Social Icons

Pages

Saturday, March 07, 2009

மகாசதி!















நத்தை ஊர்ந்தால்கூட சத்தம் கேட்கும், அத்தனை அமைதி.

அமுதனார் அகளங்கன்மண்டபத்தை அடைந்துவிட்டார். சுற்றும்முற்றும் பீதியுடன் பார்த்துவிட்டு முகத்தைதுடைத்துக்கொண்டார். மேலாடை நனைந்ததே தவிர முகம் உலரவில்லை. இடுப்பிலிருந்த சாவிக்கொத்தைத் துழாவிசரிபார்த்துக்கொண்டார்.

எதிரே திருமாமணி மண்டபம். ஆயிரங்கால்களும் வேத ரகசியம் பேச , நெய்ப்பந்தங்களின் குளிர் ஒளியில் இலக்கியவாதங்களும் தத்துவ விசாரணைகளும் நிகழும் இடமாகவா இருந்தது அது ?அந்த ஆயிரம் கால்களும் குறுகிப்புதைந்து நிற்கின்றன. அங்கே சுவர்க்கோழிகளுக்குக்கூட தொண்டை அடைத்துக்கொண்டுவிட்டது.

அமுதனார் பெருமூச்சுவிட்டார். அது மூச்சாக இல்லை. தீ வீச்சாக இருந்தது. நடந்துவிட்ட நிகழ்ச்சிகளை எண்ணிப்பார்க்க அமுதனாருக்கு விருப்பமில்லை. அவை துயரில் வெடித்தவை. பெரிய கோயிலுக்கு இந்த நிலை வரும் என்று யார் எண்ணினார்கள்! ஒன்றுமே அறியாதவர் போல் அறிதுயில் கொள்ளும் அரங்கப்பெருமானின் திரு உள்ளம்தான் என்ன? விதியின் சிரிப்பு அவர் செவியில் விழவில்லையா!


"சுவாமி!"

அமுதனார் திடுக்கிட்டுப்போனார்.

"சுவாமி பயப்படவேண்டாம் நாந்தான் சிங்கன். நீங்கள் எப்போது ?சாவிக்கொத்துக்களைமறைத்துவிட்டீர்கள் அல்லவா?" என்று கேள்வியும்பதிலுமாய் வந்தன.

"சிங்கா! அதையெல்லாம் பிறகு பேசுவோம். நீ எப்போது வந்தாய் எப்படி வந்தாய் வெளியே நிலவரம் எப்படி அதைச்சொல் ?" என்றுபடபடத்தார் அமுதனார்

சிங்கன் விட்ட பெருமூச்சில் அந்த மண்டபமே அதிர்ந்தது.

"எதைச்சொல்வது சுவாமி? நம் கையே நம்கண்ணைக்குத்துகிறது. இதுதான் இப்போதைய செய்தி "என்றான் குரலுடைந்தவனாய்

"புதிர்போடாமல் விளங்கும்படி சொல் சிங்கா"

"எப்படிச்சொல்வேன்? சொல்ல நாக்கூசுகிறது. நம்கோவிலில் சேவகம் செய்கிறார்களே கனகம் வெள்ளை நாச்சியார் என்ற இரு கணிகை சகோதரிகள் ,அவர்களேதான் இப்போது நம் எதிரிகள் படையெடுத்துவந்திருக்கும் வ்டவர்கள் அல்ல."

"நீ என்ன சொல்கிறாய்?"

"கேளுங்கள் சுவாமி.இளையவள் வெள்ளைநாச்சியார் இருக்கிறாளே அவள் தளபதி அடில்கானின் மனையாட்டியாகப்போகிறாளாம் !ஊரே இந்தச்செய்தியில் வெந்துகொண்டிருக்கிறது."

"என்னால் நம்பமுடியவில்லை சிங்கா ! ஆனால் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்ற நிலை கடந்துபோய்விட்டது ,நல்லது ,இதற்கு ஒரு வழிகாண வேண்டும் இதோபார் சிங்கா! உயிரைப்பெரிதென்றுகருதாமல் எப்படியாவது பெரியகோயிலின் பொக்கிஷத்தை நாம்காப்பாற்றியாகவேண்டும்."

"சுவாமி! எனக்கென்னவோ பயமாக இருக்கிறதே."

அமுதனார் மெல்லச்சிரித்தார்.

"பயப்படாதே ! இது நமக்கு ஒரு சோதனை. இதில் வெற்றி பெற நெஞ்சுறுதி வேண்டுமடா !பெருமான் உன்னை ஆசிர்வதிப்பார்!"

சிங்கன்பதுங்கிப்பதுங்கி ஓடினான்.

கீழக்கோபுரத்தருகே காலோசைகள் கேட்டன.

காவலாள்கள் தன்னைகக்ண்டுகொள்வார்களோ என்ற பயத்தில் தூணோடுதூணாகச்சாய்ந்தார் அமுதனார்.

ஒருகைவிளக்கு எட்டிப்பார்த்துவிட்டு மறைந்தது. சிறிதுநேரம் காத்திருந்துவிட்டு அமுதனார் மெல்ல மெல்ல திருமாமணி மண்டபம் நோக்கி நடக்கலானார்.



மண்டபத்தின் கோடியை அடைந்ததும் சுற்றுமுற்றும்பார்த்தார் நல்லவேளை இதுவரைதப்பி வந்தாயிற்று . இனி என்ன நேருமோ?

அவசரம் அவசரமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக் குழி பறித்தார். சாவிக்கொத்தை அதில் இட்டுமண்ணைமூடினார். ஓடிப்போய் நாலைந்து செடிகளைப்பறித்துவந்து அவைகளின்மீது மண் தெரியாமல் மூடினார்.

அதிலும் திருப்தியின்றி ஒருகுத்துக்கல்லைக்கொண்டுவைத்தார்.

அந்த இடத்துக்கு அடையாளமாக் மதிலில் ஒரு திருநாமக்குறி இட்டார்.

ஆயிற்று! இனிபயமில்லை.

இச்சமயம் மண்டபத்துக்குள் யாரோ நடந்துவரும் ஓசைகேட்டது.

அமுதனாருக்கு ரத்தமேஉறைந்துவிட்டது

"யார் அங்கே?"

குரல் கணீரென்றுவந்தது.

அமுதனார், மரத்தோடுமரமாகநின்றார்.

"அமுதனார் சுவாமிகளா?"


குரலைஇப்போது அவர் அடையாளம் கண்டுகொண்டார் .

வெள்ளைநாச்சியாரின்குரல்தான் அது.

"ஆமாம்" என்றவர் "நீ எங்கே வந்தாய் இந்தவேளையில்?" எனக்கேட்டார்.

"நல்லகேள்விகேட்டீர்கள்!" என்றுகூறி சிரித்தாள் வெள்ளையம்மா.

அந்தச்சிரிப்பை அமுதனாரால் ரசிக்கமுடியவில்லை. எரிச்சலுடன் "சிரிக்காதே வெள்ளையம்மா ! நன்றாக இல்லை " என்றார் பட்டென்று.

"சிரிக்கக்கூடவா ஆட்சேபணை?"

"வெள்ளையம்மா ! பெண் இனத்துக்கு உரித்தான பேதமைஉன்னைமறைத்திருக்கிறது. உன்னைச்சொல்லிப்பயனில்லை ,உன் விருப்பம் போல சிரி .இப்போதைய நிலையில்விதியோடு சேர்த்து நீயும் சிரிப்பதில் எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை . சிரியம்மா சிரி."

"நான் ஏன் சிரித்தேன் என்பதற்குக்காரணம்கேட்டால் நீங்கள் கோபிக்கமாட்டீர்களே?"

"இல்லை . ஏன் உன் மேல் எதற்கு கோபம் வரவேண்டும்?"

"நல்லது. சொல்கிறேன் சாவிக்கொத்தைமறைத்துவிட்டால்மட்டும் எல்லாவற்றையும் காப்பாற்றி விட்டதாகி விடுமென்று நீஙகள் எண்ணுகிறீர்களே, அதை நினத்துத்தான்......"என்று சொல்லிமீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள்.

அமுத்னார் பதைபதைத்தார் .

"அப்படியானால்...அப்படியானால் எல்லாவற்றையும் நீ பார்த்துக்கொண்டுதான்இருந்தாயா?"

"ஆமாம்."

"அம்மா தாயே! உனக்குப்புண்ணியமுண்டு. வெளியில்சொல்லிவிடாதே. அரங்கப்பெருமான் மீது ஆணை, வெளியே சொல்லீ விடாதே."


"ஏன் இப்படிபயப்படுகிறீர்கள்?"

"வெள்ளையம்மா! என்ன கேள்விகேட்கிறாய்.?.. உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை உருவாகி இருக்கும்போது உன் கேள்வி சற்றும் சரியாக இல்லை .ஆனால் இதையும் தெரிந்துகொள். உயிரைப்பணயம் வைத்துதான் இந்தத் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறேன்"

"உங்கள்பக்தியின்பெருமை எனக்குதெரியாதா? நல்லது .நகைகளை எங்கே பதுக்கி வைத்திருக்கிறீர்கள்?"

சாவதானமாக் ஆனால் அழுத்தமாக இப்படிவெள்ளைநாச்சியார் கேட்கவும் அந்தக்கேள்வியின் உட்கருத்து அமுதனாருக்கு விளங்கிவிட்டது. மனதை திடப்படுத்திக்கொண்டு மீண்டும் பேசினார்.

" வெள்ளையம்மா! யார்கண்ணிலும் படாமல் இதுவரை என் பொறுப்பை நிறைவேற்றுவதாய் எண்ணி இருந்தேன் ,ஆனால்,பெருமாள் உன்னை இங்கே அனுப்பியிருக்கிறார். அவருடைய திரு உள்ளம் அதுவாக இருந்தால் நான் ஏன் உன்னிடம் மறைக்கவேண்டும்! நகைகள் நிலவறையில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டு உன் சாகசத்தால் நீ எங்களைக் கவிழ்க்க நினைத்தால் உயிரைக்கொடுத்தாவது அவற்றைக் காப்பாற்றியே தீருவேன்"
என்றார் படபடப்புடன்.

அவ்ள் சிரித்தாள்.

"சுவாமி ,மலைமீது மோதிக்கொளதில் அர்த்தமில்லை .பகைவர்கள் படைபலம் எங்கே உங்களது மனபலம் எங்கே ! என் வார்த்தையைக்கேளுங்கள். நிலமைகட்டுக்குமீறிவிட்டதால் நீங்கள் எப்படியாவது தப்பித்து ஒடிவிடுங்கள்"


இப்போது அமுதனார் சிரித்தார்



"வெள்ளையம்மா! இப்போது உன் நிலமைக்கு வருந்துகிறேன் . உயிரை வெல்லமென்றுகருதி நீ உன்னையே இழந்து நிற்கின்ற கோலத்தைக்கண்டு வருந்துகிறேன் .ஆனால் உன்னிடம் நான் நிறைய எதிர்பார்த்தேன். உன் அழகும் அறிவும் இப்படிப்பாழாக வேண்டாம்!" என்றார்

"சுவாமி!" அலறினாள் வெள்ளையம்மா.

அமுதனாரை ஏறிட்டவள் தொடர்ந்தாள்.

"நான்பெண்தான் .ஆனால் உங்களைப்போல எனக்கும் எண்ணற்ற தாபங்கள் இருக்கின்றன அவற்றை எண்ணாமலேயே பேசுகிறீர்களே?"

"உன் தாபம் புரிகிறதம்மா ..அர்த்த்மற்ற பாவம் அது. தயவு செய்து என்னை உன்னோடு உவமானப்படுத்திப்பார்க்காதே... நான் வேறு,நீ வேறு" என்றார் எரிச்சலுடன்

பின்னர் திரும்பினார். மதிலின் அருகில் வளைந்திருந்த தென்னைமரத்தைப்பற்றித் தப்பிச்சென்றுவிட திட்டம் வகுத்திருந்தார். அதன்படி நடக்கமுனையும்போது...


"நில்லுங்கள் !என்னோடுவாருங்கள்!" என்றாள் வெள்ளையம்மா.

"உனக்கென்ன பைத்தியமா ?கோபுர வாசல்பக்கம் பகைவர்கள் நிற்கிறார்கள். என்னை விடுவார்களா அவர்கள்,என்னைப்போய் உன்னோடுவரச்சொல்கிறாயே ?"

என்றுகூறிமரத்தின்மீதுவேகமாக ஏறத்தொடங்கினார் அமுதனார்.

அவசரத்தில்படபடத்த அவரதுகுரல் கீழ்க்கோபுரவாயிலில் இருந்த காவலர்களின் செவிகளில் விழுந்துவிட்டது. அடுத்தநிமிடம் திமுதிமுவென ஒருகூட்டம் மண்டபத்துக்குள் புகுந்துவிட்டது.

அமுதனார் பருத்த சரீரமுடையவர் மன உறுதிக்கு ஏற்ற உடலுறுதி இல்லை அவரிடம் . தன் வாழ்நாளில் தென்னைமரத்தில் ஏறியும் அறியாதவர் எனவேபாதிமரத்திலிருந்து உருண்டுகிழே விழுந்தது விட்டார்.

உடம்பெல்லாம் ஆடியது அமுதனாருக்கு.

"என்னகூச்சல் இங்கே! வெள்ளையம்மா நீ இங்கேயா இருக்கிறாய் ?"
என்றுகேட்டபடி தளபதி வந்தான்.

அமுதனார் தமது இறுதிக்காலம் வந்துவிட்டது என்பதைஉணர்ந்தார் .


'இந்த வெள்ளையம்மா மட்டும், வந்திருக்காவிட்டால் எப்போதோதப்பித்துப் ோயிருக்கலாம்..ஹ்ம்ம்...'

அவளைமானசீகமாக சபித்தார்.

"நீங்கள் காவல்காக்கிறலட்சணம் இதுதானா! இந்தமனிதன் எப்படி உள்ளே நுழைந்தார்? நான் வராவிட்டால் என்ன ஆகி இருக்கும்,ம்?" என்று வெள்ளையம்மா தளபதிக்குமேல் தன்குரலைஉயர்த்தினாள்.

வீரர்கள் நடுங்கிக் குறுகினார்கள்.

தளபதி ஆத்திரம்தீர அவர்களை கடுமையாய்பேசிவிட்டு தனது நீண்ட சவுக்கினை எடுத்துக்கொண்டு அமுதனாரின் அருகில் சென்றான்.

அமுதனார் கண்ணைமூடிக்கொண்டர்.

உயிர்பெரிதில்லை ஆனால்சித்திரவதையை அவரால்தாங்கமுடியாது இன்னும் என்னென்ன நடக்குமோ அரங்கா!


"யார் இவர் ?"என்று சீறினான் தளபதி . சவுக்கினை ஒருமுறைகீழே காற்றில் சுழற்றி எடுத்தான்.

சிலிர்த்தது உடம்பு அமுதனாருக்கு.



இதற்கு தளபதியோடு வந்திருந்த கோபால்நம்பிகுரல்கொடுத்தபோது அப்போதுதான் அவனைநிமிர்ந்துபார்த்தார் அமுதனார், உடனேமுகத்தைவேறுபுறம் திருப்பிக்கொண்டார் .

அரங்கநகருக்காரனாய் இருந்துகொண்டு அந்நியனுக்குப்பல் இளிக்கும் பாதகன். பணத்தாசை காரணமாய் அரங்கச்செல்வத்தைத்துறந்து அந்நியன் ஒருவனிடம் அடிமையாகிப்போனவன்.

அந்தப்புல்லுருவியைமீண்டும் நான் பார்க்கக்கூடாது.


"தளபதியாரே! இவர்தான் பெரியகோயிலின்முக்கியஸ்தர்! பெயர் அமுதனார் ! கொத்துச்சாவிகளும் நகைகளும் அவர்பொறுப்பில்தான் உள்ளன "என்றான் கோபால்நம்பி

"அப்படியா?" தளபதி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

சவுக்கை சுருட்டிக்கொண்டபடி விழிகளைமலர்த்தினான்.



"ஆஹா! பழம் நழுவிப்பாலில் விழுந்த கதைதான்!!!நமதுகாவலர்கள் அபாரபுத்திசாலிகள் !இந்த ஆளை இங்கே நுழையவிட்டு, பின்னர் பிடித்திருக்கிறார்கள்!

ஏய், யாரங்கே இவரைக் காவலில் கொண்டுவையுங்கள்" என்றான் .


அமுதனாருக்குக் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

'நகைகளின் இருப்பிடதைச்சொல்லாதவரை இவர்கள் என்னைவிடமாட்டார்களே! இதுதான் விதியா ?இல்லை இல்லை வெள்ளயம்மா ரூபத்தில் வந்த சதி .ஏன் இப்படிச்செய்தால் என்ன ?வெள்ளையம்மாவை நம்பித்தானே ரகசியத்தை அவளிடம்சொன்னேன் !இப்போது அவளையே மாட்டிவிட்டுவிட்டால் என்ன?'

அமுதனார் ஒருமுடிவோடு நிமிர்ந்தவர்,


"தளபதியாரே! இந்தவெள்ளையம்மாவிடம் நகைகள் இருக்குமிடத்தைக் கூறிவிட்டேன். அவளிடமேகேட்டுக்கொள்ளுங்கள் " என்றார் உறுதியானகுரலில்.

வெள்ளையம்மா திடுக்கிட்டு அவரைப் பார்த்தாள் . இதைஅவள் எதிர்பார்க்கவில்லை .ஆனலும் சிரித்தபடியே ," ஆமாம் எனக்கும்தெரியும் அவரைவிட்டு விடுங்கள்" என்றாள்.

தளபதிக்கு இன்னும் ஆனந்தம்!

"ஏதேது எல்லாம் மிக எளிதாகமுடிந்து விடும்போல இருக்கிறதே! சபாஷ்!
வெள்ளையம்மா! நீ மிகவும் புத்திசாலி !இந்தக்கிழவரின் உடலைப்பதம்பார்த்து, பிறகுஅந்தரகசியத்தை வாங்கும் சிரமத்தைக்கூட நீ எனக்கு வைக்கவில்லை ! வா நாம்போகலாம்!நீயே அந்த இடத்தை எனக்குக்காண்பித்துவிடு! ஆடிப்பாடி அதனைக்கொண்டாடிக் களிக்கலாம்! அந்த நகைகள் உன் காலடியில் விழும்! நீ, மறுக்காமல்ஏற்றுக்கொள்ளவேண்டும் ! கோபாலநம்பி! பயப்படாதே !உனக்கும் ஏதும் பதக்கம் நிச்சயம் உண்டு! "என்றுபெருமையாகவும் கிண்டலாகவும் சொன்னான் தளபதி.

அமுதனாரை வெளியே கொண்டுவந்து கழுத்தைபிடித்துவிரட்டினார்கள் காவலர்கள்.

அமுதனார் வேதனையுடன் நின்ற்வர் யோசித்தார்.

'எப்படியாவது ந்கைகளைக்காப்பாற்றியாகவேண்டும் ,சாவிக்கொத்தையும் நகைகளையும்வேறிடத்தில் அப்புறப்படுத்திவிட்டால் அது வெள்ளையம்மாளைப் பழி வாங்கியதுபோலாகும்.'

மதிலின்மீது ஏறி யாரும் கண்டுகொள்ளாமல் கீழைக்கோபுரத்திற்கு எதிரேவந்தடைந்தார் .
அங்கிருந்தபடியே காவலளர்களை நன்குகண்காணிக்கலாம் அவர்கள் சிறிது உறங்கினாலும் தப்பித்து உள்ளே ஓடிப்போய்விடலாம்.


கோபுரத்தின் உச்சியிலிருந்து பாட்டும் சிரிப்புமாய்கேட்டது. வெள்ளைநாச்சியாருக்கு இனிமையான குரல்தான் .ஆனால் அமுதனாரின் காதில் அது இப்போது நாராசமாக விழுந்தது

ஆழ்வாராதிகளும் சுவாமிதேசிகரும் மிதித்தமண்ணுக்குவந்த கேடுதான் என்ன இன்று? இதன் மகாபெருமையைப் பாழாக்கமுனைந்தாளே ஒருபெண்!

அமுதனார் கோபுரத்தின் உச்சியைப்பார்த்தார்.

அங்கே தளபதியும் வெள்ளைநாச்சியாரும் சிரித்தபடி நின்றிருந்தார்கள் .

இந்த இரவில் எந்த சாம்ராஜ்யத்தைப் பிடிக்க கோபுர உச்சிக்குச்சென்றார்களோ!

கேளிக்கையும்பாட்டுமே சாசுவதம் என்று எண்ணிவிட்டார்களா?

வடக்கே காவிரிஅன்னைநடக்கிறாள் ! தெற்கே கொள்ளிடமங்கை நடக்கிறாள்!

இடையே அதர்மம் நடக்கிறது! நடக்கிறதென்ன உச்சிமீது ஏறி சிரிக்கிறது!

ஆனந்தத்தில் தலைகால் தெரியவில்லையா வெள்ளையம்மாவிற்கு? துரோகி!

பார்த்துக்கொண்டே இருந்த அமுதனார் திடுக்கிட்டுப்போனார்.

'ஆ' என்று அலற இருந்த வாயினை இருகைவிரல்களாலும் அழுந்த மூடிக்கொண்டார்.

கண்வ்ழிகுத்திட அப்படியேநின்றார்.ஆம், ஒருக்கணத்தில் அது நடந்துவிட்டது.

தளபதி சற்று உல்லாசமாகக் கீழே குனிந்த நேரத்தில் அவனை அப்படியே கிழே தள்ளி உருட்டிவிட்டுவிட்டாள் வெள்ளையம்மா.


உருண்டுதலைசிதறி
கீழே
கீழே
கீழே
அப்படியே தலைகுப்புற ன்தாந்ழுவி தளபதி.

ஐயோ!

அலறல்புறப்பட குழப்பம் பெருகியது. கோபுரத்தின்கீழே குருதிவெள்ளமும் பெருக்கெடுத்தது.

வெள்ளையம்மா சிரிக்கிறாள். கோபுரத்தின் மீதிருந்து சிரிக்கிறாள். விதியை வென்ற சிரிப்பு! கேவலம் பெண்ணா அவள்!

அந்தப்பெண்மையையே அரணாக்கிக்கொண்டு போரிட்ட வீராங்கனை அல்லவா!


மதிலிலிருந்துகீழே குதிக்கப்பயந்து அமுதனார் மெல்ல இறங்கினார் . அதே சமயம் வெள்ளையம்மாவைப்பிடிக்க காவலர்கள்கோபுரம்மீது ஏறினர்.

ஆனால் அவர்கள் வரும் வரை அவள் காத்திருக்கவில்லை.

வெண்புறாவைப்போல அவளும் கீழே பாய்ந்தாள். கோபுரத்திலிருந்து கிழே குதித்துவிட்டாள்.
அமுதனாருக்கு முச்சே நின்றுவிடும்போலிருந்தது.

அவளுடைய சாகசமும் இறுதியில் அலட்சியமாய் உயிரைவிட்ட கோலமும் அவரை சிலையாக்கிவிட்டன.

அமளிதுமளியானது ஊர்.


சிங்கன் ஓடிவந்தான்.அமுதனாரிடம்

"வாருங்கள் இனி நாமிங்கே இருக்கவேண்டாம் . இங்கிருந்தால் ஆபத்து .நாம்பிழைத்துவிட்டோம் சுவாமி !வெள்ளையம்மா நம்மைக் காப்பாற்றி விட்டாள் "என்றான்.

அமுதனார் கலங்கிய தன்கண்களைத் துடைத்துக்கொண்டார்.

"சிங்கா! நாம் பிழைக்க வில்லையடா ,பிழைத்தும் செத்து விட்டோம். வெள்ளையம்மா செத்தும் வாழ்கிறாள்! தர்மம் பிழைத்தது. இந்த அரங்கத்தின் மாணிக்கம் அவள்! உனக்கும் எனக்கும் உயிர்மேல் கண் .ஆனால் அவளுக்கோ உயிர் ஒருபொருட்டே இல்லை. உயிர் ஒருபொருட்டே இல்லை! தன் ரத்தம் சிந்தி அரங்கபொக்கிஷத்தைக்காப்பாற்றி இருக்கிறாள் அந்த வெள்ளை உள்ளம் கொண்ட மகாமகள்!"

அமுதனாருக்குத்தொண்டை அடைத்துக்கொண்டது.

கண்கலங்க இருவரும் கோபுரத்தை ஏறிட்டபடியே புறப்பட்டனர்.


தெருவில்புழுதிபடர்ந்தது. இரவு பகலானது. போர் ஆரவாரங்கள்கிளர்ந்தன. முரசுகொட்டியது .பகைவர்கள் சிதறி ஓடவும், கீழைகோபுரத்தில் வெற்றிச்சின்னம் பறந்தது!

ஆம் கம்பீரமாக நிற்கிறது வெள்ளையமாள் உயிர்துறந்த அந்தகீழைக்கோபுரம் !
இன்றும் வெள்ளைகோபுரம் என்றபெயரோடு,
அவள் நினைவாக உடல்முழுவதும் வெள்ளைநிறம்பூசிக்கொண்டு அரங்கநகரின் அத்தனைவண்ணகோபுரங்களிலிருந்து தனித்து நிற்கிறது.


( வரலாற்றில் நடந்த உண்மைக்கதை இது!தன்உயிரைக்கொடுத்து அரங்கநகரின் செல்வத்தைக்காப்பாற்றிய வீரமங்கை வெள்ளையம்மாள் பற்றி பெண்கள் தினமான இன்று எழுத நினைத்ததை என் அரங்கன் செயலாக்கிவிட்டான். )

21 comments:

  1. அக்கா, அருமையா சொல்லிருக்கீங்க.. அரங்கன்ன் சிறப்பை விட அவன் அடியார் சிறப்பே பெரிது..

    ReplyDelete
  2. வெள்ளையம்மாள் கதை அருமையா வந்திருக்கு-க்கா! விரைவான நடை!

    வெள்ளையம்மாளின் அரங்க தியாகத்துக்கும் பக்திக்கும் மெச்சி கோபுரம் "வெள்ளை" கோபுரம் ஆனது மட்டுமில்லை! கணிகையர் யாரேனும் தவறி விட்டால், அவர்களுக்கு வாய்க்கரிசியும், நெருப்பும் அரங்கன் மடைப்பள்ளியில் இருந்து தான் போகும்! இதுவும் வெள்ளையம்மாவின் தன்னலமில்லாப் பக்திக்குத் தந்த பரிசே!

    ReplyDelete
  3. Raghav said...
    அக்கா, அருமையா சொல்லிருக்கீங்க.. அரங்கன்ன் சிறப்பை விட அவன் அடியார் சிறப்பே பெரிது..

    5:26 PM
    >>>ஆமா ராகவ் ஆண்டவனுக்கும் தன் அடியார்கள் புகழ் பாடுவதே பிடிக்குமாம்.நன்றி கருத்துக்கு.

    ReplyDelete
  4. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    வெள்ளையம்மாள் கதை அருமையா வந்திருக்கு-க்கா! விரைவான நடை!


    ரவி உங்க ஸ்டைல்ல இந்தக்கதை ஜோரா வந்திருக்கும்..வெள்ளையம்மா ஒயிட்லேடின்னு போட்டு கலக்கலா எழுதிஉஇருப்பீங்க!

    \\வெள்ளையம்மாளின் அரங்க தியாகத்துக்கும் பக்திக்கும் மெச்சி கோபுரம் "வெள்ளை" கோபுரம் ஆனது மட்டுமில்லை! கணிகையர் யாரேனும் தவறி விட்டால், அவர்களுக்கு வாய்க்கரிசியும், நெருப்பும் அரங்கன் மடைப்பள்ளியில் இருந்து தான் போகும்! இதுவும் வெள்ளையம்மாவின் தன்னலமில்லாப் பக்திக்குத் தந்த பரிசே!\\\


    தகவலுக்கு நன்றி... எனக்கும் இது புதிய செய்திதான் திருவரங்கத்திலே பிறந்து வளர்ந்திருந்தாலும் சில தகவல்களை சரிவர நான் அறியவில்லை!

    8:43 PM

    ReplyDelete
  5. அக்கா என் பதிவுல வந்து பின்னூட்டம் போட்டீங்க. அதை பப்ளிஷ் குடுத்தேன். ஆனா பப்ளிஷ் ஆகாம எங்கேயோ போய்ருச்சு(காக்கா தூக்கிகிட்டு போய்ருச்சோ???)

    ஆமா எதுக்கு கங்கிராட்ஸ்சும்,பூங்கொத்தும்?

    ReplyDelete
  6. எம்.எம்.அப்துல்லா said...
    அக்கா என் பதிவுல வந்து பின்னூட்டம் போட்டீங்க. அதை பப்ளிஷ் குடுத்தேன். ஆனா பப்ளிஷ் ஆகாம எங்கேயோ போய்ருச்சு(காக்கா தூக்கிகிட்டு போய்ருச்சோ???)

    ஆமா எதுக்கு கங்கிராட்ஸ்சும்,பூங்கொத்தும்?

    7:53 AM
    >>> மகா சதியா இருக்கே இது விருதுக்குப்பாராட்டி பூங்கொத்து கொடுத்தா இப்படித்தான் வீசிப்போடறதா யாரங்கே இந்த அப்துல்லாவை வீசி பெங்களூர் சைட் எறிங்க:):):)

    ReplyDelete
  7. காக்கா திரும்ப வந்து வச்சுட்டு போய்ருச்சு :)

    ReplyDelete
  8. எம்.எம்.அப்துல்லா said...
    காக்கா திரும்ப வந்து வச்சுட்டு போய்ருச்சு :)

    2:56 PM
    >>>>>>>>.

    :):):):):)

    ReplyDelete
  9. அக்கா கவிதை எழுதிட்டேன். வந்து பாருங்க :)

    ReplyDelete
  10. எம்.எம்.அப்துல்லா said...
    அக்கா கவிதை எழுதிட்டேன். வந்து பாருங்க :)

    12:35 AM
    >>> இதோ வரேன் அதைப்படிக்கறதைவிட வேறென்னவேலைஇப்ப!

    ReplyDelete
  11. வெள்ளை நாச்சியாரின் கதையை ஒரே வரியில் படித்துத் தான் தெரியும். முழுக்கதையையும் சொன்னதற்கு நன்றி அக்கா. ஒவ்வொரு வரியிலும் இலக்கியம் தெரிகிறது. அதே நேரத்தில் வெள்ளை நாச்சியாரின் தியாகமும் தெரிகிறது.

    மகாசதி - இலக்கியம் தலைப்பிலேயே தொடங்கிவிடுகிறது. பெரிய சதித்திட்டம் என்ற பொருளைத் தந்து கொண்டே கணவனுடன் இறந்த பெண் என்ற பொருளில் மகாசதி என்பது வெள்ளை நாச்சியாரைக் குறிக்கிறது.

    முதல் வரியே அங்கே இருக்கும் அமைதியைத் தெளிவாகக் காட்டுகிறது. அந்த வரியைப் படிக்கும் போதே அங்கிருக்கும் அமைதியை உணரமுடிகிறது.

    முகத்தைத் துடைத்தும் முகம் உலராமல் இருப்பதைச் சொன்னதன் மூலம் அமுதனாரின் கலக்கமும் குழப்பமும் பதட்டம்மும் மிகத் தெளிவாகக் கண்ணெதிரே தோன்றும் படி செய்துவிட்டீர்கள்.

    நெய்ப்பந்தங்களின் குளிர் ஒளி என்ற தொடரைப் படித்த போது ஒரு நிமிடம் அந்தக் குளிர் ஒளி எப்படி இருக்கும் என்று சிந்தித்து உணர முயன்றேன். அருமை.

    இப்படியே இந்தக் கதையில் ஒவ்வொரு வரியிலும் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். நானும் ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லிக் கொண்டே செல்லலாம். :-)

    ReplyDelete
  12. குமரன் (Kumaran) said... >>>


    வாங்க குமரன் நல்வரவு!


    \\வெள்ளை நாச்சியாரின் கதையை ஒரே வரியில் படித்துத் தான் தெரியும். முழுக்கதையையும் சொன்னதற்கு நன்றி அக்கா. ஒவ்வொரு வரியிலும் இலக்கியம் தெரிகிறது. அதே நேரத்தில் வெள்ளை நாச்சியாரின் தியாகமும் தெரிகிறது. \\



    வரலாற்றில் நடந்த நிகழ்ச்சி இது..வெள்ளையம்மாளின் தியாகம் எனக்கு அங்கு கோபுரத்தைப்பார்க்கும்போதெல்லாம் நினைவில் வந்து ஒருநிமிடம் உலுக்கிப்போடும்.



    \\முதல் வரியே அங்கே இருக்கும் அமைதியைத் தெளிவாகக் காட்டுகிறது. அந்த வரியைப் படிக்கும் போதே அங்கிருக்கும் அமைதியை உணரமுடிகிறது. \\

    ஆமாம் குமரன்....அபாயகரமான அமைதி,. அங்கே அரங்கனின் அடியாரின் மன உளைச்சல் எப்படி இருந்திருக்கும்!

    \\முகத்தைத் துடைத்தும் முகம் உலராமல் இருப்பதைச் சொன்னதன் மூலம் அமுதனாரின் கலக்கமும் குழப்பமும் பதட்டம்மும் மிகத் தெளிவாகக் கண்ணெதிரே தோன்றும் படி செய்துவிட்டீர்கள்.

    நெய்ப்பந்தங்களின் குளிர் ஒளி என்ற தொடரைப் படித்த போது ஒரு நிமிடம் அந்தக் குளிர் ஒளி எப்படி இருக்கும் என்று சிந்தித்து உணர முயன்றேன். அருமை.]]


    நெய்ப்பந்த ஒளியில் தீயின் தீவிரம் அதிகம் இருக்காது என்பார்கள் ஒளி மட்டும் அதிகம் கொடுக்கும் .அதனைத்தான் இறைவனுக்கு நாமும் காண்பிக்கிறோம்.

    \\இப்படியே இந்தக் கதையில் ஒவ்வொரு வரியிலும் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். நானும் ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லிக் கொண்டே செல்லலாம். :-)\\

    நன்கு ஆழ்ந்து படித்து கருத்து சொல்லிய குமரனுக்கு எப்படி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை..அரங்கன் திருப்பார்வை விழட்டும் தங்கள்மேல் என வாழ்த்துகிறேன் நன்றி குமரன்.

    7:34 AM

    ReplyDelete
  13. வரலாற்று நிகழ்ச்சியை பொருத்தமான நாளில், பொருத்தமாக எழுதியுள்ளீர்கள் ஷைல்ஸக்கா... எனக்கு இந்த நிகழ்ச்சி தெரியாது...அறியத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  14. மதுரையம்பதி said...
    வரலாற்று நிகழ்ச்சியை பொருத்தமான நாளில், பொருத்தமாக எழுதியுள்ளீர்கள் ஷைல்ஸக்கா... எனக்கு இந்த நிகழ்ச்சி தெரியாது...அறியத் தந்தமைக்கு நன்றி.

    10:17 AM

    >>>>>

    வாங்க மௌலி

    மகளிர்தினத்துல இடவேணுமென நினச்சேன் ஆனா அரங்கன் திரு உள்ளம் நினைக்காவிட்டால் நடந்திருக்குமா இது!

    இந்தக்கதை அரங்கநகரில் சிலகாலம் வாழ்ந்திருந்ததால் எனக்கும் தெரிஞ்சிருக்கு மௌலி இல்லேன்னா சாத்தியமில்ல. நன்றி கருத்துக்கு.

    ReplyDelete
  15. கொஞ்சம் பெர்சாக்கீது

    அப்பாலிக்கா படிக்கிறேன்

    ReplyDelete
  16. நட்புடன் ஜமால் said...
    கொஞ்சம் பெர்சாக்கீது

    அப்பாலிக்கா படிக்கிறேன்

    2:21 PM
    >>>>>:):) ம்ம் சரி:)

    ReplyDelete
  17. வீரமங்கை வெள்ளையம்மாளைப் பற்றி அறியத் தந்ததற்கு நன்றி ஷைலஜா.

    ReplyDelete
  18. ராமலக்ஷ்மி said...
    வீரமங்கை வெள்ளையம்மாளைப் பற்றி அறியத் தந்ததற்கு நன்றி ஷைலஜா.

    3:32 PM

    <<,நன்றி ராமலஷ்மி

    ஸ்ரீரங்கம் போனால் கிழக்கு வாசல்பக்கம் இருக்கும் அந்த கோபுரம் கண்டுவாருங்கள்.

    ReplyDelete
  19. நல்ல எழுத்து நடை.

    அரச காலத்தில் சற்றே சென்று வந்துவிட்ட உணர்வு.

    ReplyDelete
  20. நட்புடன் ஜமால் said...
    நல்ல எழுத்து நடை.

    அரச காலத்தில் சற்றே சென்று வந்துவிட்ட உணர்வு.

    8:16 PM
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


    வாங்க ஜமால்
    வரலாற்றுக்கதை அதனால் கொஞ்சம் நீண்டதாகிவிட்டது
    கருத்துக்கு ரொம்ப நன்றி

    ReplyDelete
  21. நல்ல நடை. புதிய தகவல், நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.