Social Icons

Pages

Friday, March 30, 2012

அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற!

முடியொன்றிமூவுலகங்களிலும் ஆண்டுஉன்


அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த

படியில்குணத்துப் பரதநம்பிக்குஅன்று

அடிநிலை  ஈந்தானைப்பாடிப்பற

அயோத்தியர்கோமானைப்பாடிப்பற


காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு


ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும்

நேராஅவன் தம்பிக்கே நீளரசீந்த

ஆராவமுதனைப்பாடிப்பற அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற








ஆராவமுதனைப் பாடிப்பற அயோத்திய வேந்தனைப் பாடிப்பற என்கிறார் பெரியாழ்வார்.




எப்போது நம்மால் பறக்கமுடியும்?



மனம் இலேசானால்..



மனம் எப்போ லேசாகும்?



அழுத்தங்கள் அகலும்போதுதான்..



அழுத்தங்கள் எனும் பாரங்கள் எப்போது நமக்குள் வரும்?



கவலையும் கோபமும் சூழும்போது வரும்.



கவலை நம்மைத் தின்று விடுமாம். அதனால் தான் பாரதி என்னைக் கவலைகள் தின்னத்தகாதென்று நின்னைச் சரணடைந்தேன் என்கிறார்.



நம்மைக் கவலையும் கோபமும் ஆட்கொள்ளாமலிருக்க இறைவனை சரணடைய வேண்டுமாம்.



சரி, அந்த இறைவனுக்கே கோபம் வந்தால்..?
இறைவனுக்கு நம்மைப்போல காரணமேயின்றி கண்டதற்கும் கோபம் வந்துவிடுமா என்ன?


கருணையே உருவான கடவுளுக்கும் கோபம் வருமளவு நடந்து கொள்வதும் முறையா?

இந்தக் கோபம் சக்கரவர்த்தித் திருமகனை சிலநேரங்களில ஆட்கொண்டதாய் ராமாயணக் காவியத்தில் காண்கிறோம்.

அண்ணலை அந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் யாரார் எனப் பார்ப்போமா?



ராமனுக்கு இளவரசுப் பட்டாபிஷேகம் செய்வதாய் தீர்மானிக்கப்பட்டு விட்டது ...ஊரே உற்சாகத்தில் மிதக்கிறது.அரச சபையில் அனைவர் முகத்திலும் குதூகலம் நிரம்பிவழிகிறது. ராமனும் சீதையும் பட்டாபிஷேகத்திற்குரிய விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள்.



இதற்கிடையில் மந்திரையின் பேச்சில் புத்தி தடுமாறி கைகேயி தசரதனிடம் ராமன் 14 வருடங்கள் வனவாசம் போகவேண்டும் என்றும் தனது

மகன் பரதன் முடிசூட்டிக் கொள்ள வேண்டுமென்றும்( வரம்) கேட்டு அதனை பெற்றும் விடுகிறாள்.



இதைக் கேள்விப்பட்ட ராமன் சற்றும் கோபமடையவில்லையாம்.

தந்தை சொல்லைக் காப்பாற்றுவதைவிட சாம்ராஜ்யம் பெரிதல்ல என நினைத்தானாம். ராமனின் முகத்தில் கோபத்திற்கு மாறாக மகிழ்ச்சிதான் தெரிந்ததாம்...'அவ்வாசகம் உணரக்கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா' என்கிறார் கம்பர்.



எம்பெருமான் ஜிதக்ரோத: அதாவது கோபத்தைவென்றவன் ஆகிறார்.

சீற்றமில்லாதானைப்படிப்பற, சீதைமணாளனை பாடிப்பற! என்பது பெரியாழ்வார் வாக்கு.

கோபத்தை வென்ற தாசரதிக்கு எப்போது கோபம் வந்தது?




பிராட்டியை ராவணன் அபகரித்துப் போனதும் காணாமல் துடிக்கிறான் ராமன். மரத்தை, நதியை எல்லாம் கேட்கிறான். ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியை திகைத்தனை போலும் செய்கை என்று பின்னர் கிஷ்கிந்தா காண்டத்தில் கம்பர் கூறியதுபோல என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறான்.



கோபம் அதிகரிக்கிறது.

சக்கர்வர்த்தி திருமகனின் கோபத்தை ஒரு சர்க்கம் முழுவதும் ராமக்ரோத: என்று அரண்யகாண்டம் 64வது சர்கத்தில் வால்மீகி விவரிக்கிறார்.



ஒருகட்டத்தில் ராமன் "என்பிரியபிராட்டியை யார் கவர்ந்து சென்றார்? என்னிடம் திரும்ப ஒப்படைக்காவிட்டால் என்னுடைய பாணங்களால் மூவுலகங்களையும் அழித்துவிடுவேன்" என்று கோபத்துடன் சூளுரைக்கிறார்.



பிராட்டியின் பிரிவினால் மிகவும் கோபமாயிருக்கும் அண்ணனை இளையவர்(கோபத்திற்குப்பெயர்போனவர்)::0 அவரை சமாதானம் செய்கிறார்.

யாரோ ஒருவன் செய்த தவறுக்காக உலகத்திற்கு தண்டனை கொடுக்கலாகாது. கவர்ந்து சென்றவனைக் கண்டுபிடித்து அவனுக்கு

தண்டனை கொடுப்போம்.. ஆகவே நாம் தேடுதல் வேட்டையை செய்வோம்' என்றபின் சக்கரவர்த்தி திருமகனுக்குக் கோபம் தணிந்தது.

.



அடுத்து வனவாசத்தில் காகாசுரன் சீதையின் உடலைத்தீண்ட அதனின்றும் பெருகிய ரத்தம் கண்டு கட்டுக்கடங்காத கோபம் உண்டாயிற்றுராமனுக்கு.

காலசர்ப்பதைப் போல மூச்சு விட்டான் ராமன் என்கிறார் வால்மீகி.

ஒரு புல்லை எடுத்து பிரம்மாஸ்த்ர மந்திரத்தை அந்தக் காக்கையின் மேல் ஏவினான். அந்த அளவு கோபமுண்டாகிவிட்டது.



பிறகு காகாசுரன் அடைக்கலமாகி காலில் விழுந்ததும் அவனுக்கு கோபம் தணிந்து உயிர்பிச்சை அளித்தான். சரணம் என்றவரை தள்ளியதில்லை தசரத மைந்தன்.



அதேபோல இலங்கைசெல்ல கடல் அரசன் வழிவிடாதபோது கோபம் வந்தது.

'லட்சுமணா என் தனுசைக்கொண்டுவா.. கொல்லும் பாம்புகள் போன்ற குரூரமான பாணங்களையும் எடுத்துவா.. இந்தக் கடலை முற்றிலும் வற்றச் செய்துவிடுகிறேன். வானர வீரரகள் நடந்தே லங்கை செல்லட்டும் .."என்றதும் கடலரசன் அஞ்சி சரணம் எனப் பணிந்தான். அவனுடைய சரணாகதியை அண்ணலும் ஏற்றுக்கொண்டார்.




ராவணனுடன் போர் செய்கையில் அனுமனை தன் பாணங்களால் காயப்படுத்துகிறான் ராவணன். அதைக்கண்ட ராமனுக்குக் கோபம் வந்தது.




உடனே ராவணனின் ஆயுதங்களை அழித்து அவனை நிராயுதபாணியாக்கி ,'இன்று போய்நாளை வா' என்கிறான் .



இப்படித் தான் அடியார்க்கு தீங்கிழைத்தால் பெருமாளுக்குக் கோபம் மிகுந்து வருமென்பதற்கு பிரஹலாதன் பெரும் சாட்சி.


'அங்கண் ஞாலம் அஞ்ச 'என்றும் 'முளைத்த சீற்றம் விண்கடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்த அஞ்ச' என்று ஆழ்வார் அருளிச்செய்ததில் இதனை உணரலாம்.



தன் உயிரான இனிய சீதையைக் கவர்ந்ததும், தனக்காக் போராடிய வானர வீரர்களைக் கொன்று குவித்ததும் போன்ற தகாத செயலை செய்ததால் ராவணன் மீது ராமனுக்குக் கோபம் வந்தது. அதுவே ராவணனின் முடிவிற்கும் காரணமானது..



இதைத்தான் ஆண்டாளும், 'சினத்தினால் தென்னிலங்கை கோமானை செற்ற மனதுக்கினியானை' என்று திருப்பாவையில் சொல்கிறாள்.



இறைவனுக்கு நம்மீது கோபம் ஏற்படாத வகையில் நாம் நடந்துகொள்வோம் அப்படியே அறியாது தவறு செய்தாலும் அண்ணலின் பாதங்களை சரணமெனப்பிடித்துவிடுவோம்!

********************************************************************************



மேலும் படிக்க... "அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற!"

Thursday, March 22, 2012

தண்ணீர்!தண்ணீர்!








எந்த பத்திரிகை ஆனாலும் எந்த ஊடகங்கள் ஆனாலும் அறிவுசார் விவாதங்கள் ஆனாலும் உலக நாடுகளின் தலைவர்கள் ஆனாலும் விவாதிக்கப்படும் முக்கியமான பொருளாக புவி வெப்பமயமாதல் இடம் பெற்றுவிட்டது.
ஓசோன் படலம் பற்றி ஒன்றுமே அறியாத அந்த நாளைய மன்னர்கள் ராஜ்யபரிபாலனத்தில் தினமும் கேட்கும் கேள்வி மாதம் மும்மாரிபெய்கிறதா என்பதுதான்.
இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால் மாதம் மும்மாரியில் ஒரு மாரி குறைந்தாலும் ஆபத்துதான் என்பது.ஆக எப்போதோ மாதம் மும்மாரி பொழிந்தது. வானத்தில் புகைமூட்டம் இல்லை வாகன நச்சுப்புகை வளி மண்டலத்தை நிரப்பவில்லை மும்மாரி பொழிந்தது.குளிர்சாதன இயந்திரங்களின் கொடிய நச்சு வாயு வெளியேறவில்லை மனிதன் அமைதியாக வாழ்ந்தான் ஓசோனில் ஓட்டைவிழவில்ல, பூமி வெப்பம் அடையவில்லை ஆகவே மழை பொழிந்தது அன்று.
மாதம் மும்மாரி பொழிய வளிமண்டலம் சுத்தமாக அல்ல,பரிசுத்தமாக இருக்கவேண்டும். ஆனால் இப்போதோ கரியமில வாயு-மீத்தேன் நைட்ரஜன் ஆக்சைடு சல்பா ஹெக்சா புளோரைடு ஹைட்ரோ ஃப்ளோரைடுகார்பன், பெர்புளோரா கார்பன்கள் ஆகிய தீயநச்சுவாயுக்கள் பூமியிலிருந்து வளிமண்டலத்தை நோக்கி ஏவப்பட்டுள்ளது.
முன்னே வனங்கள் செழிப்பாக பசுமையாக இருந்தன மும்மாரி பொழிந்தன. இன்று விஞ்ஞான வளர்ச்சி என்னும் வரங்களே நமக்கு சாபங்களாகிவிட்டன.
இமயத்தில் பனிப்பாறைகள் உருகிக்கொண்டு இருக்கின்றன.பனிக்கரடி இனம் பூ்ண்டோடு அழிந்துபோய்விடும் அபாயம், அரிய தாவரங்கள் அழியும் துயரம்,. மனி்தனுக்கு குடிநீர் கிடைக்காமல்போகும் அவலம் ஏற்படும்.
மரங்களை பாதுகாத்து மரங்களை அதிகம் நட்டு இருப்பிடத்தை பசுமைக்காடாக மாற்றினால் கரியமில வாயு எனும் அரக்கன் ஒழிவான் ஓசோன் காப்பற்றப்படும். புவி வெப்பமய்மாகாது மாதம் ஒரு மாரியாவது பெய்யும்.தண்ணீர்கஷ்டம் தீரும்.


வரப்பு உயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும்.
நெல் உயர மணி உயரும். மணி உயர குடி உயரும்.
குடி உயர கோல் உயரும். கோல் உயர கோன் உயர்வான்.

ஔவை  வாக்கு மெய்ப்படவேண்டும்!
.
இந்த உலகில் 75% தண்ணீர்.இருக்கிறது.

இதில் 97% சமுத்திரம்.(உப்புத் தண்ணீர்.)
3% மட்டுமே குடிப்பதற்கு உபயோகப் படுத்தலாம்.

ஏறத்தாழ 75% நல்ல தண்ணீர் போலார் பகுதிகளில் ஐஸ் கட்டியாக உரைந்து கிடக்கிறது.

ஒரு மனிதனால் உணவு இல்லாமல் ஒரு மாதத்திற்கு மேல் உயிர் வாழ முடியும் ஆனால், தண்ணீர் இல்லாமல் ஏறத்தாழ ஒரு வாரம் தான் வாழ முடியும்.

ஒரு கேலன் தண்ணீர் என்பது 3.785 லிட்டர்கள் ஆகும்

பற்களை துலக்க தினமும் ஒரு மனிதன் 2 கேலன் தண்ணீர் செலவிடுகிறான்.

கழிவறையில் flush செய்ய 2-7 கேலன் தண்ணீர் உபயோகப்படுத்த படுகிறது.

குளிப்பதற்கு மட்டும் 25-50 கேலன் தண்ணீர் உபயோகப்படுத்த படுகிறது.

..

மனிதனால் உப்பு நீரை குடிக்க முடியாது.

நம் உடலானது 66% தண்ணீர்.

நம் இரத்தத்தில் 82% தண்ணீர் உள்ளது.
நல்ல தண்ணீரை நம்பி வாழும் விலங்கினங்கள் மற்ற விலங்குகளை விட 5 மடங்கு அதிகமாக மறைந்து வருகிறது.

இந்தியா என்ற நமது தேசத்தின் பெயர், இன்டஸ் என்ற நதியின் பெயரில் இருந்து உருவானது.

நமது தட்பவெப்பநிலையை தண்ணீரே தீர்மானிக்கிறது.
இந்த உலகில் பெரும்பாலான மக்கள் குடிக்கும் நீருக்காக 3 மணி நேரம் நடக்க வேண்டி உள்ளது.

இந்த உலகில் கால் வாசி மக்கள் பாதுகாபற்ற குடிநீரே குடித்து வாழ்கின்றனர்.

இன்றைய நிலை நீடித்தால் 2025 ஆம் ஆண்டில் உலகில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாய நிலை உருவாகும்.

உலகில் தினமும் 3900 குழந்தைகள் அசுத்த நீரை குடிப்பதாலும், சுகாதரமற்ற முறைகளாலும் இறக்க நேரிடுகின்றனர்.
கவிதை தாகத்தில் எழும் கவிதையோடு பதிவை முடித்துவிடுகிறேன்.
நீ தாய்
தவிக்கும்போதெல்லாம்
தாகம் தீர்ப்பதில்!
நீ மரம்
நெஞ்சுக்கு நிழலாக
இருப்பதில்!
நீ மொழி
அனைவரிடமும்
உலா வருவதில்!
நீ நடிகை
எல்லா பாத்திரங்களுக்கும்
ஏற்றதாய் வடிவெடுப்பதில்!
நீ மரம்
பலவகைகளில்
பயன்படுவதில்!
நீ தெய்வம்
மழையாகப்
பொழிகையில்!
நீ விளக்கு
வாழ்வின் ஒளியாக
இருப்பதில்!
நீ உயர்ந்தவள்
உலகில் பெரும்பகுதி
உன்னுடையதாயிருப்பதில்!
நீதான் நான்
என்னுள்ளே
கலந்து இருப்பதில்!

--







--




--


மேலும் படிக்க... "தண்ணீர்!தண்ணீர்!"

Tuesday, March 20, 2012

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?


சர்வதேச குருவிகள் தினமாக மார்ச் 20 ஐ பறவை, விலங்கின ஆர்வலர்கள் 2010 முதல் கொண்டாடி வருகின்றனர்.

சிட்டுகுருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா  உன்னைவிட்டுப்பிரியவே செல்போனைக்கட்டி அழுகிறோம் நாங்கள் என்று   இனி பாடவேண்டியதுதான்.

  சிட்டுக்குருவிகளை இன்று நகரங்களில் பார்க்க முடியவில்லை. குருவிகளின் உயிரை பறிக்கும்கோடரிகள் எவை தெரியுமா "மொபைல் போன் டவர்'களில் இருந்து வரும் ரேடியோ அலைகள் தான் என்கிறார் மதுரையில் பறவைஇனங்களை ஆய்வு செய்து வரும் டாக்டர் பத்ரி நாராயணன்.  அதுபற்றி நமக்கென்ன கவலை என்பதுபோல  கணந்தோறும் காதில் செல்போனை வைத்துக்கொண்டு நாம் அலைகிறோம்.


 காக்கா காக்காகண்ணுக்கு மைகொண்டுவா
குருவி குருவி  கொண்டைக்குப்பூ கொண்டுவா
கொக்கே கொக்கே குழந்தைக்கு தேன் கொண்டுவா
கிளியே கிளியே கிண்ணத்தில் பால் கொண்டுவா....


இப்படியெல்லாம் பாட்டுப்பாடி பறவைகளை அழைத்த காலமெல்லாம் கனவாகிப்போய்விடும் அபாயச்சூழ்நிலையில்  இருக்கிறோம்.

 நாம் பெரும்பாலும அழகானவற்றை ஏற்றுக்கொண்டு மிகவும் உபயோகமானவற்றை  கைவிட்டுவிடுகிறோம் என்னும் பிரெஞ்சுபழமொழிக்குஏற்ப வாசலில் இருக்கும்  பச்சைமரங்களை வெட்டிவிட்டு  வரவேற்பறையில் ப்ளாஸ்டிக் செடிகளை கொண்டு வைக்கிறோம் மரத்தைவளர்க்கத்   தெரியாத மனங்களுக்கு  பிளாஸ்டிக்  தாவரங்களில்   படிந்த   தூசியை துடைக்கத் தெரிந்திருக்கிறது.

 நாம் வளர்த்த  மரங்களின் எண்ணிக்கையைவிட  நாம்    தொலைத்த மரங்களின் எண்ணிக்கை அதிகம்.

சாலைகள் அமைக்க  ரயில்பாலங்கள்கட்ட குடிநீர் குழாய் அமைக்க குடியிருப்புகள் தொழிற்சாலைகள்   கட்ட   என்று  மரங்களை  வெட்டிசாய்த்துவிட்டோம்  அதனால் பறவைகளின் வீடுகளை அழித்துவிட்டோம் . வசிக்க இடமினறி அவைகள் காணாமல்போய்க்கொண்டிருக்கின்றன .


ஒருபறவை  பறந்து கொண்டிருக்கும்போது மிதந்துகொண்டிருந்தது கூடவே வானமும் , பறவையைச்சுட்டார்கள் விழுந்ததோ   துண்டுவானம் எனும் கவிதையைப்  படிக்கிறபோது  நம் மனமும்  சிதறி விழுகிறது.

பறவைகள் நம் சுற்றுச்சுழலின்நண்பர்கள் .செல்போன்களை நாம் அதிகம்   பயன்படுத்தத்  தொடங்கியதும் அதன் அலைவரிசைத்தாக்கம்  பொறுக்கமுடியாமல் சிட்டுக்குருவிகளின் இனம்அழிந்துவருகிறது .

ஒரு சிட்டுக்குருவியின் அழிவுக்கும் பிரபஞ்சத்தின் அழிவுக்கும் தொடர்பிருக்கிறது என்று பறவைஇயல் நிபுணர் சலீம் அலி எழுதுகிறார்.


மாதா பிதா குரு தெய்வம் என்னும் வரிசையில் இயற்கையும் இருந்திருக்கலாமோ அப்படி இருந்திருந்தால் இயற்கையை பூஜை செய்தாவது காப்பாற்றவேண்டிய +மதிக்கவேண்டிய சிந்தனை மனிதனுக்கு வந்திருக்குமோ?


பறவைகள் இந்த  உலகினை அ ழகுபடுத்துகின்றன ஆனால்சூழல் பற்றிய அக்கறையே இல்லாமல்  பறவைகளே இல்லாமல் போகிற உலகத்தை நாம் உருவாக்கிவருகிறோம் என்பது எவ்வளவு வருத்தமானது?

பறவைகளுக்கும் உணர்வு உண்டு.கோபதாபம்  காதல் அன்பு அச்சம்  உண்டு.

 ஏதாவது ஒருகாகம் நம்தலையை தட்டிவிட்டுப்போனாலே நாம் பதறிவிடுவோம் ஆனால் சாதுவான பறவை தன் இயல்பை மீறி தன் சகாக்களோடு  மனிதர்களைத் தாக்கத் தொடங்கினால்  எப்படி இருக்கும்?


அப்படி ஒரு திகிலான கதைதான் The Birds !



  சிலவருடம் முன்பு  வெளிவந்தது.


Alfred Hitchcok    இயக்கத்தில். இந்தப்படத்தின் ஒவ்வொரு நிமிடமும்   நம்மை  உறைய வைக்கும் இந்தப்படம் கோல்டன் க்ளோப் விருதுபெற்றது.
அதிகம் தொழில் நுட்ப வசதிகள் அதிகம்  இல்லாத காலத்தில் mattprinting உத்தியுடன்  தயாரிக்கப்பட்ட பறவைக்காட்சிகள் இப்போது பார்க்கும்போது ஆச்சரியம் அளிக்கின்றன படம் முழுக்க விதம்விதமான பறவைகளின் சத்தமே பின்னணி இசையாகப்பயன்படுத்தி இருந்தது.

துவக்கத்தில்  வீட்டுக்குள் நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகள் வருவதும் தீவிபத்து நடக்கையில் நகரத்தின் மேலிருந்து இறங்கி பறவைகள் தாக்கும் காட்சியும் சிலிர்க்கவைப்பவை. பறவைகள்   பற்றிய இந்தக் கதையில் மெலிதான காதல் மனித உறவுகள் குறித்த காட்சிகளும் திகிலோடு  இணைந்துவருகின்றன.

கதாநாயகனும் கதாநாயகியும் இருக்கும் இடத்திற்கே பறவைகள் வந்து  தாக்குதல்களை செய்கின்றன ஜன்னல் கதவுகளின் கண்ணாடியைக்கொத்திகொத்தி  கதவு உடையும்நிலைக்குவருகிறது....இன்னும் சிலநொடிகளில் கதவின் கண்ணாடி  உடைந்து நூற்றுக்கணக்கான் பறவைகள்   வீட்டிற்குள் வரநேரிடலாம் அந்த சுழலில் என்ன நடந்தது ?ஒருமுறை அந்தப்படம்   கிடைத்தால் வாங்கிப்பாருங்கள்...(இணையத்திலும் இருக்கலாம்)



எதற்கு இந்தப்படம்பற்றி   இப்போது  என்றால் பறவைகளுக்கும்உணர்ச்சி உண்டு என்பதை அறிந்துகொள்ளத்தான்.

மரங்கள் அடர்ந்த காட்டில்  குறுக்கும்நெடுக்குமாய் ஒழுங்கற்று நீண்டிருக்கும்  கூரியமுட்களின் இடையே  உடலைக்கொண்டுநுழைத்து வெளியேறி இரைதேடிப்   பசியாறிவரும்  பறவைகள் நமக்கு வாழ்க்கையின் வடிவத்தையும் வாழ்தலின் அர்த்தத்தையும் சொல்லுகிறது அல்லவா?



சிட்டுக்குருவிகளின் சுதந்திரத்தில் மனதைப் பறிகொடுத்த   பாரதி ,’விட்டுவிடுதலையாகி நிற்கவேண்டும் இந்தச்சிட்டுக்குருவிகளைப்போல’ என்றானே!


தோல்வியில் துவளும்போது ஃபீனிக்ஸ்பறவையைபோல சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவேன் என்கிறான் மனிதன். உதாரணங்களுக்கெல்லாம் இயற்கை வேண்டி இருக்கிறது பறவைகள் மரங்கள் என  எடுத்துக்கொள்வோம் ஆனால் ஓசோன் மண்டலத்தில் துவாரத்தையும் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடையும் தலைவிரித்தாடும் தண்ணீர்ப்பஞ்சத்தையும் வறட்சியின் உக்கிரத்தையும் கண்டுகொள்ளமாட்டோம்.  பூமி வெப்ப மயமாவதை தடுக்க மரங்கள் வளர்க்கவேண்டும் அதனை பாதுகாக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை என்றைக்கு வளர்த்துக்கொள்ளப்போகிறோம்?

நம்மைச்சுற்றிலும் பறவைகள் இருகின்றன அழகழகான நிறங்களோடு உருவங்களோடு அவை நம்மை வசீகரிக்கின்றன ! கவிதைகள் எழுதுவதற்கு கவிஞனுக்குப்பறவைகளே ஆதாரம் !எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்க அவன் பறவைகளை நோக்குகிறான். ஒரு பறவையின் பறத்தலை ரசிக்கத்தெரியாதவன் கவிஞனாக முடியாது.

ஆனால்  பறவைகளுக்கான  சுதந்திரத்தை நாம் எப்போதும்  மதிப்பதில்லை அவைகளை ஒரு பொருட்டாகக் கருதுவதுமில்லை.

விழாக்கால  இரவுகளில் நெருப்புகள் வெடித்துச்சிதறும் பேரதிர்வுகள் நமக்குக்கோலாகலம்!  ஆனால் பறவைகளுக்கு  திசைதெரியாமல் இருளினுள்   அவைபீதியுற்று கதறியபடி பறப்பதை நாம் பார்த்ததில்லை.


காகத்தின் கரைதல்விருந்தினர்வருவதற்கான அறிவிப்பு  என்கிறோம்.
நாராய் நாராய்  செங்கால் நாராய் பழம்படுபனையின் பழக்கூர்வாய் செங்கால் நாராய் என்றார்  ஒருபுலவர்.

பறவைகளைப்பார்த்தால் சிலருக்குபாட்டுவரும் .சிலருக்கு வயிற்றுப்பாட்டுக்கு ஆனதென்று தோன்றி  குறிவைத்து அடித்து வீழ்த்ததோன்றும்.

அன்பைக்கிளைகளாய் விரித்து மரம் சுமந்திருந்த பறவைகளை அதன் மொழிகளை கூவலை  மரங்களை வெட்டி சாய்ப்பதின் மூலம் பெரிதும் இழக்கிறோம். இரட்டிப்பு இழப்பு.

சாலைகள் இரயில்வேபாலங்கள் கட்டவும் தொலைபேசி குடிநீர்குழாய் அமைக்கவும் குடியிருப்பு்கள், தொழிற்சாலைகட்டவும்  மரங்களைவெட்டுகிறோம் .மரங்கள்போனால் பறவைகள் காணாமல்போகும். பாதிப்பறவை இனம் பூண்டோடு அழிந்துவிட்டது


தூக்கணாங்குருவி முதல் கட்டிட நிபுணர் !ஆகாயதோட்டி காக்கை !பல்லவி சரணம் பாடும் வானம்பாடி.!
கொக்கின் ஒற்றைக்கால்தவம்  எல்லாம்  இனி வரும் சந்ததியினருக்குப்பாடபுத்தகத்தில் மட்டும்  பார்க்க என்றாகிவிடுமா?

 ஆலாப்பறவை வேகமாய் பறக்குமாம் ‘ஏன் ஆலாய்ப்பறக்கறே?’ என்பார்களே இதனால்தான்! ஆல்பட்ரோஸ்  பறவை சிறகைவிரித்துவிட்டல்; ஏறத்தாழ ஐந்துவருடங்கள் பறக்குமாம் !புறாக்கள்  தூதுபோயிருக்கின்றன.

ஒற்றுமைக்கு காகம்! இனிமையாகப்பாடுபவர்களை குயில் என்கிறோம் !மழையை தோகை விரித்து அறிவிக்கும்மயில்! கழுகுப்பார்வை என்கிறோம்.
கொய்யாமரத்தில் எப்போது  பழுக்கும் எனத்தெரிந்த அணில்.  கல்யாணமுருங்கை   எப்போது பூபூக்கும் என அறியும் கிளிகள்.
தும்பிகளுக்கு மழைவருவது தெரியு!ம் களிமண்ணை பிரபஞ்சமாக்கி பச்சைப்புழுவைப்பறக்கவைக்கும் மந்திரம் குளவிக்குதெரியும்.
நமக்கு என்ன தெரியும்?


சிட்டுக்குருவிக்கு சின்ன கவிதையாவது எழுதி சமர்ப்பிக்கிறேன் இன்றைக்கு.

சிறகில் அடிபட்ட
சிட்டுக்குருவி ஒன்று
வீட்டு வாசலில் வீழவும்
சட்டென அதை எடுத்து
சேலைத்தலைப்பினைதூளியாக்கி
குருவியை படுக்கவைத்து
அருமையாய் வருடி கொடுத்து
மருந்திட்டுக்காத்துவந்தேன்
இரண்டுநாட்களுக்குள் குருவி
இல்லத்து மனிதர்களின்
உள்ளத்தில் ஒட்டிக்கொண்டது
சிறகுகள் சீரானதும் மனைச்
சிறைவைப்பது சரி இல்லையென
மனதைக்கல்லாக்கிக்கொண்டு
கையிலேந்தியபடி வான்நோக்கி
பறக்கவிடுகிறேன்
உற்சாகமாக உயரப்பறந்தகுருவி
திரும்பிவந்தாலும்
அறிந்துகொள்ளமுடியாத
ஊர்க்குருவியானது!


மேலும் படிக்க... "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?"

Monday, March 19, 2012

ஆண்டொன்று போனால்...!!

வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் கனவுகள் அல்லது பிரமைகள் என்கிறது ஜென் புத்தமதம். அப்படியானால் நமது பிறப்பு என்பதும் கனவா அல்லது பிரமையா? பிறந்து இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதால் கனவாய் இருக்க சாத்தியமில்லைஆயினும் கனவுகளில் நாம் பயணம் செய்வதை மறுக்கமுடியாது. எல்லாவற்றிர்க்குமே கனவு ஆதாரம் அது சில நேரங்களில் மெய்ப்படுகிறது.

பிரமை என்பது கொஞ்சம் ஒத்துக்கொள்ளகூடியதாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்வின் பலகணங்களை பிரமிப்போடுதான்கழித்துக்கொண்டிருப்பதாகப்படுகிறோம்.
புனரபி ஜனனம், புனரபி மரணம்
மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு. இந்த பஜகோவிந்த வரிகள் மனித வாழ்வை மட்டும் சொல்லவில்லை இந்த வரிகள் மிக ஆழமான அர்த்தம்கொண்டது.

பார்டிக்கள் இயற்பியல்,
காஸ்மாலஜி என்ப்படும் பிரஞ்சத்தின் தோற்றம், போன்றவைகள் எல்லாமே இதற்குள் அடங்கும்.
விஞ்ஞானிஐன்ஸ்டினின் பிரபல சமன்பாடு ( E = MC2) அணுவை பிளந்து சக்தியாக மாற்றி அணுசக்தியயை மனிதன் உபயோகிக்க வழி வகுத்தது. அணுகருவுக்குள் இருக்கும் துகள்கள் சக்தியாகவும், சக்தி மீண்டும் துகள்களாகவும் மாறிக்கொண்டுஇருக்கின்றன. இதுவே சிவசக்தி. சிவம் சக்தியாகவும், சக்தி சிவமாகவும்
மாறிக்கொண்டே இருக்கிறது. சிவதாண்டவத்தின் பின்னனி இதுவே.
குவாண்டம் மெக்கனிக்ஸ் விஞ்ஞானி நியல்ஸ்போர் 'இந்த மாதிரி தனிப்பட்ட துகள்கள் என்பதெல்லாம் ஒருவித கற்பனைதான். அவைகளை நாம் அறிந்து கொள்வதெல்லாம் மறைமுகமாகத்தான்.’ என்கிறார்.
.
'நம் எதிரே காணும் பொருள் தனிப்பட்ட ஒன்றல்ல. பிரபஞ்சத்தின்,
ஒரு பெரிய உண்மையின், நாம் உணரும்+ காணும் அத்தனையும் சேர்ந்த ஒரு மகா உண்மையின் வெளிப்பாடு' என்பது அரவிந்தர் வரிகள்.

என்ன திடீரென கனவு பிரமை, பிறப்பு மரணம் என்று பேச ஆரம்பித்துவிட்டேன் என்று பார்க்கிறீர்களா?:) காரணம்
கடைசியில் தெரிந்துவிடும்!


ஒப்பற்ற கவிதை ஒரு கவிஞனின் படைப்புத்திறனால்மட்டும் பிறப்பதில்லை உலகம் அதிர்ஷ்டம் செய்ததாலேயே பிறக்கிறது என்று சொல்வார்கள்.

எம் எஸ் அவர்களின் குறை ஒன்றும் இல்லை என்கிற பாடலைக்கேட்கும்போது பாடல்வரிகளின் எளிமை பாடியவரின் அசாத்திய திறமை இதெல்லாம் நாம் அதிர்ஷ்டம் செய்ததாலேயே கிடைத்ததாக தோன்றுகிறது.குறை ஒன்றும் இல்லை என்ற நினைப்பே நி்றைதானே!






அதுபோல நான் செய்த அதிர்ஷ்டம் எனக்குக்கிடைத்த நல்லபெற்றோர்கள். இங்கிவரை யான்பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் என்று தினமும் நினைத்துக்கொள்வதுபோன்ற அருமையான அப்பா அம்மா.
குழந்தை கண்ணனை இடுப்பில்வைத்துக்கொண்டு சந்திரனைப்பார்த்து தாய் சொல்லும் பாவனையில் பெரியாழ்வார் பாடிய பாடல் ஒன்று உண்டு.
எல்லா பக்கமும் ஒளி சூழ அதன் ஜோதி எங்கும் பரந்துஎன்ன செய்தாலும் அதெல்லாம் என் மகன் கண்ணன் முக ஒளிக்கு நேராகுமோ என்பதான பொருள்கொண்ட பாடல் . அதாவது முழுநிலவைப்போலமுகம் என்போம் அல்லவா? என்ன பிசாத்துமுழுநிலா நீ என் மகன் கண்ணன் ஜோதி முகம் முன்னாடி நீ ஒண்ணுமில்ல‘ என்கிறாராம் பெரியாழ்வார் பொங்கும் தாய்மைப்பரிவில்.

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து
சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யினும்
என் மகன் முகம் நேரொவ்வாய்

அப்படித்தான் நான் பிறந்த சில வருஷங்களுக்கு வீட்டில் தலையில்வைத்துக்கொண்டு கொண்டாடினார்கள்.இத்தனைக்கும் ஒன்றும் ராயல் ஃபாமிலி இல்லை..கூட்டுக்குடும்பம் கொண்ட நடுத்தர வர்க்கம்தான்..மாணிக்கம் கட்டி வைரம் இடைக்கட்டி ஆனிப்பொன்னால் செய்த தொட்டிலை ஓலைக்குடிசையில் இருந்துகொண்டு அண்ணலுக்கு பெரியாழ்வார் மானசீகமாய் அளித்தமாதிரி எங்கள் இல்லத்திலும்மகிழ்ச்சியை வானுயர அளித்தனர்..அப்புறம் உடன்பிறப்புகள் வந்ததும் பாசமும் அன்பும் பகிர்ந்துபோனது! ஆனாலும் இன்றைக்கும் பிறந்தவீட்டுக்கு விருந்தாளிபோல அவ்வப்போது போனாலும் அந்தப்பாசமும் அன்பும் சற்றும் குறைவில்லை. குறை ஒன்றும் இல்லை
உறவும் நட்பும் என்று வளர்ந்த நாட்களில் கிடைத்ததில் குறை ஒன்றும் இல்லை
பள்ளி ஆசிரியரிடமிருந்து வாழ்க்கைப்பாடமும் கற்கமுடிந்தது
தமிழை நேசிக்க வைத்த ஆதார வேர் பள்ளிக்கூடத்தில்தான் ஆரம்பமானது.
உதடுபடாமல் பேசாதே
உச்சரிப்புக்கொலை செய்யாதே
எதுவானாலும் மொழி அழகு
அதை மாற்றுங்கால் வரும் பிசகு
என்று இசைக்கவிரமணன் எழுதியதுபோல தமிழின் அழகை ரசிக்க இளம்வயதிலேயே முடிந்தது.
தமிழுக்கும் மதுவென்று பேர் என்றாரே பாரதிதாசன் !மதுமயக்கம் இன்னமும் தீரவில்லை!! தமிழ் கற்றால் குறை ஒன்றும் இல்லை.
புகுந்தவீடு கணவர் குடும்பம் குழந்தைகள் இங்கும் குறை ஒன்றும் இல்லை. கவலைகள் இல்லாமலே வளர்ந்தாயா அப்படியே இருக்கிறாயா என்றால் அது முழுக்க உண்மை இல்லை வருத்தங்கள் வார்த்தைகளால் காயங்கள் சோகங்கள் அவமானங்கள் சோர்வுகள் இல்லாமல்  வாழ்க்கை இல்லை. ஆனால் என்னைக்கவலைகள் தின்னத்தகாதென்று நின்னைச்சரணடைந்தேன் என்று பாரதி சொன்னதுபோலகவலைகளை மனதில்போட்டு உழன்றுகொள்வதில்லை.
எண்ணும் திறன் உள்ளவரை எண்ணுவோம், நமக்கு வசமாகி உள்ள கலைகளையும் காரியங்களையும் செய்வோம், நமக்கு முடிகிறவரையில் பிறருடன் நமது இன்பங்களையும் நாம் பிறருடைய துயரங்களையும் பகிர்ந்துகொள்வோம்’ மனதை மாத்திரம்புதிதாக வைத்துக்கொள்வோம் கர்மத்தொடர்பை ஆன்மா என்று எண்ணி விடக்கூடாது என்று அமரர் மகாகவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் சொல்வார்.
அதாவது நாம் செய்த செயல்களையும் அவற்றின்  விளைவுகளையும் தொகுத்துவைத்துக்கொண்டு அதுவே  நாம் என்று எண்ணிக்கொள்ளக்கூடாது.இப்படி வாழ்கிற வாழ்க்கைதான் வாழ்வாங்குவாழ்தல் என்கிறார் .
 அப்படி ஒரு வாழ்க்கை சித்தியானால் அது அமரவாழ்வு என்கிறார் பாரதி அதிமானிடவாழ்வென்றார் அரவிந்தர் அருள்வாழ்வென்றார் வள்ளலார்.

 விளங்கிக் கொள்ளமுடியாமல்  திணறுகிறோம் நாம்!
(இன்று (19.3.)புதிதாய்ப்பிறந்தேன் ஆகவே இப்படி ஒரு பதிவு எழுததோன்றியது)



--





மேலும் படிக்க... "ஆண்டொன்று போனால்...!!"

Wednesday, March 14, 2012

கனவில் எழுதும் கடிதங்கள்!








கடித விருந்தாளியை
எதிர்பார்த்து
கதவைத் திறந்தே
வைத்திருக்கும்
தபால்பெட்டியின்
வீட்டிற்கு
முன்னெல்லாம்
கார்டுசித்தப்பாக்களும்
கவர் பெரியப்பாக்களும்
வாழ்த்து அட்டை வசீகரிகளும்
வந்தவண்ணம் இருப்பார்கள்!

சிலமணி நேரங்களாவது
உடல் பொங்கப்பூரித்திருப்பார்
தபால்பெட்டிக்காரர்.

விலைவாசி அதிகமோ
விருப்பம்தான் இல்லையோ
விருந்தாளிகள் வருகை
அத்திப்பூ போலஆகிப்போனது.

பறந்து சென்ற புறா ஒன்று
‘என் நிலமைக்கு நீயும் வந்துவிட்டாயா?’
என்பதுபோல்
பெட்டி அருகே எட்டிப்பார்த்தபடி
பறந்துபோயிற்று.

கால ஆட்சி மாற்றத்தில்
செல்போன் செங்கோலாக
கம்ப்யூட்டர் க்ரீடமாகிவிட்டன!


சிம்மாசன மின்சாரம்
பம்மாத்து  செய்துவிட்டால்
கடிதப்பலகைமீது தான்
காலமே வந்து உட்காரப்போகிறது.
பார்க்கலாம் அதற்குள்
நானும் எழுதிவிடுகிறேன்
 சில கடிதங்களை ,
கனவிலாவது!

மேலும் படிக்க... "கனவில் எழுதும் கடிதங்கள்!"

Thursday, March 08, 2012

உதய கன்னி உரைப்பது கேட்டீரோ?







மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால் எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்கு!



மார்ச் 8 –ம் நாள் உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களைச் சிறப்பிக்கும் இந்நாள் பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.



இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.



ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதைக் குறிப்பிடத்தான் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.. பழங்காலத்தில் கிரேக்கத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வர பெண்கள் போராடினார்கள். பிரெஞ்சு புரட்சியின் போது பெண்கள் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத் தன்மை வேண்டி போராடினார்கள்



ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ள, உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க, அரசமாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது! அரசமாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் "கைது செய்வோம்" என்று மிரட்டிய அரசனின் மெய்காப்பளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கி கொன்றனர்.



இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்துபோனான். "கோரிக்கைகளைக் கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன்", என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்திருந்தவர்களைச் சமாதானப்படுத்தினான். இயலாது போகவும் அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்!



தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட.. ஆளும்வர்க்கம் அசைந்துகொடுக்கத் துவங்கியது.



இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்ட நாள் கோரிக்கையான வாக்குரிமை கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.



பிரான்சில், புருஸ்ஸியனில் (Prussian King) இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாளாகும்! அந்த மார்ச் 8-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.


இத்தனை அல்லல் பட்டு கிடைத்த இந்த நாளின் பெருமையை சில மகளிரே உணர்ந்திருக்கவில்லை முழுமையாக.

ஆமாம்! "மங்கையராய்ப்பிறப்பதற்கே மாதவம் செய்திடவேண்டுமம்மா" என்றார் கவிஞர் ஒருவர். அப்படிப்பட்ட உயர்நிலையை தக்கவைத்துக்கொண்டிருக்க தவறிக்கொண்டிருக்கிறோம். நமது இளைய தலைமுறைகளுக்குச் சரியான வழிகாட்டியாக முந்தைய தலைமுறைபெண்களில் சிலர் இருப்பதில்லை. அதற்கு உதாரணம் அழகிப்போட்டி.





இதில் பங்குபெற எனக்குத்தெரிந்த ஒரு மத்தியதரக்குடும்பத்துப்பெண்மணி தன் மகளை மேடைக்குப் போட்டித் தேர்வுக்கு அனுப்பி இருந்தார். பள்ளியில் நடந்த அழகுப்போட்டியில் அழகுராணியாக அவள் மூடிசூடிக்கொண்டதைப் பெருமை வழியக்கூறி இனிப்புகளை அனைவருக்கும் விநியோகித்தார். அழகுப்போட்டியில் கலந்துகொண்ட அந்த ஒன்பதுவயதுக்குழந்தை அழகான குட்டிப்பெண் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லைதான். ஆனால் படிப்பிலும் சுட்டியான அந்தக்குழந்தை எப்போதும் வகுப்பில் முதல் ராங்க். எம் ஐ டி யில் ஏரோநாடிக்ஸ், தொடர்ந்து மாஸ்டர் டிகிரி என முடித்துவிட்டு விண்வெளி ஆராய்ச்சிக்குச் செல்லவேண்டும் என்பது அவளின் லட்சியம். இப்படி படிப்பை நோக்கிய லட்சியப்பாதையில் செல்லும் குழந்தைகளை அழகிப்போட்டி திசை திருப்பிவிடுகிறது.




கொலை, வன்முறை, குண்டுவெடிப்பு, ஆள்கடத்தல், குழந்தைகளின் பாலியல் வன்முறை கொடுமைகள், உள்நாட்டு அரசியல் லஞ்சங்கள், அதில் சிக்கிக்கொண்ட பெரியதலைகள், தீவிரவாத தாக்குதல்கள், அந்நிய நாடுகளுடன் கருத்து வேற்றுமைகள் என்கின்ற பலவிதமான சோர்வுகளுக்கு நடுவே இந்தியாவுக்கு உலக அழகியாக இந்தியப்பெண் ஒருவர் முடிசூடிக்கொள்வது சற்று ஆசுவாசத்தைத் தருகின்றது.



விளையாட்டுத்துறை, வணிகத்துறை என்று இந்தியா பின்தங்கி இருந்தாலும் அழகுத்துறையில் இந்தியா முதலிடம் பெற்றது பெருமையாகிவிட்டது!



வணிக நிறுவங்களும் தங்களது பிஸினஸ் முன்னேற்றத்திற்கு அசுர விளம்பரம் செய்து பெண் என்னும் பிரமாதமான சரக்கினை அது அள்ள அள்ளக்குறையாத தங்கச்சுரங்கம் என்ற எண்ணத்தில் அழகிப்போட்டிகளை நடத்த ஆரம்பித்தனர்.



வணிக நிறுவனங்களின் வியாபாரத்திற்குத் தங்களை விட்டில் பூச்சியாக பலி கொடுப்பதைப் போட்டியில் பங்கு கொள்ளும் அழகிகள் அறிய நியாயமில்லை.



"பெண் என்றால் அழகு; ஆண் என்றால் வீரம்" என்னும் நீண்டகாலப்பாகுபாடு எத்தனையோ காலமாகியும் காப்பாற்றப்பட்டு வருவதால், இதன் உச்சக்கட்ட மோசடியாக நடப்பது அழகிப்போட்டி என்றாகிறது.



தங்களைப் பிறருக்காக அழகுப்படுத்திக்கொள்வதில் பலப்பல பெண்கள் தங்கள் நேரத்தை, சிந்தனையைச் செலவழிக்க நேரிடுகிறது. தங்கள் ஆற்றல், பண்பு, சிந்தனை என்று எதையும் வளர்த்துக்கொள்ளாமல் அழகுப்பதுமைகளாகவும் அலங்காரப்பொருட்களுமாகவே இருந்துவிடுகிறார்கள். போட்டிகளில் பங்கு பெறும் இளம் பெண்கள் ஒரு கனவுலகில் வாழ்கிறார்கள்!



இன்றைய நம் தமிழ்ச்சமுதாயத்தில் அழகுப்போட்டிக்கான சிந்தனை அவளை விபரீதமான இடத்தில் கொண்டு நிறுத்துகிறது.



மனதைச் சலனப்படுத்தி மாய உலகில் அவளைச் சஞ்சரிக்கவைக்கிற அழகுப்போட்டிகள் நமக்குத்தேவைதானா?

இதனைப் பெற்றோர் உணரவேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.

விளையும் பயிருக்கு வேலியாய் பெற்றோர் இருக்க வேண்டும். அதுவும் பெண் எனும் இளம்பயிரைத் தாய் எனும் வேலி பேணிக்காக்க வேண்டும்.



"குடும்பம் என்பது ஜனநாயக பண்புகளை வளர்க்கும் தொட்டிலாக இல்லை" என்று ஐ நா வின் அறிக்கையே கூறுகிறது.



போன தலைமுறைப் பெண்களைவிடவும் இந்தத் தலைமுறைப் பெண்களின் சிந்தனை வேகம் கூடி இருக்கிறது.



ஆகவே இந்தியா போன்ற ஏழைநாட்டிற்கு அவசியமில்லாத அழகுப்போட்டியில் தன் மகளை கலந்துகொள்ள வைப்பதைவிட, ஆற்றலை வளர்த்துக்கொள்ள சிந்தனையை சீராக செலுத்திக்கொள்ள பயிற்சி அளிக்க வேண்டும்.



மனிதநேயம், தன்னலமற்ற பாசம் பகிர்ந்துகொள்வது, பரஸ்பரம் விட்டுக்கொடுப்பது, பண்பு கலாசாரம் ஆகியவற்றை மதிப்பது போன்றவைகளை சிறுவயதிலேயே குழந்தைகளூக்குப் பாலோடுபுகட்டும்போது சாதகமான சமூக, கலாசார, அரசியல், பொருளாதார மாற்றங்களை இளைய தலைமுறையினரால் கொண்டுவர இயலும்.



இத்தகைய உன்னத நிலைக்கு நம் குழந்தைகளைக் கொண்டு செல்ல நாம் பாடுபடுவோம். இவற்றுக்கு எதிரான அழகுப்போட்டி போன்ற சக்திகளைப் பலவீனப்படுத்துவோம்!








அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில்

அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!



பாரதியின் வரிகளை பாரெங்கும் முழக்குவோம்!


(நன்றி இன்று என் இந்தக்கட்டுரையை வெளியிட்ட இந்நேரம்.காமிற்கு)











--







மேலும் படிக்க... "உதய கன்னி உரைப்பது கேட்டீரோ?"

Sunday, March 04, 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!(தொ.ப)

பள்ளிக்கூடம் என்கிற வார்த்தையே எத்தனை அழகானது!
 எழிலான  ஒரு தமிழ்ச் சொல் பள்ளி என்று சொல்லலாம். கல்விக்கூடம் என்று சொல்லாமல் பள்ளிக்கூடம் என்று ஏன் சொல்கிறோம்? பள்ளி என்றால் நேரடிப்பொருள் இடம் என்பதாகும். பள்ளத்தில் இருப்பது பள்ளி.முன்காலத்தில் குருகுலவாசம் என்று மரத்தடியில் கல்விகற்க மாணவர்கள் கூடுவார்கள். ஆசிரியர்  மேட்டில் அமர்ந்திருக்க கீழே பள்ளமான பகுதியில் மாணவர்கள் அமர்ந்திருப்பார்கள்.


பள்ளிக் கூடம் = ஆறு போல் பல படிப்புகள் வந்து ஒன்றாகத் தேங்கும் பள்ளம் , பள்ளி! .பாடசாலை என்கிறார்கள் இலங்கையில். அழகான பொருள் கொண்ட சொல்தான் இதுவும்.



திருப்பள்ளி எழுச்சி இறைவனுக்கு சொல்கிறோம். இறைவன் இருக்குமிடம்  சிறந்தது அல்லவா அதனால் திருப்பள்ளி.   ’அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமானபங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே* என்கிறாள் ஆண்டாள் திருப்பாவையில் அதென்ன பள்ளிக்கட்டில்?

!

* பள்ளி = பள்ளிவாசல் என்பது சமய வழிபாட்டு இடம்!

* பள்ளி = படுக்கை என்றும் பொருள்.சங்ககாலப்பாடல்களில் இதற்கு உதாரணம் உள்ளது.  பள்ளியறை என்பது படுக்கை அறை!

* பள்ளி = மடைப்பள்ளி என்பது சமையல் அறை! இன்னமும் வைணவர் வீடுகளில் சமையல் அறையை திருமடப்பள்ளி என்பார்கள் அது திரிந்துஇன்று  திருமாப்படி ஆகிவிட்டது !


வேளாண்மை நிலங்கள், வரப்பில் இருந்து பள்ளமாய்த் தான் இருக்கும்! அங்கே உழுபவன் = பள்ளன்/ பள்ளத்தி! அங்கே பாடும் பாட்டு = பள்ளுப் பாட்டு!மனதின் ஆழத்திலிருந்து வரும் பாட்டு பள்ளுப்பாட்டு! (முக்கூடற் பள்ளு) அதான் பாரதி  ஆடுவோமே பாட்டு பாடுவோமே என்று சொல்லவில்லை.ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்றான் போலும்!

பள்ளிவாசல் என்பது இறைவனின் கருணை வந்து தேங்கும் பள்ளம்! பிரார்த்தனைத் தலம்!

 பள்ளி அறை = உறங்கும் அறை, மற்ற பகுதிகளை விடச் சற்று தாழ்வாத் தான் இருக்கும்! மேட்டில் உறங்காமல், சற்றே பள்ளமான இடத்திலேயே உறங்குவார்கள்! மேட்டில் உருண்டு விழுந்தால் அடி பலம்:) பள்ளமே கள்ளத்துக்குச் சரி என்று பதிவர் கேஆர் எஸ் தன் வலைப்பூவில்  கூறியதை அப்படியே இங்கே காப்பியடிக்கிறேன்:)


 மடைப் பள்ளி  என்னும் சமைக்கும் இடமும் அப்படியே! பல பேருக்குச் சமைக்கும் இடம், சற்றே பள்ளமாக இருக்கும்! பெரும் பாத்திரங்களை இறக்கிச் சமைப்பார்கள்!


அரசனின் அரியணை உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், அது ஆடாமல் என்றுமே நிலையா நிக்கணும்! அதன் பொருட்டு, அதன் கால்கள் அங்கேயே சற்றே பள்ளத்தில் ஆழ்ந்திருக்கும்!

அப்படித் தான் இறக்கிக் கட்டுவார்கள்! அப்படியான அரியணைக் கட்டில் = பள்ளிக் கட்டில்!

இறைவன் கொலுவிருக்கும் இடமான பள்ளிக் கட்டில் = அரியணை! அந்த அரியணையைத்தான் ஆண்டாள் பள்ளிக்கட்டில் என்கிறாள் தன் பாசுரத்தில்.

 பள்ளிக்கட்டு (டில்) சபரிமலைக்கு, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை-ன்னு பாட்டும் நினைவுக்கு வரணுமே!

எதற்கு இப்படி பள்ளிக்கு  இன்று இவ்வளவு முக்கியத்துவம் என்றால் பதிவர் கணேஷ் அவர்கள்  என்னை தொடர்பதிவாக  எழுத அழைத்துள்ளார். மீண்டும் பள்ளிக்கூடம் போக சொல்கிறார்! ரொம்ப பின்னாடி நான் போகணும் இதுக்கு! தம்பி உடையாள் படைக்க அஞ்சலாமா?:) அதனால்  நினைவுக்கு வருவதை இங்கே படைக்கிறேன்!!கொஞ்சம் பெரிய படையல் பொறுமையா படிங்க  ..உங்களை மாட்டிவிட்ட புண்ணியம் கணேஷுக்கே!!!

            *************************************************

சர்ச்பார்க் கான்வெண்டிற்கு வாயில் சாக்லேட்டை சுவைத்தபடியே ஆங்கிலத்தில் அம்மாவிடம் ‘பை மம்மி’ என்றும், ‘இட்ஸ் கெட்டிங் லேட்,, கோ ஃபாஸ்ட்’ என்று கார் ட்ரைவரிடம்  சொல்லியபடிகறுப்பு நிற  காரில் போனதாகவும் ரீல் விட ஆசைதான் ஆனால் பொய் சொன்னா போஜனம் கிடைக்காதாமே..  சாப்பிடாம எப்படி உயிர்வாழறது இன்னும் எழுதி எல்லாரையும் எப்படிப்படுத்தறதாம் அதனால நிஜத்தையே சொல்லிடறேன்:)
    
அப்போல்லாம் இந்த எலிகேஜி பூனை கேஜில்லாம் கிடையாது நேரா ஒண்ணாம்கிளாஸ்தான் நான் பள்ளிக்குப்போக  மூணுவயசிலிருந்து ஒற்றைக்காலில் நின்னதால் அம்மா என் அப்பாக்குத்தெரியாம 2வயசு ஜாஸ்திபோட்டு ஒண்ணாங்கிளாசில் சேர்த்துட்டாங்க ஆள்வேற அப்படித்தான் பம்ளிமாஸ் மாதிரி இருப்பேனா யாருக்கும்  சந்தேகமே வரலையாம்.ஆனா இந்த வயசுக்கூடுதலாய் போட்டதுக்கு அம்மா இன்னிவரைக்கும் அப்பாகிட்ட அர்ச்சனைவாங்கிட்டு இருக்காங்க:)( என்னவோ நான் பெரிய கலெக்டர் வேலை பாக்கறமாதிரி  கரண்டி உத்தியோகம்தான் கல்யாணம் ஆன நாள் முதலாய்!!!)

வீட்ல அப்பாவின் பெற்றோர்கள்  கல்யாணமாகாத தங்கைகள் அதாவது என் அத்தைகள் என்று கூட்டுக்குடும்பம் குடும்பத்தின் முதல் பேத்தி நான் தான் ஆகவே அளவுக்கு மீறீய செல்லம் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்துவிடுவார்கள். தினமும் பள்ளிக்கூடம் போய்விட்டுவரும்போது சிலேட்டை வழியில் தொலைத்துவிடுவேன் கேட்டால் காற்றில் பறந்துவிட்டது என்பேனாம்!  இரண்டாம் வகுப்புவரை இரண்டு டஜன் சிலேட்டுகளை தொலைத்துவிட்டேனாம்!! சிலேட்டையாவது தொலைத்தால் சரி ஒருநாள்  இரண்டாம் வகுப்பு பரிட்சை எழுதிவிட்டுவருகிறபோதே நானே தொலைந்துவிட்டேனாம். அன்று.வீட்டில் ஒரே கலவரமாகிவிட்டது  ஏகப்பட்ட தெய்வங்களுக்கு மஞ்சள்துணிமுடிப்புகள் பிரார்த்தனைகள் அழுகை கண்ணீர் கதறல்.

கடைசியில் என்னை சாத்தாரவீதி முனையில் ஒரு மனிதன்  கையில் கண்டுபிடித்தார்களாம் அவன் சொன்னது,”இந்தப்பொண்ணு காலாற இப்படியே நட்ந்துவந்திச்சி.... கைல பள்ளிக்கூட பை ஒண்ணூமில்ல ஆனா பள்ளிக்கூடத்திலிருந்துவரேன்னு சொல்லிச்சி...எங்கேவீடுன்னா சொல்லத்தெரியல,’தாகமாயிருக்கு கூல்ட்ரிங்  வாங்கிகொடுன்னிச்சி அப்றோம் கடலைமிட்டாய் லேகா உருண்டை கொடுக்காப்புளின்னு செலவு ஏழுரூபாய்க்குமேல(இன்னிக்கு 700ரூ) வச்சிடிச்சி...பணத்தைகொடுத்திட்டு புள்ளையைக்கூட்டிப்போங்க’ என்றானாம் . அவன்  கடத்திப்போக வந்தவனோ அல்லது வழிதெரியாமல் போனவளை காப்பாற்ற வந்தவனோ பதட்டத்தில் அவன் கேட்ட  பணத்தைகொடுத்துவிட்டு மீட்டுவந்தாராம்.

அதற்குப்பிறகு நாலாம்வகுப்புவரை அத்தைகளில் ஒருவர் அரைகிலோமீட்டர் அருகிலிருந்த பள்ளிவரைகொண்டுவிடுவது திரும்ப அழைத்துவருவது என்று பொறுப்பேற்றனர்.
சின்ன அத்தை பாதிதூரம் மூச்சிறைக்க தூக்கிக்கொண்டே வந்துவிடுவார்! அவ்வளவு பிரியமும் பாசமும்!

பள்ளிக்கூட ஆண்டுவிழாவிற்காக   எனக்கு நடனம் கற்றுக்கொடுத்தார்கள். அப்போ பிடித்தது நடன ஆசை.யாராவது வீட்டிற்குவந்தால் அவர்கள்  ஆ என்பதற்குமுன்பாக  ஆட  ஆரம்பித்துவிடுவேன். நிறுத்தவே மாட்டேன். பாதிபேர் இதற்குபயந்துகொண்டே அதிகம் வீட்டிற்குவராமல்போய்விட்டார்கள்.:)

அப்பா எழுத்தாளராயிருந்ததால்(இருப்பதால்) வீட்டில் மாடி ரூமில்வெள்ளைதாள்கள் நிறைய இருக்கும். ஒருநாள் அதில் ஒன்றை எடுத்து ஒரு ஜோக் எழுதும்போது அம்மா வந்துவிட்டாள்” மொட்டை மாடில் உக்காந்து வடாத்தைப்பார்த்துண்டு பாடம்படின்னா  என்ன எழுதறே பேப்பர்ல?” என்றாள்/

ஜோக்கும்மா

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... படிச்சிக்கிழி போதும். ஏற்கனவே ஸ்கூல்போனா ட்ராமா டான்ஸுன்னு பொழுதைதள்ளிட்டுவரே இதுல ஜோக்கு கதைன்னு ஆரம்பிச்சிடாதே உருப்படியா படிக்கணும் என்ன?


ஆனால் அப்பா பார்த்து புகழ்ந்துதள்ளிவிட்டு அதை விகடனுக்கு எப்படி அனுப்புவதென சொல்லி அதை அனுப்பி ஜோக்கும் வெளிவந்து விட்டது.ஆஹா அன்று பள்ளிக்கு எல்லாருக்கும் பாரிஸ் சாக்லேட் தந்தேன். என்னவோ  ஞானபீட பரிசு  வாங்கினகினமாதிரி பள்ளியே என்னை அன்று கொண்டாடியது.

கூடப்படிச்சபொண்ணு(பேர்மீனா)கணக்கு நோட்டை வாங்கி காப்பி அடிச்சி ஹோம் ஒர்க் பண்ணிட்டுத் தர்ரதா வீட்டுக்குக் கொண்டுவந்தேன்.வரவழியிலயே வழக்கம்போலஅதை எங்கயோ தொலச்சிட்டேன் ..அவகிட்ட நடந்ததை சொன்னேன். 'தொலைசிட்டியா நீ ?இருஇரு எங்க பெரியப்பாகிட்ட உன்னைமாட்டிக்கொடுக்கறேன்'னு பயமுறுத்தினா மீனா.



அவள்பெரியப்பா போலீஸ்காரர்.மல்லிகைப்பூ அக்ரஹாரத்தை ஒட்டிய போலீஸ் குவார்ட்டஸ் வாசலில் , காக்கி உடை அவரைவிட விறைப்பாய் தெரிய கொடுவாள்மீசையோடு பாத்தாலெ நடுங்கறமாதிரி இருப்பார். ஐயோ போலீஸ் பெரியப்பா என்னை விலங்குமாட்டி ஜெயில்ல போட்டுடுவாரா?



வீட்டிற்கும் தொலைத்த கதை சொல்லவில்லை.'உனக்கு ஒண்ணூம் இழுங்கா வச்சிக்கத் துப்பு இல்லை' என் அர்ச்சனை விழுமெனும் பயம்!



அம்மாமண்டபம்போகும்வழியில் ஒருசின்ன பிள்ளையார்கோயில்வரும்..


அங்கேபோனேன்.."பிள்ளையாரப்பா!மீனாவோட கணக்குநோட்டு

தொலைஞ்சிபோச்சு ..அதுக்கு அவ போலீஸ்பெரியப்பாகிட்ட சொல்லி என்னை ஜெயில்லபோடபோறா போல இருக்கே?.அந்த பெரியப்பா உயிரோட இருந்தா தானே என்னை ஜெயில்ல போடுவாரு அவரைஉயிர் போகச் செய்துடு..அவரை சாகடிச்சிடு' னு கண்ண மூடி வேண்டிட்டு நிமிர்ந்தா......... எதிரே மீனா ! பக்கத்துல போலீஸ்காரபெரியப்பா!

அய்யோ!
தலைதெறிக்கஓட இருந்தவளை பெரியப்பா லபக் ன்னு பிடிச்சார் ."எங்கஓடறே?"


"வ வந்து..." (இப்போதும் அன்னிக்கு என் கண்முழி நெட்டுப்போனதையும் கைகால் நடுங்கியதையும் மறக்கமுடியவில்லை)



"கணக்கு நோட்டைதொலைச்சிடியாமே நீ ?சொல்லிச்சு எங்கவீட்டு பாப்பா..."



""ஆஅ ஆமாஅ. தெ தெ தெரியாஆஆம...".(பிள்ளையாரேஇப்பொகூட லேட் இல்ல ..இங்க இவருதலைக்கு

மேல தொங்கிட்டு இருக்கறபெரிய வெங்கலமணீயை டமால்னு தள்ளிவிட்டு அவர் மண்டைய உடச்சிடு.. )



கண்ணமூடினவளின் காதுல தேனா ஒருகுரல்!



'கவனமா இருக்கணும்ம்மா.இனிமே தொலைக்காதே என்ன? போனாப்போவுது நீயும் சின்னபுள்ளதானே?மீனாகூட பழைபடி பேசுபழகு..அவளும் பேசுவா"



எனக்குபோன உயிர் திரும்பி வந்தது!




ஐந்தாவது வகுப்பிலிருந்து எங்கள் கிழக்குரங்காபள்ளிக்கூடத்தைவிட்டு ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலில் 6த்ஸ்டாண்டர்ட் சேர்ந்தபோது அருகில் இருந்த பாய்ஸ் ஹைஸ்கூலைக்கடந்துதான் செல்லவேண்டும். அந்தப்பக்கமே பாக்காமல் நேராபோகணம் தெரிஞ்சுதா என்று வீட்டில் அதட்டி அனுப்பிவைப்பார்கள். கொஞ்சமாய் ஓரக்கண்ணால் பாய்ஸ் கேர்ல்ஸை பாக்கறாங்களான்னு பார்த்துக்கொண்டே போயிடுவோம் நாங்க நாலைஞ்சிபேர்!
 
குடுகுடுராமசந்திர ஐயர் என்று ஒரு வாத்தியார் இருந்தார் அவர் குடுகுடுவென வேகமாக நடப்பார் என்பதால் பாய்ஸ் ஹைஸ்கூலில் அந்தப்பட்டபெயர் அவருக்கு .அவர் இரண்டுபள்ளிகளுக்கும் காம்ப்வுன்ட் குறுக்கே இருக்கும் சின்ன தடுப்புகதவுவழியே வந்து பாடம் எடுப்பார். என்னவோ அவரைப்பார்த்தாலே எனக்கு சிரிப்பு வந்துவிடும் ஒழுங்காய் பாடம் கவனிக்கும் மற்ற மாணவிகளையும் சிரிக்கவைத்துவிடுவேன்.

ஏழு எட்டாம் வகுப்புகளில்
பள்ளியில் NCCயில் சேர்ந்துவிட்டேன்  ஞாயிறுகளில் சிற்றஞ்சிறுகாலை காக்கி உடுப்போடு பள்ளிக்குப்போய்விடுவேன்  பின்ன ரங்கபவன்லேந்து சூடா இட்லி வடை சாம்பார் கிடைக்குமே!

 அம்மா,’என்சிசில சேர்ந்தா நாளைக்குகல்யாணம் ஆகுமா இவளுக்கு?  எதுக்கு ஆண்பிள்ளையாட்டம் பாண்ட் சர்ட் போட்டுண்டு போறா வேண்டாம்னு சொல்லுங்கோ” என அப்பாவிடம் சொல்லிச்சொல்லி  இரண்டேவருஷத்தில் அதிலிருந்து நான்விலகும்படி ஆகிவிட்டது அதற்குள் ஜே1 சர்டிஃபிகேட் வாங்கிவிட்டேன்! எல்லையில் நின்று ராணுவச்சேவை செய்ய நினைத்தவளை வீட்டில் அரிசிசேவை செய்ய வைத்த  பாவம்(புண்ணீயம்?:) என் தாயையே சேரும்!!

எழுத்தாளர் ஜெயகாந்தன்  சிறுமியாய்  இருக்கறப்போ வீடுவந்தார் அவரையும் விடவில்லை"   மாமா தெற்குவாசல்போய் கூல்ட்ரிங்க் வாங்கித்தாங்க" என்றேன் . கருப்பாயிருந்தாலும் ஹாண்ட்சம்மாய் இருப்பார். எப்போ பார்த்தாலும் சிகரெட் கையில் இருக்கும். ‘ஏன்மாமா சிகரெட் பிடிக்கறீங்க?”
‘பிடிச்சதை பிடிக்கறேன்மா’ என்பார் சிரித்தபடி எனக்கு ஒன்றும் புரியாது.
‘ஏம்மா உனக்கு கூந்தல் சுருட்டையா அழகா இருக்கே தவிர  நீளம் போதலையே  அதுக்கு ஒரு தைலம் வாங்கித்தரேன்” என்று தெற்குவாசல் கடையில் ஒரு கூந்தல் வளர் தைலம் வாங்கிக்கொடுத்தார்.
அடுத்த ஏழெட்டுமாதத்தில் திருச்சி தேவர் ஹாலில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தவர் மறுபடி ஸ்ரீரங்கம் வீடுவந்தார் அப்போ கேட்டார்’ என்னம்மா  வளர்ந்திச்சா?’ நானும், “ ம்ம் வளந்திச்சி மாமா  அந்த கூந்தல் தைலக்கம்பெனி வியாபாரம் நாந்தான்  நிறைய வாங்கறேன் ஆனா என்  தலைமுடி அப்படியே இருக்கு” என்றேன் சிரித்துவிட்டு .

அப்பாவிடம்,’இதுமகாவால்’என்றார்.

அப்பாவோடு பல எழுத்தாளர்கூட்டங்களுக்குப்போயிருக்கிறேன் கவனமெல்லாம்  கேசரி வெண்பொங்கல் பஜ்ஜி வாசனையில்தான் இருக்கும் மேடை சொற்பொழிவை கவனிக்காமல் விட்டதற்கு இப்போது வருந்துகிறேன்! குயிலன் என்றொரு மகாகவிஞர் வருவார் வீட்டுக்கு அவரிடம்  ‘ஏன்மாமா இவ்ளோ கருப்பா இருக்கீங்க” என்று கேட்டுவிட்டேன் அவரும் .”அதான்மா நான் குயிலன்” என்றார். அவர் போனதும் அப்பா அம்மாவிடம் எனக்கு கிடைத்தது லட்சார்ச்சனை! பின்னாளில் அவர் கவிதைகளை  வாசித்தபோது கண்பனித்தது அவரிடம் பழைய நிகழ்வை சொல்லி மன்னிப்பு கேட்டேன்  “ என்னம்மா நீ? குழந்தை மனசாய் இருப்பதுதான் இயல்பு அதுக்கு எதையும் மறைக்கத்தெரியாது  வயசானாலும் நீ குழந்தைமையை இழக்காதே’ என்றார் பெருந்தன்மையாக.

ப்ளஸ்டூ வரை பள்ளியில் படிப்பைவிட மற்ற கலை நிகழ்ச்சிகளில் நான் பிரசித்தம். மதிய இடைவேளையில் சாப்பிட்டதும் சகமாணவிகள் என்னிடம் ஏதும் கதை கேட்பார்கள் இட்டுக்கட்டி அளந்துவிடுவேன் அதை ரசித்து மகிழ்வார்கள்.அப்பாவின் தொடர்கதை அப்போது  ராணி யில்வந்துகொண்டிருந்தது.சில ஆசிரியைகள் தொடரின் அடுத்தபாகம் என்ன விறுவிறுப்பா இருக்கு என்று கேட்பார்கள்.’தெரியாது டீச்சர்’ என்றாலும் உள்ளூறப் பெருமை தாங்காது.

துணி நீயப்பா என்று  பழம் நீயப்பா பாடல்பாணியில் பாட்டு எழுதி  மாம்பழம் முருகன் வினாயகர் சம்பவத்தை  அப்படியே நவீனமாய் மாற்றி  பள்ளி பிரிவு உபசார நாளுக்கு ஸ்கிரிப்ட் தயாரித்தேன்.  அதை பிறகு திருச்சிவிவித்பாரதியில் விரும்பிக்கேட்டு ஒலிபரப்புமளவுக்கு  பிரபலமானது.

ஆக  எனக்கு இப்போ ஏதாவதுகொஞ்சம் சுமாரா எழுதவருகிறதென்றால் அதற்கு வித்திட்டது என் பள்ளிக்கூட நாட்கள்தான். பசுமை நிறைந்த நினைவுகள் மட்டும் மிச்சமிருக்கஅன்று என்னை  ஆதரித்த ஆசிரியர்களும் தோழிகளும்  பழகிய அனைவரும்  இன்று எங்கங்கோ சிதறி இருக்கிறார்கள்.....  என்றாவது மீண்டும் கண்டால் அவர்களுக்கு சொல்ல என்றே நல்லகதை ஒன்றையும் வைத்திருக்கிறேன்!

இது தொடர்பதிவு  ஆகவே நான் இதைத்தொடர நாலுபேரை அழைக்கிறேன் அவர்களும் பள்ளி நினைவுகளை அசைபோடும்படி அன்போட கேட்டுக்கறேன்.

1மாதவன்

2ஷக்திப்ரபா

3மகேந்திரன்

4புதுமாப்பிள்ளை தக்குடு!



மேலும் படிக்க... "மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!(தொ.ப)"

Thursday, March 01, 2012

எண்பதைக் கடந்த எளியவர்!

நகைச்சுவை உணர்வு கொண்டிருப்பவர்களை சற்று புத்திசாலிகள் என்பார்கள். நகைச்சுவையாகவே எழுதுபவர்கள்  கண்டிப்பாக அதிபுத்திசாலிகள் என்றால் அது மிகை இல்லை.
நாலுபேரை சிரிக்க வைப்பது சாமான்ய செயல் இல்லை. அழ அழ பெரிய கவிதை எழுதுவது எளிது சிரிக்க சிரிக்க  சின்ன கட்டுரைகூட எழுதுவது கடினம். நன்றாக வாய்விட்டுச்சிரித்தால் உடல் எடை கணிசமாய் குறையுமாம்! இதை அமெரிக்க மருத்துவர்கள் சொல்கிறார்கள். மகிழ்ச்சியாக பேசிக்கொண்டே சாப்பிட்டால் சாப்பாட்டில் சக்கரையின் அளவுகூட அதிகமாய் கூடாதாம்! சிரிப்பே சிறந்த மருந்து என்று சும்மாவா சொன்னார்கள்?!

யாமறிந்த  நகைச்சுவைகளிலே தமிழரின் நகைச்சுவைபோல் எங்கும் காணேன் என்று  தைரியமாக சொல்லலாம்!

நகைச்சுவையில் நம் தமிழ்மக்களை  மிஞ்சமுடியாதுதான்.. பழைய எழுத்தாளர் நாடோடியிலிருந்து பலர் நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர்கள். ஏன் தி ஜா  கூட தன் சிறுகதைகளில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை வர்ணிக்கும்போதே சிரிப்பு வந்துவிடும். ராஜேந்திரகுமார் ஙே என்று முழிக்க வைத்தே சிரிக்கவைப்பார். பல பிரபல எழுத்தாளர்கள் நகைச்சுவையை முயன்றிருக்கிறார்கள்.
சுஜாதா மட்டும் என்ன அவரது பல சிறுகதைகளை ஊன்றிப்படித்தால் நைசாக சிரிக்கும்படி சில வாக்கியங்கள் இருக்கும். அதை அவரிடமே நாங்கள்  குடும்ப நண்பர்கள் என்பதால் உரிமையுடன் சந்திக்கும் போது கூறி அவரிடம் வெட்கப்புன்னகை வரவழைத்துவிடுவோம்! அதிலும் என் உடன்பிறப்புகள் இருக்கிறார்களே அவர்கள் மூவரும் அவரிடம்,”அதென்ன சார் ஸ்ரீரங்கத்தில் அந்த லேடீஸ் சைக்கிளில் போகும் அந்த '.......' மாமா யார் ஸார், அதற்கு அந்தரங்கக்காரணம் இருக்கிறது என்று வேற எழுதி இருக்கீங்க?’ என்று கேட்டு தர்ம சங்கடத்தில் ஆழ்த்த அவரென்னிடம்”என்னம்மா  உன் தம்பிகள் இப்படி வாலாய் இருக்கிறாங்க?” என்று சிரித்தபடி கேட்பார்.

(நான் கேக்கமுடியாது ஆதான் அவங்கள அனுப்பினேன் என்றால் நீ பெரியவாலா இருக்கியேன்னு சொல்லிடுவார்!:0

சோவின் சடையரில் மெலிதான நகைச்சுவையை பெரிதும் ரசிக்க முடியும். பாக்கியம் ராமஸ்வாமியின் சீதாப்பாட்டி அப்புசாமியை  தேவனின் துப்பறியும் சாம்புவை  யாரால் மறக்கமுடியும்?க்ரேசிமோகன் ஜிகே  என்று பலர் நாடக உலகிலும் திரை உலகிலும் !

சித்ராலயா கோபுவின்  திரை வசனங்களைப்பற்றி  சொன்னால் சூரியனுக்கு ஒளிவிளம்பரம் கொடுக்கிறமாதிரி இருக்கும்!
ஜேஎஸ் ராகவன் என்னும் நகைச்சுவை எழுத்தாளர் வாழைப்பழத்தில் ஊசியாய் நகைச்சுவையை எழுத்திதள்ளுவார் அனாயாசமாக!

இணைய உலகில் காமெடி மன்னர்களாய்   அம்மாஞ்சி, திரு.அப்பாதுரை,தக்குடுபோல பலர் இருக்கிறார்கள்.

பெயரில் கடுகு அகஸ்தியன் என்றெல்லாம் வைத்துக்கொண்டு
எழுத்தால் உயர்ந்த மனிதரானவர் இவர். சமீபத்தில்  எண்பதுவயதைக்கடந்துள்ள திரு பிஎஸ் ரங்கநாதன் அவர்களின் நகைச்சுவை கதைகளைப்படித்திருக்கிறீர்களா? ஒருமுறை ரயிலில் நான் அவருடைய   சிறுகதையை தீபாவளிமலரில் படித்தபடி  சிரித்துக்கொண்டே  இருக்கவும் அருகில் அமர்ந்திருந்த பலர் என்னை  லூசுப்பெண்ணோ என பார்த்தது நிஜம்!

இந்த நகைச்சுவை ஜாம்பவான்களை எல்லாம் ஒரே மேடையில் பார்த்தால் எப்படி இருக்கும்?

கடுகுசாரின் எண்பதாம் பிறந்த நாள் வைபவத்தில் பார்த்துவிட்டேன்!  கடுகு சார்  மிக எளிமையாகப்பழகுகிறார்! உன்னதங்கள் அனைத்துமே ஆர்ப்பாட்டமில்லாதவை தான்.

 ((மேடையில் துக்ளக் சத்யா அவர்கள்,ராணி மைந்தன்சித்ராலயா கோபு ஜே எஸ் ராகவன் பாகியம் ராமஸ்வாமி(ஜராசு) காத்தாடிராமமூர்த்தி கல்கி ஆசிரியராயிருந்த ராஜேந்திரன்)

கீழே எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை இயக்குநர் சிவி ராஜேந்திரன்சுரேஷ்பாலாவின் குடும்பம் இன்னும் சில சின்ன பெரியதிரை நடிகர்கள் இயக்குநர்கள்  வந்திருந்த அந்த நிகழ்ச்சி  கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய் அமைந்தது.

சித்ராலயா கோபு அவர்கள் இயக்குநர் ஸ்ரீதருடன் தான் பணிபுரிந்த நினைவுகளை அசைபோட்டார். எழுத்திலும் வயதிலும் முதிர்ந்த எழுத்தாளர்களின் அனுபவங்களை மேடையில் கேட்பது நமக்கு புது அனுபவமாக இருந்தது.




க்ரேசிமோகன் கடைசிநேரத்தில் வெளியூர்போக நேர்ந்ததால் வரவில்லை அவர் எழுதி அனுப்பிய வெண்பா வாழ்த்துக்கவிதைகளை ராணிமைந்தன்  வாசித்தார். க்ரேசியின்  வெண்பாக்கள் பல நான் வாசித்ததுண்டு நீங்களும் கண்டிப்பாக  வாசிங்க அற்புதமாய் இருக்கும்!
செவிக்கும் வயிற்றுக்கும் சிறந்த உணவு அளித்து புறப்படும்போது நல்ல  அழகானபிரயாணப் பை ஒன்றில் நான்கு புத்தகங்கள்(நானூறு ரூபாய்க்குமேல்  இருக்கலாம்)
 போட்டு கொடுத்தார்கள்.

க்ளிக்ரவி எனும் பிரபல புகைப்படக்காரர் நல்ல எழுத்தாளரும் கூட. அவரது கைவண்ணம் இம்மாதிரி நிகழ்ச்சிகளில் பிரசித்தம்.



மேடையில்  நகைச்சுவை  நடிகர் நகைச்சுவை எழுத்தாளர்கள் என்று ஆண்கள்தான் அமர்ந்திருந்தனர். ’பெண்கள் யாரும் அந்தத்துறையில் பிரபலமாகலைபோல்ருக்கு  ஒரு எழுத்தாளர்கூட இல்லையே?” என்றார் ஒரு பெண்மணி -என்அருகில் அமர்ந்திருந்தவர்.

‘சில காமெடிப்பதிவுகள் வலையிலும் இன்னும்சில கட்டுரைகள் பத்திரிகைகளிலும்    என்று ஷைலஜா என்பவருடையது வந்திருக்கு ...நகைச்சுவை அவங்களுக்குப்பிடிக்கும் அதனால்  ஓரளவு வரும் இன் ஃபாக்ட் அவங்க பத்துவயசில் எழுதின முதல் படைப்பே ஒரு ஜோக்தான்..’ என்று சொல்ல நினைத்தேன் வேண்டாம் அதுவே ஜோக்காகிடும் என்று நினைத்து யாகாவாராயினும்  என்று வள்ளுவர் எதைக்காக்க சொன்னாரோ அதைக் கஷ்டப்பட்டு காத்துவிட்டேன்!!:)


கடைசியாய்இந்த இடுகையில் ஒருத்தருக்கு  நன்றி சொல்லணும் அவருக்குப்பிடிக்காதுன்னாலும்!!ஆமாம்  நன்றி  மின்னல்வரிகள் வலைப்பூவின் அதிபர்  கணேஷுக்கு..அவர்தான்  இந்த நிகழ்ச்சிக்கு நான் வர ஏற்பாடு செய்து என்னை  அந்த இடத்திற்கும் அழைத்துச்சென்ற அன்புச்சகோதரர்.. இருவரும் ஹாலில்  நுழைந்தபோதே சபை நிறைந்துவிட்டது!!!(காரணம்  தெரிஞ்சிருக்குமே?:)))
மேலும் படிக்க... "எண்பதைக் கடந்த எளியவர்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.