Wednesday, January 04, 2012

அந்த-ரங்கம்!

அந்த ரங்கம் ஆனந்த ரங்கம் அதுவே ஸ்ரீரங்கம்!

வைகுண்ட ஏகாதசியும் சொர்க்கவாசலும் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கத்தோன்றும். ஆம் அதற்குவிடையாக அரங்கனே நமக்கு நடித்துக்காட்டுகிறான்.

நமக்காக அவன் சொர்க்கவாசலைத்திறந்து வைத்து தான் முன் சென்று நமக்கு அதை வழிகாட்டித்தருகிறான்.




பரமபத வாசல்



இந்த வைகுண்ட ஏகாதசிதினத்தின் மகிமையை அறியும் முன்பாக நாதமுனிகள் என்னும் வைணவம்தந்த வைரமணியைப்பற்றி சில வரிகள் கூறவேண்டும்.



காலத்தின் மாற்றத்தால் ஆழ்வாரின் பாசுரங்களும் திருவாய்மொழியும் நாதமுனிகள் காலத்தில் காணாமல்போயிருக்க கவலைகொண்டவர் நம்மாழ்வாரின் சந்நிதிமுன்பு நின்றார்.




சேஷராய மண்டபத்து சிற்பங்கள்.(ஆயிரம் கால் மண்டபம் எதிரில்- வெள்ளைகோபுரம் அருகில்_



யோகத்தில் ஆழ்ந்தவர், ஆழ்வார்கள் ஆண்டாள் முதலியோரின் பாடல்களை நம்மாழ்வாரிடமிருந்து க்ரஹித்துக்கொண்டார் ஸ்ரீரங்கம் வந்தவர் அவைகளை இசை என்றும் இயல் என்றும் பிரித்து தாள் சகிதம் பண்ணுடைய இசைப்பாக்களை சேவிக்க மார்கழி சுகல்பட்ச ஏகாதசிக்கு முந்தின பத்துநாட்கள் திருவாய்மொழி தவிர மற்ற ஆழ்வார்களுடைய இசைப்பாக்களையும் ஏகாதசிமுதல் அடுத்த பத்துநாட்களில் இராப்பத்து பொழுதில் திருவாய்மொழியையும் இராபத்து முடிந்த மறுநாள் இயற்பா முழுவதையும் சேவிக்க வேண்டுமென்றும் சிலமுக்கியபாடல்களை அபிநயித்துக் காட்டவேண்டும் என்றும் ஹிரண்யவதம் ராவணவதம் வாமன க்ருஷ்ணாவதாரங்கள் போன்ற சிலமுக்கிய அம்சங்களைப் பாமரர்கள் எளிதில்புரிந்துகொள்ளும்பொருட்டு நாடகரூபமாய் அபிநயித்துக்காட்ட வேண்டுமென்றும் ஏற்பாடு செய்தார்.




அப்படிச்செய்ததும் நம்மாழ்வாரின் திரு உள்ளத்தை அனுசரித்தே செய்யப்பட்டதாய் தெரிகிறது எப்படியென்றால் நம்மாழ்வார் பாடின ’தடங்கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைய பூதங்களேயாய் கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பாடிநடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே ’ என்னும் பாசுரத்தை அனுசரித்து இருப்பதால் என்கிறார்கள் பெரியோர்.



வைகுண்டம் என்பது ஸ்ரீரங்கமே என்று சொல்லுகிறபடி வைகுண்டத்தில் உள்ள எல்லாம் ஸ்ரீரங்கத்தில் அமைந்திருக்கிறது என்பதைக் காட்டிக்கொடுக்கவே இந்தத்திருநாள் நடக்கிறது





வைகுண்டஏகாதசி ஏன் வருஷாவருஷம் வருகிறது? அந்த தினம் எதற்கு சொர்க்கவாசலைத்திறக்கிறார்கள் ஏன் முதலில் நம்பெருமான் செல்கிறார் பின்னர் நம்மையும் அதே வழியில் அழைத்துச்செல்கிறார்? இதற்கான தத்துவம் தான் என்ன என்பதை கொஞ்சம் பார்க்கலாம்!



எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே என்று சொல்லி திருமங்கையாழ்வார் பகவானுடைய தரிசனம் பெற்றதைப்பேசும் திருநெடுந்தாண்டகம் என்னும் பிரபந்தம் பெருமாள்முன்பாக முதலில் சேவிக்கப்படுகிறது ஒரு நூலுக்கு முன்னுரை இருப்பதுபோல ஏகாதசி உதசவத்திற்கு இந்த திருநெடுந்தாண்டகம் உள்ளது



இந்த உற்சவத்தில் முக்கியமான அரையர்சேவை பகல் நாட்களில் நடக்கும்போது பகல்பத்து என்கிறார்கள் இந்த பகல்பத்துஉற்சவத்தில் அரங்கன் காலையில் சந்நிதியைவிட்டுப்புறப்பட்டு கிழக்கில் உள்ள அர்ஜுனன் மண்டபத்திற்கு எழுந்தருளி ராத்திரி எட்டுமணீக்கு திரும்ப மூலஸ்தானம் வருகிறார்


மோகினி அலங்காரம்  வைகுண்ட ஏகாதசிக்கு முதல்நாள்/



இராப்பத்து உத்சவதில் ஆயிரங்கால் மண்டபத்தின் மையத்தில் திருமாமணி மண்டபத்தில் பரம்பதத்தில் பெருமாள் எழுந்தருளி இருக்கும் வைகுண்டத்து திருமாமணிமண்டதின்படி கட்டப்பட்டுள்ளதால் அதே பெயர் இதற்கும்! இந்தப்பத்துநாட்கள் அரையர் சேவை ராத்திரியில் நடக்கப்படுவதால் இது இராப்பத்து என்றாகிறது.





தவிர வைகுண்டம் செல்லும் மார்க்கத்தைப்பற்றியே பேசும் திருவாய்மொழியில் ஒருபாசுரமாகிய;சூழ்விசும்பணிமுகில் ;எனும் பத்துபாசுரங்களின் தாத்பர்யங்கள் இந்த நாட்களில் நாடகம் போலக் காட்டப்படுகின்றன. பரமபதத்திற்கு செல்லும்  நபராக  ரங்கநாதனே நடிக்கிறார்.



வைகுண்ட ஏகாதசித் திருநாளில் கர்ப்பக்ரஹத்திலிருந்து புறப்படுமுன்பாக ஆர்யபடாள்வாசல் நாழிகை கேட்டான் வாசல் முதலானதுமூடப்படும்.



அறிவெனும் தான் கொளுவி ஐம்புலனும் தம்மில் செறிவென்னும் திண்கதவம் செம்மி மறையென்னும் நன் கோதி நன்குணர்வார் காண்பரே நாள்தோறும் பைங்கோத வண்ணன்படி என்ற பாசுரப்படி இந்தக்கதவுகள் மூடப்படுகின்றன. பகவானை சிந்தித்து அவனருளைப் பெற இச்சிக்கும்  மனிதம்  தன் இந்திரியங்களால் இழுக்கப்பட்டு கண்காதுமூக்கு துவாரங்கள் வழியாக வெளிச்செல்வதை தடுக்க முதலில் அவைகளைமூடவேண்டும் என்பதை குறிக்கிறது.



பெருமாள் புறப்படும்முன்பாக கர்ப்பக்ருஹத்தில் வேதபாராயணமும் திருவாய் மொழியும் தொடங்கப்படுகின்றன அதனபின் ரத்ன அங்கி சார்த்திக்கொண்டு பெருமாள் புறப்படுவார் அப்போது சந்நிதிவாசல்திறக்கப்படும் சிம்மகதி(ஆண்டாளின் மாரிமலை முழஞ்சில் பாட்டில் வருமே அதேதான்) பிறகு ஒய்யார நடையிட்டு பரம்பதவாசல் செல்லும்வழியில் சில நெறிமுறைகளை நடத்தியபடி செல்வார் இதையெல்லாம் நம்மாழ்வார்பாடல்களில் காணலாம்.



பரமபதவாசலுக்கு வந்ததும் வடக்குமுகமாய் நின்று வாசல்கதவுகளைதிறக்கும்படி நியமித்தவுடன் அவைதிறக்கப்படும் சொர்க்கவாசல் என்பது இதுதான். சொர்க்கப்படி மிதித்து வெளியே வந்ததும் இந்தவாசலுக்குப் பக்கதில் விரஜா நதியின் ஸ்தானத்தில் சந்திரபுஷ்க்ரணி இருக்கிறது. நதிக்கரை மணல் கொண்டதுதானே? ஸ்ரீரங்கத்திலும் சந்திரபுஷ்கரணியைக்கடந்தால் நீங்கள் மணல்வெளியில் தான் கால் பதிக்கவேண்டும்!

 சொர்க்கப்படி தாண்டியதும் உடனே வரும் நாலுகால் மண்டபத்தில் வேதவிண்ணப்ப்பமாகி பெருமாள் இந்தவாசலுக்குப்போனவுடன் அதுவரை சார்த்தி இருந்தபோர்வை களையப்பட்டு புதுமாலைகள் சம்ர்ப்பிக்கப்படுகிறது.

(இதையெல்லாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும்.கண்டிப்பாகக் கண்பனிக்கும் மனம் நெகிழும் காட்சிகள் இவை. இவைகளை நமக்காக  இறைவனே நடத்திக்காட்டுவது அவனுக்கு நம் மேல் உள்ள அக்கறையைக்காட்டுகிறது.)

பரமபதத்திற்குப் பக்கத்திலுள்ள விரஜா நதியை அடைந்து அதில் ஸ்னானம் செய்து முக்தனுக்கு பழைய சரீரம் போய் புதுசரீரம் ஏற்படும் தத்துவத்தை இது உணர்த்துகிறது.



ஏகாதசி தினம் ரத்ன அங்கியோடு பெருமாள் பரமபதவாசல் நுழைந்து செல்வதால் ,விரஜா நதியில் மூழ்கி எழுந்த ஒருவன் பரிசுத்தமான ஒளி கொண்ட முகத்தோடுவருகிறான் ,’ ஒளிக்கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்றுகொலோ’ என்று ஆழ்வார் அருளியபடி விரஜைக்கு அப்புறமுள்ள முகதர்களோடு கூடுவதுகாட்டப்படுகிறது ஆதிகாலத்தில் பரமபதவாசலுக்குவெளியே ஆழ்வார்கள் நின்றுகொண்டிருந்ததாய் சொல்லப்படுகிறது .



ஆயிரங்கால் மண்டபத்தின் திருமாமணிமண்டபத்தில் அண்ணல் அமர்ந்ததும் அவர் எதிரில் ஆழ்வார்கள் வீற்றிருப்பது மாமணிமண்டபத்து அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை என்கிறபடி முக்தன்(முக்திஅடைந்தவன்) பரமபதத்தில் உள்ள திருமாமணி மண்டபதை அடைந்து அங்குள்ள நித்ய முக்தர் மத்தியில் ஆனந்தமாய் இருப்பதைக்காட்டுகிறது



ஆக ,அரங்கன் ’வைகுண்டம்’ என்றதலைப்பில் நடத்தும் நாடகம் தான் இந்தவைகுண்ட ஏகாதசி. ! இறைவன் நமக்கு உய்ய வழிக்காட்ட முன்னின்று செல்கிறான் நாமும் ’உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை உணர்வு அரிது உயிர்காள் ’என்ற திருவாய் மொழிக்கு ஏற்ப அவனை அறிந்து உணர்வோம், உன்னதம் அடைவோம்!



அரங்கன் திருவடிகளே சரணம்!











--

13 comments:

கணேஷ் said...

தலைப்புலயே அசத்தீட்டீங்களே... திரட்டிகள்ல இணைச்சுட்டு வர்றேன் இருங்க...

Ramani said...

அந்த-ரங்கன் நடத்தும் அந்தரங்க நாடகங்களை
அழகிய பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

த.ம 2

கணேஷ் said...

(ஸ்ரீ)ரங்க தரிசனம் உங்களால் அற்புதமாகக் கிடைத்தது. மெய் சிலிர்த்தேன்; தன்யனானேன். ஸ்ரீரங்கம் எனக்கு மிகப் பிடித்த ஊர். (உங்களுக்காகச் சொல்லவில்லை) முன் ஏதோ பிறவியில் அங்கு வாழ்ந்திருக்கிறேன் என்ற எண்ணம் செல்லும் போதெல்லாம் எழுவதுண்டு. இப்போது அழகான பக்திரசம் கமழும் உங்கள் வார்த்தைகளின் மூலம் மீண்டும் ஸ்ரீரங்கம் சென்று ரங்கனைச் சேவித்து வந்த மனத்திருப்தி. நன்றிக்கா..!

Madhavan Srinivasagopalan said...

Very Informative..

thanks for the post.

KParthasarathi said...

ஸ்ரீரங்கத்தின் வைகுண்ட ஏகாதசி பற்றி சிறப்பாக எழுதி உள்ளீர்கள்.
மிக்க நன்றி. அரங்கனின் அருள் உங்களுக்கு உண்டாகட்டும்

RAMVI said...

அரங்கன் நடத்தும் நாடகத்தை பற்றிய உங்களது வர்ணனை சிறப்பாக இருக்கு.


//பரமபதத்திற்குப் பக்கத்திலுள்ள விரஜா நதியை அடைந்து அதில் ஸ்னானம் செய்து முக்தனுக்கு பழைய சரீரம் போய் புதுசரீரம் ஏற்படும் தத்துவத்தை இது உணர்த்துகிறது.//

அருமை.

தமிழ் விரும்பி said...

சொர்க்கவாசல் திறப்பும் அதன் தார்ப்பரிய விளக்கமும் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள் சகோதிரி...

புதுகைத் தென்றல் said...

ஸ்ரீரங்கத்திற்கு ஒரு உலா போய் வைகுண்ட வாசலை மிதித்த எஃப்கட் பதிவு படிச்சபோதே வந்திருச்சு.

ரொம்ப நன்றி

Hotlinksin.com said...

நண்பரே உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் முத்திரை பதிக்கின்றன. உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

புலவர் சா இராமாநுசம் said...

எந்தன் அரங்கன் அந்த ரங்கன்
பற்றிய பதிவு எனக்கு சொர்க
வாசலாயிற்று!
நன்றி!நன்றி!

புலவர் சா இராமாநுசம்

ஷைலஜா said...

பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்திய உள்ளங்களுக்கு அன்பு கலந்த நன்றி.

அமைதிச்சாரல் said...

ஆஹா.. அற்புதமான தரிசனம். பரமபத வாசல்ல நுழைஞ்ச திருப்தி.