Social Icons

Pages

Sunday, March 01, 2015

படியாய்க்கிடந்து உன் பவளவாய் காண்பேனே!




மன்னன்  குலசேகரனின் அவையில் மந்திரிகள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர்.

“என்ன ஆயிற்று நம் மன்னருக்கு? அரச வளாகத்திற்குள்  திருமால் அடியார்களை மட்டும்  உள்ளே வரச்சொல்லவும் என்கிறார். ராமா ராமா என்று நாமாவளிகளும், ஆன்மீகசொற்பொழிவுகளுமாக.... இதென்ன அரச சபையா அல்லது பஜனை மண்டபமா? ” என்று  எரிச்சலடைந்தார்  ஒரு அமைச்சர்.

“ நாட்டின் மீது மன்னருக்கு அக்கறையே இல்லை..இதற்கு ஒரு முடிவுகட்டவேண்டும் ..அந்த  நவரத்தின மாலையை எடுத்து பழியை  திருமால் பக்தன் ஒருவர் மீது போடுவோம். மன்னருக்கு  அப்போதுதான்  அவர்கள் மீது வெறுப்புவரும்.நாட்டின் மீதும்கவனம் வரும்” என்ற அமைச்சர்  தன் திட்டத்தை செயலாற்றினார்.

குலசேகர மன்னன்  அன்று அரியணை அமர்ந்ததும் இந்த் செய்தியை அமைச்சர்கள் வாயிலாகக்கேட்டு அதிர்ந்தான்,



”திருமாலின் அடியார்கள் ஒருக்காலும் இச்செயலை செய்திருக்கமாட்டார்கள் “ என்று  உறுதியாகக்கூறிய மன்னன் மெய்க்காவலனை அழைத்தான் அவனிடம்,” ஒரு குடத்தில் சீறும் நல்லபாம்பினை  உள்ளே போட்டு அதை எடுத்துவா” என்று உத்தரவிட்டார்.
குடம் வந்ததும் மன்னன் அமைச்சர்களிடம்,’ என் அவைக்கு  வந்துள்ள  ஹரியின் ஜனங்கள்  மாலையைத்திருடி இருந்தால் குடத்தில் உள்ள பாம்பு என் கரத்தைக்கொத்தட்டும்” என்றார். குடத்தினுள்  கைவிட்டார்.
பாம்பு  பதுங்கியது ( ‘ஆரம் கெடப் பரன் அன்பர் கொள்ளாரென்று வாரம் கொடு குடப்பாம்பில் கையிட்டவன்” என்ற வரிகள் ஆழ்வார் பெருமானைப்பெருமைப்படுத்துகிறது)

அமைச்சர்கள் தங்கள் செயலுக்கு மன்னிப்புகேட்டனர்  ஆனால் மன்னனின்  மனம் புழுங்கிப்போனது

.”மாலின் அடியார்களை சோதித்துப்பார்கும் நிலைமை எனக்குத்தேவைதானா அது நான் மன்னனாய் இருப்பதால்  ஏற்பட்ட அவலம் அல்லவா?  வேண்டாம் எனக்கு இந்த அரசக்கோலம்.’உண்டியே உடையே உகந்தோடும் இம்மண்டலத்தொரும் கூடுவதில்லை யான்”(பெருமாள் திருமொழியில் பாசுரம் 4)  என்று மகனிடம்  பொறுப்பை ஒப்படைத்தான் தனது செல்வம் நிரம்பிய அரசபதவியைத்துறந்தான்.

    அரசபதவியைத் துறந்து அண்ணலின் ஆழ்ந்த பக்தரானார்அதனால் குலசேகர ஆழ்வாரானார்.

ஒவ்வொரு ஆழ்வாருக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. குலசேகர ஆழ்வாரின் சிறப்பு அவர் இராமன் மேல் கொண்ட அதீத பக்தி .

 பெருமாள் என்று அழைக்கப்படும் இராமபிரானின் மேல் உணர்ச்சி உந்திய அன்புப் பேராறு பூண்டமையின் ஆழ்வாரை "குல சேகர பெருமாள்" என்று சிறப்பாக வழங்கலாயினர். 

பெரியாழ்வார் கண்ணனுக்குத் தாலாட்டுப் பாடியது போல குலசேகராழ்வார்

மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறுவாய்த்தவனே!
தென்னிலங்கைக்கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்
பொன்சேர்கன்னிமாமதிள்புடைசூழ் கணபுரத்
தென்கருமணியே!என்னுடைய
இன்னமுதே! இராகவனே! தாலேலோ.



 என்று இராமனுக்கு தாலாட்டுப் பாடியவர். இராம காவியத்தில் ஆழ்ந்த  இவர் பல நேரங்களில்  கேட்பது  கதை என அறியாமலேயே  ஒன்றிப்போய்விடுவார். அத்தகைய  சம்பவங்கள் பல  உண்டு.ஒன்று மட்டும்  சொல்லலாம்




, சீதையை ராவணன் கொண்டு சென்றான் என்றுராமாயண சொற்பொழிவாளர் கூற, இதனைக் கேட்ட மன்னன் குலசேகரன்  உடனேயே படை திரட்டிக்கொண்டு இலங்கை நோக்கி சென்று கடலில் இறங்கிவிட்டார். அங்கே ஸ்ரீராமன், சீதா, லட்சுமண, ஆஞ்சனேயர் சகிதமாக, மன்னனுக்குக் காட்சி அளித்தார் என்று கூறப்படுகிறது.

திருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே இம்மூன்றாவது சுற்றுக்கு இவரது பெயர் இன்றும் வழங்கப்பட்டு வருகிறது

திருமலை சென்ற குலசேகர ஆழ்வாருக்கு திருவேங்கடவனை தரிசித்தபின்னர் அந்த  இருப்பிடத்தைவிட்டு அகலவே மனம் வராமல் போகிறதாம்.


இங்கேயே எங்காவது  தங்கிவிடவேண்டும் என நினைக்கிறார்.

வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே -  அதாவதுபறவையாய்   பிறக்க விரும்புகிறார்.  ஆனால் வல்லூறு  வந்து பறவையை  அடித்துவிடுமே  ஆகவே...

திருவேங்கடச் சுனையில் மீனாய் பிறப்பேனே -   பிறகு மீனாய்ப்பிறக்க விரும்புகிறார்...மீனின் வாழ்வும் அதிகமல்லவே  .யாரும் வலைவீசிப்பிடித்துப்போய்விட்டால் என்ன செய்வது?

வேங்கடக் கோந்தானுமிழும் பொன் வட்டில் பிடித்து உடனே புகப்பெறுவெனாவேனே - பணியாளனாய் இருக்க விரும்புகிறார் ஆயினும் பணிப்பொறுப்பு கைமாறிப்போக நேர்ந்தால்..?

பண்பகரும்வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துசெண்பகமாய் நிற்கும் தவமுடையெனாவேனே - மலராய்/மரமாய்........மலர் வாழ்வு ஒருநாள்தான் மரம் வாழ்வு பலநாள் எனினும் யாரும் வெட்டி வீழ்த்திவிட்டால்..?


தென்னென வண்டினங்கள்பண்பாடும் ங்கடத்துள்அன்னனையபொற்குவடாம் அருந்தவத்தெனாவேனே -சிகரமாய்....உணர்ச்சியற்ற கல் தானே  இயற்கை அழிவில் மலையும் பொடியாகுமே?

திருவேங்கட மலையில் கானாறாய்ப்பாயும் கருத்துடையயெனாவேனே - ஆறாய்........மழை  வற்றினால்  கடும் கோடைவந்தால்ஆறும் வற்றுமே?

திருவேங்கட மலை மேல் நெறியாய்க் கிடக்கும் நிலையுடையெனாவேனே - பாதையாய்....  பாதை என்பது ஒன்றா என்ன  பலப்பல உண்டு பயன்படுத்தாத பாதைகள்  நாளடைவில்  காணாமல்போகுமே?

, இறைவன் கருவறைக்குள் செல்லும் வழியில் அனைவரும் ஏறி, இறங்கும் படிக்கல்லாகக் கிடந்தால் பக்தர்களின் காலடிகளைத் தாங்கும் புண்ணியமும் கிடைக்கும், இறைவனின் பவள வாயினை எந்நேரமும் கண்டுகளிக்கும் வாய்ப்பும் கிடைக்கும் என எண்ணினார்.

படியாய்க் கிடந்து உன் பவளவாய்க் காண்பேனே என்று தன் ஆவலை வெளியிடுகிறார் குலசேகராழ்வார்.

இதனாலேயே வேங்கடவன் கருவறை வாயில் படிக்குக் குலசேகரப்படி என்ற பெயர் வழங்கப்படுகிறது!

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

படிக்கட்டைப் பொன் தகட்டால் மூடி விடலாம். அல்லது கட்டடச் சீரமைப்பில் படிக்கட்டையே எடுத்து விடலாம். அப்படிச் செய்தால் இறைவனைக் காண இயலாது. தான் படிக்கட்டாய்ப் பிறந்த பிறவிப்பயன் கிட்டாமல் போகலாம் எனத் தோன்றுகிறதாம் ஆழ்வாருக்கு.


அதனால் இறுதியாகச் சொல்கிறார், .

பவளம் போன்று சிவந்த வாயையுடைய திருவேங்கடநாதன் உறையும் திருமலையில் ஏதேனும் ஒரு பொருளாகப் பிறந்தால் போதும்.எனக்கு அதுவே பெரும் பேறு என்ற பொருள்பட,


செம்பவள வாயான் திருவேங்கட மென்னும்
எம்பெருமான் பொன் மலைமேல் ஏதேனுமாவேனே!

என்று பாடியுள்ளார்.

குலசேகர் ஆழ்வாரின் திருநட்சத்திரம் இன்று(1-3-2015) 
ஆழ்வார் பாதங்களைப்பற்றி  ஆண்டவனின் அருளைப்பெறுவோம்.






5 comments:

  1. என்னே பக்தியின் ஈடுபாடு...!

    ReplyDelete
  2. செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
    நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
    அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
    படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.......

    குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்

    ReplyDelete
  3. Anonymous1:59 PM

    ---------
    திருமலை சென்ற குலசேகர ஆழ்வாருக்கு திருவேங்கடவனை தரிசித்தபின்னர் அந்த இருப்பிடத்தைவிட்டு அகலவே மனம் வராமல் போகிறதாம்.
    --------
    முன்பதிவு செய்து ஸ்பெசல் தரிசனத்தில் போயிருப்பாரோ!!!
    நிற்க.

    சுவையான செய்தியும் தமிழ் இனிமையும் கொண்ட பதிவு!

    ReplyDelete
  4. தெரிந்த கதையானாலும் படித்தவுடன் உடல் புல்லரித்தது .அற்புதமாக எழுதி உள்ளீர்கள் .

    ReplyDelete
  5. வருகைக்கும் அளித்த கருத்துக்கும் நன்றி கேபி சார் டிடி கடைசிபெஞ்ச் மற்றும் முருகானந்தம்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.