Social Icons

Pages

Friday, December 20, 2013

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை...

”கோதை ! அம்மா  கோதை!”  உரக்க அழைத்தும்  கோதை தன்னைத்திரும்பிப்பார்க்கக்காணோமே என்று பதறிக்கொண்டு அவள் அருகில் சென்றார் பெரியாழ்வார்.



முற்றத்துத்திண்ணையில்  முல்லைக்கொடி அருகே அமர்ந்திருந்தாள் கோதை.

பெரியாழ்வார் மகளைப்புதிதாய்  பார்ப்பதுபோல பார்த்தார். தாய்மைப்பரிவுக்கு தன் சேய் தினம் தினம்  புதிதுதான்!

 நல்லவேளை  மையிடாவிட்டாலும் மலர்ந்த கண் விழித்திருக்கிறது   பூச்சூடாவிடினும்  கூந்தல்  மணத்துச்செழித்திருக்கிறது நெய்யும்பாலும் உண்ணாவிடினும் உடல் வளமாகவே இருக்கிறது.  வாய் மட்டும் எதையோ முணுமுணுக்கிறது  .

‘வாயுள்வையகம்கண்ட மடநல்லார்
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்
பாயசீருடைப் பண்புடைப்பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே.

ஆஹா  எனது  பாசுரத்தையல்லவா  மகள் பாடிக்கொண்டிருக்கிறாள்!

பாடி முடித்து நிமிர்ந்த கோதை,”என்னப்பா  அப்படிப்பார்க்கிறீர்கள்?’என்க்கேட்டாள்.

“ஏனம்மா  நான்  கோதையெனக்கூவியது கேட்கவே இல்லையா ?’

“எப்படியப்பா கேட்கும் வாய் பாடும்போது மனம் கேசவனையே சிந்திக்கிறது. அதனால்  வேறெதிலும்  சிந்தனை செல்வதில்லை..”

“என் பாட்டைப்பாடினாய்  மாயனென்று முடித்தாய்  கேட்டேன் கோதை”

“மாயனைக்கொண்டே இன்று  என் பாசுரத்தைத்  தொடங்குகிறேன் அப்பா..”

“அப்படியா  குழந்தாய் நல்லதம்மா..அவன் மாயன் தான்!பகவானுக்கு இரண்டு முகவரிகள். அதைக்கொண்டு இரண்டு முக்கிய திருநாமங்கள் ஒன்று வைகுண்டபதி அது நித்யவிபூதி. இன்னொன்று
லீலாவிபூதியான மாயத்திற்கு அதிபதி அதனால் மாயன். நம்மை சதா தேடுபவன்.வைகுண்டத்தில் அவன் நம்மைதேட முடியுமா இந்த மாயமான  பிரபஞ்சத்தில்தானே தேடமுடியும் . உலகமெனும் பெரும் பரப்பில் எங்கோ ஒரு சிறுதூசாக இருக்கும் நம்மை அவன் ஆசையோடு தேடிக்கொண்டிருக்கிறான் ஆகவே அவன்  நம்மைத்தேடும்மாயன் தான்.”

(மாயன்.. இன்னும் சில விளக்கங்கள்..)



 வசுதேவர் சிறையில் தமக்குப்பிறந்த  குழந்தை கையில் சங்கு சக்கரமுடன் காட்சி அளிக்கவும்,’மாமாயா அவற்றை மறைத்துக்கொள்வாயாக”என்று கம்சனுக்கு பயந்துவேண்டிக்கொள்ள அக்குழந்தையும் அவற்றை மறைத்து சாதாரணக்குழந்தையாக காட்சி கொடுத்தது.இதென்ன மாயம் என தேவகியும் வசுதேவரும் வியந்துபோக அதனாலே மாமாயன் எனப்பட்டான் என்கிறார் வியாக்கியான சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளையும். மேலும் ஒரு பிறப்பிலேயே(அவதாரத்திலேயே) இரண்டு தாயார் இரண்டு தகப்பனார் இரண்டு குலங்களை அடைந்து அந்தகுலங்களுக்குத்தக்கபடி இரண்டு பெண்களை மணந்துகொண்ட மாமாயனல்லவோ கண்ணன்?
இதையே கூரத்தாழ்வார்”த்வே  மாதரௌச பிதரௌச குலே அபித்வே’என்று அருள்கிறார்.
மேலும்பல மாயச்செயல்களைப்புரிந்தவன் ஆகவே மாயன்.)


“அப்பா பாசுரத்தைக்கேளுங்கள்..”


மாயனை, மன்னு வட, மதுரை மைந்தனைத்,
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்,
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்,

தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவித், தொழுது,
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்கப்,
போய பிழையும், புகு தருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும் செப்பு ஏல்-ஓர் எம் பாவாய்!



“ஆஹா  கோதை  அவனை வடமதுரை மைந்தன் என்றாயே பொருத்தம்தான்..வடமதுரையை ஸ்ரீவைகுண்டமாக்கி அதில்பிறந்தவன் எல்லோருக்கும் அவன் பிள்ளை...மல்லைமுதூர் வடமதுரை என வர்ணிக்கிறார் நம்மாழ்வார். ”

(மைந்தன் என்பதை மிடுக்கன் என்றும் சொல்லலாம்.. தந்தைகாலிற் பெருவிலங்கு தானவிழ நல்லிருட்கண் வந்த எந்தை’ என்று தாய் தந்தையின் கால் விலங்கு கழல வந்து அவதரித்த பிள்ளை என்று கூறுகிறது ஜீயர் ஒருவரின் அரும்பத உரை.)

“அப்பா  தூயப்பெருநீர் யமுனைத்துறைவனை என்று எழுதியதை நானே ரசித்தேன்... தூய்மையுடன் பெருமை கொண்ட  நீர் யமுனை  கிருஷ்ணனின் பாதம் வேறு எங்காவது  தானே வலியப்போய் படிந்திருக்கிறதா? வீட்டில் பாதியும் யமுனைக்கரையில் பாதியுமாய் நேரம் கழித்த கண்ணனுக்கு உகந்த நதி யமுனை. அவன் ஸ்பரிசம் பட்டதாலேயே தூய்மை பெற்ற யமுனை. வசுதேவர் கிருஷ்ணனை  கம்சனுக்குதெரியாமல்  கொண்டுவர நதியில் கால்வைத்தபோது  ஆழத்தை அடக்கிக்கொண்டு வாகாக  வற்றி வழிவிட்ட யமுனை. அதனாலும் தூய யமுனை! ”

“அருமை கோதை.. ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை என்று சொன்னாயே அற்புதம்..  சாதாரண விளக்கு காற்றடித்தால் அணைந்துவிடும் மணி விளக்கு எதனாலும் அணையாது.  ஒருவீட்டு விளக்கு என்றில்லாமல் ஆயர்குலத்திற்க்கெல்லாம்  விளக்கு. அத்தனை ஒளி உள்ளவன்.ஆயர்குலத்தில் தோன்றும்  என்று சொல்லியவிதம் சிறப்பு அவதாரங்கள் தோன்றும் மனிதர்கள்தான் பிறப்பார்கள். கண்ணன்  ஆயர்குல தீபம்.யதுகுலரத்ன தீபம்”

“தாயைக்குடல்விளக்கம் செய்த தாமோதரனை....!கௌசலை  ராமனைப்பெற்று பெருமைகொண்டாள்.
‘என்ன நோன்பு நோற்றாள் கொலா இவனைப்பெற்ற வயிறுடையாள்’என்று பின்னர் உலகம் புகழும் வண்ணம் பெருமை  கொண்டவள் கௌசல்யா.  யசோதையோ கண்ணினுண் சிறுத்தாம்பினால் அவனைக்கட்டிவிட்டாள். அதற்குத்தயாராய்  வயிற்றைக்காட்டிக்கொண்டு நின்றான் கிருஷ்ணன். அடியார்க்கு எளியன் என்பதை இதைவிட  எப்படி அவன் காட்டிவிடமுடியும்? தன் பிறப்பினால் பெற்ற வயிற்றுக்கும் ,தாங்கும் வயிற்றுத்தழும்பினால் வளர்த்த தாய்க்கும் பெருமை சேர்த்துவிட்டான்”



“ஆக  பாவையர்களான நீ்ங்கள் நோன்பிற்கு  ஒரு சிற்றடி எடுத்துவைத்தால்போதும்  எளியனான கண்ணன் இறங்கிவந்து எதிரில்நிற்கப்போகிறான் கோதை”

“ஆமாம் அப்பா அதனால்  தூய்மையுடன் அவனை அடைந்து..அதாவது அகம்-புறம் இரண்டிலும் தூய்மையாக...”

“உண்மை..தூமலர் தூவி..இதயப்பூவைத்தூவி... ஆத்ம புஷ்பமே இதர புஷ்பங்களைவிடச்சிறந்தது”
விபீஷணன் சரணமடைய வந்தபோது ஒருமுழுக்கிட்டுவரவில்லை அர்ஜுனன் யுத்தத்தின் நடுவில் முழுக்கிட்டு கீதை உரைகேட்கவில்லை.. த்ரௌபதியும் முழுகின பிறகா சரணாகதி செய்தாள்? பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பச்யதாப்ரயச்சதி| ததஹம்.....அச்நாமி  ..இலைஅல்லது பூ அல்லது பழம் அல்லது நீரையாவது எனக்கு பக்தியுடன் இடுவானாகில் அதை நான் ஏற்கிறேன் என்கிறான் கண்ணன்.பக்தியே முக்கியம்.
தொழுது... வணங்கி, வாயினால்  பாடி கிருஷ்ண கானமே வாய் படைத்த பலன்! மனத்தினால் சிந்திக்க..
 மனமின்றி சிந்தித்தல் ஆகுமோ? ஆக  த்ரிகாரணங்களில் ஈடுபட்டு அவனைச் சரணாகதி செய்யவேண்டும்”

“போயபிழையும்..இதற்கு முன் செய்த பாவங்களும், புகுதருவான் நின்றனவும்...இனிமேல் நம்மை அறியாமல் நேரிடத்தக்க பாவங்களும்  தீயினில்  தூசாகும்...நெருப்பில் விழுந்த தூசிபோல் காணாமல்போகும் செப்போலோ ரெம்பாவாய்.....  சொல்லுங்களேன் என்பாவைப்பெண்களே!”

தந்தையும் மகளும் மனநிறைவுடன்  மாதவன் கோயில் செல்ல ஆயத்தமானார்கள்.

**************************************
மாயோன் மேய காடுறை உலகமும்,
சேயோன் மேய மைவரை உலகமும்..


தொல்காப்பியம்

 

9 comments:

  1. ஆகா... ரசிக்க வைக்கும் விளக்கம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. எப்படியப்பா கேட்கும் வாய் பாடும்போது மனம் கேசவனையே சிந்திக்கிறது. அதனால் வேறெதிலும் சிந்தனை செல்வதில்லை..”//

    yath bhavam thath bhavathi
    You Become What You Believe.

    subbu thatha.
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
  3. மிக அழகாக ரசனையுடன் விளக்கி உள்ளீர்கள்

    இந்த பாசுரத்தின் விளக்கத்தை வேறு இடத்தில் படிக்கையில் யமுனைக்கு ஏன் தூய பெருநீர் யமுனை என்று சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது என்பதற்கு ஒரு வியாக்யானம் கண்டேன்
    ..
    ராம பிரான் சீதையை தேடி அலைகையில் மரம் மலை,செடி கொடிஆறு என எல்லாவற்றையும் சீதையை பார்த்தீர்களா என்று வினவ கோதாவரி தெரிந்தும் ராவணனுக்கு பயந்து மெளனமாக இருந்து விட்டதாம்.ஆனால் யமுனையோ கம்சனுக்கு அருகாமையில் இருந்தும் வசுதேவருக்கு கிருஷ்ணனை எடுத்து செல்ல வழி விட்டதாம்.அதனால் யமுனை தூய களங்கமற்ற உன்னதமான என ஓர் உயர்வை பெற்றுவிட்டதாம்.

    இப்படியாக வார்த்தைக்கு வார்த்தை விமரிசனம் செய்யலாம் ஆண்டாள் பாசுரத்தில்.

    ReplyDelete
  4. அழகானதொரு ஆண்டாள் பாசுரம். அற்புதமான விளக்கங்கள். ரஸித்தேன். மகிழ்ந்தேன். பகிர்வுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
  5. யமுனை கோதாவரி மிகவும் ரசித்தேன் KParthasarathi. இந்தக் கருத்தை நான்
    பயன்படுத்திக்கொள்ளலாமா?


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திரு அப்பாதுரை கேபிசாரின் கருத்தை நீங்க பயன்படுத்திக்கலாமே அனைஅவ்ரும் அறிந்த ஒன்ரே அது அழகாக அவர் இங்கே சொல்லி இருக்கிரார்

      Delete
  6. அருமை..
    விளக்கத்திற்கு நன்றி

    ReplyDelete
  7. அருமையான விளக்கங்கள்... KP அவர்களின் பின்னூட்டமும் சிறப்பு.

    ReplyDelete
  8. கருத்து கூறீய அனைவர்க்கும் மிக்க நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.