Social Icons

Pages

Wednesday, November 30, 2011

இடைச்சாதி நான் என்றான்!



பாரதியின் எங்கிருந்தோவந்தான் இடைச்சாதி நான் என்றான் என்னும் பாடலை அறியாதவர்கள் இருக்க முடியாது.



இடைச்சாதி என்ற சொல்லாட்சி பாரதியை வெறுமனே அளித்திருக்கமாட்டார். அவர்கண்முன் கண்ணன் இப்படியெல்லாம் வந்திருக்கலாம்!


மும்மூர்த்திகளில் இடையன்(ப்ரும்மா விஷ்ணு சிவன்)

முத்தொழில்களில் இடையன்(படைத்தல் காத்தல் அழித்தல்)

திருப்பாற்கடலில் ஆதிசேஷனுக்கும் கடலுக்கும் இடையில் பள்ளிகொள்ளும் இடையன்


தேகத்தின் உள்ளுக்கும் புறத்துக்குமான ஆத்மாவில் உறைபவன்


பலராமனுக்கும் சுபத்ரைக்கும் இடையில் பிறந்தவன்


இடையர்குலத்தில்பிறந்தவன்


பசுக்களின்கூட்டத்திலிடையிலிருந்தவன்

யசோதையால் இடையில் கட்டுண்டவன்

இரண்டுமரங்களுக்கு (யஷர்கள்) இடையில் சென்றுமோட்சமளித்தவன்)

காளியனின் சிரசில் ஐந்துதலைகளுக்கு இடையில் நர்த்தனமாடியவன்

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில்தூது சென்றவன்....

 முதலில் வரும் உறவைவிடவும் இடையில் வரும் நட்பை (குசேலர்)மதிப்பவன்.

இதைவிட பாரதிக்கு அதிகம்  தோன்றி இருக்கும்.

அடுத்து..



பொய்யோ எனும் இடையாளொடும் இளையானோடும் போனான்..என்கிற, கம்பன் பாடலிலும்


காற்றுவெளியிடைக்கண்ணம்மா என்கிறது பாரதியின் பாட்டிலும் வரும் இடைபற்றியும் யோசிக்கவேண்டிவந்தது.


கம்பனின் பொய்யோ எனும் இடைக்கு அர்த்தம் புரிகிறது. இல்லையோ என்று பொய் சொல்லும்போன்ற இடைகொண்டதாலேயே சீதை இடையாள் ஆகிறாள். பிடி இடை என்பார்கள் .பிடி என்றால் யானையையும் சொல்வதுண்டு:)

காற்றுவெளியிடைகண்ணம்மா என்கிறாரே பாரதி,.என்ன அது?

காற்றுபோல கண்ணுக்குத்தெரியாத இடைகொண்ட கண்ணம்மாவா


காற்றுவெளியினில்  கண்ணம்மா என்றிருந்தால் காற்று சூழ்ந்த வெளி  என பொருள் கொள்ளலாம்.காற்றுவெளியிடை என்பதற்கு யாராவது நல்ல விளக்கம்  கொடுங்களேன்..

  இடைவேளைக்குப்பிறகு வரேன்:)





மேலும் படிக்க... "இடைச்சாதி நான் என்றான்!"

Tuesday, November 29, 2011

மெய் மறந்த காதல்!




'ப்ரபாகர் ப்ரபாகர்' என்று மூச்சுக்கு முன்னூறு தடவை அழைக்கும் பவித்ரா  இரண்டுநாட்களாய் மௌனவிரதம் இருக்கிறாள்.


'அழுத்தக்காரி ....அவளோடு் லேட்டஸ்டாய்  வித்தகன்  சினிமா போகாமல் மன்னைமாதவனோடும் அனந்துவோடும் சேர்ந்து  போய்விட்டேன் என்று கோபம் போலிருக்கு..' வேலாயுதம் கூட்டிப்போய்   வேண்டியமட்டும் வாங்கிக்கட்டிக்கிட்டேன் அதான்  வித்தகனுக்கு மல்டிப்ளசுக்கு வரசொல்லவில்லை. படம் பவித்ராக்குப்பிடிக்கலைன்னா   கல்யாணம் ஆகுமுன்பே   டைவர்ஸ் செய்துவிடுவாள் என்கிற பயம்தான்! செல்போனை செல்லாதபோனாய் ஆக்கிவிட்டாள்.எப்போதும் ஸ்விட்ச்ட் ஆஃப் என்கிறது அது!

யோசித்தபடி உன்னோடு பேசாத கணங்கள் என்ற தலைப்பில் ப்ரபாகர்  புதுக்கவிதை எழுதப்பார்த்தான்.வரவில்லை. கோபமாய் ஐபோனில் யு ட்யூப்பில் எதையோதேடினான்.. ஒய்திஸ்கொலைவெறிடி என்றார் தனுஷ்.

  அடப்ப(பா)வி! என்கூட பேசாமலே இருக்கியே..  ஒய் திஸ் கொலைவெறிடி?

இப்படித்தான் காதலிக்க ஆரம்பித்த புதிதில் தசாவதாரம் சினிமாவிற்கு  ப்ரபாகர் போய்விட்டான் என்று கோபித்துக்கொண்டாள்

. கொஞ்சம் (தசா) அவதாரகாலத்துக்குப்போய்வரலாம் வாங்க...


அன்று....

" லுக் பவித்ரா...என்னதான் நாம மாஞ்சுமாஞ்சு லால் பாக்குலயும் ,·'ஃபோரம்'லயும் கருடாமால்லையும் கோபாலன் மால்லையும் சுத்திசுத்திவந்து காதலிச்சாலும் நமக்குக் கல்யாணம் ஆகிறவைக்கும் என்னோட சில கொள்கைகளை நான் விடமுடியாத நிலைமை. அதன்படி புதுப்படம் ரிலீஸாகிற தினம் முதல்நாள் முதல் ஷோ போகத்தான் போறேன்.. இதுக்காக என் பிராஜக்ட் மேனேஜர் கிட்ட ஆபீஸ்ல அனுமதியும் வாங்கிட்டேன். நீ வர்றதுன்னா வா.. எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனா நீ வரலேன்னா உடனே நான் போகாம இருக்க மட்டும் முடியாது ,பிகாஸ் என்னோட இருபத்திநாலு வருஷப்பழக்கமிது...எங்கம்மா வயித்துல இருந்த நாளிலிருந்து இது பழக்கமாயிடிச்சி.. ஸாரி பவி" என்று விவரமாய் சொல்லிவிட்டுத் தான் சினிமாபார்க்கப் போனான்.

இடைவேளையில் மெக்டொனால்ட்டில் விரல் வறுவல்(ஃபிங்கர் சிப்ஸ்)  சாப்பிடும்போது் பவித்ரா போன் செய்தாள்.

்" ஹாய்  பவி...!" ஆசையாய் அழைத்தான்.

"ப்ப்ப்ரப்ப்பாக்கர்ர்ர்.!.சரியா எனக்கு ஆஃபீஸ்ல அப்ரைஸல் நேரம். நீ இப்படி செய்வது நல்ல்லாவே இல்லை ...  ஆம்ம்ம்மா” என்றாள்.பவித்ராவிற்குக்கோபம் வந்தால் மெய்யெழுத்துக்கள்  பட்டாசாய் வெடிக்கும்!

பவி தொடர்ந்தாள்.

 உன்னைப்பழிவாங்க நைட் என் ஹாஸ்டல்ரூம்போனதும்  என் ஃபேவரிட் ஆக்டர் Tom Cruise


நடிச்ச  ஒரு ஹாலிவுட்மூவி பாக்கப்போற்ற்றேன். 


" அதெல்லாம் எங்க தல படம் முன்னாடி ஜுஜுபி ..இது செம சூப்பர் படம் பவி! அதிலும் அசின் வர்ற சீன் இருக்கே.... 12.ம் நூற்றாண்டில் தையல்காரர்கள் இலலையோ என்னவோ என யோசிக்கவைக்கும் இந்த சீன்ல... அசின் லுக்ஸ் ஆ...ஆ.........awesome!



'ஹேய் அசின்(ங்)கமா பேசாத..... shutup yaar!" சிரித்தபடிதான் போனை வைத்தாள்.

அன்பில் அட்லாண்டிக்,பாசத்தில் பசிபிக்எனபவித்ரா,  ப்ரபாகரிடம் உயிராய் பழகுபவள்.

அப்படிப்பட்டவளிடமிருந்து  இப்போது ஒருபோன்கால் இல்ல, மின்மடல் இல்லை ...குறுஞ்செய்தி இல்லை!முக நூலில் ட்விட்டரில் என்று எங்கும் தேடி பவியைக்காணா மனமும் வாடுதே என்று ப்ரபாகர் பாடினான்.

.'என்னாச்சு பவித்ராவுக்கு?   இப்போ நிஜமாவே கோவிச்சிட்டுதா கிளி்,'இன்னிக்கு விட்றதா இல்ல நேராய் அவள்வேலைசெய்யும் ஆபீஸ்போய் கேட்டுடறென்'


ப்ரபாகர்  கிளம்பினான்.

 அங்கே கிடைத்த தகவல் அவள் ஆபீசுக்கேஇரண்டுநாளாய் வரலையாம்............ லீவ் போட்டிருக்காளாம்...



அப்போ உடம்புதான் சரி இல்லை...

 உன் செல்போனை தூக்கவும் சக்தி இல்லையா பெண்ணே? அதனால்தான்  ஆஃப் செய்து வைத்திருக்கிறாயா?

அப்பொழுதுதான் ஆபீஸ் வாசலில் அவள் தோழி அகிலாவைப்பார்த்தான்.

"அகிலா!அகிலா! " என்று நேருக்குநேர் படத்துப் பாடலாய்க் கூவி அழைத்தான்.

அகிலா சட்டென திரும்பவில்லை அவளால் அதுமுடியாது 99.5கிலோ எடை தி.மகால்!

மெல்லத்திரும்பியவள், ப்ரபாகரைக்கண்டதும் கண்மலர" ப்ரபாகரா! ச்சென்னாகிதீரா?' என்றாள். மண்ணின்மகள்..கன்னடமே பேசுவாள்,.ரொம்பவும்' ஞே 'என விழித்தால் மட்டும் ஆங்கிலத்தை அனுமதிப்பாள்..

அவளுக்கு பவித்ராவின் காதலன் ப்ரபாகர் என நன்கு தெரியும் .

்"ச்சென்னகிதினி.. அதாவது நல்லாருக்கேன்..இதுக்குமேல கன்னடத்துல பேச வச்சி என்னை சோதிக்காதீங்க சிஸ்டர்.. ஆங்கிலம் அந்நியமொழி என்று இந்தியர்களிடம் கதைக்காத நீங்க, கொஞ்சமே கொஞ்சம் .தெரிஞ்ச உங்க மைசூர்தமிழ்லயாவது பதில் சொல்லுங்க எங்கே பவித்ரான்னு?'



" ஆமாவா ? பவித்ரா ஆபீஸ் வந்த் கொண்டில்லா.. .நீங்க லேடீஸ் ஹாஸ்டல் பக்கம்  வர்முட்யாது. அதுக்கே நான் வேணா அவ ஹாஸ்டல்ரூம் போயி   தேடிக்கொண்டு வந்ததா சொல்லி அவளை மத்யானா மூறு கண்ட்டேக்கே லால்பாக் கண்ணாடிமனைகே வரச்சொல்லட்டுமா?'



புண்ணியமாப்போகும்! உன் பொன்னுடலும் சற்றே குறையும்!மூணு மணிக்கு லால்பாக் க்ளாஸ் ஹவுசுக்கு அவளை வரச்சொல்லு. மாடு(செய்) அகிலா மாடு”என்றான்.

“நாட்டிபாய்! மாடுன்னா கன்னடத்துல செய்..ஆனா  தமிழ்ல  என்னன்னும் தெரியுமே..யானைன்னு சொல்லாதவரை ஒல்லேது(நல்லது) என்று நகர்ந்த அகிலா செய்த ஏற்பாட்டில் லால்பாக் வந்தாள் பவித்ரா.

ஒன்றும் இளைப்பாய் தெரியவில்லை.அனுஷ்கா உயரத்தில் ஆப்பிள் கன்னத்தில் ஜோதிகா கண்களில் துறுதுறுவென்றே தெரிந்தாள்.

"ஹலோ என்ன மேடம்! ஃபோன்ல பேசமாட்டிங்களாக்கும்? என்னை நினைவு இருக்குதா? என்பேரு ப்ரபாகர். மூணுவருஷமா உன்னை துரத்தித்துரத்தி காதலிக்கறேன், கூடிய சீக்கிரம் நமக்கு பெத்தவங்க சம்மதமோட சென்னைல கல்யாணமும் நடக்க திட்டம் நடக்குது இந்த நிலைமைல உன்கிட்ட சொல்லிட்டு நான் வித்தகன் சினிமா போனால் அதுக்கு நீ இப்படி மெத்தனமா  நடந்துக்கணுமா?



 சத்தமேயின்றி மௌனமாய் பார்த்தாள் பவித்ரா.



“அடப்பாவி பவி! 48மணிநேரமா பாக்கலயே! இப்ப கண்டதும் ப்ரபாகர்னு ஓடிவந்து கட்டிப்பேன்னு நினச்சா என்னவோ சிலைமாதிரி நிக்கற?”


பவித்ரா தயக்கமுடன்,”அது அது....”என்றாள்.



என்னாச்சு பவித்ரா? பொறுமை போகுது எனக்கு..



அது அது...எனகு பேசவே வரல



ஏன் அதான் பேசறியே?


அழுத திருதமா  நாக புரட வரல


வாட்? என்ன மொழி பேசறே?


 தமிதா



என்ன தமிதாவா? நமிதாதான் எனக்கு தெரியும்.ஹ.. இப்போ நமீதா போயி லஷ்மிராய் வந்தாச்சி!

ஐயொ பெரபாகர பெரபாகர எனகு  பேசவரல முனபோல..


வாய்ல கூழாங்கல்லா அதை கடாசிட்டு ஒழுங்கா பேசு


இல இல

என்ன இலை? ஓ வெற்றிலையா உன் வாய்ல? நோ ப்ராப்ஸ்! அந்த புல் ஓரமா துப்பிடு...அப்புறமாவாவது உன் பேச்சு எனக்குப் புல்லரிக்கட்டும்!

எபடி சொலவே பெரபாகர?



என்ன பவி இது? ஆர் யூ மேட்? சரிஎழுதிக்காட்டு..



கைப்பையிலிருந்து தேடி ஏதோ துணிக்கடை பில்லை எடுத்தாள் அதன் பின்பக்கம் பேனாவில் ஏதோ எழுதித் தந்தாள்.



அதில் அவள் எழுதி இருந்ததை படித்ததும் ஆச்சரியமாய்,

" அப்படியா? ரியலி? ஸடனா உனக்கு மெய்யெழுத்தெல்லாம் சிக்கிக்கொண்டு விட்டதா,ஹாரர் மூவி பார்த்த அதிர்ச்சியிலா ஆனது இப்படி?  போன் செய்யாதகாரணமும் இதுதானா, குறுஞ்செய்தி  மின்மடல் எல்லாம் அனுப்ப மனசு  தயங்கி குறுகுறுத்ததால்  எதுவும் அனுப்பலையா? அடப்பாவமே மெய்மறந்த மேனகை பவித்த்ரா?",


ஆமா ரொப பயகரமான பட அது... நடுல அயோ நு வீறிடேன் அபோ இபடி ஆசு

வெல்!இந்தவியாதிக்கு என்ன மருந்து? ஒருபாட்டில் நிறைய மெய்எழுத்தை எழுதிப்போட்டு குலுக்கி உன் வாய்ல ஊற்றட்டுமா அல்லது புலவர் சா. ராமானுசம் அவர்களிடம்  உன்னை நல்ல தமிழ்கற்றுக்கொள்ள அனுப்பட்டுமா?



உனகு  என  நெலமை புரியாதா ?   இதுகுதான் நா எதுவு சொலல ரடு நாளா உனகிட....சகதிபிரபா  கிட  சொனபோ அவ ஆறுதலா  யு விலபி ஆலரைடுன்னு இதமா  சொனா..நீ  கிடல் செயறே..



கோச்சிக்காத டியர் சரி வாவா..எனக்குத்தெரிஞ்ச நல்ல டாக்டர் மல்லேஸ்வரத்துல இருக்காரு, உடனே போகலாம் பைக்ல ஏறி உக்காரு.



பைக்கை ஸ்டார்ட் செய்தான் ப்ரபாகர். ஆனால் அது ஸ்டார்ட் ஆகாமல்படுத்தியது.

“நீ எதுல வந்தே பவி?உன் ஆக்டிவாலயா?

 இல..அது ரிபே(ர்) அகிலா அவ (ஸ்க்)கூ(ட்)டில    லாலபாகல கொடு விடு போயிடா

 லால்பாக் வாசல் வரை  இருவரும் நடந்துவந்து வெளியே பார்த்தால் பெட்ரோல்விலை ஏறினதை முன்னிட்டு பெங்களூர்ல ஆட்டோ ஸ்ட்ரைக்காம், ஒரு ஆட்டோவும் கிடைக்கவில்லை.



சட்டென எதிரில் மல்லேஸ்வரம் என்று போர்டுபோட்டு வந்த பஸ்சில் ஏறினர்.



சில்லறையா இல்ல என்கிட்ட, எல்லாம் ஐநூறா இருக்கு..பவி நீயே டிக்கட் வாங்கிடு என்ன?



பெங்களூர் பஸ்களின் சிஸ்டம்படி பெண்கள் செல்லும்முன்பக்கமாய் ஏறிய பவித்ரா , கண்டக்டர்" டிக்கட் எல்லிகே?"என்றதும் "மலெசுர" என்றாள்.

கண்டக்டர் குழம்பிப்போனவராய்," மலே ஜுரா? (மழைஜுரமா?) மையல்லி ஜுரானா?(உடம்புல ஜுரமா) அதுக்கே டாக்டரத்தர ஹோகி.(டாக்டர்கிட்டபோங்க)." என்றார் கிண்டலாய்.



நல்லவேலையாய பின்புறம் இதனை கவனித்து ப்ரபாகர் ஓடிவந்து அவள்கையிலிருந்த ரூபாய்நோட்டை வாங்கி சமாளித்தான்

"தாஙஸ பெரபாகர? என்று பவித்ரா சொன்னதை ஏதோ அயல்நாட்டு மொழி என பஸ்ஸில் அதிசயமாய் சிலர்பார்த்தனர்.



பவித்ரா இங்க நீ ஏதும் பேசாமல் வாயேன் ப்ளீஸ்..



எபடி இல  எபடிகற? சாபிடாம இருகலா பேசாம இருகலாமா?



கஷ்டம்தான் உனக்கு.. ம்ம்...கலகலன்னு நீ பேசினாலேஅந்த அழகே அழகு..இதுக்குத்தான் காதலன் தசாவதாரம் சினிமாபோனால்,வித்தகன் கண்டுவந்தால் கனிவாய் வாழ்த்து சொல்லி இருந்திருக்கணும் என்கிறது...நனவில்அழுத்திப் பேச முடியாத உனக்கு கனவு மெய்ப்படவேண்டும்...ஹ்ம்ம்....முத்தைத்தரு பத்தித்திரு என்கிற அருணகிரியார் பாடலை இப்போ உன்னைப்பாடசொல்லி யாரும் கேட்டிடக்கூடாது..ஹஹ்ஹா


்ஹே சிரிகாத..

 அவளை பரிசோதித்துவிட்டு " இது'மெய்யோ போ·பியா'என்ற நோய் .அதாவது பயங்கரமான மயிர்க்கூச்செறியும் ஹாரர் படம்பார்க்கும்போது சிலருக்கு கண்முழி பிதுங்கி,முற்றிலும் தொண்டைஅடைத்து மெய் எழுத்தெல்லாம் சிறைபட்டுப்போயிடும் .... "  என்று வழக்கம்போல் மூக்குக்கண்ணாடியைக் கழற்றியபடியே டாக்டர் சொன்னார்.

”இதற்கு என்னசிகிச்சை டாக்டர்? அமெரிக்கா போயித்தான் ஆபரேஷன் செய்யணும்னு சினிமா டாக்டர் மாதிரி சொல்லிடாதீங்க?"

நோ நோ...இது ஒருமனபிராந்தி

அப்போ பீர் அல்லது நல்ல ப்ராண்டி குடிக்க சொல்லவா?

யூ நாட்டி பாய்! இது ஒரு மனப்ரமைன்னேன்..தானே சரியாய்டும்


எப்போ டாக்டர்? இன்னும் மூணுவாரத்துல எங்களுக்குக் கல்யாணம் வேற!

\"ஆமா டாகடர!! கலயாணதுகு நீ(ங்)க வா(ழ்த்)த வ(ந்)துடு(ங்)க ,க(ட்)டாய (ம்)" என்றாள் பவித்ரா.

"ஆஹா அதுகென .. வதுடா போசு"என்ற டாக்டர் "ஐயாம் சாரி ..இந்த வியாதி கண்டேஜியஸ்தான் பாருங்க ஒருக்கணத்துல எனக்கும் தொத்திக்கிச்சு' என்றார் தமாஷாய்.

பவித்ராவை அழைத்துக்கொண்டு ப்ரபாகர் தன்அறைக்கு வந்தான்.



"என்ன பெரிய படம் அது? காஞ்சனா படத்தைவிடவா? படுபயங்கரமான  அந்தப்படத்தை   என் ஃப்ரண்ட்ஸ் ராஜேஷ் சசிகுமார்  ரசிகன்லாம் கூட பார்க்கமுடியாதுப்பான்னு ஓடிட்டாங்க.. ஆனா நான் தனியா   சிடிலபார்த்தேன்..அப்படி ஒருவீரன்கிட்ட நீ   பேசிட்டு இருக்கே பவி! அச்சம்தவிர் தெரிஞ்சுதா? ம்ம்ம் இன்னிக்கு..ரண்டுல ஒண்ணு பாத்துடறேன்.. ஆமா .நீயும் மறுபடி அந்தப்படம் பாக்கபோறே என்கூட இப்போ, சம்ஜே? மனசிலாயீ? கொத்தாயித்தா?



நானா? நோ  நோ... பய பய எனகு



அட! ச்சும்மா இப்படி வந்து இந்த மதுரைவீரன் பக்கத்துல உக்காரு!



தயங்கிஅவன் அருகில் உட்கார்ந்துகொண்டாள் பவித்ரா.






 பவித்ரா " வேடா வேடா " என்றாள்.


 வேடா?யார் வேடன்?




இல...மூவி பாக வேடா



படம் பாக்க வேண்டாமா?



ஆமாஆமா



எனக்குப் பாக்கணும்..நீ வேணும்னா கண்ண மூடிக்கோ.."

டிவிடி ப்ளேயரில் 1408 என்னும்  அந்தப் பேய்ப்படம்  ஆரம்பமானது.ஸ்டிஃபன்கிங் எழுதியது.

ஹ என்ன பெரிய ஹாலிவுட்படம்னா  உடனே பயப்படணுமா?

  ப்ரபாகர் கிண்டலாய் சிரித்தான்.



அடுத்த சில நிமிடங்களில் அவனுக்கு முகம் வியர்க்க ஆரம்பித்தது.

இன்னும் சில நிமிடங்கள் ஆனதும்...


அம்மாடியோவ்...பயங்கரமா இருக்கே... பிசாசு இங்கயே வந்துட்டமாதிரி இருக்கு? உடம்பெல்லாம் ந நடு டுங்குதே..ஆ...ஐயொ..அம்மா... ரத்தவாந்தி எடுத்துடுவேன் போலிருக்குதே.....

 என்று அலறினான்.அப்படியே மயக்கமாகி சோபாவில் சரிந்தான்.

பவித்ரா  படத்தில் ல்யித்திருந்தவள் திரும்பினாள்.
" ஐய்யெய்யோ.என்னாச்சு ப்ரபாகர் ஏன் இப்படிகூச்சல்போடறே,முத தடவை பயமாத்தான் இருக்கும் ஆனா  இப்போ நான்  சுத்தமா பயப்படாம ரசிச்சி  பாக்கறேன்..ஆமா என்ன பயந்துட்டீயா நீயும்?"என்றாள்

அப்போதுதான்

சட்டென தனக்கு மெய்யெழுத்துக்கள் மீண்டுவந்ததை உணர்ந்தாள்.



"வாவ்வ்வ்வ்வ்வ்! ஐ காட் இட் யா"என்று கைதட்டிக்கூவினாள்.



மயக்கம் சற்று தெளிந்த ப்ரபாகர் கண்விழித்தான்.

,"பவிரா! எனகு பயமா இருகு....இபடி ஒரு சினிமா, என வாகல பாததில.. முதல அத நிறுது...வேடா வேடா ...நிறுது நிறுது"என்றான்.



"ஐய்யோ..ப்ரபாகர் உனக்கு என்னாச்சு ? எனக்கு சரியாயிடிச்ச்ச்சே...உனக்கு இப்போ மெய்யெழுத்துப்போச்சே ஓ மை  காட்!. இப்போ நீமாட்டிக்கிட்டியா...  “

--









மேலும் படிக்க... "மெய் மறந்த காதல்!"

Monday, November 21, 2011

அகமும் புறமும்.












ஆபீசிற்குள் நுழைந்த அரைமணியில் செல்போன், 'நீ நடந்தால் நடை
அழகு’ என்கிறது.பழையபாட்டுதான் ஆனால் அழகென்ற சொல் பலமுறைவருவதால் எனக்கு இந்தப்பாட்டுப்பிடிக்கிறது.  அழகின் ரசிகன் நான்!

'காபி'னைவிட்டு நழுவி காரிடருக்கு நடந்தபடியே போனில்,"விஜி! வீட்டைவிட்டு புறப்படறப்பவே சொன்னேன் இல்ல, இன்னிக்கு முக்கியமான மீட்டிங்னு? இன்னும் பத்து நிமிஷத்துல நான் அதுக்குத் தயாராகணும்..இப்பொ எதுக்கு போன் செய்றெ? என்கிறேன் கொஞ்சம் கோபத்துடனே.

 ஏற்கனவே காலை ஆபீசிற்குப் புறப்பட காரை எடுத்து வெளியே வந்தபோது, சாலையில்  ஃப்ளாட்டின் எதிர் மரத்தடியிலிருந்து அந்த தொழுநோயாளி ஓடிவந்துகார் கதவின் ஜன்னல் அருகே வந்து  என்னிடம் பிச்சைக்குக் கை ஏந்தியபோது 'போபோ'என்று சீறிவிழுந்ததின் தாக்கம் இன்னமும் முற்றிலுமாய் மறையவில்லை.  அசிங்கம் பிடித்த அந்த தொழுநோய்க்காரனைப்பார்க்கவே பிடிக்கவில்லை.எனக்கு எல்லாமே  என்னைப்போல் சுத்தமாய் அழகாய் இருக்கவேண்டும்.

எதிர்முனையில் அழகி- என்மனைவி- பேச ஆரம்பிக்கிறாள்.

"தெரியுங்க .ஆனாலும் முக்கியமான விஷயம் சொல்லத்தான் கூப்ட்டேன்.. உங்கப்பா ஊர்லேந்து கொஞ்சநேரம் முன்னாடி வந்துட்டாரு.."

"அதான் அன்னிக்கே போன்ல சொல்லி இருந்தாரே ' மகேஷ் பிறந்த நாளுக்கு சென்னைக்கு முதநாளே வந்துடறேன்'ன்னு?'..இத சொல்லவா போனு?"


"ஐயோ..அவர்மட்டும்வரலேங்க கூடவே அந்தபொம்பளயும் வந்திருக்காங்க"


விஜி இப்படிச்சொன்னதும்"வ்வாட்?" என்கிறேன் எரிச்சலாய். உடனேயே விஜி குறிப்பிட்ட அந்தப்பெண்ணின்முகம் கண்முன் வந்து நிற்கிறது. அந்த தீய்ந்துபோனகன்னங்களும் மோவாயும் , எரியும் நெருப்பில் உருக்குலையும் ப்ளாஸ்டிக் தாளாய் கழுத்தும் ,சிதிலமானநெற்றியும் ....ய்யக்...நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது.


அவளைப் போய் எதுக்கு கிராமத்திலிருந்து இழுத்திட்டுவந்திருக்கிறார் அப்பா?

போனமாதம் கிராமத்துக்கு வாரவிடுமுறைக்கு நான் மட்டும்  சிலமணிநேரங்கள் தங்கிவருவதற்காக போனபோது அவளை வீட்டுவாசலில் திண்ணையில் பார்த்தேன். .குமட்டிக்கொண்டு வந்தது.

"யாருப்பா அவங்க கோரமா, பாக்கவே அருவெறுப்பா இருக்கு?"

"வேண்டப்பட்டவங்கதான் ரவி"

அப்பா அண்மையில் ஓய்வுபெற்ற பள்ளி வாத்தியார் .அதிகம் பேசமாட்டார் அதுவும் நாலுவருஷம்முன்பு அம்மா போனதிலிருந்து பேச்சையே குறைத்துவிட்டார். அப்பா பார்க்கவும் அழகாயிருப்பார். பலர் என் அண்ணன் என்று நினைத்துக்கொண்டு அப்பாவிடம் பேச ஆரம்பிப்பார்கள்! நேர்மை நாணயம்  அன்பு  இரக்கம்  போன்ற குணங்களால் ஒரு மனிதனின் முகம் பொலிவாக இருக்கும் என்றால் அதற்கு என் அப்பாவையும்  உதாரணமாய் சொல்லலாம்!என்னோடு சென்னைக்குவந்து தங்கச்சொல்லி பலமுறை கெஞ்சிப் பார்த்துவிட்டேன்.

"வீடு நிலம் இருக்குதேப்பா..எல்லாத்தியும் கவனிச்சிட்டு நான் உடம்புக்கு முடியறவரைக்கும் இங்கயே இருக்கேன்,, ஏதும் விசேஷம்னா உன் இடத்துக்கு அவசியம் வரேனே?'என்றார் .

வற்புறுத்த முடியவில்லை .அப்பாவின் முடிவுகளில் அர்த்தம் இருக்கும்.

அதனாலே அப்பாவிடம் அந்தப் பெண்மணிபற்றி அதிகம் கேட்கவும்தயக்கம்.

ஆனால் போனவாரம் கிராமத்திலிருந்து என்னைப்பார்க்க வந்த என் பள்ளி நண்பன் ப்ரகாஷுடன் பேசும்போது தெரிந்தது அந்தப்பெண்மணி இன்னமும் அப்பாவோடுதான் இருக்கிறாள் என்பது.

விஜி கூட கிண்டலாய் ,"உங்கப்பாவோட அந்த நாள் கேர்ல் ஃப்ரண்டோ என்னவோ ?வயசு காலத்துல அந்தம்மா அதிரூப சுந்தரியா இருந்திருக்கலாம்... இப்பொ பழய நெனப்புல இழைய வந்திட்டாங்க போல இருக்கு...ஆனாலும் அறுபதுவயச நெருங்குற உங்கப்பாக்கு புத்தி இப்டிபோகவேணாம் ?" என்றாள்.

விஜி சொல்வது நிஜம்தானோ?

"சரி, நீ போனை வை..நான் வீட்டுக்கு வந்து அப்பா கிட்ட பேசிக்கறேன்"

மதியம் லீவுபோட்டுவிட்டு   அதிரடியாய் வீட்டிற்குவருகிறேன்.

அழைப்புமணியை அடித்தேன் கதவுதிறந்தது கதவுக்குபின்னால் ....

அந்த கோரமுகம் கண்டு எரிச்சலுடன்முறைக்கிறேன்.

"விஜ்ஜீஈஇ எங்க தொலைஞ்சே?" எட்டூருக்குக் கேட்கிற மாதிரி கத்துகிறேன்.

"என்னங்க ?"என்று விஜி ஓடிவருகிறாள்.

"குழந்தயக் குளிப்பாட்டிகிட்டு இருந்தேன் ..காலிங்பெல் சத்தமே கேக்கல எனக்கு... உங்கப்பா ரூம்ல தூங்கறார் போல்ருக்குது...?"

நான் எரிச்சலுடன் அப்பா படுத்திருந்த அறைக்குள் நுழைகிறேன்.

சின்னதாய் குறட்டைவிட்டபடி தூங்கிக் கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி," என்னப்பா இதெல்லாம் தேவையா உங்களுக்கு?" என்று கடுப்புடன் கேட்கிறேன்.

அப்பா இடுப்பு வேஷ்டியை இறுகக் கட்டியபடியே எழுந்து உட்கார்ந்தவர்,

"அடடே ரவி வந்திட்டியாப்பா ?சாயந்திரம்தான் நீ வருவேன்னு விஜி சொன்னா..சரி ,குட்டிதூக்கம் போடலாம்னு படுத்தென் .நாளைக்கு உன்பையன் பிறந்தநாளுக்கு நான் ஃப்ரெஷா சுறுசுறுப்பாத்தெரியணுமில்ல?" என்கிறார் புன்னகைத்தபடி.

"ஆ! ரொம்பவே சுறுசுறுப்பாத்தான் தெரியறீங்க !வாலிபம் திரும்புதில்ல உங்களுக்கு? ஏன்ப்பா, தெரியாமத்தான் கேக்கறேன் அந்த பொம்ளைய எதுக்கு இங்கயும் கூட்டிவந்தீங்க? இதெல்லாம் ஸோஃபிஸ்டிகேட்டட் ஃப்ளாட்ஸ்.ரொம்ப டீசண்ட்டான ஜனங்க வசிக்கறஇடம் .இங்க  அந்த தீஞ்சிபோன அசிங்க முகத்துக்காரப் பொம்பளை எதுக்கு வந்திருக்கா?”

"ரவி..அவங்க வரேன்னு சொல்லலப்பா...நாந்தான் அழைச்சிட்டுவந்தேன்.."

"விலைகொடுத்து வாங்கற பொருளோட சில நேரங்களில் ஒட்டிக்கிட்டு வருமே ஒண்ணு , அதுமாதிரி இலவச இணைப்பா? இலவச இணைப்பெல்லாம் எனக்குத்தேவைஇல்லை.”

"ரவி! விலை மதிப்பில்லாத பொருள் கூட ஒட்டிக்கிட்டு வந்திருக்கிற இலவச இணைப்பு நாந்தான்ப்பா”

”என்ன உளற்றீங்க ?"


"ரவி... சொல்லாம இனியும் மறைக்கமுடியாது. சில தர்மங்களை நிலை நிறுத்தணும்னா கொடுத்த வாக்கைக் காப்பாத்த முடியாம போகக்கூடும்னு சொல்வாங்க..இப்போ அது நிஜம்னு நிரூபணமாகுது..ஆமாம்ப்பா... முப்பதுவருஷம்முன்னாடி உங்கம்மா பிரசவத்துல வயித்துலேயே இறந்துபோன குழந்தையைத்தான் பெத்தெடுத்தா..

இனிமேகுழந்தை பிறக்க வாய்ப்பில்லைனு டாக்டர்சொல்லிய அந்த நேரத்துல உங்கம்மாவோட சிநேகிதி கமலா ,'என் புருஷன் மூணுமாசம் முன்னாடி ,குழந்தைவயத்துல இருக்கறப்போவே செத்துட்டாரு.நானும் அனாதை உறவுன்னு யாருமில்ல.. இப்போ உன் குழந்தையை நீ இழந்த சமயத்தில எனக்கும் குழந்தை பொறந்திருக்கு இது இனி உன்குழந்தையா வளரட்டும்..நான் அம்மான்னு சொந்தம் கொண்டமாட்டேன்..நீங்க ரண்டு பேரும் தான் குழந்தைக்கு அப்பா-அம்மா.இதை  நாம் எல்லாருமே சத்திய வாக்கா  நினைச்சிக்கணும் ".ன்னு சொல்லி எங்க கைல உன்னைக் கொடுத்தா...பாலூட்டி உன்னை வளர்க்க கூடவே இருந்தா...

 ஒன்றரைவயசு குழந்தையா இருக்கறப்போ கார்த்திகை தீபம் அன்னிக்கு விளக்குல விளையாட்டா நீ ஏதோ செய்யப் போக  உன்னைக் காப்பாத்த செய்தமுயற்சில கமலாவோடநைலக்ஸ் சேலைல நெருப்பு பிடிச்சி வேகமா பரவி தலையிலிருந்து பாதம் வரைக்கும் உடம்புதோல், தீக்கு இரையாயிடிச்சி. அவங்க உயிரைத்தான் எங்களால காப்பாத்தமுடிஞ்சிது. ஆனா ஆஸ்பித்திரிலிருந்து திரும்ப வீடுவராமல் எங்ககிட்ட எதுவுமே சொல்லாம,எங்கயோ போனவளை போனவாரம் திருச்செந்தூர்ல கோயில் வாசல்ல பிச்சை எடுத்துட்டு நிற்கிறபோது பாத்தேன்.”மன்னிச்சிடுங்க அண்ணா...இந்தமுகத்தோட உங்கவீட்ல இருக்கக்கூடாது குழந்தை பயப்படுவான்னுதான் சொல்லாம ஓடிப்போனேன்”ன்னா...வற்புறுத்தி கிராமத்துவீட்டுக்குஅழைச்சிட்டு்ப்போனேன்.’உன் பேரனுக்குப்பிறந்தநாள்வரப்போகுதும்மா.. பேரனை ஒருவாட்டிப் பாத்துட்டுப்போ'ன்னுசொன்னேன் தயங்கித்தான் கமலாவும்-அதாவது-உன் அம்மாவும்  வந்திருக்கா இங்க.."

அப்பா நீண்ட நேரம் பேசிய களைப்பில் பெருமூச்சு விடுகிறார். விஜி திகைப்புடன் என்னையே பார்க்கிறாள்.நான் வேதனையுடன்," என்..   என்னைப்பெத்த  தா... தாயா அவங்க? ஐயோ கடவுளே!" என்று கதறி நிமிர்ந்தபோது  அந்த அறையின் நடுசுவரில் அலங்காரத்திற்காக மாட்டப்படிருந்த அழகிய நிலைக் கண்ணாடி. புறம் காட்டியதாய் தெரியவில்லை. என அகத்தின் அழுக்கை  தான் பிரதிபலிக்கிறது..

பரிதவிப்புடன் ஹாலிற்கு ஓடிவருகிறேன், அங்கே என் அம்மா இல்லை.வீட்டில் எங்குமே இல்லை.

வெளியே சாலைக்கு வேகமாய் வந்த என்னைப் பார்த்ததும், எதிரே மரத்தடியில் உட்கார்ந்திருந்த அந்த தொழு நோயாளி பயத்துடன்   வேறுபக்கமாய் நகர்கிறான்.

நான் , அவனைத் தொடர்கிறேன்.

****************************************************************









மேலும் படிக்க... "அகமும் புறமும்."

Friday, November 18, 2011

குலம் தரும்!




விளையாட்டுப்போல ஆறுவருடங்கள்.! இரண்டாயிரம் நாட்கள்.!காலக்கணக்கை விட்டுத்தள்ளுங்கள் ஒரு மாபெரும் கனவல்லவா நனவாகி விட்டிருக்கிறது?

மணவாளனுக்கு அந்தக் கோபுரத்தை பார்க்கிறபோது அதன் நீள அகல பௌதீகப் பரிமணங்களை எல்லாம் தாண்டி மஹாபலிக்கு முன்னாலே திருவிக்ரமனாக நெடிதுயர்ந்து நின்ற நெடுமாலே நினைவுக்கு வந்தார். இருநூற்று முப்பத்தாறடி உயரத்தில் பதிமூன்றடுக்கு கோபுரம்! ஊரில் உள்ள 21 கோபுரங்களுள் இதன் சிகரப்பகுதி மட்டும் மொட்டையாக நின்றது.. இன்று ராஜகோபுரமாய் விண்ணைத் தொட்டு நிற்கிறது!

ஒரு சின்னதிலிருந்து ஒரு பெருசு. விதைக்குள்ளிருந்து விகசித்துக் கொண்டு விருட்சம் வெளிப்படுகிறதே அதுபோல்!

மனிதனுக்கு லட்சியம் என்று ஒன்று இருக்கணும் அந்த லட்சியம்-இலக்கு- உன்னதமாக இருக்க வேண்டும் இருந்துவிட்டால் அது நிறைவேறியே தீரும் அதற்கு சாட்சி இந்தக் கோபுரம் மணவாளன் பெருமூச்சு விடுகிறான். அவனுக்குக்கூட ஓர் ஆசை,ஒருகனவு ,ஒரு லட்சியம் இருக்கிறது ரொம்பக் காலமாக இருக்கிறது அதை வாய்விட்டு யாரிடமும் அவனால் சொல்ல இயலவில்லை சொல்லி என்ன பயன்? ஏழை கனவு காணக்க்கூடாது அவனுக்கு அந்த உரிமை இல்லை அவன் அப்பாகாலத்தில் குடும்பம் ரொம்ப செழிப்பாகத்தான் இருந்தது அந்தப் பரம்பரையில்வந்த தோஷம்-ஒருவேளை-அதுவே வியாதியாகப்போயிற்றோ?

மணவாளனுக்கு இன்னமும் எட்டுக்கல் விட்டெறிகிற நினைப்பு.

"மணவாளா! கோபுரத்திருப்பணிக்கு ஒரு சீட்டு வாங்கிக்கிறியா? "கேட்டவர் இளையாழ்வார்

தபாலாபிசில் வேலை பார்த்து சமீபத்தில் ரிடையர் ஆனவர் எந்த நேரமும் அவர் கையில் நன்கொடை ரசீதுடன் ஊரில் வளைய கொண்டிருந்தார்.

"வாங்கணும் சாமி கட்டாயம் வாங்கணும்" என்றான் மணவாளன்.
"பத்துருவா தான் ஒருசீட்டு கிழிக்கட்டுமா?'

"இப்பொ வேண்டாம் சாமி கையிலே பணமில்லை,,ஒரு சீட்டு என்ன சாமி நூறு சீட்டு வாங்கறதா நேர்ந்துட்டு இருக்கேன்"


இளையாழ்வார் தபாலாபீசில் சேமிப்புக்கணக்கு இன்ஷ¥ரன்ஸ் எல்லாம் வரவு செலவு செய்பவர் அவர் மனசு கணக்கு போட்டது ஓராயிரம் ரூபாயாவது இவன் இந்த ஜன்மத்தில் சேர்க்கிறதாவது?அப்பன் பாட்டன் காலத்திலே வகையாய் வாழ்ந்துடாங்க இல்ல அந்த நினைப்பு விடல்ல... பாவம் மணவாளன்..

அவர் வேறு ஆள் பார்க்க நகர்ந்துவிட்டார்.

அன்னிக்கு சொல்லியாயிற்று இளையாழ்வாரிடம் ..ஏண்டா அப்படிச் சொன்னோம் என்று மணவாளனுக்குத்தோன்றவே இல்லை ஆயிரம் ரூபாய் என்பது பெரிய தொகையா?பெரிய பெருமாள் மனசு வச்சா தாயார் கடைக்கண் பார்த்தா ஆயிரம் என்ன லட்சம் கூட தீயினில் தூசாகும்!
திருமங்கை மன்னர் ஒருராத்திரியிலெயே மதில் கட்டினாராம
அம்மாடியோவ்! அவங்க எல்லாம் மனுஷங்க இல்ல...தெய்வம்!

மணவாளன் பெருமூச்சு விடுகிறான்

"அப்போவ்"

கனவு கலைகிறது

எதிரே மகள், பெயர் நப்பின்னை இதுலே எல்லாம் குறைச்சல் இல்லை

வாய்த்தபெண்டாடியின் பெயர் நாச்சியார் மகன் நம்பி-தாத்தாவின் பேர் கடைகுட்டி வகுளாபரணன்.

இந்த நம்பிப்பயல் ஸ்டேட் ·ப்ஸ்ட் வருவாவானென்று மணவாளன் கனவு கண்டான் கடைசியில் என்னவென்ரால் அவன் நம்பரே பேப்பரில் வரவில்லை ஒருதடவை இரண்டுதடவை உஹும் அவன் நம்பர் வரவே இல்லை.

கடைசியில் நம்பி டூரிஸ்ட் பஸ் ஏதும் வராதா யாராவது வடநாட்டுக்காரன் அதிர்ஷ்டவசமாய் வெளினாட்டு ஆசாமி கிடைக்க மாட்டானாஎன்று அலைகிற டூரிஸ்ட் கைடாகப் போய்விட்டான்

தானாகக் கைவந்த கலை-கேட்டுக்கேட்டுப் பழகிய பழம் பெருமைகளை புது மெருகுடன் உடைசல் ஆங்கிலம் தெலுங்கு இந்தியுடன் சமயத்திற்குத்தக்கவாறு எடுத்துச் சொல்லி ஒருநாளில் அதிக பட்சம் முப்பதுரூபாய் சமபாதித்து காலத்தை கழித்துவருகிறான்


"அப்போவ்' மறுபடி கூவினாள் நப்பின்னை

"என்னம்மா?'

"ஸ்கூல் ·பீஸ் கட்டணும் நாலைக்கு கட்டாட்டி பேரை அடிச்சிருவாங்களாம்.."

மணவாளன் அவளை நிமிர்ந்து பார்த்தான்



நப்பின்னையின் கண்கள் அழகாய்ப் பெரிதாய் காதளவு நீண்ட கண்கள்-அவனைப்போலவே அவளும் கனவு காண்கிறாள் என்பதை நினைவூட்டின
"நாளைக்குத்தானேகட்டணும் கட்டிட்டாப் போச்சு?"

"போங்கப்பா! நீங்க இப்படித்தான் சொல்வீங்க ஆனா முடியலன்னு கடேசில கட்டமாட்டிங்க" சிணுங்கியபடியே அவள் நகர்ந்தாள்

இந்தப்பெண்கூட என்னை எவ்வளவு நன்றாக எடை போட்டு வைத்திருக்கிறது?

நம்பி அவசரவசரமாக வந்தான்
"அப்பா இருபது ரூபா குறையுது,,, உங்கிட்ட இருக்குமா?; என்று கேட்டான்

"என்னப்பா என்ன விஷயம்?"

நம்பி பதில் சொல்வ்சதற்குள்"நமஸ்காரண்டி" என்றபடியே ஒரு நடுத்தரவயது மனிதர் உள்ளே நுழைந்தார்

"பாவம்பா..ஆந்திராக்காரராம்..நம்ம ஊருக்கு வந்த இடத்துல இவர் பையை எவனோ திருடுட்டானாம். கோயில்ல மண்டபத்துல தவிச்சிடிருந்தாரு...யாரும் இவர லட்சியம் செய்யல.. நாந்தான் பாத்து விவரம் கேட்டேன்...என் கையிலே இருபது ரூபா இருக்குது நீங்க ஒரு இருபது ரூபா கொடுத்தா டிக்கட் வாங்கி சொந்தக்காரங்க ஊருக்கு- பக்கத்துலதானாம்- போயிட்றராம் ..ஊரு போயிச் சேர்ந்ததும் பணம் திருப்பிடுறேங்கறாரு.."



மணவாளன் பெருமூச்சு விட்டான்.

புலிக்குப்ப்பிறந்தது பூனையாகுமா?


என்னைப்போலவே நீயும் பைத்தியக்கரானாய் இருக்கியேடா? அவனவன் ஆளுகிடச்சா தேட்டை போட்றான் நீ என்னடான்னா கைக்காசை எடுத்து தானம் கொடுக்கிறேங்கறே.... வம்சாவளிடா எல்லாம் வம்சாவளி...


அப்பாவின் மௌனம் மகனுக்குப் புரிந்து போனது

கடைசியில் அந்த ஆந்திரவாடு இருபதுருபாயோடுதான் புறப்பட்டுப்போனார்

கும்பாபிஷேகத்துக்கு நாள்கூட வைத்துவிட்டர்கள் இப்போது மணவாளன் அந்த ஆயிரம் ரூபாயை கோபுரத்திருப்பணிக்குச் செலுத்திவிட பரபரக்க ஆரம்பித்தான்.

திண்ணையில் படுத்தபடியே ஆகாயத்தைப் பார்த்தவனுக்கு ஒருவழியும் புலப்படவில்லை. இந்தத்திருப்பணிக்கு எங்க வம்சத்துக் காணிக்கை எப்படியாவது போய்ச்சேரணும் பணம் செலுத்தறதா நேர்ந்துட்டிருக்கக்க்கூடாது அப்படி நேர்ந்துக்கிட்ட பிறகு அதை செலுத்தாம இருந்தா அது பேரன் பேத்திகாலம் வரைக்கும் தொடர்ந்துகிட்டு இருக்குமாம்.



அழகியமணவாளா! நம்பெருமாளே! உன் திரு உள்ளம் என்னவோ?


'குலம் தரும் செல்வம் தரும்

அடியார்படுதுயராயினவெல்லாம்..'

வாய் பாசுரம் முணுமுணுத்தபடி இருக்க கண் மூட ஆரம்பித்தது ஆனால் இனந்தெரியாத துயரம் ஒன்று

பெருமூச்சாய் வெளிப்பட்டு அதுவே மெல்ல மெல்ல விம்மலாகி உள்ளேயே அமிழ்ந்து நெஞ்சை அடைக்க ஆரம்பித்துப் பிறகு தூக்கத்தில் கொண்டு விட்டது.

எத்தனை நேரமாயிற்றோ திடீரெனத் தன்னை யாரோ வந்து உலுக்கவும் விழித்தான்


"ஏய் என்ன தூக்கம் இன்னமும்?'

குரல் மிக அருகாமையி;ல் அவனைக்கிட்டத்தட்ட அணைத்துக் கொண்டு ரொம்பவும் அந்நியோன்னியமாய் அதட்டியது மனவாளன் அந்தகுரலைத் துழாவிப்பார்த்தான் எங்கோ கேட்ட குரல்! ஆத்மாவை ஊடுருவும்குரல் !அந்தக்குரலுக்குள் பழமை நெடி வீசிற்று.

"ஏய் என்னைதெரியல....மணவாளா என்னடா,என்ன முழிக்றே?'

மணவாளன் எழுந்து உட்கார்ந்தான் இப்போது அவனுக்குத்தெரிந்து போயிற்று

"நீ நீ ...குல சேகரன் இல்ல?"என்ற்வன் சட்டென குதூகலமாகிப்போனவனாய் மனைவியை அழைத்து," ஏய் நாச்சி இங்க வாயேன் இது யார் தெரியுமில்ல,,, குலசேகரன் முழுப்பேரு குலேசுதான் நான் கூப்டுவேன்... நாச்சி !நானும் இவனும் அந்தநாளில் அடிச்சிருக்குற கொட்டம் கணக்கு வழக்கில்ல .."என்றான்

மறுபடி குலேசைப்பார்த்து," குலேசு பம்பாய்க்கில்ல போனே? எப்படி இருக்கே புள்ளை குட்டிங்க சுகமா?" என்று கேட்டான்


" எல்லாரும் நலம்...மணவாளா!உன்னை இவ்ளவு நாள் கழிச்சிப்பார்க்கிறபோது எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா? நம்ம ஊரே மாறிப்போயிருக்குடா இப்போ... ஆனா நீமட்டும் மாறவே இல்ல"


மணவாளன் மெல்லச் சிரித்தான்

"சரி கிளம்பு ?"என்றான் குலசேகரன்

"எங்கே?"

"முதலிலே கொள்ளிடத்திலே குளிக்கணும்.. எம்பெருமான் சேவை பண்ணீக்கணும் அப்புறமா கோபுரத்திருப்பணிக்காக ஒரு சின்னத்தொகை கொண்டுவந்திருக்கேன் அதை செலுத்திடணும் அவ்வளவுதான் மணவாளா"

"ஓ!புறப்படலாமே? நாச்சி! மதியத்துக்கு சாப்பாடு தயார் செய்துவை." என்றவன் ஏதோ நினைவு வந்தவனாய் உட்புறம் சென்று சமையற்கட்டில் மனைவியிடம் "வராதவன் வந்திருக்கான், ஒருபாயசம் படைச்சாதான் மரியாதை.." என்று நெளிந்தான்.

நாச்சியாரம்மாள் தலையை அசைத்தாள். ஆனல் அவள் எப்படி பாயசம் வைப்பாள் என்பது மணவாளனுக்குப் புரியாத புதிராக இருந்தது பிள்ளையாண்டானோ கிடைத்த இருபதை அந்த ஆந்திரக்காரனுக்கு தானம் வார்த்து விட்டான், தானும் பைசா காசு கொடுக்கவில்லை
செப்படிவித்தை செய்தாலே ஒழிய அடுப்பில் பால் பொங்கவே வழி இல்லை ஆயினும் நாச்சியார் தலை அசைத்ததிலிருந்து ஒருபாரம் நீங்கிய நிம்மதி நண்பர்கள் கொள்ளிடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள்

வழிநெடுக பழைய கதையெல்லாம் குலசேகரன் விவரித்தான்.

பம்பாயில் சொந்தவீடு ஒரு கார் மகன் அமெரிக்காவில் படிக்கிறானாம்...

கேட்கக்கேட்க மணவாளனுக்குப் பெருமையாக இருந்தது.

ஒருகாலத்தில் கோபுரமாயிருந்த தன்னுடைய வம்சம், குப்பை மேடாகிவிட்டதையும் ஒருகாலத்தில், குப்பைமேடாயிருந்த் குலசேகரனின் வம்சம் இப்போது கோபுரமாகி விட்டதையும் எண்ணிப்பார்க்கிறபோது அந்த வியப்பு பெரிய வினாக் குறீயாக மாறிற்று.

"மணவாளா! ஒரு பத்தாயிரம் ரூபா கோபுரத் திருப்பணிக்குக் கொடுக்கலாம்னு இருக்கேன் ஆனாலும் பாருடா எனக்கு உன்னைப் பார்த்தா பெருமையாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் கூட இருக்கு. என்னால தரமுடிஞ்சதெல்லாம் வெறும் பத்தாயிரம் ரூபாய்தான் ..ஆனா நீ, உன் உழைப்பை ரத்தத்தை வேர்வையை மூச்சை என்று எல்லாத்தியும் ஆத்மார்த்தமாய் பெருமாளுக்குச் செலுத்தி இருக்கியேடா!நானெல்லாம் காசுபணம் என்று ஊரைத் துறந்து போனவன் ஆனால் நீ அப்படி இல்லடா....பொறந்தமண்ணை மதிச்சி அதுக்கு உயிரைக்கொடுக்க வாழ்ந்திட்டு இருக்கிறவன்.”

மணவாளனுக்கு இந்தப்பேச்சு சற்று சமாதானமாக இருந்தாலும் நேர்ந்துகிட்டதை தன்னால் நிறைவேற்றமுடியாது என்பதால் ஏற்பட்ட ஏக்கம் பெருமூச்சாக வெளிப்பட்டது.

 "மணவாளா !என்னால இந்தப் பத்தாயிரம் ரூபா இப்போ கொடுக்கமுடியுதுன்னா அதுக்கு யார் காரணம் தெரியுமா?" தொடர்ந்து  வினவினான் குலசேகரன்

மணவாளன் விழித்தான்

"நீதான் காரணம், உங்ககுடும்பம் காரணம் ! நீங்க ஏத்தி வச்ச விளக்கு கார்த்திகை தீபமாய் எரியுதுடா.."

"குலேசு, நீ என்ன சொல்றே?"

"ஏண்டா? மறந்திட்டியா? அப்போ நான் பம்பாய் போகிறபோது உங்கப்பா என்னை ஆசிர்வாதம் செய்து பணம் கொடுத்தாரே,ஞாபகமில்லயா உனக்கு?"

"அப்படியா? இருக்கலாம்... அவர் காலத்தில் செயலாய் இருந்தாரு கொடுத்தாரு.."


"அந்தப்பணத்தில் தாண்டா என் வாழ்க்கையே உன்னதமான நிலைக்கு வந்தது..அட..பணத்தைவிட்டுத்தள்ளு.. உங்கப்பாவிடம் பெற்ற ஆசிர்வாதம் தான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டுவிட்டிருக்குதடா.... மணவாளா..உங்க குடும்பத்துக்குப்பட்ட கடனை எப்படி அடைக்கபோறேனோ தெரியல... பெரியவர்களுக்குச் செய்தால் அதுவே பெருமாளுக்குச் செய்தமாதிரி என்பார்கள். உங்கப்பா பெரியவர் உயர்ந்தவர் அவரோட குடும்பத்துக்குப் பட்ட கடனை இப்போ நான் செலுத்தபோறேன்.. என்னால தரமுடிஞ்சது பணம்தான் அதை உன்னிடம் தருகிறேன் நீ அதை உன் அப்பா பெயரில் கோபுரத்திருப்பணிக்கு செலுத்துவியாடா?"


மணவாளனுக்கு கண்களில் நீர் சுரந்தது.

அவனுடைய தெய்வம் தனது கோபுரத் திருப்பணிக்கு அவன் நேர்ந்து கொண்டதை எவ்வளவு அழகாய் கணக்காய் வசூல் செய்து கொள்ளத் திட்டமிட்டுவிட்டது?
எதிரே குலசேகரன், கோபுரமாய், தன்னுடைய கனவின் நனவாய், ஆதர்சமாய் நிற்கக் கண்டான்.
***************************************************************************************************************


(கல்கியில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் சிறப்புமலரில் பிரசுரமான  (நான் எழுதிய கதைகளில் கொஞ்சம் எனக்கேப்பிடித்த கதை)இது!

மேலும் படிக்க... "குலம் தரும்!"

Monday, November 14, 2011

மழலை உலகம் மகத்தானது!(தொடர் பதிவு)

'ரோஜாவின் ராஜா’

 ஆசிய ஜோதி !

டிஸ்கவரிஆஃப் இந்தியாஎழுதிய எழுத்தாளர்

மகத்தானபணிகள் செய்திட்ட மனிதருள்மாணிக்கம்

குழந்தைகளால் மாமா என்றழைக்கப்பட்ட மாமணி!


பஞ்சசீலக்கொள்கையை உருவாக்கிய சாணக்கியர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் இன்று.தன்பிறந்த நாளைக்குழந்தைகள் தினமாய் தாய்நாடு கொண்டாடவேண்டும் என்றவரைப்பற்றி  இன்று எத்தனை குழந்தைகளுக்குத்தெரியும்?  திரை நடிகநடிகைகளைத் தெரிந்துகொள்கிற ஆவல் நாட்டின் சுதந்திரவரலாற்றில் இடம்பெற்ற பலதலைவர்களைப்பற்றி அறிந்துகொள்ளமுடியாமல் அவர்களை திசை திருப்புவது எது?

விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவில் நன்மைகள் பல என்றால் தீமைகளும் சில இருக்கத்தான் செய்கின்றன.

அவைகளில் முதலிடம் பெறுவது தொலைக்காட்சிப்பெட்டிதான். அமெரிக்காவில் எடுத்தகுறிப்பு் ஒன்றின்படி ஒரு குழந்தை ஒவ்வொருவாரமும் சராசரியாக 1680 நிமிடங்கள் தொலைக்காட்சியை பார்ப்பதில் செலவழிக்கிறது. ஆனால் தன்பெற்றோருடன் பயனுள்ள விஷயங்களைப் பேச வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே செலவிடுவதாக  இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஆண்டொன்றுக்கு 900 மணி நேரத்தை சிறுவர்கள் பள்ளிகளில் கழிக்கின்றனர். ஆனால் அவர்கள் 1023 மணி நேரங்கள் தொலைக்காட்சி முன்பு செலவிடுகின்றனர். உயர்நிலைப்பள்ளியை முடிக்கும் முன்பு 19 ஆயிரம் மணி நேரத்தை அவர்கள் தொலைக்காட்சி முன்பு செலவிடுவதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

18 வயதை அடைவதற்குள் ஒரு சிறுவன் தொலைக்காட்சி வழியாக இரண்டு இலட்சம் வன்முறைக் காட்சிகள் பார்த்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக ஒரு குழந்தை 11 வயதை அடைவதற்குள் 8,000 கொலைகளையும் 10,000 வன்முறைகளையும் தொலைக்காட்சி வழியே பார்க்க நேரிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் 36,000 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி வன்முறையை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும், செயலில் இறங்குவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.




தொலைக்காட்சியை பார்க்கும் சிறுவர்கள் தாங்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சியையும் தமது ஆழ் மனதில் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்றும் இதனடிப்படையில் அவர்கள் செயல்களில் இறங்குவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிஜத்திற்கும், நிழலுக்கும் இடையே எவ்வித வேறுபாட்டையும் இவர்களால் காணமுடிவதில்லை என்றும், தொலைக்காட்சி ஏற்படுத்திய பாதிப்புகளால் வாழ்க்கை பயங்கரமானதாகவும் இருள் சூழ்ந்ததாகவும், கவலைக்குரியதாகவும் ஆகிவிடுவதாக பெருவாரியான குழந்தைகள் கருதுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.





பெரியவர்கள் சண்டை போட்டுக் கொள்வதையும், மனமுடைந்து கண்ணீர் விடுதல்,  சண்டைக்காட்சிகள், கொலை, கொள்ளை, காதல், வன்முறைகள் போன்றவற்றை குழந்தைகள் தொலைக்காட்சிகளில் காண்கிறார்கள்.  இது பிஞ்சுமனங்களின் நெஞ்சில் நஞ்சாய்ப்பரவுகிறது இவை கற்பனை என்று பெரியவர்களுக்குத்தெரியும் அந்தக்குழந்தைகளுக்கு என்ன தெரியும்? அவர்களின் கள்ளம் கபடம் இல்லா மனத்தினை  அசைக்கிறது இந்த காட்சிகள்.

கம்ப்யூட்டரில் வரவர குழந்தைகள் அதிகம் நேரம் செலவழிக்கிறார்கள் ஃபேஸ்புக் ட்விட்டர் எல்லாம் சர்வசகஜமாகிவிட்டது.

ஒருவயதுக்குழநதை உணவுசாப்பிட  நிலவும் வானும் நினைத்தால் ஐபோனில் கிடைக்கின்றன. உலகத்தைதேடிக்குழந்தைகளைக்கூட்டிபோய் அந்தப்பயணத்தின் இனிமையை அனுபவிக்க வைத்தகாலம்போய் உலகமே குழந்தையின் கையில் வந்துவிட்ட விஞ்ஞானமுன்னேற்றத்தின் விளைவு இது.


காலம் மாறிவிட்டது ஆண்களோடு பெண்களும் வேலைக்குப்போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது குழந்தைகளுடன்  இயந்திரங்கள் அதிகம் பேசுகின்றன.அதனை வாங்கி வீட்டில்வைப்பது நாம்தான் ..ஆனால் டிவி கம்ப்யூட்டர் செல்போன் இல்லாமல் இருக்கமுடியாத காலமாக இருப்பதால் அவைகளை அளவோடு உபயோகிக்க குழந்தைகளை பழக்கவேண்டும். ஏற்கனவே கூட்டுக்குடும்ப மறந்துபோய் உறவு எல்லை சுருங்கிவிட்ட நிலையில் இயந்திரங்களின் ஆதிக்கம் குழந்தைகளை மிகவும்  பாதிக்கிறது. இதனால் மழலைகளின் எதிர்காலத்தில் மானிட மாண்பே அவர்களுக்குதெரியாமல் வாழ்க்கை முற்றிலும் இயந்திரத்தனமாகப்போகும் அபாயம் ஏற்படலாம்.அதைதவிர்க்க குழந்தைகளுடன் நாம் நேரம் செலவழிக்கவேண்டும். அவர்களுடன் மனம்விட்டுப்பேசவேண்டும்.  விளையும் பயிரான குழநதைகளின் வேர்கள் நாம்தான் வேரிலே பழுதை வைத்துக்கொண்டு  விழுதுகளைகுறை சொல்லிப்பயனில்லை.

குழந்தைகளின் மைனஸ்பாயிண்டுகளைமட்டும் ஏன் சொல்லவேண்டும்? இத்தனை திசை திருப்பும் சாதனங்கள்  இருக்கும்போதிலும் பலர் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்பதையும் மறுக்ககூடாது.

சிலவருடங்கள்முன்பு கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கரசுப்ரமண்யம் அவர்களுடன் ஒரு சிறுவர் நிகழ்ச்சிக்கு சென்றென் நிகழ்ச்சிமுடிவில் கீழாம்பூர் அங்கிருந்த அந்த பத்துவயது சிறுவர்கள் சிலரிடம்  இப்படிக் கேட்டார்.

“இவ்வளவு சினிமாபாட்டெல்லாம் பாடுகிறீர்கள் அதற்குஅபிநயித்து  நன்றாக ஆடுகிறீர்களே
உங்களில் யாருக்காவது நம் நாட்டு  தேசியகீதத்தை முழுக்க பாடத்தெரியுமா அப்படிப் பாடினால் உடனே மேடைக்கு வந்து என் கையால் நூறுரூபாய் தருவேனே?”

பல குழந்தைகள் இரண்டே வரிகளுக்குப்பிறகு  விழித்துக்கொண்டு நன்றன. ஒரே ஒருசிறுவன் முழுவதையும் நன்றாக  கூறி முடிக்கவும் ஆசிரியர் அகமகிழ்ந்து  மேடையிலேயே  100ரூபாயை அவனிடம் கொடுத்துப் பாராட்டினார்.

விழாமுடிந்து நாங்கள் வெளியெ வந்தபோது அந்த சிறுவன கலைமகள் ஆசிரியரை நோக்கிஓடிவந்தான்.. “ரொம்பநன்றி சார் ,நான் தேசியகீதம்  பாடினதை பாராட்டினதுக்கு! தேசியகீதத்தை அறிந்திருக்கவேண்டியது்   ஒவ்வொரு இந்தியனின் கடமைன்னு என் அப்பா சொல்வார்.நான் கடமையைத்தான் செய்தேன்,.  அதற்கு   நீங்க தந்த  நூறுரூபாயை  பொது மேடையில்  வேண்டாம்னு சொல்லி மறுக்க தயக்கமாக இருந்தது. அது உங்களை அவமானப்படுத்தும்னு தோன்றியது. அதனால்  இங்கே வந்து கொடுக்கிறேன்..” என்று அந்த நூறு ருபாயை அவர்கையில்கொடுத்தான்.

குழந்தைகளிடமிருந்து பலநேரங்களில் நாம் உன்னதமான விஷயங்களை  தெரிந்து கொள்கிறோம் என்பதுதான் எவ்வளவு உண்மை?



அழைப்பு தந்து எழுதவைத்த  மின்னல்வரிகள் வலைப்பூவின் சொந்தக்காரர் கணேஷுக்கு
நன்றி கணேஷ் பதிவில் ஏதோ புதிர் போட்டு மின்னூல் பரிசு என்கிறார்..என்னன்னு போய்ப்பாருங்க!

அவர் சொல்லியபடி இது தொடர்பதிவு என்பதால் 2ஆண்பதிவர்கள் இரண்டு பெண் பதிவர்களை  அழைக்கிறேன். முடிவில் கவிதை ஒன்று எழுதலாமே! முடிந்தால் புதிர்க்கேள்வியையும்  எழுப்பலாம் !!!  ஏற்கனவே 11-11-11க்கு  11 கேள்வி  நான் அனுப்பி பலரை டார்ச்சர் செய்தாகிவிட்டது ஆகவே  சின்னக்கவிதையோட முடிக்கிறேன்!


பொம்மைகளை பரப்பிவைத்து
விளையாடச் சொல்லிவிட்டு
நகர்ந்து செல்லும் தாயையே
பார்த்துக்கொண்டிருக்கிறது
குழந்தை!

இப்போது நான் அழைப்பவர்கள்...

ஆண்களில்..... ரசிகன்  மற்றும்
 ரமணி

பெண்களில்  அமைதிச்சாரல்  மற்றும்

சாகம்பரி

நன்றி நால்வருக்கும்  தாங்களும் இதேபோல பதிவு+ ஒரு கவிதை+ முடிந்தால் சின்ன புதிரோடு  முடித்து  நீங்கள்  தொட நினைக்கும் நால்வரை தொடர அழையுங்கள்! மழலைகள் உலகம்  பற்றிய  பரந்த சிந்தனையை பகிர்ந்துகொள்வோம்!
மேலும் படிக்க... "மழலை உலகம் மகத்தானது!(தொடர் பதிவு)"

Friday, November 11, 2011

11 பதிவர்கள் பற்றிய கிசுகிசு(இன்றைய ஸ்பெஷல்)!



இன்று மேலே குறிப்பிட்ட நேரத்துல என்னென்வோ சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கப்போகிறதாம்!.நம்ம பங்குக்கு சில பதிவர்களைப்பற்றி  இப்படி எழுத தோன்றியது கிசுகிசு என்று சும்மா தலைப்பு கொடுத்தால்தான்  ஒரு 11பேராவது உடனே ஆஜராவீங்கன்னு தெரியும்! ஆனா  நிஜத்துல இது அது இல்ல. பின்ன என்னதுன்னு கேக்கறீங்களா கீழே போங்க  இந்த அழகுப்பாப்பாவைப்பார்த்தபடி ! பாப்பாக்கு வயசு 11க்குக்கம்மிதான் ஆனா க்யூட்!


 சரி, எல்லா கேள்விக்கும் சரியா பதில் சொல்றவங்களுக்கு 11 மைசூர்பாக் வைத்த பார்சல் வரும்!



முன்குறிப்பு....... இதெல்லாம் பதிவர்பற்றிய கேள்விகள்.
கேள்விகளில் இலைமறைவுகாய்மறைவா க்ளூ கொடுக்கப்படும்!

கேள்விகள்  இங்கே! எல்லாரும் பரிட்சைக்கு ரெடியா?!

1.இடி மழையுடன் வருவதில் வரிகளை எழுதுவாராம் .. ஷ்.....சரியா யூகிக்கணும்,யார் இவர்?


2,நவரத்தினத்தில் ஒன்றை சரமாய்க்கோத்து பதிவில் போட்டிருப்பவர்!


3பேர்ல அம்பானால் என்ன பதிவுக(பாடல்)ளில் மலராய் வருடுவாரே!\.


4,திருமால்கோயில் தீர்த்தத்திலும் வாசம்,திருமேனியிலும் வாசம்!


5பதிவுலகினில் இவர்  வைகோ!.

6இவரது வலைப்பூ கண்டால் சொல்வீங்க ஐ லைக் இட் ’வெரி’ மச் என்று.


7சிவனின் வாகனம் பெயரிலும் வலைப்பூவிலும்!


8,அல்லிக்கு எதுகையாய் அழகுப்பேர்கொண்ட அன்பான (அண்மை) பெண்நட்சத்திரம்.


9,உலகே மாயம் இவருக்கு.



10கல்லிடைகற்கண்டு ரொம்பவே குறும்பு உம்மாச்சிதான் இவரக் காப்பாத்தணும்!



11கோவலனின் காதலியை பந்தலில் அழைச்சிருக்கிறார்!
******************************************************************

*(இன்று என் மகளின் பிறந்த நாளும்கூட!)









































மேலும் படிக்க... "11 பதிவர்கள் பற்றிய கிசுகிசு(இன்றைய ஸ்பெஷல்)!"

Wednesday, November 02, 2011

மயில்.(வம்சி சிறுகதைப்போட்டி 2011)

அக்காவின் குழந்தைக்கு ‘மயில்’என்று தான் பெயர் வைக்கவேண்டும் என்று ஆஸ்பித்தி்ரிலேயே சொல்லிவிட்டான் செந்தில்.

"தங்கமயில்னு வைக்கலாம்டா. வெறும் மயிலுன்னா கூப்பிட சரியா இருக்காது. நம்மவீட்டுக்கு இதான் முதப்பேரகுழந்தை..ஆணோ பெண்ணோ தங்கமயில் என்கிற பேருதான் பொதுவா பொருத்தமா இருக்கும்” என்றாள் அவன் அம்மா கோமதி.

" அதெல்லாம் இல்ல...மயில்தான் சரி. “ செந்தில் பிடிவாதம் பிடிக்கவும் கற்பகம் ,”மயில்தான் உன் மருமக பேரு போதுமா? உங்க மாமாவும் சரின்னுட்டாரு..” என்றாள்.

நொடிக்கு  நூறு மயில் சொல்லி மருமகளை அழைப்பான் செந்தில்.

ஆயிற்று மயிலுக்கு ஆறுமாதமாகிவிட்டது மனைவியை அழைத்துப்போக துரை வந்துவிட்டான்.

அக்கா அக்கா! திரும்ப மயிலுகூட ஊருக்கு போறப்போ என்னையும் உங்க  ஊருக்குக் கூட்டிப் போறியாக்கா?"

தன் சேலை முந்தானையைத் தொட்டுக் கெஞ்சும் தம்பியை கற்பகம் அதிசயமாய்ப் பார்த்தாள்.

பத்து வயது தன்னைவிட இளையவனான தம்பி செந்தில் அவளுக்குக் குழந்தை மாதிரி. செந்திலின் வயதும் பத்துதான்.

இன்னமும் குழந்தைத்தனம் விலகாத முகம். பேச்சில் கூட சில நேரங்களில் மழலை வந்துவிடும்.

கடைக்குட்டி என்பதால் சில செல்லச் சலுகைகள்.அந்த உரிமையில்தான் கல்யாணமாகி புகுந்தவீடு போன போது கூடவே செந்திலும் போய்விட்டான்.ஒருமாதம் அந்த கிராமத்தில் உல்லாசமாய் தங்கி வந்தான்.

"லே செந்திலு...அதான் கண்ணாலம் ஆன கையோட கற்பகம் பின்னாலயே குடித்தனம் வைக்கப் பெரிய மனுஷனாட்டம் நீயும் அம்மா அப்பா கூட போயிட்டு வந்தியேடா? மறுபடி எதுக்குப் போவணுமாம்?" கற்பகத்தின் முதல் தம்பி அருணாசலம் கிண்டலும் கடுப்புமாய்க் கேட்டான்.

"ஏய் அவனை ஒண்ணும் சொல்லாதடா..பச்சைபுள்ள" கற்பகம் மடியில் தன்குழந்தையை போட்டுக்கொண்டு சின்னத் தம்பியையும் வாரி அணைத்துக் கொண்டாள். கை விரல்களால் தலைமுடியைக் கோதிவிட்டாள் .

" அவன் பச்சப்புள்ளதான் இன்னமும்.. காலைல எழுந்ததும் புஸ்தகத்தை பிரிச்சி மயில் இறகை எடுத்துகிட்டு கன்னத்துல தேச்சிக்கிறான். அதென்னாவோ மயில் படம் ஏதாச்சிம் புஸ்தகத்துல பாத்தா பரவசமாயிடுறான். நேத்து டீவில ஒரு மயில் டான்ஸ் காட்டினாங்க 'ஆ'ன்னு வாயப் பொளந்துகிட்டு வேடிக்க பாக்கிறான். அதுவும் உன் ஊருக்கு போயிட்டு வந்த பொழுதிலிருந்து, பயலுக்கு மயிலுதான் ஞாபகம்..”

“அதெல்லாம் இல்ல....அக்காவோட மாமனாரு மாமியாரு வீட்டுக்காரரு எல்லாரும் நான் அங்க போனா சந்தோஷப்படுவாங்க”

“ஆமா..அத்தினி செல்வாக்கு உனக்கு அங்க..என்ன சொக்குப்பொடி போட்டியோ அங்கிட்டு?” அருணாசலம் முணுமுணுத்தான்.

”செந்திலுக்கு எப்பவும் உங்க ஊர் மலைல நிறைய மயிலு பாத்தகதையே தான் பேச்சு..”

அம்மா இப்படிச் சொல்லவும் கற்பகம்,"அவனும் குழந்தையோட நான் எங்கவீட்டுக்குப்போறப்போ வரட்டுமேம்மா.. என்ன பெரிய பட்டணமா எங்க ஊரு? சாதாரண கிராமத்துக்கு ஆசையா வரேன்னு ஒரு பையன் சொல்றதே அபூர்வம்.. மேலும் அப்போ லீவுதானே பள்ளிகூடத்துக்கு? செந்திலுக்கண்ணா நீ எங்கூட வாடி செல்லம்.. நான் கூட்டிப்போறேன். என் மாமனார் மாமியாருக்கெல்லாம் செந்திலுன்னா உசுரும்மா.. 'என்னா துடிப்புடி உன் தம்பிக்கு? முருகன் பேரை வச்சிக்கிட்டு அவன மாதிரியே அழகாவும் இருக்கான், நாளைக்கு இவன் வளந்து பெரியவனான பிறவு ஆயர்பாடி கண்ணனை சுத்தினமாதிரி பொண்ணுங்க இவனை சுத்தவாங்க'ன்னு சொல்றாங்க...செந்திலு நான் பார்த்து பொறந்த பையன் கடைக்குட்டி அதான் அக்காக்கிட்டயே ஒட்டிக்குவான் அவ்வளோ பாசம்! என்றாள் குரலில் பெருமை வழிய.


"அவன் உனக்காக ஒண்ணும் உன் ஊருக்கு வரல.. உங்க ஊரு அஞ்சுமலைப் பாறைமேல உக்காந்துட்டிருக்கிற மயில் கூட்டம் பாக்கத்தான் வரான்."

"வரட்டுமே, என்ன இப்போ? ஆசைப்படுறான் பாவம். செந்தில் எங்க ஊருக்கு வரட்டும். என் தங்கச்சிக்கு அடுத்த வாரம் நிச்சய தாம்பூலம் வச்சிருக்குதில்ல அதுக்கு நீங்க வரப்போ அவனைக் கூட்டி வந்துக்கலாம். அதுவரைக்கும் அவனும் ஆசையா வளத்த அக்காகூடத்தான் இருக்கட்டுமே?"'மருமகப் பிள்ளை துரையும் இப்படிச் சொல்லவும் கற்பகத்தின் அம்மா வெட்கமும் சிரிப்புமாய் செந்திலைப் பார்த்தபடி சொன்னாள், "சரிப்பா போயிட்டு வா...அக்கா வீட்டு மனுஷங்ளுக்குத் தொல்ல தராம நல்லதனமா நடந்துக்க...புரிஞ்சிச்சா?"

செந்தில் பலமாய்த் தலையை ஆட்டினான். அவன் நினைத்தே பார்க்கவில்லை தன்னை அம்மா அக்காவுடன் அவளுடைய ஊருக்கு அனுப்புவாள் என்று.

அஞ்சுமலை!

அந்த ஊரின் பெயருக்கு ஏற்ற மாதிரி ஐந்து சின்ன மலைகளை அருகருகே அடக்கிய சிறு ஊர் அது. மலை என்பதைவிட பெரிய கற்பாறை எனலாம். நெருக்கமாக பெருசும் சின்னதுமான உருண்டை வடிவப் பாறைகள். மூன்று பாறைகள் நெருக்கமாகவும் அதன் இடுக்குகளில் இரண்டு பாறையுமாய் இன்னும் ஒரு பாறை உச்சியில் இருந்தால் முக்கோண வடிவில் தெரியும்படியான அமைப்பிலுமான மலை அது.

மரமும் செடியுமாய் அதனைச் சுற்றிலும் பரவிக் கிடக்கும். மழையிலும் வெய்யிலிலும் கிடந்ததினால் பாறைகளில் ஒருவிதக் கறுப்பு நிறம் பரவி இருக்கும் இடுக்குகளில் ஏதேதோ செடிகொடிகள் பின்னித் தலை காட்டும்.

கற்பகத்தின் மைத்துனர் மகன் குமாருடன் செந்தில் அங்கே போனான். குமார் இவனைவிட நாலைந்து வயது மூத்தவன். அவன்தான் சொன்னான் அஞ்சுமலைப் பாறைமேல் நிறைய மயில்கள் கூட்டம் கூட்டமாய் வந்து உட்காருவதாக.

மயில் இறகிற்கே உயிரை விடும் செந்திலுக்கு அத்தனை மயில்களையும் குமாருடன் நேரில் போய்ப் பார்த்தபோது மூச்சே நின்றுபோனது. "ஏ அப்பா! எத்தினி மயிலுங்கப்பா! " என்று வாய்விட்டுக் கூவிவிட்டான்.

குமார், "முதல்ல நாலஞ்சி மயிலுதான் இருந்திச்சி இப்போ மூணு மாசமா மத்துக் கணக்குல பெருகித் தொலைச்சிடிச்சி.." என்றான் வெறுப்புடன்.

குமாருக்கு மயில்கள் பிடிக்காதோ என்னவோ? செந்தில் கேட்க நினைத்தான் கேட்கவில்லை அவன் பிடிக்காதென்று சொல்லிவிட்டால் தனக்கு தாங்கிக் கொள்ள முடியாதென்று தோன்றியது. மயில்களைப் பிடிக்காதவர்கள் இருக்கமுடியுமா? அதன் தோகை அழகில் மயங்காதவர்களும் உண்டோ?

செந்தில் மலையிலிருந்து அங்கும் இங்குமாய் ஓடித்தேடி நாலைந்து மயிலிறகுகளை சேகரித்தான்.

நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
வண்ணங்கள் அமைந்த அந்த இறகுகள் அவனை பிரமிக்க வைத்தன.

மயில் இறகைப் பெண்கள் தலையில் பூப்போலச் சூட்டிக்கொண்டால் என்ன என நினைத்தான். வீட்டில் ஒரு கிருஷ்ணர் படத்தில் மட்டும் அவரது தலையில் மயிலிறகைச் சூட்டி வைத்ததைப் பார்த்திருக்கிறான். மலைவாழ் மக்கள் ஒருவேளை தலையில் பறவைச் சிறகுகளை செருகிக் கொள்வதுபோல இதையும் செருகிக் கொள்வார்களோ என்னவோ? மயில்தோகையின் அழகை அவ்வளவாக யாருமே விபரமாகக் கூறவில்லையோ அல்லது தான்தான் அதிகம் படிக்கவில்லையோ எனத் தோன்றியது செந்திலுக்கு.

குமாருக்கு அந்த மலையும் மயில்களும் பிரமிப்பை ஏற்படுத்தவில்லை என்பது அவனது பேச்சிலிருந்து செந்தில் உணர்ந்து கொண்டான்.

செந்திலுக்கு, முதல் முறை போனபோது அந்த ஊரில் தன்னைப் போன்ற பையன்கள் பள்ளி விடுமுறை நாளில் விவசாய வேலையை கவனிப்பதும் விறகு சேகரிப்பதும் சாணம் பொறுக்கி உரம் சேர்ப்பதும் பால் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிப்போவதும் கண்மாயில் அவைகளைக் குளிப்பாட்டுவதும் என்று பொறுப்பாக இருந்தது வியப்பாக இருந்தது.

குமார்தான் சொன்னான், "ஆமாடா, எல்லாரும் இங்க ஏழை எளிய ஜனங்க..அதான் எல்லாருமே உழைச்சிட்டு இருப்போம்" இருந்த இரண்டு நாட்களிலும் அவனோடு செந்தில் ஊரைச் சுற்றிக் கொண்டேதான் இருந்தான். "மயில் முட்டை பாத்திருக்கியா நீ?" அன்று குமார் இப்படிக் கேட்டதும் உதட்டைப் பிதுக்கினான் செந்தில்.

"மூணு கோழிமுட்டை சைசுல இருக்கும். நீரு காணாத காஞ்ச இடத்துலயோ கொழைதழை நடுவிலியோதான் மயிலுங்க முட்டையிட்டுவைக்கும்.. அதை எடுத்தாந்து இங்க சில ஜனங்க பொறிச்சி திம்பாங்க.. சோத்துக்கு வெஞ்சனமாவும் வச்சிக்குவாங்க..'

" அய்யே..மயிலு தேசியப் பறவை ஆச்சேடா குமாரு? மேலும் அது முருகனின் வாகனம் இல்லியா அதைப்போயி திங்கலாமா?"

"அதுசரி சேவல் கூடத்தான் சாமி கொடில இருக்குது?.." கெக்கெக் என குமார் சிரித்தான்.

செந்திலுக்கு சிரிப்பு வரவில்லை.

"மயிலு குஞ்சுக பொறக்க விடமாட்டாங்க இங்க. ஆமா... செந்திலு மயிலு குரலு கேட்டதுண்டா நீ? கர்ணகொடூரம்டா எனக்கு மயிலு பிடிக்காத காரணத்துல அதுவும் ஒண்ணு"

"தோகை அழகு தெரியலியாம், குரலைப் பத்தி விமர்சனம் செய்யவந்துட்டான்.. போடா டேய்." மனசுக்குள் செந்தில் அவனைத் திட்டிப் பார்த்தான்.

"சரி..நான் ஊரு பெரியய்யா வீட்டு புஞ்சையில போயி மயிலுகளை விரட்டிட்டு வரேன்.. ஒரு நாளைக்குக் கூலி அம்பது ரூபா தராங்க இதுக்கு எனக்கு.."

"மயில விரட்றதா.. ஆயிர ரூவா கொடுத்தாலும் நான் செய்யமாட்டேன்"

"அதுசரி வயல்ல ஊனி வச்ச வெதைங்களை அதுங்க கொத்தித் தின்னிட்டு போயிட்டா வெள்ளாமையே நடக்காது தெரியுமில்ல?" குமார் கிண்டலாய்க் கேட்டபடி போனதும் அமுதா வந்தாள்.

அமுதா குமாரின் அத்தை பெண்; பதினாலு வயதிருக்கும்; இரட்டைச் சடையை விரல்ல மாட்டி ஆட்டிக்கிட்டே செந்தில் பக்கத்துல வந்தாள்.

"என் தாய்மாமனுக்கு நீ சின்ன கொழுந்தனாப்பா?" என்று பாசமாய் கேட்டாள்.

அக்கா பேசுற மாதிரியே இருக்கவும் செந்தில் மகிழ்ச்சியாய் தலையை ஆட்டினான். "ஆமா" என்றான்.

"என் பேரு அமுதா, என் தாய்மாமனுக்கும் உங்க அக்காக்கும் நடந்த கல்யாணத்துக்கு உங்க ஊருக்கு நான் வரமுடில்ல.. அப்போ என்னைய பாம்பு கடிக்க..." முடிப்பதற்குள் செந்தில்,"பாம்பா?" என அலறிவிட்டான்.

அமுதா சட்டென்று, "கடிக்க வந்திச்சி செந்திலு.....வயல்ல நடந்துண்டிருந்தவ காலுமேல சரசரன்னு ஏறிடிச்சி..அய்யோன்னு அலறினேன் பாரு, அப்போ பாத்து மயிலு ஒண்ணு வந்திச்சி..பாம்பைக் கொத்திப் பிடிங்கி சாகடிச்சிடிச்சி..நான் பிழைச்சேன், ஆனா பயத்துல ஜுரம் வந்திடிச்சி..அதான் கல்யாணத்துக்கு வரல"

"அப்படீன்னா மயிலுதான் உன்னைக் காப்பாத்திச்சா அமுதாக்கா?"

"ஆமாப்பா... சினிமால வர மாதிரி எங்கிருந்தோ வந்து என்னைய காப்பாத்திடிச்சி"

அமுதா விழி உயர்த்தி சொல்லவும் செந்திலுக்கு வியப்பானது. மயில் மீதிருந்த அவனது மதிப்பு கூடியது. "அமுதாக்கா நீ என் கூட வரியா? மயிலு பாக்க மலை ஏறிப் போலாமா?"

இருவரும் மலைநோக்கி நடக்க ஆரம்பித்தனர். ‘மனமே முருகனின் மயில்வாகனம்' என அமுதா பாடிக் கொண்டே வந்தாள். செந்திலுக்கு உற்சாகம் பீறிட்டது.

“வேறென்ன மயில்பாட்டு தெரியும் ?பாடேன் அதையும்..”

“மயில்போல பொண்ணு ஒண்ணு
கிளி போல பேச்சு ஒண்ணு
குயில் போல பாட்டு ஒண்ணு.கேட்டு நின்னு
மனசு போன இடம் தெரியல.
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல!” அமுதா சுமாராய் பாடிவைத்தாள்.

“அழகா பாடறே அமுதாக்கா...”

அமுதாவுக்கு மயிலைப்பற்றி பல விஷயங்கள் தெரிந்திருந்தன.


“செந்தில்!. வாரிசு உரிமை மூத்தவருக்குத்தான் சொல்வோம் இல்ல இந்தப்பாடத்தை நாம மயில்கள்கிட்ட காணலாம்..கம்பன் சொல்லுவாரு..’ மயில் முறைக்குலத்துரிமையை மனுமுதல் மரபை, செயிர் உறபுலச் சிந்தையால் என் சொனாய் தீயோய்’ அப்படீன்னு கூனி கைகேயிகிட்ட பரதனுக்கு பட்டம் ஏற்பாடு செய்ய சொல்கிறபோது கைகேயி சீற்றமாய் கேட்பாளாம்.’என்னது மனு முதலாய் காத்துவருகிற மயில்முறைகுலத்தின் உரிமையை உன் கெட்டபுத்தில  இப்படி சொல்றியே தீயவளே’ன்னு.ஆனா அப்புறம் கதையே மாறிட்டது.

 அது என்ன மயில் முறைக்குலத்துரிமை? சொல்றேன் கேளு..மேலை நாட்டில் மயில்பண்ணைவைத்து ஆராய்ச்சி செய்தார், ஒருத்தரு...” என்று விவரம் கூற ஆரம்பித்தாள்.

’மயிலின் இயல்புகளை அவர் கூர்மையாககவனித்துவந்தாராம்.மயில்முட்டையிலிருந்து வந்த அதன் முதல் குஞ்சுக்கு அதன் காலில் பச்சைவண்ண நூலைக்கட்டினார். அடுத்த குஞ்சுக்கு சிவப்பு நூல் அதற்கடுத்ததற்கு மஞ்சள் நூல்என்று,அந்தவிபரங்களை தன் பதிவேட்டில்குறித்துக்கொண்டார்.

மயில்குஞ்சுகள் வளர்ச்சியடைந்து தோகைவிரித்தாடிய சந்தர்ப்பத்தில் அந்த
பச்சைக்கயிறுகட்டிய குஞ்சுதான் முதலில் தோகை விரிக்கத் தொடங்கியதை
அவர்கவனித்தார்.

அதுதான் முட்டையிலிருந்து வெளிப்பட்டமுதல்குஞ்சு.

கம்பர் குறிப்பிட்ட மயில்முறைக்கு இப்போது விளக்கம் கிடைத்துவிட்டதா?

வாரிசு உரிமை தலைமகனுக்குத்தான். இதை பலகாலம் முன்பே தமிழ்
இலக்கியம் சொல்லிவிட்டது.ஆமாம் அந்த மயில்பண்ணை நடத்தியமேலைநாட்டவருக்கு எத்தனையோ காலம் முன்னேயே தணிகைப்புராணம் எனும் நூலும் சொல்கிறது.
'பலாவம் பொழிலின் ஒரு தாய்உயிர்த்த பல மயிற்கும்
கலாபம் புனைந்த களிமயில் மூத்தது...” அப்படீன்னு. நான் ஆர்வமா.தமிழ் இலக்கியம் படிக்கிறதால உனக்கு இப்போ மயில்பத்தி  பகிர்ந்துக்க முடிஞ்சது செந்தில்!”

“அழகா இருக்கு விளக்கம்..சிலபேருகிட்ட பேசினா மனசு, துடைச்சிவிட்ட மாதிரி ஆகுது.அது அமுதாக்காகிட்ட எனக்குக்கிடைக்குது!”

செந்திலுக்கு அமுதாவோடு பேசியதெல்லாம் நினைவிற்குவந்தன.இப்போது மறுபடியும் அஞ்சுமலைக்குப் போக வாய்ப்பு வந்ததில் செந்திலுக்கு மனசு குதியாட்டம் போட்டது.

இம்முறை அமுதா ஊரிலிருப்பாளோ மாட்டாளோ? அவளுடைய பெரியப்பா வீட்டிற்கு மதுரைக்கு விடுமுறையில் போவதாய் முன்னேயே சொல்லி இருந்தாள் ஆனாலும் இனி அவனுக்குக் குமாரின் துணையே தேவை இல்லை. தனியாகவே மலைக்குப் போய்விடுவான். போனமுறை போனபோதே அந்தப் பகுதியெல்லாம் மனதில் அத்துப்படியாகிவிட்டது.

அந்த ஐந்து மலைப் பகுதியைச் சுற்றிலும் கரிசல் காடுதான். பெரும்பாலும் மலை சார்ந்த பகுதி என்பதால் பயன்படுத்த முடியாத நிலவெளி. ஒரு புறம் இறவைத் தோட்டங்கள்; இன்னொரு புறம் கண்மாய்க் கரைமரங்கள் என்று ஊர் அமைந்திருந்ததை செந்தில் கவனித்து வைத்துக் கொண்டான்.

இம்முறை கற்பகத்துடன் ஊர் வந்ததும்,கொஞ்சநேரம் அக்காமகள் மயிலைக்கொஞ்சினான்.அவன் சொன்னதுபோலவே தங்கமயில் என்று அழைக்காமல் கற்பகத்தின் புகுந்தவீட்டிலும் எல்லாரும் குழந்தையை மயிலுக்குட்டி என்று கூப்பிட்டனர்.

“அக்கா..நான் வீட்டு மயிலைஆசைதீர கொஞ்சிட்டேன் கொஞ்சம் போயி வெளில மயிலுங்களை கண்ணால பார்த்திட்டுவரேன்.. என்று சொல்லிவிட்டு தனியே புறப்பட்டுவிட்டான்.

இறவைத் தோட்டங்கள் உள்ள பகுதியில் காலாற நடந்தான். அவ்வழியேதான் மலையேறியாக வேண்டும். பெரிய பெரிய தோட்டங்களில் மிளகாய்ச் செடிகள் கொத்து கொத்தாகக் காய்த்துத் தொங்குவதையும், இன்னொரு தோட்டத்தில் கம்பங் கதிர்கள் பால் கோத்துக் கொண்டு செழிப்பாயிருப்பதையும் பார்க்கத் தோன்றாதவனாய் மலை ஏறி மயில் கூட்டத்தைக் கண்ணாரப் பார்க்கத் தவித்தான்.

மயில் ஆடுமாமே தோகையை விரிச்சிகிட்டு அதைப் பார்க்கமுடியுமா, இந்த வாட்டியாவது? அமுதாவுடன் போனபோதும் மயில் ஆட்டம் பார்க்க முடியவில்லை.. மயிலிறகு எட்டு பத்தாவது பொறுக்கிடணும். ஊருக்குப் போனா முத்து, ரமேஷ¤, வனஜா எல்லாருமில்ல என்கிட்ட கேக்கறாங்க?

'அழகுமயில் ஆட அபிநயங்கள் பாட..' பாட்டை முணு முணுத்தபடி கால்களை எட்டப் போட்டு நடக்க ஆரம்பித்தான்.

அப்போதுதான் சிலர் 'நாசமாப்போக' என்று ஓங்கிய குரலில் திட்டியபடி கற்களை எடுத்துக் கொண்டு ஓடினர்.

எங்கே போகிறார்கள் எல்லாரும் என்று செந்தில் திரும்பிப் பார்த்தான்.

அங்கே ஒரு தோட்டத்தில் பால் கோர்த்திருந்த கம்பங் கதிர்களையெல்லாம் மயில்கள் கூட்டமாய் வந்து மேய்ந்து கொண்டிருந்தன.

"அய்யோ அய்யோ பயிரு எல்லாம் திங்குதே இந்தப் பாழும் மயிலுங்க....இதை சுட்டுப் போடுங்களேன் யாராச்சும்? எங்க ரத்தத்தைத் தண்ணீராப் பாய்ச்சி கதிர வளத்தோமே..இப்படி எல்லாத்தியும் தின்னுப் போயிடிச்சே. வருஷத்துக்கும் சேத்து வச்சிக்க வேண்டிய சொத்து. எங்க உசுரு சீவன் எல்லாமே இதுதானே? அத்தினியும் கூட்டமா வந்து அளிச்சித்தின்னுடிச்சே...." எங்க வயித்துக் கஞ்சில மண்ணை வாரிப் போட்டுடிச்சே...பாவி மயிலுங்களோட தோகையில் நெருப்பு வச்சிக் கொளுத்துங்க.. அளகாயிருந்து என்ன அறிவு கெட்ட ஜன்மங்க.. எல்லாத்தியும்..ஒழிச்சிக் கட்டுங்க" அனைவரும் கைவிரல்களைச் சொடக்கி ஆத்திரமாய் சபித்தார்கள்.

மயில்கள் கதிர்கள் எல்லாவற்றையும் தின்று முடித்து கற்களுக்குள் தப்பித்து ஓடி ஓடி மலை மீது பறந்து போய் உட்கார்ந்துவிட்டன.

"இந்த மயிலுங்களால தோட்டத்திலயும் காட்லயும் எத்தினி அழிவு.. அய்யோ சொல்ல ஆகலியே..." நெஞ்சில் அடித்துக் கொண்டு பலர் கதறினார்கள்.

சற்றுமுன்பு தான் பார்த்த கம்பங் கதிரெல்லாம் மொட்டை அடித்தாற்போல் இப்போது நிற்கவும் செந்திலுக்கும் சங்கடமாயிருந்தது.

மயில்கள் மக்காச் சோள முளைகளைக் கொத்திக் குதறி, சின்னாபின்னப் படுத்தியிருந்தன. சர்வமும் நாசமாகி அழிந்து பிரளயத்துக்குப் பின் கிடந்த பூமியாய் அந்தத் தோட்டம் கலவரமாயிருந்தது.. கல்லடிக்குத் தப்பிக்கும் பிரயத்தனத்தில் கதிர்களில் தோகை பட்டு ஊதாவும் பச்சையுமான வண்ணத்து மயில் இறகுகள் பயிர்பச்சை நடுவே விழுந்து கிடந்தன.. செந்தில் அவைகளையே பார்த்தான்.சாதாரண நேரங்களில் மயிலிறகுகளைப்பார்க்கிற போதே பரவசப்பட்டு நிற்பான். இப்போது இறந்த பயிர்களுக்கு மலர்வளையமாய் அவைகள் அவனை அச்சுறுத்தின. 'ச்சீ ' என வெறுப்பாக வந்தது.

மலைப்பக்கம் போகாமல் திரும்பி நடந்தான். என்னவோ நெஞ்சு கனத்ததுபோல உணர்வு.

'அய்யோ அய்யோ எல்லாம் போயிடிச்சே... ஏற்கனவே நாலுநாளா பசிபட்டினில துடிக்கற பச்சப் புள்ளைகளுக்கு இப்ப கம்பங் கஞ்சிக்குக் கூட வளி இல்லாம செஞ்சிடிச்சே இந்த நாசமாப் போவுற மயிலுக் கூட்டம்!". தீனமான குரல் அவன் நெஞ்சைப் பிசைந்தது.

 சட்டைப் பையிலிருக்கும் மயிலிறகுகளை மெதுவாய் எடுத்தவன் அவைகளை அப்படியே கீழே போட்டான்..

திரும்ப வீடு வந்தபோது,”மயிலு. மயிலுகுட்டி! எங்களை வாழவைக்க வந்த செல்வ மயிலு!
அழகு மயிலு! அறிவு மயிலு...”என்று கற்பகத்தின் மாமியார் குழந்தையைப்பார்த்து குதூகலமாய் சொல்லிக்கொண்டு இருந்தாள்.

செந்திலுக்கு நாராசமாய் இருந்தது.

மேலும் படிக்க... "மயில்.(வம்சி சிறுகதைப்போட்டி 2011)"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.