Social Icons

Pages

Thursday, January 02, 2014

நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!

பெரியாழ்வார்  எழுதியிருந்த  ஓலைச்சுவடியை  படித்தாள் கோதை.



தொடர் சங்கிலிகை சலார் பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப
படுமும்மதப்புனல்சோர வாரணம்பைய நின்று ஊர்வதுபோல்..... 

என்ன அர்த்தம் அப்பா இதற்கு எனக்கேட்டாள்..

தொடர் சங்கிலிகை சலார் பிலாரென்னத் தூங்கு பொன்மணி ஒலிப்ப - எந்த யானைக்கு எப்போ மதம் பிடிக்கும்   என யார்க்கும் தெரியாது. ஆனால் யானைக்கு மதம் பிடித்தால் என்ன நடக்கும்  என எல்லார்க்கும் தெரியும். அதனால முன்னெச்செரிக்கையாக யானையை இரும்புச் சங்கிலியால் கட்டிப் போட்டுருப்பார்கள்

அப்படி நான்கு கால்களிலும் விலங்குப் பூட்டி இரும்புச் சங்கிலியால கட்டப்பட்டிருக்கறதால யானை நடக்கும் பொழுது சங்கிலியின் உராய்வினால் (சலார் பிலார் ன்னு)சத்தம் உருவாகும்.

நம் அஞ்சன வண்ணனும், இளஞ்சூரியன் சாந்தெடுத்து செய்த பொலிவான பொன் ஆபரணங்கள் அணிந்துள்ளான். அவ்வாபரணங்களில் தொங்குகின்ற பொன்மணிகள், குட்டிக் கண்ணனின் நடைக்கேற்ப அசைந்து இசைக்கின்றன.

(தொடர் - விலங்கு; சலார் பிலார் - ஒலிக் குறிப்பு; தூங்கு - தொங்குகின்ற)

படுமும்மதப்புனல் சோர வாரணம் பைய நின்று ஊர்வது போல் - கிளர்ச்சியுற்ற அந்த யானையின் மதநீர், அதன் இரு கன்னங்களிலும் வழிந்தோட, கால்கள் பிணைக்கப்பட்டுள்ளதால் அகலமாக வைக்க இயலாது, அருகருகே அடி வைத்து மெல்ல மெல்ல நடப்பதை போல.....


அருமை அப்பா!

ஆமாம்..  இன்றைக்கு பாவை நோன்புக்குப்போகவில்லையா  கோதை?

போகவேண்டும் அப்பா   நேற்று நால்வரைத்துயில் எழுப்பியாயிற்று  இன்று பெருமானை எழுப்பவேண்டும்

அதற்குமுன் பிராட்டியை முன் வைத்து அண்ணலை எழுப்பவேண்டும் அம்மா...வாசல் காப்பானையும் நந்தகோபனையும் பலதேவனையும் பற்றுவது போதுமா? கன்னிகை யின்றிக் கண்ணாலம் கோடிப்பதுண்டா?

ஆமாம் அப்பா புரிகிறது  இன்று  நப்பின்னைபிராட்டியை வேண்டிக்கொள்கிறோம்  வருகிறேன் அப்பா..

நல்லது  கோதை

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!
கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்




மதம் உந்துகின்ற களிறு – இயல்பாகவே பலமுள்ள யானை, மதம் பிடித்து விட்டால் அதன் மூர்க்கம் மிகவும் அதிகமாகி விடும். அத்தகைய யானைகளையும் எதிர்த்து நின்று சண்டை இடக்கூடியவராம் நந்தகோபர். ஓடாத தோள்வலியன் என்ற பதத்தில் அவரது வலிமை பேசப்பட்டது. இங்கே நந்த கோபரை ஆசார்யனாகக் கொண்டு நப்பின்னையை அடையும் முயற்சி. அப்பேர்ப்பட்டவரின் மருமகளே! என்று விளிக்கிறார்கள். அவரது மருமகள் – மஹா லக்ஷ்மியான இவள் திருமுகம்  பிரகாசிக்கிறதல்லவா! அதோடு நந்த கோபர்தான் கொடை வள்ளலாயிற்றே.. இதற்கு முந்தைய பாசுரத்தில் சொன்னார்களே! அவரது மருமகளான நீ அவரையும் விட காருண்யம் உள்ளவளன்றோ!

இப்படி இவர்கள் அழைக்க, நப்பின்னைப் பிராட்டி எழுந்து வரவில்லையாம்! திருவாய்ப்பாடி பெண்பிள்ளைகள் எல்லோருமே நந்தகோபருக்கு மருமகள்கள் தாமே… க்ருஷ்ணன் மேல் மாளாத காதல் கொண்ட பெண்கள் தானே எல்லோரும்…! என்று பேசாமல் இருந்துவிட்டாளாம்.

  நப்பின்னாய்! என்று பெயர் சொல்லி, நீ இருப்பது உன் வாசம் கமழும் குழல்களிலிருந்தே தெரிந்தது. கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்! பகவான் கந்தப்பொருள். பிராட்டி அதிலிருந்து வரும் வாசனை. இணை பிரியாத இரட்டையராயிற்றே நீவிர்! நீ யாரென்று நாங்கள் கண்டுகொண்டோம். எங்களை நீயே கடைத்தேற்ற வேண்டும்! 

இதற்கு நப்பின்னை, நடுராத்திரியில் வந்து எழுப்புகிறீர்களே! ஏன் என்று கேட்க, இல்லை பொழுது புலர்ந்தது… ‘வந்தெங்கும் கோழி அழைத்தன காண்!’ என்றார்கள்.( கூவின  எனக்கூறவில்லை முதலில்  ..நல்லகாரியங்களுக்கு அழைப்பதே  வழக்கம் அல்லவா!)


நப்பின்னை பதிலே  சொல்லவில்லையாம்

 உன் வீட்டு ‘மாதவிப் பந்தல்’ மேல், பலகாலும் – பலமுறை குயில் கள் கூவுவதை நீ கேட்கவில்லையா! என்றார்கள்.
மாதவிப்பந்தல் குருக்கத்திச்செடி அல்லது வசந்தமுல்லை

அதற்கு அவ்விடத்திலிருந்து பதில் வராமல் போகவும் பந்தாற்விரலி’ என்றார்கள்.பூப்பந்துபோல  மென்மையான விரல்கொண்டவளே

அடுத்து சொல்கிறார்கள், நாங்கள் வந்தது உனக்கு பிரியமானவனான – உன் பிரியத்தை பெற்றவனான கண்ணனைப்பாடத்தான்! நீ மைத்துனனைப் பாராட்ட கண்ணனிடம் ஆசையோடு இருக்கிறாய்! நாங்களும் அப்படித்தான்! என்கிறார்கள். கண்ணனை அவள் ஏற்கனவே அடைந்தவள். இவர்கள் அடைய தவிப்பவர்கள். அதற்கு அவள் உதவியை நாடுபவர்கள். அதனால் நந்தகோபரிடமோ, யசோதையிடமோ, பலராமனிடமோ சொன்னது போல், எங்கள் கண்ணனை எங்களிடம் கொடுங்கள் என்று கேட்கமுடியவில்லை. அப்படிக் அங்கெல்லாம் கேட்டும் நடக்காமல் போய்விட்டது. நீ மனம் வைக்கவேண்டும்..


செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப என்ற பதத்தில் இவர்கள் திருமகளின் திருக்கரங்களைக்காண தவிப்பது தெரிகிறது. நாங்கள் உள்ளே கதவை திறந்து கொண்டு வர முடியாமல் தவிக்கிறோம். நீயே மகிழ்ச்சியுடன்  வந்து திற அம்மா! உன் செந்தாமரை போன்ற கரங்கள் கதவைத் திறக்க நாங்கள் அதை தரிசிக்க வேண்டும்.  மகிழ்ந்து வந்து திறக்கவேண்டும்’ என்று சொல்லும் போது, மஹா லக்ஷ்மியான நப்பின்னையின் முகத்தில்  கருணைச் சுடர் விட்டு ஒளிர்கிறதாம்.

குரு பரம்பரைக்கதைகளில் இத்தகைய சம்பவம் உண்டு. உடையவர் எம்பெருமானார் ராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவ சந்யாசியாக தினமும் உஞ்சவ்ருத்தி எடுத்து உண்பது உண்டாம். அப்படி வரும்போது திருப்பாவை பாசுரங்களை அனுசந்தித்தும், வாய்விட்டு பாடியும் வரும்போது, அவரது ஆசார்யனான திருக்கோஷ்டியூர் நம்பியின் திருமாளிகைக்கு வந்து சேர்ந்தார்.
அப்போது இந்த உந்து மத களிற்றன் பாசுரம் பாடி, ‘பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்!” என்ற வரியின் போது, திருக்கோஷ்டியூர் நம்பியின் மகளான அத்துழாய் அம்மை என்ற சிறுமி  கைவளை  ஒலிக்க வாசற் கதவை திறந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. ராமானுஜர் ரொம்பவும் அனுபவித்துப் பாடிக்கொண்டே வந்ததில் இந்த காட்சியை காண நேரவும் அப்படியே மூர்ச்சித்து விழுந்து விட்டாராம்!  செய்தி கேட்ட, பெரிய நம்பியும் வெளியே வந்து ராமானுஜரை ஆஸ்வாசப்படுத்திவிட்டு, என்ன ‘உந்து மத களிற்றன்’ பாசுர அனுசந்தானமோ! என்றாராம்.   தன் சீடனுக்குக்கிடைத்த  இந்த மனப்பக்குவம் தனக்கு நேரவில்லையே என  மனம்  நினைத்ததாம்  பெரிய நம்பிக்கு...

நப்பின்னை பிராட்டியையே  அந்த சிறுமியிடம் கண்டாராம்  ..ராமானுஜருக்கு திருப்பாவைஜீயர் என்ற  திருநாமமும் உண்டு.

மாதுகரத்துக் கெழுந்தருளி வரும் போதன்றிப் போம்போதும்
ஓதும் கோதை திருப்பாவை உரையோடுலாவித் திரிபவரும்
 என்கிறது   அடியார்  ஒருவரின்  வரிகள்.
(மாதுகரம்..உஞ்சவிருத்தி)
. நப்பின்னை தேவி, யசோதையின் சகோதரரான ஸ்ரீகும்பரின் மகள் என்று சொல்வர். நப்பின்னை – நற்பின்னை என்பது நல் – பின்னை – நல்ல தங்கை (அக்காளைப் பற்றித்தான் தெரியுமே!) – என்று மஹா லக்ஷ்மியைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்றார் ஒரு பெரியவர்.


 

6 comments:

  1. Anonymous6:34 PM

    வணக்கம்
    பதிவு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமையான பாசுரம்... விளக்கத்திற்கு மிகவும் நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அருமையான விளக்கம்...

    ReplyDelete
  4. சிறப்பான விளக்கம். நன்றி.

    ReplyDelete
  5. ஸ்ரீ ராமானுஜருக்கு பிடித்த இந்த பாசுரத்தை மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர்கள்.இந்த பாசுரத்தில் நப்பின்னை பிராட்டியின் பெருமைகளை கூறி அவளிடம் இந்த ஆயர் சிறுமிகள் தங்களை கண்ணனிடம் சேர்க்க சிபாரிசு வேண்டுகிறார்கள் போல.நப்பின்னையின் . வளையொலி செவிகளுக்கும், பாடுவது வாய்க்கும், நப்பின்னையைக் காண்பது கண்ணுக்கும், அவளது கேசபாசம் மூக்குக்கும் விருந்தாக சொல்லப்படுகிறது.தாயாரின் சிபாரிசு இருந்தால் பகவானை எளிதில் அடையமுடியும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  6. கருத்துகூறிய அனைவர்க்கும் நன்றி கேபிசார் அவர்களின் அழகான விளக்கம் மிக சிறப்பாக உள்ளது

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.