Social Icons

Pages

Friday, March 29, 2013

பணயம்.




பெரம்பலூர்- திருச்சி நெடுஞ்சாலையில் அந்த புளியமரத்தடியின் கீழ் வந்து நின்றாள் ராஜேஸ்வரி. கைபிடித்து நடந்து வரவேண்டிய ஏழுவயது மகளை ஒருகிலோமீட்டருக்குமேல் தூக்கிவந்ததில் நிழலில் நின்றதும் மூச்சுவாங்கியது. அப்போதும் இடுப்பிலிருந்து தோளில் போட்டுக்கொண்டாளே தவிர மகளை கீழே இறக்கவில்லை. முதல்நாள் மதியத்திலிருந்து நடு இரவு வரை ஊரில் பெரியமனிதர்கள் சிலரிடம் நியாயம் கேட்டுப்போராடியதிலும் , பிறகுஅருகிலிருந்த அஞ்சுபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்குப்போய் புகார் கொடுத்தும் பயனில்லாமல்போனதிலும் மனது வெறுத்துப்போயிருந்தது.

    ஏழைச்சொல் என்றைக்கு அம்பலமேறி இருக்கிறது? பணம் என்கிற மூன்றெழுத்துதான் எத்தனை பேர் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது! பயம் என்கிற மூன்றெழுத்தும் அப்பாவிகளின் வாயைக்கட்டிப்போட்டு இருக்கிறது. தலை நகரிலேயே இன்று அநீதி நடக்கிறது என்கிறபோது குக்கிராமத்தில் அது தலைவிரித்து ஆடாதா என்ன?

    அந்த நிலையிலும் ராஜேஸ்வரிக்கு விரக்தியில் சிரிப்பு வந்தது. ஆனாலும் நடந்தகொடுமைக்கு உடன் தீர்வு கிடைக்காமல்போனதில் நடுச்சாலையில் ஏதாவது நாலுசக்கரவாகனத்தின் கீழ் விழுந்து செத்துப்போய்விடலாமா என்றும் தோன்றிவிட்டது.

    ‘துயரங்களுக்கும் அவமானங்களுக்கும் சாவுதான் தீர்வென்றால் உலகின் ஜனத்தொகை பாதியாகத்தான் இருக்கும். பைத்தியக்காரி! பத்து கிளாஸ் படிச்சிருக்கே பாரதியை கரைச்சிக் குடிச்சிருக்கே, அப்படியுமா சிந்திக்க மறந்துபோகும்? நடந்த அக்கிரமத்தை நாடறியச்செய்யவேணாமா அதுக்குத்தானே காலை எழுந்ததும் மகளோடு பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருக்கிறே? போராடு ராஜேஸ்வரி போராடு. ’என்று மனம் அரற்றியது.

    ’பாஆஆம்’ என்று ஹார்ன் அடித்துக்கொண்டு ஒரு பஸ் பெரம்பலூரிலுந்து வந்துகொண்டிருந்தது கூட்டம் காரணமாய் நிற்காமலேயே போனது.

    “அய்யெயோ போயிட்டானா நிக்காமயே?’ என்று ஓலமிட்டபடி மூச்சிறைககொட்டி வந்தாள் ஒரு நடுததரவயதுப்பெண்மணி.

    ராஜேஸ்வரியைப்பார்த்து,” வடியலூர் கிராமமிருந்து ஓடிஓடி வாரேன்..ஊருக்குள்ள வழக்கமா வர்ர மினி பஸ்ஸும் இன்னிக்கு வரல ரண்டுமைலு நடந்துவந்தேன்மா படுபாவி பஸ்ஸை நிப்பாட்டாமயே எடுத்துப்போறான்.. சாவு வீட்டுக்கு பாடாலூர்க்குப் போயாவணும் நான் ...ஆமா நீ எங்கிட்டுப்போவணும் ?” என்று கேட்டாள்.

    ’திருச்சிக்கு”  குரலில் சுரத்தின்றி சொன்னாள் ராஜேஸ்வரி. மனம் என்கிற  கண்ணுக்குத்தெரியாத  ஒன்றுசிதைந்துபோ ய்விட்டால் உடலே இற்றுத்தான் போய்விடுகிறது!

    ”எல்லா பஸ்ஸும் பாடாலூர் வளிதானே திருச்சிபோகும்? ஆமா நீ வடியலூர்க்காரி மாதிரி இல்லையே கெழக்கால வேற ஊருந்துவரியா?”  அவளும் விடாமல் கேள்விகேட்டாள்.

    ”ஆமா, இங்க நாமப்பட்டிலேருந்து”

    ”ஐயே! அந்த மாஜி எம் எல் ஏ குமரவேலு குட்டிச்சுவர் ஆக்கின கிராமம் தானேஅது? நாசமாப்போறவன் பெரம்பலூர்ல அப்பாவிஜனங்க பலபேரோட நெலத்தை அபகரிச்சவன் ..’ என்று வெறுப்பாய் வார்த்தைகளை உமிழ்ந்தாள்.

    ’கிராமத்தை மட்டுமா குட்டிச்சுவர் செய்தான் அப்பாவிஜனங்க நெலத்தைமட்டுமா சூறையாடினான்? என் என்..?. ’மனசு கதறுவதை  ராஜேஸ்வரி  உணர்ந்தாள்.

    அந்தப்பெண்மணி காலியாய் வந்த ஆட்டோவினைக் கைதட்டினாள். அதில் ஏறும்போது,”சாவு வீடும்மா நேரத்துக்கூப்போகலேனா உறவு சனம் தப்பா நெனக்கும் பணம் போனாலும் போவட்டும்னு நான் கெளம்பறேன் ..” என்று சொல்லியபடி ஏறிப்போனாள்.

     ராஜேஸ்வரி கண்பனிக்க மகளை தோளோடு இறுக அணைத்துக்கொண்டாள். சுருட்டிப்போட்ட  துணிபோல  அவள் தோளில் கிடந்தாள் சுமதி.     “ராஜ்ஜீஈஈ...” என்று தூரத்தில் கூவலாய் குரல் கேட்கவும் திரும்பினாள்.  மீனாட்சி , அவளின் ஆத்ம சிநேகிதி. ஓட்டமாய் ஓடிவந்தவள்,” ராஜி..காலைல தாண்டி கள்ளக்குறிச்சிக்குப் போனவ திரும்பி ஊருக்கு வந்தேன் வந்ததும் வீட்டுக்காரர் விவரம் சொன்னாரு பதறிப்போய் உன்னை வீட்ல தேடினேன் பூட்டிக்கிடந்திச்சி நீ பஸ் ஏறத்தான் போயிருக்கணம்னு இங்க ஓடியாந்தேன் என்னடி இது அக்கிரமம்? இதை ஊர்ல ஒருத்தரும் தட்டிகேக்கலயாமே என்புருஷனும் பயந்தாராம் ’ஏதும் வாயதுறந்தா ஊர் பள்ளிக்கூடத்துல பாக்குற உன் வாத்தியார் வேலைக்கு உலை வச்சிடுவோம்’னு அந்த படுபாவி அதட்டினானாம். ராஜீ! குழந்தையோட தனியா எங்கடி பொறப்பட்டுப்போற? கைல காசு இருக்குதா? நான் ஒரு நானூறு ரூபா கொண்டுவந்துருக்கேன் வச்சிக்கடி..திருச்சில நீ தினம் சமையல் வேலை செய்திட்டுவர்ர வக்கிலம்மா வீட்டுக்குத்தான் போகப்போறியா?” என்று அக்கறையாயும் ஆற்றாமையாகவும் கேட்டாள்.

    “மீனாட்சி.! வக்கீலம்மா நேத்து மதியமே சென்னைக்கு கிளம்பிட்டாங்க. மகளுக்கு பிரசவம்னு ஆறுமாசம் மகளோட அமெரிக்கால இருக்கப் போயிருக்காங்க அவங்க மட்டும் ஊர்ல இருந்தா நேத்து இந்த அக்கிரமம் நடந்ததும் போன் போட்டு சொல்லி நாமப்பட்டிக்கு வரவழைச்சி அந்த அரக்கனுங்களை அழிச்சிருப்பேன் எனக்கும் அதிர்ஷ்டத்துக்கும் தான் பொறந்ததிலெருந்தே சம்பந்தம் இல்லையே .. பொறந்ததும் பெத்தவங்க விபத்துல செத்துப்போனாங்க வளர்த்தவங்கவேண்டா வெறுப்பா ஒரு சமையக்காரனுக்கு என்னைக் கட்டிவச்சாங்க ..அவனும் வேலைய விட்டு இப்போ வீட்டோட குடி சீட்டுன்னு கெடந்தாலும் குழந்தைக்கு அப்பனா வீட்டுல துணையா இருக்கான்னுதான் அந்தாளுகிட்ட சுமதியை விட்டுட்டு தினம் வேலைக்குப் போயாந்தேன்.. நேத்து திடீர்னு நான் மதியம் வீடு வந்தப்ப வேலியே பயிரை மேய்கிறதுக்கு மாடுகளை அனுப்பி இருக்குதுன்னு தெரிஞ்சிட்டேன் ,,,அப்பதான் நான் அருவெறுப்பின் உச்சிக்கேப் போயிட்டேன்,, பாரதி சொல்வானே,’திக்கு குலுங்கிடவே எழுந்தாடுமாம் தீயவர் கூட்டமெல்லாம்,தக்குத்தக்கென்றே அவர்-குதித்தாடுவார் தம்மிரு தோள் கொட்டுவார்;’னு அதுபோல வஞ்சக ஆண்கள் சிலர் நி்றைஞ்சிருக்கிறஉலகம் விரிக்கிற சூதை அறிஞ்சிக்க முடியாம நிராதரவாக சிக்கிக் கொள்கிற பாஞ்சாலிகளா இன்னமும் என்னைமாதிரி பெண் இனங்கள் இருக்காங்க..’வையகம் காத்திடுவாய் கண்ணா’ன்னு கைதுக்கி கூவினால் கண்ணன் காப்பாத்த வரமாட்டான் ஏன்னா இது கலிகாலம்டி கலிகாலம்“

    “ஆமா ராஜி..நடந்திருக்கிறது மகா கொடுமை. இதுல உன் புருஷன் சம்பந்தப்பட்டிருக்கிறதுதான் அதிர்ச்சியா இருக்கு. அந்த படுபாவி குமரவேலுக்கு பயந்து பழியை வேற உன் மேல போடறானாமே என்ன அநியாயம் இது?”

    “தர்மத்தின் வாயதனை சூது கவ்வும்னு தெரியாமயா சொன்னாங்க மீனாட்சி? புருஷன் குடிகாரனா இருக்கலாம் நாலு காசு சம்பாதிக்கத் துப்பில்லாதவனா வீட்டுல கிடக்கலாம் ஆனா பெத்த குழந்தையை காமுகங்க கிட்ட பணயம் வைக்கிற கையாலாகாதவனா இருந்தா அவனோட வாழவாமுடியுமா அதான் நான் கிளம்பிட்டேன் திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. சரி மீனாட்சி மணி எட்டிருக்குமா இப்ப? பஸ் வரமாதிரி இருக்குது.. நான் திருச்சில வக்கீலம்மா மூலமா பழக்கமான சில பெரியமனுசங்களைப் போய்ப்பாக்கப் போறேன், நடந்ததை சொல்லி அந்த அரக்கனுங்களுக்கு தண்டனை வாங்கித்தரப்போறேன்.. நீ கெளம்பிப்போடி மீனாட்சி.என்னால உனக்கு ஏதும் ஆபத்து வரப்போகுது பாவம்”

    “தனியா .. எப்.. எப்படி ராஜி.?” தேம்பினாள் மீனாட்சி.

    “பருவப்பொண்ணு இல்லையேடி முப்பத்திமூணு வயசாகுது... போராடணும்னு மனசுல ஒரு வெறி வந்திட்டது அதனால நீ கவலைப்படாம ஊருக்குப்போ..வக்கீலம்மா எனக்கு முன்கூட்டியே இப்படி நடக்கும்னு தெரிஞ்சோ என்னவோ ஆறுமாச சம்பளம் கொடுத்திட்டுப்போயிட்டாங்க..ஆட்டோவுல  தனியாப்போக  பயமா இருக்குதுடி  யாரை நம்பறதுன் னு தெரியல அதான்  பஸ்ஸுக்குக்காத்துருக்கேன்”

    ராஜேஸ்வரி சொல்லும்போதே பெரம்பலூர்-திருச்சி என்ற போர்டு போட்ட பஸ் ஒன்று புளியமரத்தடியில் வந்து நின்றது.கூட்டம் பிதுங்கித் தெரிய ஃபுட்போர்டில் நிறைய இளைஞர்கள் கையில் புத்தகம் மற்றும் மொபைலுடன் நின்றுகொண்டிருந்தார்கள்,

    மகளுடன் பஸ்ஸில் ராஜேஸ்வரி ஏறி உள்ளே சென்று நின்றுகொண்டாள்.

    மீனாட்சி கண்ணைத் துடைத்துக்கொண்டு கை அசைத்தாள்.

    பஸ்ஸிற்குள்ளும் பெரும்பாலும் கல்லூரிமாணவர்களும் மாணவிகளுமாக நிற்பதை ராஜேஸ்வரி பார்த்தாள். வழக்கமாய் அவள் திருச்சிக்கு சமையல்வேலை செய்யும் வீட்டிற்கு ஒன்பதுமணி பஸ்ஸில்தான் போவது வழக்கம் அதில் இவ்வளவு கூட்டம் இருக்காது.இன்று எட்டுமணி பஸ்ஸில் இத்தனைக்கூட்டத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் கல்லூரிமாணவர்களின் உல்லாசக் கூக்குரல்கள் அதை ரசித்து ஊக்கப்படுத்திய ட்ரைவரின் உற்சாகம் எல்லாமே அவளுக்குப் புதுமையாக இருந்தது.

    ”ரேய்ட்:” என்று கண்டக்டர் கூவியதும் ட்ரைவர் பஸ்ஸை ஸ்டார்ட் செய்தபோது, ஒரு இளைஞன்,”ட்ரைவர் மச்சான்!  பாட்டு போடலியே இன்னிக்கு? செவ்வாக்கிழமை அல்வா நடிகை அமீதா நடிச்சபடத்துப்பாடலா போடணும்னு சொல்லி இருக்கேனே?” என்றான்.

    “டேப்பு ரிப்பேர் மாப்பு/ நாளை சரியாகிடும்” அசடுவழிய ட்ரைவர் சொல்ல”அப்போ நாங்களே பாடிடறோம் மச்சான்” என்று வாயால் விசில் அடித்தான்.

    நின்றுகொண்டிருந்த ராஜேஸ்வரியிடம் நடுத்தர வயது மதிக்கலாம் போலிருந்த கண்டக்டர்”எங்கம்மா போவணும்”என்றதும் “திருச்சி ரண்டு டிக்கட்” என்றாள் கையிலிருந்த பர்சிலிருந்து ஐம்பதுரூபாய் நோட்டினை எடுத்தபடி.

    “பாப்பாக்கு என்ன வயசு?

    ஏழுங்க”

    ” ஏஏஏழுவயசுப்புள்ளையை இடுப்புல தூக்கிவச்சிட்டு நிக்கணுமா? ” கிண்டலாய் கண்டக்டர் கேட்டார்.

    ”உடம்பு சரி இல்லைங்க அதான்” அழுகையை அடக்கியபடி பதில் சொன்னாள்.

    ”சரி சரி அப்படி செண்ட்டர் கம்பியைப் பிடிச்சிட்டு நில்லும்மா , விழுந்துகிழுந்துவைக்கப்போறே?”

    பஸ் பாட்டும் கூத்துமாய் அமர்க்களப்பட்டது. ஒரு பெரியவர் முகம் சுளித்தபடி,””ஏன்ப்பா பிள்ளைகளா படிக்கிற வயசுல இவ்வளவு உல்லாசம் பொது இடத்துல தேவையாப்பா?” என்று சிடு சிடுக்காமல் ஆதங்கமுடன் தான் கேட்டார் .

    அதற்கே ஒரு இளைஞன் சுர்ரென கோபம் தலைக்கேற அவர் அருகே வந்து ’”யோவ் பெருசு இந்தவயசுல உல்லாசமா இல்லாம உன்னை மாதிரி போற வயசுல இருந்தா அது தேவலியா? பொத்திக்கிட்டு சும்மா கெட ஆம்மா” என்று அதட்டினான்.

    பெரியவர் வெறுப்புடன் பாரவையை சுற்றிலும் சுழற்றியவர் இடுப்பில் மகளுடன் நின்று கொண்டிருந்த ராஜேஸ்வரியிடம்,

    ” அம்மாடீ நீ இங்கிட்டு வந்து உக்காந்துக்கம்மா... நான் பாடாலூர்ல இறங்கிடுவேன் அதுவரை நான் நின்னுக்கிட்டுவரேன்” என்று சொல்லியபடி இருக்கையைவிட்டு எழுந்தார்.

    “பரவால்லீங்க பெரியவரே” என்று ராஜேஸ்வரி தயங்கினாள்.

    அதற்குள் அவர் எழுந்துவிடவும் ராஜேஸ்வரி கண்களால் அவருக்கு நன்றி தெரிவித்தபடி அங்கே போய் அமர்ந்தாள்.ஜன்னல் ஓர இருக்கையாக இருக்கவும் காற்று பலமாய் வீசியதால் மடியில் போட்டுக்கொண்ட மகளின் உடம்பில் சேலை முந்தானையை பரப்பி போர்த்திவிட்டாள்.

    “ம்மா மாம் மா” மகளின் அனத்தல் கேட்டு அவள் காதோரம் குனிந்து,”வலிக்குதா சுமதிக்கன்ணு?” என்று கேட்டாள்.

    “ஆமாம்மா ரொம்ப வலிக்குது. “

    “பொறுத்துக்கடா தங்கம் திருச்சில ஆஸ்பித்ரிக்குப்போயி காட்டறேன் அம்மா காலைல மருந்துபோட்டேன் இல்ல அதுலயே குணமாயிடும் கொஞ்சம் பொறுத்துக்கோ ராஜாத்தி”

    “ம்ம் சரிம்மா”

  பஸ்ஸில் இளைஞர்களின் கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.மாணவிகளை நோக்கி அவர்கள் வீசிய ஆபாச வார்த்தைகள் உடம்பை கூசவைத்தன அந்தப்பெண்கள் ஒன்றும் அதற்கு ஆட்சேபணை தெரிவிக்காமல் ரசிப்பதுபோல வெட்கப் புன்னகையை பதிலுக்கு வீசினர்.

    பாடாலூர் வரவும் பஸ் நின்றது அந்தப்பெரியவர் இறங்கிக்கொண்டார்.

    வேறு சில பயணிகளும் இறங்கிக்கொள்ள குப்பென ஏழெட்டு இளைஞர்கள் பட்டாளமாய் ஏறினர்.

    .”வாங்கதலைவரே” என்று ட்ரைவர் வாயெல்லாம் பல்லாய் ஒருவரைப்பார்த்து வரவேற்க மற்றவர்கள் வாயில் விரல் வைத்து சீழ்க்கை அடித்து தங்கள் மகிழ்ச்சியைத்தெரிவித்தனர்.

    தலைவா என்று அழைக்கப்பட்ட இளைஞனுக்கு இருபது வயதிருக்கலாம். தலைமயிரை உச்சிவரை சிலுப்பினதுபோல வாரிக்கொண்டிருந்தான்.வாயில் சூயிங்கம்போல ஏதோ வஸ்துவை மென்றுகொண்டிருந்தான். முட்டிக்கால் அருகே வேண்டுமென்றே கிழித்துவிடப்பட்டிருந்த ஜீன்ஸிலும் கட்டம்போட்ட அரைக்கை சட்டையிலும் மற்ற இளைஞர்களிடமிருந்து தனித்தே வித்தியாசமாய் தெரிந்தான்.

    “வாட்ஸ் அப் யார்?” என்று ஸ்டைலாக கேட்டபடி பஸ்ஸிற்குள் பார்வையை சுழற்றியவன் ராஜேஸ்வரியையும் அவளுக்குப்பின்னே அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயதுப்பெண்மணியையும் பார்த்துவிட்டு,” என்னப்பா இது வழக்கமா இளவட்டம் ஏறும் பஸ்ஸுல ஒரு முதியவட்டமும். முப்பதுக்குப்பக்கம்போலிருக்கிற நாட்டுக்கட்டையும் ஏறி இருக்குது?” என்றான் கிண்டலாக.

    ராஜேஸ்வரிக்கு எரிச்சலாக வந்தது.

    முகத்தை ஜன்னல்பக்கமாய் திருப்பிக்கொண்டாள்.

    “ஒகே கமான் கேர்ல்ஸ்! லெட்ஸ் சிங் அ சாங் நௌ” என்றான் தலைவன்.

    “என்ன பாட்டு மாப்பிள?”

    “என்னடா கேள்வி இது இன்னமும். உலகத்தையே கலக்கிட்டு இருக்கிற ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி டீதான்  அதுக்குப்பிறவு  என்ன  பாட்டும்  சொல்லிக்கறமாதிரி இல்லயே? கங்ணம் ஸ்டைலு பாட்டுஒகே ஆனா  பலபேருக்கு  அதுக்கு டான்ஸ் ஸ்டெப்பு போடத்தெரியல அதான்  கொலைவெறி்யே  பாடிடலாம்”

    ”வாவ் சூப்பர் தலீவா! ” என்று ட்ரைவர் பெரியகுரலில் சொல்ல இளைஞர்கள் அனைவரும் அந்தப்பாடலை பாட ஆரம்பித்தனர் வெட்கப்பட்டும் தயங்கியும் அம்ர்ந்திருந்த இளம் பெண்களிடம்” ஹலோ கேர்ல்ஸ் பாட்டே உங்களுக்காகத்தான் இதை நீங்களும் சேர்ந்து பாடலேன்னா எப்புடீ? என்று கேட்க அவர்களும் வேறுவழியின்றி பாட ஆரம்பித்தனர்.

    கூச்சல் காதைப்பிளக்கவும் உற்சாக நயாகாரா பெருக்கெடுக்க தலைவன் என்று அழைக்கப்படட் இளைஞன் .”சும்மா பாடினாபோதுமா ஆடவும் செய்யணும்?”என்று அனைவரையும் உசுப்பினான். மாணவிகளையும் ஆடச்சொல்லி வம்பு செய்ய ஆபாச அங்க அசைவுகளுடன் பஸ்ஸின் குலுக்களுக்கு ஏற்றபடி நடனம் ஆரம்பமானது.

    ராஜேஸ்வரிக்குப் பின்னால் அமர்ந்திருந்த நடுத்தரவயதுப்பெண்மணி,” காலம் கலிகாலமாகிப்போச்சி... பெத்தவங்க இவங்கள கஷ்டப்பட்டு காலேஜுக்கு படிக்க அனுப்பினா இவங்க இப்படி பாட்டு கூத்துன்னு கொண்டாடிட்டு இருக்காங்க. ஏதும் தட்டிக்கேட்டா’ வாயமூடு பெருசு’ ம்பாங்க இதுக்குத்தான் நான் இந்த காலேஜ் பசங்கபோகிற பஸ்ஸுல ஏற்றதே இல்ல என்னவோ இன்னிக்கு பெரம்பலூர்ல பஸ் கிளம்பறப்போ காலியா கெடந்திச்சீன்னு ஏறிட்டேன் பாடாலூர்ல ஏறின பையன் அரசியல் செல்வாக்கு உள்ள மனுஷனோட பையன் அதான் இந்த துள்ளல் துள்ளுறான்...’ என்று பின்பக்கமிருந்து முன்புற இருக்கையில்அமர்ந்திருந்த ராஜேஸ்வரியின் காதில் கிசுகிசுத்தாள்.. அதை எப்படியோ மோப்பம்பிடித்துக் கேட்டுவிட்ட ஒரு இளைஞன் “ ஏய் கிளவி என்னா வாய் நீளுது எங்க தலைவனைப்பத்தி புகாரா பேசுற ஆங்?” என்றான் ஆக்ரோஷமாய்.

    “யாரு யாரு அது? ஏய் ட்ரைவர் வண்டிய நிப்பாட்டு”

    தலைவன் என்று அழைக்கப்பட்ட இளைஞன் கட்டளையிட பஸ் சாலை ஓரமாக ப்ரேக் போட்டு நின்றது.

    தலைவன் அந்தப்பெண்மணியை நோக்கி விழி சிவக்க வரும்போது ராஜேஸ்வரி பொறுமை இழந்த குரலில்,” தம்பி, நிதானமாப் பேசுங்க” என்றாள்.

    அவ்வளவுதான் அவன் கோபமெல்லாம் ராஜேஸ்வரியின் மீது திரும்பிவிட,” அப்படீங்களா? மொதல்ல எந்திருங்க ?” என்றான் கிண்டலாக,

    “எ எதுக்கு நான் எந்திரிக்கணும்?”

    ராஜேஸ்வரியும் சற்று கடுப்பாகவே கேட்டாள்.

    “அடச்சீ தலைவர் நிக்குறாரு நீ குந்திக்கிட்டே பேசுவியா? மரியாதை தெரியுமில்ல அதுக்குதான்...” என்று சீறினான் இன்னொரு இளைஞன்.


    ராஜேஸ்வரிக்கு ஏற்கனவே முதல்நாளின் மன உளைச்சலும் உடல் அசதியும் சேர்ந்து அவளை நிற்கவும் திராணியற்றுப்போக செய்திருந்தது. அதனால்,” என்னால நிக்கமுடியாது” என்றாள் உறுதியான குரலில்.

    .    ”எ என் என்னது முடியாதா?” என்று கேட்டவன் “நீ எந்திருச்சி நிக்கிறவரைக்கும் பஸ் கெளம்பாது” என்றான் எகத்தாளமாக .


    அவன் நண்பர்கள் ஆமோதிப்பது போல கைதட்டி பெரிதாக சிரித்தனர் “அப்படிப்போடு அருவாள தலைவா” என்று கெக்கலித்தனர்.

     ‘‘தம்பி. வேணாம் ..என் நிலமை தெரியாம் பேசாதீங்க.. நான் அவசரமா திருச்சிக்குப்போகணும்”

    ”நாங்ககூடத்தான் காலேஜுக்கு நேரத்தோட போவணும் இல்லைன்னா சோடாபுட்டி ப்ரின்சி திட்டும் . நாங்களும் மணிக்கணக்கா நின்னுக்கிட்டே வரோம் தெரியுமில்ல?”

    ”அது உங்க உல்லாசத்துக்கு நிக்கறீங்க எனக்கு அதைப்பத்தி கவலை இல்ல பஸ்சை எடுக்க சொல்லுங்க தம்பி”

    ”அப்போ மன்னிப்பு கேட்கணும் நீயும் அந்தக்கிளவியும்”

    ”எதுக்கு மன்னிப்பு கேக்கணும் அதெல்லாம் முடியாது”

    ராஜேஸ்வரி பிடிவாதமாய் இப்படி சொல்லியபோது மடி்யில்படுத்திருந்த சுமதி,”அ அம்மா... ரொம்ப வலிக்குதும்மா” என்று முனகியகுரலில் சொன்னாள்.

    ஏதோ குரல் மட்டும் தெளிவின்றி காதில்விழுந்ததும், “தலைவன் “ ஏய் பேசற பிள்ளையை மடிலபோட்டுக்கிட்டு கைக்குழந்தை வச்சிருக்கிறது போல ட்ராமா பண்ணிட்டு இருக்கியா? நானும் ஏதோ கைகுழந்தைக்காரின்னு இரக்கப்பட்டு இத்தினிநேரம் உக்கார அனுமதிச்சேன் எருமைக்கடாவை மடிலபோட்டுக்கிட்டு நீ குந்தி இருக்க நாங்கல்லாம் நிக்குறோம் இப்போ அதையும் நிக்க வச்சிட்டு நீயும் எந்திரிக்கணும்”என்று மிரட்டினான்.

    “நானாவது எழுந்திருப்பேன் என் குழந்தையால அதுமுடியாது அவளுக்காகதான் நானும் உக்காந்திட்டுதான் இருப்பேன்”

    ”ஏய் பொம்பளே எங்க தலையை எதுத்தா பேசறே?” என்று இன்னொரு மாணவன் அவள் அருகே வந்து ஒருகையால் அவளின் முன்தலைமயிரைக் கொத்தாய்ப் பிடித்தபடி இன்னொருகையால் சுமதியை அவள் மடிலிருந்து அலட்சியமாய் நகர்த்தவந்தபோது....

    ,”ட்ட் டேய் .....எவ்வனாவது என் குழந்தைமேல கையை வச்சீங்க வ்வெட்டிடுவேன் விரலை.. ஆம்மா...கொலைகாரியாத்தான் மாறுவேன்.. என் குழந்தையால் எழுந்து நிக்கமுடியாதுன்னா புரிஞ்சிக்கமாட்டீங்க இல்ல? காரணம் சொன்னாத்தான் புரிஞ்சிப்பீங்கன்னா சொல்லிடறேன்..வேலி ஒண்ணு காவல் காக்காமல்சொந்த பயிரையே மேய்க்க மாடுகளை அனுப்பின கதையை விவரமா சொல்லறேன். கேட்டுட்டு உங்க இளைய தலைமுறை என்ன முடிவு எடுக்கணுமோ அதை செய்யுங்க.எங்கியாவது பெத்த அப்பனே குடிபோதையில் சீட்டு விளையாடி தோத்துப் போனதுக்கு பணயமா பெத்தமகளை அதுவும் ஏழுவயசு குழந்தையை காமுகங்க கிட்ட பணயம் வைச்ச சம்பவத்தை கேள்விப்பட்டிருக்கீங்களா? என்வீட்ல என் குழந்தைக்கு அது நடந்தது. நேத்து மதியம் திருச்சில நான் சமையல் வேலை செய்யறவீட்டிலேருந்து திடீர்னு நாமப்பட்டிக்கு என்வீட்டுக்கு வந்தேன். ஏற்கனவே ஜுரத்துல இருந்த மகளை கவனமா பாத்துக்க சொல்லிட்டுதான் வெளில போயிருந்தேன், ஆனா பாதுகாக்க,வேண்டியவன் பாதகசெயலுக்குக்,காவலாயிட்டான். விட்டுத்திண்ணைல புருஷன் குத்துக்கல்லா உக்காந்திருக்க உள்ளேருந்து ரெண்டு ஆம்பிளங்க வரவும் திகைச்சிப்போயி நான் உள்ளபோய்ப்பார்த்தா என் மகளை பச்சிளம் சிறுமியை துணீயை உருவிப்போட்டு அந்தக்காமுகங்க பாலியல் வன்முறை செய்திட்டுப்போயிருக்காங்க. வாயைக் கட்டிப்போட்டதுல குழந்தையால் கதறக்கூட முடியல உடம்பெல்லாம்கீறலும் காயமும், துடையெல்லாம் ரத்தம். இந்தக்கொடுமையை பெத்த தாய் நான் பார்த்து பதறிப்போயி புருஷனைப் பிடிச்சி உலுக்கினேன்.

    .”:என்னடி செய்யறது நானோ சம்பாதிக்கல உன் சம்பளமோ குடும்ப செலவுக்கே போதல சீட்டாடுனதுல ஒருவாரமா கடன் தொகை ஏறிடிச்சி அதான் குமரவேலும் அவன் ஆளும் கேட்டுக்கிட்டதால அப்படி செஞ்சேன்’ன்னு சொன்னதும் அவன் முகத்துல காரிஉமிஞ்சிட்டு ஊர் பஞ்சாயத்துல போய் முறையிட்டேன். அஞ்சுபுரம் போலீஸ் ஸ்டேஷன் போயி கதறினேன் அதுக்குள்ள புருஷனும் குமரவேலு என்கிற அந்த அரசியல் செல்வாக்கு கொண்ட மனுஷனும் கதையை மாத்திட்டாங்க நாந்தான் மகளை திருச்சில வேலை செய்றவீடடில் கூட்டிட்டுப்போயி பாலியல் வன்முறை நடக்க காரணமாயிருந்தேனாம். இதுக்கு புருஷனும் வக்காளத்துவாங்கினான் எனக்கு ஆதரவா வந்த சிலபேரை மிரட்டி அடக்கிட்டான் அந்த அயோக்கியன் குமரவேல்.கடைசில வெறுத்துப்போயிட்டேன்..ராவெல்லாம் தூங்கல .காலை எழுந்ததும் மகளை அள்ளிப்போட்டுக்கிட்டு இந்த பஸ்ஸுல ஏறிட்டேன் .திருச்சில நான் வேலை செய்த வக்கீலம்மாவுக்கு தெரிஞ்ச சில மகளிர் அமைப்பு மனித உரிமைக் கழகமெல்லாம் இருக்குது, அங்க குமரவேலின் அரசியல் செல்வாக்கு எடுபடாது அங்க போயி ஒரு குருத்துக்கு நடந்த கொடுமையை சொல்லி தீர்ப்பு கேட்கத்தான் போயிட்டிருக்கேன் தாமதமாகிற ஒவ்வொரு நிமிஷமும் என் மகளின் வாழ்க்கைமட்டுமில்ல  உடம்பும் வீணாகிடும்.அதான் பஸ்சை எடுக்கச் சொல்லி வேதனையாய் கேட்டுக்கறேன். உடல் உபத்திரவம் காரணமாத்தான் மகளால் எழுந்து நிக்க இயலாதுன்னு சொன்னேன். இனியும் நீங்க என் பேச்சை நம்பலேன்னா இதோ பார்த்துக்கொள்ளுங்க..” என்று உணர்ச்சி வசப்பட பேசி முடித்தவள் சட்டென எழுந்து நின்று சுமதியின கவுனை உருவி அவளை நிர்வாணமாக்கி கீறல்களும் காயங்களும் ரத்தக்கறைகளும் நிறைந்த அந்த மெல்லிய  உடம்பை தலைக்கு மேல் தூக்கிக்காட்டினாள்.

    ’ஐயோ’ என்ற அவலக்கூக்குரல் அனைவரிடமிருந்தும் எழுந்தது. சிலர் கண்கள் சிவக்கத்தொடங்கின.

    அடுத்தகணம் அமைதியாய் புறப்பட்ட அந்த பஸ், திருச்சிக்கு விரைந்து வந்துசேர்ந்தபோது முதலில் ராஜேஸ்வரியை கீழே இறங்க வழிவிட்ட இளைஞர்படை   பிறகுஅவளோடு இணைந்து நடந்து செல்ல ஆரம்பித்தது.

    **************************************************************************************************************************************

-(பெங்களூர் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை..தேர்வு செய்த திரு.அமுதவன் அவர்களுக்கு நன்றி)
-ஷைலஜா

4 comments:

  1. மனித உருவில் இப்படியும் மிருகங்கள் உண்டோ? ராஜேஸ்வரியுடன் நானும் ‌சேர்ந்து சென்று வெட்டிப் போட வேண்டும் என்ற வெறியே எழுந்தது உங்கள் எழுத்தின் வெற்றிக்கா. மனசெல்லாம் ரணமாய்டுச்சு. பரிசுக்கு இதைவிடத் தகுதியான கதை வேறென்ன இருக்க முடியும்?

    ReplyDelete
  2. ஏழைச்சொல் என்றைக்கு அம்பலமேறி இருக்கிறது? பணம் என்கிற மூன்றெழுத்துதான் எத்தனை பேர் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது//உண்மைதான் இன்றைய நிலையை நன்கு சுட்டிக்காட்டியுள்ளீர்கள்

    ReplyDelete
  3. இப்ப வாசிக்கும்போதும் மனசைக் கலங்கடிச்சுருச்சு.

    பரிசு பெற்றமைக்கு மீண்டுமொரு முறை வாழ்த்துகள் ஷைலஜாக்கா.

    ReplyDelete
  4. கருத்து தெரிவித்த அமைதிச்்சாரல் கவியாழிகண்ணதாசன் கணேஷ் அனைவருக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.