Social Icons

Pages

Wednesday, December 25, 2013

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!





கத்தக்கதித்துக் கிடந்தபெருஞ்செல்வம்
ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான்
கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆயர்களேறுஎன்புறம்புல்குவான்


பெரியாழ்வார் தான் அருளியபசுரத்தைப்பாடி முடிக்கவும் கோதை கேட்டாள்.

“அப்பா!   ஆயர்கள் ஏறு என்னும் கண்ணன்  உங்களின் பின்பக்கம்  வந்து உங்களைக்கட்டிக்கொள்கிறான் என்கிறீர்கள். எனக்கும் கண்ணன்  அருகில் வருவானா  அப்பா?”

‘என்னம்மா சந்தேகம,?
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி’ வழிபட்டால் அவன்  நம்மைத்தேடிவருவான் அம்மா”

“உண்மைதான் அப்பா... இன்றுநான்  காலையில்  போய் எழுப்பியது    இறை அனுபவத்தில்  மிகவும் பற்றுள்ள  ஒரு அனுபவ ரசிகையை!  ”

“அப்படியா? “

“ஆமாம் அப்பா..அவள் நோன்பு நோற்று  இடைவிடாமல்  சுகம் அனுபவிக்கும் அதிர்ஷடசாலி..அந்த  கிருஷ்ண அனுபவத்தில் பரவசமாக இருந்தவளை அழைக்கப்போனேன்..  இவளும் ஒரு நாயகப்பெண் பிள்ளாய்தான்  அதனால் அம்மனாய்!  அம்மா! தலைவியே என்று  மெல்ல அழைத்தேன்...”

“நல்லது கோதை ! உன்னதப்பெண்ணாக அவள் இருக்கவேண்டும் அடைய அரிய ஆபரணம் போன்றவள்”

“ஆமாம்  அதனால்தான்  அவளைப்பிறகு அருங்கலமே  என்றும் விளித்தேன்..ஆனால் பாருங்கள் அப்பா முதலில்வாசல்கதவினையே யாரும் திறக்கவில்லை..  ஒரு பதில்  வார்த்தைகூட பேசவில்லை..”

“அடடா  அப்புறம்?”

“முதல்பாசுரத்தில்  நான்  அழைத்த நாராயணனைப்பற்றி  மறுபடி சொன்னேன்..வாசனை உள்ள துளசிமாலை அணிந்திருக்கும் நாராயணன் நாமாகப்போற்ற நமது நோன்புக்கு வேண்டிய பறையைத்தரும்  புண்ணிய மூர்த்தியாவான்... “  என்று  இடையில்   அண்ணலைப்புகழ்ந்தும் அவள் அசையக்காணோம் என்று தெரியவும்  , முன்னொரு காலத்தில் எமன் வாயில் விழுந்த கும்பகர்ணனும் தனது  பெரிய  தூக்கத்தை உனக்குக்கொடுத்துவிட்டானா என்ன? மிகவும் சோம்பல் உடையவளே” என்றேன்

“தூக்கம கலைந்திருக்குமே? “

“கலைந்ததோ  கலக்கம்  தெளிந்ததோ   நானும் ‘தேற்றமாய் வந்து திற’ என்று பாடி முடித்தேன் உடனே  கதவைத்திறந்துவிட்டாள் அப்பா!”

“கோதை! நோற்றுச்சுவர்க்கம் புகுகின்றவள் இறைவனையே  உபாயமாக  பற்றீ இருக்கும் அடியாருக்கு அறிகுறி. இவர் பிற விஷயங்களில் கவனம் செலுத்தமாட்டார். 


  பேய்ப்பெண்ணே  என்று செல்லமாய் திட்டினாய் முன்பு. இப்போது தோழியிடம் உரிமையுடன். நல்ல பரிகாச வரிகளைத்தான் அமைத்திருக்கிறாய்   குறும்புக்கார கோதைதான்..கும்பகர்ணனை  கொண்டுவந்திருக்கிறாய்....ரசித்தேன்..

இந்தப்பெண் சாதாரணஉறக்கத்தில் ஆழ்ந்தமாதிரி தெரியவில்லை..கிருஷ்ணபக்தி என்னும் போதை உடலில் ஏறி  இருக்க அதையே சுவர்க்கமாக அனுபவிக்கிறாள்.. அந்தபக்திக்காதலை அவள் மட்டுமே அனுபவிப்பதால் அதை எல்லோரும் அனுபவிப்போமே என்று அழைத்திருக்கிறாய்! துயிலெழுந்து வந்து   தலைமை தாங்கி எங்களை ஆற்றுப்படுத்து  என்பதான  கோரிக்கை  உன்னுடையது..தனியாக  பக்திசுகம் அனுபவித்தைவிடவும் மற்றவர்களுடன் பக்திப்பெருவெள்ளத்தில் பங்கு கொள்ள வைப்பதே பாகவதப்பெரு நெறி என்பதாகும்...முந்தைய  பாட்டு ஒன்றில் நாயகப்பெண்பிள்ளை  என்றாய்  என்ன ஆச்சர்யமான அர்த்தம்  தெரியுமா  நயதி இதி நாயக  தலைமை ஏற்று நடத்திச்செல்லும் திறமை உடையவளையே நீ  அழைத்தாய்!பிள்ளைகளை எல்லாம் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு தூயபக்தியை வழிகாட்ட திறமைமிக்க தலைமை வேண்டும் இல்லாவிட்டால் மழலைப்பட்டாளம் திக்கு தெரியாமல் போய் விழுந்துவிடும்..தலைமைப்பண்பென்றால் அதில்  ஆழ்ந்த தேர்ச்சி வேண்டும் அதன் முதிர்ச்சி  முகத்தில் தெரியும் அதான் தேசமுடையாய் என்றாயோ? ஆனால்  இந்தப்பாட்டில்  அருங்கலமே  என நீ போற்றி மகிழும் பெண்ணாக  இருக்கிறாள்  கோதை உன்பாதை சரியனாதுதான் அம்மா!  நாளை  உலகம்   கோதை கண்ட பாதை என  உன்னைப்பற்றி  எழுதும்”

“ என் பாதைக்கான  வழிகாட்டி நீங்கள் தானே அப்பா?  அதனால் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே’ என்று உலகம் என்னப்போற்றிப்பாடுவதையே நான் விரும்புகிறேன்!”

பெரியாழ்வார்  பிரமிப்புடன் மகளைப்பார்த்தபடியே இருந்தார்!

நோற்றுச்சுவர்க்கம் புகுகின்றவம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல்திறவாதார்
நாற்றத்துழாய்முடி நாராயணன், நம்மால்-
போற்றப்பறைதரும் புண்ணியனால், பண்டொருநாள் -
கூற்றத்தின்வாய்வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றுமுனக்கே பெருந்துயில்தான்தந்தானோ
ஆற்றவனந்தலுடையாயருங்கலமே!
தேற்றமாய்வந்து திறவேலோரெம்மாவாய்!
 


 
 
. .

--
 
 

7 comments:

  1. வணக்கம்

    மிக அருமையாக பதிவை எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அந்த அரங்கத்தான் உள்ளத்தில் அமர்ந்தவர்க்கு மட்டுமே
    இந்த இலக்கியத்திறன் கொண்டு எழுதிட இயலும்.

    சுப்பு தாத்தா
    மீனாட்சி பாட்டி.
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. சுப்புத்தாதாக்கும் மீனாட்சிபாட்டிக்கும் அநேக நமஸ்காரங்கள் ...எத்தனை மனம் திறந்து பாராட்டி இருக்கிறீர்கள் இப்படி உங்களை பாராட்டச்சொன்னதும் அரங்கனோ! யான் பெற்ற பேறு இது நன்றி சுப்புத்தாத்தா.

      Delete
  3. உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம்
    கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி’ வழிபட்டால் அவன் நம்மைத்தேடிவருவான் .....

    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  4. இந்த ஆண்டாள் பாசுரங்களில் ஒன்றை கவனித்தீர்களா?.எல்லாமே தம் தோழியரை தூக்கத்திலிருந்து எழுப்பும் பாடல்கள்.அதுவும் எப்படி தட்டியோ குலுக்கியோ ஆரவாரமாகவோ அல்ல.தோழிகளை நளினமாக கூப்பிடும் அழகே ஒரு அழகு. .இளம் கிளியே, செல்வ சிறுமியே,
    அருங்கலமே,நாயக பெண் பிள்ளாய்,கோதுகலமுடைய பாவாய் மாமன் மகளே,என்றெல்லாம் விளிக்கிறாள்,சிறு குழந்தையை எழுப்பும் .ஒரு தாயின் பரிவு தெரிகிறது..எல்லாம் எதற்காக?தேவாதி தேவனை அடைவதற்காகத்தான்.தான் மட்டும் உயர்ந்தால் போதாது தன்னை சார்ந்தவர்களும் மேன்மை அடையவேண்டும் என்கிற உதார குணத்தினால்.தான் இந்த நோன்பு நூற்கபட்டதோ

    ReplyDelete
  5. அருமை...... அருமை.....

    திருவரங்கத்தில் ஆண்டாள் கண்ணாடி அறை சேவையை இச்சமயத்தில் தரிசிக்க முடியாத ஏக்கம் மனதுக்குள்....

    ReplyDelete
  6. அது என்ன கண்ணாடியறை சேவை?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.