Social Icons

Pages

Sunday, July 07, 2013

தாயே யசோதா!(சிறுகதை)





மாலதியும் பத்ரியும்  ஏகமனதோடு அந்த முடிவிற்கு வந்தார்கள். அதற்குத்  தங்களைத்  தயார்ப்படுத்திக்கொள்ள  ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன..
 
 
ஆமாம்,  மீராவை அவர்கள்  தத்தெடுத்து இன்றோடு  பதிமூன்று  வருஷங்கள் ஆகிவிட்டன.   அவளுக்கு ஆறுவயதாகும் வரை  குழந்தையாகத்தான் இருந்தாள் அப்புறம்தான்  ஒருநாள் கேட்டுவிட்டாள்” என்னம்மா  நான்  உன்னை மாதிரியும் இல்லை அப்பா மாதிரியும் இல்லை  அப்படியானால் நான் யார்ஜாடை? என்று கேட்டபோது  இருவருக்குமே தூக்கிவாரிப்போட்டது.
 
  பத்ரி  ஊரிலிருந்து  அப்போது வந்திருந்த தன்  தாயை  சுட்டெரிப்பதுபோல பார்த்தான்
 
.’உங்க வேலையா இது?’  கண்கள் அதட்டின
 
 
”இல்லையப்பா சத்தியமாய் நான் இல்லை”
 
அவன் தாய் மிரண்டாள் கண்களாலேயே.
 
” அப்பா! உங்க  அக்கா  ஒருத்தங்க  இருந்தாங்கன்னு சொல்விங்களே அவங்க கூட சின்ன வயசுலேயே இறந்துட்டாங்கன்னும் சொல்லி இருக்கீங்க . நான் அத்தை ஜாடையா இருக்கலாமோ?”  அவளே தொடர்ந்து கேட்கவும்.”ஆமாம் ஆமாம் “ என்று  உரத்தகுரலில்  மாலதியும் பத்ரியும்  பெருமூச்சு விட்டபடி அமோதித்தனர்.
 
அப்போதிலிருந்தே  என்றைக்காவது மீராவிடம் உண்மையைசொல்லிவிடவேண்டும் என நினைத்துக்கொண்டார்கள் . இப்போதுதான் அதற்கு வேளை  வந்திருக்கிறது.
 
  கல்யாணமாகி ஏழுவருடமாகியும் குழந்தை இல்லாமற்போகவும்  குறை  மாலதியிடம் என்று முடிவானதும்  பத்ரி சற்றும்  மனம் தளரவில்லை..”தத்தெடுக்கலாம் மாலு.. தப்பில்லை...நமக்காய்ப்பிறந்ததுமேல் நாம் அன்பு செலுத்தினால் அது இயற்கை ,ஆனா  அனாதைகளை  தத்தெடுத்து நம்குழந்தையாய் வளர்க்கிறதுதான் மானுடம்” என்றான்.
 
 
சின்னஞ்சிசுவை தத்தெடுத்த கையோடு வேலைமாற்றிகொண்டு  சென்னையிலிருந்து பெங்களூருக்கு  வந்துவிட்டான்.
குழந்தைக்கு  மீரா என்று பெயர் வைத்தனர்.
 
 
மீராவைக்கண்போல வளர்த்தனர்.
 
 
மீராவிற்கு தினமும் தூங்கப்போகுமுன்பு கதைகள் சொல்லும் வேலை  மாலதிக்கு !அதைப்பெருமையாய் செய்துவிடுவாள் மாலதியும்..பாடம் சொல்லிக்கொடுப்பது பத்ரியின் கடமை.  ஆக அவர்களின்  வற்றாத அன்பில் மீரா  இன்று பதிமூன்றுவயதுப்பெண்ணாய் வளர்ந்து நிற்கிறாள்.. அறிவும் விவேகமும் கொண்ட பெண் என்று வகுப்பு ஆசிரியை அவளைபுகழ்கிறார்.
 
“கொடுத்து வச்சவ மாலு நீ! உன் பொண்ணு ரொம்ப சமத்து  ...படிப்பில் சுட்டி. குணத்திலும் பிடிவாதம்்மில்லை.. என் பொண்ணுக்கு படிப்பும் வரலை. மகாபிடிவாதம் அப்படியே  என் மாமியாரைக்கொண்டிருக்கு சனியன்’என்று  குடி இருப்புதோழி  வசந்தா  சொல்வாள்..
 
வசந்தாவைப்போல பலரிடமும் மீராவிற்கு நல்லபெயர்தான்!
 
“ஆச்சுடிம்மா  இனிமே எப்ப வேணாலும் மீரா   வயசுக்கு வந்திடலாம்...  பளபளன்னு வளர்ந்திருக்கா ...எல்லாம்  பருவம்! கூடிய சீக்கிரம்  வயசுக்கு  வரதுக்கு முன்னாடி  உண்மையை   நீங்களா சொல்லிடறது உத்தமம். ....நாளைக் கடத்தக்கடதத  விபரீதமாய் போய்விட வாய்ப்பு இருக்கு...ஈர மண்ணில் தடயம் பதியும் சொல்கிற வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் மனசு இது..அப்புறம் எதிர்த்துக்கேள்விகேட்கும் பருவம்  வரும். சண்டைபோட்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் ஆமாம் அதான் எச்சரிக்கிறேன்”  என்று போனமுறை  வந்துபோன பத்ரியின் அம்மா சொல்லிவிட்டுப்போய்விட்டாள். அவளுக்கு தன் மகனின் உதிரம் மீராவிடம் இல்லாவிட்டாலும்  ‘பாட்டி பாட்டி’என அவளை சுற்றியபடி்   பல்லாங்குழி விளையாடுவது   தாயம் ஆடுவது   என்று  வயதான  தன்னைஒதுக்காத பண்பு மனதை  நிறைத்தது.
 
ஆகவே மீராவிடம்  ‘நீ நாங்கள்பெற்றமகள் இல்லையம்மா  தத்தெடுத்த குழந்தை’என சொல்லிவிடவேண்டியதுதான்’
 
 
பத்ரி  மனதுக்குள்  ஒரு  ஒத்திகைபார்த்துக்கொண்டான்.
 
பள்ளிவிட்டு வீடுவந்த மீரா வழக்கம்போல கைகால் கழுவிக்கொண்டாள்.பூஜை அறை சென்று கண்மூடி தியானித்தாள்.
 
பிறகு  மாலதியை நோக்கி,” அம்மா இன்னிக்கு ஸ்கூல்ல என்னாச்சு   தெரியுமா?” என்றாள்.
 
 
மாலதி வியப்பும் குழப்பமுமாய் பார்த்தாள்.
 
“கதை சொல்லல்  நிகழ்ச்சி நடந்தது அதை  தனியார் டிவி ஒண்ணு வந்து  படம்பிடிச்சாங்கம்மா.. நான் சொன்ன  யசோதை கிருஷ்ணர்   கதையை ரொம்ப ரசிச்சாங்கம்மா..அடுத்தவாரம்   ஒளிபரப்பாகப்போகுதாம்”
 
“அப்படியா மீரா?”
 
“ஆமாம்மா..ஆல் க்ரெடிட்ஸ் கோஸ் டு மை மாம்”  என்று நான் பெருமையாய் சொல்லிட்டேன்..
 
 
“என் செல்லக்கண்ணூ ஆச்சே நீ?”   மாலதி  கண்  சிமிட்டிப்பாராட்டினாள்.
 
இல்லையாபின்ன?  ஒருவயசிலிருந்து உன்கிட்ட கதை கேட்டு கேட்டு எல்லா டய்லாக்கும்  ஆழ்வார்  பாசுரங்களும்  நெட்ரு”ம்மா!!!”
 
 
“வாலுக்குட்டி சரிசரி சாப்பிட வா.உ.னக்குபிடிச்ச  பூரி மசால் செய்திருக்கேன்”
 
“பாட்டிக்கும் பிடிக்கும்மா...அவங்க   இங்க இருந்தப்போ   செய்திருக்கலாமே?நேத்து பாட்டி ஊருக்குப் போனதும் இன்னி்க்குப்பண்ற? மாமியார்மேல என்ன கோபம்?!”
 
 
“ஹேய் நாட்டி கேர்ல்”
 
செல்லமாய் அவள்தலையில் மாலதி குட்ட  மீரா  பயப்படுவதுபோல ஓட  ஆபீஸ்விட்டு  அப்போதுதன வீடு வந்த பத்ரி இதைரசி்த்தமாதிரி  தெரியவில்லை.
 
 வழக்கமாய் அவனும் இதில்கலந்துகொண்டு மீராவை சிரிக்கவைப்பான் இன்று அமைதியாக தன் அறைக்குப்போகவும் மீரா,”அப்பாக்கு ஆபீஸ்ல ஏதும் பிரச்சினைபோலருக்கும்மா போய் கவனிச்சி  சாப்பிடக்கொடுங்க” என்று சொல்லி விட்டு தனது அறைக்குள் படிக்கபோய்விட்டாள்.
 
டிபனை சாப்பிடக்கூடப்பிடிக்காத பத்ரி,” மாலதி..அம்மா சொன்னமாதிரி  நாம் இனியும்  தாமதிக்கக்கூடாது   இன்னிக்கு சொல்லிடணும் சொல்லியே ஆகணும்  அதன்விளைவு என்னவாக இருந்தாலும் எதிர் நோக்கித்தான் ஆகணும்” என்றான்.
 
மாலதி மௌனமாய் தலையசைத்தாள்.
 
இருவரும் தயங்கிதயங்கி   அந்த அறைக்குள் நுழைந்தனர்
 
செல்பொனில்   யாரிடமோ உரக்க   பேசிக்கொண்டிருந்தாள் மீரா.
 
இதபாரு வர்ஷா..பரிட்சைக்குபத்துநாள்தான் இருக்கு இப்போபோயி சினிமாபோகலாமாங்கறே அதுவும் வீட்டுக்கு சொல்லாம?  பெத்துவளர்த்த அப்பாவுக்கு துரோகம் செய்யலாமா அது மகாதப்பில்லையா? பரிட்சைமுடியட்டும் அவங்க  கிட்ட  சொல்லிட்டு நிம்மதியாபோகலாம் என்ன வச்சிடவா ?’ என்று செல்போனை கீழேவைத்தவள் அறையில்நிழலாடவும் நிமிர்ந்தாள்.
 
 
கண்களை விரித்து,”அட அப்பா அம்மா ரெண்டுபேரும்  சேர்ந்து இன்னிக்கு  வந்துட்டிங்களே , என்னவிஷயம்?”  என்று  குறும்பாய் கேட்டாள்.
.
அவளது அறைச்சுவரிலிருந்த வள்ளுவர் படமும் பாரதி படமும்  உலோகத்திலான அனுமன் வார்ப்பும்  யசோதைக்குப்பயப்படுவதுப்போல பாசாங்கு காட்டும் கிருஷ்ணரின் காலண்டரும் அறைக்கு அழகு சேர்த்தன என்றால் ஒழுங்காய்  \கச்சிதமாய்  அலமாரியில் அடுக்கி  வைத்திருந்த பாடப்புத்தகங்களின் வரிசைகளும்   வெளியே எங்கும்  தொங்காத  ஆடைவகைகளும் அறையின்  தூய்மையைப் பறை சாற்றின.   .
 
ஆனாலும் பத்ரிக்கு மாலதியைவிட சற்றுதிடமனதோ என்னவோ  சட்டென ஆரம்பித்துவிட்டான்.
 
”மீரா! உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்”
 
” இப்பவா  ? நான் பரிட்சைக்குப் படிக்கணும்ப்பா”
 
“இதுவும் வாழ்க்கைப்பரிட்சைதான்  மீரா!”..
 
”என்னப்பா  சினிமா அப்பா மாதிரி பேசறீங்க?” என்றுகேட்டு சிரித்துவிட்டாள்மீரா.
 
மாலதி சின்னதாய்விசும்பவும்திடுக்கிட்டு” அ  ..அம்மா?” என்று அவள்தோளைத் தொட்டாள்.
 
பத்ரி தொடர்ந்தான்.
 
“ஆமாம்  மீரா  ...இனியும் நீ குழந்தை இல்லை.. யு ஆர்   எ மெச்சூர்டு சைல்ட் நௌ..”
 
“ஆஃப்கோர்ஸ் நான் குழந்தை இல்லைதான் அப்பா..பதிமூணுவயசுப்பெண்தான்  அதற்கு என்ன அப்பா?”
 
 
”மீரா..நாங்க சொல்றதை நீ  மன திடமாய்  கேட்கணும்மா...  ஆமாம் மீரா  திடமாய்  கேட்டுக்கோ....அது வந்து.. ...நீ  நீ..நாங்க பெத்த குழந்தை இல்ல.தத்தெடுத்தப் பெண் குழந்தை.   ஆனா.. ஆனா பெத்தபெணணைவிட நாங்க உன்னை கவனிச்சோம் இனியும்கவனிப்போம் கண்ணம்மா”
 
சொல்லிமுடிப்பதற்குள் பத்ரி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான் மாலதி ஹோவெனக்கதறிவிட்டாள்.
 
 
அழுகைதான் அங்கே சிலகணங்களுக்குப் பேசிக்கொண்டிருக்க  சட்டென  கலகலவென சிரித்தாள்மீரா.
 
 
மாலதியும்பத்ரியும் திகைப்புடன் அவளைப்பார்த்தனர்.
 
“இதுக்கா இவ்வளவு  வார்த்தைகள்? அப்பா !அம்மா ! இந்த விஷயம் எனக்கு எப்போதோ தெரியுமே!”  என்றதும்  தூக்கிவாரிப்போட  இருவரும் நிமிர்ந்தனர்  .
 
எப்படி எப்படி? தத்தெடுத்த மையம் மற்றும் மாலதியின்  இறந்துபோன  அன்னை க்கும்தனது அன்னைக்கும் மட்டுமே தெரிந்த  ரகசியம் எப்போது  அம்பலமாகிப்போனது?
 
பத்ரி குழப்பமும் வேதனையுமாய் நிற்கையில் மீரா,
 
“யார் சொன்னாங்கன்னு யோசிக்க வேண்டாமே அம்மாமூலமாகத்தான் எனக்கு தெரிஞ்சுது”என்றதும் மாலதி அதிர்ந்தாள்..பத்ரி நிலைகுலைந்தான்
 
“நா..நானா?”  மாலதி வீறிட்டாள்.
ஆமாம்மா..நீநேரிடையாய் சொல்லலை.ஆனா  எப்போதும் கிருஷ்ணர் கதையை எனக்கு சொல்வாய்  அந்தக் கதையில் ஒரு  தடவைகூட   கிருஷ்ணரை சுமந்துபெற்ற தேவகியைக்கொண்டுவரமாட்டாய் அம்மா  யசோதையைத்தான் அவளுக்கு மகன்  மேலிருக்கும் அன்பை,  பாசத்தை  சொல்வாய்! அப்படியே எப்போதாவது   சொன்னாலும் தேவகியின் வேதனையை  ஆழ்வார் பாடியதை  சந்தோஷமாய் சொல்லிக்கொள்வாய்! 
 
மருவும் நின் திருநெற்றியிற் சுட்டி
      அசைதர மணிவாயிடை முத்தம்
தருதலும் உன்தன் தாதையைப் போலும்
      வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள் குளிர
விரலைச் செஞ் சிறுவாயிடைச் சேர்த்து
      வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் உரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்
      தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
 


பாடி முடிக்கும் போது கண்பனிப்பாய் !  அம்மா...எழெட்டுவயதிலேயே இதை கவனித்திருக்கிறேன் ஓரளவுபுரிந்துபோனது. ஒருநாள்அத்தையின்  சின்னவயதுப்புகைப்படம் தற்செயலாய் அன்று கொலுபொம்மைபெட்டிக்குள்  கிடைத்ததையும் பார்த்தேன் ஊஹூம் என்ககு அத்தையின் சாயலே இல்லை. என் மாநிற உடம்பும் கொஞ்சம் கூட  உங்க சாயலே இல்லாத முகமும் எனக்குள்ளிருந்த சந்தேகத்தை  நிரூபித்தது.ஆனால் என்னஅம்மா  தேவகி யை அதிகம்  யாரும் நினைப்பதில்லை .கிருஷ்ண வைபவம் என்றால் அது ஆயர்பாடிலிருந்துதானே  ஆரம்பிக்கிறது அவன் மகிழ்ச்சியும்  கொண்டாட்டமும் அங்கேதானே அம்மா? நான்  என்னை க்ருஷ்ணனா நினைச்சிக்கிறேன்  சந்தோஷமா  இருக்கேன்  உங்களைவிட உசந்த பெற்றோர் எனக்கு எங்கே  கிடைப்பார்கள்? “ சிரித்தபடி  மீரா சொல்லி முடித்ததும்
பத்ரியும் மாலதியும் அவளை இறுக அணைத்துக்கொண்டார்கள்.
 
 கண்ணீரைத்துடைத்துக்கொண்டு மெல்ல சிரிக்க ஆரம்பித்தார்கள்.
 
அணைத்த தோள்களின்   மறுபுறமிருந்த  மீராவின் கண்களில்தான்  இப்போது நீர் பெருக ஆரம்பித்தது.
 .
 
(julyகலைமகள்  இதழில் பிரசுரமாகி உள்ள சிறுகதை)
 
 
 

29 comments:

  1. அருமையான சிறுகதை...
    முடிவு அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சே குமார் அவர்களுக்கு

      Delete
  2. arumaiyaana kathai..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சீனி

      Delete
  3. .கிருஷ்ண வைபவம் என்றால் அது ஆயர்பாடிலிருந்துதானே ஆரம்பிக்கிறது அவன் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் அங்கேதானே அம்மா? நான் என்னை க்ருஷ்ணனா நினைச்சிக்கிறேன் சந்தோஷமா இருக்கேன் உங்களைவிட உசந்த பெற்றோர் எனக்கு எங்கே கிடைப்பார்கள்? “ சிரித்தபடி மீரா சொல்லி முடித்ததும்
    பத்ரியும் மாலதியும் அவளை இறுக அணைத்துக்கொண்டார்கள்.

    நிறைவளித்த அருமையான கதை..!

    ReplyDelete
    Replies
    1. நிறைவளித்தது என்ற நிறைவான மடல் என் மனசை நிறைத்தது இராஜ ராஜேஸ்வரி!

      Delete
  4. அருமையான கதை
    கதையின் கருவும் சொல்லிச் சென்றவிதமும்
    மிக மிக அற்புதம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரமணியின் மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி மிக

      Delete
  5. அருமையான கதை.....

    கலைமகளில் வெளிவந்ததில் மகிழ்ச்சி....

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்! ஆம் கலைமகள் போன்ற பாரம்பரிய இதழில் வந்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்

      Delete
  6. மாலதியின் கதை சொல்லும் பாங்கிலேயேதன்னுடைய
    தத்தெடுப்பை அறிந்துகொள்aளும் மீரா மிகவும் சூக்ஷமம் உள்ள பெண்.புத்திசாலித்தனத்துடன்
    வாஸ்தவமான அன்பும் உள்ளவளாக அழகாக சித்தரித்து உள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கேபி சார்.. மீராவின் அன்பை புத்திசாலித்தனத்தை அவள் வார்த்தைகளில் தெரிவிக்கமுயன்றேன் ...அதனை அழகென்று பாராட்டியமைக்கு நன்றி

      Delete
  7. கதை மனதை கவர்ந்தது...

    கலைமகள் இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
  9. மீரா போன்ற ஒரு அற்புதமானப் பெண்ணைத் தங்கள் மகளாய் வரித்துக்கொண்டமைக்காக பத்ரியும் மாலதியும் பெருமை கொள்ளவேண்டும். இப்படிப்பட்ட பெற்றோரைப் பெற்றதற்காக மீரா பெருமிதம் கொள்ளவேண்டும். நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம். மனத்தை நெகிழவைத்த அருமையான கதை. கலைமகள் பத்திரிகையில் வெளிவந்தமைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. கதையினை ஆழ்ந்து வாசித்து மிக அருமையாகப் பின்னூட்டம் இட்ட தங்களுக்கு நன்றி மிக கீத மஞ்சரி

      Delete
  10. உங்களைவிட உசந்த பெற்றோர் எனக்கு எங்கே கிடைப்பார்கள்? “ சிரித்தபடி மீரா சொல்லி முடித்ததும்
    பத்ரியும் மாலதியும் அவளை இறுக அணைத்துக்கொண்டார்கள்.

    கண்ணீரைத்துடைத்துக்கொண்டு மெல்ல சிரிக்க ஆரம்பித்தார்கள்.

    அணைத்த தோள்களின் மறுபுறமிருந்த மீராவின் கண்களில்தான் இப்போது நீர் பெருக ஆரம்பித்தது.//

    அருமையான கதை. கதையை படித்து முடித்ததும் என் கண்களின் ஓரத்தில் கண்ணீர் எட்டிப்பார்த்தது உண்மை.
    கலைமகள் பத்திரிகையில் இடபெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உணர்ந்து வாசித்து கண் பனித்ததையும் இயல்பாய் தெரிவித்துள்ள உங்கள் வாழ்த்து என் மனதில் சென்று தங்கிவிட்டது கோமதி அரசு நன்றி மிக.

      Delete
  11. //.கிருஷ்ண வைபவம் என்றால் அது ஆயர்பாடிலிருந்துதானே ஆரம்பிக்கிறது அவன் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் அங்கேதானே அம்மா? நான் என்னை க்ருஷ்ணனா நினைச்சிக்கிறேன் சந்தோஷமா இருக்கேன் உங்களைவிட உசந்த பெற்றோர் எனக்கு எங்கே கிடைப்பார்கள்? “ சிரித்தபடி மீரா சொல்லி முடித்ததும்
    பத்ரியும் மாலதியும் அவளை இறுக அணைத்துக்கொண்டார்கள்.//

    அழ்கான ஆக்கம். கதை மனதுக்கு நிறைவாக உள்ளது. கலைமகள் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது என்பதே தனியானதோர் பாரம்பர்ய சிறப்புடையது தான்.. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு வைகோ ஸார்!

      Delete
  12. அருமையான கதைப்படுத்தல்....வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. ஆழ்வார் பாசுரத்தை வைத்து என்ன அழகாக ஒரு கற்பனை புனைந்திருக்கிறீர்கள், ஷைலஜா!
    பாராட்ட வார்த்தைகளே இல்லை.
    ஆழ்வார் பாசுரங்கள், கண்ணன் கதைகள் கேட்டு வளர்ந்த பெண் இப்படித்தான் பேசுவாள், இல்லையா!
    மனமார்ந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரஞ்சனி நாராயணன்..எத்தனை அழகாய் மனம் திறந்து பாராட்டுகிறீர்கள்! மனமார்ந்த நன்றி அதற்கு!

      Delete
  14. ரொம்ப sentiment இல்லாம விறுவிறு -ன்னு செல்லும் கதை; வாழ்த்துக்கள்-க்கா கலைமகள் பிரசுரத்த்துக்கு!

    //என் மாநிற உடம்பும் கொஞ்சம் கூட உங்க சாயலே இல்லாத முகமும் எனக்குள்ளிருந்த சந்தேகத்தை நிரூபித்தது//

    பாசுரமும், இதே நுட்பத்தைச் சொல்லுது; கவனிச்சீங்களா?
    வெறுமனே தேவகி திரு இலாள், யசோதை திரு உடையாள் -ன்னு ஏக்கம் மட்டுமல்ல; Biological Parent யாரு? -ன்னு ஒடம்பை வச்சே சொல்லுது!

    //தருதலும் உன்தன் தாதையைப் போலும்
    வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள் குளிர//

    கண்ணன் வடிவம் அவங்க அப்பா போலவாம்! = "உன் தாதை போலும் வடிவு கண்டு!"

    பொதுவா, பசங்களுக்கு அம்மா முகம், பொண்ணுங்களுக்கு அப்பா முகம் -ன்னு சொல்லுவாய்ங்க!
    ஆனா, இங்கே கண்ணன் = அப்பா மூஞ்சி!

    வசுதேவரை முன்னமே நந்தகோபன்-யசோதை எல்லாம் பாத்து இருக்காங்க! நந்தகோபனுக்கு நெருங்கிய நண்பர் தானே வசுதேவர்?

    இருந்தாலும், யசோதை, இந்த "அப்பா" வடிவத்தைக் கண்டும் காணாதது போல் இருக்குறா!
    குழந்தை நம் சாடையில் இல்லையே? -ன்னு, அவளுக்கு ஆய்வு செய்யவோ/ யோசிக்கவோ கூட நேரமில்ல! கண்ணனே இன்பம் -ன்னு இறங்கிய பின் ஆய்வாவது, ஒன்றாவது?:)

    மருத்துவமனையில், பல குழந்தைகள் ஒன்னே போல் இருந்தாலும், பெத்தவளுக்கு ஓரளவு தன் குழந்தை எது? -ன்னு அடையாளம் கண்டுக்கிடத் தெரியும்!
    நாமெல்லாம் முகத்தை மட்டும் வச்சிப் பாப்போம்; தாய் குழந்தை வாசனையும் அறிவாள்! கண்ணும் உறுப்பும் நுட்பமா அறிவாள்!

    அப்படிப்பட்ட தாய் = யசோதை!
    அவளுக்கா தெரியாது?
    ஆனாலும் வெளிக்காட்டிக்கலையோ என்னமோ! நம் கதை சொல்லிகளும் யாரும் அதைப் பேச முன்வரலை!

    ஆனாலும்... ஆழ்வார் மட்டும் "தைரியமா", இந்த விடயத்தைத் தொட முனைகிறார் போலும்!
    "அப்பா" வடிவத்தைக் கண்டுகொண்டாளாம்; ஆனால் "உள்ளம் உள் குளிர்தலால்", அதுக்கு மேல ஒன்னுமில்லை;

    உன்தன் தாதையைப் போலும் வடிவு கண்டுகொண்டு
    உள்ளம் உள் குளிர
    -ன்னு எத்தனை நுட்பம் இந்த ஆழ்வார் பாசுரத்தில்!

    ReplyDelete
    Replies
    1. வாராது வந்த மாமணியே என் அருமைத்தம்பியே ...யசோதை என்றதால் ஓடி வந்தீர்களோ பெயரில் கண்னபிரான் இருப்பதால்?! மகிழ்ச்சியும் நன்றியும் முதலில் சொல்லிக்கொள்கிறேன்!
      என் கதையை விட்டுத்தள்ளுங்கள் அதில் ஒன்றும் பிரமாதமாய் இல்லை அதில் உள்ள ஆழ்வார் பாசுரம்தான் ஆழ்கடலைப்போல பல ரகசியங்களை உள்ளடக்கியது அதனை நுட்பமாய் கண்டுபிடித்து இத்தனை அருமையாய் விளக்க ரவியால்தான் முடிகிறது! தெய்வ நங்கையாம் யசோதை ஆஹா ஆழ்வாரின் வாக்கினை இங்கே அகமகிழக்கண்டால் அனைத்தும் உணர இயலாவிடினும் எதையோ நம்மால் யூகிக்க முடிகிறது இல்லையா?
      நன்றி ரவி வருகைக்கும் அற்புதமான கருத்துக்கும்!

      Delete
  15. மிக அழகாகக் கொண்டு சென்று முடித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்:)! கலைமகள் வெளியீட்டுக்கு வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராமலஷ்மி!

      Delete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.