தோணுச்சு. நானும், பரமசிவமும் ஸ்கூல் பிரண்ட்ஸ்; சிறுவயதிலிருந்து இணை பிரியாத நாங்க இப்பவும், உள்ளூர் பள்ளிகளில் ஆசிரியர்களாய் இருந்து, ஒரே ஊரில் குடியிருக்கோம். எனக்கு, உன் தம்பி இல்லாட்டாலும் நீ இருக்கே... ஆனா, என் நண்பனுக்கு நரேந்திரன் ஒரே பிள்ளை...' என்று சொல்லி முடிக்கையில், அவரது கண்கள் கலங்கியிருந்தன. அவர் கைகளை ஆறுதலாக பற்றி, 'மன்னிச்சிடுங்கப்பா... உங்க நல்ல மனசை, நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன்...' என்றான், கணேசன்.

அன்றிலிருந்து, கணேசனுக்கு, தன் அப்பா மீதுள்ள மதிப்பும், மரியாதையும், பன்மடங்கு பெருகியது. பரமசிவம் - ராமநாதனின் நட்பும், மேலும் இறுகிப் போனது.

'உறவில் தான் விரிசல், குடைச்சல் எல்லாம். நட்பில் அதெல்லாம் வருவதில்லை. நட்புக்கு அடிப்படை ஒத்த தொழிலோ, அந்தஸ்தோ, வயதோ அல்ல. வாழ்க்கை நிலையில், பல்வேறு அந்தஸ்துகளில் இருப்பவர்கள் இடையிலும் பிரிக்க முடியாத நட்பும், பாசமும் ஏற்படுவதை பார்க்கிறோம். கொடுப்பதும், பெறுவதும் ஒன்றேயாகிற காமம் போன்று, ஆன்மாவின் அந்தரங்க ஆழத்தில், ஈருயிர்கள் சங்கமிப்பதே உயர்ந்த நட்பின் அடிப்படைன்னு நினைக்கிறேன்...' என்று அடிக்கடி சொல்லி மகிழ்வார், பரமசிவம்.

நரேந்திரன் மேல் படிப்பிற்கு வெளியூர் சென்ற போதும், பணி கிடைத்த போதும், நன்றி மறவாமல், ராமநாதனை வணங்கி, ஆசிர்வாதம் பெற்றுச் சென்றான். பரமசிவம் மற்றும் ராமநாதன் இருவரும் இணைந்தே பெண் பார்த்து, நரேந்திரனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.


அலுவலக புராஜக்ட் என, மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தில், அமெரிக்காவிற்கு சென்றுள்ள நரேந்திரன், தன் அப்பாவையும் தன்னுடன் அழைத்து போவதாக கூறிய போது, முதன் முறையாக தன் நண்பரை பிரியும் வருத்தம் இருந்தாலும், 'மகன் குடும்பத்துடன் மகிழ்ச்சியோட இருந்துட்டு வா...' என்று வழியனுப்பி வைத்தார், ராமநாதன்.

பழைய நினைவில் மூழ்கியவனுக்கு, 'பரமசிவம் மாமாவிற்கு சொல்ல வேண்டுமே...' என்ற பரபரப்பு ஏற்படவும், மொபைல் போனில், நரேந்திரனை தொடர்பு கொண்டான். போன், 'ஸ்விட்ச் ஆப்' என வரவும், வீட்டிற்கு போன் செய்தான். ஒரு பதிலும் இல்லை; 'விடுமுறைக்கு எங்காவது வெளியில் போய் விட்டனரா...' என, நினைத்த கணேசனை மேலும், யோசிக்க விடாமல் துக்கம் கேட்கும் கூட்டம் அலைமோதியது.

கணேசனின் மனைவியும், குழந்தைகளும் ராமநாதனின் காலடியை விட்டு நகரக் காணோம்.

''கணேசா... உறவுன்னு சொல்லிக்க நான் ஒருத்தி தான் உள்ளூர்ல இருக்கேன்... டில்லி, மும்பையில இருக்கிற தூரத்து சொந்தங்களுக்கு தகவல் தெரிஞ்சாலும், அவ்வளவு தூரத்திலிருந்து உடனே வர முடியுமோ, என்னவோ. ஏன் தாமதிக்கணும்? இன்னிக்கே எடுத்துடலாமே...'' என்று, அத்தை பட்டென்று கேட்கவும், கணேசனுக்கு சற்று எரிச்சலானது.

''இல்ல அத்தை... அப்பாவோட பிரண்ட் வரணும்,'' என்றான்.

''யாரு அது, எங்க இருக்கார்?''

''அமெரிக்காவுல இருக்காரு...''

''அமெரிக்காவா... அப்போ ரெண்டு நாளாவது ஆகுமே... அதுவரை வச்சிருக்கணுமா... பகல்ல இறந்தா, மூன்றரை மணி நேரந்தான் வைச்சுருக்கணும்; அதுக்குமேல் வச்சிருந்தா, இறந்தவர், வாழ்ந்த போது செய்த புண்ணியங்களுக்கு பலன் இருக்காதுன்னு சொல்வாங்க. இறந்தவரோட இறுதி பயணத்தை தாமதப்படுத்த யாருக்கும் உரிமை இல்லன்னு தர்மசாஸ்திரம் சொல்லுது,'' என்றாள் அத்தை அழுத்தமாக!

''அத்தை... சாஸ்திரம், சம்பிரதாயங்களை மீறியது நட்புங்கிற உறவு. அவர் வர்ற வரைக்கும் அப்பா இங்கே தான் இருப்பார். அதை மீறி, நான் தகனம் செய்தால், அப்பாவோட ஆத்மா சாந்தி அடையாது. அது எனக்கு தெரியும்,'' என்று உறுதியான குரலில் சொல்லி, ஐஸ் பாக்சுக்கு சொல்ல, மொபைல் போனில் எண்ணை அழுத்தியபடி, வாசலுக்கு வந்தான் கணேசன்.

அப்போது, சர்ரென பெரிய கார் ஒன்று, வாசலில் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கியவரை கண்டதும், கண்கள் விரிய, ''பரமசிவம் மாமா... நீங்களா...'' என்றான்.

''ஆமாம்... நானே தான்; சர்ப்ரைசா இருக்கட்டும்ன்னு தான் யாருக்கும் தகவல் சொல்லாம புறப்பட்டோம். மொபைல் போனையும் அணைச்சு வச்சோம். பின்ன... என் தோஸ்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேணாமா... வயசானாலும், நட்பு மட்டும் தான் இளமையா இருக்கும். ஒரு விஷயம் தெரியுமா... நரேந்திரனின் புராஜக்ட், திட்டமிட்டதுக்கு முன்னரே முடிஞ்சு போச்சு. இனிமே, அவன் நிரந்தரமா இந்தியாவுல தான் இருக்கப் போறான். எனக்கும், ராமநாதனை விட்டு அமெரிக்காவுல இருக்க முடியல. சொர்க்கமா இருந்தாலும், என் நண்பன் பக்கத்துல இருக்கிறத போல இருக்குமா... எல்லாத்தையும் நேர்ல சொல்லி, என் நண்பனை திக்கு முக்காட வைக்கணும்ன்னு தான், ரகசியமா கிளம்பி வந்தேன்.
''இன்னிக்கு நட்சத்திரப்படி, உன் அப்பாவோட, 70வது பிறந்த நாள்; ஏகாதசியில வாய்த்திருக்கிறது ரொம்ப விசேஷம். ஆமா, வீட்ல என்ன விசேஷமா; ஏகப்பட்ட தலை தெரியுதே...
''
பரவசமாய் பேசிய பரமசிவத்தை கலங்கிய கண்களுடன், கணேசன் இறுக கட்டிக் கொள்ள, திடுக்கிட்டவர், ''கணேசா... என்ன ஆச்சு...'' என்றார்.
கணேசனுக்கு அதுவரை அடங்கியிருந்த துக்கம் பீறிட்டு கிளம்பியது.
அதற்குள் வீட்டிற்குள் ஓடிய நரேந்திரன், அங்கிருந்தே, ''அப்பா... மாமா நம்மை விட்டு போயிட்டார்ப்பா...'' என, கதறினான்.

பரமசிவம் பதற்றமாய் உள்ளே வந்தவர், உடல் குலுங்க, நண்பனின் தலைமாட்டில் அப்படியே சரிந்து உட்கார்ந்தார். நண்பனிடம் பேசுவதற்கு ஆயிரம் ஆயிரம் விஷயங்களுடன் வந்தவருக்கு இப்போது பேச்சற்று தொண்டை அடைக்க, கண்ணீர் தாரை தாரையாக வழிய, சிலையாக அமர்ந்திருந்தார்.

''கணேசா... சாஸ்திரிக்கு சொல்லிடலாமா...'' என்று மறு படியும் குரல் கொடுத்தாள், அத்தை.

அடுத்த சில நிமிடங்களில், சாஸ்திரி வந்து இறங்கினார்.

''காரியத்தை ஆரம்பிக்கலாமா... இறந்து போனவரின் பிள்ளைகள் எல்லாம் இப்படி வந்து நில்லுங்க...'' என, சாஸ்திரி கூற, அவரை நோக்கி நடந்தான், கணேசன். 

அதுவரை, பிரமை பிடித்தது போன்று அமர்ந்திருந்த நரேந்திரன், சட்டென ஓர் அறைக்குள் சென்று, வேட்டி கட்டி வந்தவன், வெற்று மார்புடன் கணேசன் அருகில் போய் நின்று, ''வந்துட்டோம்... இனி, நீங்க காரியத்தை ஆரம்பிங்க...'' என்றான்.

ஷைலஜா
Advertisement
  

சென்றவார தினமலரில் வந்த கதை
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=32162&ncat=2
மேலும் படிக்க... "நட்பென்பது......"

Sunday, May 15, 2016

நன்னயம்!

 இன்றைய தினமலர் வாரமலரில் எனது சிறுகதை நன்னயம்  !


மேலும் படிக்க... "நன்னயம்!"

Saturday, April 23, 2016

புத்தக வீடு!

“There is no friend as loyal as a book.”  என்கிறார் Ernest Hemingway.
வாசித்தல் தவமா தாயின் மடியா, வாசித்தல் சுவாசித்தலா சுகமான அனுபவமா  என்பதையெல்லாம்  கவிதைவரிகளாய் பலர் எழுதிவிட்டனர். புத்தகம் வாசிப்பதே இப்போது குறைந்துபோய்விட்டது என்றும் சிலர் புலம்புகிறார்கள்.முன்பெல்லாம்  ரயில் பஸ்பயணங்களில்  புத்தகம் வாசிக்காமல்  செல்லும் பயணிகள்  மிகக்குறைவு.தினத்தந்தி போன்ற நாளிதழாவது சிலர் கைகளில் தவழும் இப்போது அந்தப்பழக்கம் கைபேசியால் கைவிடப்பட்டுவிட்டாலும் முற்றிலும் மறையவில்லை. அடிக்கடி  பயணம் மேற்கொள்வதால்  என்னால் இதனை உறுதியாகவும் சொல்ல இயலும். புத்தகம் வாசிப்பவர் இல்லாமலா  கடைகளில்  இத்தனை  மாத வார இதழ்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும்? இயற்கை சக்திகள் போல  இயல்பானதாக  என்றும் இருப்பது  புத்தகம் வாசிக்கும் பழக்கமும். இணையமும் kindle  இன்னபிற நவீன சாதனங்கள்  வந்தாலும்  ஒரு புத்தகத்தை கையில் எடுத்துவைத்துக்கொண்டு  அதை மெல்லப்பக்கம் பக்கமாய் திருப்பி  வாசிக்கும் அனுபவத்திற்கு ஈடு இணை ஏது?
 என் அப்பா  எந்தப்புத்தகமானாலும் அதை பிறந்த குழந்தையைப்போல  புத்தகத்திற்கு வலிக்காமல் மென்மையாய் எடுப்பார்.  சடசடவென பக்கங்களைப்புரட்டுவது, புத்தகத்தை  பாய்போல சுருட்டுவது, பக்க ஓரங்களை மடிப்பது, அவசரவசரமாய்  கடைசிபக்கத்திலிருந்து  ஆரம்பித்து  விரைந்து படிப்பது, படித்ததும் புத்தகத்தை தொப் என தூக்கிக்கடாசுவது என்பதெல்லாம் அப்பாவிற்கு  சுத்தமாய் பிடிக்காது. அவர் வாசிக்கும் அழகைப்பார்க்கவே நானும் என் உடன்பிறப்புகளும் தூர நின்று கவனிப்போம்.

பூஜைக்கென்று  தியானத்திற்கென்று  படுக்கவும்சமைப்பதற்ககும் என்றும் குளியல் இத்தியாதிகளுக்கு என்று பிரத்தியேக இடம் உள்ளதுபோல புத்தகங்களுக்கென்று நாம்   வீட்டில்இடம் ஒதுக்கி இருக்கிறோமா! 
  
புத்தகங்களுக்காகவே வாழ்ந்தவர்கள் வாழ்கிறவர்கள் பலர்.

கர்னாடகாவில் ஒருவர் புத்தகங்களூக்கு என்றே  வீடு கட்டி இருக்கிறார்  ஸ்ரீரங்கப்பட்டிணம் அருகே பாண்டவபுரா என்னும் இடத்தில் வீடுமுழுக்க புத்தகங்கள்  நூலகம் எனலாம் பழையவேதங்கள் முதல் மென்பொருள்  (கணிணி) பற்றிய பல்வகைப்புத்தக்ங்கள் ஷேக்ஸ்பியர்முதல் ஹாரிபாட்டர்வரை என சம்பத்தித்ததில் தனக்கென ஒருவண்டிகூடவாங்கிக்கொள்ளாமல் புஸ்தகங்களாகவாங்கிவிடுவார் அங்கேகவுடா.
வயது 68 தனியார் நிறுவனத்தில்  பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
வேலையில் இருந்தபோது போனஸ்  உபரிப்பணம் என்று கிடைப்பதை புஸ்தகங்களாகவாங்கிவிடுவாராம்.
“என் கணவர் ரயில்வே ஸ்டேஷன்லிருந்து சாக்கு மூட்டையில் புஸ்தகங்களாக  தோளில் சுமந்து வருவார்..இவருடன் வேலைபார்த்தவர்கள் எல்லா கார் ஸ்கூட்டர் நிலம் என்றுவாங்கிவார்கள் இவருக்குப்புஸ்தகங்கள்தான் எல்லாமே” என்கிறார் இவர் மனைவி விஜய லஷ்மி.


“என்னிட நாலுபாண்ட் நாலுஷர்ட் தான் இருக்கின்றன,. பத்துவருஷம் முன்பு ஒருநிலத்தை பத்துலட்சத்துக்கு(இப்போது அதன் மதிப்பு ஒருகோடிக்குமேல்) விற்று நூலகத்தை கவனிக்க  விருப்பஓய்வும் பெற்றுக்கொண்டேன்” என்கிறார் அங்கே கவுடா
ஹரிகோட்டா என்ற பிசினஸ் புள்ளி ஒருமுறை கிருஷ்ணராஜ் சாகரில் கோவிலை புனருத்தாரணம் செய்யவந்தபோது இந்த நூலகத்தையும் வந்துபார்த்தாராம் அப்போது 70000 புத்தகங்கள் இருந்தனவாம். அவரே இந்த இடத்தில் 2005ல் நூலகமாய் கட்டிக்கொடுத்தாராம்.
அப்போதைய முதலமைச்சர் அங்கேகவுடாவைப்பாராட்டி 2கோடி நன்கொடைதருவதாக வாக்களித்தாராம் ஆனால்கிடைத்தது 25லட்சம் மட்டுமே!
பல எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள் படிப்பாளிகள் இங்குவந்துபோகின்றனர். வெளிநாடுகளிலிருந்தும் சிலர் வந்துபோகிறார்கள்.
அமெரிக்காவிலிருந்து இங்கேவந்து இந்த நூலகத்தைப்பார்த்த ரன்மல்ஸ்மித் என்பவர் பார்வையாளர்கள் புத்தகத்தில்,” இந்தியாவில் உயர்ந்தது தாஜ்மகால்மட்டுமல்ல இந்த நூலகமும்தான் .தாஜ்மஹாலைவிடவும் உயர்ந்தது என்பேன் அங்கே கவுடாவிற்கு எந்த உதவும் கிடைக்காதது துரதிர்ஷடம்தான்’என எழுதி உள்ளார்.

இந்த நூலகத்தில் காந்தீஜிபற்றிய 2500புத்தகங்களும் பகவத்கீதை பற்றி 2500புத்தகங்களும் 250000 உலக இதழ்கள் உலகநாடுகள்பற்றி 7000வரைபடங்கள் வேதங்கள் உபநிஷத்துகள் புராணங்கள் இவைபற்றி 2000 நூல்கள் ஆங்கில எழுத்தாளர்களின் 2லட்சம் புத்தகங்கள் இந்துகிறிஸ்துவ ஜைன இஸ்லாமிய புத்தகங்கள் பிரபலங்களின் அபூர்வபுகைப்படங்கள் பழையகால நாணயங்கள் கன்னடமொழி நாவல்கள் சிறுகதை தொகுப்புகள் கவிதைகள் கலை இலக்கியபுத்தகங்கள் தவிர தமிழ் மராட்டி ஒடிசி உருது பெர்சியன் அராபிக் தெலுகு வங்காளம் சீனா ரஷ்ய மொழி புத்தகங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கன.


-

மேலும் படிக்க... "புத்தக வீடு!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.