Social Icons

Pages

Friday, April 24, 2015

இராமானுசன் எனக்கு ஆர் அமுதே!



எம்பெருமானார் எதிராஜர்  உடையவர் பாஷ்யக்காரர் என்றெல்லாம் அழைக்கப்படும் ஸ்ரீமத் ராமானுஜர் ,நம்மாழ்வார் பெருமானின் திருவடிகளில் பணிந்து உயர்ந்தவர்.

’உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை’  எல்லாம் கண்ணன் என்றே இருப்பவர்கள் ஆழ்வார்கள். ஆழ்வார்களின் திருவடிகளே  ராமானுஜருக்கு உகந்ததாக இருந்தது.

 நாதமுனி ஆளவந்தார் போன்ற உயர்ந்தவர்களை  மனத்தில் பொருத்தி உள்ள ராமானுஜனின் திருவடிகளைப்பற்றிக்கொள்வதே நாம் உய்ய வழி என்கிறார் திருவரங்கத்தமுதனார்.இவர் தாம் ராமானுஜ நூற்றந்தாதியை அருளியவர்.அதில்தான்.’சீலங்கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப்பருகும் நம் இராமனுசன்’என்றும்’யமுனைத்துறைவன்(ஆளவந்தார்) இணையடியாம் கதி பெற்றுடைய’வர் ராமானுஜர்   என்றும்  குறிப்பிடுகிறார்.


கொடிய வலிய கலியின் துன்பங்களைக்கடக்க  ராமானுஜன் புகழ் பாடுவதே நலம் என்கிறார் அமுதனார். ’நாம் மன்னிவாழ சொல்வோம் அவன் திருநாமங்களே’ என்று நம்மை அழைக்கிறார் திருவரங்கத்து அமுதனார்.


ஓம் நமோ நாராயணாய!

எட்டெழுத்து மந்திர மகிமையை திருமங்கை ஆழ்வார் இப்படிப்பட்டியலிடுகிறார்.

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
      
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
      
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
      
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
      -
நாராயணா என்னும் நாமம்       

   
இந்த மந்திரத்தை தக்க குருவிடமிருந்தே உபதேசம்பெற்ற பிறகு நாம் சொல்லலாம் என்பதை எளிமைப்படுத்தினார் ராமானுஜர்
 அனைவரும் உய்ய இந்த மந்திரத்தை  உரக்கச்சொன்னார்.

ராமானுஜருக்கு  நாம் செய்யும் நன்றிக்கடனாக அவரது திருநாமத்தை நாம் 108முறை சொல்லி வழிபடவே  ராமானுஜ நூற்றந்தாதியை அருளினார் அமுதனார்.

தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சரியாப்பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந்தாமமென்னும்
திவந்தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்
குவந்தருந்தேன், அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே

சுபமுகூர்த்தப்பத்திரிகைகளில்  ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ என்றே முகப்பிடுவது வைணவ மரபு. அடியேன் ராமானுஜதாசன் என்றேவைணவப்பெரியோர்கள்  ஒருவரைஒருவர்பார்க்கும்போது கூறிக்கொள்வார்கள் வைணவ ஆலயங்களில்  மற்றும் இல்லம் எனப்படும்திருமாளிகைகளில் திரு ஆராதனம் நிறைவேறியபின்னர் திவ்யபிரபந்தம் ஓதியபின் உரத்த குரலில் ராமானுஜர் புகழ் பாடுவதை என்றும் கேட்கலாம்.

‘எல்லாக்காலங்களிலும் தடையற்ற பேராற்றல் பொருந்திய ஸ்ரீமத் ராமானுஜரின் தெய்வீக ஆணை வளரட்டும்! மேன்மேலும் வளரட்டும்!ஸ்ரீமத் ராமானுஜரின் தெய்வீக ஆனை நாள்தோறும் ஒளிவீசி எல்லா திசைகளிலும் பரவி அந்த தெய்வீக ஆணை மக்களுக்கு நன்மை செய்யட்டும்’ என்பதே அந்த  புகழ் வாசகங்கள்! 

ஸர்வ தேச தசா காலே ஷ்வ வ்யாஹத பராக்ரமா |
ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம் ||
ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா ப்ரதி வாஸரமுஜ் ஜ்வலா |
திகந்தவ்யாபினீ பூயாத் ô ஹி லோக ஹிதைஷிணீ

, அவர் காட்டிய மார்க்கம் மன வேற்றுமை அறுத்து அனைவரையும் ஒன்றிணைத்தது .

தேச மெலாம் உகந்திடவே பெரும்புதூரில் சித்திரையில் ஆதிரை நாள் தோன்றி’ என்று  தேசிகனும் ராமானுஜரைப் புகழ்ந்துபாடும்போது கூறுகிறார்.

 உலகத்தவர் உய்விக்கவே தோன்றியவர் எம்பெருமானார்
‘கருணைக்கடல்  என்று உடையவரை  கூரத்தாழ்வார் அருள்வார். திருவாய்மொழியைப்பெற்ற தாய் நம்மாழ்வார் என்றும் வளர்த்த தாய் ஸ்ரீ ராமானுஜரென்றும் திருக்குருகைப்பிரான் பிள்ளான் புகழ்ந்து சொல்கிறார்.

வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ்மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத் தாய் இராமாநுசன்

முதன் முதலில்  திருவாய்மொழிக்கு விளக்க உரையாகத் தம் சீடரான திருக்குருகைப்பிரான்பிள்ளானைக்கொண்டு ஆறாயிரப்படி உரையைத்தோற்றுவித்த  பெருமை ராமானுஜரையே சேரும் இதற்குப்பிறகு திருவாய்மொழிக்கும் மற்ற திவ்யபிரபந்தங்களுக்கும்  ஏராளமான பேருரைகள் வெளிவந்தன.

நம்மாழ்வாரின் திருவடிகளைத்தொழுவதற்கு ஆழ்வார்  திருநகரி சென்றபோது  ராமானுஜர் உணர்ச்சிப்பெருக்குடன்

இதுவோ திருநகரி, ஈதோ பொருநை
          
இதுவோ பரமபதத்து எல்லை இதுவேதான்
     
வேதம் பகர்ந்திட்ட மெய்பொருளின் உட்பொருளை
          
ஓதும் சடகோபன் ஊர்!

என வியந்துபோற்றினாராம்!
சமயத்தலைவர்களில் தனிச்சிறப்பு மிக்கவர் ராமானுஜர்
/மால்மீது பக்தி, வேதம் உபநிஷத்துகளுக்கு சரியான விளக்கம்காணும் ஞானம்,பலனை எதிர்பாராது மக்களுக்கு உழைத்த தர்மசிந்தனை, என  உடையவரின் பெருமை  சொல்லி மாளாது. சோதனைமிகுந்த காலங்களில் வைணவ சம்பிரதாயத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்திய சாதனையாளர் எதிராஜர்!  உடையவர் திருநட்சத்திரம் இன்று. எம்பெருமானர் அருள் பெறுவோம்! வாழ்வில்  உயர்நிலை அடைவோம்!
பற்பம் எனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும் பாவனம் ஆகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும் 
முப்புரி நூலொடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும் முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா அழகும் கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக்கண்ணழகும் காரிசுதன் கழல் சூடியமுடியும்,கனக நற்சிகைமுடியும் எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே!


5 comments:

  1. மிக அழகாக முக்கியமான விஷயங்களை எடுத்து கூறி எங்களை வழக்கம் போல வியப்பில் ஆழ்த்தி உள்ளீர்கள்
    ஆதிசேஷனின் அவதாரமாக நமது உடையவர் தோன்றினதுக்கு காரணம் மக்களை ஜாதி பேதமில்லாமல் உய்ய வைப்பதற்கே.
    எல்லோரையும் பக்தி மார்கத்தில் வழிப்படுத்தி நாராயணனின் நாமத்தின் பெருமையை பிரபல படுத்தி ,கோவில்களில் தமிழ் மறையை ஓதும்படி சைய்து,ஒரு ஒழுங்கு முறையை கொணர்ந்து சமூக சிந்தனையுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே நமது எம்பெருமானார் உயர்ந்த ஆன்மீக பணியாற்றினார்.
    அவர்தம் திரு நக்ஷத்திர நன்னாளில் அவர் பாதம் பணிந்து வணங்குவோம்

    ReplyDelete
  2. வணக்கம்
    அறியாத விடயங்களை அறிந்தேன் தெளிவான விளக்கம் பகிர்வுக்குநன்றி த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ராமானுஜர் புகழ் என்றும் சிறப்பு...

    ReplyDelete
  4. தனது வாழ்க்கையையே எடுத்துக்காட்டாக உலகுக்கு அளித்திட்ட மகாத்மாவைப் பற்றி மிக அழகாக விளக்கியதற்கு என் நன்றி.
    வஸந்தா

    ReplyDelete
  5. நன்றி கேபி சார் ரூபன் டிடி வசந்தா மற்றும் அனானிமஸ்!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.