Social Icons

Pages

Monday, January 02, 2012

தென்றல் தந்த பரிசுக்கதை.


அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தமிழ் மாத இதழ்
தென்றல் நடத்திய சிறுகதைப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதையை இங்கே பதிவிடுகிறேன்.

தென்றல் பத்திரிகைக்கு  நன்றி. இந்தச்சுட்டியில்  கதையைப்படிக்கலாம்..குரல்பதிவில் கூட  இட்டிருக்கிறார்கள்.
http://www.tamilonline.com/thendral/morecontentnew.aspx?id=134&cid=13&aid=7635

சென்றமாதம் இப்படி விவரம்  இட்டிருந்தார்கள்.இடமின்மை காரணமாய் என் கதையை இந்த ஜனவரி இதழில் பிரசுரித்திருக்கிறார்கள்.









தென்றல் சிறுகதைப் போட்டி 2011க்கு அமெரிக்கா, இந்தியா, மலேசியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹாலந்து என்று உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளனமானவர்கள் வாழ்வின் எல்லா வண்ணக் கலவைகளையும் பிரதிபலிக்கும் சிறுகதைகளை உற்சாகத்தோடு அனுப்பியிருந்தார்கள். வந்தவை மொத்தம் 79. அறிவிப்பில் கூறியிருந்தபடி தமிழ்நாட்டிலிருந்து வந்தவற்றை மிகுந்த வருத்தத்தோடு விலக்க வேண்டியதாயிற்று. ஆயினும் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலிருந்து சிறுகதைகள் வந்தன. சிலர் சளைக்காமல் நான்கைந்து கதைகள் கூட எழுதி அனுப்பினர்.
நிதானித்து கருத்துப்புலம், நடை நேர்த்தி, மொழிச் சிறப்பு என்ற அளவுகோல்களை வைத்து, விருப்பு வெறுப்பின்றி ஆசிரியர் குழு பரிசீலித்து பரிசுக்கான கதைகளைத் தேர்ந்தெடுத்தது.




முதல் பரிசு: உயர்ந்த மனிதன் - இரத்தினம் சூரியகுமாரன், சான் ஹோசே, கலிஃபோர்னியா.
இரண்டாம் பரிசு: செலவுக்கடை - அம்புஜவல்லி தேசிகாச்சாரி, சான் ஹோசே, கலிஃபோர்னியா.
மூன்றாம் பரிசுகள் (2): மடி நெருப்பு - ஆனந்த் ராகவ், பெங்களூரு, இந்தியா.,
மாடு இளைத்தாலும் - ஷைலஜா, பெங்களூரு, இந்தியா.

              ****,,.............................................****


மாடு இளைத்தாலும்..
***************************
முப்பாட்டன் காலத்தில் புதுப்பிச்சிக் கட்டின வீடாம் - சொல்வார்கள். கொஞ்சம் காலை வீசி நடந்தால் முழு வீட்டையும் பார்த்து முடிக்க அரைமணி ஆகும் .நிதானமாக நடந்தால் கேட்க வேண்டியதில்லை, .ஒருமணி நேரம்கூடஆகலாம், அம்மாம் பெருசு! நெல் உலர்த்த,சோளம்- கம்பு-உலர்த்த என்று நாலு முற்றம். கால்பந்து விளையாடற க்ரவுண்ட் மாதிரி ,காக்கைகுருவி எல்லாம்கொத்தணும்னு தெறந்த வெளி முற்றம்! முப்பாட்டனுக்கு கட்டிடக் கலையிலே ஆர்வம் அதிகமாஇருந்திருக்கணும். அவருக்கு எல்லாமே பெருசா இருக்கணும் (மூணு பொண்சாதிகளாம் அவருக்கு) ஒரு விசேசம் வீட்டுல சாப்பாடுன்னா , எட்டு ஊரு கூடிரும். அத்தோடவா. சாப்பிட்ட அம்புட்டு பேருக்கும் கையிலே ஒரு அணா தட்சணை வேற! அந்த காலத்து ஓரணா.இன்னித்து மதிப்புக்கு அது எத்தினி ரூவான்னு நீங்களே கணக்கு போட்டுக்குங்க..




ஆனா அதெல்லாம் அந்தக்காலத்தோட போச்சு. இப்போ இந்தக்கட்டிடத்தை மராமத்துப்பாக்கவே வக்கில்லை அதான் நெலமை.



பெருமூச்சுவிட்டபடி'அப்பனே...தண்டபாணி' எனக்கூவினார் நாச்சிமுத்துக்கவுண்டர். பட்டாசாலைக்கு வந்து நின்றார்.



வலது பக்கம் பிரும்மாண்டமாய் , மூன்றடுக்காய் நீண்டிருக்கும் வீச்சுக்கு மன்றம்னு பேரு. அங்கேதான் கவுண்டரின் மூதாதையர்கள்- பரம்பரைப்பட்டையக்காரர்கள்- சிம்மாசன நாற்காலியில் உட்கார்ந்து நீதிபரிபாலனம் செய்வாங்களாம்! அது ஒரு காலம்!



’அப்பனே தண்டபாணீ!’



சுவரில் குலதெய்வம் தண்டபாணி காட்சி தருகிறார்!


சித்திரத்தைப்பார்த்தால் நம்மைப்பார்த்து சிரிப்பதைப்போல, நம்மோடு பேசுவது போல அப்படி ஒரு தத்ரூபம் . பல இடங்களில் வண்ணங்கள் பெயர்ந்துபோன அந்தக்காலத்து சித்திரம்.



கவுண்டர் ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக இந்த மன்றத்தில் உள்ள சாய்வு நாற்காலிக்குத்தான் வருவது வழக்கம். அந்த நாற்காலிக்கு வெள்ளியில் கால்கள்.சாய்மானங்களில் வெள்ளிப்பூண்கள். இப்போ நசுங்கி, தேய்ந்து,பல்லை இளிக்கிற வெள்ளி.



நாற்காலியில் சாய்ந்தவர் சற்றுத்தான் கண் அயர்ந்திருப்பார். ஏதோ அரவம் கேட்கவே விழிப்பு கொடுத்துவிட்டது.


அம்மணி வந்து நின்றாள். நின்ற தோரணை, நின்ற இடம் இரண்டையும் பார்த்தபோது ஏதோ பிராது கொடுக்க வந்த மாதிரி இருந்தது. அங்ஙன நின்றுதான் பட்டையக்காரர் கிட்ட அந்தக்காலத்திலே பிராது, விண்ணப்பம் எல்லாம் கொடுப்பாங்களாம்.


"என்னா?" கவுண்டரின் குரல் சொடுக்கிற்று சாட்டை போல.


உதடுகள் அசைந்தபோது மேல் உதடுகளில் ஆரோகணித்திருந்த கொடுவாள்மீசை பக்கவாத்தியம் போல உடன் அசைந்தது.

"நம்ம மாரிமுத்து விஷயமாத்தான்.." அம்மணியின் குரல் மெல்ல தொண்டைகுழிக்குள்ளிருந்து வெளிவர முயற்சித்தது.

" ஏன் அவனுக்கு என்னா?"

"தெரியாத மாதிரி என்னயக் கேட்டா....? " இப்போது அம்மணியின் குரல் தீர்க்கமாகவே வந்து வெளியே விழுந்தது.

இச்சமயம் சொல்லிவைத்தாற்போல மாரிமுத்து அங்கே வந்து கவுண்டச்சியின் பக்கம் நின்று கொண்டுஅப்பனைப்பார்த்தான்.


அம்மாளும் பையனும் நிக்கிற விதத்திலேயே கவுண்டருக்கு புரிந்துபோயிற்று. ஒத்திகை பாத்துட்டுத்தான் ஆயியும் மகனும் வந்திருக்காங்கன்னு..


"மாரிமுத்து பி.ஏ. பாஸ்பண்ணி வருசம் மூணாயிட்டுது... ஊரு முச்சூடும் கம்பூட்டர் படிச்சவங்களுக்குத்தான் ஜோலின்னு போயிட்டாங்க நம்ம பையன் தான் பாவம் சொம்மாவே கெடக்குறாரு..”
கவுண்டர் தலையை அசைத்து ஆமோதித்தார், அனுசரணையுடன்.


"இன்னமும் ஒருவேலையும் கெடச்சபாடில்ல...நீங்க ஒருவார்த்த சொல்லப்போடப்புடாதா?'


"யார்ரா இவ? நான் சொன்னா எவண்டி வேலை கொடுக்கக் காத்திருக்கான்? "


"நீங்களே நேராச் சொல்லணுமா? உள்ளூருலயே பேங்கிலே வேலைக்கு ஆளு எடுக்கிறாங்களாம். அந்த பாங்குக்கு நம்ம சோலமுத்துதான் சேர்மேன் ..நீங்க அதுகிட்ட ஒரு வார்த்த சொன்னா போதும்.."

அட...விவரமாத்தான் ஒத்திக பாத்திருக்காங்க..எதனை எதனாலே எப்படி முடிக்கலாம்னு திருவள்ளுவர் சொல்லி இருக்காரில்ல, அந்தக்கதையா....


சோலமுத்து அவரால் ஆளானவன் தான். அனாதையாக்கிடந்தவனை அவர் தான் படிக்க வச்சி, துணிமணி வாங்கிக் கொடுத்து, செலவுக்கு காசு கொடுத்து சொந்தக் காலை ஊனி, முன்னேறுவதுக்கு பண உதவி, எல்லாம் செய்து உதவினார். இப்போ நல்ல நெலமைக்கு வந்துட்டான்.


அந்த பாங்கும் பேர் சொல்லும்படியா பத்துவருஷத்திலே நூறுகிளைவிட்டு பெரிய ஆலமரமா வளர்ந்திருச்சி.. சோலைதான் அந்த பாங்க் வளர்ச்சிக்கும் காரணம் என்பது அவருக்குத் தெரியும்.


"என்ன யோசிக்கிறீங்க?' அம்மணி உசுப்பினாள்.

"அப்பா, நீங்க ஒருவார்த்தை சொன்னா போதும்ப்பா..எனக்கும் வயசு ஏறிக்கிட்டே போவுதுப்பா" என்றான்.மாரிமுத்து. அருமை மகன்!மூணு பெண்குழந்தைகளுக்குப் பின்னே காரமடை ரங்கநாதருக்கு வேண்டிக்கொண்டு பின்பு பிறந்தவன். தாத்தா பெயரை வைத்துக்கொண்டிருந்தாலும் அரங்கராசன் என்ற இன்னொரு பெயரும் அவனுக்கு உண்டு. பெண்களைக் கரையேற்றியதில் மகனுக்கு இந்தபழையநாள்வீட்டைத்தவிர கொடுப்பதற்கு வேறு எந்த சொத்தும் இல்லாத தன் மீது கவுண்டருக்கு சற்றே ஆயாசமாய் வந்தது.


கவுண்டர் இருவரையும் பார்த்தார். அவர்கள் சொல்வது நியாயம். சோலமுத்துவால் இது ஆகக்கூடிய்துதான். ஆனா இதுவரை அவருடைய ஆயுசில் , யாரிடமும் ஒரு சிபாரிசுக்குப் போய் நின்றதில்லையே!அவரை நாடித்தான் எல்லோரும் சிபாரிசுக்கு வருவார்கள்.

இப்போ ஓடம் வண்டியிலே ஏறுது.


"யோசிக்காதீங்கப்பா.."

"சரிப்பா.." கவுண்டர்பெருமூச்சு விட்டார். "நாளைக்கே சோலமுத்துவப் பாத்துடுவோம்": என்றார்.


ஆயிக்கும் மகனுக்கும் வேலையே கிடைத்துவிட்ட சந்தோஷம். அங்கிருந்து அகன்றார்கள்.



****************************************************



சோலைமுத்துவைப்பார்க்க கவுண்டர் சென்ற பொழுது சோலைமுத்துவே மனைவி பர்வதம் சகிதம் தனது பங்களாவின் முன் பரப்பில் தெரிந்த புல்வெளியில் நின்று கொண்டிருந்தான் .

அவரைக்கண்டதும் அவனுக்கு வியப்பு தாளவில்லை.

"ஐயா! வாங்கய்யா! ஒரு வார்த்தை சொல்லி அனுப்பி இருந்தீங்கன்னா நானே வந்திருப்பேனே என் கண்களையே என்னால நம்ப முடியல்லியே.. நீங்கதானா வந்திருக்கிறது?... பர்வதம் வா.. அய்யாவை நமஸ்காரம் செஞ்சி ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்.."

வாசல் என்றும் பாராமல் கணவனும் மனைவியும் கவுண்டரின் காலில் விழுந்துவிட்டார்கள்.


அதிலும், பர்வதம் பெயருக்கு ஏற்ப பெருத்த சரீரத்துடன் தரையில் உருள்கிறமாதிரியே சாய்ந்துவிட்டாள்.

கவுண்டருக்கு கணம் உடம்பு ஆடிவிட்டது. எத்தனை மரியாதை, எத்தனை பக்தி இவனுக்கு!

"வாங்கய்யா! என்ன இருந்தாலும் நம்ம வீட்டு பட்டாசாலைக்கும் மன்றத்துக்கும், இந்தவீடெல்லாம் ஈடாகாது " என்றான்,சோலைமுத்து பவ்யமாக.

அவர் கையெடுத்து அவனை அமர்த்தியவாறு ஹாலை ஒரு நோட்டம் விட்டார், பின் அமர்ந்தார். சோலைமுத்து நின்றுகொண்டுதான் இருந்தான் . அவருக்கு எதிராக எந்தக்காலத்தில் அவன் உட்கார்ந்திருக்கிறான்?


மாரிமுத்து நிற்பதை கவனித்த சோலைமுத்து, "அடேடே! சின்னப்பட்டயக்காரர் நிக்கலாங்களா? உக்காருங்க தம்பி!" என்று உபசரித்தான்.

பர்வதம் தட்டு நிறைய இனிப்பு வகைகளையும் காரவகைகளையும் பழவகைகளையும் கொண்டுவந்து பரப்பினாள்.


சோலைமுத்து நின்ற தோரணை, அவனைப்பார்த்தால், ஏதோ விண்ணப்பம் கொடுக்க வந்தவனைப்போல கவுண்டருக்குத்தோன்றிற்று.


பரம்பரைப்பட்டயாக்காரர் ரத்தமாச்சே, விண்ணப்பம் வாங்கின வம்சமாச்சே,,,தவிர யாரிடமும் விண்ணப்பம் கொடுத்த வர்க்கம் அல்லவே!

"ஐயா! "

"என்ன சோலமுத்து?"

சோலைமுத்து தலையைச் சொறிந்தான்"நீங்க ஒரு வார்த்தை சொல்லிப்போடணும் அப்புறமா எல்லாம் நடந்துடும்யா.."

"என்னப்பா சொல்ற சோலே?"

"இந்த தபா எம் எல் ஏ எலெக்க்ஷன்ல போட்டி இடலாம்னு இருக்கேன் ஆதரவும் நிறைய இருக்குது...நம்ம பூங்காவனம் செட்டியார்தான் தேர்வுக் கமிட்டில முக்கியமானவரா இருக்காரு..."

"அட நம்ம ஊத்துக்குளி பூங்காவனமா?"

" ஆமாய்யா..உங்க சிஷ்யப் பிள்ளேன்னு தன்னை அவரே அடிக்கடி சொல்லிக்குவாரே , அவரேதான்"

இதைக்கேட்டதும் கவுண்டருக்கு சிரிக்க வேண்டும் போல் இருந்தது.


ஆனால் மாரிமுத்துவுக்கோ தன் கனவுகள் எல்லாம் பொசுங்கிப்போனாற்போல் பெருத்த ஏமாற்றமே ஏற்பட்டுவிட்டது."இதென்னடா வம்பா போச்சு? நாம சிபாரிசுக்கு இவரு கிட்ட வந்தா இவரு நம்ம அப்பாகிட்ட சிபாரிசுக்கு கையை ஏந்தறாரே? நல்ல நாளிலேயே நாளிப்பாலு.,இப்போ கேக்கணுமா? அட அப்படியே நம்ம சிபாரிசை எடுத்து வச்சாலும் ஒரு சிபாரிசுக்கு இன்னொரு சிபாரிசை வெலை பேசற மாதிரி அல்லவா ஆயிப்போயிரும்?" மனசுக்குள் முணுமுணுத்தபடி கைகளைப் பிசைந்தான்.


கவுண்டர் எழுந்து நின்று சோலமுத்துவின் தோள்களைத்தட்டிக்கொடுத்தார்.

"கவலைப்படாதே..உன்னை சிபாரிசு செய்யறது எனக்குப் பெருமைதான் .பூங்காவனத்துக்கும் தராதரம் எல்லாம் தெரியும் உண்மையாவும் கட்சிக்கு விஸ்வாசமாயும் மக்களுக்கு உழைக்க உன்னைவிட்டா வேற யாரப்பா இருக்காங்க..? பார்க்கபோனா இது சிபாரிசே இல்லப்பா. சரி நான் கெளம்புறேன்" என்றார் கவுண்டர் இருக்கையை விட்டு எழுந்தபடியே..

சோலைமுத்துவும் பர்வதமும் வாசலில் சேவித்தது போதாது என்று ஹாலிலும் ஒருமுறை வணங்கி எழுந்தார்கள்.

***** ***********************************************

ஆனால் இவ்வளவு ஆனபிறகு எதிர்பாராதது நடந்தது.

ஆம்! மாரிமுத்துக்கு வங்கியிலிருந்து வேலைக்கு உத்தரவு வந்தே விட்டது.

'அப்பனே தண்டபாணி!'

கவுண்டர் பெருமூச்சுவிட்டார்.

'"கடைசிவரைலே நான் யார்கிட்டவும் சிபாரிசுக்கு போககூடாதுங்கறது அப்பன் தண்டபாணியின் சித்தம்போலிருக்கு! எப்படியோ வேலைகிடைச்சிடிச்சி இல்ல! நல்லபடியா ஒளுங்கா வேலையக் கத்துக்கிட்டு நல்லபேர் வாங்கோணும் " என்றார் மகனிடம்.



***********************************************

“நல்லவேள பருவதம்.. கவுண்டரய்யாக்குத் தெரியாமலேயே நான் என் நன்றிக்கடனை அடைச்சிட்டேன்.. அவரு அன்னிக்கு வூடு வர்ரப்போ வாசல்ல மகன் மாரிமுத்துகூட பேசிட்டு வந்ததை நான் கேட்டுக்கிட்டது அவருக்குத் தெரியவாய்ப்பு இல்ல. அதனாலத்தான் அவரு அன்னிக்கு வாயத்துறக்கிறதுக்கு முன்னாடி நான் சிபாரிசுக்கு என் வாயைத்துறந்து கேட்டுகிட்டேன்.” என்றான் நெகிழ்ந்தகுரலில் சோலமுத்து.


“இல்லீங்களா பின்ன, மாடு எளைச்சாலும் கொம்பு தேயுலாமுங்களா? நாமதான் தேய விட்டுடுவோமாங்க? நீங்க செஞ்சிப்போட்டது சர்தாங்க மாமா ” என்றாள் பர்வதம் . *********************** *********************** *******













--

23 comments:

  1. எல்லாத் திரட்டிகளிலும் இணைத்து என் வாக்களிச்சுட்டேன்க்கா. பொறுமையாப் படிச்சுட்டு வந்து பேசறேன்... அதுக்கு முன்னால பிடியுங்க என் பொக்கேவை.

    ReplyDelete
  2. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே! சோலமுத்து முந்திக் கொண்டு சிபாரிசு அவரிடம் கேட்காவிட்டாலும்கூட அவருக்கு கேட்க வாய் வந்திருக்காது. அவன் புரிந்து கொண்டு நடந்து கொண்டது மிக அருமை. பரிசுக்கு மிகமிக நியாயமான தகுதியுள்ள கதைதான்க்கா. (நான்லாம் எப்ப இப்படி எழுதுவேனோ? Miles to GO!) இதயம் நிறைந்த என் வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன்.

    ReplyDelete
  3. ரொம்ப ரொம்ப பிடித்தது. very deserving story. பாராட்டுக்கள். நடை அருமை. இவ்வளவு சீரியஸ் கதையிலும் பர்வதம் உருண்டு உங்கள் நகைச்சுவையை நிரூபித்துவிட்டார்கள்.

    அருமை..அருமை...ரொம்ப அருமை. நிறைய பரிசும் பாராட்டும் இந்த வருடமும் தொடர பிரார்த்தனைகள்

    ReplyDelete
  4. அருமை.. அருமை.. கதை ஜூப்பரா இருக்கு. பரிசுக்கு வாழ்த்துகள்.

    மாடு எளைச்சாலும் கொம்பு தேயாதுன்னு நிரூபிச்சிட்டாரு பெரிய பட்டயக்காரர்.

    ReplyDelete
  5. ஆனா அதெல்லாம் அந்தக்காலத்தோட போச்சு. இப்போ இந்தக்கட்டிடத்தை மராமத்துப்பாக்கவே வக்கில்லை அதான் நெலமை.

    நிறைய இடங்களில் இதுதான் நிலைமை..

    அருமையான கவனிப்பு..

    சிறப்பான சிறுகதை..
    பரிசுபெற்றமைக்குப் பாராட்டுக்கள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  6. மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காதுதான்,,

    சங்கு சுட்டாலும் வெண்மை தருமே!

    ReplyDelete
  7. ஆஹா.. நம்ம ஸ்ரீரங்கத்துப் பொண்ணு பரிசு வாங்கியாச்சா.. பேஷ்.. பேஷ்..
    புத்தாண்டு மிக இனிமையாய் ஆரம்பித்து விட்டது.
    தொடரட்டும் எழுத்து வெற்றிகள்.

    ReplyDelete
  8. நீங்க தானா?! கதையைப் படிச்சேன். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. இந்தக் கதைக்குப் பரிசு தராட்டி எப்பிடி.வாழ்த்துகள் சகோதரி !

    ReplyDelete
  10. புவனம் மாறிடினும் என் நிலை மாறாதென
    உரைத்து நிற்கும் கதை சகோதரி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வாழ்ந்து கெட்டவர் என்ற வசைச்சொல் வராமல் காப்பாற்றிவிட்டார் அந்த விசுவாசி சோலமுத்து. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. மனம் தொட்ட கதை. பரிசு பெற்றதற்குப் பாராட்டுகள் மேடம்.

    ReplyDelete
  12. ////முப்பாட்டனுக்கு கட்டிடக் கலையிலே ஆர்வம் அதிகமாஇருந்திருக்கணும். அவருக்கு எல்லாமே பெருசா இருக்கணும் (மூணு பொண்சாதிகளாம் அவருக்கு)////
    ஹா..ஹா..ஹா..

    ////உதடுகள் அசைந்தபோது மேல் உதடுகளில் ஆரோகணித்திருந்த கொடுவாள்மீசை பக்கவாத்தியம் போல உடன் அசைந்தது.///
    இசையறிவு இழையோடுகிறது... இதைதான் புத்திய மாத்தமுடியாது என்பார்கள்! இல்லையா பின்ன ரத்தத்திலக் கலந்த பின்னே!..:):)

    வாழ்ந்தவர்களின் தர்ம சங்கடமான வாழ்வும்... இருந்தும் உதவி என்று கேட்கப் போகும் போதும் கூட அவர்களின் கொடுக்கும் குணம் மேலிட்டே இருப்பதும் அருமை...

    கதையின் முடிவு முத்தாய்ப்பு!...

    ////அதனாலத்தான் அவரு அன்னிக்கு வாயத்துறக்கிறதுக்கு முன்னாடி நான் சிபாரிசுக்கு என் வாயைத்துறந்து கேட்டுகிட்டேன்.”////

    எத்தனை உயரிய மனம் தான் இந்த சோலை முத்துக்கு.... அதனால் தான் இத்தனை உயரமாக வாழ்கிறார் போலும்...

    அருமையானக் கதை... பாராட்டுக்கள சகோதிரி..

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் மேடம் பரிசுக்கு மிக மிக தகுதியான கதை

    ReplyDelete
  14. மனமார்ந்த வாழ்த்துகள் ஷைலஜா. தென்றல் தளத்திலேயே வாசித்து விட்டிருந்தேன். வட்டார வழக்கை மிகவும் ரசித்தேன். அருமையான கதை.

    ReplyDelete
  15. Anonymous1:23 PM

    சோலைத் தம்பதியரின் நன்றி விசுவாசமும் , ஈர மனமும் நெஞ்சைக்
    கவருகிறது. கௌண்டரின் கௌரவமும் , தெய்வ நம்பிக்கையும்
    காப்பற்றப்பட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம் ப்பா.
    நிறைவான பரிசுக்குகந்த கதை.

    ReplyDelete
  16. கருத்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கண்பனிக்கும் நன்றி..இதற்காக நேரம் செலவ்ழித்து சிரமம்பாராது நாலுவரி எழுதிப்போவதின் அருமையை உணர்வேன். எழுதுபவர்களுக்கு இதைவிட பாராட்டுப்பத்திரம் வேறென்ன வேண்டும்? வார்த்தைச்சிறகுகள் மனதை வருடுவதைவிட வேறென்ன சுகம் உலகிலே?


    யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
    யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
    யாவர்க்கும் ஆம் உண்ணும்போதொரு கைப்பிடி
    யாவர்க்கும் ஆம் பிறருக்கு இன்னுரை தானே!
    திருமூலர்.

    (வாயுறை..வாயருகு(புல்)

    ReplyDelete
  17. அருமை.. பரிசுக்கு முற்றிலும் தகுந்த கதை..

    ReplyDelete
  18. bandhu said...
    அருமை.. பரிசுக்கு முற்றிலும் தகுந்த கதை
    >>.நன்றி திரு பந்து!

    ReplyDelete
  19. முதலில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    முதல் பத்தியில் அந்த வீடு மற்றும் குடும்பத்தை பற்றிய வர்ணனை அருமை.

    சிபாரிசுக்காக யாரிடமும் போகாமல் கவுண்டர் ஐயாவை காப்பாற்றிய சோலைமுத்துவின் பாத்திரப்படைப்பு சிறப்பு.

    அற்புதமான கதை.

    ReplyDelete
  20. RAMVI said...
    முதலில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    முதல் பத்தியில் அந்த வீடு மற்றும் குடும்பத்தை பற்றிய வர்ணனை அருமை.

    சிபாரிசுக்காக யாரிடமும் போகாமல் கவுண்டர் ஐயாவை காப்பாற்றிய சோலைமுத்துவின் பாத்திரப்படைப்பு சிறப்பு.

    அற்புதமான
    கதை

    <<<<மிகக் நன்றி ராம்வி ஒன்றிப்படித்து அழகாய் பின்னூட்டம் கொடுத்திருக்கிறீர்கள்

    ReplyDelete
  21. கதை மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள்.
    பரிசு பெற்றதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்,
    வாழ்த்துகளும்.

    அன்புடன்
    வை.கோபாலகிருஷ்ணன்.
    gopu1949.blogspot.com

    ReplyDelete
  22. கோபாலகிருஷ்ணன் said...
    கதை மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள்.
    பரிசு பெற்றதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்,
    வாழ்த்துகளும்.

    அன்புடன்
    வை.கோபாலகிருஷ்ணன்.
    gopu1949.blogspot
    <<<<<<thankyou திரு வை கோ!

    ReplyDelete
  23. முதலில், பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள். முதல் பரிசு பெறவும் வாழ்த்துகள்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.