Social Icons

Pages

Monday, January 13, 2014

சங்கத் தமிழ்மாலை முப்பதும் .....

வங்கக் கடல் கடைந்த, மாதவனை, கேசவனை,
திங்கள் திரு முகத்து சேய் இழையார், சென்று, இறைஞ்சி,
அங்கு அப் பறை கொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங் கமலத் தண் தெரியல், பட்டர் பிரான் கோதை சொன்ன,

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே,
இங்கு இப் பரிசு உரைப்பார், ஈர் இரண்டு, மால் வரை தோள்,
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று, இன்புறுவர் எம் பாவாய்!



*********************************************************************************


‘வங்கம் விட்டுலவும் கடல்  பள்ளியானை..’  என்று பெரியாழ்வார்  தனது பாசுரம் ஒன்றை முணுமுணுக்கவும் கோதை,” என்னப்பா  வங்கமா?  கப்பல் என்றா  பொருள் சொல்கிறீர்கள்?’ எனக்கேட்டாள்.

கடலை அன்று அவன் கடைந்தபோது எங்கும் சுழன்ற மலைகளும் அலைகளும் கப்பல்போலக்காட்சி அளித்த  கற்பனையாகவும் கொள்ளலாம் கோதை .. ஸ்ரீயபதியானவன் அவன் அதாவது  திருமாமகள் தலைவன் மாதவன்..

ம்ம் அப்புறம்?

 அவன் கேசவன்  கண்ணபிரான்... தமிழில் வல்லமை கொண்ட நீ என்னை சோதிக்கிறாயா கோதை? கண்ணனுக்குப்பூமாலையையும்,பாமாலையையும் சூட்டுகிறாய்!

 அவனை மனத்தால்  ஆள்கின்றாய் ஏன் ஆண்டும்விட்டாயே ! நீ ஆண்டாள் !

அப்பா! மகிழ்ச்சியாக இருக்கிறது ஆண்டாள் என்னும் பெயரை அகிலம் நினைவில் கொள்கிறமாதிரி இன்று பாசுரம் பாடி நிறைவு செய்யப்போகிறேன்.

வாழ்த்துகள்  என் அருமை மகளே!

ஆண்டாள்  கண்ணன் இருப்ப்பிடம் வந்தாள்.  வழக்கம்போல தோழியரும் உடன்வந்தனர்.

"பெண்களே நீங்கள் வேண்டிய குற்றேவல்களை நான் கொள்கிறேன்..உங்களுக்கு இது பேறுதான் என நினைக்கிறீர்கள் ஆனால் நீங்கள் பெற்ற பலனை பின்னே வருவோர் இழக்க வேண்டியது தானா?””

கிருஷ்ணன் இப்படிக்கேட்கவும்  ஆண்டாள்”வங்கக்கடல் கடைந்த மாதவனைக்கேசவனை..’ என்று  பாட ஆரம்பித்தாள். தோழியரும் சேர்ந்துகொண்டனர். மாதவன்  ..அன்னையைச்சரணட்டைந்து தன்னைச்சரணம் அடைவோர்க்கு அருள் தருபவன்  அவன் மாதவன்.. ஹிரண்ய கேசஹ என்னும்  வேதம் புகழும்படியான கேசம் உடையவன். கடல்கடையும்போது அலைந்திருந்த மயிர்க்கற்றைகளின் அழகு. கேசி எனும் அரக்கன் தன்னிடத்தில் அன்புடையார் அடையவிடாமல்  தடுத்தபோது அவனை அழித்தவன்.

“அழகான முகங்கள்  உங்களுக்கெல்லாம்””

“திங்கள் திருமுகத்து..”  உன்னால்  உன் அருளால்  கதிர்மதியம்போன்ற உன் முக ஒளியால் மதிமுகம் எங்களூக்கும் அமைந்தது. அதுவும் திரு முகம்...
சேயிழையார் சென்றிறைஞ்சி..... ஆபரணங்களை அணிந்ததால் அழகு கூடப்பெற்ற அயர்குலப்பெண்கள்  உன்னை அடைந்து  பணிந்து வணங்கி

அங்கப்பறை கொண்ட ஆற்றை...   திருஆயர்பாடியில் தங்கள் பலனை பெற்றுக்க்கொண்ட வரலாற்றினை

அணி புதுவை.... அழகிய ஸ்ரீவில்லிபுத்தூர், மாடமாளீகைகளும்  கோபுரங்களும் திருக்கோயில்களும் கொண்ட ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்த

பைங்கமலத்தண் தெரியல்.... பசுமை பொருந்திய  தாமரை மலர்கொண்ட குளிர்ந்த மாலை சூடிய..

பட்டர்பிரான் கோதை...பரமனுக்கே  பல்லாண்டு பாடிய பட்டர்பிரான்
‘திருவில் பொலி மறைவாணன்’ என்பார்கள் பெரியாழ்வாரின்திருக்குமாரியான கோதை -ஆண்டாள்

சொன்ன சங்கத்தமிழ்மாலை.முப்பதும்... அருளிச்செய்த திரள் திரளாக  அனுபவிக்க வேண்டிய தமிழ்மாலையான இம்முப்பது பாசுரங்களையும்
...’சங்கமிருப்பார் போல் வந்து..’என்றோம் முன்னே கூடி இருந்து குளிர்வோம் என்றோம்.. அனைவரும்  சேர்ந்த சமூகம்  உலகுக்கு நல்லது.இது சங்கத்தமிழ்மாலை..மாலுக்கு  உகந்த மாலை.

தப்பாமே இங்கு இப்பரிசுரைப்பார்...
இவைகளை தப்பாமல்  ஓதுபவர்கள் பாடுபவர்கள்

ஈரிரண்டு மால் வரைத்தோள்...  நாலுபெரிய மலைகள் போன்ற தோள்களை உடைய...மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா  என்றார் பெரியாழ்வார்.

செங்கண் திருமுகத்துச்செல்வத்திருமாலால்... சிவந்த கண்களையும் அழகிய முக மண்டலத்தையும் உடைய  திருமாலால்...திருமகளுடனான  மால்
எங்கும் திருவருள் பெற்று.....

எல்லா இடத்திலும் அன்னையுடனான  அண்ணலின் அருள் பெற்று...
இன்புறுவர் எம்பாவாய்///மகிழ்வார்கள்  மக்களே!

“ஆஹா  ஆண்டாள்! தமிழால்  என்னை ஆண்டாள்! உன் பொதுநலப்பாங்கு என்னைக்கவர்ந்தது..  எல்லா இடத்திலும் எல்லாக்காலத்திலும் இந்தப்பாசுரம்  சொல்பவர்களை நானும் அன்னையும் அருள் அளித்து உயர்த்துவோம் இது உறுதி”

  பெருமானின் புன்னகையில்   மனம் குளிர்ந்து கரம் குவித்து மறுபடி வணங்கினார்கள்  பாவையர்களும்!

************************************************************
திருப்பாவை! இந்தப்பாசுரம் பிறந்த  கதையை  முப்பது நாட்களும் அனுபவித்தோம்! விளையாட்டும் வேடிக்கையுமாக எவ்வளவு மகத்தான உண்மைகளை  -உயர்ந்த பொருளை- ஆண்டாள் வெளியிடுகிறாள்!

இந்தப்பிரபந்தம் பிறந்த கதையே   வசீகரமானதுதன.
மகான் இராமானுஜர்(1017- 1137)  வளர்த்துவிட்ட பாவையை ஸ்ரீ வேதாந்த தேசிகர்(கிபி 1268-1369) முதலான ஆச்சாரியர்களும் வளர்த்துவிட்டிருக்கிறார்கள்.
வடமொழிப்பேராசிரியர்களும் தமிழ் அறிஞர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு திருப்பாவையின்  அருமை பெருமைகளை போற்றி அவ்ந்திருக்கிறார்கள்.பிரசித்தி பெற்ற விஜயநகரச்சக்கரவர்த்தியான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர்’ஆமுக்த மால்யதா’ என்னும் தெலுங்கு நூலிலும் திருப்பாவைச்செல்வியான  சூடிக்கொடுத்த  சுடர்க்கொடியைக் குறிப்பிடுவது வழக்கம்.

**************************************
திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே1
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயர் அரங்கற்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே!
மருவாறும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே!



ஆண்டாள் திருவடிகளே சரணம்.!






8 comments:

  1. அருமை அம்மா...
    பாடலும் அதற்கான விளக்கமும்...

    ReplyDelete
  2. விளக்கம் மிகவும் அருமை... நன்றி...

    தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சிறுவயதிலேயே கோதை பக்தியின் உச்ச நிலையை அடைந்து இயற்றிய பாடல்கள் திருப்பாவை.பக்தி இருந்தாலே புலமையும் கூட வரும் போல .
    மார்கழி நோன்புக்காக ஆண்டாள் பாடிய அந்த முப்பது பாடல்களையும் தப்பாமல் அனுதினமும் சுவை குறையாவண்ணம் அழகுற விளக்கம் கூறினீர்கள்.கோதையின் பாடல்கள் இனியதும் உட்சார்ந்த கருத்து உள்ளவை.படிக்க படிக்க அதன் நயமும் விவரிப்பும் பக்தியும் நம்மை அசர வைத்தது.இந்த பக்தி மாலையை தினமும் படிக்க ஊக்குவித்த உங்கள் தொண்டும்,விளக்கிய பாங்கும் மிக பெரிது.உங்களுக்கு எங்களுடைய மனப்பூர்வமான நன்றி .

    ReplyDelete
  4. ஆண்டாள் திருவடிகளே சரணம்.!

    ReplyDelete
  5. அனைத்து பாசுரங்களுக்கும் அருமையாக விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. திருப்பாவை பொருளறியச் செய்யும் பணியில் பெரியாழ்வார் பாடல்களையும் பிறர் பாடல்களையும் ஆன்காங்கே சேர்த்து அழகான கற்பனை வளத்துடன் எடுத்துச் சொல்லி மிக அற்புதமான பணியை முப்பது நாட்களும் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். நன்றி. ஆண்டாளை ஆண்டாள் நீங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு அப்பாதுரை... ஆண்டாளை ஆண்ட ஆண்டாள் நானா?:) ஆஹா இதெல்லாம் கொஞ்சம் அதிகம் அல்லவா? நன்றி மிக ..

      Delete
  7. கேபி சார் டிடி சேகுமார் மற்றும் மாதவன் அனைவர்க்கும் நன்றி..(தாமதம் செய்துவிட்டேன் மன்னிக்க)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.