Social Icons

Pages

Monday, October 10, 2016

நீருக்குப்பேதமில்லை. சிறுகதை

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=33722&ncat=2
ஞாயிறு தினமலர்வாரமலரில் வெளியான  சிறுகதை!



பாட்டி... இன்னிக்கு ராத்திரி, அப்பா உங்கள சித்தப்பா வீட்டுக்கு பெங்களூருக்கு அனுப்பப் போறாங்களாம்... நானும், சாயந்திரம், ஸ்கூல், 'எக்ஸ்கர்ஷ'னுக்கு டில்லி போறேன்; வர்றதுக்கு ஒரு வாரம் ஆகும். இந்த ஆறு மாசமா இலக்கியம், கலாசாரம், கிராமம், ஊர் திருவிழான்னு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கீங்க... இப்போ நீங்க ஊருக்கு போறத நினைச்சா கவலையா இருக்கு,'' என்று சிணுங்கினாள், பேத்தி மீனா.


வேறு சமயமாயிருந்தால், உடனே பேத்தியை சமாதானம் செய்திருப்பாள், விசாலம். இப்போது, அவளது சிந்தனையெல்லாம், 'இன்னைக்கு தன்னை ஊருக்கு அனுப்ப இருப்பதாக, மகனும், மருமகளும் ஒரு வார்த்தை கூட சொல்லலையே...'என்பதாக இருந்தது. 'அதுசரி... எதை தான் அவர்கள் என்கிட்ட சொல்லியிருக்காங்க... தூரத்து பச்சையாய் தெரிகிறதெல்லாம் பக்கத்துல வந்தவுடன் தூர்வாராத கேணியாக நாறத் தான் செய்யுது. இதெல்லாம் தெரிஞ்சுதான், 'சாகும் வரைக்கும் கூழோ, கஞ்சியோ கிராமத்திலேயே இருக்கலாம்'ன்னு சொன்னாரோ அவர்...' என்று நினைத்தவளுக்கு தன்னை அறியாமல் பெருமூச்சு வந்தது.


உள்ளே மகன் தன் மனைவியிடம், ''லதா... 11:00 மணிக்கு அம்மாவுக்கு பஸ்... 9:00 மணிக்கே அம்மாவ பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்டு, நாம அப்படியே என் பிரண்ட் வீட்டு, 'பெர்த்டே' பார்ட்டிக்கு போயிடலாம்,'' என்று கூறுவது, விசாலத்தின் காதில் விழுந்தது.


''பார்ட்டி முடியற நேரந்தான் நாம போய் சேருவோம்; வேற வழி... உங்க தம்பி தான், கரெக்ட்டா ஆறு மாசம் முடிஞ்ச பின்தான் அம்மாவை தன்கிட்ட அனுப்பணும்ன்னு, கண்டிஷனா சொல்லிட்டாரே... ஒருநாள், ரெண்டு நாள் முன்னே போனால் என்னவாம்; உங்க தம்பி பொண்டாட்டி கெட்டிக்காரி; நான் தான் அசடு,'' என்று அடிக்குரலில் முனங்கினாள் லதா.



''என் தம்பியும் கெட்டிக்காரன் தான்; அம்மா இங்கே இருக்கிறாளேன்னு, ஒரு பத்து பைசாவது அனுப்பினானா... அப்பா உயிரோடு இருந்த வரை, அவருக்கு பயந்து, மாசா மாசம் கிராமத்துக்கு பணம் அனுப்பிச்சுட்டு இருந்தான். அப்பா இறந்தபின், அம்மாவ ஆளுக்கு ஆறு மாசம் கூட வச்சுக்கணும்ன்னு பேச்சு வந்ததும், நீ தானே மூத்த பையன்னு என்கிட்ட தள்ளிட்டான். இந்த ஆறு மாசத்துல ஒரு நாளாவது திருச்சிக்கு வந்து எட்டிப் பாத்துருக்கானா... நானும், இப்போ, அம்மா கையில, பஸ் டிக்கெட் தவிர, 50 ரூபா தான் கொடுத்தனுப்ப போறேன்,'' என்றான்.





மகனின் பேச்சைக் கேட்டு, அதிர்ந்து போகவில்லை விசாலம். இந்த ஆறு மாதங்களில் எல்லாமே அவளுக்கு பழக்கமாகி விட்டது. விருந்தும், மருந்துமல்ல, தாயும், தந்தையும் கூட மூன்று நாட்களுக்குத் தான் என்கிற கால கட்டம் இது! 'எல்லா வீடுகளிலும் மனிதர்கள் இருக்கின்றனர்; தனித்தனி தீவுகளாய்...' என்று எங்கோ எதிலோ படித்தது நினைவிற்கு வந்தது.


வெளியூர் பேருந்து நிலையத்தில், விசாலத்தை இறக்கி விட்டு, ''பஸ் இங்க தான் வரும்; டிக்கெட்டை காமிச்சு, எந்த பஸ்ல ஏறணும்ன்னு யாரையாவது கேட்டுட்டு ஏறு. ஜாக்கிரதையா போய்ட்டு வாம்மா... உன் சின்ன மருமக கொஞ்சம் கடுமையா பேசுவா... லதா மாதிரி இல்ல, அட்ஜஸ்ட் செய்துக்கோ,'' என்றான், மகன்.


'உன் பொண்டாட்டி மொழுக்கு பூனைப்பா; பேசாமலேயே காரியத்தை சாதிச்சுப்பா...' என்று சொல்ல வந்ததை சொல்ல முடியாமல், ''சரி,'' என்றாள் விசாலம்.


''லேட் ஆறது... பார்ட்டிக்கு கிளம்பறேன்; பஸ், 11:00 மணிக்கு கிளம்பிடும். ரொம்ப விடியலில் இருட்லயும், பனியிலயும் போக வேணாம்ன்னு தான், லேட் பஸ்ல அனுப்புறேன்... கடைசி ஸ்டாப் கலாசிபாளையத்துல இறங்கு; நடுவுல இறங்கிடாதே... தம்பி வந்து உன்னை அழைச்சிட்டு போவான்,'' என்றான் மகன்.

''சரிப்பா... பைக்ல பாத்துப் போ... வேளைக்கு சாப்பிடு; மறக்காம இருமல் மருந்து எடுத்துக்க,'' என்று கூறி, கண்ணில் துளிர்த்த நீரை, புடவை தலைப்பில் துடைத்தபடி, அங்கிருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தாள், விசாலம். 


பேருந்து நிலையத்திற்கே உரிய இரைச்சலும், ஜன நடமாட்டமும் அதிகமாயிருக்க, அந்த இரவு நேரத்திலும், ''ரெண்டு முழம் பத்தே ரூபா வாங்கிக்கம்மா,'' என்று கெஞ்சினாள் வயதான பூக்காரி. பஸ் டிக்கட் தவிர, விசாலத்தின் கைப்பையில், 50 ரூபாய் தான் இருந்தது.


பத்து ரூபாய்க்கு மல்லிகைப் பூ வாங்கி போய், சின்ன மருமகளை திருப்தி செய்ய முடியாது என்றாலும், தன்னை விட, வயதில் மூத்தவளாய் தெரியும் இவளுக்கு உதவலாம் என்று தோன்ற, 10 ரூபாய்க்கு பூ வாங்கினாள். மீதம், 40 ரூபாயை கைப்பையில் போட்ட போது தான், தண்ணீர் பாட்டிலை எடுத்து வராதது நினைவிற்கு வந்தது. பேத்தி மீனா இருந்திருந்தால், பஸ்சில் ஏறும் வரைக்கும் கூடவே, துணையாக இருந்திருப்பாள். வறட்டு இருமல் இல்லாவிட்டால், தண்ணீர் தேவை இருக்காது. அப்போது, விசாலம் அருகே ஒரு இளம்பெண், கைக்குழந்தையுடன் வந்து, உட்கார்ந்தாள்.

அழுகிற குழந்தையை, மடி மீது கிடத்தி, அதன் மார்பில் கை விரல்களால் தட்டியபடியே,''பெங்களூரு பஸ் எப்போ வரும்?'' என்று கேட்டாள்.

''தெரிலம்மா... மணி, பத்தரையாகப் போகுது இன்னும் வரக்காணோம்...'' என்றாள்.
''ஆம்னி பஸ்சுன்னா கரெக்டா வரும்; சரியான நேரத்துக்கு கிளம்பும். இது, ஏதோ லொடக்கானி பஸ்சு. எப்போ வேணா வரும்; எப்போவேணா கிளம்பும். டிக்கட் சல்லிசுன்னு எம் புருஷன் இதுல தான் என்னை அனுப்பும். என்ன செய்யறது... பேய்க்கு வாக்கப்பட்டா, முருங்க மரத்துல தானே ஏறியாவணும்...'' என்று சலித்துக் கொண்டாள்.


''தண்ணீர் பாட்டில் வாங்கி வர்றேன்... அதுக்குள்ள பஸ் வந்துடாதே...''

''வந்தா தான் உடனே கிளம்பிடுமா... நீங்க போயிட்டு வாங்க; நான் இங்க தான் உக்காந்துருப்பேன். இந்த சனியன், 'நொய்நொய்'ன்னு அளுவுறான். அப்படியே அவங்க அப்பனாட்டம் அழிச்சாட்டியம்,'' என்று, குழந்தையின் மார்பில், 'பட் பட்' என்று, வேகமாய் தட்ட ஆரம்பித்தாள்.


விசாலம், தண்ணீர் பாட்டிலுடன் திரும்பி வந்த போது, இன்னொரு வயதான தம்பதி அங்கே அமர்ந்திருந்தனர். விசாலம் கைப்பையுடன் நிற்கவும், ''நீ ஏம்மா நிக்கிறே... கொஞ்சம் நகர்ந்துக்கச் சொல்லி உட்காரு,'' என்றாள், கைக் குழந்தைக்காரி.


''ஏம்மா... பஸ்சு வந்தா சொல்லுங்க... எங்க ரெண்டு பேருக்கும், கண்ணு சரியா தெரியறதில்ல... குழந்தை குட்டி இல்லாத பாவிங்க நாங்க...'' என்றார், அருகில் அமர்ந்திருந்த முதியவர் நடுங்கும் குரலில்!

''பிள்ளை குட்டி இல்ல; கண்ணு தெரியலங்றீங்க... பெங்களூருக்கு யார் வீட்டுக்கு போறீங்க...'' என்று கேட்டாள், கைக்குழந்தைக்காரி.

''அங்க, என் பால்ய நண்பன், அவன் பொண்ணு வீட்டுல இருக்கான். எங்களையும் அங்க வந்து இருக்கச் சொல்லி, அவன் பொண்ணு சொல்றா... அதான் போறோம்.''

''இந்த காலத்துல, பொண்ணை பெத்தவங்க தான் அதிர்ஷ்டசாலிங்க; எனக்கு அந்த அதிர்ஷ்டம் கூட இல்ல... மொடாக்குடியன கல்யாணம் செய்து, அவன் வாரிசா ஆம்பிளைபிள்ளை தான் பொறந்திருக்கு. இந்த ஆறு மாச குழந்தைக்கு அரை பவுனுல செயின் செய்து தரணுமாம், என் அப்பன். 'போய் கொண்டுவாடி'ன்னு கழுத்தைப் பிடிச்சு தள்ளிட்டான், புருஷன். அங்க, கட்டட வேலை செய்யுது, என் அப்பன். அவங்களுக்கே சோத்துக்கு திண்டாட்டம்; தங்கத்துக்கு எங்க போறது... என்னவோ போங்க.''


அப்போது, இஞ்சி மொறப்பா விற்றுப் போன சிறுவனை அழைத்த அப்பெண், ''நாலு வில்லை கொடு... பஸ்சுல போன, பாழாப் போன வாந்தி வந்து தொலைக்கும்,'' என்று முணுமுணுத்தபடி பர்சை திறந்து, 50 ரூபாயை எடுத்தாள்.


''சில்லரை இல்லக்கா... நீ தான் முதப் போணி,'' என்றான் இஞ்சி மொறப்பா விற்ற சிறுவன்.
''அடி செருப்பால... போணியாமுல்ல... ராவுல என்னடா போணி...''

''எக்கா... என் வியாபாரம், ராவுல தான்; பகல்ல, ஸ்கூலுக்கு போறேன்,'' என்றான்.

'பாவம் படிக்கிற பையன் போலிருக்கு... ஏழ்மையில இப்படி வேலை செய்து பொழைக்கிறானே...' என்று நினைத்து, ''பையா... இந்தாப்பா எவ்ளோ தரணும்...'' என்று தன் சிறு பர்சை, திறந்தபடி கேட்டாள், விசாலம்.

''நாலு ரூபா பாட்டிம்மா.''

''ஐயோ... என்னம்மா நீங்க தர்றீங்க...'' அலறினாள், கைப்பிள்ளைக்காரி.

விசாலம் சில்லரையை கொடுத்து, ''அதனால் என்னம்மா... ஆயிரம் ரூபாயா தந்தேன்; வெறும், நாலு ரூபா தானே பரவாயில்ல,'' என்றாள் புன்னகையுடன்!

அப்போது, 'பாம்... பாம்...' என்று, 'ஹார்ன்' அடித்தவாறு மஞ்சள் நிற பஸ் வந்து நிற்கவும், குழந்தையை வாரி, தோளில் போட்டுக் கொண்ட அப்பெண், ''இருங்க... நான் போயி, இது நாம போற பஸ்சான்னு விசாரிக்கிறேன்,'' என்று எழுந்தாள்.

''குழந்தையை என்கிட்ட குடும்மா... பாவம், கை வலிக்கப் போறது,'' என்றாள் பரிவுடன், விசாலம்.
அதற்குள், சிட்டாய் பறந்து, பஸ்சை நெருங்கி விசாரித்து வந்தவள், ''பெங்களூர் பஸ் தானாம்... வாங்க...'' என்றவள், ''இந்த பஸ் பாசஞ்சர் ரயிலு மாதிரி, எல்லா ஊர்லயும் நிப்பாட்டி, புளி மூட்டை மாதிரி ஆளுங்கள ஏத்திக்கிட்டுத்தான் போய்ச் சேருவான்... புறப்படற நேரமும், போய் சேருகிற நேரமும், நிச்சயமே இல்ல... ஆனா, கண்டிப்பா போயிடுவான்,'' என்று சொல்லி சிரித்தாள்.
அவள் சொல்லியது போலவே, இரவு, 11:30க்கு கிளம்பிய பஸ், வழி நெடுக நிறுத்தி, ஆட்களை ஏற்றி, சேலத்திலும், கிருஷ்ணகிரியிலும் காபிக்கு என்று அரைமணி நேரம் நிறுத்தி, ஓசூர் வந்த போது, மணி காலை, 7:30 ஆகியிருந்தது.

 அதற்குள் பஸ்சில் பலரது மொபைல் போன்கள் இயங்கிக்கொண்டே இருந்தன. விசாலத்திற்கு இரவு முழுவதும் வறட்டு இருமலில், தூக்கம் கெட்டு, விடியும் பொழுதில், கண் செருக ஆரம்பித்தது.


''அம்மா... இறங்குங்க, பஸ் பெங்களூர் போவாதாம்...'' என்று, அவளை எழுப்பினாள், கைக் குழந்தைக்காரி.

''என்னாச்சு...'' பதற்றமாய் கேட்டாள் விசாலம்.

''காவிரி தண்ணிக்கு கலாட்டாவாம்... பஸ், பெங்களூரு போவாதாம். கர்நாடகா பஸ்சு வேணா, ஒண்ணு, ரெண்டு போகுமாம்... கார், வண்டியெல்லாம், கல்லெடுத்து அடிக்கிறாங்களாம்,'' என்றாள் கலவரமான குரலில்!


''எதனால இப்படி...'' கவலையுடன் கேட்டபடி, இருக்கையில் இருந்து எழுந்தாள் விசாலம். 

ஞாபகமாய், காலடியில் வைத்திருந்த, கைப்பையை எடுத்துக் கொண்டாள்.


''என்ன இழவோ, எல்லாம் அரசியல்வாதிங்க செய்யுற வேலை. பந்து மாதிரி அடிப்பாங்க... கெடந்து திண்டாடுறது, நம்மள மாதிரி பொதுமக்க தானே...''


''என் பேத்தி, டில்லிக்கு போறா... அங்க எதுவும் இருக்காதே...''

''அங்கெல்லாம் இல்ல; இங்க தான்; அதுவும் 'திடுதிப்பு'ன்னு காலையில அறிவிச்சுருக்காங்க. எறங்கி, நாம வேற பஸ்சு பிடிச்சு தான் ஊர் போவணும்.''


பயணிகள் சிலர் பஸ் கண்டக்டரிடம், சண்டை பிடிக்க ஆரம்பித்தனர்.

''அதெப்படி... பெங்களூர் வரை முழு டிக்கட்டுக்கு காசு வாங்கிட்டு, இப்போ ஓசூர்ல இறக்கிவிட்டா எப்படி... திரும்ப டிக்கட் எடுக்க அதுக்கு வேற, 30 - 40 ரூபா ஆகுமே...''


''அதுக்கு நாங்க என்ன செய்யுறது... இங்கயிருந்து எந்த பஸ்சாவாது தைரியமா எல்லை தாண்டி, ஊருக்குள்ள போகுதுன்னா, அதுல ஏறிப்போங்க. இல்லாட்டி, கர்நாடகா பஸ்சுல போங்க...'' அலுப்புடன் சீறி விழுந்தார் கண்டக்டர்.

''இப்ப என்னம்மா செய்யுறது... நீங்க, யார் வீட்டுக்கு போறீங்க?'' என்று கேட்டாள், கைக்குழந்தைக்காரி.

''மகன் வீட்டுக்கு,'' என்றதும், ''போன் போட்டு, விவரத்த சொல்லுங்க... நான் எதாவது ஒரு பஸ்சுல தொத்திட்டுப் போறேன்...'' என்று, அழும் குழந்தையை, தோளில் போட்டு, பஸ்சை நோக்கி, வேகமாய் நடக்க ஆரம்பித்தாள்.

முன்பு எப்போதோ மீனா தன் மொபைல் எண்ணை எழுதிக் கொடுத்ததை பர்சில் வைத்திருந்தாள். அதைக் எடுத்து, அருகில் உள்ள ஒரு பெட்டிக் கடைக்குச் சென்று தொலைபேசியில் மீனாவிடம் விவரம் சொன்னாள்.

''பாட்டி... பயப்படமா இருங்க; சித்தப்பா நம்பர் சொல்றேன் குறிச்சுக்கங்க; நானும் சித்தப்பா கிட்ட பேசுறேன்; அங்கேயே இருங்க எங்கேயும் போயிராதீங்க,'' என்றாள்.

விசாலம், தன் இளைய மகனுக்கு போன் செய்த போது, அவன் எரிச்சலாய், ''அம்மா... அந்த மடையனுக்கு, உன்னை வசதியா அனுப்ப துப்பு இல்லயா... இப்போ பாரு, நானும் வீட்டை விட்டு வெளியில வர முடியாது; 'டிவி'ல ஒரே கலவரமா இருக்குன்னு காட்றாங்க. பஸ், பைக், கார் எல்லாத்தையும் எரிக்கிறாங்களாம். என் காரையும் எரிச்சிட்டா, நான் என்ன செய்றது... பேசாம, திருச்சிக்கு போயிட்டு, அடுத்த வாரம் புறப்பட்டு வா... அதுக்குள்ள இங்க எல்லாம் அடங்கிடும்,'' என்று போனை வைத்தான்.


மனசும், உடம்பும் சேர்ந்தாற் போல தளர்வடைய, அப்படியே மயங்கி சரிந்தாள், விசாலம்.
''ஐயோ... அந்தம்மா விழுந்துட்டாங்க.... மயக்கம் போலிருக்கு யாராச்சும் தண்ணி தெளிங்க முகத்துல,'' அருகில் நின்ற வயதான ஒருவர் அலறவும், பல கரங்கள் நீர் கொண்டு வந்தன.

அதில், எது காவிரித் தண்ணீரோ!

8 comments:

  1. இயல்பான காலத்துக்கேற்ற சம்பவங்கள் கொண்ட அருமையான கதை ஆண்குழந்தைகளை விட பெண்குழந்தைகளே அன்புக்கு காரண்டி.

    ReplyDelete
  2. காலத்துக்கேற்ற மிக அருமையான கதை. தினமலர் வாரமலர் என்னிடம் உள்ளது. அதன் மேல் அட்டையில் சரஸ்வதி படம் இருந்ததால் அதனை இன்று நம் ஆத்து சரஸ்வதி பூஜையில் வைத்துவிட்டேன். இன்னும் அதில் நான் இதனைப் படிக்காதபோதும் இங்கு படித்ததில் மகிழ்ச்சியே.

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். :)

    ReplyDelete
  3. அருமையான கதை அம்மா...

    ReplyDelete
  4. அருமையான கதை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திருவெங்கட்நாகராஜ்

      Delete
  5. இந்த அம்மா இரண்டு பிள்ளைகளுக்கு நடுவில் படாத பாடு படுவதைப்போலவே காவிரித் தாயும் இரண்டு மாநிலங்களுக்கு நடுவே படாத பாடுபடுகிறாளோ?

    நன்றாக உணர்ச்சி பூர்வமாக எழுதியிருக்கிறீர்கள், ஷைலஜா. வாரமலரில் வெளிவந்ததற்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. நல்ல யதார்த்தமான சிறுகதை. சமீபத்திய நிகழ்வுகளை இணைத்து நல்ல கருத்தை வழங்கியுள்ளீர்கள். பெற்றவர்களை மதிக்காத இதுபோன்ற ஜென்மங்களும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வலைத்தளம் திறக்க இயலாமல் சிலநாட்கள் படுத்திவிட்டது ஆகவே நன்றி சொல்ல தாமதமாகிவிட்டது குமார் அருள்மொழிவர்மன் வைகோ சார் ஜி எபி சார் அனவர்க்கும்நன்றி பல.ரஞ்சனி! கதையின் உங்கள் பார்வைக்கோணம் மிகச்சரி..ரசித்தேன் சிறப்பு நன்றி

      Delete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.