Social Icons

Pages

Tuesday, December 24, 2013

மணிக்கதவம் தாள் திறவாய்!

கோதை  தன் தோழியை எழுப்ப  அந்தப்பெரியவீட்டுவாசலுக்கு வந்து நின்றாள்.
அவள் கிருஷ்ணபக்தை அவன் அருளால்  வசதியாக வாழ்பவள். ஊரில் பெரிய வீடு அவளுடையதுதான்.
வீடா  அது?  தூமணிமாடம்  கொண்டது சுற்றிலும் விளக்கெரிந்துகொண்டிருப்பது. அகில்தூபப்புகை மணம் கமழ்வது..  அங்கு  ஓர் அழகிய பஞ்சணை மீது  உறங்கிக்கொண்டிருக்கிறாள் தோழி.. வசதியான வீட்டுப்பெண்ணாம்    காலை சீக்கிரம் எழுந்து பழக்கம் இல்லைபோலும்.
 
இத்தனைக்கும்  அவள் அப்பா்வை   உரிமையுடன்  மாமன் என்றழைப்பாள் கோதை 
 மாமன்  மகளே உன் வீட்டின் நவரத்தினமணியிலான  கதவைத்திற.  என்று  கேட்டுக்கொண்டாள்.

அவள் எழுந்தமாதிரி தெரியவில்லை  ஆகவே அவள்தாயிடம்”மாமீர் அவளை  எழுப்பீரோ”  என்று  விண்ணப்பித்தாள்.

மாமி மகளிடம் இதை சொன்னமாதிரி தெரியவில்லை ஆகவே கோதை சற்று பொறுமை இழந்தாள்.”  மாமீ உங்க பெண் என்ன ஊமையா செவிடா  சோம்பல் காரணமாய் உறங்குகிறாளா அல்லது எழுந்திருக்க இயலாமல் காவலிடப்பட்டாளா? நன்கு உறங்கும்படி மந்திரித்துதான் விடப்பட்டாளா? “

மகளும் தாயும்  திடுக்கிட்டு  ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

மாமாயன் மாதவன் வைகுந்தன்  நாமம்  பலவும் சொல்வோம் கேட்டுவிட்டால்  நீ  வரமாட்டாயா என்ன எழுந்து வா  தோழி.
 
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரியபாரதம் கைசெய்து ஐவர்க்கு திறங்கள் காட்டியிட்டுச் செய்துபோன மாயங்களும்,நிறந்தனூடு புக்கு எனதாவியை நின்று நின்று உருக்கியுண்கின்ற இச்சிறந்தவான்சுடரே
உன்னை என்று கொல் சேர்வதுவே!
 
 
(திருவாய்மோழியில் நெஞ்சுருகி அருளிச் செய்கிறார் நம்மாழ்வார்.  மாமாயன்  அவன்!
 
 
மாதவன்...மகாலக்ஷ்மியின்  கணவன்.
திருமகளுடனேயே எப்போதும் காண்கின்றவனென்பதை சூசகமாக ஆசமனம் செய்தபிறகு பவித்திரவிரலால்(மோதிரவிரல்)வலக்கண் ஆரம்பத்தில் மாதவாய நமஹ  என்று தொடுகிறார்கள்.
 
 
வைகுநதன்!...
நாக்கொண்டு மானிடம் பாடேன், நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் சென்று,என்றும் - பூக்கொண்டு
வல்லவா றேத்த மகிழாத, வைகுந்தச்
செல்வனார் சேவடிமேல் பாட்டு.
 
 

 ஸ்ரீவைகுண்ட நாதனுடைய திருவடிகள் மேல் கவிபாடுதற்கே ஏற்றநாவைக் கொண்டு மானிசரைப் பாடுதல்  மாட்டேன் என்கிறார் திருமழிசை. அப்படிப்பட்ட  வைகுந்தன்..
 
அவன்   நாமங்கள்  ஆயிரம்  உண்டே அவற்றைக்கூறி  முக்தி அடைவோம்  வா!
 
வந்தேன் கோதை என மணிக்கதவம் தாள் திறந்தாள் அந்தப்பெண்.
******************************************************

இந்தப் பாசுரம்சொகுசாய் வாழும் மக்களை சோம்பல் வாழ்க்கையினின்றும்  எழுப்பி அவர்களை நல்வழிக்குக்கொண்ர்தல் எவ்வளவு கடினம் என்பதை குறிப்பால் உணர்த்துகிறது
 
ஏமப்பெருந்துயில்...  ஏமம் என்னும் சொல் காவல் என்னும் பொருளில் குறளில் உள்ளது.
 
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து
 
 
ஏமப்பெருந்துயில் என்பது  நவீன ஹிப்னாடிசம் மெஸ்மரிசம் போல  வசிய நித்திரை என்பதாகும் என்கிறது ஒரு திருப்பாவை உரை.
 
கம்பராமாயணத்தில்  சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையினைக்கான வரும்போது  அசோகவன அரக்கிகளை மந்திரத்தால் உறங்கச்செய்தாராம்.
கம்பர்  ஆழ்வார் பாடல்களில் ஆழ்ந்தவர் என்பதை இந்தப்பாடல்  காட்டுகிறது.
 
காண்டற் கொத்த காலமும் ஈதே தெறுகாவல்
தூண்டற் கொத்த சிந்தையினாரும் துயில்கில்லார்
வேண்டத்துஞ்சார் என்றொரு விஞ்சை வினை செய்தான்
மாண்டற்குற் றாராம்என எல்லாம் மயர்வுற்றார்
 
விஞ்சைவினை  என்றால் மந்திரம் 
 
தூமணிமாடம் என்பது குற்றமற்ற திருமேனியையும்  சுற்றும் விளக்கெரிவது அத்திருமேனியில் பிரகாசிக்கும் ஞானத்தையும் குறிப்பிடுவது. தூபம்..ஞான தூபம் இது கமழ்வது அனுஷ்டானத்திலே
 
துயிலணைமேல் கண் வளரும் என்கிறாள் பாருங்கள்...கிருஷ்ண நினைவில்  துயில்வதும்போல பாவனை  மனக்கண்ணில் அவனைக்காணுதம்  அதன் நீட்சி கண் வளர்தல்..
 
தூமணி மாடம்  மணிக்கதவம்  என  இருமுறை மணி என்ற சொல் வருகிறது.
மணி என்பது  நவரத்தின மணியை மட்டுமல்ல அழகான என்றும் பொருள்கொண்டுவரும்.
மன்னுபுகழ்க் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே! 
 
 
 
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.
 
பாடலின் தத்துவம்..
 
இங்கே சொல்லப்படும் தத்துவம் – கண்ணனை அடைவதான உயர்ந்த புருஷார்த்தத்தை இவர்களுக்கு புருஷகாரம் செய்து அருள அந்த க்ருஷ்ணனுக்கு ப்ரியமான அந்த கோபிகையை பிடிக்கிறார்கள். அவளுடைய தாயாரையே ஆசார்யனாகக் கொண்டு அந்த கோபிகையை வேண்டுகிறார்கள். ஆக மோக்ஷ புருஷார்த்தத்தை அடைய புருஷகாரம் தேவை. அதற்கு ஆசார்ய அனுக்ரஹம் தேவை என்பது தேறும்
 

5 comments:

  1. இந்த பாசுரத்தில் பகவன் நாமாவிர்க்கு உள்ள மகிமை சொல்லபட்டு இருக்கிறது.பகவான் நாமத்துக்கு அவரை விட சக்தி அதிகமாம்.
    திரௌபதியும் சரி,கஜேந்த்ரனும் சரி தங்களால் தங்களை காப்பற்றிக்கொள்ள முடியாது என்று தெரிந்தவுடன் அச்சுதா,அனந்தா,
    கோவிந்தா .சங்க சக்ர கதா பாணி என்றெல்லாம் அழைத்து பரிபூர்ண சரணாகதி அடைந்து விட்டார்கள்.அந்த க்ஷணமே அந்த நாமங்கள் காப்பாற்றினவாம்..அப்பேற்பட்ட சக்தி.இங்கே மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று பல பேர்களால் சகச்ரநாமத்தினால் கூவி அழையுங்கள் என்கிறாள் ஆண்டாள்.
    மிக நன்றாக விளக்கி உள்ளீர்கள்.வாழ்த்துகள்

    ReplyDelete
  2. Well explained and I like the way to write

    ReplyDelete
  3. சாந்தி வெங்கட்நாகராஞ் மற்றும் கேபி சார் அனைவர்க்கும் மனம் கனிந்த நன்றி

    ReplyDelete
  4. மாமாயன்.. எத்தனை எளிமையான சொல்!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.