Social Icons

Pages

Monday, July 22, 2013

ஆடிவெள்ளி தேடி உன்னை...!








தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுமே  தனித்தனிச்சிறப்பு வாய்ந்தது எனினும்  ஆடிமாதம் சற்று கூடுதல் சிறப்பு பெற்றது.  ஆண்டின் பண்டிகைகளை ஆரம்பித்து வைக்கிற மாதம் இது! பாயசமும் சக்கரைப்பொங்கலும்  ஆடிமாதம் மட்டுமே அதிகம் செய்யவேண்டி இருக்கும்!

ஆடி மாதப்பிறப்புக்கு தேங்காய்ப்பால்  செய்யவேண்டும் புதுமாப்பிள்ளைக்கு புதுவெள்ளி டம்ளரில் மாமியார் வீட்டில்  தேங்காய்ப்பால் ஊற்றிக்கொடுப்பார்கள்!(இதுமாதிரி மருமகள்களுக்கு புகுந்தவீட்டில்  ஏதாவது உண்டா?::0 எல்லாம்  மாப்பிள்ளைகளுக்குத்தான்:)

இதே  மாப்பிள்ளையை ஆடிமாதம்   தனிமையிலே  இனிமை காணமுடியுமா பாடவைத்துவிடுவார்கள்:) காரணம்  அனைவரும் அறிந்ததே:):)

மனிதர்களுக்கான  ஓராண்டு தேவர்களுக்கு ஒருநாளாம். அதில் ஆடிமுதல் தேதி தொடங்கி ஆறுமாதகாலம் தட்சிணாயணம் என்றும் தை மாதம் முதல் தேதி தொடங்கி உத்திராயணம் என்றும்  சொல்லப்படுகிறது.

ஆடிமாதம் தெய்வீகமாதமாகக்கருதப்படுகிறது அம்மன் கோவில்களில் இந்த மாதம்  ஆடிக்கூழ்  ஆடித்திருவிழா  ஆடிவெள்ளிகளில்  சிறப்பு பூஜை என அமர்க்களப்படுகிறது.

அரங்கமாநகருளானை  இந்த ஆடிமாதம் பூரநட்சத்திரத்தில்பிறந்த  ஆண்டாள் காதலித்த கதையும்  திருவரங்கத்தில் அவனோடு ஜோதியாய் கலந்த கதையும் நாம் அறிவோம்.


ஆடிமாதம்  தென்னீர்பொன்னி  சற்றே கூடுதல் வேகத்தில்  தன் பாதையில் நடக்க ஆரம்பிப்பாள்.ஆடிப்பதினெட்டாம் பெருக்கன்று காவிரி அன்னைக்கு
படையலிட்டு  ஆரத்தி எடுப்பார்கள். தமிழ்நாட்டில் உள்ள  காவிரி பெண்ணை பொருனை ஆகிய மூன்று ஆறுகளிலும் ஆடிப்பதினெட்டைக்கொண்டாடுவதால் மூவாறு  பதினெட்டு  என்றும் சிலேடையாக சொல்லலாம்:)

ஆடிப்பெருக்கு என்று  திரைப்படம்  வந்திருக்கிறது.ஆடிப்பட்டம்  தேடி விதைக்கவேண்டுமாம் அப்போதானே தையில் அறுவடை செய்யலாம்?  ஆடி அம்மாவாசை  சிறப்பானதாம் ..மற்ற நேரங்களில் செவ்வாயோ வருவாயோ என அலுத்துக்கொள்கிறவர்கள்ஆடிச்செவ்வாய்  என்றால்  வாய்பிளந்து புகழ்வார்கள்! .

காவிரியன்னை ரங்கநாதரின் தங்கையாகக் கருதப் படுகிறாள். இந்நாளில்,சமயபுரம் பகுதியில் திருவிழா கோலமாக இருக்கும்.  சகோதரர்கள் தங்கள் சகோதரிகளையும், மைத்துனர்களையும் வீட்டிற்கு வரவழைத்து சீர் கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது

. சாதாரணமக்களே, இவ்வாறு சீர்கொடுக்கும் போது, இங்கே கோயில் கொண்டிருக்கும் ரங்கநாதர் சும்மா இருப்பாரா! தன் தங்கை காவிரிக்கு சீர் கொடுக்க அவர் அம்மாமண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார்.  அங்குள்ள மண்டபத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். மாலை வரை அங்கேயே ஆஸ்தானத்தில் வீற்றிருப்பார். சீதனப்பொருட்களாக மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் ஆற்றில் மிதக்க விடப்படும். சித்ரான்னங்கள்  செய்துகொண்டுபோய்  படித்துறை ஓரம் உட்கார்ந்து சாப்பிடுவார்கள்.

 ஸ்ரீரங்கம் -திருச்சி டவுனுக்கான  இடைப்பட்ட ரயில்   பாதை  காவிரி ஆற்றின் மீது  செல்லும் ஆடிமாதம்  காவிரி   திரைக்கைவீசி  நடந்துவரும்போது  ரயில் ரோமியோக்கள்   தடால் தடால் என  கீழே குதித்து மகிழ்வார்கள்  ஓரக்கண்ணால்  பெண்கள் கோச்சில்  இருக்கும் கல்லூரி மாணவிகள் தங்கள் வீரதீர செயலைப்பார்ப்பதை ரசித்தபடி:) 


  செல்வங்களைவாரித்தரும் வர லஷ்மி விரதம்  ஆடியில்தான் வருகிறது. ஆடித்தபசு  பற்றி அதிகம் தெரியவில்லை.  சங்கரன் கோயிலில் இது  விமரிசையாக நடக்கும் அல்லவா?

ஆடித்தள்ளுபடிக்கு  கூட்டத்தில் முட்டிமோதி   ஜவுளி எடுக்கும்  சுகம் கொஞ்சம் ‘ஸில்லி;யாக  இருந்தாலும் அலாதியானது! 

ஆடிவெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்.. கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்... என்ற அந்தாதி வகையிலான  அருமையானப்பாடலை   ஆடிமாத சிறப்பிப்பதிவில் இட்டு  பதிவை முடிக்கலாமா?

http://www.youtube.com/watch?v=d597F2FCF04


 

10 comments:

  1. வீரதீர செயல் உட்பட ஆடியின் சிறப்புகள் அருமை...

    என்னவொரு அருமையான பாடல்... நன்றி...

    ReplyDelete
  2. ஆடியின் சிறப்புகளை அறிந்துகொண்டேன்....நன்றி!

    ReplyDelete
  3. அருமையான ஆடிமாதம் பற்றி சிறப்பான தகவல்கள்..பாராட்டுக்கள்..

    //ஆடித்தபசு பற்றி அதிகம் தெரியவில்லை. சங்கரன் கோயிலில் இது விமரிசையாக நடக்கும் அல்லவா //

    http://jaghamani.blogspot.com/2012/08/blog-post_2.html

    மணிராஜ்: வெகுமதி அருளும் கோமதி

    ReplyDelete
  4. ”ஆடி வெள்ளி தேடி உன்னை .....!

    மிகவும் அருமையான அழகான பதிவு.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்ள்.


    >>>>>

    ReplyDelete
  5. //ஸ்ரீரங்கம் -திருச்சி டவுனுக்கான இடைப்பட்ட ரயில் பாதை காவிரி ஆற்றின் மீது செல்லும் ஆடிமாதம் காவிரி திரைக்கைவீசி நடந்துவரும்போது ரயில் ரோமியோக்கள் தடால் தடால் என கீழே குதித்து மகிழ்வார்கள் ஓரக்கண்ணால் பெண்கள் கோச்சில் இருக்கும் கல்லூரி மாணவிகள் தங்கள் வீரதீர செயலைப்பார்ப்பதை ரசித்தபடி:)
    //

    இன்று குதித்தால் நேராகக் கபால மோக்ஷம் தான்.

    அகண்ட காவிரி, வரண்ட காவிரியாகவே உள்ளது.

    நேற்று கூடப்போய்ப்பார்த்தேன்.

    ஒரு ஓரமாக சாக்கடை போல நீர் வந்துள்ளது.

    மழை பெய்து, மேட்டூர் அணை திறந்தும் கூட, இந்தப் பரிதாப நிலை நீடிக்கிறது.

    வரண்டு போய் விட்ட, காவிரித்தாய்க்கு அவ்வளவு தாகம். வரும் எல்லா நீரையும் உறிஞ்சிக்கொண்டு விடுகிறாள்.

    இன்னும் நல்ல மழை தொடர்ந்து பெய்தால் ஆடி 18க்காவது கரைபுரண்டு ஓடும் காவிரியைக் கண்டு மகிழலாம்.

    -oOo-

    ReplyDelete
  6. ஆடி மாத சிறப்புக்களைச் சொல்லும் அழகிய பகிர்வு... அருமை.

    ReplyDelete
  7. காவேரியில் நீர் இல்லை என்ற செய்தி வருத்தமானது. ஆனால் ஆடி பெருக்கு அன்று நீர் வரும் என்று நினைக்கிறேன்.

    ஆடிபெருக்கு என்றால் பொன்னியின் செல்வன் - வந்தியத்தேவன் நினைவும் வருமே!
    மூவாறு பதினெட்டு சிலேடை சுவை!

    ReplyDelete
  8. நான் சொல்ல நினைத்ததை வை.கோ. ஜி! சொல்லி விட்டார். காவேரியில் நீர் இல்லை... அகண்ட காவிரியிலேயே [திருப்பராய்த்துறை] தண்ணீர் சிறிதளவு ஓடம் போல ஓடிக்கொண்டிருப்பதாய் நேற்று பெரியம்மாவிடம் கேட்டபோது சொன்னார்!

    ஆடி பற்றிய நல்ல தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  9. ஆடித் தபசு பற்றி திருமதி இராஜராஜேஸ்வரி எழுதி இருக்கிறார்.இதோ இணைப்பு: http://jaghamani.blogspot.com/2013/07/blog-post_23.html

    ReplyDelete
  10. அனைவருக்கும் மிக்க நன்றி அன்பான பின்னூட்டங்கள் அளித்தமைக்கு மகிழ்ச்சி ஆடித்தபசு கட்டுரை படித்தேன் அங்கே பின்னூட்டமிடவேண்டும் ..எடுத்துக்கொடுத்த பதிவர்களுக்கு மிக்க நன்றி

    காவிரியில் ஆடிக்கு நீர் வந்திருக்கவேண்டுமே!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.