Social Icons

Pages

Sunday, January 08, 2012

தேனே அமுதே கரும்பின் தெளிவே!










’அன்பும் சிவமும் வேறென்பார் அறிவிலார்

அன்பேசிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே’

என்பார் திருமூலர்.

அன்பான அண்ணல் இனியனும் கூட.எப்படி என்றால் நமக்கு பிறப்பை வாய்ப்பாகத்தருகிறான், முக்தியை வெகுமதியாகத்தருகிறான் இடைப்படும் தடைகளை களைந்தருளுகிறான். சிவம் என்றாலே சுபம். சிவம் என்றாலே மங்கலம். சிவம் என்றாலே பரிவு.’பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து..என்கிறார் சிவனடியார்.. அந்த  மகா பரிவினில் தான் உரிமையாய் யானுனை சிக்கெனப்பிடித்தேன் எங்கெழுந்தருள்வது இனியே என்று முடிக்கிறார், இறைவனிடம் நெருக்கம் வேண்டும். அப்போதுதான் உரிமையாய் இழையமுடியும்.

 வாழ்வு என்பதுநிலையற்றதுஎன்பதைப்புரிந்துகொண்டுவிட்டால் நம் மனக்கதவு மெல்லத்திறந்துவிடுகிறது. அங்கே  இறைவன் நம்மை அழைப்பதும் கேட்கிறது. வாழ்வைத்தேடி நெடிய பயணம் போய்விட்டு ஏமாந்து மீண்டு உணர்ந்துகொள்ளும்போதுதான் சித்ததில் சிவன் இருப்பது தெரிகிறது.அவன் எப்போதோ நம்மை அடைந்துவிட்டான் நாம்தான் அவனைத்தேடி எங்கெங்கோ அலைந்து விட்டு இறுதியில் உணர்கிறோம்.

அவனைப்பெறுவது ஒன்றும் கடினமில்லை கடுந்தவம் தேவை இல்லை விரதமில்லை வேண்டுதல்கள் இல்லை.

யானே பொய் என் நெஞ்சும் பொய்
 என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப்பெறலாமே

 மணிவாசகப்பெருமான் சொல்வது இதுதான். அற்பமாகிய நான் பொய் என் மனம் பொய் அன்பும் பொய் ஆனால் இறைவா   என் வினையும் பொய் இல்லையொ மெய்யோ உன்னை மறைப்பதால்தானே? உன்னை மறைப்பதை பொய் என்று என்னால் ஏற்க இயலவில்லை அதனால் அழுகின்றேன்.

‘தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
 உன்னை வந்து உறுமாறே

(உறுமாறே=பெறும் வழி)

  என்று முடிக்கிறார்.


வேறேதும் தெரியவில்லை உன்னைப்பெறுவதற்காக அழுகிறேன் ஆனால் பாருமய்யா அந்த அழுகை இனித்துவிட்டது உன் பொருட்டு அழுவதால் அது இனிக்கிறது அதனால் நீ தேனாக அமுதாக கரும்புச்சாற்றின் தெளிவாக தெரிகின்றாய் என்னுள் இருக்கும் நான் எனும் பொய்  இந்தக்கண்ணீரில் கரைந்து  மெய்யோடு  உன்னைவந்து சேர அருளவேண்டும் என்கிறார்.கரும்புச்சாறு அடில  கொஞ்சமேகொஞ்சம் சக்கை இருக்கும்  அதனால் தெளிவே என்கிறார் பாருங்கள் அன்புத்தெய்வத்தை!

ஆன்ம உருக்கம் இந்தப்பாடலில் நிரம்பி வழிகிறது. மனம் வெளுத்தபின் அது பிழிந்த நீர் கண்ணீராய் வெளியே
 வருகிறது.  கண்ணீரைவிட இறைக்கு நாம் செலுத்தும் காணிக்கைதான் என்ன!

உருக்கமான இந்தப்பாடலைப்போல திருவாசகத்தில் எத்தனை எத்தனை பாடல்கள்!

 சித்தவானில் சிவனொளி கண்டு தில்லையில்  அவனோடு கலந்தவர் மாணிக்கவாசகப்பிரான். பெயரையே பாருங்கள் மாணிக்க வாசகர்! நவரத்தினங்களில் உயர்ந்தது மாணிக்கம் .அது மாமணி! மாணிக்கம் உதிர்க்கும் வாசகங்கள் ஒளி நிறைந்திருப்பதில் ஐயமென்ன!

  ஆதிரை நன்னாளில்  இறைவனின் அடியாரை நினைக்கும் நம்மைச் சிவம் காக்கும். சிவமே உயிர் எனும் சிந்தை   இருக்கும்போது அந்த ஜீவனே சிவமாக தீரூம் என்பார்கள் !
 
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் பணிந்து..
 
என்ற  மனத்தை உருக்கும் சிவனடியாரின் வரிகளின் படி அவன் தாள் வணங்கிப்போற்றுவோம்!
 
ஓம் நமசிவாய!

10 comments:

  1. உருக்கமான இந்தப்பாடலைப்போல திருவாசகத்தில் எத்தனை எத்தனை பாடல்கள்!


    திருவாச்கத்திற்கு உருகார்
    ஒருவாசகத்துக்கும் உருகார்..

    உருகிப்பாடிய அற்புதங்களின் தொகுப்பு.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. தெரிந்த விஷயம் தான்.இருந்தும் அதை சொல்லும் விதத்தில் அந்த பாட்டின் அருமை மிகவும் சுவைபட புலப்படுகிறது.ஏன், நீங்கள் தினம் ஒன்றாக அல்லது முடிந்த பொழுது ஒவ்வொரு திருவாசகத்தின் பாட்டிற்கும் இது மாதிரி எழுதக்கூடாது?
    உங்கள் எழுத்து திறன் ரொம்பவும் உசத்தி.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி,
    அனைத்திலும் இணைத்து ஓட்டும் போட்டுட்டேன்.

    தோடுடைய செவியனின் புகழ் பாடும் இந்தப்பாடல்..
    திருவாதிரைக் களியை விட இனிப்பாக உள்ளது.

    அதன் விளக்கம் நெஞ்சில் நிறைகிறது.

    ReplyDelete
  4. ‘சிவத்தை நினைப்பதா பெரிது, சிறுமைகளற்று வாழ்வதல்லவா பெரிது?’ என்று நண்பர் இ.சௌ.ராஜன் ‘சிவம்’ நாவலில் சொல்லியிருப்பார். அதுபோல சிந்தையில் உறையும் சிவத்தை நீங்கள் சிந்தித்து சொல்லியிருப்பது களிச்சுவை ஈந்தது. மிக நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன். நாலாயிரம் போலவே, திருவாசகமும் நீங்கள் சொல்கையில் இனிமைதான்க்கா... (திரட்டிகள்ல நண்பர் மகேன் இணைச்சுட்டதால ஓட்டு மட்டும் குத்திட்டுப் போறேன்)

    ReplyDelete
  5. அன்பே சிவம் என்பதை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  7. //என்னுள் இருக்கும் நான் எனும் பொய் இந்தக்கண்ணீரில் கரைந்து மெய்யோடு உன்னைவந்து சேர அருளவேண்டும் என்கிறார்//

    கோடி நன்றி....உங்கள் பதிவு ஆன்மாவுக்கு இனிக்கிறது.

    ReplyDelete
  8. திருவாச்கத்திற்கு உருகார்
    ஒருவாசகத்துக்கும் உருகார்..பாராட்டுக்கள்

    ReplyDelete
  9. ஆஹா! அருமையானப் பதிவு...
    "இமைப் பொழுதும் என் நெஞ்சில்
    நீங்காதான் தாள் வாழ்க"

    ReplyDelete
  10. பின்னூட்டமிட்ட அனைவர்க்கும் நன்றி

    திரு பார்த்தசாரதி கூறீயதை நினைவில் கொண்டு முயற்சி செய்கிறேன்! திரட்டிகளீல் இணைத்த மகேந்திரனுக்கு சிறப்பு நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.