Social Icons

Pages

Friday, October 28, 2016

கணக்குகளும் விடைகளும்.

தீபாவளி
மலரில் வெளியாகி உள்ள என் சிறுகதை..


கணக்குகளும் விடைகளும்.

ஷைலஜா
           
’அரங்காகேட்டரிங் ’ என்ற கொட்டைஎழுத்துக்குக் கீழேதனது போட்டோவுடன் பெயர் கொண்ட பேட்ஜினைத்தாங்கிய  சாடீன் ரிப்பன் மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டான் கோபி.  ஆகாய நீலநிறத்தில் ஷர்ட்டும், அடர்நீல நிற பாண்டுமாக  தொழிலுக்குப்புறப்பட ஆயத்தமானவனை  கண்கொட்டாமல் பார்த்த அவன் மனைவி மீனா. ‘  இந்தபேட்ஜைமட்டும் நீங்க கழுத்துலபோட்டுகலைன்னா  ஒரு ஆபீசுல மானேஜர் வேலைபாக்கறவர்னு சொல்லிடலாம்! சத்தியமா உங்கள  ஒரு சமையற்காரர்னு யாரும் சொல்லமுடியாதுங்க….. ”என்றாள் பெருமையுடன்


“உடை  உடல் உள்ளம் எல்லாம்  சுத்தமா இருக்கணும் என்பது எங்க’அரங்கா கேட்டரிங்’ கொள்கை!அதிருக்கட்டும் ..எனக்கு ராத்திரி எல்லாம்   நம்ம பிள்ளை ஹரிக்கு  காலேஜில் சேர்க்க எப்படிப்பணம்புரட்டறதுன்னு  ஒரே கவலை.ஏழை மாணவர்களுக்கு உதவணும் என்றே சில அமைப்புகள் இருக்கு..அவங்க ஆரம்பத்தில்  கொடுத்தாலும்  தொடர்ந்து அளிக்குமா என்பது சந்தேகம்.கல்விக்கடன் கொடுக்கிற பாங்குகள்,கல்லூரிகள் நிர்ணயிக்கும் நியாயமான  கட்டணங்களைக்கூட பலமாணவர்களுக்கு முழுமையா வழங்கறதில்லையாம் .உலகம் உயர்ந்தோர்மாட்டு  என்பது பழந்தமிழ்வழக்கு.ஆனா நிஜத்தில் உலகம் பணமுடையோர் மாட்டு  தான் மீனா:நம்ம பொழைப்புதான் சமையல் என்றாகிப்போச்சே மகனாவது  பெரிய ஆளா வரணும்னு நினக்கிறேன் அவனும் பொறுப்பா படிச்சி நல்லமார்க் எடுத்திருக்கான். மேலே படிக்க  ஆசைப்படறான். அவன் விருப்பத்தை நிறைவேத்தாம போயிடுவேனோன்னு பயமா இருக்கு மீனா”என்றான் கோபி.



”நீங்க வேலைபார்க்கிற அரங்கா கேட்டரிங் உரிமையாளர் சாரங்கன் மாமாகிட்ட கேட்டுப்பாருங்களேன்”


”மீனா! உனக்கு என் சுபாவம் தெரியாதா ? நான் யார்கிட்டயும் கடன் கேட்கமாட்டேன் அவங்களா பிரியப்பட்டு கொடுத்தால் வாங்கிக்கறேன். அப்படித்தான்  சிலகல்யாணங்களில் நான் செய்கிற சமையலில்,பரிமாறுகிற  விதத்தில்  ரொம்பவும் மகிழ்ந்துபோய்  ஒரு சிலர் அன்பளிப்பாக வாட்ச் ,  துணிமணி  சில நூறு ரூபாய்கள் என்றெல்லாம் கொடுத்தாங்க.. இப்ப நம்ம தேவை  ரொம்பபெரிசு.இதை எனக்கு யார்கொடுக்கப்போறாங்க? எனக்கு நம்பிக்கை இல்லை மீனா!”


”பொட்டு நகை என்கிட்டயும் இல்லை… இருந்தா அடமானமாவது வைக்கலாம்..ஹரி மாதிரி  உத்தமகுழந்தையைப்பெத்த நமக்கு ,அவன் ஆசையை நிறைவேத்தக்கூட  வக்குஇல்லாமல் இருக்கோம்னு  கஷ்டமா இருக்குங்க”


” என்ன செய்றது?சரி நான்  வேலைக்குக்கிளம்பறேன்  இன்னிக்கு  கல்யாணத்துல எல்லாம்  சரியா அமையணும்னு  சாரங்கன்மாமா  ரொம்ப கவனமா இருக்க சொல்லி இருக்கிறார். வழக்கத்தைவிட்ட இன்னிக்கு  கூடுதல் சம்பளம் கிடைக்கும்னு நினைக்கிறேன். என் பணில பிரமிச்சி அவர்  கூட்டிக்கொடுக்கவும் வாய்ப்பிருக்கு. அதேபோல சாப்பாட்டுப் பந்தில யாரும்  மகிழ்ந்துபோய்  சன்மானமா  ஏதும் கொடுக்கலாம்..கணிசமா தொகைவரும். நீயும்  பட்சணம்  நிறைய செய்து கடைலகளில் கொண்டு கொடுக்க ஆரம்பி. ஒருவாரம் டைம் இருக்கு அதுக்குள்ள  பணம் சேர்த்துடலாம் ஆனாலும் நம்பிக்கை பெருசா இல்லைதான். நம்மைமாதிரி லோயர் மிடில் க்ளாஸ் ஜனங்களுக்கு வாழ்க்கையே தொங்கலில் இருக்கு. அன்றாடக்கூலி ஜனங்கள்எதுக்கும்கணக்கிட்டு  வாழ்வதில்லை கணம் தோறும் வாழுகிறார் கள்       கணக்கிட்டே நாம் வாழுகிறோம் ஆனா  நம் கணக்கில் விடையில்லை” விரக்தியாய் சொல்லிவிட்டுகல்யாணமண்டபத்துக்குவந்தவன் வாசலிலேயே பரபரப்பாய் சாரங்கன் நிற்கவும் தயக்கமுடன் கைகுவித்தபடி,”  மாமா! நான் லேட்டா வந்துட்டேனா மன்னிக்கணம்:   என்றான்
”இல்ல கோபி நீசரியான டைத்துக்குதான் வந்திருக்கே.. இந்த மளிகைசாமான் காய்கறி பொறுப்பில் இருக்கும் பட்டாபியைத்தான்காணல  நேத்தே  ராத்திரி  மண்டபத்துல கொண்டு சேர்த்துடறேனான். இன்னும் காணல,போன் பண்ணாலும் எடுக்கல..” விசனப்பட்டார் சாரங்கன்.


”அப்படியா  நான்  நேர்லபோய்பார்த்துட்டுவரட்டுமா மாமா?” கோபி இப்படிக்கேட்க காத்திருந்தமாதிரி சாரங்கனும்,”அவன் வீடு   தாம்பரம் பக்கம் இருக்குடாகோபி. இந்தக்கல்யாணமண்டபம் இருக்கிறது வில்லிவாக்கம் பக்கம்  ரொம்ப நாழி ஆகுமேடா. உன்னாலமுடியும்னா நேர்லபோய்ட்டுவர்ரதே  உசிதம்” என்றார்.


”சட்டுனு ஆட்டோபிடிச்சிபோய்ட்டு  விவரம் கேட்டுட்டு கையோடகூட்டிண்டே வரேனே”


”ஆமா அதான்சரி ”


கோபி ஆட்டோக்காரர் பேசிய  நானூறு ரூபாய்க்கு மறுபேச்சேபேசாமல் ஏறிவிட்டான். இப்போது  பேரம்பேசி  நேரத்தைவீணடிப்பதைவிட பட்டாபியை  பார்ப்பதேமுக்கியம்.
பட்டாபியின் வீட்டுவாசலில் நெருப்பு ஒரு மண்சட்டியில் கணகணப்பதை ஆட்டோ தெருவில் நுழையும்போதே  பார்க்கவும்பகீரென்றதுகோபிக்கு.


வீட்டிற்குள்போனதும்தெரிந்தது பட்டாபியின் மனைவி  இரவு மாரடைப்பில்காலமாகிவிட்டாள் என்று.மனைவிபிணத்தின்முன்பு அதிர்ச்சியில் எதுவுமே ஓடாமல் அப்படியே சுவரில்  சாய்ந்துகிடந்தவனிடம் கோபி என்னவென்று பேசுவதெனததெரியாமல் விஷயத்தை சாரங்கனிடம் தன் செல்போனில் சொன்னான்.


”அடடே அப்படியா  சரி நீ அதே ஆட்டோல உடனே புறப்பட்டு வா. பொங்கல்கொத்சு  கேசரி  கார்த்தால பிள்ளையாத்துகாரா வரதுக்குமுன்னாடி ரெடிபண்ணனும் ..பட்டாபி வேலைதான்.அதை நீ  ரெடிபண்ணிடு..நான் பட்டாபிவிட்ட மிச்சவேலையை போன் போட்டு கவனிக்கறேன் என்ன?”


கோபி  கைவசம் வீட்டுவாடகை கொடுக்க வைத்திருந்த எண்ணூறு நூபாயில் மீத  நானூறு ரூபாயை ஆட்டோக்குக்கொடுத்துவிட்டு மண்டபம் வந்துசேர்ந்தான் .

சமையற்கட்டுவேலையும் ,பந்தி பார்த்துபரிமாறுகிறவேலையும் சேர்ந்துகொள்ள  கோபிக்கு அன்றையப்பொழுது உடலை சக்கையாக்கியது  மண்டபத்து உக்கிராண அறையில் நடுநிசிக்குவந்து தரையில் படுத்தவன் மீனாவிற்குபோன் செய்து,”என்னாச்சு பட்சணம்கொண்டுகடைல வித்தியா எவ்ளோ தேறினது?” என்று கேட்டான்.

”ஆயிரத்துமுன்னூறு ரூபா  வந்திருக்கு.சரி .வீட்டுக்காரரைப்பார்த்து வாடகையை கொடுத்துட்டீங்களா?”



”இல்லை நாளைதான் கொடுக்கணும்.சாரங்கன் மாமாக்காக அதை செலவு பண்ண நேர்ந்து  போச்சு.விவரம் நேர்ல சொல்றேன்.ஆனா  எனக்கும் இன்னிக்கு டபுள்வேலை நாளைகல்யாணமுடிஞ்சதும்  எனக்கான வரவும் டபுளா கொடுப்பார் சாரங்கன்மாமா,  அதைஎடுத்துண்டுவரேன் ”


மறுநாள்  முகூர்த்தநேரத்துக்கு கூட்டம்  அலைமோதியது.  அதை சமாளிக்க கோபியும் சாரங்கனும் பெரும்பாடுபடவேண்டி இருந்தது ருசியும் குறையக்கூடாது அதேசமயம் இருக்கிற  சாமான்களைக்கொண்டு சமையலை செய்துமுடிக்கவேண்டும் சாரங்கனுக்கு முழி பிதுங்கிவிட்டது.


அடுப்பில்  கொதிக்கும் எண்ணையில் வடையைத்தட்டிப்போட்டபடியே  சொல்ல ஆரம்பித்தார்.,


” கோபி!என்னடா  வேலை இதுன்னு  அலுப்புமட்டும் வந்துடக்கூடாதுப்பா..  நாமாய்  ஆயிரம் பேருக்கு அன்னதானம் பண்ண  சாத்தியமில்லை . நான் எப்படி இந்ததொழிலுக்குவந்தேன் தெரியுமோ?எனக்கு ஏழு வயதாயிருக்கும்போது சங்கர மடம் கும்பகோணத்தில் இயங்கி வந்தது. மஹா பெரியவாள் அங்குதான் இருந்தார். தினமும் மதியம் பன்னிரண்டு மணி தொடங்கி நாலுமணிவரையில் அன்னதானம் ஜேஜேவென்று அங்கே நடக்கும். இதுக்காக மூட்டை மூட்டையாக அரிசி வந்து குவியும். மடத்தில் அப்போது பெரிய சமையல்காரர் — கபிஸ்தலம் வெங்கட்ராமய்யர். அவருக்கு உதவியாக என் அப்பா. என்னைப் போல் சின்னப் பையன்கள் நிறையப் பேர் எடுபிடிகளாக இருந்தோம்.
ஒவ்வொரு பந்திக்கும் சாப்பாடு முடிந்ததும் அந்த இலைகளை அள்ளி எடுத்து மூங்கில் கூடைகளில் நிரப்பி எடுபிடி பையன்களில் தோளில் வைப்பார்கள். பாரமா  இருக்கும். இரண்டு கைகளால் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு
 கொட்டிய கையோடு, காவிரியில் குளித்துவிட்டு தயாராக வந்து நிற்க வேண்டும், அடுத்த பந்தியின் இலையை எடுப்பதற்கு!
இந்த மாதிரியான கலகலப்பான சூழல்களைவிட்டு என் வாழ்க்கை அப்படியும் இப்படியும் திசை மாறியது. திருமணமாகி என் மனைவியோடு சென்னையில் வசிக்க ஆரம்பித்தபோது எனக்கு வயது இருபத்து மூன்று. ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. என் வாழ்க்கையில் அதுபோல் கடினமான ஒரு கட்டத்தை நான் அனுபவித்ததில்லை. வறுமை எங்களைப் பிடுங்கித் தின்றது.
‘வேண்டாம்….இதற்கு மேலும் நம்மால் வாழ்வது என்பது முடியாது. வறுமையை எதிர்த்துப் போராடுவது இனி நடக்காத காரியம்!’ என்று நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம்.
இடையில் இத்தனை வருஷம் ‘டச்’ விட்டுப் போயிருந்த மடத்துக்கு ஒரே ஒரு முறை போய், மஹா பெரியவரைப் பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம். இப்போது மடம் காஞ்சிபுரத்தில் இருந்தது.

காஞ்சிக்குப் போனேன். பெரியவரை தரிசனம் செய்தேன். என் மனசு கலக்கத்தை வாய்விட்டு அவரிடம் சொன்னேன்.

எல்லாத்தியும் கேட்டவர்  எதிரில் மூங்கில் தட்டிலிருந்த பதினோரு ரூபாய் பணத்தை எடுத்து எங்களிடம் கொடுக்கச் சொன்னார். ‘போ! எல்லாம் சரியாயிடும்! ‘ என்று கையை உயர்த்தி ஆசீர்வதித்தார்.

என்னுள் புது நம்பிக்கை துளிர் விட்டது. ‘வறுமையை எதிர்த்துப் போராடலாம். . வெற்றி நிச்சயம் கிடைக்கும்’ என்ற உறுதி பிறந்தது.
அன்றிலிருந்துதான் என்னைப் பற்றியிருந்த வறுமை கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக ஆரம்பித்தது. கல்யாண வேலைக்குக் கூப்பிட்டு, மெள்ள மெள்ள ஆள் வர ஆரம்பித்தனர். அன்றாட ஜீவனத்துக்குக் காசு புழங்க ஆரம்பித்தது. அரங்கா கேட்டரிங் என்று சொந்தமா  ஆரம்பிச்சேன்.எதுக்கு சொல்றேன்னா நம்பிக்கைதான் வாழ்க்கை. “ என்று முடித்தார்.

ஆனால்  கல்யாணம் முடிந்தபிறகு  வழக்கமான சம்பளத்தைவிடவும் குறைத்தே கொடுத்தார்


.” கல்யாணப்பொண்ணோட  அப்பா என் பழைய நண்பன். அதிக வசதி இல்லாதவன்  கடன்வாங்கிகல்யாணம் பண்றான்.நம்மாலானது  என்று  வழக்கமான ரேட்டை நான் பாதியாக்குறைச்சிண்டேன் அன்னதானப்பலனில் நமக்கும் கொஞ்சம் கிடைக்குமோல்லியோ?” என்றார் சாரங்கன்.

“இந்தாளுகிட்ட  இருந்தா பிழைக்கத்தெரியாம நாமும் ஓட்டாண்டியா ஆகிடுவோம்போல இருக்கு.ஏண்டா கோபி  உன் பையனுக்கு காலேஜில் சேர்க்க நீ தவிக்கறயே , அதைவாய்விட்டு சொல்லி  சாரங்கன்மாமாகிட்ட பணம் ஜாஸ்திவாங்கி இருக்கக்கூடாதா ஏண்டா இப்படி லூசா இருக்கே?” என்றுவெளியே வந்ததும் ராஜப்பா சீறினான்.


கோபி திருதிருவென விழித்தான்.

 பிறகுநடந்தேவீட்டிற்குவந்தான்.சின்னபோர்ஷன்.தான்.வரிசையாய்  எட்டுபோர்ஷன்கள். நுழைந்ததும் சிறு கூடம் அதை ஒட்டி சமையல் அறை.  குளியல் கழிப்பறை எல்லாம்  அங்குள்ள எட்டுபோர்ஷன்களுக்கு பொதுவாக இருக்கும்.

ஹரி,கூடத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு பாடம் சொல்லிகொடுத்துக்கொண்டிருப்பது காதில் விழவும்  வாசற்கதவுக்குப்பின்னே அப்படியே நின்றான்.


அப்போதுதான்கூடத்திலிருந்து தரைவழிப்பயணத்தில்  எறும்பு ஒன்றுதன்னை விட பல மடங்கு பெரிய  ஒரு  இறகை இழுத்து, சுமந்து கொண்டு வாசலுக்குப்போவதில் முழு முயற்சியோடு ஈடுபட்டிருந்தது. வெளி வாசலில் ஒரு செடிக்கு பின்னால் சிறு மண் புற்று.   அங்கு கொண்டு செல்ல  பிரயத்தனம்.  யார்காலிலும் காலால்  மிதி படக்கூடாது.  சுவற்றில் சுற்றிக்கொண்டிருந்த  பல்லியிட ம் சிக்காமல்,  இறகைச் சுமந்து வேறு போகவேண்டும்.  எறும்பின் செய்கையைகோபி  மௌனமாய்பார்த்துக்கொண்டே இருக்கையில்எறும்பு வாயால் கவ்விய  இறகை கீழே போட்டுவிட்டு அதைச் சுற்றி சுற்றி வந்தது.    எப்படி  மீதி வழி செல்வது என்று யோசனையாக இருக்குமோ?

மீண்டும்  அதை  எங்காவது ஒரு இடத்தில் கடித்து  இழுத்துக்கொண்டு போயிற்று. அதன் வழியில்  வீட்டின்  வாசல் கதவு.  அதன் இடுக்கில் செல்லவேண்டும். திறந்திருக்கும் கதவு காற்றில் அசைந்து தானே மூடிக் கொண்டால்  எறும்பின் வாழ்க்கைப் பயணம்  முடிந்துவிடும்.


 எல்லாவற்றிற்கும் மேலாக மீனா பார்த்துவிட்டால்
பெருக்கித்  ​தள்ளிவிடுவாளே. அடித்தாலும் அடிப்பாள் . வாசல் சுவற்றுக்கும்  கதவு நிலைக்கும் இடையே  ஒரு  சின்ன இடைவெளி. அங்கே ஒரு  பெருத்த பல்லி தன் குடும்பத்தோடு நடமாடும்  இடம்.  சுவர் காங்க்ரீட்டில்  ஒரு  கீறல்  இடைவெளி.  அது  சிறிய பாதை வழி. பெரிய பாதையில் போனால்  பல்லியால் ஆபத்து.

அது சரி. எறும்பு  அந்த காங்க்ரீட் கீறலில்  நுழைந்து போய்விடும். அது தூக்கிச் செல்லும்  இறகு? இவ்வளவு கஷ்டப்பட்டு  சுமந்து வந்து அதை கோட்டை விடுவதா? மெதுவாக தான்  முதலில் அந்த கீறலில் நுழைந்து, பிறகு  உள்ளே மீண்டும் புகுந்து அந்த இறகின் ஒரு முனையை  அந்த  கீறலின் வாயில் வைத்து பின்னோக்கி  நடந்து வாயினால் கடித்து இழுத்துக்கொண்டு சிரமப்பட்டது


கோபியின் கவனம் சட்டெனஉள்ளே கூடத்தில்  உரக்கக்கேட்டஹரியின் குரலுக்குத்தாவியது.

 ஹரியைச்சுற்றி தரையில் அமர்ந்திருந்தஎல்லாருமே ஏறத்தாழ  பத்துவயசு சிறுவர்கள், சிறுமியர்கள்.ஹரியிடம் ட்யூஷன் பயிலவேண்டும் என்றே  பலபெற்றோர்கள் கொண்டுவிடுவார்கள் .


”உங்க பையன் ஹரி  பாட சம்பந்தமான ட்யுஷன் மட்டுமாஎடுக்கறான் , நல்ல  பக்தி கதைகள் சொல்றான் எங்க குழந்தைகள்அதைக்கேட்டு வீடுவந்தால்  உற்சாகமா இருக்காங்க..நல்லபழக்கவழக்கம் வருகிறது ”என்று மீனாவிடமும்கோபியிடமும் புகழ்வார்கள்.


இதோ  இப்போதுகூட ஹரி ஏதோ பக்திக்கதைதான் குழந்தைகளுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறான்.கோபியும் கூர்ந்துகேட்கத்தொடங்கினான்.


”உலக  வாழ்க்கையிலே கஷ்டம் இல்லாதவர்களே கிடையாது.  எல்லோருக்குமே  அளவில்லாத கஷ்டங்கள்  இருக்கு.  பணக்காரர், பெரிய பதவியில் உள்ளவர் எல்லாம் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் வேண்டுமானால்  நினைக்கலாம். ஆனால், அவர்களைக் கேட்டால் தான்  தெரியும் அவர்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்று.   திண்ணையில் இருக்கிறவர்கள் கீழே விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடு சரி.   அவர்கள் மேலே மூணாவது மாடி பால்கனியில் இருக்கிறார்கள். விழுந்தால் எலும்பு முறிந்து விடும். உயிருக்கே ஆபத்து வரலாம். எனவே  உயர்ந்த நிலையில் இருப்பவர்கள்  பணம், பதவி,  செல்வம் உள்ளவர்கள்  அதிகம் ஒழுக்கம்  காக்க வேண்டும்,  மற்றவர்க்கு பரிவு காட்டவேண்டும்'.


 இந்த உயர்ந்த எண்ணம் மிகவும் உயர்ந்து, விரிந்து எடுக்கிற உருவமே  எல்லா உயிர்களிடமும் அன்புகாட்ட வைக்கும்  அன்பு சகலரிடமும்  பரவ  உதவும்.  இது  மெதுவாகத்தான்  வளரும். ஒரே   ராத்தரியில் மந்திரத்தால்  மாங்காய்  இல்லை.''  என்று முடிக்கவும் ஒரு சிறுவன் கேட்டான்.



எப்படி  அண்ணா  இதை  ஆரம்பிக்கவேண்டும்?''

''ஒவ்வொரு குடும்பத்திலும், குடும்பத்தில் உள்ள  அனைவரும் சேர்ந்து  வீட்டிலேயே  மாலை  வேளைகளில் ஒரு   பத்து நிமிஷமாகவாவது இறைவனைப்பற்றி வாய்விட்டுப்பேசவேண்டும் அல்லது. பாடத்தெரிந்தால்  பாடலாம்.  பாடுவதற்கு எதற்கு  வெட்கம்?  சங்கீத ஞானம்,  , சாரீர வசதி இல்லாவிட்டாலும், பரவாயில்லை.  பக்தி, பாவனை  தான் முக்கியம்.   எங்கோ ஏதோ ஒரு விளையாட்டில்  ஈடுபட்டு இருக்கும்  குழந்தை  அம்மாவின்  நினைவு வந்ததும், " அம்மா, அம்மா" என்று கத்துகிறதல்லவா? தேடி  ஓடிவருகிற தல்லவா. அதில் என்ன  வெட்கம்?     பாஞ்சாலி அன்று கோவிந்தா என்று கதறு கைதூக்கி அழைச்சதும்தான் கண்ணன்  வந்தான் .இறைவன் நம் அழைப்புக்குக்காத்திருக்கிறான். எனக்குக்கூட  இஞ்சினீயரிங்படிக்க ஆசை. நல்லமார்க் எடுத்திருக்கிறேன்,ஆனா என் அப்பா அம்மாகையில் அவ்வளவு பணமில்லை கடன் வாங்குவது எங்கள்குடும்பத்தில் வழக்கம் இல்லை. உதவும் அமைப்புகள்  கடன் கொடுக்கும் வங்கிகள் என் படிப்பு முடியும்வரை கைவிடாமல் இருக்குமா என்பது நிச்சயமில்லாத நிலைமை.அதனால் அருமைக் குழந்தைகளே உங்களிடம் வாய்விட்டுகேட்கிறேன்  நீங்கள் என் கண்முன் தெய்வங்கள்தான் . உங்கள் குடும்பத்தில் யாருக்காவது  படிப்பிற்கு பணதானம் செய்கிற மனம் இருந்தால் எனக்கு உதவச்சொல்லுங்கள். இதே உதவியை  பிற்காலத்தில் என்னைமாதிரி ஏழைமாணவர்கள் பலருக்கு நான்  திருப்பிச்செய்வேன்” நெகிழ்ந்தகுரலில் ஹரி பேசிமுடித்தான்.

”கண்டிப்பா  செய்வோம் அண்ணா. இன்றைக்கே எங்கவீட்டில்போய் சொல்றோம்.நீங்க இஞ்சினீயர் ஆகப்போறீங்க , நிச்சயமா  ஆகிறீங்க”

குழந்தைகள்  நம்பிக்கை நிறைந்த குரலில் கூவினர்.
 
கோபிக்கு ஹரியின் வெளிப்படையான  பேச்சு தன் மனவெளியை உடைத்ததுபோலானது. சாரங்கன் தன் கதையை சொன்னபோதிலும்,ராஜப்பா சீறியபோதிலும் உதிக்காத ஞானம் இப்போது மெல்லத்தலை எடுத்தது.

.இந்தக்குழந்தைகளின் வாக்கில் வரும்  முயற்சியும் ஆர்வமும் எனக்கு ஏன் தோன்றவில்லை? இந்த நம்பிக்கை எனக்கு ஏன் உதயமாகவில்லை?

கோபி தன்னையே நொந்தபடி  கீழே குனிந்தான்.

 எறும்பு பட்டசிரமம் வீண் போகவில்லை. இறகின் ஒரு நுனி கீறலில் நுழைந்து சுவற்றுக்கும் மரக்கதவின்  நிலைக்கும் இடைவெளியில்  துளித்துளியாக  நுழைந்து அந்தப் பக்கம் தலையை காட்டியது.  எறும்பு இப்போது வெளியே இருந்து  அந்த இறகை இழுக்க  மெதுவாக  இறகின் பயணம் முடிந்தது.  இனி செடிக்குப் பின்னால் உள்ள  மண் புற்றுக்கு  இழுத்துச் செல்வது அவ்வளவு கடின பயணம் இல்லையே!
*************************************************************************************************************************



.
​'


7 comments:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  2. கலைமகள் தீபாவளி மலரில் தங்களின் கதை வெளியாகியுள்ளது கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    கதையைப் படித்து விட்டு, பிறகு சற்றே தாமதமாக மீண்டும் வருவேன்.

    >>>>>

    ReplyDelete
  3. கதையைப் படித்து முடித்து விட்டேன். நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்சனைகளை மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.

    ’கணக்குகளும் விடைகளும்’ என்ற தலைப்பும் மிகப்பொருத்தமே.

    மீண்டும் என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    [ஆங்காங்கே ஒருசில எழுத்துப் பிழைகள் உள்ளன. அவற்றை முடிந்தால், திருத்தி விடவும்.]

    ReplyDelete
  4. தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நல்ல கதை.பல படிப்பினையை கதை போகிற போக்கில் சொல்லுகிறது.
    விடாமுயற்ச்சி,இறை பக்தி ,நம்பிக்கை,கடின உழைப்பு எல்லாம் வாழ்க்கையில் முன்னேற அவசியம் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.கலைமகள் ஒரு பாரம்பிரிய மிக்க மாத மலர். இதில் தீபாவளி சிறப்பு மலரில் உங்கள் கதை வருவது பெருமையாக உள்ளது.

    ReplyDelete
  6. தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. கேபி சார் வைகோ சார் பரிவை குமார் திருமுருகானந்தம் அனைவர்க்கும் மிக்க நன்றி,,,வலைத்தளபிரச்சினைகாரணமாக நன்றி தெரிவிக்க தாமதமாகிவிட்டது.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.