Social Icons

Pages

Tuesday, April 24, 2012

கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்!

சென்றவாரத்தின் ஆரம்பதினத்தில்  மதியம் ஒளிபரப்பாகும் என்று அறிவித்திருந்த  நிகழ்ச்சி பற்றி பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் முதல்
ஒ.பாமா(ஒரத்த நாடு பாமா! தூரத்து உறவினர்)வரை அனைவருக்கும்
தண்டோரா போடாத  குறையாக   அறிவித்துவிட்டுக்காத்திருந்தேன்.
அப்போது வரவில்லை.பிறகு திங்கள் இரவு  வழக்கம்போல  9-30க்கு ஒளிபரப்பாகும் என்று தகவல் வந்தது. கொட்டகொட்ட 11மணிவரை முழித்துக்கொண்டு இருந்ததுதான் மிச்சம்! வரவே இல்லை!

கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்  என்னும்  நிகழ்ச்சி யைப்பற்றி  பலர் அறிந்திருக்கலாம்.பொதிகை தொலைக்காட்சியில் ஒருவருடமாக  வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு 930லிருந்து 10வரை ஒளீபரப்பாகும்.
நிகழ்ச்சியை அமைப்பவர் இசைக்கவி ரமணன் .ரமணன் கவிஞர் பாடகர் இசை அமைப்பாளர் சொற்பொழிவாளர் 24தடவை இமயம் சென்றுவந்தவர், பாரதி பக்தர் பராசக்தி மைந்தர்! அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்பதே பெருமையான விஷயம்.

மார்ச்மாதம்  பொதிகை தொலைக்காட்சி நிலையத்தில்  நிகழ்ச்சிபதிவானது. வழக்கமாய்  திங்கள் கிழமை வரவேண்டியது சித்திரை புத்தாண்டிலிருந்து நாள்+நேரம் மாறிப்போனது.


என்னுடன் திரு ஹரிகிருஷ்ணன்(இலக்கிய ஆர்வலர்களுக்கு  இவரை கண்டிப்பாக தெரியும்) அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அப்படி இப்படிபோன செவ்வாய்க்கிழமை மதியம்
  4-10க்குஇஞ்சித்தேநீர்போட்டுக்கொண்டிருக்கிறேன்  குறுஞ்செய்தி மணியடித்தது  4 30க்கு  கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் நிகழ்ச்சி நீங்கள் பங்குகொண்டது வருகிறது என.

யாருக்கும் தெரிவிக்க  நேரம் இல்லை அப்படியும்  கொஞ்சம் பேருக்கு  தெரிவிக்கலேன்னா மண்டை வெடிச்சிடும்போலாகிவிட சொல்லிவிட்டேன்.
“அன்னிக்கே மத்தியானம்  ஒருமணீக்குமேல காத்திருந்து  ஏமாந்தோம்...என்னவோ போ” என்று அலுத்துக்கொண்டாள் காலனி சிநேகிதி

 விசிஆரை  உயிர்ப்பித்து காசட்டை நுழைத்து   அது மறுத்து திரும்பிவர
அதட்டிக்கெஞ்சி ஒழுங்காய் நிகழ்ச்சியை பதிவு செய்ய  உத்தரவு பிறப்பித்துக்காத்திருந்தேன்
நல்லவேளையாய்  430க்கு  நிகழ்ச்சி வந்தேவிட்டது.
பதிவும் செய்துவிட்டேன்   முப்பது நிமிஷ நிகழ்ச்சி,ஆனால்பாருங்கள்  அதை விசிடியாக மாற்றி யுட்யூப்பில் அளிக்க மறுநாள் ஆர்வமாய்   கடையில் கொண்டுகொடுத்தேன்  இரண்டொருநாளில் தருவதாக சொன்ன கடைக்காரர் கடையைப்பூட்டிக்கொண்டு எங்கேபோனாரோ தெரியவே இல்லை.செல்லில் ஒரு சொல்லும் கிடைக்கவில்லை!

அன்று திரு ஹரிக்ருஷ்ணன் அவர்களும்  நிகழ்ச்சியை பதிவு செய்திருந்தார் ஆனால் கடைசி சில நிமிஷங்களில்அவர் பதிவிலும் மின் தடை ஏற்பட்டுவிட்டது  பெரும்பாலும் நிகழ்ச்சிபதிவானதை யுட்யூப்பில் அளித்துள்ளார் இங்கே அதையே உங்களுக்கும் அளிக்கிறேன்.

பார்த்து கேட்டு  கருத்துகூறினால் மகிழ்வேன் நன்றி. இரண்டு சுட்டிகளும் அல்லது ஏதேனும் ஒன்றாகிலும்  வேலை செய்யும்!


கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் நிகழ்ச்சி இங்கே


அல்லது  இங்கே

http://youtu.be/0S4KJBwBF-0



மேலும் படிக்க... "கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்!"

Thursday, April 05, 2012

சேர்த்தி!

சக்கரவர்த்திதிருமகனிடமிருந்து பெற்றுக்கொண்ட சீதனத்தை
விபீஷணன்  தற்காலிகமாக இறக்கி வைத்த இடத்தினருகில், உறையூரினைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சோழப்பேரரசன் தர்மவர்மா  அருந்தவம் செய்து கொண்டிருந்தான். அவனது நிஷ்டை கலைகின்றது.

எதிரே அரங்கன் ஜ்வலிக்கும் ரெங்கவிமானத்துடன் எழுந்தருளியுள்ளார். அவனுக்குத் தான் கண்டது கனவா? அல்லது நினைவா? என்றே புரியவில்லை. நினைவு வந்த போதெல்லாம் அடிக்கடி மூர்ச்சையாகின்றான்.

    தர்மவர்மாவின் தவத்தினை நிறைவு செய்தான் அரங்கன்!விபீடணன் தனது அனுஷ்டானங்களை காவிரிக்கரையில் முடித்து விட்டு வந்து பார்த்தால் இங்கு ஒரே கோலாகலம்!.

விபீஷணன் மறுநாள் இலங்கைக்குச் சென்று ஆதிபிரம்மோற்சவம் நடத்துவதற்காக முற்பட்டான். தர்மவர்மா அவரை திருவரங்கத்திலேயே அந்த உற்சவத்தை நடத்தித்தர பிரார்த்தித்தான். வெகுவிமரிசையாக முதன்முதலாக திருவரங்கத்தில் ஆதிபிரம்மோற்சவம் நடைபெற்றது.


இன்று திருவரங்கத்தில் நடைபெறும் பிரும்மோற்சவங்களுக்கெல்லாம் ஆதியும் இதுவேயானது.

பிரும்மோற்சவம் முடிந்து விபீடணனால் விமானத்தினைத் தூக்க இயலவில்லை. அரங்கன் காவிரிக்காகவும், தர்மவர்மாக்காகவும், நமக்காகவும் நமது சந்ததியினர்க்காகவும் நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட தீர்மானித்துவிட்டார்.


   நாம் அனைவரும் அறிந்த அரங்கனின் பிரசித்தப்பெற்ற சேர்த்தி பங்குனி உத்திரம் மட்டும்தான். ஆனால் அரங்கன் நான்கு சேர்த்தி உற்சவம் கொண்டாடுகின்றார்.

இதில் சித்திரையில் இரண்டு! பங்குனியில் இரண்டு!. வருஷ ஆரம்பமான சித்திரையில் சித்ராபெளர்ணமியன்று காவேரிக்கரையில் முதல் சேர்த்தி. காவேரியில் பெருமாளின் மாலை மரியாதைகள் எல்லாம் சேர்த்து சேர்த்தி!.

   அதே மாதத்தில் ஸ்ரீராமநவமியன்று குலசேகராழ்வார் குமாரத்தியான சேரகுலவல்லியுடன் சேர்த்து. இரண்டாம் சேர்த்தி!.

  பங்குனி 6ம் திருநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் உறையூர் சோழராஜா குமாரத்தி கமலவல்லியுடன் சேர்த்தி! உத்திரத்தில் ரெங்கநாயகியுடன் சேர்த்தி! வருஷ ஆரம்பத்தினை கலயாணத்துடன் ஆரம்பித்து வருஷ முடிவினையும் கல்யாணத்துடன் முடிக்கின்றார் இந்த வைபோக ரங்கன்.

உத்திரத்தின் சேர்த்தி சேவை  உன்னதமானது உயர்த்தியானது. படிதாண்டா பத்தினியான அரங்கபிராட்டியார் இருப்பிடம் சென்று அங்கேயே சேர்ந்தருளுவார் அரங்கபெருமான். சேர்த்திமண்டபம்   வெறும் நாட்களிலும் சேவிக்கவேண்டிய திருமண்டபம்.


அகளங்கன் திருச்சுற்றில் ஸ்ரீரங்க நாச்சியார், (வில்வ மரத்தடியில்) தாயார் சந்நிதி அமைந்துள்ளது. பங்குனி உத்திர நாளன்று மட்டும், நம்பெருமாளும், தாயாரும் 'சேர்த்தியில்' ஒன்றாக எழுந்தருளி பக்தர்களை ஆசீர்வதிப்பது, சிறப்புடைய மிகப் பெரும் நிகழ்ச்சியாகும்!

அன்று பக்தர்கள் சக்திக்கேற்ப, வெண்ணெய், டைமண்ட் கல்கண்டு, திராஷை, முந்திரி, ஏலப்பொடி சேர்த்து வெள்ளிக் கிண்ணங்களில் அமுது படைப்பர் நிவேதனமாக. அன்று(இன்று) ஸ்ரீரங்கத்தார் இல்லங்களில் சக்கரைப்பொங்கலும் செய்வார்கள்.


பிரணய கலகம் என்றழைக்கப்படும் மட்டையடி நிகழ்ச்சி சேர்த்திக்கு முன்பாக நடக்கிறது. உற்சவ அரங்கன்  உலாப்பிரியர்..  ஒன்று உள்ளூரில் சுத்திக்கொண்டு இருப்பார் அல்லது  அன்பர்களின் இதயத்திற்குள் சுழன்று கொண்டிருப்பார். ஜீயபுரம் என்கிற சி்ற்றூரில்  ஒரு
 மூதாட்டி தன்பேரனை நீண்டநேரமாய் காணாமல் பதறித்தவித்து அவன் பெயரை அழகியமணவாளா என்றழைக்கவும் அவள் மனம்வேதனைப்படக்கூடாதென்று அரங்கன்  சிறுவன் வடிவில் சென்று தீந்தயிர் சோற்றுடன் கீரையும் வாங்கி உண்டான்.இன்றும்  வருடம் ஒருமுறை ஜீயபுரம் செல்கின்றான்.தேர்த்திருவிழா வீதி உலா என வருடம் முழுக்க அரங்கனுக்குக்கொண்டாட்டம்தான். ஆனாலும் உறையூர் இளவரசி கமலவல்லியை காதலித்து மணந்த நாளை மறக்கமுடியுமா அரங்கனால்? ஆகவே அந்ததினம் உறையூருக்கு ஓசைப்படாமல் போய்விடுவார்.

ரங்கநாதர் தான்  அணிந்து இருந்த மோதிரத்தை உறையூர்  கமலவல்லிநாச்சியாருக்கு அன்பளிப்பாக கொடுத்து இருப்பார். அவ்வாறு கொடுத்து விட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதாயாரிடம் வரும்போது மோதிரம் எங்கே? என்று ஸ்ரீரெங்கநாதரிடம் சண்டையிட்டு அவரை மட்டையால் தாக்கும் நிகழ்ச்சிதான் வருடா வருடம் நமக்கு

 நடித்து காட்டப்படும்.

இந்த வினோதமான நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஸ்ரீதாயார் சன்னதிக்கு வருவார்கள்.

ஸ்ரீரங்கத்தில் இருந்தவரை  இதற்கு நான் ஆஜராகிவிடுவேன்  தாயார் சந்தியிலிருந்து வேகமாக வாழைமட்டைகள்  அரங்கன் பல்லக்குமீது வீசிவர உடனே அரங்கன் பல்லக்கை மூடிக்கொண்டு பயந்தமாதிரி பின்னோக்கி நகர...இந்த வேடிக்கை விளையாட்டு ஊடல் காட்சிகள் கண்ணுக்கு ரம்மியமானவை..அனைத்தையும் தானே நடித்துக்காடும் அரங்கனின் குறும்பினை ரசிப்போம்.



நம்பெருமாள் சித்திரை வீதி மற்றும் உத்தர வீதிகளில் அரையர் இசையுடன் வலம் வந்தபிறகு, ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதிக்குள் போகையில் கதவுகள் சாற்றப்பட்டு புஷ்பங்களையும் பழங்களையும் எறிந்து நம்பெருமாளைத் தடுத்துவெளியே நிறுத்தி வைப்பார்கள். கதவுகள் திறக்கப்படும்போது பெருமாள்
உள்ளேபோக முயற்சி செய்வதும்  கதவு தடால் என சாத்தியதும் திரும்பவருவதுமாக  இருப்பார்.

கடைசியில் சமாதானம் ஆகும்.

நம்பெருமாளு்ம் சமாதானத்திற்கு அருளப்பாடு ஸாதித்து நம்பெருமாள் சொல்ல வேண்டியவைகளை அரையர்கள் தாள இசையில் இசைப்பர்.
 நம்பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே நிகழும் சொற்றொடர் பரிமாற்றத்தை தம்பிரான்படி பாசுரங்கள் கொண்டு சேவிப்பர்கள்.அரையர்கள் நம்பெருமாள் வார்த்தையை நம்பெருமாளிடம் விண்ணப்பித்து, தாயாரிடமும் விண்ணபிப்பார்கள்.
 பண்டாரிகள் சொல்லிய தாயார் வார்த்தையை அரையர்கள் நம்பெருமாளிடம் விண்ணப்பிப்பார்கள். (நம்பெருமாள் அஞ்சு வார்த்தை, தாயார் வார்த்தையானது இரட்டிப்பாகிறபடியால் அரையர்கள் 15 தடவையும் பண்டாரிகள் 5 தடவையும் நம்பெருமாள் மற்றும் ஸ்ரீரங்கநாச்சியார் வார்த்தைகளாகச் சொல்லுவர்.

ஸ்ரீரங்கநாச்சியாரால் அனுமதிக்கப்பட்ட பிறகு நம்பெருமாள் ஸந்நிதி வாசலில், எழுந்தருளி ஆழ்வாருக்கு மரியாதை செய்து அனுப்புவார்.
உடனே முதல் ஏகாந்தம் நடக்கும். தளிகை நிவேதனம் நடந்து பங்குனி உத்தர மண்டபத்திற்கு நம்பெருமாள் எழுந்தருளுவார், பிறகு இரவு 10 மணி வரை பொதுஜனஸேவை நடைபெறும்.

இரண்டாம் ஏகாந்தம்-தீர்த்தபேரர் பெரியகோயிலிலிருந்து புறப்பட்டு வடதிருக்காவிரியில் தீர்த்தவாரி கண்டருளி, நம்பெருமாளிடம் வந்ததும் கத்யத்ரயம் ஸேவிக்கப்படும்.
இராமாநுசர் அருளிச் செய்த கத்யத்ரயம் என்னும் க்ரந்தம் இன்றைய தினம்தான் அவதரித்தது. கத்யத்ரய சாற்றுமுறைக்காக இரண்டாம் ஏகாந்தத்தளிகை நிவேதனம் ஆனதும் தீர்த்தபேரர் பெரியகோயிலுக்கு எழுந்தருளுவார்



மூன்றாம் ஏகாந்தம் நம்பெருமாள் நாச்சியார் இருவருக்கும் பதினெட்டு ஆவர்த்தி திருமஞ்சனம் ஆகும். (எம்பெருமானார் திருக் கோட்டியூர் நம்பிகளிடம் பதினெட்டு ஆவ்ருத்தி நடந்த சிரமத்தை எம்பெருமானார்க்கு தீர்த்தருளுவதற்காக பதினெட்டு தடவை கைலி ஸமர்ப்பித்துத் திருமஞ்சனம் நடைபெறுகிறது)) திருமஞ்சன திருவாராதனத்தில் அரையர்களுக்கு “வசந்தனுக்கு அருளப்பாடு” என்று ஸாதித்து இசையில் தம்பிரான்கள் இயற்றிய வசந்தன் பாட்டு (கூடின காலத்தின் வர்ணனை) ஸேவிக்க இருவரும் கேட்டு மகிழ்ந்தருளுவர்.

 மூன்றாம் ஏகாந்தத் தளிகை நிவேதனம் ஆனதும், ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளே எழுந்தருளுவார். நம்பெருமாள் பங்குனி உத்தர மண்டபத்திலிருந்து புறப்பட்டுத் தாயார் ஸந்நிதிக்கு முன் ஸ்ரீரங்கநாச்சியாரைப் பார்த்து திரும்பிக் கொண்டு, பிரியமனம் இல்லாமல் ஒரு ஒரு அடியாக வைத்து வைத்து மெல்ல எழுந்தருளுவார்.



,



அரங்கத்தமாவென்றே மொழிந்தேனாக
 அரங்கனுடன் அரங்கத்து நாச்சியாரும்
இரங்கவெனை அழைத்தான் என்றென்முன் வந்தார்
இனிய தமிழ் மொழிநயத்தைத் தெளிந்திட்டேனே!

(புலவர் சக்திசரணன்)

--

மேலும் படிக்க... "சேர்த்தி!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.