Social Icons

Pages

Sunday, March 30, 2008

தாக்கம்(சிறுகதை)

இரண்டுவருஷமாய் நான் இந்தியாவிற்குப்போகவே இல்லை. அதற்குமுன்புவரை வருடம்
ஒருமுறைதவறாமல் போவது வழக்கமாக இருந்தது. ஒவ்வொருமுறையும் இருபதுநாளுக்குமேல் லீவ் எடுத்துக்கொண்டு வீட்டில் அப்பா அம்மா அண்ணா மன்னி தம்பிதங்கை அண்ணாவின் குழந்தை ப்ரியாக்குட்டியுடன் பொழுதினைக்கழித்துவருவேன்.மலைக்கோட்டை, சமயபுரம்,
கல்லணை,முக்கொம்பு,வயலூர் என்று பெரிய திட்டங்களோடுதான்
துபாயைவிட்டுப்புறப்படுவேன் ஆனால் அங்கெல்லாம் போக நேரம் கிடைக்காத அளவுக்கு
வீடு என்னைக் கட்டிப் போட்டுவிடும்.


இந்தவருடமும் ஊருக்குப்போகவேண்டாமென்றுதான் இருந்தேன் ஆனால் போனவாரம் போனில்
ப்ரியாகுட்டி,"சித்தப்பா எப்போ வரே?' என்று கேட்டதும் மனது கேட்கவில்லை.
புறப்பட்டுவிட்டேன்!


காவிரிப்பாலத்தில் டாக்சியில் வரும்போதே காலைநேரத்து இளம்குளிரோடு
வீசியகாற்றில் உடலிற்குப் புதுத்தெம்பு வந்துவிட்டது.


மாம்பழச்சாலையைக் கடந்து ஊருக்குள் டாக்சிநுழையும்போது எதிரே விண்ணைமுட்டும்
ராஜகோபுரம் 'வா வா' என அழைப்பதுபோல இருக்கிறது.


தெற்குவாசலில் டாக்சியை நிறுத்தசொல்லி மன்னிக்குப் பிடிக்குமே என்று ஜாதிமல்லி
பத்துமுழமும், கோபுரத்துஅடியில் கூறுகட்டி
விற்றுக்கொண்டிருந்தவளிடம் அம்மாவுக்காக கொய்யாபழமும் வாங்கிக்கொள்கிறேன்.


டாக்சியின் எஃப் எம் 'தோழா தோழா தோள் கொடு தோழா 'என்றது. போனமுறை ஊர்வந்தபோது
தீப்தா என்னிடம் பேசும்போது
பாடியபாடல்! என் இனிய சிநேகிதியான அவளுக்கும் குடும்பச் சுமை அதிகம்,அதுவும்
அவள் அப்பாவின் மறைவிற்குப்பிறகு, உள்ளூரில் ஒரு
சீட்டுக்கம்பெனியில் பணிபுரிகிறாளாம், மாதம் முவாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக


சித்திரை வீதிவழியே டாக்சிபோகும்போது இரண்டுவருடங்களில் கொஞ்சமும் மாறாத என்
ஊரைப்பெருமையுடன்பார்த்துக்கொள்கிறேன்.
. தேரடியில் ரங்கப்ரசாத் மற்றும் பாபு, சுதர்சனுடன் கிரிக்கெட் விளையாடியதை
மனம் அசைபோட்டது.


?யாரு பரத்வாஜனா? ஏண்டாப்பா, ரண்டுவருஷம் கழிச்சி வரபோல்ருக்கு?"
taaஎதிர்வீட்டுதிண்ணையிலிருந்து மூக்குக்கண்ணாடியை எடுத்து மறுபடி அணிந்தபடியே
கிச்சாமாமா குரல்கொடுத்தார்.


"ஹைய்யா சித்தப்பா வந்தாச்சு:!" ஓடிவந்தது ப்ரியாகுட்டி. அட! ப்ரியாக்குட்டி
எப்படி வளர்ந்துட்டது!


டாக்சியை அனுப்பிவிட்டு நிமிர்கிறேன்.


வீட்டுவாசல்கதவை அடைத்துக்கொண்டு உறவுப்பட்டாளம்!


பார்வையாலேயே பாசத்தைப்பொழிந்தார் அப்பா. பள்ளிக்கூடத்தில் ஆசிரியராய்
பணிபுரிந்தபோது அதிகம் பேசிய களைப்போ என்னவோ ஓய்வுபெற்றதிலிருந்து அப்பா
யாருடனுமே அதிகம் பேசுவதில்லை.


"அதில்லைடா பரத் உங்கப்பாக்கு குடும்பச்சுமையை உன்மேல ஏத்திட்டோ மேன்னு
மனசுக்குள்ள குறுகுறுப்பு உங்கண்ணாக்கும் சுமாரான சம்பளம்தான். சேமிப்பும்
அதிகமில்லை..குடும்பம் ஓடணும்னுதான் படிச்சதுமே நீ துபாய் போய் பணம்
அனுப்பிண்டு இருக்கே..பாவம் ...நாங்கள்ளாம் வாய்விட்டு சொல்லிடுவோம்...
உங்கப்பா மனசுக்குள் வச்சிண்டு குமைவார். அதான் மௌனசாமியாராய் ஆயிட்டார்"
என்று
போனதடவையே அம்மா சொன்னாள்.


"ரண்டுவருஷமாச்சே கண்ணா எப்டிப்பா இருக்க? என்னவோ இந்தக்குடும்பம் முன்னேறவும்
, வீட்டுக்கடனை அடைக்கவும் உன்னை
அவ்வளோ தூரத்துக்கு அனுப்பிட்டோ மேன்னு பலசமயம் வருத்தமா இருக்குப்பா"


அம்மா இப்போதும் பார்த்ததும் கண்பனித்தாள்.


"வாங்கோ! போனவருஷம் வருவேள்னு ரொம்ப எதிர்பார்த்தோம்"என்றாள் மன்னி. கல்யாணமாகி
ஆறுவருடங்களாகியும் மாறாத புன்னகைமுகம்.


" அதான் லீவே கிடைக்கலை வரமுடியலைன்னு போன்ல சொல்வானே விஜி? இப்போ லீவ்
கிடைச்சிருக்கு ஓடிவந்துட்டான் என் தம்பி!
வாடா பரத்...எப்படீ இருக்கே? அம்மா! அவனுக்கு ஃபில்டர்காஃபி புதுப்பால்ல
புதுசா போட்டுக்கொடு" அண்ணா ராஜு தோளைத்தட்டி வரவேற்றான்.


"பரத் அண்ணா! நான் இந்தவருஷம் ப்ளஸ்டூக்கு ரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ணி
படிக்கறேன்'


'நானும்:தான்"


இரட்டைசகோதர உறவுகள் சேர்ந்துகுரல் கொடுத்தன.


"இந்தவருஷமும் நீ வரலேன்னா நாங்க கடனை உடனைவாங்கி டிக்கட்போட்டுண்டு
துபாய்வந்துருப்போம்,தெரியுமா அப்படி
ஏங்கிட்டோ ம்டா பரத்! போன்ல எத்தனை பேசினாலும் நேர்ல பாக்றாப்ல ஆகுமா சொல்லு?"


"வந்ததும்வராததுமா அவனை ஆயிரம் கேள்வி கேக்காதங்களேண்டிம்மா.. பரத்! ஊஞ்சல்ல
உக்காருப்பா... டீ சித்ரா! fan போடேன் சித்த..
குழந்தை வெளிநாட்ல ஏசிகீசின்னு சௌகர்யமா இருப்பான் இங்க வந்த சித்த நாழில
கறுத்துப்போயிட்டான்பாரு.." அத்தை-அப்பாவின் மூத்த சகோதரி- வாஞ்சையுடன் என்
தலையைக் கோதிவிட்டாள்.


. :அம்மா சூடாய் வெண்பொங்கலும் கத்திரிக்காய் சுட்ட கொத்சும் தட்டில் வைத்து
என்னிடம் நீட்டினாள்.தங்கநிறத்தில் வறுபட்டமுந்திரிகளும், பொம்மைமுயலின்
கண்களைப்போல முழித்துக்கொண்டிருந்த மிளகும் நாக்கில் நீர் ஊறவைத்தது.


புழக்கடைப்பக்கம் போய் கிணற்றடியில் கைகால் அலம்பிக்கொண்டுவந்து தட்டை
அம்மாவிடமிருந்து வாங்கிக்கொண்டேன்.


"காஃபி முதல்ல தரக்கூடாதோ?" அண்ணா கத்தினான்.


"பசியா இருக்குமோன்னு முதல்ல டிபனைத் தந்தேன்..முடிச்சதும் காஃபி கலந்துட்டா
போச்சு"


"பொங்கலோட வடையும் பண்ணி இருக்கலாம்னு இப்போ தோண்றது
..சாப்பாட்டுக்குப்பண்ணிடலாம்மா...மச்சினருக்கு தயிர்வடைன்னா ரொம்பவே
பிடிக்குமே?" மன்னி உருகினாள்.


"நேத்தே திரட்டிப்பால் கிளறிவச்சிட்ட்டேன் குழந்தைக்கு தட்ல ஓரமா போடேன்
பத்மா,சொல்லணுமாக்கும்? "அத்தை அதட்டினாள் அம்மாவை அன்பாக.


வாங்கிவந்த சாமான்களை அனைவரிடமும் கொடுத்தபோது கண்களில் மகிழ்ச்சிதவழ நன்றி
தெரிவித்தனர்.


"எதுக்குடா இப்படி சிரமம் எடுத்துக்கறே?"அண்ணன் அன்பாய்கடிந்துகொண்டான்.


ஊரும் மாறவில்லை என்வீட்டுமனிதர்களும்மாறவில்லை என்னும்போது எனக்குப்பெருமையாக
இருக்கிறது.


"கொள்ளிடம்போய்குளிச்சிட்டுவந்துடறேன்" என்றபோது அப்பா தன் சைக்கிள்சாவியை
என்னிடம் தந்தார். நடந்துபோகக்கூடாதாம்!


படித்துறையில் தீப்தா துணி துவைத்துக்கொண்டிருந்தவள், என்னைக்ண்டதும்,"பரத்
எப்போ வந்தே? "என்று வியப்பாய் கேட்டாள்.


சிறிதுநேரம் நாஞ்சில்நாடனையும் ஜெயகாந்தனையும் அலசினோம்.


"சுஜாதா போயிட்டாரேடா பரத் நம்பவேமுடியல"


"ஆமா நம்மூர்க்காரர் வேற...மனசுக்கு ரொம்பக்கஷ்டமா இருக்கு.."


"என்னவோபோ..சொல்லிக்காம வர ஒரேவிருந்தாளி மரணம்தான்...
அதுபோக்கட்டும்..நாளைக்கு ஆடும்பல்லக்குடாபரத்...வாசல்பூரா
கோலம் வழக்கம்போலப்போடப்போறேன்..நீவந்து பார்த்து கருத்து சொல்லணும் என்ன?"


"இந்த கம்ப்யூட்டர் யுகத்துலயும் சின்னக் குழந்தைமாதிரி கோலம்போடறதும்
கொள்ளிடக்குளியலுமாய் அது இதுன்னு இருக்கியா தீப்தா?"


"மனசுக்கு சந்தோஷமான விஷயங்களை எதுக்கு மாத்திக்கணும் அல்லதுமறக்கணும் , அதுவே
மத்த துக்கங்களை மறக்க ஒருகருவியா இருக்கறப்போ?"


நான் சிரித்தபடி வேறுபக்கம் நகர்ந்தேன்


ஆயிற்று ஊருக்குபோகிற நாள் வந்தாயிற்று.


எந்நேரமும் விரல்பிடித்துக்கொண்டே விளையாடிய ப்ரியாகுட்டி..


பார்வையால் வருடும் அப்பா..


வாய்க்கு ருசியாய் சமைத்துப்போடும் அம்மாவும் அதனை வயிறாரப் பரிமாறியமன்னியும்
..


பாடங்களில் சந்தேகம்கேட்டு என்னைப்பெரிய ஆசிரியர் போல மதிக்கும் என்
உடன்பிறப்புகள்..


'துபாய்ல உப்புபுளிகிடைக்குமா ?நல்ல ஹோட்டல் இருக்கா? உடம்புக்கு ஏதாவதுன்னா
யாருடா பக்கத்துல இருக்கா உனக்கு?'
அத்தையின் அன்பான அக்கறையான கேள்விகள்.


'பரத்! அம்மா அப்பாவைப்பத்தி கவலையேபடாதே ...நானும்மன்னியும் நன்னா
பாத்துக்றோம் என்ன? "
அண்ணாவின் அனுசரணையான பேச்சு..


சிநேகிதம் என்கிற எல்லைக்கோடிற்குள்லேயே எப்போதும் இருந்துகொண்டுபழகும்
அன்புதோழி தீப்தா...


எல்லாரையும் விட்டு ஊருக்குபுறப்படவேண்டுமே என்றிருக்கிறது.


அப்பாமட்டும் எவ்வளவு தடுத்தும் சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிவிட ஸ்ரீரங்கம்
ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்.


ரயில் வருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போது அப்பா என்னிடம்,


"பரத்! உன்கிட்ட வந்ததுலேந்து கேட்க நினச்சேன் , இப்போ கேட்டுட்றேன்.. உன் தலைல
குடும்பச்சுமைய ஏத்திட்டோம்ன்னு எங்கபேர்ல கோபமா? அதனல்தானே நீ இத்தனை நாளாய்
ஊர்பக்கமே வரலயா?" என்றார்.


'ஐயோ அப்பா! இந்தப்பேச்சுக்கு உங்கள் மௌனமே பரவாயில்லை' என்று கத்தவேண்டும்
போலிருந்தது.


என்னையே பார்த்துகொண்டிருந்த அப்பாவின் விரல்களை பிடித்துக்கொள்கிறேன்.


"அ அ ..அ.ப்.பா! " வார்த்தைகள் உடைந்து வந்தன .


இருபத்தி ஏழுவயதில் இருபதுவயதை முழுங்கிவிட்டு, சிறுவனாய் கதற
ஆரம்பிக்கிறேன்.


"அப்பா ஒவ்வொரு தடவை ஊருக்கு வந்துவிட்டுப்போகிற போதெல்லாம் உங்க எல்லாருடைய
பாசத்தையும் பரிவையும் அனுபவிச்சிட்டு
திரும்பி துபாய் போனதும் பலநாட்களுக்கு என்னால் இதிலிருந்து
மீளமுடிவதில்லை.. எதையுமே ருசிகண்டால்தானே அவஸ்தை?
என்னால் ஆசையை அடக்கமுடியும்போல இருக்கு... ஆனா அவஸ்தையை தாங்க
முடியலப்பா..அதான் இத்தனை நாளா வரல...இப்போ மறுபடி துபாய்போனதும் இந்த அவஸ்தை
தொடரபோகிறதுப்பா.." நான் முடிக்கவும் உடனே


"ப..ர..த்!" அப்பாவின் குரலில் மேலும் கரைந்துவிடவும் இருந்த நிலையில், நல்ல
வேளையாய் ரயில் வந்துவிட்டது

12 comments:

  1. உண்மை.
    இங்கு வந்து ஒரு வருடம் ஆகப்போகிறது.
    இன்னும் வீட்டினரது பாசம் என்னை வழிவழியாய்த் தொடருகிறது.

    கதையல்ல நிஜம்.
    அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. \\கதையல்ல நிஜம்.
    அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள் :)\\

    ரீப்பிட்டே ;))

    \\மனசுக்கு சந்தோஷமான விஷயங்களை எதுக்கு மாத்திக்கணும் அல்லதுமறக்கணும் , அதுவே
    மத்த துக்கங்களை மறக்க ஒருகருவியா இருக்கறப்போ?"
    \\

    சூப்பர்...நல்ல வரிகள் ;)

    ReplyDelete
  3. கதையல்ல நிஜம்..... நல்லா எழுதியிருக்கீங்க....

    ReplyDelete
  4. யப்பா என்ன ஒரு யதார்த்தம்

    நான் கதைகளைப் அதன் நீளம் காரணமாக படிப்பதில்லை. ஆனால் இதனைப் படித்தபிறகு உங்கள் கதைகள படிக்க வேண்டும் என்கிற ஆவல் அதிகரிக்கிறது

    உண்மையில் நான் துபாயிலிருந்து ஊருக்கு வரும்பொழுது எனக்குள் தோன்றிய நினைவலைகள் அப்படியே கதையில் பிரதிபலிக்கின்றது

    என்னுடைய தூக்கம் விற்ற காசுகள் கவிதையின் கதை வடிவம் இது.

    ReplyDelete
  5. வருகை தந்து கருத்து சொன்ன ரிஷான் கோபிநாத் சின்னப்பையன் ...உங்களுக்கு என் மனம் கனிந்த நன்றி

    ReplyDelete
  6. Gnaniyar @ நிலவு நண்பன் said...
    யப்பா என்ன ஒரு யதார்த்தம்



    உண்மையில் நான் துபாயிலிருந்து ஊருக்கு வரும்பொழுது எனக்குள் தோன்றிய நினைவலைகள் அப்படியே கதையில் பிரதிபலிக்கின்றது

    என்னுடைய தூக்கம் விற்ற காசுகள் கவிதையின் கதை வடிவம் இது.>>
    ஆமாம் உங்களைப்போன்ற பலரின் அனுபவம்கேட்டு வந்த கதைதான்.
    நன்றி கருத்துக்கும் வருகைக்கும் ரசிகவ்

    1:16 PM

    ReplyDelete
  7. அடேங்கப்பா எல்லா NRI'S ம் வந்து அட்டெண்டண்ஸ் போட்டிட்டு போயிருக்காங்க!!

    ரொம்ப நல்லா இருக்கு கதை.

    ReplyDelete
  8. மங்களூர் சிவா said...
    அடேங்கப்பா எல்லா NRI'S ம் வந்து அட்டெண்டண்ஸ் போட்டிட்டு போயிருக்காங்க!!

    ரொம்ப நல்லா இருக்கு கதை.

    >>>>நன்றி சிவா..எல்லார்மனசிலும் இப்படீ ஒரு தாக்கம் இருக்குமே ?!

    ReplyDelete
  9. haai akka,

    wow...xllent.. super. கதை நிஜமாவெ ரொம்ப நல்லாயிருக்கு.எழுத்து எஅடை கூட மிகையில்லாமல் நிஜம் ஆனால் அழகு.

    ReplyDelete
  10. //மங்களூர் சிவா said...
    அடேங்கப்பா எல்லா NRI'S ம் வந்து அட்டெண்டண்ஸ் போட்டிட்டு போயிருக்காங்க!!

    ///

    நானும் வந்துட்டேன்!

    நல்லா இருக்கு :)

    ReplyDelete
  11. Sumathi. said...
    haai akka,

    wow...xllent.. super. கதை நிஜமாவெ ரொம்ப நல்லாயிருக்கு.எழுத்து எஅடை கூட மிகையில்லாமல் நிஜம் ஆனால் அழகு.
    >>>.
    hi sumathi! welcome!
    கருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி.

    ReplyDelete
  12. ஆயில்யன். said...
    //மங்களூர் சிவா said...
    அடேங்கப்பா எல்லா NRI'S ம் வந்து அட்டெண்டண்ஸ் போட்டிட்டு போயிருக்காங்க!!

    ///

    நானும் வந்துட்டேன்!

    நல்லா இருக்கு>>>

    வாங்க ஆயில்யன்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.