Social Icons

Pages

Saturday, December 28, 2013

போதரிக்கண்ணினாய்!

 
 
 
 
 
என்னம்மா கோதை  இன்று மிகவும்  படபடப்பாக இருக்கிறாயே?
 
பெரியாழ்வார்  வியப்புடன் மகளைப்பார்த்துக்கேட்டார்.
 
ஆமாம் அப்பா....  ராமனை சினம் கொள்ளவைத்த ராவணனை நேற்றெல்லாம் நினைத்தபடி இருந்தேன்.. இன்று காலை எழும்போதே   பொல்லா அரக்கர்கள் சிலரின் நினைவுவேறுவந்துவிட்டது...”
 
அதனால் என்ன  அம்மா? பள்ளத்தில் மேயும் பறவியுருக்கொண்டு கள்ள அசுரன் வருவானைத்தான் கண்டு, புள்ளிதுவென்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட’ என்று நான் முன்பே  அவன்  பெருமையைபபடிவிட்டேன்.  பொல்லா அரக்கர்கள் தான் சிலர்!
 
 அவர்களின்  அரக்க குணத்தை  வேரோடு அழித்தவனின்  கீர்த்தியைப்பாடினால் மனம் நிதானம் அடையும்...போய்வாகோதை நோன்புக்கு நேரமாகிவிட்டதே  இன்னமும் உறங்கும் உன் தோழிகளை எழுப்பிவிடு...”
 
சரி அப்பா
 
 
கோதை  அந்த அழகான கண் கொண்ட தன் தோழிப் பெண்ணின் இல்லம் முன்புவந்து நின்றாள்
 
 
 
புள்ளின் வாய்க்கீண்டானை பொல்லா அரக்கனைக்கிள்ளிக்களைந்தானை என்று  ஆரம்பித்தாள் இன்னமும் நேற்றைய  ராம சினம் நெஞ்சிலேயே இருந்தபடியால்,,
 
 கொக்கின் உருவங்கொண்டு  அசுரன் ஒருவன்சென்று யமுனைக் கரையில் கண்ணபிரானை விழுங்கிவிட, அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப்போல எரிக்கவே, அவன் பொறுக்கமாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்த நினைக்கையில், கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இரு கைகளினாலும் பற்றி விரிவாகக் கிழித்திட்டனன்
 
 
“கிள்ளிக் களைந்தானை” என்ற சொற்போக்கால் இறையும் வருத்தமின்றிக் களைந்தமை தோற்றும்.  கிராமங்களில் பூச்சி பட்ட இலைகளைக் கிள்ளிப் போடுவது  போலக் களைந்தான்.
 
பொல்லா அரக்கன் என்றது ஏன்? அரக்கர்குலத்தில் பிறந்த விபீஷணன் ராமனிடம் சரணாகதி செய்தவன் அவன்  பொல்லா அரக்கன் அல்ல.  ஆகவே அப்படிச்சிலரைத்தவிர்த்து  சொல்ல நினைத்தவள்  பொல்லாதவர்களான அண்ணலுக்கு  ஊறுவிளைவித்தவர்களை அப்படிக்குறிப்பிடுகிறாள்.
 
 
கீர்த்திமைப்பாடிப்போய்....  இப்படிப்பட்ட பெருமானின்  மகிமைகளை(கல்யாண குணங்களை) ப்பாடிச்செல்வோம்
 
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார்... நமது தோழிப்பெண்கள் எல்லாரும் நோன்பு நோற்குமிடத்துக்குப்போய்விட்டனர்.
 
 
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!

இதற்கு ஆன்மீக விளக்கமும் அளிக்கப்படுவதுண்டு!
வெள்ளி என்பது காதல் கிரகம் (வீனஸ், சுக்கிரன்)
வியாழன் என்பது அறிவுக் கிரகம் (ஜூப்பிடர், குரு)

இங்கே பெண்கள் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க, அவர்களை எழுப்புகிறாள் கோதை!  கண்ணனுடனான  பிரேமைக்கு  காதல் போதும் அறிவு அடங்கும்.. பக்தியில் காதல்  எழுந்துவிட்டதாம் அறிவு உறங்கிவிட்டதாம்!

முன்னுள்ள பிரம்ம முகூர்த்தம் என்னும் காலத்தில், வானிலே விடி வெள்ளி தெரியும்!

விஞ்ஞான விள்க்கமாக சிலர் இப்படியும் சொல்கிறார்கள்.

அதிகாலை சூரியன் உதயம் ஆவதற்கு சற்று முன்னர், அதிக வெளிச்சம் இல்லாததால், பூமிக்கு மிக அருகில் உள்ள வெள்ளிக் கிரகம் (Venus) ஒரு நட்சத்திரம் போல தெரியும்! வெறும் கண்ணாலேயே பார்க்கலாம்!

ஆனால் வியாழன் (Jupiter)?
அவ்வளவு சீக்கிரம் தெரியாது! தன் சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிக அண்மையில் வரும் போது மட்டுமே தெரியும்!
 
புள்ளும் சிலம்பினகாண்...பறவைகளும்  குரல் கொடுத்துவிட்டன.
 
 
போது அரிக்கண்ணினாய்...
 
; - போது – உலாவுகின்ற, அரி கண்ணினாய் - மானினுடைய கண்போன்ற கண்ணையுடையவளே!  என்பது ஒரு பொருள்; (பல பொருளொரு சொல்லாகிய ஹரிஎன்ற வட சொல், அரி எனத் திரிந்தது.) போது – என்றுபூவாக, குவளைப்பூவையும் மான் கண்ணையுமொத்த கண்ணையுடையவளே!  இரண்டாம் பொருள்.  அரி என்று வண்டாய் பூவிற்படிந்த வண்டுபோன்ற கண்ணுடையவளே!’  மூன்றாம் பொருள்.  அரி என்று சத்ருவாய், புஷ்பத்தின் அழகுக்குச் சத்ருவான கண்ணழகுடையவளே!
 
 
குள்ளக்குளிர – ‘கத்தக்கதித்து’ ‘பக்கப்பருத்து’ ‘தக்கத்தடித்து’  ‘கன்னங்கறுத்து’ ‘செக்கச் சிவந்து’ என்பன போன்ற ஒருவகைக் குறிப்பிடைச்சொல்.  .
,
குடைந்திநீராடாதே... துளைந்து நீராடாமல்
பள்ளிக்கிடத்தியோ..படுத்துக்கிடக்கலாமோ

பாவாய்..பெண்ணே
நீ நன்னாளால்....நல்லநாளில் நீ

கள்ளம் தவிர்ந்து.....கிருஷ்ணனை நீமட்டும் தனியே நினைத்து  சுகம்பெறும் அந்த கள்ளத்தனத்தை நீக்கி
கலந்தேலோரெம்பாவாய்...எல்லோருடனும் கலந்து அனுபவிக்க வாராய்!

“வந்துவிட்டேன் கோதை!” என்று  அந்த அழகியகண்ணைக்கொண்ட பாவை கதவைத்திறந்துவெளியே வந்தாள்!



புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்!
 
 
. .
Reply
Forward
 

6 comments:

  1. அருமையான தகவல்களுடன் ரசிக்க வைக்கும் பதிவு...நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ரசிக்க வைக்கும் பகிர்வு... அருமை அம்மா.

    ReplyDelete
  3. சிறப்பான விளக்கம்..... ரசித்தேன்.

    ReplyDelete
  4. 'வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று' இதற்கு உங்கள் விளக்கம் ரசிக்க கூடியதாக இருந்தது.உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மிக்க நன்றி கேபி சார் வெங்கட்நாகராஜ் சே குமார் டிடி அனைவர்க்கும்!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.