Social Icons

Pages

Wednesday, November 28, 2012

கலியன் என்னும் கண்ணன் மனம் கவர் கள்ளன்!

கார்த்திகை மாதம் கிருத்திகா நட்த்திரத்தில் அவதரிதத இவர் முகத்தில் நல்ல தேஜஸ், வiீிர்யம், எதிரிகளுக்கு எமன்போல தோற்றமளித்ததால் இவர் தந்தை இவருக்கு பரகாலன் எனப்பெயர் வைத்தாராம்/
 
 
மகாபுத்திசாலியாய் வளர்ந்த இவரை தஞ்சை மன்னன் தனது அவையில் சேனாதிபதியாக வைத்துக்கொண்டார்.
 
 
இவரது குதிரைக்கு ஆடல்மா என்று பெயர்.நர்த்தனம் செய்யும் குதிரையாம்! இவர் ஏறி உட்கார்ந்தால் நாலுகாலும் பூமியில் இருக்காதாம் அப்படி ஒரு வேகம். இவரது பராக்கிரமங்களைக்கண்டு குறுநிலமன்னராக ஆக்கினான். திருமங்கை மன்னன் எனப்பெயர்பெற்றார் கலியன்.
திருவரங்கத்தில திருமதில் கைங்கர்யம் செய்தவர்(திருமங்கை மன்னன் திருச்சுற்று)
நீலன் என்கிற பேர்ல கள்ளனாய்
நீலவண்ணக்கண்ணனின் திருவடியைத்தொட்டு
மகிழ்ந்த பேறு பெற்றவர்
சார்ங்கம் எனும் மாலின் ஆயுதத்தின் அவதாரம்
குமுதவல்லி என்னும் அரங்கபக்தையின்
ஆருயிர்க்கணவன்!
அரங்கனிடம் தன் சிந்தையைப்பறிகொடுத்த ஆழ்வார்!
அந்த ஆழ்வாருக்கு இன்று பிறந்தநாள்!
பன்னிரு ஆழ்வார்களில் கடைக்குட்டி! அதிகபிரபந்தங்களை-பெரிய திருமொழி திருநெடுந்தாண்டகம் திருக்குறுந்தாண்டகம் திருவெழுக்கூற்றிருக்கை சிறிய திருமடல் பெரியதிருமடல் ஆறு பிரபந்தங்களை அருளிச்செய்த ஆழ்வாரும் இவரே! 1084 பாசுரங்கள். வேதாந்த ஞானம் ஆதம் ஞானம் தத்துவ ஞானம் நிறைந்த பாசுரங்கள். கலியனின் அறிவியல் விளக்கம் கொண்ட பாசுரங்கள் பல உள்ளன.
கடைக்குட்டிகளுக்கு பெற்றோரிடம் சலுகை அதிகம்தானே இவரும் திருமாலிடம்,’ இதோபார் எனக்கு ஒன்றும் நீ யசோதைக்கு பண்ணினதுபோல லீலை காட்டவேண்டாம் தேவகியிடம் அவதாரமாய் வந்ததைப்பண்ணிக்காட்டவேண்டாம் சத்ருக்களை வதம் செய்து மார்பிலே ரத்தத்தைக்காட்டவேண்டாம் எம்பெருமானே நீ உன் திருமேனியக்காட்டினால் போதும் எனக்கு சேவை சாதிக்கவில்லை என்றால் ஈஸ்வர தத்துவத்தையே அழித்துவிடுவேன்’ என்று மடல் எடுக்கிறார்!
பரகால நாயகியாய் எம்பெருமானிடம் தூது அனுப்ப அன்னம் வேண்டாம் அது பிரிக்கிற இனம் கிளீயை அனுப்பலாமென்றால் அது ரசமான வஸ்துவை கொத்தித்தின்னும். அதுவும் வேண்டாம் என் மனசையே தூது போகச்சொல்கிறேன். ஆனால் தூது போன மனசும் பரகால நாயகியை மறநது அங்கேயே தங்கிவிட்டதாம்!
 
காதல் மனைவி குமுதவல்லியால்  மாலின்  தீவிர பக்தனானவர் கலியன்.
ஸ்ரீரங்க நகரில்கோயில் மதில் கட்டியவர். கூலி கொடுக்க பணமின்றி ஆட்களிடம் 'பணம் வேணுமா.. இல்லே மோட்சம் வேணுமா' என்று கேட்டதாகவும் மோட்சம் என்று அவர்கள் சொல்ல பரிசலோடு கொள்ளிடத்தில் கவிழ்த்து விட்டதாகவும் ஒரு கதை உண்டு! உண்மையா பொய்யா தெரியவில்லை. ஆனா வழிப்பறி நடத்தி அதுல வந்த நிதியை கோவில் திருப்பணிக்கு அளித்த மகாதிருடர் கலியன்!அந்த கால ராபின்ஹுட் தான் திருமங்கை ஆழ்வார்!
ஒருமுறை ஒரு கல்யாண கோஷ்டி வருகிறது. ஜோய் அலுக்காஸ் விளம்பரம் போல நகைகளை அணிந்தபடி உல்லாசமாய் ஒரு புதுமணத்தம்பதிகள் நடந்துவருகிறார்கள். ஆஹா தெற்குச்சுவர்மதில் கட்ட தேட்டை போடவேண்டியதுதான் என நீலன் மனம் கணக்குபோடுகிறது. அவர்களைத்தடுத்து நிறுத்தி நகைகளை கழற்றித்தர சொல்கிறான். அனைத்தும் அவன் கைக்குவர தம்பதிகளில் கணவனாய் வந்த மாலின் கால் விரலில் உள்ள ஒரு நகையை அவரால் கழற்ற இயலவில்லை.”இதையாவ்து விடப்பா எனக்கு கழற்ற முடியவில்லை’ என்றார்,
“ஆ எப்படிவிடுவது அதை வைத்து நாலு கருங்கல் வாங்கிவிடுவேனே சரி நானே கழற்றுகிறேன்” என்ற கலியன்

வழிப்பறியின் போது, பரமனின் காலில் உள்ள மெட்டியைத் திருடுவதற்காகத் தொட்டார்! வாயால் கடித்து இழுத்துப்பார்த்தார் ஊஹூம் அது விரலைவிட்டு வரவே இல்லை. “என்னய்யா மந்திரம் போட்டாய் இப்படி உன்னோடு இறுகிக்கிடக்கிறதே?’ என்று கலியன் கோபமாய் மாலிடம் வினவ அவரும்,’காதைக்கொடு கலியா உனக்கு அந்த மந்திரத்தை நானும் உபதேசிக்கிறேன்’ என்று அவன் செவியில் அதை ஓதினார். அடுத்தகணம் கலியன் அதிர்ந்து மகிழ்ந்து அண்ணலை வணங்கி எழுந்தான். எந்த ஆழ்வாருக்கும் கிடைக்காத இந்தப்பேறு கலியன் எனும் திருமங்கை ஆழ்வாருக்கே உண்டு
குலம்தரும் செல்வம் தந்திடும்
–அடியார் படுதுயர் ஆயினஎல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
–அருளோடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
–பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
அஷ்டாட்சர மந்திரப்பெருமைதனை உரைக்கும் இந்த ஒருபாடல் ஒன்றுபோதும் மாலின் மேல்ஆழ்வார் கொண்ட ஆழ்ந்த பக்தியினை நமக்கு எடுத்துச்சொல்ல
இவர் கால்படாத திருத்தலம் தான் உண்டா? .
மிக அதிகமான திவ்ய தேசங்களைப் பாடியது இவர் ஒருவர் தான்!வைணவத்தை ஒரு மக்கள் அமைப்புக்குள் கொண்டு வந்தவர்.
சம்பந்தப் பெருமானின் திருக்கை வேலைப் பரிசாக வாங்கியவர்!
இன்று திருவரங்கம் கோவில் இப்படிப் பரந்து விரிந்து நிற்கிறது என்றால், அதற்கு முழுக்காரணம் இவரே! இவர் துணைவியார் குமுதவல்லி நாச்சியார், இவருக்கு உற்ற துணையாய், இறைப்பணிகள் அனைத்துக்கும் கைகொடுத்தார். ஆழ்வார்களிலேயே, தம்மோடு தம் மனைவிக்கும் சேர்த்தே, சிலையும் வழிபாடும் இருப்பது, இவருக்கு மட்டும் தான்!

.
‘தமிழ்கவி கற்கணுமா வா என்கிட்டே” என்று பெருமாளிடமே உத்தரவு போட்ட ஆழ்வாரும் இவரே! கடைக்குட்டி இளம்கன்று பயம் அறியுமா என்ன?!
பெரியதிருமொழியில் இவர்,
“மெய்ம்மை சொல்லில் வெண்சங்கமொன்றேந்திய
கண்ண! நின்தனக்கும் குறிப்பாகில்
கற்கலாம் கவியின் பொருள்தானே”
என்று திருக்கண்ணமங்கை பெருமான் கண்ணன் தம் திருமொழியின் அர்த்தங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுவதை அவன் திருமுகக் குறிப்பிலிருந்து கண்டு,”நீ என்னிடமிருந்து கவியின் பொருளைக் கற்றுக்கொள்ளலாம்” என்று நியமித்தார்
அதற்கு பரம ரசிகனான கண்ணனும்.” அவசியம் உம்மிடமிருந்து கற்கிறேன் ஆனால் இப்போது அர்ச்சாவதாரமாகையாலே அது கூடாது.பின்னொருசமயத்திலே நீர் உமது அவதார நட்சத்திரமான கார்த்திகையில் கார்த்திகைநாளிலே உமது திருநாமமான’திருக்கலிகன்றிதாசர்’ எனும் திருநாமத்துடன் இந்தச் சோழ நாட்டிலே அவதரிக்கபோகிறீர் அப்போது நான் ஆவணி ரோஹிணியில்(கண்ணன்) கிருஷ்ணன் என்னும் பெயரோடு அவதரித்து உம்மை ஆசார்யனாகக் கொண்டு ஆழ்வார்கள் அனைவருடையவும் ஆண்டாளுடையவும் அருளிச் செயல்களின் பொருள்களையும் மற்றும் ரஹஸ்யார்த்தங்களையும் ஸ்ரீ ராமாயணார்த்தங்களையும் உம்மிடம் இருந்தே கற்றறிந்து உலகுய்ய வெளிப்படுத்துவேன்” என்று அருளிச்செய்தான்.அதன்படியே கலிகன்றாகிய திருமங்கையழ்வார் திருக்கலிகன்ற தாசராகிய நம்பிள்ளையாகவும் கண்ணன் ஸ்ரீமத் கிருஷ்ணமாஹ்வரான(கிருஷ்ண சூரி என்னும்) பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதரித்தனர் என்று பெரியோர் பணிப்பர்.
கலியனின் அறிவியல் நம்மை அதிசயக்க வைக்கிறது.
வெற்றிடத்தில் அதாவது வெற்று ஆகாசத்தில் ஒலி கேட்காது என்று சொல்கிறார்கள் இந்த அறிவியலை நாம் ஆராய வேண்டி உள்ளது ஆகாயத்திலிருந்து வாயுவும் வாயுவிலிருந்து அக்னியும் அக்னியிலிருந்து நீரும் நீரிலிருந்து மண்ணும் இறைவனின் கருணையில் சிருஷ்டிகளாயின.
மண்ணிற்கு ஐந்துகுணங்கள்... ஒலி தொடுகை ரூபம் ரஸம் கந்தங்கள்
நீருக்கு ஒலி தொடுகை(ஸ்பரிசம்) ரூபம் ரஸங்கள்
அக்னிக்கு ஒலி தொடுகை ரூபங்கள்(வடிவங்கள்)
வாயுக்கு இரண்டு குணங்கள். ஒலி , தொடுகை.
ஆகாயத்திற்குமட்டும் ஒலி மட்டுமே குணம். குணம் எனில் இயற்கையான தன்மை எனலாம்.
திருமழிசையும், பூநிலாய் ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய் தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய் மீநிலாயதொன்றுமாகி,,,,’ என்று பஞ்சபூதக்கொள்கையை அருளிச்செய்துள்ளார்.
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வர நவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற...
என்று நம் குலபதியான நம்மாழ்வாரும் அருளி உள்ளதில் விசும்பு எனப்படும் ஆகாயத்திற்கு நவில்= சப்தகுணம் என்று அர்த்தம். ஆனால் விஞ்ஞானிகள் ஆகாயத்தில் ஒலி கேட்காது அதாவது வெற்று ஆகாயத்தில் சப்தம் பரவாது என நிரூபித்துவிட்டார்கள்.
காற்றுள்ள இடத்தில்தான் ஒலி ஊடுருவும் என்பதை எல்லோரும் அறிவார்கள். அப்படியானால் வைதீக சித்தாந்தத்தில் தத்துவ விசாரங்கள் செய்யும் இடத்தில் ஆகாயத்தின் குணம் சப்தம் என்று சொன்னது எப்படிச்சரியாகும்? இந்தபிரச்சினையை ஸ்ரீ தேசிகன் திருவாக்கான அறிவுதரும் பெரிய திருமொழி என்றான இந்த பாசுரம் நமக்கு விளக்குகிறது இதை அருளியவர் திருமங்கை ஆழ்வார்தான்.
பெரிய திருமொழியில் ஏழாம் பத்தில் தேரெழுந்தூர் பாசுரம் இது..
திருவாழ் மார்வன் தன்னைத் திசை மண் நீர் எரி முதலா
உருவாய் நின்றவனை ஒலி சேரும் மாருதத்தை
அருவாய் நின்றவனைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே.
விளக்கம்/பஞ்சபூதங்களாய் இருப்பவன் பிரானே திசைகளாய் இருப்பவன் அவனே அதாவது ஆகாயத்தை சொல்கிறார். அதேபோல நிலம் நீர் தீயாய் இருப்பவனும் அவனே இந்த நான்கையும் கூறியவர் அவற்றின் குணங்களைக்கூறாமல் ஒலி சேரும் மாருதத்தை என்கிறார். அதாவ்து மாருதம் எனில் காற்று, காற்றில்தான் ஒலி என்கிற குணம் தெளிவாக இருக்கும். ஒரு பொருள் என்றால் அதற்கு ஏதாவது குணம் இருக்கவேண்டும். பூமிக்கு 5 நீருக்கு4 நெருப்புக்கு 3 வாயுக்கு இரண்டு என்கிறபோது ஆகாயம் என்கிற பொருளுக்கு என்னதான் குணமாக இருக்கமுடியும்?ஆகாயத்தைத்தொட முடியாது. ஆக தன் குணம் ஒலியாகத்தான் இருக்கமுடியும். அதுவும் வாயு எனும் தத்துவத்தில்தான் ஒலி சேர்கிறது. பஞ்சபூதங்களில் ஆகாயம் மிகவும் சூட்சமமான பொருள். அது மனிதனுக்கு அவ்வளவு எளிதில் விளங்காதுதான். ஆகவே ஒலி சேரும் மாருதம் என்கிறார் என்ற விஞ்ஞானக்குறிப்பை இங்கே வைக்கிறார் ஆழ்வார் பெருமான்.
ஆகாயத்தின் குணமான ஒலியை காந்த அலைகளாக்கி கேட்கவைத்துவிட்டார்கள் நெருப்பின் குணமான ஒளீயை அதாவது காட்சியை உலகெங்கும் தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள் இதேபோல காற்றின் குணமான தொடு உணர்ச்சி நீரின் குணமான சுவை மண்ணின் குணமான வாசனை எல்லாவற்றையும் வேறு வேறு அலைகளாக்கி எங்கும் ஏற்றுமதி செய்யவும் முடியலாமோ? அல்லது அப்படி நடந்துதான் விட்டதோ?:)
மறுபடியும் கலியனின் கல்யா்ண குணத்திற்கு வருவோம்.
தன் குலதெய்வம் என்று திருமங்கைஆழ்வார் யாரைச்சொல்கிறார் தெரியுமா?
தான் அவதரித்த அருகில் உள்ள திவய்தேசமாகிய திருவாலிதிருநகரப்பெருமானையா?
திருக்குடந்தை ஆராவமுதனையா?
நரையூர் நின்ற நம்பியையா?
திருக்கண்ணபுரம் பெருமாளையா?
கலியுகத்தெய்வம் வேங்கடவனையா
தனக்கு நிதிகாட்டிக்கொடுத்த பேரருளாளனையா
பூலோக வைகுந்தம் ஆளும் அரங்கனையா?
இவர்களில் யாரையுமே இல்லை!
யாரைத் தன் குலதெய்வம் என்கிறார்?
///
எதிரிகளை அழித்து அவர்களுடைய சரீரங்களை நாய் நரி விலங்குகள்: விரும்பிஉண்ணும்படியாகவும் மெல்லிய சுவாபமுடைய பெண்கள் தங்களே விரும்பி அணைக்க மிடுக்குடைய இலங்கேஸ்வரனான ராவணனுடைய மார்பகத்தை அக்கினியானது ஏறி வதம் செய்துகொடுமையான யுத்தத்தைப்பலரும் காணும்படிசெயதவராய் அந்த சிரமம் தீரும்படி திருக்கடல் மல்லையில் ஸ்தல சயனத்தில் பள்ளிகொண்டிருக்கும் எம்பெருமானை மனதாரக்கொண்டாடும் அடியவர்கள் எவர்களோ அவர்கள் எங்கள் குலத்துக்கு தெய்வர்கள் ஆவார்கள்.
விண்டாரை வென்றாவி விலங்குண்ண . மெல்லியலார்
கொண்டாடும் மல்லகலம் அழலேற வெஞ்சமத்துக்
கண்டாரை, கடல்மல்லைத் தலசயனத்துறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையாரவர்கள் எங்கள் குலதெய்வமே
(பெரிய திருமொழி2.6.4)
கலியன் தோண்ரிய கார்த்திகைத்திருநாள் இன்று.
ஆழ்வார் திருவடிகளே சரணம்!




--

 

9 comments:

  1. //கலியன் தோண்ரிய கார்த்திகைத்திருநாள் இன்று.
    ஆழ்வார் திருவடிகளே சரணம்!/
    அற்புதமான பதிவு.
    அத்தனையும் அமுது.
    திருக்கண்ணமுது.


    ///காதல் மனைவி குமுதவல்லியால் மாலின் தீவிர பக்தனானவர் கலியன்.
    ஸ்ரீரங்க நகரில்கோயில் மதில் கட்டியவர். கூலி கொடுக்க பணமின்றி ஆட்களிடம் 'பணம் வேணுமா.. இல்லே மோட்சம் வேணுமா' என்று கேட்டதாகவும் மோட்சம் என்று அவர்கள் சொல்ல பரிசலோடு கொள்ளிடத்தில் கவிழ்த்து விட்டதாகவும் ஒரு கதை உண்டு! உண்மையா பொய்யா தெரியவில்லை.//

    உண்மையாகத்தான் இருக்கும் .

    ஒரு நாற்பது இல்லை நாற்பத்து ஐந்து வருஷங்களுக்கு முன்னாடி நடந்தது இது.
    நான் அம்மா மண்டபத்துறையிலே என் நண்பர்களுடன் குளித்துக்கொண்டு இருந்தேன். வெள்ளம் போல காவிரி ஓட்டம்"
    என் நண்பர் " டேய் !! ரொம்ப தூரம் போயிடாதே... அங்கங்கெ புதர் இருக்கும்டா...கவனமா இரு.. இல்லைன்னா
    அந்த கலியன் கதை ஆகிடப்போறது " என்றார்.

    குளித்து வந்ததும், " சேஷாத்ரி, அது என்ன கலியன் கதை ?" அப்படின்னு கேட்க, அவன், ( இன்று அவர். ஆஸ்தான
    ஜோஸ்யர்) இந்தக்கதையைத் தான் சொன்னார்.

    அன்னிக்கு ராத்ரி ஒரு கனவு.

    ஏதோ ஆத்திலே ஒரு படகுலே போற மாதிரியும், படகு கவிழ்ந்து, எல்லோருமே மோட்சத்துக்கு போற மாதிரியும்....

    நான் மட்டும், எங்கேயோ ஒரு மாளிகை மாதிரி ஒரு கட்டிடத்துக்குள்ளே போறேன்...
    மோட்சத்திற்கு போக விரும்புவர்கள் இப்படி செல்லவும் அப்படின்னு ஒரு ஆரோ மார்க் வேற ஆங்காங்கே...

    கடைசியா ஒரு கர்ப்பக்கிருஹம் மாதிரி...
    வாசல்லே இரண்டு மீசை வச்ச ஆள் நின்னுண்டு இருக்கான்...

    உள்ளே போக விட மாட்டேன் அப்படிங்கறான்....
    நானோ போய்த்தான் ஆக வேண்டும் என்கிறேன். அப்பாயின்ட்மென்ட் இருக்கா ? அப்படின்னு கேட்கறான் ஒருத்தன்.

    காலம்பர இந்தக் கனவை அம்மா கிட்டே சொன்னேன். அம்மா அம்மா இந்த கனவு வந்ததே !
    என்ன அர்த்தம் ? அப்படின்னு கேட்டேன்.

    உனக்கெல்லாம் ஒண்ணுமில்ல.. எனக்கு வந்தால் தான் அர்த்தம் அப்படின்னாள்.
    அதெல்லாம் ரைட். என்ன அர்த்தம் சொல்லு அப்படின்னேன்.

    மோட்சம் வரும் அப்படின்னா.

    சொல்லி அம்பது வருசம் ஆகப்போகிறது.

    இன்னமும் வல்லையே ??? !!!!

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in



    ReplyDelete
  2. மிகவும் ரசித்துப் படித்தேன். விறுவிறுப்பான கதை போல எழுதியிருக்கீங்க.
    தமிழில் பாட்டெழுதியக் காரணத்தினாலேயே ஆழ்வார்களை எனக்குப் பிடிக்கும். 'கொண்டாடும் நெஞ்சுடையார்' pleasant surprise!

    ராபின்ஹூட் பணம் திருடிக் கோவில் கட்டவில்லை - ஏழைகளுக்குக் கொடுத்தார் (என்கிறது கதை). அந்த வகையில் நீலனுக்கு ஒரு படி மேலே? ஏழையின் சிரிப்பில் இறைவன் = ஒருவேளை அதைத்த்தான் கண்ணன் கலியனுக்குச் சொன்னானோ?






    ReplyDelete
  3. மிக்க நன்றி சுப்பு தாத்தா...இன்னும் ஒரு நூற்றாண்டிருக்க வேண்டும் உங்களைப்போன்ற உத்தமர்கள் எதற்கு மோட்சத்திற்கு இப்போதே ஆவலாக இருக்கிறீர்கள்? அனைத்தும் அவன் கையில் ..அதுவரை நாம் வாழ்வை ரசிப்போமே..நன்றி தங்களின் விவரமான மனதைத்தொடும் நல்ல பின்னூட்டத்துக்கு

    ReplyDelete
  4. மிக்க் நன்றி திரு அப்பாதுரை..ஆம் ராபின் ஹுட் திருடியதை ஏழைகளுக்குக்கொடுத்தார் கலியன் இறைப்பணி செய்தார். ஒரு பெண்மணி தங்கத்தட்டுடன் சாலையில் வரவும் அவள் தட்டை கலியன் தட்டிப்பறித்தாராம் அவள்” குருப்யோநமஹ” என்றாளாம் சட்டென அதை அவர் அவளீடமே கொடுத்துவிட்டாராம்! செய்யும் தொழிலிலும் நேர்மை அவருக்கு உண்டு என கேள்விப்பட்ட கதை இருக்கிறது.
    கருத்துக்கு மறுபடி நன்றி

    ReplyDelete
  5. 'கார்த்திகையில் கார்த்திகை'- தோன்றிய திருமங்கை ஆழ்வார் பற்றிய பதிவு அற்புதம்.சென்ற ஆண்டு திருவாலி திருநகரியில் ஆழ்வாரின் வேடுபறி சேவித்த நினைவு வந்தது.

    ரொம்பவும் சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்.

    பாராட்டுக்கள்!
    விரிவாக தனது அனுபவத்தை எழுதிய சுப்பு தாத்தாவுக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. Fantastic article..
    I love 'kaliyan'..

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி...

    சுவாரஸ்யமான பகிர்வு... பாராட்டுக்கள்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  8. மிக்க நன்றி ரஞ்சனி நாராயணன் தனபாலன் மற்றும்
    மாதவன் வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்ரி

    ReplyDelete
  9. அருமையானதோர் பகிர்வு ஷைலஜாக்கா..

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.