Social Icons

Pages

Tuesday, September 30, 2008

பரமஹம்சர் கண்ட பராசக்தி!

காளிதேவியைப் பற்றி விவேகானந்தர் சொல்வதைக்கேளுங்கள்..

"சுடர்கள் அவிந்தன; கருமேகத்திரள்கள் கவிந்தன. இருள் எங்கும் அடர்ந்தது, சுழற்காற்று.
கோடிக்கணக்கான பைத்தியங்கள் சிறையிலிருந்து தப்பி ஓடுவதுப்பொல இரைச்சலிட்டது. வேரொடு மரங்களைதிருகி வழிநெடுக எறிந்தது, மை இருள் கக்கிய மின்னல் ஒளி.
கோரக்காட்சியையும் பயங்கர சாவையும் ஆயிரமாயிரமாகப் புலப்படுத்தி வருவாய்! இப்படி ஆடுவாய் காளி! காளித்தாயே! வருக! வருக!"

இந்தக்காளியை தரிசிக்க யாரால் இயலும்?

இன்னலை அன்புடன் ஏற்கத் துணிந்தவன், சாவின் உருவை தழுவத்துணிபவன் ,அழிவின் ஆட்டம்
ஆடிக்களிப்பவன் யாரோ அவ்வீரன் முன்னே அன்னை வருவாள் என்கிறார்.

விவேகானந்தரின் இந்த புரட்சிகரமான வாக்கும், ஸ்ரீராமக்ருஷ்ணர் ஏற்றிய காளிதேவியின் ஒரு
கோரதாண்டவத்தைக் குறிப்பதுதான்.


"பல்வேறு வழிகளில் நாம்கடவுளை உபாசித்து அவர் அருளை பெறலாம் ஆற்றங்கரையில் பலபடித்துறைகள் உள்ளன அல்லவா, ஆனந்த வெள்ளமாகிய பரம்பொருளுக்கும் பலபடித்துறைகள் உண்டு.
எந்த படித்துறையிலும் இறங்கி தண்ணீர் மொண்டுகொள்ளலாம் என்றுஇவ்விதமாக பலசமயங்களும்
பலவழிகளைக் காட்டுகின்றன "என்கிறார் பரமஹம்சர்.

சக்திசமயத்திலும் பலபடித்துறைகள் உண்டு.

தேவியை சுந்தரியாக தரிசிப்பதுப்போல பயங்கரியாகவும் வழிபடவேண்டும்.


பாரதியாரின் ஊழிக்கூத்து பாட்டை பலரும் கேட்டிருப்பார்கள்.பாடி ரசித்தும் இருப்பார்கள்.
ஆகாயம் கறுத்து வச்சிராயுதம்பாய்ந்து இடியும்மின்னலும் கக்கும் மேகத்தில் பராசக்தி இருக்கிறாள் .அந்தமேகம் மழையாகப்பெய்து அது நதியாக ஓடும்போது அதிலும்பராசக்தி இருக்கிறாள்!

மாயையிலிருந்துமீள்வதற்குவழிதான் என்ன என்று பரமஹம்சரிடம் ஒருவன் கேட்டான்.

மீளவேண்டும் என்று உண்மையான மனம் இருந்தால் தாயாகிய பராசக்தியே வழிகாட்டுவாள் என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

விரும்புவது என்றால் வெறும் வாய்ப்பேச்சில்மட்டுமல்ல. விடுபடவேண்டும் என்ற ஆசைமேலிட்டு உள்ளம்கரையவேண்டும் என மேலும் சொல்கிறார்.

தேவி நல்லமங்களமான காட்சியைக் கண்டுமட்டும் உவக்கிறாள் என்பதுமட்டும் அல்ல

பேயைக்கொலையை
பிணக்குவையைக் கண்டு உவப்பாள்

என்கிறார் பாரதியார்.

அன்னை அன்னை ஆடுங்கூத்தை
நாடச்செய்தாய் என்னை...

சக்திப்பேய்தான் தலையொடுதலைஅக்ள்முட்டிச்- சட்டச்
சட சடசட்டென்றுடைபடு தாளங்கொட்டி அங்கே
நின் விழியனல்போய் எட்டித்-தானே
எரியுங்கோலம் கண்டே சாகும்காலம்

ஊழிக்கூத்தில் பாரதி இப்படியும் சொல்கிறார்.

பைரவி பகற்காலங்கலில் பரமஹம்சரின் இருப்பிடமாகிய தட்சணேஸ்வரத்திலிருந்து வெகுதூரம் போய் அவர் வேண்டும் பொருட்களக்கொண்டுதருவாள்.

காளிதேவியின் பூஜைகளைமுடிதபிறகு ஆழ்ந்ததியானத்தில் ஆழ்ந்துவிடுவார் பரமஹம்சர்.
அச்சம்யங்களில் நான் கண்டகாட்சிகளைபப்ற்றி என்னால் இப்போது எடுத்துரைக்க முடிகிறதில்லை என்றும் பரமஹம்சர் கூறுகிறார்.

தனது மார்க்கம் இறையைத் தாயாய் நினைத்துவழிபடுவது என்கிறார்.

அன்னைபராசக்தியை தாதியாகவோ வீரனாகவோ அல்லது குழந்தையாகவோ பாவித்துவணங்கலாம் என்னும்
பரமஹம்சர்" நான் என்னைக் என்னைகுழந்தையாகபாவித்துக்கொண்டேன் "என்கிறார்.

மனம் உள்முகமாகத் திரும்பினால் அதுவாசற்கதவை சாத்திக்கொண்டு உள் அறைக்கு நோக்கிப்
போவதற்கு சமம், அந்த நிலையில் மனமானது பரம்பொருளில் லயமாகிவிடும் என்பது அவர் வாக்கு.

நம்பிக்கையில்குழந்தையைப் போலானாலொழிய ஈஸ்வரனைக்காண்பது துர்லபம் எனபமதங்கள்கூறுவதை ராமக்ருஷ்ணரும் வற்புறுத்தினார்.

பரமஹம்சர் பராசக்தியை நேரில்கண்டவர்.

அவர் உபதேங்களைஇயன்றவரையில் பயன்படுத்திக்கொண்டு அவரவர் நிலைக்கு ஏற்றவாறு ஆன்மீக
நிலையில் உயரலாம்.

யாதுமாகிநின்றாய் காளி !எங்கும் நீ நிறைந்தாய்!
தீது நன்மை எல்லாம் -காளி!-தெய்வலீலை யன்றோ?
மேலும் படிக்க... "பரமஹம்சர் கண்ட பராசக்தி!"

Monday, September 29, 2008

வாஷிங்டனில் நவராத்திரி!


வாஷிங்டனில் திருமணம் என்று பலவருடங்கள் முன்பு விகடனில் சாவி என்னும் எழுத்தாளர்
நகைச்சுவைகதை எழுதிஇருந்தார்.

வாஷிங்டனில் நவராத்திரி கேள்விப்பட்டிருக்கீங்களா?

இருங்க அதைத்தான் இப்போ சொல்லப்போறேன்.
2வருடம் முன்பு நவராத்திரி நேரம் நான் என் சித்தப்பாவின் வீட்டில் வாஷிங்டனில் இருந்தபோது நவராத்திரிகொலு வைக்கும் ஆசைவந்தது.

நம்ம ஊர் மாதிரி அங்க வீடுகளில் எல்லா இடங்களிலும் தரையே தெரிவதில்லை(சிலவீடுகளில் சமையற்கட்டுமட்டும்) அங்கே பெரும்பாலும் கார்பெட் போர்த்தியதரைகளே. மாடிப்படிகள், சுவர்
எல்லாம் மரத்தில்தான் .. சகலமும் விருட்ச ராஜ்ஜியம்,அபார்ட்மெண்ட் வீடுகளில் நாலாவது மாடியில் குடி இருப்பவர்கள் ராத்திரியில் நடந்துபோனால் சரக்சரக் என சில நேரம் சத்தம் கீழ்வீட்டுக்காரங்களுக்குக் கேட்கிறது. போனபுதிதில் நான் கொஞ்சம் அரண்டுபோனது நிஜம்.


ஆனால் இந்தமரசுவர்களில் ஒரு பெரியவசதி என்னவென்றால் சுவரில் ஒரு காலண்டர் அடிக்கவேண்டுமானால் டக் என்று ஆணி அடித்த உடன் சமத்தாய் ஆணி இறங்கிப் போகிறது. ஆனால் வாடகைவிட்டில்
அபார்ட்மெண்ட்டில் எல்லாம் இப்படி டக்டக் என்றுஆணி அதிகம் அடிக்கக் கூடாதாம்
வாடகைவீடுகளில் மாவிலைதோரணம் வாசலில்கோலம் என்று பல நம்மூர் வழக்கங்கள் நாட் அலவ்ட்!

வாஷிங்டனில் அக்டோ பர் குளிர் நாளில் நான் போனபோதுதான் தசரா வந்தது.

இந்தியாவில் ஸ்ரீரங்கத்தில் இருந்தநாட்களில் கொலுபொம்மைகள் வைக்க ஒருவாரம்முன்பே
கோயில் வளாகத்தின் ரங்கவிலாசில் படை எடுத்து புதுப்புதுபொம்மைகளாய் சேர்த்துவிடுவோம். அப்போதெல்லாம் கள்ளி(அல்லது கல்லுவா அர்த்தமே சரியா இல்லயே:))பெட்டிகள் கண்டாமுண்டாசாமான்கள் கனம்நிறைந்த பழைய தீபாவளிமலர்கள் டால்டாடப்பாக்கள் என்று கொலுபடிக்கு ஆதார வேர்களாய்பல பொருட்கள் வீட்டில் சுலபமாய் கிடைக்கும்.. பார்க் ஜூ அருவி என்று கற்பனைக்கு வந்தபடி
கைவரிசையைக்காட்டுவோம்..அப்புறம் ஸ்லாட்டட் ஆங்கிள்வந்தது சாதாரணநாட்களில் அது எங்களுக்குபுத்தக அலமாரி கொலுநாட்களில் அதுவே படிக்கட்டுகளாய் அவதாரம் எடுக்கும்.(பெங்களூரில் நைசாய் ஷோகேசிலேயே பொம்மைகளை வைத்து ஒப்பேற்றிக்கொண்டுவருகிறோம் என்னும்
உண்மையை இங்கே சொல்லிவிடவேண்டும்:))

வாஷிங்டனில் விஸ்தாரமாய் கொலுவைக்க ஆசைப்பட்டு தயாராகத்தான் ஊரிலிருந்துவந்திருந்தேன்.

ஆறேழுமாதம் சுற்றிபார்க்கவந்த இடத்தில் சித்தப்பாவிடம் அதைவாங்குங்க இதைவாங்குங்க என்று ஆர்டர் போடமுடியுமா? ஆனாலும் கொலு என்றால் படிகள் அமைத்து அதில்பொம்மைவைத்தால் அதன் அழகே தனிதான்.

ஆனால் சித்தப்பாவும (அமெரிக்க) சித்திக்கும் என்கவலைபுரிந்தது போலும்

". டோ ண்ட் ஒர்ரி இங்க மரக்கடைகளுக்குபோனால் விதம்விதமாய் சைஸ் வாரியாய் மரப்பலகைகள்கிடைக்கும் வாங்கிவரலாம்" என்றனர்.

மரக்கடை என்றதும் நான் கூட திருச்சிபாலக்கரை பஸ் நிறுத்தம் அருகே இருக்கும் மரக்கடைகளைவிட சற்றுப்பெரிதாய் கற்பனை செய்துகொண்டேன். ஆனால் அங்கே போனதும்தான் தெரிந்தது அது ஒரு
கிரிக்கட் மைதானம் அளவில் இருக்கிறதென்று !அமெரிக்காவில் எல்லாமே பெருசு தான்!

விதம்விதமான அளவில் மரப்பலகைகள் வாங்கினதும் அதை அறுப்பதற்கு என்ன செய்வதென்று விழித்தோம்.

என் கணவர்," நீதான் இருக்கிறாயே ?"என்று தன் பங்குக்கு அறுத்தார்! மறுபடி,அறம் ரம்பம் இழைப்புளி இன்ன பிறஆயுதங்களை சித்தப்பா வாங்கினார்.


எல்லாம் கார்டில் தேய்த்து வாங்கிவிட்டதால் அப்போது விலை தெரியாத எனக்கு பிறகு டாலரில்
விலை கேட்டுதெரிந்து அதை என் இந்தியமூளை ரூபாயில் பெருக்கிப்பார்த்து மொத்தம் பத்தாயிரம்
ரூபாய்க்குமேல அகிவிட்டது எனப்புரிந்ததும் திகைப்பானது.

"இட்ஸ் ஆல்ரைட்" என்றார் சித்தப்பா பெருந்தன்மையாக.


வீட்டிற்குவந்து மரப்பலகைகளை மெதுவாய் இறக்கி வீட்டிற்குள்கொண்டுவந்து சேர்த்தோம்
சித்தப்பாவும் என்கணவரும் இஞ்ச் டேப்பால் அளவு எடுத்து குறித்து அளந்து ஒருவழியாய் அறுத்து எடுத்த போது பலமணிநேரங்கள் ஓடிவிட்டன.

இந்தியாவிலிருந்த் புறப்படும்போதே ஒரு அட்டைப்பெட்டியில் தசாவதார(சினிமா அல்ல):) செட், சீதாராம பரத சத்ருகுண ஆஞ்சநேய செட் இன்னும் பலபொம்மைகளை தெர்மாகொலில் பதுக்கிக்கொண்டுவந்திருந்தேன்
தஞ்சாவூர் தலையாட்டி செட்டியார்பொம்மை எந்த ஏர்போர்ட் ஸ்டாண்டார்ட் பெட்டிகளிலும் அடங்காமல் உடைந்த பல் வெளியே தெரிய செட்டியார் மானத்தை வாங்கிவிட்டார்!

செட்டியாரை அமுக்கி கைப்பையில் பெரியதுண்டில் சுற்றிப்போட்டுகொண்டு திருட்டுமுழி முழித்தபோது லுஃப்தான்சா விமானப்பணிப்பெண் என்னை ஒரு சந்தேகப்பார்வை பார்த்துப்பின் பையைத்திறந்து பார்த்து சமாதானமானாள்.

எல்லாவற்றையும் இப்போது ஆர்வமாய் வெளியே எடுத்தேன்.

மீராபாயின் தம்புராவில் இரண்டு இழை விலகி இருக்க காந்தீஜீ நூற்றுக்கொண்டிருந்த தக்ளிகாணாமல்போயிருக்க ராமலட்சுமண செட்டில் அனுமாரின் கன்னத்தில் காயம்பட்டமாதிரி லேசாய் பொம்மை உடைந்துவிட்டிருந்தது.

தசாவதார செட்டில் வாமன அவதாரம் இந்தியாவிலேயே மறந்து விட்டுவந்திருப்பதை உணர்ந்தேன்.

"ஐயோ இப்ப என்ன செய்யறது? தசாவதாரம் நவாவதாராமாயிடுமே??" என்றேன் என்
வாழ்க்கைத்துணைவரிடம்.

என்கணவர்,"உன் ஒன்றுவிட்டதம்பி குட்டையாய் இருப்பானே அவனைக்கொண்டுவந்து கொலுப்படியில்வை" என்று ஜோக் அடித்தார், நான் முறைப்பதை ரசித்தபடி!

சித்தப்பா ஈமெயில் முலம் நவராத்திரிக்கு தமிழ்க்குடும்பங்களை அழைத்து அழைப்பு விடுத்திருந்தார்.

சித்தி அரைகுறைதமிழில் நவராத்திரி மகாத்மியத்தை என்னிடம் கேட்டுத்தெரிந்துகொண்டார். நான்
வாங்கிவந்திருந்த மைசூர் சில்க் சேலையைக்கட்டிக்கொண்டு சுண்டல் செய்ய உதவி புரிந்தார்.

ஏழெட்டுமாமிகள்முதல்நாளே பி எம் டபில்யூ காரில்வந்துஇறங்கினர்.

ஒருமாமி கொலுவைக்கண்டதும் தானாகவே
'சரஜிஜநாபசோதரி ' என்று உணர்ச்சிவசப்பட்டுப்பாடதொடங்கிவிட்டார்.

இன்னொரு மாமியிடம் நான் தான் சும்மா இல்லாமல் "ஸ்ரீசக்ரராஜ." :பாடச்சொல்லி வேண்டுகோள் விடுக்க அவங்க, 'பலவிதமாயுன்னைப்பாடவும் ஆடவும்' என்ற வரியைமட்டும் பலவிதமாய்ப்பாடி அபிநயித்து
நீணட்டிமுழக்கி பாடிக்கொண்டே இருந்தார்! அப்புறம் சுண்டல் விநியோகித்துப் படுக்கப்
போகும்போது நள்ளிரவாகிவிட்டது!நித்திரைபறிபோனதில் நொந்து போய் என்கணவர்"இனிமே மாமிகளை பாடச்சொல்லி வற்புறுத்தாதே ப்ளீஸ்" என்று என்னிடம் கைகுவித்தார்.

இன்னொருநாள் நாலைந்து சிறுமிகள்பட்டுப்பாவாடை காதில் ஜிமிக்கி கழுத்தில் காசுமாலை என்று அசல் கிராமத்துச்சிறுமிகள்போல டொயோட்டா காரில் வந்து இறங்கினர்.

ஆங்கிலமும்தமிழும்கலந்து பேசியபடி அவர்கள் தங்கள் அம்மாக்களோடும் தாத்தா பாட்டிகளோடும்வந்து அமர்ந்ததும்" யாராவதுபாடுங்களேன்" என்றேன்.

"வர்ஷா நன்னா திவ்யமா பாடுவா" என்றார் குழந்தையின் தாத்தா பெருமையாக.
அந்த ஏழுவயது வர்ஷாவைபாடச்சொன்னேன்.

அதுபலமாய்த் தலையாட்டியது.

"எனக்குதமிழ் சாங் தெரியுமே?" என்றது குஷியானகுரலில்.

"ஆஹா இந்த அமெரிக்கால இருந்துண்டு தமிழ் பேசறியே அதே பெருமையா இருக்கு..எங்க
ஒருபாட்டுபாடு,,கேக்கலாம்?"

"ஸ்ருதிப்பெட்டி கொண்டுவரலையே அச்சச்சோ" தவித்தது குழந்தை.

அமெரிக்க சித்தி,"நான் வச்ருக்கேன் கோண்ட்டு த்ரேன்.." என்று ஆர்வமாய் இந்தியாபோனபோது வாங்கிய எலெக்ட் ரானிக் ஸ்ருதிப்பெட்டியயை எடுத்துவந்து கொடுக்கவும் குழந்தையின் அம்மா அதனில் ஸ்ருதி சேர்த்து அதை, குழந்தை அங்கீகரிக்க அரைமணி ஆகியது.


வர்ஷா கைவளையல்களைபின்னுக்குத் தள்ளிக்கொண்டு சம்மணம்போட்டுகொண்டு அமர்ந்தாள்
"வலதுகைலதான் தாளம்போடணும் வர்ஷு" குழந்தையின் அம்மா எச்சரித்தாள்.

'ஒகேமாம்மீ"

தொண்டையைக்கனைத்துக்கொண்டதுகுழந்தை

சூடா பால் குடிக்கறியா வேணா?

வேணாம்...

பாத்து ஸ்ருதிபிசகாம பாடு என்ன?

இடக்கரத்தால் தலைப்பின்னலை எடுத்து முன்னேதள்ளிக்கொண்டபடி," ஆரம்பிக்கட்டுமா?" என்றுகேட்டது

அட! ஆரம்பமே அமர்க்களமா இருக்கே! --- தாத்தா பூரித்துப்போனார்.

"பாடு குழந்தே.. கேக்க காத்துக்கொண்டிருக்கோம்"

"சுட்டும்விழிச்சுடரே சுட்டும்விழிச்சுடரே என்னுலகம் உன்னைச்சுற்றுதே, சட்டப்பையில் உன்படம் பற்றிக்கொண்டு உரச ..." வர்ஷா உரத்தகுரலில் குதூகலமாய்ப்பாட

தாத்தா தலைஆட்டி ரசிக்க, கூட்டம் கைத்தட்டி உடன்பாட, நான் ஙே என்று விழிக்க......

இப்படி ஏக அமர்க்களத்துடன் வாஷிங்டனில் நவராத்திரி நடந்து முடிந்தது.
**********************************************************************
மேலும் படிக்க... "வாஷிங்டனில் நவராத்திரி!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.