Social Icons

Pages

Thursday, February 04, 2010

தமிழர் இசை!

/////கொஞ்சநாள்முன்னாடி மணற்கேணி அமைப்பும், சிங்கைபதிவர்கள் மற்றும் இணையதளமும் நடத்தின கருத்தாய்வுபோட்டிக்காக கஷ்டப்பட்டு இதை ஆராய்ந்து எழுதி அனுப்பினேன்.பரிசு கிடைச்சா சிங்கப்பூருக்கு அனுப்பறதா அறிவிப்பு கொடுத்திருந்தாங்க. உடனே .கனவுல முஸ்தபா போய் ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சேன்! பெரிய சிங்கப்பூர் விசிறி வாங்கி ஹால் சுவரில் மாட்டி அழகுபார்த்தேன்! சிங்கை நண்பர்களைசந்தித்து மைசூர்பாக்கெல்லாம் கொடுத்தேன். கனவு நனவாகவே இல்லை! ஆமாம்,
போட்டியே நடக்கலன்னு அப்புறமா தெரிஞ்சது); ’இனிபொறுப்பதில்லை பெண்ணே’ என்று மனசு குரல்கொடுக்கவும் இப்போ இதை இங்கே இட்டுவிட்டேன்!/////

**********************************************************************





இசை என்றாலே இனிமை எனலாமோ? செவிவழிபுகுந்து மனதிற்கு மகிழ்ச்சியைத்தரும் ஓர் ஒலிதான் இசை என்பது!

இசை என்ற சொல்லுக்கு இசையவைப்பது என்று பொருள் இருக்கிறது.

ஒழுங்கான கட்டுபடுத்தப்பட்ட இனிய ஒலியை இசை என்கிறோம்.இனிய இசைஒலியை நாதம் என்று சொல்கிறோம்.

பிறப்புமுதல் இறப்புவரை இசை நம்மோடேயே பயணிக்கிறது.


தாலாட்டாக ஆரம்பித்து இறப்பில் ஒப்பாரியாக இசை விரியும் பரிமாணங்கள் அடர்த்தியானது. தமிழரின் வாழ்நாட்களில் மகிழ்ச்சியைக்கொண்டாட இசை நிகழ்ச்சிகள் நடத்துவதும் அதனைப்பலர் கேட்பதும் இன்றும் தொடர்கிறது.

அகம்புறம் இரண்டினையும் ஐக்கியப்படுத்தி ஒருமித்த தன்மையில் இவற்றில் ஊடுருவி உள்ளம், உடல் இரண்டினுக்கும் விவரிக்க இயலாத சுகமான அனுபவத்தை வழங்கக்கூடியது இசை என்றால் அதை மறுப்பதற்கில்லை.

தமிழ்மொழியை இயல், இசை, நாடகம் என்று பாகுபடுத்திக்கூறுவது தமிழ்மொழியில் தவிர வேறெந்த மொழியிலும் இல்லாத புதுமையாகும்.

பரதமுனிவர்,தமது நாட்டிய சாத்திரம் என்னும் நூலில் தென்னாட்டுமக்கள் பாட்டிலும் பல இசைக்கருவிகள் வாசிப்பதிலும், கூத்திலும் மிக்கதிறம் வாய்ந்தவர்கள் என்றுகுறிப்பிட்டுள்ளார்.

அவர்குறிப்பிட்டிருப்பது பண்டைய தமிழ் இசையே என்பதும் பண்டையதமிழிசையே இன்றைய கர்னாடக சங்கீதத்திற்கு தாயாகத் திகழ்ந்தது எனபதும் அனைத்து ஆய்வாளர்களின் ஒருமித்தக் கருத்தாகும்.

தொல்காப்பியத்தில் மக்கள்தம் தொழிலைச்செய்ய உதவும் கருவி இசை ஒன்றைப், ‘பறை’ என்றும் ,பொழுதுபோக்கிற்கான கருவி இசையை’ யாழ் ’என்றும் குறிப்பிடுகிறார்.
.
எட்டுத்தொகை சேர்ந்த பரிபாடல் பண்ணுடன்கூடிய,70இசைப்பாடல்களைக்
கொண்ட ஒருதொகுப்பாகும் ஆனால் நமக்கு 20பாடல்களே கிடைத்திருக்கின்றன.

எட்டுத்தொகையைச்சேர்ந்த அகநானுற்றில் பெண் ஒருத்தி,யாழெடுத்துக்,குறிஞ்சிப்பண் இசைத்து தினை உண்ன வந்த யானையைத் தூங்கும்படி செய்துவிட்டாள் என்ற செய்தி கிடைக்கிறது.

அக்கால மன்னர்கள் இசையைஆதரித்ததை இப்பாடல்களில் அறியமுடிகிறது. மூவேந்தர்களின் அவையில் தமிழ் இசை பெரிதும் போற்றப்பட்டிருக்கிறது!

சிலப்பதிகாரத்தில் இளங்கோஅடிகள் யாழ் ஆசிரியன் மற்றும்குழல ஆசிரியன் ஆகியோரின் இலக்கணங்களை சிறப்பாக எடுதுரைக்கிறார். புலவரே இசை மற்றும்நாட்டியகக்லை நுட்பங்களில் தேறியவர் என்பதால் தமிழர் இசை பற்றிய அறிவு நிரம்பப்பெற்றவராய் இருந்தார்.

.ஆய்ச்சியர் குரவையில் ஏழுமகளிர் ஏழு இசையின் பெயர்தாங்கி இசைஇலக்கணத்தை விளக்கும் வகையில் நின்று ஆடும்முறை அருமையாக விளக்கப்பட்டுள்ளது.

இன்னும் திவாகரம் பிங்கலம் ஆகிய நிகண்டுகளிலிருந்தும் பண்டைத்தமிழைபற்றிய பலசெய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது
.
103பண்களின் பெயர்கள் தமிழர் இசையில் விளங்கியதை சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன

,கிபி3ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி6ஆம்நூறாண்டுவரை தமிழக வரலாற்றுக்கும் தமிழ் இசைக்கும் இருண்டகாலம் என்றுகூறப்படுகிறது.

கிபிஆறாம் நூற்றாண்டு சமணர்காலத்தில்,சமணர் இசையை வெறுத்ததால் பல இசைநூலக்ள் அழிந்து போய்விட்டன.

கிபிஏழு, எட்டு, ஒன்பதாம்நூற்றாண்டுகளில் ,தேவார திவ்யபிரபந்தங்கள் தமிழில் தோன்றின.


ஆழ்வார்களும், நாய்ன்மார்களும்பண்ணோடு பாடிய சிறந்த தமிழ்ப்பாடல்கள், தமிழுக்குக்கிடைத்த அரும் புதையல்கள்!


பாடல் தாய் மொழியில் இருக்கும்போது அதை நாம் ஆழ்மனத்தோடு உணர்ந்து அனுபவிக்கிறோம். நாவுக்கரசரின் ‘தூக்கிய திருவடி எடுத்த பொற்பாதம்’ எனும் பாடலுக்கு சைவ சித்தாந்தத்தில் பலவித அர்த்தங்கள் உண்டு. மொழியிலிருந்து இசையைப்பிரிக்கமுடியாததால்தான் புல்லாங்குழலில் ‘’தீராதவிளையாட்டுப்பிள்ளை’; என்று வாசித்தால் நமது மனம் கண்ணனின் குழந்தை விளையாட்டை கண்முன் காண ஆரம்பித்துவிடுகிறது,



மணிமேகலை சீவகசிந்தாம்ணி பெரியபுராணம திருவிளையாடற் புராணம் ஆகிய நூல்களில் பல இசைக்கருத்துக்கள் காணப்படுகின்றன.

தமிழர்இசை எனும்போது தமிழ்மொழிமட்டுமல்ல தமிழ்ப்பண்பாட்டினையும் சேர்த்துதான் நாம் காணவேண்டி உள்ளது.

மொழிலியிலிருந்து,இசையைப்பிரிக்கமுடியாது ,அதனால்தான் இசைத்தமிழ் என்கிறோம்.


நான்குவகை நிலங்களாக இயற்கையைப் பிரித்தவர் தமிழர். நான்கிற்கும் கருப்பொருள், உரியபொருள் வகுத்தது நம் மரபு.

நால்வகை நிலங்களுக்குமான நான்குபெரும்பண்கள் உருவானது. பண்களே,காலப்போக்கில் ராகங்களாக வளர்ச்சியடைந்தன பண்ணென்பது பாடலின் இசைவடிவம் அதை’மெட்டு’என்றும்கூறலாம்

நான்குநிலத்திற்கும் உரிய பெரும்பண்ணை ’பாலை’ என்கிறோம்
ஒரு பழையபண்தான் இன்று முக்கிய ராகமாகத் திகழ்கிறது

.
சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர்குரவை பாடலில் ’முல்லைத்தீம்பாணி ’என்று குறிப்பிடப்பட்டுள்ளது

ச ரி க ப த இதன் சுரம்(ஸ்வரம்)

இதுதான், இன்றையமோகன ராகம்.திரைப்படப்பாடல்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ராகம்..ஆம், இதுவேமோகனம்! சுகமான ராகம் இது!


தமிழர் இசையானது, அடிப்படையில் இன்னிசை( மெலொடி) யானது!அதுதான் நமக்கு அடிபடையானசுவை !


15ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரின் திருப்புகழ்பாடல்களில், பல,தாள எண்ணிக்கைகளைப் பயன்படுத்திஅமைத்தார்.

18ஆம் நூற்றாண்டில் அருணாசலக்கவிராயர்.’இராம நாடகம்’ என்னும இசைநாடகத்தைதமிழில் இயற்றினார்.

திரிகூடராசப்பகவிராயர்,’குற்றாலக்குறவஞ்சி ’என்னும் அருமையான இசைநாடகத்தை இயற்றினார்.



19ஆம் நூற்றாண்டில் கவிகுஞ்ச்ரபாதி,அண்ணாமலைரெட்டியார்,((காவடிச்சிந்தின் தந்தை)
ராமலிங்க அடிகளார்,பாரதியார் பாரதிதாசன் போன்றவர்களின்பாடல்கள்,தமிழரின் இசைஎனும் பாரம்பரியத்திற்கு வலிமையும் பெருமையும் சேர்த்த பாடல்கள் என்பதில் ஐயமில்லை.

ஆப்ரஹாம்பண்டிதர் சேக்கிழாருக்குப்பின் தமிழர் இசைக்கு ஆக்கம் தந்தவர்’

இவரது அரியமுயற்சியால் ’கருணாமிர்தசாகரம்’ என்னும் இசைத்தமிழ்நூல்நமக்குக்கிடைககப்பெற்றது.


முதன்முதலாகத்தமிழில் கீதங்களையும் வர்ணங்களையும் இயற்றியதுமட்டுமில்லாமல் எல்லாவற்றையும்
மாணவமாணவிகளுக்கும் கற்பிக்க வேண்டுமென்றார்.


விபுலானந்த அடிகள் பல ஆண்டுகாலம் இடைவிடாது ஆராய்ந்து ’யாழ்நூல்’என்ற அரிய நூலை இயற்றினார்.
பண்டைத்தமிழர் கண்டுணர்ந்த யாழினை மீண்டும் தமிழ்கத்துக்கு வழங்கிய பெருமை அடிகளாரையே சேரும் . எஸ்.ராமனாதனின் ;சிலப்பதிகார ’இசை நுணுக்க விளக்கம்’ சாம்பமூர்த்தி அய்யர் அவர்களின் ’தென்னிந்திய இசை’

,’ தமிழிசை வளம், தமிழிசை இயல், தமிழ் இசைக்களஞ்சியம்’ என்று வி.ப.க. சுந்தரம் அவர்கள் எழுதிய மூன்று நூல்கள் டாக்டர் சேலம் ஜெயலட்சுமி எழுதி உள்ள’சிலப்பதிகாரத்தில் இசைச்செய்திகள்’ இப்படிப்பல நூல்கள் தமிழர் இசை பற்றிய பல தகவல்களை நமக்கு அளிக்கிறது.

லட்சுமணப்பிள்ளை பொன்னையா பிள்ளை போன்றோர் தமிழர் இசைக்கு பெரும் சேவைபுரிநது மறைந்தனர்.

முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை போன்றோரின் பாடல்கள் தமிழரின் இசையில் பெரும் பங்குவகித்தது. இன்னும் பலரது பங்களிப்பு உள்ளது ..இங்கு இட்ட பட்டியல் குறைவே.

தமிழர் இசையானது, தமிழ்போலவே சிறப்பாக இன்றும் திகழ்கிறது.!


!

8 comments:

  1. /////கொஞ்சநாள்முன்னாடி மணற்கேணி அமைப்பும், சிங்கைபதிவர்கள் மற்றும் இணையதளமும் நடத்தின கருத்தாய்வுபோட்டிக்காக கஷ்டப்பட்டு இதை ஆராய்ந்து எழுதி அனுப்பினேன்.பரிசு கிடைச்சா சிங்கப்பூருக்கு அனுப்பறதா அறிவிப்பு கொடுத்திருந்தாங்க. உடனே .கனவுல முஸ்தபா போய் ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சேன்! பெரிய சிங்கப்பூர் விசிறி வாங்கி ஹால் சுவரில் மாட்டி அழகுபார்த்தேன்! சிங்கை நண்பர்களைசந்தித்து மைசூர்பாக்கெல்லாம் கொடுத்தேன். கனவு நனவாகவே இல்லை! ஆமாம்,
    போட்டியே நடக்கலன்னு அப்புறமா தெரிஞ்சது); ’இனிபொறுப்பதில்லை பெண்ணே’ என்று மனசு குரல்கொடுக்கவும் இப்போ இதை இங்கே இட்டுவிட்டேன்!/////

    சில நடுவர்களிடமிருந்து முடிவுகள் வரத் தாமதம் ஆகிவிட்டது.. இறுதி முடிவுகள் இன்னும் 2 வாரங்களுக்குள் அறிவிக்கப்பட்டு விடும் என நினைக்கிறேன்..
    நன்றி.

    ReplyDelete
  2. ஜெகதீசன் தான் சொல்லிட்டாரே... இன்னும் ரெண்டு வாரத்துல அறிவிப்பு வரும்னு...

    மைசூர்பா ரெடி பண்ணுங்கோ... சிங்கப்பூர் போற வழியில “துபாய்” நண்பர்களுக்கும் ஒரு தூக்குல கொஞ்சம் (3-4 கிலோ) போட்டு தந்துட்டு போங்கோ... நான் கரெக்டா டிஸ்ட்ரிப்யூட் பண்ணிடறேன்...

    ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

    ReplyDelete
  3. //போட்டியே நடக்கலன்னு அப்புறமா தெரிஞ்சது);//

    :-)))

    இப்போதைக்கு ஜெகதீசன் சொன்னதை வழி மொழிகிறேன். தமிழர் இசை சற்றுச் சரவலான தலைப்பு. கருத்தை உள்வாங்குவதோடு தெளிவாகப்புரிந்து கொள்ள இசை பற்றிய அடிப்படை அறிவும் தேவைப்பட்டிருக்கலாம். சில, பல நூல்களைப் படித்ததில் (இரண்டிரண்டு பக்கங்களுக்கு மேல் தாள்களின் கனம் எப்படித் தான் கூடுகிறதோ, திருப்பவே முடியலை:-) ஒவ்வொரு கட்டுரையும் எவ்வளவு உழைப்பில் வந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

    கட்டுரை வெளியிடத் தடை ஏதும் இல்லையே! போட்டி முடிந்த நாளிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம் என்றே அறிகிறேன்.

    முச்தபாவில் உலாத்தும் உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துகள் :-))))

    ReplyDelete
  4. கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்...

    வரும் நாட்களில் ஏரியால யார் வீட்டிலாவது மைபா செய்யும் வாசனை வந்தா நேரா உங்க வீட்டுக்கு வந்துடறேன் :)

    ReplyDelete
  5. ஜெகதீசன் said...
    /////

    சில நடுவர்களிடமிருந்து முடிவுகள் வரத் தாமதம் ஆகிவிட்டது.. இறுதி முடிவுகள் இன்னும் 2 வாரங்களுக்குள் அறிவிக்கப்பட்டு விடும் என நினைக்கிறேன்..
    நன்றி.////

    மிக்க நன்றி ஜெகதீசன் இந்தத்தகவலுக்கு.

    ReplyDelete
  6. //Gopi said...
    ஜெகதீசன் தான் சொல்லிட்டாரே... இன்னும் ரெண்டு வாரத்துல அறிவிப்பு வரும்னு...

    மைசூர்பா ரெடி பண்ணுங்கோ... சிங்கப்பூர் போற வழியில “துபாய்” நண்பர்களுக்கும் ஒரு தூக்குல கொஞ்சம் (3-4 கிலோ) போட்டு தந்துட்டு போங்கோ... நான் கரெக்டா டிஸ்ட்ரிப்யூட் பண்ணிடறேன்...

    ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

    12:38 PM
    ////

    அறிவிப்பு எனக்கு சாதகமாய் வந்தால் மைசூர்பாக் உண்டு கோபி:)

    ReplyDelete
  7. முகவை மைந்தன் said...
    ////

    இப்போதைக்கு ஜெகதீசன் சொன்னதை வழி மொழிகிறேன். தமிழர் இசை சற்றுச் சரவலான தலைப்பு. கருத்தை உள்வாங்குவதோடு தெளிவாகப்புரிந்து கொள்ள இசை பற்றிய அடிப்படை அறிவும் தேவைப்பட்டிருக்கலாம். சில, பல நூல்களைப் படித்ததில் (இரண்டிரண்டு பக்கங்களுக்கு மேல் தாள்களின் கனம் எப்படித் தான் கூடுகிறதோ, திருப்பவே முடியலை:-) ஒவ்வொரு கட்டுரையும் எவ்வளவு உழைப்பில் வந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.<<>

    ஆமாம் ..போட்டி என்பதால் மெனக்கிட வேண்டி இருந்தது. அது ஒருவித தேடல்தான்.தனி மடலில் படைப்பு கிடைத்ததும் தக்லவல் வந்தது பிறகு ஏதும் வராததால் இப்படி எழுத நேர்ந்தது.

    ///கட்டுரை வெளியிடத் தடை ஏதும் இல்லையே! போட்டி முடிந்த நாளிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம் என்றே அறிகிறேன்.///

    ஆமாம் அது முன்னே தெரிந்திருந்தது.

    //முச்தபாவில் உலாத்தும் உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துகள் :-))))//

    வாழ்த்து பலிக்க இறைவனிடம் எனது வேண்டுதல்கள்! நன்றி தங்களின் இந்த மடலுக்கு.

    8:17 PM

    ReplyDelete
  8. //மதுரையம்பதி said...
    கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்...

    வரும் நாட்களில் ஏரியால யார் வீட்டிலாவது மைபா செய்யும் வாசனை வந்தா நேரா உங்க வீட்டுக்கு வந்துடறேன் :)

    8:43 PM
    /////

    மௌலி எங்க விட்ல மைசூர்பாக் செய்தா உங்க வீட்ல வாசனை அடிச்சே தீருமே! மைபா கிடைக்க வேண்டிக்குங்க:) நன்றி உங்க வருகைக்கு மௌலி!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.