Social Icons

Pages

Monday, October 31, 2011

வாழ்க்கைப்பாடம்.(வம்சி சிறுகதைப்போட்டி 2011)


எதிர்பாராமல் உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று யாரும் என்னிடம் சொல்லாத பொழுதில் அதிர்ஷ்டம் அடித்துவிட்டது! நாளை எனக்கு எண்பதாவது வயது பிறந்த நாள் கொண்டாட்டத் திருநாளுக்கு வீட்டிற்கு உறவும் சொந்தமும் வந்து குவிந்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் இப்படி ஒரு அதிர்ஷ்டம்!

இருபத்தி இரண்டு வருஷம் முன்பு ரிடையர் ஆனபோது பென்ஷன் வேண்டி மேலிடத்துக்கு ஆறெழுபேராய் சேர்த்து எழுதிப்போட்டோம்.கிணற்றில்போட்ட கல்லாய் பலநாள் கிடந்தது.கிட்டத்தட்ட அதை நான் மறந்துவிட்ட வேளையில் பழைய நண்பர்கள் விடாமல்போராடி சாதித்துவிட்டனர். சேர்த்துவைத்து இப்போது முதல்தவணையாக கைக்கு் பெரியதொகையாக கிடைத்துவிட்டது!அதிர்ஷ்டம் என்று நான்குறிப்பிட்டது இதைத்தான்.

ஒன்றும் பெரிய ஜில்லா கலெக்டர் வேலை இல்லை.திருச்சியில்ரயில்வே டிபார்ட்மெண்டைச் சேர்ந்த ஒரு கோவாபரேடிவ் சொசைட்டி அலுவலகம்தான். அங்கே நான் விசுவாசமாய் கணக்கு எழுதிக்கொண்டிருந்தது நிஜம் .பதினெட்டு வயசில் வேலையில் சேர்ந்தபோது மாச சம்பளம் 75 ரூபாயில் ஆரம்பித்து ரிடையர் ஆகும்போது 700ரூபாயில் முடிந்தது. வருஷம் ஒருதடவை போனஸ் வரும் . அதற்கும் அப்போது செலவுகாத்துக்கொண்டிருக்கும். பெரிய குடும்பத்தின் மூத்தமகனாய்ப் பிறந்த ஆண்களுக்கு இது ஒரு சாபம்தான் அதுவும் ஒரு மத்திய தரக்குடும்பத்தில் குடும்பத்தலைவர் சீக்கிரமே இறந்து பொறுப்பெல்லாம் சுமக்கும் மூத்தபிள்ளையாய் பிறந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.

தம்பிகளைப் படிக்கவைத்து தங்கைகளுக்குக் கல்யாணம் செய்து வருஷ சீர்கள் வளைகாப்பு பிள்ளைப்பேறு என்று செலவுகள் தொடர்கதையாக இருக்கும். முப்பது வயதில் லேசாய் முன்வழுக்கை விழும்போது அம்மா எனக்கும் ஒரு பெண்ணைப்பார்த்தாள். அவளுக்கும் பெரியகுடும்பம். அவள் அப்பாவிற்கு ஏழு குழந்தைகள்.ஜானகிதான் மூத்தவள்.மாமனாருக்கும் பெரிய உத்தியோகமில்லை அதனால் அவள் ஏதும் மஞ்சக்காணி சொத்து, நகை, நட்டு என்று கொண்டுவரவில்லை.

அம்மா வேறு பெரிய மனதோடு “ பொண்ணுக்கு நகை ஏதும் வேண்டாம்...என் பையன் பத்ரிகூட அன்பாய் குடும்பம் நடத்தினால் போதும்” என்று சொல்லிவிட்டாள். ஆனால் என் மனைவி ஜானகி நல்லபெண் தான். குடும்பத்தில் அவளால் சச்சரவு என்பது இன்றுவரை கிடையாது. அவளும் பலவருடம் கழித்து பையனும் பெண்ணும் சம்பாதித்து கழுத்தில் தங்கச்சங்கிலி வாங்கிப் போடும்வரை காத்திருந்தாள். ஒருநாள் கூட என்னிடம் நகை கேட்டு புலம்பியதில்லை.

ஜானகிமட்டுமா, என் குழந்தைகள் நாலுபேரும் பத்தரைமாத்துத்தங்கம்தான். வளர்த்து ஆளாக்கிய கூடப்பிறந்தவர்களும், மற்றும் தூரத்து உறவினர்களும் இன்றுவரை நன்றியோடு இருக்கிறார்கள்.குறை ஒன்றும் இல்லைதான்.

ஆனாலும் போனவாரம் பென்ஷன் பணம் முதல்தவணையாய் முப்பதாயிரம் ரூபாய்க்கான செக்கை அனந்தராமன் என்வீடு தேடிவந்து என்னிடம் கொடுத்தபோது அவர் கழுத்தைப்பார்க்க நேர்ந்ததில் அந்த ஆசை மீண்டும் வளர ஆரம்பித்தது.சின்ன ஆலிலை கிருஷ்ணர் உருவம் பதித்த டாலருடன் அவர் கழுத்தில் செயின் மினுமினுத்தது.இருபதுவயதில் ஊரில் மைனர்துரைசாமி கழுத்தில் ஊசலாடியதை பார்த்தபோதுமுதலில் துளிர்விட்டதை,
’ இதெல்லாம உனக்கு சாத்தியமே இல்லை ’என்று மனம் பட்டென்று அடக்கிவிட்டது.

பவுன் எ்ழுபதுரூபாய் என்றுவிற்றகாலத்தில் கையில் ஏழுரூபாய் தங்குவதே அபூர்வமாக இருந்தது.அதே நிலமை தான் பிறகு எழுநூறு ரூபாய் ஆகும்வரையும் நீடித்தது. மகனும் மகள்களும் படித்து முன்னேறியதும் பெண்களின் திருமணத்திற்கு பணம் சேர்த்து திருமணமும் நடந்து எல்லோரும் இன்று பவுன் இந்தவிலை விற்கும்போதிலும் நினைத்தால் தங்கசங்கிலி வளையல் என வாங்கிக்கொள்கிறார்கள் ஜனாகிக்கும் வாங்கித் தருகிறார்கள்.


எனக்கு சேரவேண்டிய இந்தப்பணம் எதிர்பாராமல் கிடைத்திருக்கிறது .இதுவிஷயம் யாருக்கும்தெரியாது அனந்தராமன் வீடுவந்தபோது மகன் மருமகள் மனைவி பேரக்குழந்தைகள் யாருமே வீட்டில் இல்லாமல் போனதும் நல்லதாயிற்று.

செக்கைக்கொண்டு பாங்கில்போட்டு பணத்தையும் எடுத்துக்கொண்டு விட்டேன். கூலிசேதாரம் எல்லாம் சேர்த்து தங்கக்கடை ஒன்றில் சின்னதாய் ஆலிலை க்ருஷ்ணர் டாலருடன் ஒண்ணேகால் பவுனில்செயின் ஒன்றும் வாங்கிவிட்டேன். எனக்கு யாரும் தானாக தங்கசங்கிலியோ மோதிரமோ வாங்கித்தரப்போவதில்லை என்பது இத்தனை வருஷ காலத்தில் நிச்சயமாகிவிட்டது. எனக்கும் வயதாகிக்கொண்டுவருகிறது எதற்கு மற்றவர்களிடம் தங்கசங்கிலி வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்ய வேண்டும்? கையில்தான் என் உழைப்பின் ஊதியமா பெரிய தொகை வந்து விழுந்திருக்கிறதே!

நாளை எண்பதாவது பிறந்த நாளின்போது கழுத்தில் தங்கச்சங்கிலியைப் போட்டுக்கொண்டு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தவேண்டும் என்று தோன்றிவிட்டது !

”அப்பா! அப்பா! ரூமில் தனியா உட்கார்ந்து என்ன செய்றீங்க ?”என்றுகேட்டபடி அருகில் வந்த மகள் வித்யா ,” நாளைக்கு உங்களுக்கு எண்பதுவயசுன்னா நம்பவே முடியலப்பா...பத்துவயசுக்கு மேல குறைச்சி சொல்லலாம் போலத்தான் இருக்கீங்க! அதுக்கு உங்க சாப்பாட்டு நியமம் தான் காரணம் கூடவே களங்கமில்லாத மனசும்தான்! அப்பா! நீ்ங்க சொன்னமாதிரி சத்திரத்தில் அமர்க்களமாய் செய்யாமல் விட்டோடு எளிமையாய் நெருங்கின உறவுக்காரங்களைமட்டும் அழைச்சிதான் உங்க எண்பதாவது பிறந்தநாளைக்கொண்டாடப்போறோம்.
உங்க பேரப்பசங்க ஏதோ ட்ராமா போடப்போறாங்க வாங்கமாடிக்கு, பார்க்கலாம்ப்பா”
என்று அன்பும்பரிவுமாய் அழைத்தாள்.

”வரேன்மா. நீமுன்னால போ. நான் இதோ வரென்..” என்று அவளை அனுப்பிவிட்டு செயினை பீரோவில் மேல்தட்டில் வைத்துவிட்டுப் புறப்பட்டேன்.

மொட்டைமாடியில் பெரியமகளின் மகன் சதீஷ், பெரிய மகனின் மகள் ரம்யா சின்னமகனின் குழந்தை உஷா எல்லாரும் மேக் அப்போடு இருந்தனர்.

வித்யா தொண்டையைக்கனைத்துக்கொண்டு கைவிரல்களை மைக்போல குவித்துவிட்டு,”அனைவருக்கும் நல்வரவு. நாளை நடக்க இருக்கும் எந்தையாரின் எண்பதாம் ஆண்டு பிறந்த நாளை ஒட்டி இன்று இந்த இனிய இரவு நேரத்தில் இந்த இல்லத்தின் உப்பரிகைக்கு வரலாறு காணாத அளவில் வந்திருக்கும் மகா ஜனங்களுக்கு வந்தனம். இப்போது தாங்கள் ‘எங்கள்குடும்பம்’ என்னும் சிறுவர் நாடகத்தைக்காணலாம்.நாடகத்தை எழுதி இயக்கியவர் எங்கள் வீட்டு சகலகலாவல்லவர், டி.ராஜேந்தரின் வாரிசாகிய என் அன்பு அண்ணன் அரவிந்தன்.மொட்டைமாடில லைட்டுகளை அழகுற அமைத்த லைட்பாய் சின்ன மாப்பிள்ளை ராம்குமார்!” என்று குறும்பாய்க்கூறி முடிக்க உறவுக்கூட்டம் ஹோவென சிரித்தபடி பெரிதாய் கைதட்டியது.

பெரிய மகனின் இரண்டாவது மகன் சதீஷ் பத்துவயதுதான் ஆகிறது, என்னைப்போல சற்று மேலே தூக்கிக்கட்டிய வெள்ளை வேஷ்டியும் காமராஜர் பாணியில் அரைக்கைசட்டையும் அணிந்துகொண்டு, வாயில் வெற்றிலையை குதப்பியபடி நொடிக்கொருதடவை முகவாய்க்கட்டையை விரலால் தடவியபடி பேச ஆரம்பித்தான்.

குழந்தைகளை நாம் தான் கவனித்து வளர்ப்பதாக பெருமைப்பட்டுக்கொள்கிறோம் ஆனால் குழந்தைகள் தான் நம்மை நன்கு கவனிக்கின்றன!அதனால் தான் நம்மை பிரதிபலிக்கின்றன.‘இப்புவியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆண்டவன் இன்னும் மானுடத்தில் நம்பிக்கையை இழக்கவில்லை என்னும் செய்தியைக்கொண்டுவருகிறது’ என்ற ரவீந்திரநாத்தின் வைர வரிகள் நினைவிற்கு வந்தன.

சின்ன பேத்தி ரம்யாதான் பாட்டிஜானகியாம்! மடிசார் புடவையைக் கட்டிக்கொண்டு நெற்றியில் பெரியகுங்குமப்பொட்டும் கொண்டையில் பூவும் சுற்றிக்கொண்டும் வந்துவிட்டாள்.

சின்னப்பேரன் ராஜேஷ் , வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளியாம். அவனிடம் நானும் ஜானகியும் எப்படிப்பேசி உபசரித்து அனுப்புகிறோம் என்பதாக நடித்துக்காட்டினார்கள்.


மூன்று குழந்தைகளும் அசத்திவிட்டார்கள் எனினும் சதீஷின் தத்ரூபமான நடிப்பில்
என் தங்கை கல்யாணி உணர்ச்சிவசப்பட்டவளாய் அவனை அப்படியே கட்டிக்கொண்டு கண்பனித்தாள்.”கண்ணா அப்படியே எங்க பத்ரிண்ணா மாதிரியே நடிக்கிறியே! ஒவ்வொரு அசைவிலும் பேச்சிலும் அண்ணாவைப்பார்த்தேன்.. அடேயப்பா இந்த வயசில் உனக்கு எப்பேர்ப்பட்ட திறமை! உனக்கு நான் ஏதாவது பரிசு தரணும் இதுக்கு..” என்றவள் சட்டென தன் கழுத்திலிருந்து ஒரு தங்க சங்கிலியை கழற்றி எடுத்து அவன் கழுத்தில்போட்டுவிட்டாள்.

அனைவரும் சந்தோஷத்தில் கையைத்தட்டினர். நானும் தான்.

அப்போது சதீஷ்,” அத்தைப்பாட்டி! பரிசுக்கு தாங்க்ஸ்..நாங்கள்ளாம் காந்திதாத்தாவைப் பார்த்ததில்ல.. ஆனா நேர்மை வாய்மை எளிமைக்கு இலக்கணமா எங்க பத்ரி தாத்தாவைத்தான் பார்க்கிறோம். பத்ரிதாத்தா எளிமையானவர். கதர்வேஷ்டி கதர் சட்டை தவிர அவர் உடம்பில் நாங்க எப்போதும் பார்க்கிறது எந்த சூழ்நிலையிலும் வாடாத அவர் முகத்துப் புன்னகையைத்தான்,. அந்த விலைமதிப்பில்லாத புன்னகைக்கு முன்னாடி தங்க நகை எதுவும் எடுபடாதுன்னுதான் நாங்க அவருக்கு இதுவரை தங்கத்தில் எதுவும் வாங்கித்தரலை. அப்படி வாங்கித் தந்து நாங்க எப்பவும் தாத்தாவின் மதிப்பை குறைக்கவும் நினைக்கல. அதனால இப்போ பத்ரிதாத்தா தங்க செயினை உங்ககிட்டயே திருப்பிக்கொடுக்கிறார்” என்று சொல்லி செயினைக் கழற்றிவிட்டான்.

மறுபடி கூட்டம் கைதட்டியது.

எனக்குத்தான் யாரோ தலையில் தட்டிய மாதிரி இருந்தது.

+***********************************************************************************
.

27 comments:

  1. தலைப்பு மிகப் பொருத்தம்..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. குழந்தைகள் நம்மைக் கவனிக்கிறார்கள் என்பது சத்தியமான உண்மை ஷைலூ!

    கதை அசத்தல்!!!!!! இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  3. புன்னகையே பொன்னகையை விட உயர்ந்தது சிறந்தது என அனைவர் தலையையும் தட்டிச் சொல்லும் நல்ல கதை. வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஷைலஜா!

    ReplyDelete
  4. தந்தைக்குப் பாடம் சொன்ன சுவாமிநாதன்! குழந்தைகள் எப்போதுமே பொக்கிஷம்தான். நெகிழச் செய்து விட்டீர்கள் அக்கா... ஹேட்ஸ் ஆஃப்!

    ReplyDelete
  5. நல்ல கதை.

    ஹ்ம்ம்... அன்பிற்கும், அரவணைபிற்கும், புன்னகைக்கும் -- தங்கம், வைரம், வைடூரியம் ஈடாகுமோ ?

    ReplyDelete
  6. அருமையான கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. கதை மனசை ரொம்பவே தொட்டுடுச்சு..

    பெரியவர்களுக்குள் இருக்கும் குழந்தை மனசு ரசிக்க வெச்சது :-)

    ReplyDelete
  8. அழகான பின்னூட்டம் அளித்து ஆழ்ந்து வாசித்து தங்கள் கருத்தினை பகிர்ந்துகொண்ட துளசிமேடம் ராமல்ஷ்மி மாதவன் கணேஷ்
    சே குமார் அமைதிச்சாரல் விச்சு ...உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.

    ReplyDelete
  9. பெரியவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்து விட்டது, பேரக் குழந்தை மூலம்.

    அற்புதமான கதை.

    ReplyDelete
  10. //குழந்தைகளை நாம் தான் கவனித்து வளர்ப்பதாக பெருமைப்பட்டுக்கொள்கிறோம் ஆனால் குழந்தைகள் தான் நம்மை நன்கு கவனிக்கின்றன!அதனால் தான் நம்மை பிரதிபலிக்கின்றன.//

    வைர வரிகள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. //ரசிகன் said...
    பெரியவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்து விட்டது, பேரக் குழந்தை மூலம்.

    அற்புதமான கதை.

    4:57 PM


    ரசிகன் said...
    //குழந்தைகளை நாம் தான் கவனித்து வளர்ப்பதாக பெருமைப்பட்டுக்கொள்கிறோம் ஆனால் குழந்தைகள் தான் நம்மை நன்கு கவனிக்கின்றன!அதனால் தான் நம்மை பிரதிபலிக்கின்றன.//

    வைர வரிகள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    4:59 PM

    <<<<<>>>

    அழகான அருமையான உங்க கருத்துகளுக்கு மிக்க நன்றி ரசிகன்

    ReplyDelete
  12. ////சின்ன பேத்தி ரம்யாதான் பாட்டிஜானகியாம்! மடிசார் புடவையைக் கட்டிக்கொண்டு நெற்றியில் பெரியகுங்குமப்பொட்டும் கொண்டையில் பூவும் சுற்றிக்கொண்டும் வந்துவிட்டாள்.

    சின்னப்பேரன் ராஜேஷ் , வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளியாம். அவனிடம் நானும் ஜானகியும் எப்படிப்பேசி உபசரித்து அனுப்புகிறோம் என்பதாக நடித்துக்காட்டினார்கள்.////


    இது...இதுதான்...
    நாம் நம் குழந்தைகளுக்கு மறைமுகமாக சொல்லிக்கொடுக்கும்
    பண்பாடு. நாம் என்ன செய்கிறோமோ அதை உன்னிப்பாக பார்த்து
    அதையே நடித்தும் காட்டுவார்கள்....

    அழகாக சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி...

    ReplyDelete
  13. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. =5:31 PM


    மகேந்திரன் said...
    வெற்றி பெற வாழ்த்துக்கள்'சின்னப்பேரன் ராஜேஷ் , வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளியாம். அவனிடம் நானும் ஜானகியும் எப்படிப்பேசி உபசரித்து அனுப்புகிறோம் என்பதாக நடித்துக்காட்டினார்கள்.////


    இது...இதுதான்...
    நாம் நம் குழந்தைகளுக்கு மறைமுகமாக சொல்லிக்கொடுக்கும்
    பண்பாடு. நாம் என்ன செய்கிறோமோ அதை உன்னிப்பாக பார்த்து
    அதையே நடித்தும் காட்டுவார்கள்....

    அழகாக சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி...

    <<<<>.வாங்க மகேந்திரன் ஆமாம் குழந்தைகளுக்கு நாம்தானே ரோல்மாடல்? அதை சொல்ல செய்த முயற்சியாக இந்தக்கதை.நன்றி தங்களின் மேலான கருத்துக்கு

    5:31 PM

    ReplyDelete
  15. கதை என்று சொல்ல முடியாதபடி அப்படியே உணர்வுபூர்வமாய் சித்தரிப்பு.
    இயல்பாய் வரும் ஏக்கமும் பின் குழந்தைகள் பார்வையில் தமது பிம்பம் பதிவான் விதம் அறிந்து உள்ளே கிடைத்த உலுக்குதலும் கதையின் ஜீவன். வாழ்த்துகள்..

    ReplyDelete
  16. அழகான எண்பது வயது இளமைக் கதை.
    தாத்தாவுக்கு அந்தச் சங்கிலியைப் போட்டிருக்கலாம் ஷைல்ஸ்.

    பாவம்:)))
    மற்றபடி கதைக்களனும் விவரிப்பும் நேரில பாக்கற மாதிரி இருந்தது. வெற்றிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. //ரிஷபன் said...
    கதை என்று சொல்ல முடியாதபடி அப்படியே உணர்வுபூர்வமாய் சித்தரிப்பு.
    இயல்பாய் வரும் ஏக்கமும் பின் குழந்தைகள் பார்வையில் தமது பிம்பம் பதிவான் விதம் அறிந்து உள்ளே கிடைத்த உலுக்குதலும் கதையின் ஜீவன். வாழ்த்துகள்..

    6:28 PM

    //
    <<<<<<<<<<<<<<<ரிஷபன் வாங்க..கருத்துக்கு ரொம்ப நன்றி ஒரு எழுத்தாளரின் பாராட்டுன்னா இன்னமும் மகிழ்ச்சிதான்

    ReplyDelete
  18. அருமையான கதை .. நல்ல முடிவு

    ReplyDelete
  19. //வல்லிசிம்ஹன் said...
    அழகான எண்பது வயது இளமைக் கதை.
    தாத்தாவுக்கு அந்தச் சங்கிலியைப் போட்டிருக்கலாம் ஷைல்ஸ்.

    பாவம்:)))
    <<<>>>கதைனனா கூட அதுல கருணை காட்டும்வல்லிமாக்குத்தான் எவ்வளோ இரக்கமனசு!


    ///மற்றபடி கதைக்களனும் விவரிப்பும் நேரில பாக்கற மாதிரி இருந்தது. வெற்றிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்//.

    நன்றி வல்லிமா உங்க வாழ்த்து என்றைக்கும் இனிக்கும் எனக்கு.

    6:32 PM

    //////

    ReplyDelete
  20. என் ராஜபாட்டை"- ராஜா said...
    அருமையான கதை .. நல்ல முடிவு

    7:29 PM

    நன்றிங்க வரேன் உங்கவலைப்பூல விஜய் பார்க்க

    ReplyDelete
  21. /////பெரிய குடும்பத்தின் மூத்தமகனாய்ப் பிறந்த ஆண்களுக்கு இது ஒரு சாபம்தான் அதுவும் ஒரு மத்திய தரக்குடும்பத்தில் குடும்பத்தலைவர் சீக்கிரமே இறந்து பொறுப்பெல்லாம் சுமக்கும் மூத்தபிள்ளையாய் பிறந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.////

    சாபம்!?!? சரி, இப்படியும் கொள்ளலாம்.. சாபமாகத் தோன்றினாலும், பிறருக்காக தனது வாழ்வின் ஆசைகளை செலவளித்து.... ஆத்ம திருப்திப் பெற ஒரு வரம் என்றும் கொள்ளலாம். காரியத்தில் இருக்கும் போது கடினமாக இருந்தாலும்... அதனால் கிடைத்த அன்பே பெருமிதமாகும்....அதையே தாங்களும் கதையின் முடிவில் கூறியும் உள்ளீர்கள்!.. அப்பேர்ப் பட்ட நற்காரியத்தால் விளைந்த அன்பால்... அண்ணனைப் போலவே நடித்துக் காட்டிய அண்ணனின் பேரனுக்கு அத்தைப் பாட்டியின் அன்புப் பரிசு!! அது அண்ணன் மீது கொண்ட மாசற்ற அதீதப் பாசம் அல்லாமல் வேறு யாது!.

    விதி வசத்தால், இளமையில் தொலைத்த ஆசையை அந்தி காலத்தில் அனுபவிக்க எண்ணி காரியத்தில் இறங்கினாலும்... அவரின் அந்த எளிமை அவருக்கு விதித்தது என்றெண்ணி னாளும்!?... அது கள்ளம் கபடம் இல்லாத அந்த குழந்தைகளின் பார்வையில் எப்படி பிரதிபலித்து இருக்கிறது... பெரியோர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நல்லதை தவிர வேறு செய்தறியார்! அதனாலே இவரும் செயற்கரிய அல்ல.. செய்தற்குரிய செயல்களை செய்ததால்! பெரியோரோடு வைக்கப் பட்டுள்ளார்.

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தேவர்களோடு (தேவர்களாய் பூமியில் வளம் வந்தவர்களோடு) வைக்கப்படுவார்....
    வைக்கப் பட்டும் உள்ளார் பத்ரி தாத்தா! அவர் கடமையை செய்ததாகத் தான் நினைத்திருக்கிறார்... ஆனால் அவருக்கு கிடைத்த அங்கீகாரம் அதுவும் ஒரு குழந்தையிடம் இருந்து! இப்போது இது சாபமா? வரமா! வரமே!!!!!...

    வைரம் ஜொலிப்பதை அதுவே பார்க்க முடிவதில்லை போலும்... அதுவும் சாதாரண வைரம் அல்ல பட்டைத் தீட்டப் பட்டது அல்லவா!.

    இதுவும், நல்லக் கதை...

    பாராட்டுக்கள் சகோதிரி.

    ReplyDelete
  22. //தமிழ் விரும்பி said...
    சாபமாகத் தோன்றினாலும், பிறருக்காக தனது வாழ்வின் ஆசைகளை செலவளித்து.... ஆத்ம திருப்திப் பெற ஒரு வரம் என்றும் கொள்ளலாம். காரியத்தில் இருக்கும் போது கடினமாக இருந்தாலும்... அதனால் கிடைத்த அன்பே பெருமிதமாகும்....அதையே தாங்களும் கதையின் முடிவில் கூறியும் உள்ளீர்கள்!.. அப்பேர்ப் பட்ட நற்காரியத்தால் விளைந்த அன்பால்... அண்ணனைப் போலவே நடித்துக் காட்டிய அண்ணனின் பேரனுக்கு அத்தைப் பாட்டியின் அன்புப் பரிசு!! அது அண்ணன் மீது கொண்ட மாசற்ற அதீதப் பாசம் அல்லாமல் வேறு யாது!.
    வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தேவர்களோடு (தேவர்களாய் பூமியில் வளம் வந்தவர்களோடு) வைக்கப்படுவார்....
    வைக்கப் பட்டும் உள்ளார் பத்ரி தாத்தா! அவர் கடமையை செய்ததாகத் தான் நினைத்திருக்கிறார்... ஆனால் அவருக்கு கிடைத்த அங்கீகாரம் அதுவும் ஒரு குழந்தையிடம் இருந்து! இப்போது இது சாபமா? வரமா! வரமே!!!!!...

    வைரம் ஜொலிப்பதை அதுவே பார்க்க முடிவதில்லை போலும்... அதுவும் சாதாரண வைரம் அல்ல பட்டைத் தீட்டப் பட்டது அல்லவா!.

    இதுவும், நல்லக் கதை...

    பாராட்டுக்கள் சகோதிரி//


    <<<>>.ஆஹா தமிழ்விரும்பி தாங்கள் எத்துணை நயமாக கதையினை விமர்சிக்கிறீர்கள். இதற்கான உங்களின் சிரத்தையும் பொறுமையும் படைப்பாளியை பாராட்டும் மனமும் பெரிதும் நினைத்து மகிழவேண்டியவைகள். என்ன சொல்வது நன்றி என்னும் சிறு சொல்லைத்தவிர?

    ReplyDelete
  23. அப்போது சதீஷ்,” அத்தைப்பாட்டி! பரிசுக்கு தாங்க்ஸ்..நாங்கள்ளாம் காந்திதாத்தாவைப் பார்த்ததில்ல.. ஆனா நேர்மை வாய்மை எளிமைக்கு இலக்கணமா எங்க பத்ரி தாத்தாவைத்தான் பார்க்கிறோம். பத்ரிதாத்தா எளிமையானவர். கதர்வேஷ்டி கதர் சட்டை தவிர அவர் உடம்பில் நாங்க எப்போதும் பார்க்கிறது எந்த சூழ்நிலையிலும் வாடாத அவர் முகத்துப் புன்னகையைத்தான்,. அந்த விலைமதிப்பில்லாத புன்னகைக்கு முன்னாடி தங்க நகை எதுவும் எடுபடாதுன்னுதான் நாங்க அவருக்கு இதுவரை தங்கத்தில் எதுவும் வாங்கித்தரலை. அப்படி வாங்கித் தந்து நாங்க எப்பவும் தாத்தாவின் மதிப்பை குறைக்கவும் நினைக்கல. அதனால இப்போ பத்ரிதாத்தா தங்க செயினை உங்ககிட்டயே திருப்பிக்கொடுக்கிறார்” என்று சொல்லி செயினைக் கழற்றிவிட்டான்.//

    தாத்தா தன் பிறந்த நாள் அன்று தான் வாங்கிய தங்க சங்கிலியை பேரனுக்கு பரிசளிப்பார் என நினைக்கிறேன்.

    தாத்தாவிற்கு பேரன் சொன்னமாதிரி புன்னகையே பொன்னகை.

    ஆனலும் தாத்தாவின் ஆசை நிறைவேறாமல் போனது வருத்தமே.

    ReplyDelete
  24. கதை அருமை. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. புன்னகையே பொன்னகையை விட உயர்ந்தது சிறந்தது என அனைவர் தலையையும் தட்டிச் சொல்லும் நல்ல கதை. வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஷைலஜா!

    ReplyDelete
  26. கூட்டம் கைதட்டியது.

    எனக்குத்தான் யாரோ தலையில் தட்டிய மாதிரி இருந்தது.


    அருமையாய் மனதில் பொதிந்த கதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  27. \\\குழந்தைகளை நாம் தான் கவனித்து வளர்ப்பதாக பெருமைப்பட்டுக்கொள்கிறோம் ஆனால் குழந்தைகள் தான் நம்மை நன்கு கவனிக்கின்றன!/////

    எனக்கும் மிகவும் பிடித்த வரிகள், கதை மிகச்சிறப்பாக வந்திருக்கிறது வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.