Social Icons

Pages

Monday, June 04, 2007

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....

'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி' எனும் பாட்டைக் கேட்கும்போது வருங்காலத்தூண்களான இளைய தலைமுறை பற்றிய நம்பிக்கை நமக்கு அதிகம் வருகிறது.. ஆனால் பிள்ளைகளைப் பெற்ற பெருமை
கொண்ட பெற்றோர்கள் அவர்களை 'நாம் நல்ல பிள்ளைகளாய் வளர்க்கிறோமா?' என யோசிக்க வேண்டியதருணம் இது..

ஊடகங்களில் மிக வலிமையானது திரைப்படம் எனும் சினிமா.அடுத்தது தொலைக்காட்சி எனும் டிவி .


அபூர்வமாய் அவ்வபோது வரும் சில நல்ல திரைப்படங்கள் அரங்குகளைவிட்டு விரைவில் சென்றுவிடுகின்றன.தரமற்ற படங்களை அறிந்தும் அறியாத பருவத்தினர் பார்ப்பதால் பலசமயங்களில் இதன் தாக்கம் எந்த அளவிற்கு மனித உறவின் மேம்பாட்டினை சிதைக்கிறது என்பது பற்றி சிந்திக்கும்போது கவலைதான் மேலோங்குகிறது.

நிறையமுதலீடு போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பொழுதுபோக்கு அம்சத்தினை சேர்த்துத்தான் கொடுக்கவேண்டி இருந்தாலும் அளவுக்கு மீறினால் அவை நஞ்சாகிவிடும் நிலமை உண்டு. பயங்கரவாதம் வன்முறைகாட்சிகள் கொண்ட படம் வெற்றி பெற்றால் அதே
பாணியில் தொடர்ந்து படங்கள் வருகின்றன.



கிராமீயமணம் வீசும் படம் ஒன்று அண்மையில் வந்தது.நல்ல படம்தான் ஆனால் க்ளைமாக்ஸில் எதார்த்தம் என்ற பெயரில் கொடுமையான தேவை இல்லாத வக்கிரத்தைப் புகுத்திவிட்டனர்.

இன்னொருபடத்தில் ஒரு சிறுவனை சித்திரவதைசெய்யும் காட்சி, கண்களைக்கூச வைக்கிறது.

செல்போன் மற்றும்பணத் தேவைக்காக உடன் பழகிய மாணவனிடமிருந்து அவைகளைப்பறித்து அவனைக்கொலையும் செய்துவிட்ட நான்குமாணவர்கள்
சொல்கிறார்கள்'நாங்க சினிமா பாத்துதான் கத்துகிட்டோ ம் மோப்ப நாயை எப்படி ஏமாத்தறதுன்னு'என்கிறார்கள்.

இன்னொருபடமும் சமீபத்தியத்ததுதான் அதில் அத்தனை பெண்களும் முட்டாள்களாய் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள்.பார்க்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் எரிச்சலை ஏற்படுத்துவதாய் காட்சிகள்.

பெரும்பாலும் படங்களில் கதாநாயகன் முரட்டுத்தனமாய், போக்கிரித்தனமாய் இருப்பான்,கதாநாயகியைப் பார்த்து,'நல்லா பேசுவீங்கடி கடைசில ஓடுவீங்கடி..'என்று சொல்வான்.தமிழ்க்கலாசாரம் பற்றிய அறிவுரையை காதலிக்கு சொல்ல,, அரைகுறை ஆடையுடன் நின்று கேட்கும் அவள் உடனே சேலைக்கு மாறிவந்து தேவையின்றி வெட்கப்படுவாள். அல்லது கண்ணீர் விடுவாள். ஏன் பெண் இயல்பாகவே இருக்கமாட்டாளா?

இதெல்லாம் ஒரு பானை சோற்றின் ஒருசில பருக்கைகள் தான்.

குடும்பம் அன்பு பாசம் நாட்டுப்பற்று தியாகம் இவற்றைவைத்து எடுக்கப்படும் படங்கள் ஓடாதா ? அல்லது முன்பு அவை வெற்றியை அடையாமல்தான் போயினவா?

உலகின் மிகச்சிறந்த திரைப்படங்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் பெரும்பான்மையான படங்கள் ஆண்-பெண் உறவுகளை சிறப்பாகச் சித்தரிப்பவைகள்தாம்.தந்தை- மகள் அண்ணன் -தங்கை காதலன்- காதலி கணவன் -மனைவி தோழன்- தோழி என்று அழகிய உறவுகளில் நிகழும் அன்பை , சிக்கலை ,துயரங்களை அந்தப்படங்கள் இயல்பாக வெளிப்படுத்தும்.

உலக சினிமாவில் ரோமன்ஹாலிடே,(Roman Holiday) வென்ஹாரி மெட் சாலி (When Harry met Sally),கிராமர்வெர்ஸஸ் கிராமர் (Kramer vs Kramer)
போன்ற படங்கள் அற்புதமான காவியங்கள்.தமிழிலும் முள்ளூம் மலரும் ரோஜா நெஞ்சில் ஓர் ஆலயம் அவர்கள் இந்திரா போன்று சில படங்களில் பெண்பாத்திரத்தை செதுக்கி இருப்பார்கள்.

தமிழ்ப்படங்களின் போக்கும் வடிவமும் இன்றைய நிலையில் மாறிவருவது இளையதலைமுறையினரை எங்கு கொண்டுசெல்லும்?



தொலைக்காட்சியை எடுத்துக்கொள்வோம் இது அரசாட்சி செய்யாத இல்லங்களே இல்லை எனலாம். பலநேரங்களில் திரைப்படம் எனும் சிங்கத்தையே இந்த யானை பிளிறி அடக்கிவிட்டிருக்கிறது.

முன்பு நொய்டாவில் எலும்புக்கூடுகளைக்கண்டுபிடித்ததின் தொடர்ச்சியாக 'இங்கே தோண்டுகிறார்கள் அங்கே தோண்டுகிறார்கள்'என பல செய்திகள் வெளிவந்தன. இவையெல்லாம் வளர்ந்த மனித மிருகங்களின் வக்கிர புத்தியன்றி வேறென்ன? இவையெல்லாம் அடுத்துவரும் ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சன் திருமணச்செய்தி போன்றவற்றில் அடிபட்டுப்போய்விடுகின்றன. கிரிக்கெட், புதுசினிமாவரவு, சிறப்புதினங்களுக்காக உலகவரலாற்றில்முதன்முறையாய் புத்தம்புதியதிரைப்படம் அளிக்கும் தொலைக்காட்சிபெட்டியின் அறிவிப்பில் சகலமும்
காணாமல்போய்விடுகின்றன.

தொலைக்காட்சி சீரியல்கள் எல்லாம் எப்படி இருக்கின்றன எனப்பார்த்தால் அங்கும் எப்போதாவது அத்திபூத்தாற்போல நல்ல நாடகங்கள்;நிகழ்ச்சிகள்! பலநேரங்களில்,மருமகள்மேல் கோபம் மாமியார்மீதுகோபம் குடும்பத்தில் கலகம் சண்டை பிரச்சினை பழிவாங்குதல் முறையற்ற காதல்.இப்படித்தான் தொடர்கள் செல்கின்றன.. இவற்றை பெரியவர்களும் நடுத்தரவயதினரும் பார்க்க்கும் பொழுது உணர்ச்சி வசப்படுகிறார்கள் எனில் இளையவர்கள்மற்றும் குழந்தைகளின் கதி என்ன?

கதையோ சீரியலோ சினிமாவோ அதை எழுதுபவர்களுக்கும் நடிப்பவர்களுக்கும் அதனைச் சார்ந்த அத்தனை பேருக்கும் சமுதாயப் பொறுப்பு இருக்கிறது.

"அதெல்லம்பார்த்தா நாங்க துட்டு சம்பாதிக்கமுடியுமா,டிஆர்பி ரேட்டிங்ல முதல்லவரணுமே? "என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

'டிஆர்பி ரேட்டிங் எகிறணும் விளம்பரம் குவியணும்' சீரியல் தயாரிப்பாளர்கள் இப்படியே சிந்திக்கின்றனர்.




சீரியல்களில் முழ்கி இருக்கும் தந்தை மற்றும்தாய்க்குலங்களாஇவற்றைப் பார்க்கிறார்கள்? விடலைப் பருவத்தினர்தான் பெரும்பாலும்
காண்கிறார்கள் இவர்களை நம்பியே தயாரிப்பாளர்களும் தாங்கள் எடுக்கும் படங்களில் எப்படியெல்லாம் காதலிக்கலாம் கழுத்தறுக்கலாம் என்று சொல்லிக்கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

மீடியாக்களும் அதைச் சார்ந்தவர்களும் சமூகப் பொறுப்பினை உணர்ந்து நடக்கவேண்டும். சமூகப்பொறுப்பு எல்லாருக்கும் இருக்க வேண்டும்.வன்முறை ஆபாசம் பெண்களை அவமதித்தல்போன்றவைகளை எதிர்க்க தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான மகளிர் அமைப்புகள் முன்வரவேண்டும். நல்லவனற்றிர்க்கு ஆதரவு தந்து தீயனவற்றிர்க்கு ஒவ்வொருவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.நல்ல நியதியை இளையதலைமுறைக்கு எடுத்துச் சொல்லவேண்டும். "'என் மகன் டாக்டரானால் போதும்;இஞ்சினீயர் ஆனால் போதும்" என்னும் பெற்றோர்கள் அவர்களை நல்லமனிதர்களாய் வளர்க்க முதலில் நினைக்க வேண்டும்.

இதை நிலைநிறுத்த, நாம் நிலத்திலும் விதையிலும் பாசனத்திலும் கவனம் செலுத்தவேண்டும். அவ்வபோது களை எடுக்க வேண்டும்.

அப்போதுதான் விஷச்செடிகளை அறுவடை செய்யும் நிலைவராது.
*************************************************************************************சற்றுமுன் போட்டிக்கு-சமூகம் எனும் தலைப்பிற்காக....

2 comments:

  1. தங்கள் அக்கறையைப் பாராட்டுகிறேன். பரிசுபெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. பதிவு ரொம்ப நீளம். படிக்க அலுப்பா இருக்கிறது.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.