Social Icons

Pages

Saturday, January 04, 2014

திருவே துயிலெழாய்!

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்!
செப்பம் உடையாய், திறல் உடையாய், செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா, துயில் எழாய்!

செப்பென்ன மென் முலைச் செவ் வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை, நங்காய், திருவே, துயில் எழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்து, உன் மணாளனை,
இப்போதே எம்மை நீராட்டு! ஏல்-ஓர் எம் பாவாய்

************************************************************


”திருமா மகட்கினியான்   அவன்!”  யாருடனோ பேசிக்கொண்டிருந்த பெரியாழ்வார்   ஆழ்வார் பெருமான் ஒருவரின் பாசுர வரிகளைச்சொல்லி அவரை  அனுப்பிவிட்டு  மகளின் புறம் திரும்பினார்.அவள்முகம் என்னவோ  குழப்பமாகவே இருக்கவும்,”என்னம்மா  கோதை என்ன ஆயிற்று?’ என்று ஆதரவாய்க்கேட்டார்.

கோதை பெருமூச்சுவிட்டாள்..பிறகு,” ஆம் அப்பா  சற்றே குழப்பம்தான் மனத்தில்.. நேற்று நப்பின்னையை  மிகவும் வேண்டிக்கேட்டுக்கொண்டோம்...கண்ணனைத்தன முதலில்  வேண்டினோம்.. வாய் திறந்து  அவன் ஒரு வார்த்தை பேசி இருக்கக்கூடாதா  அப்பா?”  அழுதுவிடும்  குரலில் சொன்னாள்.
பெரியாழ்வார்  புன்னகையுடன்.” அவனை அடைவது  அத்தனை எளிதல்ல  அம்மா... மறுபடி நீ  அன்னையை வேண்டி அவனை அடைவதே முறை.. அவன் புகழைப்பாடு ஆனால் அவனை அடைய அந்தத்திருமாமகளையே  வேண்டிவணங்கு அம்மா” என்றார்.

“சரி அப்பா  “

கோதை  மறுபடி  நப்பின்னையும் கிருஷ்ணனும் துயில்கொண்டிருந்த இல்லம் முன்புவந்துநின்றாள்.

மலர்மார்பனையே மறுபடி  துயில் எழுப்பிப்பார்க்கலாமே எனத்தோன்றியது.


முப்பத்துமூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்!..


 அஷ்ட வசுக்கள் = 8
 ஏகாதச ருத்ரர்கள் = 11
துவாதச ஆதித்யர்கள் = 12
 அஸ்வினி தேவர்கள் = 2

என்று முப்பத்துமூவரையும்   அவர்களின்  கப்பம்(கம்பம் ( வடமொழிச்சொல் )என்பது கப்பமாகி உள்ளது.சிரக்கம்பம் என்பார்கள்.நடுக்கம்  என்பது கம்பம் ஆகும்.. ) நீக்கும்  மிடுக்குடையவனே....
அமரர் என்றால் மரணமற்றவர். கொன்றாலும் சாகாதவர்க்குமட்டும் உதவுவாயோ? உன்னைக்கணம் பிரிந்தாலும் மரண்மடையும் எங்களை  நோக்குவதில்லையே? அம்ருதம் உண்பவர்களுக்கே உதவுவது என்ற எண்ணமோ? சக்தி உள்ளவர்களுக்குத்தான் சர்வமும் செய்வாயோ? அபலைகளான எங்களை ஆதரிக்கலாகாதோ கண்ணா? ’எவ்வநோய் தவிர்ப்பான் எமக்கிறை இன்னகைத் துவர்வாய், நிலமகள்செவ்வி தோய வல்லான் திருமா மகட்கினியான்’  என்று உன்னை உன் அடியார்  பாடியது மெய் இல்லையோ?   உன்னைக்காணாத துன்ப நோயில் நாங்கள் வீழ்ந்திருப்பதைக்காணமாட்டாயா  கண்ணா?
உன் பக்தருக்கு இடர்வருமுன்னே  சென்று உதவுவது தானே உன் குணம்? அல்லது  அமரப்பதவியில் இருப்பவர்க்கு மட்டுமே தான் முன் நின்று  போய்  நடுக்கம் தீர்ப்பாயோ?எப்படியோ  கலியே   துயில்  கலைந்து  வா..’

“என்னடி கோதை   கண்ணனைப்போற்றிப்பாடாமல்  என்னன்னவோ சொல்கிறாயே?’ என்றாள் தோழி.

“செப்பமுடையாய்  திறல் உடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும்  விமலா  துயிலெழாய்” என்று கோதை  புகழத்தொடங்கினாள்.

‘அடியார்களிடத்தில் நேர்மையானவனே -- சாமர்த்தியமானவனே  பகைவர்க்கு வெப்பம் கொடுப்பவனே//கம்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே!  இப்போது எங்கள் வயிற்றில் காதல்கனல் கொழுந்துவிட்டெரிகிறதே  .. 

பரிசுத்தமானவனே....   ‘விமலன்  விண்ணவன்’ என்கிறார் பாணாழ்வார்.
திருப்பள்ளி எழுவாயாக...

 இப்படிக்கூப்பிட்டபோதும் கண்ணபிரான் எழுந்திருக்கவில்லை..

சட்டென  கோதைக்கு அப்பா சொன்னது நினைவிற்குவந்தது ..அதனால் மறுபடி  நப்பின்னையை  முன்வைத்து அவனை எழுப்ப தீர்மானிக்கிறாள்.

செப்பென்னமென்முலை செவ்வாய் மருங்குல்


நிதியை இட்டுவைக்கும் கலசம்போன்ற மென்மையான மார்புகளை உடையவளே
செவ்வாய் சிருமருங்குல்..சிவந்த அதரம் நுண்ணிய இடை கொண்ட
நப்பினை நங்காய் திருவே....நப்பின்னை எனும் உயர்ந்த பெண்ணே  திருமகளே!
நீ  திரு அவன் திருவுக்குத்திரு. ஸ்ரீய; ஸ்ரீ; என்றும் சொல்லப்படுபவன்..
துயிலெழாய்..உறக்கம் கலைந்து கொள்வாயாக

உக்கமும் தட்டொளியும் தந்து, உன் மணாளனை,
இப்போதே எம்மை நீராட்டு! ஏல்-ஓர் எம் பாவாய்



ஆலவட்டமும்(விசிறி) தட்டொளி(கண்ணாடி) இரண்டையும் நோன்புக்காக எங்களுக்குக்கொடு உன் மணாளனையும் கொடுத்து  எங்களை நீராட்டு..

பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை
வழிவாழ்வார் வாழ்வாராம் மாதோ-வழுவின்றி
நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்..

ஆழ்வார் வாக்கு இது.

இப்போதே என்பது  நன்றே செய்யவும் வேண்டும் அதனை இன்றே இப்போதே இந்தக்கணமே தாமதம் செய்யாமல் செய்யவேண்டும் என்கிற அன்புக்கட்டளை!

ஸ்ரீ கிருஷ்ணனுக்கு யமுனையில் திருமஞ்சனம்(அபிஷேகம்)  செய்யவேண்டும் அதற்குவேண்டிய ஆலவட்டம் தட்டொளி  தந்து அனுப்ப கோரிக்கைவைப்பதாகக்கொள்ளலாம்.


ஆலயங்களில் பெருமாளுக்கு விசிறி விடுவது திருவாலவட்டம் = திரு+ஆல+வட்டம்! 

அதே போல் பெருமாளுக்கு ஷோடச உபசாரம் முடிந்த பின்னர், கண்ணாடி காட்டுவது வழக்கம்! தட்டொளி சேவை  என்பார்கள்.






5 comments:

  1. விளக்கம் மிகவும் அருமை... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. எளிதான நடையில் புரியும்படியாக உள்ளது.
    போன பாசுரம் இந்த பாசுரத்திலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால் பகவானை ஆடியோ ,பாடியோ ,கூக்குரலிட்டோ, முறையிட்டோ ஆரவாரப்படுத்தினால் லேசில் மசிய மாட்டான். முழு சரணாகதி ஒன்றுதான் வழி.அதுவும் உடனேயே கிட்டும் என்பதில் நிச்சயமில்லை.
    ஆனால் நப்பின்னை தாயார் துணை செய்தால் கட்டாயம் அவன் மனம் இளகிவிடுமாம்.அவளுக்கோ மென்மையான கருணை உள்ளம்.துணை புரிவதற்கே காத்துகொண்டு இருக்கிறாள்..அதனால் தான் தாயாரை சேவித்து விட்டு பிறகுதான் பெருமாளை தரிசனம் செய்ய செல்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கேபிசார் தாயாரை சேவித்துபெருமாளை சேவிப்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள் நன்றி
      மற்றும் டிடிக்கும் நன்றி

      Delete
  3. Anonymous2:35 PM

    இவ்வளவு சிரமபடுத்தி தூங்குபவரை ஏன் எழுப்ப வேண்டும்.
    கடமை உணர்வு இருந்தால் அவரே சரியான நேரத்திற்கு எழுந்திடுவாரே ..

    ReplyDelete
    Replies
    1. தூங்குபர் நமக்கு எல்லாம் அளிப்பவர் என்றால் எழுப்பித்தான் ஆகவேண்டும் அனானிமஸ் அவர்களே(பேர் என்னவோ?:)

      கடமை உணர்வு இருந்தாலும் நாம் கடன்பட்டவர்களாக இருந்தால் நாம்தான் போய் நிற்கவேண்டும்.. இது பணம் காசு கொடுத்த பணக்காரருக்கு மட்டுமில்லை நம்மைப்படைத்துக்காத்து அருளை வாரிவழங்கத்தயாராய் இருக்கும் இறைவனுக்கும் பொருந்தும். ..

      Delete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.