Social Icons

Pages

Thursday, January 23, 2014

ஆராதனா..(சிறுகதை)


சின்னக்கடிதம்தான் ஆனால்  அது மிகப்பெரிய விஷயத்தை தெரிவித்துவிட்டது. என்றாவது ஒருநாள் இப்படி ஒரு சம்பவம் நேரிடலாம் என நினைத்து அச்சப்பட்டுக்கொண் டிருந்த அகிலாவிற்கு  கடிதத்தைப்படித்ததும்  கண்கலங்கித்தான் போனது. அலுவலகம் சென்றிருந்த  மகனுக்கு உடனே   டெலிபோனில்  விஷயத்தை தெரிவித்தாள்
 
 
அடுத்த சில நிமிடங்களில்  மூச்சிறைக்க வீடுவந்த திவாகரிடம் கடிதத்தைக்காட்டினாள்.”எட்டுவருஷ  உறவை வெட்டிக்கொண்டு போய்விட்டாள் ஆராதனா!.எப்படிடா அவளுக்கு  நம்மைப்பிரிய மனசுவந்தது?  என்னைவிட அவளுக்கு உன்மேல் எத்தனை பாசம் நேசம் அன்பு எப்படிவேண்டுமானாலும் வைத்துக்கொள் அதையெல்லாம் மறந்து போனமாதிரி தெரியலை திவா  எல்லாத்தியும் துறந்துபோன மாதிரி ஒரே வாக்கியத்தில்  எழுதிவிட்டாளே, இந்தப்பிரிவை நாம் எப்படியடா  தாங்கப்போகிறோம்?”
 
அகிலாவின்  நா தழுதழுக்கும் வார்த்தைகளில் நிலைகுலைந்துபோனான் திவாகர்.
 
மௌனம் மட்டும் சிலக்கணங்கள் பேசிக்கொண்டிருந்ததை  டீபாய் மீதிருந்த  தொலைபேசி ஒலி எழுப்பிக் கலைத்தது.
 
“சீக்கிரம் ரிசீவரை எடு திவா  நம்ம ஆராதனாவாகத்தான் இருக்கும்...பஸ் ஸ்டாண்டுபோய் மனசு மாறி இருக்கும்  அவளால் நம்மைவிட்டெல்லாம் இருக்கமுடியாதுடா...வந்துடுவா பாரேன்..போனை எடு சீக்கிரம்”
 
திவாகரும் ஆர்வத்துடன்  ரிசீவரை எடுத்தான்.”ஹலோ’ என்பதற்குபதிலாக,”ஆராதனா?” என்று  பரபரப்பாய் கேட்டான்.
 
“ஆராதனாவும் இல்ல அவரோஹனாவும் இல்ல..நான் பூஜா ,உங்க தர்ம பத்தினி” என்று  கிண்டலாய் எதிர்முனையில்குரல்வரவும் திவாகர் ஏமாற்றமுடன்,”நீயா?” என்றுகேட்டுவிட்டு,”என்ன அதிசியம் செல் போன்லதான் எனக்குப்பேசுவாய் இன்னிக்கு என்ன வீட்டுபோனுக்கு செய்கிறாய்?” என்றான் சற்று எரிச்சலுடன்.
 
 ”வாயும் வயிறுமாய் இருக்கிறவளை  வையாதடா திவா”  அகிலா மெல்லியகுரலில் அவன் அருகில் வந்து  சொன்னாள்.
 
“என்ன சாருக்கு மூட் அவுட் போலிருக்கு? ஏன் அங்கே அந்தத்  திருநங்கை அருகில் இல்லையோ?”  என்று  நக்கலாய்க்கேட்கவும் திவாகருக்குக்கோபம் தலைக்கேறிவிட்டது. கல்யாணமாகிவந்த இந்த  ஒருவருஷத்தில் ஆராதனாவை  பூஜா அவமதிக்காத நாளே இல்லை. 
 
"உன் புருஷன் உயிரைக்காப்பாத்தின தெய்வம்!  அவள் மட்டும் இல்லையென்றால் அன்னிக்கு சாலைவிபத்தில் திவாகர் போய்ச்சேர்ந்திருக்கணும், செல்போனில் பேசிக்கொண்டே ரோடைக்கடந்து கொண்டிருந்தவன் கண்ணில் எதிரில்  தலை தெறிக்க வந்துகொண்டிருந்த லாரி, மோதித்தள்ள இருந்ததை எங்கிருந்தோ ஓடி வந்து கையைப்பிடிச்சி  இழுத்துக்கோண்டு சாலைஓரம் கொண்டுபோய் காப்பாத்தின  மனித தெய்வம்! அன்றிலிருந்து அவள் எங்க குடும்ப உறுப்பினர் ஆகிவிட்டாள்.அவளைக்கரிச்சிக்கொட்டாதே பூஜா...உன்னைவிட  ஓரிரு வருஷம்தான் அவள் மூத்தவள்!” என்று அகிலா ஒருமுறை  பூஜாவிடம் சொன்னபோது,”  இன்னொண்ணும் கேள்விப்பட்டேனே  ஆராதனா  உங்க மகன் மேல காதல் பைத்தியமா இருந்ததாக? எல்லாத்தியும் மறைச்சி என்னைக்கல்யாணம் செய்துகிட்டீங்க இல்ல?  நல்ல படிப்பு நல்ல வேலை பார்க்கவும் அம்சமா இருக்கார் மாப்பிள்ளைன்னு எங்கப்பா ஏமாந்துபோயிட்டார். “ என்று சீறினாள்.
 
“என்னம்மா உன்னை நாங்க ஏமாத்திட்டோம்? ஆராதனா எங்க வீட்டோடு இருக்கற விஷயத்தை சொல்லவில்லைதான் அது மகா குத்தமா என்ன? ஆனா ஆராதனா   என் மகன் மேல  காதல் பைத்தியமா  இருந்ததை  பக்குவமா சொல்லி அவள் மனதை மாத்தித்தான்  எங்களோட தங்க வச்சிருக்கோம்.யாருமில்லாத அனாதைக்கு அடைக்கலம்  தந்து ஆதரிப்பதை கேவலமாய் பேசாதே பூஜா ! ஆராதனா படித்தவள் புத்திசாலி சமுக சேவகியும் கூட. அவள் உன் வாழ்க்கையில் குறுக்கே வரமாட்டாள்”
 
 
ஆனாலும் பூஜாவின் அலட்சியமும் ஆராதனா மீது அவள்கொண்ட அருவெறுப்பும்தான்  இன்றைக்கு அவளை வீட்டைவிட்டு வெளியேறச்செய்துவிட்டது என்பதை திவாகரும் அகிலாவும் அறியாமல் இல்லை.
 
ஆராதனா,  ஆறுமுகமாயிருந்து பிறகு மாறிய ஒரு திருநங்கைதான். அதனால் வீட்டாரால் புறக்கணிக்கப்பட்டு  பல அல்லல்களிடையே  சில நல்ல உள்ளங்களின்சில நல்ல உள்ளங்களின் உதவியால்  படித்துமுன்னேறியவள். திருநங்கைளைப் பற்றி சமுதாயத்தில் சரியானவிழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அவர்களைக்கேலியாகவும் அருவெறுக்கும் ஜீவன்களாகவும்  நோக்கும் மனிதர்களிடையே அகிலா  முற்றிலும் மாறுபட்டவளாய்  இருந்தாள். ஏற்கனவே  இறந்துபோன கணவன் விட்டுப்போயிருந்த   வள்ளல்குணமும் இயற்கையாக அமைந்த இரக்க குணமும் சேர்ந்து ஆராதனாவை  நிரந்தரமாய் தன்னோடு வைத்துக்கொள்ள   எண்ணம் எழுந்தது.  தாய் சொல்லை என்றுமே திவாகர் தட்டியதில்லை .ஆராதனா  அகிலாவின் வீட்டில் அடைக்கலமானாள். ஆரம்பத்தில்  மனதளவில் பெண்ணாக ஆகிவிட்டதாலும்  உடலும் அந்த மாற்றத்திற்குத்  தயாராகிவிட்டதாலும் திவாகரின் மீது ஆராதனாவிற்குக்காதல் பிறந்துவிட்டது.
ஏச்சும் எள்ளலும் நிறைந்த  சமுதாயத்தில் அன்பையும் பாசத்தையும்  அளவுக்கு அதிகமாகவே  காட்டும்  குடும்பத்தில்  மனம் ஒன்றித்தான் போனது.
 
அகிலா  ஆராதனாவிடம்  பக்குவமாய் சொல்லிப்புரியவைத்தாள், திவாகரை  மணக்க  இயலாதென்பதைப்புரிந்து்  கொண்டாள் ஆராதனாவும். அதற்குப்பின் அவள் திவாகரைக்  காதல்கண்ணோட்டத்தில் பார்க்கவே இல்லை . திவாகரின் திருமண ஏற்பாட்டில்  மனமுவந்து பல வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தாள். உற்றுப்பார்த்தாலே ஒழிய அல்லது  பேச்சுக்கொடுத்தாலே தவிர ஆராதனா திருநங்கை என்கிற விவரம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.அந்த வனப்பும்  உடல் நிறமும்  பெண்மையின் நளினமும் அவளை நங்கையாகவே அடையாலம் காட்டின.
 
இந்த சமுதாயம் ஏன் இன்னும் திருநங்கைகளை சரியாகப்புரிந்துகொள்ள மறுக்கிறது? ஆராதிக்க  வேண்டியவர்களை  ஏன் அலட்சியப்படுத்துகிறது?
திருநங்கைகள் யானைபலம் மிக்கவர்கள்!
 
யானை பலம் என்று பலத்திற்கு உண்மையான உதாரணமாக திகழும் யானைக்குத் தனது பலம் பற்றிய தெளிவானதொரு அறிவு இருந்தால், பாகனின் கட்டளைக்குப் பணியுமா? அல்லது தனது உணவுக்காக மனிதனிடம் பிச்சை எடுக்குமா?

அதுபோலவேதான் திருநங்கைகளுக்கும் தனது பலம் என்ன என்பது தெரியாமல் போய், பலவீனம் என்ன என்பது மட்டுமே மிகவும் தெளிவாக தெரிந்திருக்கிறது.  அதனால்தான் ஆராதனா  இன்று ஒற்றை வாக்கியத்தில்”உங்களை  எல்லாம் விட்டு நீண்டதூரம் விலகிச்செல்கிறேன்” என்று  எழுதிவைத்துவிட்டுப்போய்விட்டாள்! கோழை! தன் பலம் தெரியாத கோழை!
அகிலா  சேலைத்தலைப்பில் கண்ணைத்துடைத்துக்கொண்டாள்.

திவாகர் பெருமூச்சுவிட்டபடி ரிசீவரை கீழே வைத்தான்.
 
“அம்மா!  இவளால்தான்  ஆராதனா  இப்படி நம்மைவிட்டு விலகிப்போவதாய்  கடிதம் எழுதிவச்சிட்டுப் போயிட்டா..பாவம்மா எங்கபோயி எப்படி திண்டாடுகிறாளோ? இன்னமும் நம் சமூகத்தில் திருநங்கைகளை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு ஆதரிக்க பலருக்கு மனம் இல்லை அம்மா  ..கேலியும் கிண்டலும் தான்  அவர்கள் பார்வையில்..திருநங்கைகள் என்றால், கை தட்டி, பாலியல் தொழில் செய்து பிழைப்பவர்கள் மட்டுமே என்றிருந்த சமூக அவலநிலையை மதிப்புமிக்கதொரு நிலையாக மாற்றி அவர்களுக்கும் -சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சம நிலையை உருவாக்கி தர வேண்டும் என்ற எண்ணத்தை   பரவலாய்  செயல்படுத்த நாம்  திட்டமிட்டிருந்தோம்..  அதற்கு ஆராதனாவை  முன் மாதிரியாய் நிறுத்த நினைத்திருந்தோம் எல்லாவற்றையும்  பூஜா சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டாள்.“

“ஆமாம்ப்பா திவா...உனக்குக்குழந்தைபிறந்ததும் முதல்ல ஆராதனாவைத்தான்  ஆசிர்வாதம் செய்ய  சொல்லணும்னு நினைத்தேன் அதைப்போல  உன்னதம் ஏதுமில்லை...உனக்குக்கொடுத்துவைக்கலை திவா...ஆனாலும் நாம விடாம அவளைத்தேடிக் கண்டுபிடிக்கணும் ...இந்தவீட்டில்   நீ பூஜாவோட வாழ்ந்துகொள்ளப்பா ஆனா வேற வீட்டில் அவளோட நான் வாழத்தான் போறேன்”
 
“என்னம்மா நீங்க?  சின்ன வயசுலேயே அப்பா நிரந்தரமா போயிட்டார்.  இப்ப நீங்களும் என்னைவிட்டுப்பிரியப்போறேன்னு  கனவிலும் சொல்லாதீங்கம்மா...வாழ்க்கையில் பிடிப்பு இருப்பதே மனசுக்கு அணுக்கமான சில மனி்தர்களாலும்  நினைவில் நிற்கும் சில  நல்ல விஷயங்களாலும்தான்,,”
 
 
பூஜாவின் சீமந்தம் முடிந்து பிறந்தவீடுபோகும்போது  வழக்கத்தைவிட பூரிப்பான முகமுடன் சென்றாள்.ஆராதனாவைத்  துரத்திவிட்ட மகிழ்ச்சிதான் அது என்பதை அகிலாவும் திவாகரும் புரிந்துகொண்டு உள்ளுக்குள் வெந்துபோனார்கள்.
 
இடைக்காலத்தில்  இருவரும் ஆராதனாவைத்தேட எடுத்த முயற்சிகள் ஒன்றும் பலனளிக்கவில்லை.
 
திவாகரை அச்சில்வார்த்தாற்போலிருந்த மகன் கௌதமுடன்  பூஜா மீண்டும் வீடுவந்தவள்  கைக்குழந்தையை அகிலாவிடம் விட்டு வேலைக்குப்போக ஆரம்பித்தாள்...அகிலாவால் தனி ஒருத்தியாய் குழந்தையைப்பார்த்துக்கொள்ள சிரமமாக இருக்கவே  “பூஜா! நீ வேலைக்குபோயாகவேண்டிய கட்டாயம் இல்லை .குழந்தைபிறக்கிறவரை பொழுதுபோக்குக்கா போனது சரி இப்போ குழந்தையை  பார்த்துக்கொள்ளணும்  தாய்ப்பால் குடிக்கும் குழந்தையை  பிரிஞ்சி  எட்டுமணி நேரம் வேலைக்குப்போயே ஆகணுமா?”

 எ்ன்று  கேட்டதும்தான் தாமதம்   குழந்தையைத்தூக்கிக்கொண்டுபோய்  அடுத்த தெருவில் இருக்கும்  தூரத்து உறவினர் வீட்டில்  விட்டுவிட்டாள்.
 
“ எனக்கு அவங்க அக்கா மாதிரி  பாவம் அவங்களுக்கு மூணும் பொண்ணு  ..என் பையனை ராஜா மாதிரி பாத்துக்கறேன்ன்னு சொல்லிட்டாங்க...“
 
கௌதமை  ஐந்துவயது வரை  அங்கேயே  விட்டுவிட்டு அலுவலகம் போக ஆரம்பித்தாள் பூஜா.. எப்போதாவதுதான் வீட்டிற்கே அழைத்துக்கொண்டுவருவாள்.திவாகருக்கே தன் மகன் முகம் மறந்துவிடும் போலாகிவிட்டது.
 
ஒருநாள் கூச்சலிட்டான்,”  இனிமேலும் கௌதமைக்கொண்டு அங்கே  விட்டாயானால்  நான் பொல்லாதவனாகிவிடுவேன்...சாது மிரண்டால் என்னாகும்  தெரியுமா?”
 
திவாகரின்  குரலில் சற்று வெலவெலத்துத்தான்  போனாள் பூஜா.
 
         “ஏன்மா   இனிமே பிரியா  வர்ஷா அதிதி கூட நான் விளையாட முடியாதாம்மா?” கௌதம் கேட்டபோது,”ஆமாண்டா அங்கேருந்து   உன் துணிமணி பொம்மை எல்லாம் கொண்டு வந்திடு..உங்கப்பா
கூச்சல்போடறாரே?” என்று முணுமுணுத்தாள் பூஜா 
 
ஆயிற்று, கௌதம்  வீடு வந்து நிரந்தரமாக  தங்க ஆரம்பித்து ஒருவாரமாகிவிட்டது.ஐந்து வருட
-- மாக அந்த மூன்று பெண் குழந்தைகளிடம் அதிகம் பழகியதாலோ என்னவோ கௌதம் பூஜாவைப்போல  அதிர்ந்து பேசாமல்  மிகவும்  மென்மையாக நடந்துகொண்டான் பழகும் விதத்தில்  ஒரு வித்தியாசம் தெரிந்தது

அன்று அவனுக்குப்பள்ளி விடுமுறை. பூஜா  அலுவலகம் போய்விட்டாள்.திவாகர் தலைவலி என  வீட்டில்  ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான்.
 
அகிலா  பேரனுக்குப்பிடித்த   சேமியா பாயசம் செய்துவிட்டு  கௌதமை  அழைக்க அவன் அறைக்குப்போனாள்.
கதவு சற்று  ஒருக்களித்து மூடப்பட்டிருந்தது.   தூங்குகிறானோ என்ற தயக்கமுடன் மெல்ல கதவைத்தள்ளியபடி உள்ளே சென்றாள் அகிலா.
 
அங்கே அவள் கண்ட காட்சி  தூக்கிவாரிப்போட   சட்டென திரும்பி ஹாலிற்குவந்தாள்.அங்கே  சோபாவில் சாய்ந்திருந்த மகனைத்தட்டி எழுப்பி தன்னோடு வரும்படி சைகை காட்டினாள். திவாகரும் குழப்பமாய் தொடர்ந்தான்.
 
இருவரும் ஓசைப்படாமல் கௌதமின் அறைக்குள் போனபோது  கண்ணாடிமுன் நின்று   தன்கண்ணுக்கு மை வைத்துக்கொண்டிருந்தான் கௌதம். பெண்குழந்தைகளின் கவுனை அணிந்திருந்தான்.  தலையில் பூவினை செருகி இருந்தான். லேசான வெட்கம் முகத்தில் தவழ தன்னைக்கண்ணாடியில் ரசித்துக் கொண்டிருந்தான்.

    
  அகிலாவும் திவாகரும்  அதிர்ச்சியும் குழப்பமுமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

***********************************************************************

நன்றி கிழக்குவாசல் மாத இதழுக்கு..டிசம்பர்2013 இதைபிரசுரம் செய்தனர்.மார்கழிப்பதிவு காரணமாக  இங்கே தாமதமாய் அளிக்க நேர்ந்தது! 
  
  

4 comments:

  1. Replies
    1. இனி பூஜாவின் (தண்டனை...?) நிலைமையை விட கௌதமனின் வருங்காலம்...?

      Delete
  2. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_19.html?showComment=1392782733232#c461818290231042950

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. சிறப்பான கரு! சிறப்பான கதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.