Social Icons

Pages

Monday, May 26, 2008

மயிலே! மயிலே!






நம்நாட்டின் தேசியப் பறவை மயில் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும்
எத்தனையோ பறவைகள் இருக்க தேசியப்பறவையாக மயிலை ஏன் தேர்ந்தெடுத்தனர் என்று
யோசித்தால் அதற்கு காரணம் தெரியவரும்.


மனித குலமே தெரிந்து கொள்ளவேண்டிய அளவுக்கு ஓர் ஆச்சர்யமான அபூர்வமான
ஒழுங்குமுறை மயில்களிடம் உள்ளன.!*

மனுவம்சத்தின் வழி வழியாக வந்தவர்கள் சூரிய குலமன்னர்கள். இவர்கள்
மயில்போன்றுமுறை தவறாதவர்களாம் அதென்ன மயில்முறை?

*ராமனுக்கு பட்டம் சூட்ட அரச சபை ஆயத்தமாகிவிட்டது

..அயோத்திநகரம்.கோலாகலமாய் இருக்கிறது. அப்போது கூனி வருகிறாள்.


கைகேயியைப்பார்த்து," ராமனுக்கு பதிலாய் உன்மகன் பரதனுக்கு பட்டாபிஷேகம்
செய்யச்சொல்லு" என்றதும் முதலில் கைகேயி இப்படித்தான் சீறினாளாம்.(பிறகு மனம்
மாறிய கதை யாவரும் அறிந்ததே)



*" மயில் முறைக்குலத்துரிமையை மனுமுதல் மரபை*
*செயிர் உறபுலச் சிந்தையால் என் சொனாய் தீயோய்*..."



(செயிர் உறபுலச்சிந்தை எனில் குற்றம்காணும் எண்ணம் என நினைக்கிறேன்...தமிழ்
வல்லுனர்கள் விளக்கலாம் தயவு செய்து)


கம்பன் குறிப்பிடும் இந்த மயில்முறைதான் என்ன என்கிறீர்களா?

மேலை நாட்டில் மயில்பண்ணைவைத்து ஆராய்ச்சி செய்தார், ஒருவர்*

மயிலின் இயல்புகளை அவர் கூர்மையாககவனித்துவந்தாராம்.*


மயில்முட்டையிலிருந்து வந்த அதன் முதல் குஞ்சுக்கு அதன் காலில் பச்சைவண்ண
நூலைக்கட்டினார். அடுத்த குஞ்சுக்கு சிவப்பு நூல் அதற்கடுத்ததற்கு மஞ்சள் நூல்
என்று,

*அந்தவிபரங்களை தன் பதிவேட்டில்குறித்துக்கொண்டார்.

மயில்குஞ்சுகள் வளர்ச்சியடைந்து தோகை* *விரித்தாடிய* *சந்தர்ப்பத்தில் அந்த
பச்சைக்கயிறுகட்டிய குஞ்சுதான் முதலில் தோகை விரிக்கத் தொடங்கியதை
அவர்கவனித்தார்.

* அதுதான் முட்டையிலிருந்து வெளிப்பட்டமுதல்குஞ்சு.*

கம்பர் குறிப்பிட்ட மயில்முறைக்கு இப்போது விளக்கம் கிடைத்துவிட்டதா?*

வாரிசு உரிமை தலைமகனுக்குத்தான். இதை பலகாலம் முன்பே தமிழ்
இலக்கியம் சொல்லிவிட்டது.*

ஆமாம் அந்த மயில்பண்ணை நடத்தியமேலைநாட்டவருக்கு எத்தனையோ காலம் முன்னேயே
தணிகைப்புராணம் எனும் நூலும் சொல்கிறது*

'பலாவம் பொழிலின் ஒரு தாய்உயிர்த்த பல மயிற்கும்*
கலாபம் புனைந்த களிமயில் மூத்தது...'*

*செய்யுளில் அமையப்பெற்றதனால் இது யாவருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல்
போய்விட்டது. இதையெல்லாம் அண்மையில் ஒரு தமிழ்பெரியவர் மூலம் நான் அறிந்து அதை
இங்கு இடுகிறேன்...


குயில்கூவும் ;மயில் அகவும் என்று சொல்லவேண்டுமாம்!!!மயில்கூவினால் கேட்க
சகிக்காது!!*

*திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் நிறைய மயில்களைக்காணலாம்.விராலிமலையிலும் ரொம்பவே உண்டு. *



*பெண்களை மயிலோடு இலக்கியகாலம்முதல் ஒப்பிடுகிறார்கள்..ஆண்மயில்தான்
தோகைவிரித்தாடும்.

எனினும் 'மயில் போல பொண்ணு ஒண்ணு 'என்று பாடல் வேறு!!!

சிக்குபுக்குசிக்குபுக்கு ரயிலே சிக்குவாளா சிக்குவாளா மயிலே என்ற பாட்டு
வந்தபுதுசுல என்ன போடு போட்டது?:) அசைந்தாடும் மயில் ஒன்று என்ற பாடலை சுதாரகுநாதன் பாடிக்கேட்கவேண்டும்.*

வேறென்ன புகழ்பெற்ற மயில்பாடல்கள்?

முருகன் மயில்வாகனன். *

மயில் ராவணன் என்று ஒரு பெயர் அது எதனால் எப்படிவந்தது?*

*மயிலாப்பூருக்கும் மயிலுக்கும் சம்பந்தம் உண்டா?*
*மயிலாடுதுறை ஊருக்கு கதை இருக்கு..*
* *
*மயில்துத்தம் என்று ஒரு மருத்துவப்பொருள் உண்டோ?*
* *
*மயூர் என்றால் சம்ஸ்க்ருததில் மயில்.. மயூராசனம் கூட இருக்கிறது.*

*மயிலிறகில் விசிறி உண்டு..மயிலிறகுகளை புத்தக நடுவில் சின்னவயசில் சேர்த்து
ஒளித்துவைத்திருக்கிறோம் அல்லவா?


*க்ருஷ்ணர் தலையில் மயிற்பீலி இருக்கும்.*

*மயிலாட்டம் நாட்டிய நிகழ்ச்சியில் சிலர் இன்னமும் ஆடறாங்க..*

மயில் செய்திகள் இன்னும் நிறைய இருக்கும் மற்றவர்களும் பகிர்ந்து கொள்ளலாமே?

*(பதினாறுவயதினிலே படத்து மயிலு இதுல வரலாமா?:)) *
மேலும் படிக்க... "மயிலே! மயிலே!"

Friday, May 23, 2008

மீட்சி(சிறுகதை)

டிசம்பர் 2004ல் நடந்த சுனாமிக்குப்பிறகு இப்போதுதான் நாகப்பட்டிணத்துக்கு
வந்திருக்கிறான், பத்ரி.


சுனாமி நடந்த அந்ததினம்,....


'இன்று' என்னும்தொலைக்காட்சியின்
சிறப்பு ஒளிப்பதிவாளராய் தன் குழுவோடு வந்தான், பத்ரி.


நாகப்பட்டிணத்திற்குள் அவன் வந்த கார் நுழையும்போதே காற்றில்
பிணவாடை அடிக்க ஆரம்பிப்பதை உணர்ந்தான். வயிறுசில்லிட்டது.


வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வயிற்றில் அடித்துக்கொண்டு
ஜனத்திரள் கூட்டம்கூட்டமாய் அலறிக்கொண்டு நின்றனர்..ஓடினர்.


கதறி அழுதபடி புலம்பினர். அத்தனை துயரத்திலும் நின்றகாரிலிருந்து குழுவினருக்கு
முன்னே பரபரப்பாய் காமிராவுடன் இறங்கிய பத்ரியை ஒரு மூதாட்டி, அவன் கையிலிருந்த
நிழல்படக்கருவியைப் பார்த்தபடி எச்சரித்தாள்.


"டிவிபொட்டிக்காரத்தம்பியா? கார வுட்டு எறங்காதப்பா…அலை திரும்பவும்
அடிக்குமாம்…அதனால வந்தவழிபோயிடுப்பா.." என்றாள்.


"பத்ரி…கேட்டீங்களா நாங்க சொல்லசொல்லக் கேக்காம காரைநிறுத்தவச்சி கீழ
குதிச்சீங்க…எங்கபாத்தாலும் டெட் பாடீஸ் இருக்கற இடத்துல நமக்கு ஒண்ணும் வராம
நல்லபடியா சென்னைக்குத் திரும்பவேணாமா? கமான்..க்விக்,கார்ல ஏறுங்க
சீக்கிரம்..ஸ்பாட்டுக்குபோயி நம்ம வேலையை சட்டுபுட்டுனு ஆரம்பிக்கலாம்..வழியில
ஒண்ணும் வேணாம்.." என்று பொறுமைஇழந்தவளாய் கூச்சலிட்டாள் வினயா.


"அதில்லா வினயா..அந்தப்பள்ளிக்கூடத்தில பாருங்க.. போர்த்திய
துணிக்குக்கீழ ஏகப்பட்ட இறந்த உடல்கள்…அதையெல்லாம்..?"பத்ரிமுடிப்பதற்குள் வினயாவின் சாடிலைட் ஃபோன் குரல்கொடுதது.


"வினயா ஹியர்" என்றாள்


"நாந்தான் தினேஷ் டில்லி ஸ்டூடியோவிலிருந்து பேசறேன்.என்னாச்சு
எல்லாரும் ஸ்பாட்டுக்கு ரீச் ஆனீங்களா இல்லயா?" என்றது எதிர்முனை.


"இதோ இன்னும் பத்துநிமிஷத்துல போயிடுவோம் தினேஷ்" என்ற வினயா
பத்ரிக்குக்கண்ணால் சைகை காட்டி உள்ளே அமரச்சொன்னாள்.


கார் புறப்படும்போது,நாசியை விரல்களால் மூடியபடி,"ஸ்டிக்கிங்…ரொம்ப நாறுகிறது
இங்க. நிறைய பேர் செத்துருக்காங்க…ஊரே காலிபண்ணிட்டு திருவாரூர்பக்கம்
ஓட்றாங்க…பயங்கர பாதிப்பு."
எனறுசொல்லிவிட்டு ஆஃப்செய்தவள் பத்ரியிடம்" உடனே ஒரு எஃப்டிசி
அனுப்பணும்..ஹெட்லைன்ஸ் லைவ் பண்ண ஆரம்பிச்சிடாங்களாம்.. 'லைவ் சவுண்ட்
மைக்'சரியா இருக்கா பத்ரி? இறங்கினதும் ஸ்பாட்டுலபோயி காமிராவோட நீங்க
படம் எடுங்க .நான் லைவ் ல விவரமா சுனாமிதாக்குதலை சொல்றேன்..இன்னும் நிவாரணப்பணி தொடங்கியமாதிரி தெரியல..க்விக்.நம்ம ' *இன்று**'*சானல்தான் முந்திக்கணும் எல்லாத்திலயும்"என்றாள். அவள் சிந்தையெல்லாம் டிஆர்பி ரேட்டிங்கை
அதிகரிக்கவைப்பதில் குறியாய் இருந்தது.


பத்ரி தலையாட்டினான்.தலையோடு மனசும்கிடந்து ஆடித் தவித்தது.


விஷுவல்கம்யூனிகேஷன் படித்து பத்ரி விருப்பட்டு இந்தப்பணியில் சேர்ந்தான். இதுவரை
எத்தனை எத்தனையோ அனுபவங்கள். அனால்அவனுடைய இந்த இருபத்தி ஆறு வயதில் இப்படி ஒரு கோரக்காட்சியைக் கண்டதில்லை.எங்கெங்குகாணினும் அவலக்குரல்கள்.
பிணக்குவியல்கள்.அனாதைச்சடலங்கள்.


'நடந்தது பிரளயமா என்ன? அம்மா அடிக்கடி சொல்வாளே அதர்மம் அதிகமானால் இயற்கைக்கு சீற்றம்வரும்னு..


சினம் சேர்ந்தாரைக்கொல்லும் என்பது உண்மைதானோ?


ஆனல் அப்பாவிமக்கள் எத்தனைபேர் இதற்கு பலியாகிவிட்டர்கள்?.


அதற்கும் அம்மா விளக்கம் அளிப்பாள்'முன் ஜன்மத்து வினை'என்று..எனக்கென்னவோ இந்த வாழ்க்கைப்பாதையே விதிவழிதான் போகிறதென தோன்றுகிறது.அவரவர்க்கு
விதிக்கப்பட்டவிதி'


"பத்ரீ என்ன யோசனை? ஒர்க்ல மட்டும் இன்வால்வ் ஆகுங்க தோழரே! ஆனால் இப்படி
சீரியசா இருக்கறபோதும் யு லுக் ஹாண்ட்சம் யார்! .மாதவனா பழைய ஷாரூக்கா? என்ன
சொல்ல? பொண்ணுங்களை பரவசப்படுத்தும் முகம்! .தவறிப்போய் ஆறு வருஷம்
பின்னாடிபொறந்துட்டீங்க இல்லேன்னா நீங்கதான் என் கழுத்துல தாலி கட்டீ
இருப்பீங்க…!"வினயா சிரித்தபடி சொன்னாள்.எல்லாரும் காரிலிருந்து அவள் பேசியதை
ரசித்துசிரித்தபடிஇறங்கினர்.


பத்ரிக்கு சிரிக்கமுடியவில்லை..'அங்..அங்கே பாருங்க வினயா.. ஐயோ..தாறுமாறாய்
படகுகள் உடைஞ்சிகிடக்க அலைகள் வீசிப்போட்ட மரக்கிளைகளில் ஒரு கைமட்டும்
தொங்குது"என்று அலறினான்.


வேகவேகமாய் நடந்தவனை ராஜேஷ் ,
அதட்டினான்."பத்ரி.அங்கபோகாதீங்க,,புதைமணல்மாதிரி இருக்கு…காலை இழுத்துடும்…"


அலைகளின் ஆக்ரோஷம் இன்னும் அடங்கினமாதிரிதெரியவில்லை. போலீஸ் தலையீடு அதிகம் இருந்தது. அங்குமிங்கும் சிதறி அங்கங்கள் சிதைந்துகிடந்த
உடல்களைபுரட்டிஅடையாளம்கண்டு பலர் நெஞ்சிலடித்துக் கொண்ட காட்சி
பரிதாபமாயிருந்தது.


வினயா படகு ஓரமாய் உட்கார்ந்து விழித்துக்கொண்டிருந்த அனாதைச் சிறுமியை
பேட்டிகண்டு கொண்டிருந்தாள். அடுத்து கலெக்டரைப் பேட்டிகாணச்சொல்லி
டில்லியிலிருந்து ஃபோன்வரவும் எழுந்தாள்.


பத்ரி அப்படியே அங்கேயே உட்கார்ந்துவிட்டான்.


"ப த்ரீ! என்னாச்சு?"


"தலைவலி வினயா…எனக்கு மயக்கமாய் வருது…"


"எழுந்து வாங்க காருக்கு..இங்க இருந்தா எல்லா வியாதியும் வரும்.கலெக்டரைபோய்
பேட்டி எடுக்கணும் ..சீக்கிரம்…என் டி டிவி ஏற்கனவே போயாச்சாம்"


"ஸாரி வினயா..காமிரா பிடிக்கக் கூட சக்தி இல்ல…"


"ஒ காட்…!சரி..உங்க வேலையை ராஜேஷ் செய்வாரு.. ஆனா இங்க இருக்காதீங்க… நீங்க
கார்ல போயி ரெஸ்ட் எடுங்க"


"இ ல்ல வினயா… இங்கயே இருக்கேன் நானே ரயிலோ பஸ்ஸோபிடிச்சி சென்னை
வ ந்துடறேன், என்ன?"


"ஹேய் என்ன பைத்தியமா உங்களுக்கு?"


"வினயா..அவரை கம்பெல் பண்ணாதீங்க லெட்ஸ்கோ நவ்" என்றான் ராஜேஷ் .
நிழல்படக்கருவியை அவன் கையிலிருந்து வாங்கிக்கொண்டு.


காரில் குழுபுறப்பட்டதும் பத்ரி சுற்றுமுற்றும் பார்த்தான், எதிரே கடல்மணல்
பரவி இருந்த ஈரநிலப்பகுதியில் பல உடல்கள் கிடங்கில் குவிக்கப்பட்ட
தானியமூட்டைகளாய் ஒன்றின் மேலொன்றாய் கையும் காலும்
விறைத்தும்,தொங்கிக்கொண்டும் வெட்டுபட்ட பல்வேறூ பகுதிகளோடும் குவிக்கப்பட்டு
இருந்தன.


குவியல் ஒன்றின் அருகே எட்டுவயது சிறுவன் ஒருவன் அழுதபடி
நின்றுகொண்டிருந்தான்.அவன் கண்பார்வை கடலைநோக்கியும் கரையை நோக்கியும்
சென்றுவந்தன.


பத்ரி அ வனருகில் சென்று," தம்பீ,யாரைத் தேடறே?' என்றுகேட்டான் ஆதரவான
குரலில்.


அவன் விசும்பியபடி," எங்கப்பா அம்மா தம்பி தங்கச்சி எல்லரையும். தங்கச்சிக்கு
பத்துமாசம்தான் ,,என் மடிலதான் சாப்டும் தூங்கும்… " என்றான் உடைந்தகுரலில்.


மெல்லப் பேச்சு கொடுத்ததில் மீனவக்குடும்பத்தைச் சேர்ந்த அவன் பெயர் கலியன்
என்பதும்,படிக்கவசதி இல்லாதநிலையில் சிறிய டீக்கடைஒன்றில் டீ க்ளாசுகளைக் கழுவி
வைக்கும் வேலைபார்க்கிறான் என்றும் தெரியவந்தது.


"கலியா..சுனாமிவந்தது உனக்கு தெரியாதா?"


பத்ரிகேட்டதும்"இல்லீங்க நான் கடைக்குபோயிருந்தேன்.வீட்ல என்னைத் தவிர
எல்லாரும் இருந்தாங்க..தங்கச்சிக்கு வர்ரப்போ பிஸ்கட்டுவாங்கியாரேன்னு
சொல்லிட்டி போனேன்…இப்போவந்துபாத்தா வீடுவாசலு அ ப்பா அம்மா தம்பீ தங்கச்சீ
யாருமே இல்ல…"என்று அழ ஆரம்பித்தான்.


அவனைக்கூட்டிக்கொண்டு பிணக் குவியல்கள் அருகே போனான் பத்ரி.
ஒரு குழியில்கிடந்த சடலம்பார்த்து 'அம்மா' என்றான்.மரக்கிளையில் அப்பாவின்
தொங்கியகையில் பச்சைகுத்தியதில் 'காத்தான்' என்ற பெயர் பார்த்து 'அப்பா' என்று
வீறிட்டான்.தம்பி புதைகுழிமணலில் வாயும்மூக்கும்கண்ணும் மண் அடைக்க
மரணமடைந்திருந்தான் காத்தான்.


"ராணி… என் தங்கச்சிராணீ?"


கதறி அழுதவனை கைபிடித்து அங்கும் இங்கும் சுற்றினான் பத்ரி.
எங்கும் குழந்தையின் சடலம் இல்லை...


கலியனுக்கு அவன் மறுக்கமறுக்க டிபனும் டீயும்வாங்கித்தந்து இரவெல்லாம் கூடவே
இருந்தான்.


மறுநாள் காலை பதினொருமணிக்கு தொலைக்காட்சியில் லைவ் ஆக ஒளிபரப்புவதை பார்க்க
ஆரம்பித்தார்கள்.அப்போது ஒரு அறிவிப்பு வந்தது..


" இன்றைய இந்த நிமிடத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு உயிர் இழந்தோர் 1100என
சொல்லப்டுகிறது. பிணங்களை எடுக்கவோ முறைப்படி புதைக்கவோ இங்கே நேரமுமில்லை
ஆட்களும் இல்லை ஆகவே யார் எவர் எனத் தெரியாத நிலையில் சவங்களை பெரிய பள்ளம்
தோண்டி அடக்கம் செய்கிறார்கள்" என்று சொல்லி பள்ளத்தையும் உள்ளேகிடந்த
சடலங்களையும் குவியலாய் காட்டினார்கள்.


மண்போட்டு மூடும்போது உற்றுப்பார்த்த கலியன்,"ராணீ! என் தங்கச்சி ராணிதான்..
அந்த சிவப்புகவுனுபோட்ட குழந்தை என் தங்கச்சீயேதான்..அய்யோ அதுவும்
செத்திடிச்சா?"என்று புரண்டு அழுதபோது பத்ரிக்கு கண்ணீரை அடக்க முடியவில்லை.


கலியனை முறைப்படி சுனாமி பேரிழப்புமீட்புநடவடிக்கை எடுப்பவர்களின் சம்மதமும்
அனுமதியும் பெற்று சென்னைக்கு அழைத்துவந்தான்.


பத்ரியின் அம்மாவும் கலியனை மகிழ்ச்சியாய் ஏற்று அவனை வளர்த்து, படிக்கவைக்கும்
மகனின் பொறுப்பில் தோள்கொடுக்கத் தயாரானாள்.


கலியன் முதல் சிலமாதங்கள் குடும்பநினைவில் வாடி வேதனையிலிருந்தான் .பிறகு
சகஜமாகிபோனான்.


திடீரென இரண்டுவருஷதிற்குமேலாகி இப்போது அவன் விரும்பியதால் அவனையும்
அழைதுக்கொண்டு நாகப்பட்டிணம் வந்திருக்கிறான்பத்ரி.


ஊர்வந்ததில் மறுபடியும் பழையநினைவுகளில் மனம்தடுமாற வேண்டி இருக்குமே என
நினைத்தான்.


ஆனால் கலியன் முகத்தில் எந்தவித உணர்ச்சியுமே இல்லை.


"பழகின நண்பர்களைப் பாக்கணூமா கலியா?'


"இல்லைங்க"


"வேலைபார்த்த டீக்கடைக்குப்போகணுமா?'


"வேணாங்க ஐயா"


"வேறெங்கப்பா போகணும்? "


"கடல்பக்கம்தான்..கடலைப்பாக்கணும்"


பத்ரி ஒன்றும் சொல்லவில்லை அவனுடைய கைபிடித்துகடற்கரை நோக்கி நடந்தான்.


சீராய் ஒரே கதியில் அடித்துக்கொண்டிருந்த அலைகளையே வெறித்துப்பார்த்தான்
கலியன்.


பத்ரிக்கு அவனது இறுகியமுகத்தைப்பார்க்கவே அச்சமாக இருந்தது.


எங்காவது திடீரென "என்னோட குடும்பம்போன இடத்துக்கே நானும்போறேன்"என்று கடலை
நோக்கி ஓடிவிடுவானோ?


இலேசான திகிலும், கவலையுமாய் அவனையேபார்த்தான்.


கலியன் மெல்லமெல்ல கடலை நோக்கிநடந்தான்.ஆனால் பத்ரியின் கரத்தை
விடாமல்பிடித்துக் கொண்டிருந்தான்.நடந்துவந்தவன் சட்டென நின்றான்.


பத்ரி திகைக்கும்போதேகுனிந்து கடலில் எரிச்சலாய் காறித்துப்பினான். காலால்
அலைகளை அடித்தான்."ச்சீ…எல்லாரையும் காவு வாங்கின நீ நல்லா இருப்பியா?உன்
உடம்பெல்லாம் உப்பு கரிச்சி இப்பிடி இருக்கறபோதே உனக்கு
எத்தினி ஆணவம்? நீ சமுத்திரமா இல்லாட்டி சாவுக்கிடங்கா?" என்றான் கோபமாய்.


"பிறகு பத்ரியிடம்"வாங்க போகலாம்" என்று சொல்லி கடலுக்கு முதுகைக்
காட்டியபடிதிரும்பி நடக்க ஆரம்பித்தான்.


*************************************************************************தி­திண்ணை.காமில்
இன்று 23-5-08
வந்திருக்கும் என் கதை இது.
மேலும் படிக்க... "மீட்சி(சிறுகதை)"

Wednesday, May 21, 2008

தமிழுக்கும் அமுதென்று பேர்!

தமிழின் மேன்மையை அதன் தனிப்பெருமையை( uniqueness ) எந்தவித பங்கமும் இல்லாமல் கையாள்வதில் நமக்கு நிகர் நாமேதான்!

தமிழ் இலக்கியங்களை,தமிழின் பழையபாடல்களை பண்டிகைகாலங்களில் சுபநேரங்களில் என்று மறக்காமல் நாம் உபயோகிப்பதால் தமிழ் நன்கு இன்னும் பல்லாண்டு வாழும்.

ஒருபுறம் தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சித்தொகுப்பாளர்களும் மேடையில் பேசுவதாய் தமிழ்க்கொலை செய்பவர்களும் இருந்தாலும் தமிழ் இன்னமும் நம்மிடையே மதிப்பாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ்மொழியின் தொன்மையைப்பற்றி விளங்கும் பாடலை அண்மையில் ஒரு தமிழ்ப்பாவலர் மூலமாய் தெரியவந்தது


வையம் ஈன்ற தொன்மக்கள் உளத்தினில்
கையினால் உரை காலம் இறந்திட
பைய நாவை அசைத்த பழந்தமிழ்....

சைகைமொழியிலிருந்து வாய்மொழிக்கு மனிதன் மாறியதும் பயன்படுத்திய முதல்மொழி தமிழ்தானாம்!

அகத்தியர் வளர்த்த தமிழுக்கு ராமர்பெருமானே வணங்கியதாய் கம்ப்ராமாயணத்தில் ஒரு பாடல் உண்டு.

அகத்தியரை ராமன் வணங்கியதும் அவர் இப்படிக்கூறுவதாய் அமைந்தபாடல் இது.


நின்றவனை வந்த நெடியோன் அடிபணிந்தான்
அன்றவனும் அன்போடு தழீஇ அழுத கண்ணான்
நன்றுவர வென்று பல நல்லுரை பகர்ந்தான்
என்றுமுள தென்தமிழ் இயம்பிசை கொண்டான்.


கண்ணனின் சிறுவயது சேட்டைகளை பெரியாழ்வார் கூறும்போது,

எண்ணைக்குடத்தை உருட்டி
இளம்பிள்ளை கிள்ளி எழும்பிக்
கண்ணைப் புரட்டி விழித்து
கழகண்டு செய்யும்பிரானே!


விஷமம் என்னும் சொல்லைத்தவிர்த்து மிகவும் கவனமாய் கழகண்டு எனும் அழகான(வழக்கொழிந்துபோன) சொல்லை
பெரியாழ்வார் பிரயோகித்திருக்கிறார்.

அமிழ்தினும் இனிய தமிழ் வாழ்க!
மேலும் படிக்க... "தமிழுக்கும் அமுதென்று பேர்!"

Tuesday, May 20, 2008

போ என்று சொல்லி...

வேண்டாம் என்றேன்
வேண்டும் எனப்புரிந்துகொண்டாய்
பிறகு என்றேன்
இப்பொழுதே என அருகில்வந்தாய்
போ என்றபோது மட்டும்
அதற்கு வா என்று பொருளை
அறியாமல் நீ
போய்விட்டாயே?
மேலும் படிக்க... "போ என்று சொல்லி..."

Sunday, May 18, 2008

இந்த தமிழ் படுத்தும் பாடு...!!

தமிழ் அழகுமொழி.அதே சமயம் சரியாகப் பயன்படுத்தப் படாவிட்டால் அர்த்தத்தையே மாற்றிவிடும்!

பாண்டியன் "கொண்டு அச்சிலம்பு கொணர்க" என்று சொன்னானா" கொன்று அச்சிலம்பு கொணர்க" என்று சொன்னானா என்பது சரியாகப் புரியாததனால் என்னவெல்லாம் விபரீதம் நிகழ்ந்தது?

இலக்கியத்தைவிடுங்கள்..

பள்ளியிலொரு மாணவன் 'கண்ணகி மாசற்றவள்'என எழுதுவதற்குபதிலாய்,'கண்ணகி மாசுற்றவ்ள்'என 'ச' விற்கு சின்னதடுப்பு சுவர் வைத்துவிட்டதில் அர்த்தம் அனர்த்தமாகிப் போய்விட்டது.

அவனாவது மாணவன் அறியாப்பிள்ளை. ஒருபிரபல தமிழ்பேச்சாளர் என்ன செய்தார் தெரியுமா?

ஒரு சமூக சேவகியைப் பாராட்டுகையில்'இவர் ஒரு சிறந்த பொதுமகள்'என்று சொல்லிவிட அந்தப்பெண்மணிக்கு சங்கடமாகிவிட்டது.


நீதி நெறிவிளக்கத்தில் ஒரு பாட்டு" பொன்மலர் நாற்றமுடைத்து' என்று முடிகிறது
பொன்மலர் நாறுமா?இப்படி தமிழ் அறிந்தவர்கள் கேட்கமாட்டர்கள் ,காரணம் நாற்றமெனில் வாசனைஎனப்பொருள இருப்பது அவர்களுக்குத் தெரியும் !வாசனைக்குநேர்பொருள் எதிர்பொருள் எல்லாமே அதுதான் தமிழில்!

உண்ணல் ,தின்னல் ...இவைகளுக்குள் என்ன வேறுபாடு பார்க்கலாமா?

பசியடங்க வயிற்றை நிரப்புதலுக்கு உண்ணல் என்றும் சிறிய அளவு உட்கொள்ளுதலை தின்னல் என்றும் சொல்லவேண்டுமாம்.

அதாவது சோறு உண்டான், விருந்து உண்டான்... முறுக்குதின்றான்அல்லது மைசூர்பாக் தின்றான்.புரிகிறதா இப்போது? என்ன பசி எடுத்துவிட்டதா?:)

உண்ணவா தின்னவா என்ன செய்யபோகிறீர்கள்?:)


சரி... ஈந்தான், யாசித்தான், தந்தான்.

இதற்கும் வேறுவேறு பொருளாம்!

ஈந்தான் ---யாசித்தவனுக்குத் தந்தான்.

தந்தான்--சமநிலையில் அளிப்பவனுக்கு அளித்தான்.

கொடுத்தான்.--தாழ்நிலையில் உள்ளவனுக்கு உயர்நிலையில் உள்ளவன் அளிப்பது


இந்த 'க்' 'ச் ' போன்ற சந்தி எழுத்துக்கள் தமிழில்பண்ணுகிற அட்டகாசம் சொல்லிமாளாது போங்கள்!

அலைகடல் ,அலைக்கடல் !

இரண்டும் ஒன்று என நாம் நினைப்போம்.

ஆனால் அலைகடல் என்றால் அலைகின்ற கடலாம் .

அலைக்கடல் என்றால் அலையை உடைய கடலாம்!

ஒரு க் வந்து நம்மை திக்குமுக்காட வைக்கிறது பாருங்க!

வார்த்தைப் பஞ்சமே இலலாத மொழி தமிழ்.

அரி என்ற சொல்லுக்கு மட்டும் 109 பொருளாம்!

சரி, பூவின் பருவங்கள் நமக்குத்தெரியும் .

அரும்பு என்போம் ;பின்னர் மலர் என்றுகூறிவிடுவோம்.

ஆனால் இடையில் எவ்வளவு விட்டுப்போயிருக்கிறது தெரியுமா?

அரும்பு--மொட்டு

போது---மலரும் நிலையிலுள்ளது(உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது..என்கின்றார் அபிராமி அந்தாதியில் அன்னையை...)

மல்ர்=விரிந்தபூ

அலர் நன்றாகமலர்ந்தது-(அலர்மேல் மங்கை -திருமகள்.)

வீ- நன்றாகமலர்ந்து விழுந்தது...

'வீல் 'எனக்கத்தலாம் போல இருக்கிறதா?:)

பாத்துக் கத்துங்க.. இன்ன சந்தர்ப்பத்தில் இப்படித்தான் கத்த வேண்டுமென வரையறையும் தமிழில் இருக்கிறது!!!
மேலும் படிக்க... "இந்த தமிழ் படுத்தும் பாடு...!!"

Tuesday, May 13, 2008

கோடைக்காலம்!

பெய்யும் மழைக்குக்
கோடையில்ஓய்வுக்காலம் -ஆயினும்
தெய்வங்கள் தெருவெங்கும் பவனிவரும்
திருவிழாக்காலம் கோடை!

முதுவேனில் கோடை என்று
முன்னோர்கள் சொன்னார்கள்-இன்றோ
இளவேனில் அனல்தகிக்கும்
இயற்கையின் கோபக்காலம்!

தாகம் தணிக்கவென்று
தர்பூசனிப்பழங்களோடு
வேகமாய் விற்பனையாகும்
விதவிதமான குளிர்பானங்கள்
வாடையால் வாடி
வரவுக்கு யாருமின்றி
வருந்திக் காத்திருந்த
கோடைமலைதலங்களெல்லாம்
கொண்டாடும் பொற்காலம்!

வாழையடிவாழையென
வசதிகள்கொண்டவர்க்கு
கோடையைவிரட்டிவீட்டில்-குளிர்
வாடையை வாங்க இயலும்,
ஆனால்..

ஏழைக்கு என்றைக்கும்
கோடைக்கு மோர்மட்டும்!
மேலும் படிக்க... "கோடைக்காலம்!"

Monday, May 12, 2008

வித்தியா(வ)சமான தமிழன் விழியன்!-3-

நிறைவுப்பகுதி!
*******************


கல்யாணமேடையில் அரைக்கை கதர் சட்டை அணிந்துகொண்டு சின்னகாமராஜரைப்போல
அமர்ந்திருந்தார் மாப்பிள்ளை சிங்கம்! ஆடம்பர வாசனையே இல்லாத எளிமை அங்கு கண்ணைக்கவர்ந்தது.


நாங்கள் மாடியில் அமர்ந்து கை அசைத்தோம்..


ஒலிபெருக்கியில்இருவரது குடும்பங்களும் அறிமுகம் செய்யப்பட்டது.

விழியனைப்பற்றி சிறப்பாகவும் பெருமையாகவும் சிலவார்த்தைகள் .
சொன்னார்கள்.


இருவரது குடும்பங்களையும் நன்கு அறிந்த சில தமிழ்பெருமக்கள் வாழ்த்தினர்.


பிறகு மணமகனும் மணமகளும் இல்லற வாழ்விற்கான உறுதி மொழியை ஒருவர்
ஒலிபெருக்கியில் சொல்லச் சொல்ல திரும்பி அதை சொன்னார்கள். செந்தமிழில் அந்த
மொழி கேட்கவே ஆனந்தமாய் இருந்தது.

அக்னி இல்லை அட்சதைகள் இல்லை ஆனாலும் அன்புமனங்கள் அங்கு அனைவரின் கைதட்டலில்
இணைந்தது. விழியன் வித்யாவின் கழுத்தில் தாலி கட்டினார்.

உப்பரிகை மக்கள் உற்சாகமாய் விசிலடித்தனர்!


ரமணன் அவர்கள் சிறப்புமணவாழ்த்துப்பாடலைப்பாடினார்.கூட்டம் அந்தநேரம் பார்த்து
மண்மக்களைவாழ்த்த பெருத்த சத்தமிட்டு மேடைக்கு
நகரவும் சிலர் ஒலிபெருக்கியில் அன்பாய் கடிந்துகொண்டார்கள்.


திருமண நிகழ்ச்சிகளை நமது குழுநண்பர்களும் வலைப்பதிவர்களும் புகைப்படம்
எடுத்துதள்ளிக்கொண்டிருந்தனர். அப்படியே எங்களையும்!


நாமெல்லாம் சேர்ந்து ஏதும் கவிதை எழுதி வாழ்த்தலாம் என்றேன் நான்.ரசிகவ் நிலா
இருவரும் பேனாவும் பேப்பருமாய் அமர்ந்தனர் .

..நானும் யோசிக்க ஆரம்பித்தேன்.


கவிதை எழுத சூழ்நிலை சரியாக இல்லை என்பதால் யாருக்குமே கவிதை சட்டென
வரவில்லை.கடைசியில் உரைநடைபாணியில் ஒருகவிதை எழுதி முதலில் ஜேகேயிடம்
காட்டினேன் அவர் முகம் போன போக்கே சரியாய் இல்லை:)
நிலா 'பரவால்லக்கா' என்றார் சோகமாய்.
ரசிகவ்,'இந்த நேரத்துக்கு பொருத்த்மாத்தான் இருக்கு போய் வாசிங்க மைக்குல"
என்றார்.


விபாகையும் சரியென்றதும் மாலாமஞ்சூர்ராசா வேறு,'போங்க ஷைலஜா' என்று அன்பாய்
சொல்லவும் நான் துணிந்து களம் இறங்கினேன்.
மணமக்களை வாழ்த்தி கவிதை வாசிக்கும்போது நம் மக்களை கைதட்டி விசிலடிக்க
முன்கூட்டியே ஏற்பாடு செய்துதான் போனதால் அப்படியே அவர்கள் செய்தார்கள்!


நான் கவிதைவாசித்ததும் மண்டபக்கூட்டம் மெல்லக்குறைந்தது.


அப்புறம் நாங்கள் எல்லாருமாய் கூடிக்குளிர்ந்து விழியனை நெருங்கி
கல்யாணப்பரிசினை அளித்து வாழ்த்தினோம்.

சுற்றி நின்று புகைப்படம் ஒளிப்படம் எடுத்துக்கொண்ட்டோ ம்.
மண்டபவாசலில் ஒரு வெள்ளைப்படுதா கட்டி இருந்தார்கள் அதில்
திருமணத்திற்குவந்தவர்கள் தங்கள் கருத்துக்களையும் வாழ்த்துகக்ளையும்
எழுதினோம்.

பிறகு
வாசலில்வந்து ஒரு பஸ்ஸில் 16பேரும் ஏறினோம். ஜல்கண்டேஸ்வரர் கோயில் சென்றோம்.

கோயிலில் தரிசனம் முடிந்ததும் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோயில்மண்டபத்தில்
அரைமணிக்குமேல் இளைபபறும்போது பாட்டு பேச்சு என்று நேரம் போனது.
மதியம் ஆகிவிடவே பெங்களூர்மக்கள் விடைபெற்றுக்கொள்ள மற்றவர்கள் அகழி நீரினில்
பரிசல் சவாரிக்கு சென்றார்கள்.


மொத்தத்தில் மறக்கஇயலாத அந்த நன்னாள் வித்யா-விழியனுக்கு மட்டுமல்ல
எங்களுக்கும்தான்!
***************************************************************************
மேலும் படிக்க... "வித்தியா(வ)சமான தமிழன் விழியன்!-3-"

வித்தியா(வ)சமான தமிழன் விழியன்! -2-

10ஆம்தேதி சனிகிழமை காலையிலே திருமண நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன.


நமதுகலாச்சாரம் என்னும் தலைப்பில் எழுத்தாளர்தமிழ்ச்செல்வன் மற்றும்பலர்
அருமையாய் பேசினதாக சொன்னார்கள்.


தொடர்ந்து மாலை குழந்தைகள் நடனமும் நடைபெற்றிருக்கிறது அவைகளை நாங்கள்
பார்க்கமுடியவில்லை. அடுத்து வரும் நிகழ்ச்சிகளையாவது கண்டுகளிக்க நினைத்து
பயணக்களைப்பைத் துறந்து அனைவரும் கிளம்பினோம்.
மண்டபம்வாசலில்கார் நிற்கும்போது ,"வாங்க வாங்க" என்று வரவேற்றார் விழியனின்
தந்தைசெந்தமிழ்செல்வன் அவர்கள்.பெயரிலும் பேச்சிலும் பெருமைமிகு நமது
கலாசாரத்திலும் அவரிடம் தமிழ் மேலொங்கி இருந்தது.
விழியனின் அன்புத்தங்கைதிவ்யா மலர்தூவி இனிப்புதந்து வரவேற்றதை ரசித்தபடி உள்ளே
நுழைந்தோம்.


வீடியோ பளிச்பளிச் என்று எதிர்கொண்டன. மண்டபத்தில் வந்தவர்கள் ஆயிரத்திற்கும்
மேல்! யெப்பா என்ன கூட்டம் என்ன கூட்டம்!


உளுந்துபோட்டால் உளுந்து விழாது! அவ்ளோ கூட்டம்!

உளுந்துபோட்டால் உளுந்து விழாது! அவ்ளோ கூட்டம்!
(எள் போட்டா எள் விழாத கூட்டம்னு சொல்லகூடாது. கம்பரே மிதிலையில் சீதையின்
திருமணதிற்குவந்த கூட்டம்கண்டு உளுந்தைத்தான் உதாரணம் சொல்வார்.


*உழுந்திட இடமில்லை உலகம் எங்கணும்
அழுந்திய உயிர்க்கெலாம் அருட்கொம்பாயினான்
எழுந்திலன் எழுந்திடைபடரும் சேனையின்
கொழுந்துபோய் கொடிமதில் மிதிலை கூடிற்றே!*

* *


அதே கம்பர் ராவணன் இறந்தபோது எள்ளை உதாரணம் சொல்வார்.
ராவணனின் மனைவி போர்க்களத்தில் இறந்து கிடக்கும் கணவனின் உடலைத்தடவி
கதறி,"*எள்ளிருக்கும்
இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ*?
' என்பதாக எழுதி இருப்பார்.


. (கடுகு அதைவிட சிறிது அதை சொல்லக்கூடாதா என்றால் அது வெடிக்கும்.
சுபநிகழ்ச்சிகளுக்கு அவற்றை உதாரணங்கள் சொல்வது சரி இல்லை என்கிறார்கள்
சான்றோர்கள்)


சரி விஷயத்துக்குவருவோம்..


கூட்டத்துல தயங்கிதயங்கி மேடை ஏறினால்; அங்கே தமிழ்க்காவலர்கள் பலர்
வீற்றிருக்க இசைக்கவிரமணன் அருகில் இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தேன்
.'வணக்கம் 'சொல்லிவிட்டு ரமணனை ஏறிட்டால் அவர் தெய்வீகப்புன்னகையை
சிந்திவிட்டு ஒலிபெருக்கிஅருகே சென்றார்.


என்னையும் அழைத்து அவரருகே நிற்க சொன்னார்கள்


விழியனின் புகைப்படங்கள் போஸ்டர்களாய் கீழே சிறந்த வாசகங்கள்
எழுதப்பட்டு,அவைகள் விளக்கங்களுடன் திரு ரமணனினால் பேசப்பட்டு ,அவைகள் என்
கரத்தில் அளிக்கபட்டு, பிறகு மணமக்கள்
கரங்களில் ஒப்படைக்கப்பட்டது. (திருமணம் அல்லவா ஆகவே *பட்டு* அதிகம்
வந்துவிட்டது ஏதோ மனதில்பட்டதை சொல்லி இருக்கிறேன் என்ன?:))
நல்லவேளை என்னை மேடையில்எதுவும் பேசவற்புறுத்தவில்லை..எல்லார்க்கும்
தெரிந்திருக்கிறது மேடையில் நான்பேசினால் கூட்டம் சிதறி
விடும் என்று!


இசைக்கவிரமணன் கவிதை எழுதிகிறார்! மேடையில்பேசுகிறார் !பாடுகிறார்.!சந்தனமும்
மல்லிகையும் மணக்கும் என்பதுபோலத்தான் ரமணனின் இந்த சாதனைகளை நாம் பேசுவது.
ஆம் அவர்பேசினால் நம் சிரம் அசைகிறது பாடினால் மனம் துள்ளுகிறது! இது இறைவன்
இசைகவிக்கு தந்துள்ள பெரும் வரம்!


கூட்டத்தின் மகிழ்ச்சிகலந்த ஆரவாரங்களுக்கிடையே நிகழ்ச்சி நடக்க ஆரம்பித்தது.
மேடையினின்று நான் கிழே வந்ததும் மலர்ந்தமுகம் ஒன்று என்னை எதிர்கொண்டது !
ஆ!மாலா மஞ்சூர்ராசாவாம்! அறிமுகப்படுத்திக்கொண்டதுமே பலநாள்பழகியது போலஅரட்டை
ஆரம்பமானது! இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் நிலாரசிகன் வந்துவிட்டார்.
மேடையில் நான் அதிசயமாய் பவ்யமாய் நின்றதை கிண்டலடித்த
நிலா அருகில் நின்ற
நம்பிக்கைபாண்டியன் ஜேகே ப்ரேம்குமார் ஆகியோரை அறிமுகப்படுத்தினார் .
பண்புடனில் கும்மி அடிக்கும் ப்ரேம் ரொம்பப்ப்பணிவாய் தனுஷ் உடம்பில்
சிக்கனசிரிப்பில் தெரிந்தார்.


ஜேகேக்கு எப்போதும் புன்னகையான முகம். என்ன இன்னும் கொஞ்சம் நல்ல சாப்ட்டு
உடம்பை தேத்திக்கணும்!


சிஃபிஆசிரியர் அண்ணா கண்ணன்(பார்க்க தம்பிகண்ணனாட்டம்தான் இருப்பார்):


சித்தார்த் வெங்கடேஷ்! அசப்பில் நடிகர்ப்ரபுஜூனியர்!


எல்லாரும் சாப்பிட அம்ர்ந்தோம்.. விருந்தோம்பலிலும் தான் தமிழன் என்பதை விழியன்
குடும்பம் நிரூபித்தது. சுவையான சாப்பாடு.அருகில்வந்து கவனித்துகவனித்துகேட்ட விழியனின் உடன்பிறப்பு. தம்பி உடையான் மட்டுமா தங்கை உடையானும் எதற்கும்
அஞ்சவேண்டாம்!
சாப்பிட்டதும் எல்லாரும் அரட்டை அடிக்க வேகமாய் ஹோட்டலுக்குப்பறந்தோம்.


ரமணனின் அறையில் அடைந்தோம். அப்போதுதான் அங்கு வந்த லக்ஸ், சிவிஆர்,ஆதி,பிவி
என சில வலைப்பதிவாளர்களை அறிமுகப்படுத்தினார்.


எல்லாரும் துறுதுறுப்பான இளைஞர்கள்!


நிலாரசிகன் தொலைக்காட்சியில் கிரிக்கட் ஆட்டம்பார்த்தபடியே எங்கள்பேச்சிலும்
கலந்துகொண்டார். ரமணன் அவர்களின் 'ஒருநாள் உன்கூந்தலிலே மலராக வேண்டும்
என்றபாடலும் இன்னொன்று என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே' என்ற பாடலும்
எல்லாரையுமே கட்டிப்போட்டது, மேலும் கண்ணதாசனின் பலபாடல்களை
அனுபவித்துப்பாடினார்.


பிறகு நாங்களும் எல்லாரும் ஏதோ கத்தினோம்.


திருமதிமாலா மஞ்சூர்ராசாவின் சமூகப்பணி யும் நாடக அனுபமும் இதில்
சிறப்புச்செய்திகள்.
.. ப்ரேம் அமைதியே வடிவாய் அமர்ந்திருந்தார். ஜேகே பாடாமல் எஸ்கேப்
அடிக்கபார்த்தார் விடவில்லை நாங்கள்:


12மணிக்கு தூங்கலாம் என கலைக்கபட்ட சபை மறுபடி நிலாவின் அறையில் இரண்டுமணிவரை தொடர்ந்துவிட்டது.


விபாகை குழுக்களில் ஆக்கபூர்வமான மடல்கள் வரவேண்டும் என்று கூறினார்.


நிலாரசிகன்தனது புது கவிதைதொகுப்பை அளித்தார். அவரது அலுவலகத்தில்பணிபுரியும்
விழியனின் ரசிகை ப்ரியா எனும் பெண்ணும் எங்களோடு தங்கி பேச்சில்கலந்துகொண்டாள்


.சித்தார்த்தின் குறுந்தொகை பதிவுபற்றியும் கொஞ்சமாய் கம்பனின் பாடல்களை
அலசினோம்.


தூக்கம் கண்களைதழுவிமிரட்டியது...
பெண்கள் நாங்கள் மூவரும் எங்கள் அறைக்குள் வந்து படுத்தோம்.


காலை எழுந்ததும் ரமணனிடம் காபி ராகம்பாடினேன்.
வரவழைத்துத்தந்தார்.


காலைஏழுமணிக்கு எல்லாரும் மண்டபம்விரைந்தோம்."முதல்ல சாப்பிடுங்க" விழியனின்
தங்கையின் அன்புக்கட்டளை.


நேராய் சாப்பாட்டுக் கூடம்தான். இட்லிவடை பொங்கல் சாம்பார்சட்னி ஏதோ
இனிப்பு(மைபா இல்லாமல் கல்யாணம்?:))


வயிறார உண்டு மண்டபம் வந்து உப்பரிகைக்குபோய்விட்டோ ம்!கீழே கூட்டம் என்பதாலும்

மேலே நாம் மட்டும் சென்றுதனியாக கூட்டம்போட்டுப் பேசலாம் என்றும்
இப்படிசெய்தோம்! சிவிஆர் லக்ஸ்(லட்சுமண ராஜா) மற்றும் அவரது நண்பர்களுக்கு
காமிராவே காதலிகள்! க்ளீக்கிக் கொண்டே இருந்தார்கள்!


அய்யனாரை அங்கே கண்டோ ம்.இன்னமும் புதுமாப்பிள்ளைகளை கலையாமல் சிரித்தமுகமாய்
தெரிந்தார்.


ரசிகவ் தூரத்தில் தனியாய் அமர்ந்திருக்க அலைபேசியில் அவரை வரவழைத்து அருகில்
உட்காரவைத்தோம்.லாவண்யா பஸ்ஸில் புறப்பட்டு
சென்னையிலிருந்துவந்த்குகொண்டிருப்பதாய் தகவல் வந்தது.


மேடையில் மண நிகழ்ச்சி ஆரம்பமானது. எந்தவித ஆடம்பரமுமின்றி எளிமையாக
தொடங்கியது.
மணமகன் கதராடையில் மணமகள் நூல்சேலையில் அமர்ந்திருக்க அவர்களுக்கு வலப்புறம்
திருமணத்திற்கு வாழ்த்துரை வழங்கவந்தவர்களை அமரவைத்து இடப்புறம்
இருவரின்பெற்றோகள் நெருங்கிய உறவினர்களை அமரவைத்திருந்தார்கள்.


வித்தியாசமான இந்த திருமணத்தில் தமிழ்மட்டுமே முழங்கியது மிகவும்
பெருமைக்குரியது!


விழிகள் மலர நாங்கள் மேடையைப்பார்த்திருந்தோம்.


தொடரும்
மேலும் படிக்க... "வித்தியா(வ)சமான தமிழன் விழியன்! -2-"

வித்தியா(வ)சமான தமிழன் விழியன்! -1-

மறுநாள் விழியனுக்குக் கல்யாணம் என்றால் முதல்நாள் காலை வரை நானும் விபாகையும் திருமாலும் எப்படிப்பயணம் செய்யபோகிறோம்!என்பது ராஜேஷ்குமாரின்நாவலாக (சஸ்பென்ஸ்)ஆக இருந்தது.!

கார்? பஸ் ? ரயில் ?-என்று சீட்டுக்குலுக்கிப் போட்டு இறுதியில்வென்றது புகைவண்டி.

ப்ருந்தாவனத்துக்கண்ணனைப்பார்க்கக்கூட அப்படி விரைந்திருக்கமாட்டோ ம் அன்றைய மதிய ப்ருந்தாவன் எக்ஸ்ப்ரஸுக்கு நாங்கள் அன்றுபி.டி. உஷாக்களாய் ஒட்டிச்சென்று இடம்பிடித்தோம்!

திருமால் முதலில் சென்று துண்டு போட்டு இரண்டு இடங்கள்போட்டு விட்டார்.

முதலாழ்வார்கள் மூன்றுபேர் கதை சுருக்கமாய் இங்க சொல்லக்காரணம் இருக்கு.. அது என்னன்னா..

ஒரு மரபொந்திற்குள் ஒருவர் படுக்கலாம் இருவர் அமரலாம் மூவர் நிற்கலாம் போலிருந்த அந்த சின்ன இடத்தில் மூன்று ஆழ்வார்களும் இறைவனை தியானம் செய்து கொண்டிருக்கையில் முடிவில் இறைவனே வந்து இடங்கேட்டு அருள் செய்ததாகக் கதை உண்டு.

அதுபோல கிடைத்த இரண்டு இருக்கைகளில் மாறிமாறி நாங்கள் இருவர் அமர்ந்து ஒருவர் நின்றுகொண்டு வித்தியாசமான திருமணத்தின் முதல் கட்டமாய் எங்களது வித்தியாசப் பயணம் ஆரம்பமானது. கொஞ்சம் உருளைக்கிழங்கு பொறியலும் 4இட்லியும் அவசரத்துக்கு யார்பசிக்காவது ஆகட்டும் என கொண்டுவந்ததை சாப்பிடாமல் வந்த விபாகைக்கு ஓரளவு பசியாற்ற உதவியது. எங்க மைபா என்று மறக்காமல் கேட்டார் விபாகை! குளிர்பானங்கள் கொறிக்க சில என வாங்கியபடி பயணம் தொடங்கியது.
அதென்னவோ ரிசர்வ் செய்யப்பட வசதியான தனிமைபயணத்தைவிட இப்படி
நண்பர்களுடன் அதுவும் குழு நண்பர்களுடன் பேசிக்கொண்டு கூட்டத்தோடுகூட்டமாய் பலதரப்பட மனிதர்களின் பலவகைப்பட்ட ரசனைகளோடு இரைச்சல்களுக்கு இடையே செய்யும் பிரயாணங்கள் அலுப்பதில்லைதான்.

குழுவில் அதிகம் தலைகாட்டாமல் பணியில் மும்முமுரமாயிருக்கும் நண்பர் ராஜலிங்கம் எனும் விபாகை பயணத்தில் நிறைய பேசிக்கொண்டே வந்தார். நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கிறது இவருக்கு. திருமால் கல்லூரிமாணவர்போல இருப்பார் ஆனால் அமைதியான அமூல்பேபி முகம். தேடிச்சென்று நல்ல புத்தகங்களை வாங்கிப்படிக்கும் புத்தக ரசிகர். வேதாந்தரகசியம் போன்ற பழைய புத்தகங்களிலிருந்து அசோகமித்திரன் அகிலன் என ஆரம்பித்து இன்றைய எழுத்தாளர்களின் புத்தகங்கள்வரை பேசி அலசுகிறார்.

முன்னமே விழியன் திருமண அழைப்பிதழ்கொண்டுகவந்தபோதே,"வேலூரில் வெய்யில் கொளுத்துமே அதுவும் அக்கினிநட்சத்திரசமயம்?" என்றபோது" நீங்க வாங்க அக்கா.. அன்னிக்கு கண்டிப்பா மழைவரும்" என்றார் அன்புத்தம்பி.

ஆகா அந்த வாக்கே திருவாக்கானதோ ?

மாலை ஆறேகாலூக்கு ரயில்நிலையம்போய் இறங்கிறோம் பாருங்க ஊரே குளிர்சாதனப்பெட்டில வச்சமாதிரி அப்படி ஒரு ஜிலுஜிலுப்பு!
விழியனின் ஆத்ம நண்பன் கேபி ரயிலடிக்கு வரவேற்க வந்துவிட்டார். அவரை 'நீங்க கேப்பிங்களா ?' என்றார் விபாகை .

"ஆமாம்" என்றார் அவரும்.
" நான் சொன்னா கேப்பீங்களா?" என்று சதாய்க்க ஆரம்பித்துவிட்டார் விபாகை.

அங்கேயே சிரிப்பலை ஆரம்பிக்க கேபி எற்பாடு செய்திருந்த வாகனத்தில் ஏறி முதலில் ஹோட்டலுக்கு சென்றோம்.

அங்கே சென்றதும்," இப்போ ரொம்ப முக்கிய நிகழ்ச்சி .ஷைலஜாக்கா நீங்ககல்யாணமண்டபத்துல மேடைக்கு வரணுமாம் .".என்றார் கேப்பி.

நம்ம அரட்டை பேச்செல்லாம் மேடைக்கு கீழதான்னு யாருக்கும் தெரியாதா? இதென்ன மதுரைக்கு வந்த சோதனை என நான்
திகைக்கையிலே கேப்பி"பத்திநிமிஷத்துல மண்டபம்போக ரெடி ஆகுங்க" என அன்பு அதட்டல் போட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்!

(தொடரும்)
மேலும் படிக்க... "வித்தியா(வ)சமான தமிழன் விழியன்! -1-"

Friday, May 09, 2008

காதல்காவிரிகள்!

இடியொடு மின்னல்
பின்னர்வரும் மழையின்
சின்னத்தூற்லிலும்
சிலிர்த்துப்போகிறேன்

விழிமணிகள் விரித்து
விந்தைமனவெளியினில்
பார்த்திட்டகோலங்களை
பத்திரமாய் காக்கின்றேன்


ஐந்துவிரல்களை
அழுத்திப்பிடித்த கரங்கள்
கண்டங்கள் அனைத்தையும்
கொண்டுசேர்த்தகடல்கள்
அந்ததொடுதலில் அன்று
மெல்லச்சரிந்ததில்
குன்றுமண்லாய்
என் தாபஏரிகள்

பல்கிபெருகி
வளைந்து நெளிந்து
பாய்ந்து ஓடி
இன்று
அடங்கிக்கிடக்கும்
காதல்காவிரிகள்!
மேலும் படிக்க... "காதல்காவிரிகள்!"

Wednesday, May 07, 2008

மாங்காய்கள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!

மாங்கா சீசன் ஆரம்பிச்சாச்சு..பீச்ல ரோட்ல எல்லாம் மாங்காயை சீப்பின் பற்களா நறுக்கி வச்சி உச்சில சிவப்பா மிள்காப்பொடி ஜொலிக்க வியாபாரம் செய்யறாங்க...பத்தை மாங்காய்! எங்கும் மாங்காய் பத்தையாவதாரம்!!

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலாம்!

மாம்பழம்கூட மெதுவா எட்டிப்பார்க்குது.

ஆனா இன்னும் நல்லதரமான மாம்பழம் மார்கெட்லவரல்...பச்சைபச்சையாவும் அசட்டு மஞ்சளாகவும் இருக்கு.பருவம் வந்தால்தான் மாம்பழம்கூட கனன்ம் உருண்டு சின்னதா சிவந்து இருக்குமோ?:)


மாங்கா சீசனல் முதல்ல வரது மாவடுதான்.அதாவது வடுமாங்காய். தயிர்சாதம்க்கு நல்ல காம்பினேஷன் வடுமாங்காய்!


அதென்ன வடுமாங்காய்? வடு சம்ஸ்க்ருத சொல்லோ?
ஆமா.வடுன்னா பிரம்மச்சாரியாம்.

ஆனா அழகு தமிழ்ல வடுன்னா மாம்பிஞ்சு....



மாங்காய் சீசன் வரப்போ எல்லா வகைமாங்காயிலும் ஒரு ஹார்லிக்ஸ்பாட்டில் அளவாவது எல்லா வகை ஊறுகாய்களும் போடறது எங்க காலனிப்பெண்களின் பொழுதுபோக்குஅல்லது வழக்கம்..ஒரு இடத்துல சேர்ந்து ஊறுகாய் போடும்போது எண்ணை உப்பு மிளகாய்ப்பொடி அள்ந்து போடறோமோ இல்லயோ ஊர் உலக வம்புகளை நல்லாவே அளப்போமே!



இந்த மாங்காய் சகலகலாவல்லி. ஒன்றாய் அரும்பிப்பலவாய் உதவும் சமையலறை சிநேகிதி!



எல்லாமாங்காயிலும் துண்டமாங்கா ஊறுகாய் என்று சட்டுனு இன்ஸ்டண்ட் ஊறுகாய் போட்டுடலாம்.

கட் செய்து உப்பு மிளகாப்பொடிபோட்டு கொஞ்சம் எண்ணைல கடுகு வெடுக்கவிட்டு சேர்த்துட்டா டூ மினிட்ஸ்ல நூடுல்ஸ் மட்டுமா ஊறுகாயும் ரெட்டரெடி!

கொஞ்சம் பச்சமிள்காய் உப்பு மிக்சில போட்டு கரகரன்னு அரைச்சி அதை துண்டம்போட்ட மாங்காய்ல பிசறி கடுகு தாளிங்க. பச்சைகலர்ல இந்த ஊறுகா கண் நாக்கு மனம் எல்லாத்தயும் கவ்ரும்

மாங்காய் தொக்கு! ஆஹா இதுக்கு சொக்காதவங்க மனுஷங்களா என்ன?:) இன்னும் பலவிதம் இருக்கு.
ஊறுகாய் மட்டுமா மாங்காய்ல என்னெனவோ செய்யலாம்

கிளிமூக்கு மாங்காய் (திருச்சில இதை கல்லாமணி மாங்கான்னு சொல்வாங்க பெங்களூர்ல கோத்தாப்புரி அல்லது பெங்களூரு மாவின்கா) அப்படியே துருவிவதக்கி எலுமிச்சை சாதம் போல மாங்காசாதம் அசத்தலா இருக்கும்.

மாங்கா பயற்றம்பருப்பு தேங்கா துருவிசேர்த்து கோசுமல்லி பண்லாம்

மாங்கா இனிப்புபச்சடி வருஷப்பிறப்புஅன்னிக்குமட்டுமா வெறும் நாளிலும் செய்யலாமே?

புளிப்பில்லாத மாங்காய்களை சின்னதுண்டம்செய்து முருங்கைகாய்கூட சாம்பார்ல போடுங்க..அப்போ புளி கொஞ்சம் கம்மியா இருக்கணும் குழம்புக்கு ஏன்னா மாங்கால புளிப்பு இருக்கில்லையா அதான்.

மாங்காய் பருப்புன்னு ஒண்ணு..ஜோரா இருக்கும் சப்பாத்தி இட்லிக்கு சைட் டிஷ்!


இபடி மாங்காய் தசாவதாரம் என்ன சாலீஸ் அவ்தார்கூட செய்ய்யும்.

இப்போ மாவடு பத்தி..

அதுக்குமுன்னாடி ஒரு மா(ங்கா)பழமொழி!!!

மாப்பிள்ளைல கிழவனும் மாங்காய்ல அழுகலும் உதவாது!

மதுரைல மாவடு கோலிகுண்டுசைஸ்ல இருக்கும் கடிச்சா வெடுக்குனு இருகற வடுதான் நல்லதரமானது ஊறுகாய்க்கு ஜோரானது. ...குண்டான வடுமாங்கா சீக்கிரம் அழுகிடுமாம். மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெருசு சின்னதுக்குதான்.

கிளிமூக்கு மாங்காய் (திருச்சில இதை கல்லாமணி மாங்கான்னு சொல்வாங்க பெங்களூர்ல கோத்தாப்புரி அல்லது பெங்களூரு மாவின்கா) அப்படியே துருவிவதக்கி எலுமிச்சை சாதம் போல மாங்காசாதம் அசத்தலா இருக்கும்.

மாங்கா பயற்றம்பருப்பு தேங்கா துருவிசேர்த்து கோசுமல்லி பண்லாம்

மாங்கா இனிப்புபச்சடி வருஷப்பிறப்புஅன்னிக்குமட்டுமா வெறும் நாளிலும் செய்யலாமே?

புளிப்பில்லாத மாங்காய்களை சின்னதுண்டம்செய்து முருங்கைகாய்கூட சாம்பார்ல போடுங்க..அப்போ புளி கொஞ்சம் கம்மியா இருக்கணும் குழம்புக்கு ஏன்னா மாங்கால புளிப்பு இருக்கில்லையா அதான்.

மாங்காய் பருப்புன்னு ஒண்ணு..ஜோரா இருக்கும் சப்பாத்தி இட்லிக்கு சைட் டிஷ்!


இபடி மாங்காய் தசாவதாரம் என்ன சாலீஸ் அவ்தார்கூட செய்ய்யும்.



ஸ்ரீரங்கம் வடக்குவாசலில் கொள்ளிடக்கரைவழியாய் காலைல வரும்சுண்டைக்காய் சைஸ் மலை வடு வீதி முனைல வரப்போவே மணத்துக்கொட்டும்

பச்சை மாவடுவை விரல்கள் இடுக்கிலேயே நசுக்கிவாய்ல போட்டுக்கலாம், பல் வெட்கப்படும்(கூசும்) ஆனாலும் இந்த மாவடுக்களை மார்க்கெட்டில்பார்த்துவிட்டால் நம்ம சூப்பர் ப்ரெய்ன் உடனேயே கைகளை அள்ளு அள்ளுன்னு என்று ஆர்டர் இடும்.



மாவடுவை ஊறுகாய்க்கு தயாரிக்கறது எப்படி?



மாவடு - 1 கிலோன்னா அதுக்கு
கல் உப்பு - 1 கப் அளவு எடுங்க
காய்ந்த மிளகாய் - 1 கப் எடுத்து
கடுகு - 1/4 கப் சேர்த்துஅரைங்க


முதல்ல மாவடுவை நன்கு கழுவிடணும். ஒரு துணியில் பரத்தி காய வைக்கணும்.

(காய்ந்த மிளகாயை வெயிலில் காயவைத்து, பொடித்துக் கொள்ளலாம் அல்லது 1/2 கப் மிளகாய்த் தூளாகவும் எடுத்துக் கொள்ளலாம்.)

கொஞ்சம்விளக்கெண்ணை(இது ப்ரிசெர்வேடிவ்) கொஞ்சம் மஞ்சள் பொடியைக் கலந்து வடுமாங்காயை பிசிறிக் கொள்ளவும்.

அரைச்சதை மாங்காய்ல கல்ந்துடுங்க.இது முதநாள் செய்யணும்.
இரண்டாம் நாள் கலந்து எடுத்து உபயோகிக்க ஆரம்பிக்கலாம். அதன்பின் அடிக்கடி அடிவரை கிளறிவிட வேண்டும். அல்லது குலுக்கனும்



ஊறுகாய்க்கு எப்பொழுதும் கண்ணாடி, பீங்கான் ஜாடி அல்லது கல்சட்டியையே உபயோகிக்கவும். ஸ்ரீர்ங்கம்ல கற்சட்டி பிரசித்தம். பொதுவா ஊறுகாய்க்கு(நமக்கும்தான்) வாய் கட்டுதல் அவசியம்!

வடுமாங்காய்க்கு விற்கிறவங்க அதன்
காம்பை அதிகம் வெட்டாமல் வைத்திருப்பார்கள். தராசில் அது அதிகம் இடத்தை அடைச்சிக்கும் ஆனா வேற வழி இல்ல அப்டித்தான் வாங்கணும் ஊறுகா போடறப்து கொஞ்சம் அதன் அதிகப்படி(காம்பு) வாலை நறுக்கிடலாம். அரை அங்குலவால் இல்லேன்னா வடுமாங்கா ருசிக்காது. நல்லெண்யும் விடலாம் கொஞ்ச்மா..அது நம் உடம்பு தோலை சுருங்க வைக்காம
பாதுகாக்கிறமாதிரி ஊறுகாயையும் மாங்காயின் கும்மென்ற உடம்பு அதிகம் சுருங்காமல் பாதுகாக்கும் அதே நேரம்வாசனையாக இருக்கும்.

மாவடு போட்டு பத்து பதினைந்து நாள்கள் கழித்து அதிலிருக்கும் நீரை இறுத்து, 2/3 பாகமாக ஆகும்வரை அடுப்பில் வைத்துக் காய்ச்சி ஆறவைத்து, பின் மாவடுவில் மீண்டும் விட்டால், வருடம் முழுவதும் கெட்டுப் போகாதுன்னும் சொல்றாங்க.

ஆவக்காய்மாங்காய் ஊறுகாய் ஆந்திரால பிரபலம்.
ஆவ்க்காய் ஊறுகாய் கதை ஒண்ணு சிலவருஷம்முன்பு குமுதத்துல வந்து பரவலாப்பேசப்பட்டதாம்.

சமீபத்துல மதுரை போனப்போ பழையபுக் கடைல அந்தகுமுதம்கிடைக்கவும் உடனே ஆர்வமா அதைவாங்கிப்படிச்சேன்...

ஐய்யே! இனிமே நாங்க காலனிப்பெண்கள் சேர்ந்து ஊறுகாய் போடமுடியாதபடி ' ஒருமாதிரி'யான கதையா இருக்கு:):)

(யாருங்க அங்க பழையபுத்தக்ககடை தேடி ஓடறது?:)
மேலும் படிக்க... "மாங்காய்கள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!"

Friday, May 02, 2008

Rain Rain Go Away!

(2நாள்முன்பு எங்கள் ஊரில் எங்கள்பகுதியில் பெருமழை சிறுபுயலென காற்றின் சீற்றத்தை கண்ணால்கண்டபோது.....)

The rain that caused havoc in Bangalore recently took the lives of several trees. But one tree was quite special. The peepul tree in the temple compound near my house was a sielent witness to generations of people. it had stood majestically for more than a hundred and fifty and had endured the test of time. it had seen the city grow probably from a small hamlet when it was a sapling to the bustling over crowded market that is today.

At its feet had been ancient shrines of the snake god built on a huge pedestal, where the pious had expressed their faith in the devine for decades.

The tree had also been home to plenty of birds and squirrels.Music concerts, discourses and
several rituals had been held in the vast shade of that it provided. It used to act as a natural
shelter during festivals when lunch would be served out-doors. With the help of the multi-
storeyed building, it appeared to stand with imperial dignity like a towering fortress, until the ill-
fated night.

The heavy rains and tormenting winds took a toll on the strength of the main trunk which
started to slit, breaking the juggernaut structure into two halves. The broken halves started to
move at a very slow pace giving plenty of time to evacuate people from the temple premises. The enormous trunk with all its branches slowly descended without harming any creature living on
the branches.Not even a single building was damaged.It died in great solemnity. Only now does
everyone realise the majestic tree's worth and the splendour it added to the ambience of the
temple.

The place now looks bare, with the naked sky visible and the sun mercilessly beating down from
above. one now realises the presence of the temple which was once camouflaged by the holy tree amidst the din and bustle.

I always wonder if it never could spoken, what the tales that it would have narrated would have
been the stories of people who went around it in devotion and faith the games that children played n the shade the devotees who rested, the memorable incidents that took place in its presence the changes in the surroundings....!
****************************************************************************


( அன்று மின் தடை இல்லாதபொழுதில் வெளியிடம் வந்து வேறுமொழியில் எழுதவேண்டிவந்துவிட்டது!!!)
மேலும் படிக்க... "Rain Rain Go Away!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.