Social Icons

Pages

Friday, October 07, 2011

பாத கமலங்கள் காணீரோ!

//சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாத கமலங்கள் காணீரோ
பவள வாயீர்வந்து காணீரோ!//

பெரியாழ்வாரின் பாடலோடு உடுப்பிக்குள் செல்வோம்!








ஒருத்தி (தேவகி)மகனாய்ப்பிறந்து ஓரிரவில் ஒருத்தி(யசோதை) மகனாய் வளர்ந்தவர் கிருஷ்ணர்.

கிருஷ்ணனின் பாலபருவத்தை, தான் அனுபவிக்கவில்லை என்னும் வருத்தம் தேவகிக்கு இருந்தது. ஒரு முறை கிருஷ்ணரிடம் இதை தெரிவித்ததும் கிருஷ்ணரும் தனது பாலலீலைகளை தாய்க்கு நடத்திக்காட்டினாராம். தேவகியோடு ருக்மணியும் இதைக்கண்டு களித்தாள்.

உடனே ருக்மணீதேவி க்ருஷ்ணரிடம் பின்வருமாறுவேண்டினாள்.
‘ஹேப்ரபோ! தங்களின் குழ்ந்தைவடிவமும் லீலைகளும் எனது உள்ளத்தைக் கொள்ளைகொண்டன அந்த பாலக்ருஷ்ணர் மனதில் பதிந்துவிட்டது. எனக்கு அந்த வடிவம் விக்கிரஹமாக வேண்டும். விக்கிரஹத்தை எனது பூஜை அறையில் வைத்துக் கொள்ளவிரும்புகிறேன் அதை தாங்கள் உருவாக்கித் தரவேண்டும் ”

க்ருஷ்ணன் உடனே தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்தார் ஸாளக்ராம் சிலைவடிவம் அமைத்துத்தரச்சொன்னார் .அவர் வடித்த ஸாள்க்ராம சிலையை-விக்ரஹத்தை ருக்மணிதேவி தினமும்பூஜித்து வந்தாள் அந்த தெய்வீக சிறப்புவாய்ந்த விக்ரஹம் உடுப்பிக்கு எழுந்தருளியது மிகவும ஆச்சர்யமானதும் நமக்கு பக்திப்பரவசமூட்டும் நிகழ்வுமாகும்!
.
க்ருஷ்ணர் தனது இறுதிக்காலம்வரை த்வாரகையில் வசித்து வந்தார் அதாவது பழையத்வாரகை(த்ற்சமயம் குஜராத்திலுள்ள துவாரகா)
க்ருஷ்ணரின் சங்கல்பத்தால் பழைய த்வாரகை நீரில் மூழ்கியபோது ருக்மணி பூஜைசெய்து வந்த க்ருஷ்ணவிக்ரஹமும் மூழ்கிப் போய்விட்டது .கோபி என்று சொல்லப்படும் ஒருவித களிமண்ணால் அதுமுழுவதும் மூடப்பட்டு காலப் போக்கில் பாறைபோல இறுகி சமுத்திரக் கரையில் ஒதுங்கியது.

பலநூற்றாண்டுகள் கழித்து கப்பலோட்டி ஒருவனுக்கு இந்தப்பாறை கண்ணில்பட்டது. தனது கப்பலில் பாரத்தை சமநிலையில் வைக்க அதை உபயோகப்படுத்தி வந்தான்,

ஒருமுறை அவனது கப்பல் தென்னிந்தியாவை நோக்கிப் பயணம் செய்தபோது அரபிக்கடலில் உடுப்பிக்கு அருகில் உள்ள பண்டேஸ்வரா(மேற்குக்கடற்கரை) பகக்ம் கடும்புயலில் சிக்கியது மால்பார் என்னும் இடத்தில் கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்தது.

அப்போது தனது நித்ய அனுஷ்டானங்களை செய்வதற்காக வட பந்தேஸ்வரர் என்ற கடற்கரையைச் சென்றடைந்த மத்வாச்சாரியார் கடலில் ஒரு கப்பல் தடுமாறுவதைப்பார்த்தார். அந்தக்கடும்புயலைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு ஸ்ரீமன் நாராயணனை பிரார்த்தனை செய்தபடி தனது மேல் அங்கவஸ்த்திரத்தை எடுத்துக் கப்பல் இருக்கும் திசை மீதுவீசினார்.

என்ன ஆச்சர்யம் !வேகமாக விசீக் கொண்டிருந்த அந்தப்புயல் வெள்ளை அங்கவஸ்திரத்தைக்கண்டதும் சட்டென ஓய்ந்துஅடங்கியது புயலில் மூழ்க இருந்த அந்தக்கப்பல் கரைக்கு வந்து ஒதுங்கியது.

அந்தக் கப்பலோட்டி கரைக்கு ஒடி வந்து மத்வாச்சாரியாரின் காலில் வீழ்ந்து வணங்கினான்.

“ஐயா! உங்களுக்கு நான் எப்படி நன்றி உரைப்பேன்? பெரும் ஆபத்திலிருந்து கப்பலைக்காப்பாறிவிட்டீர்கள். ஐயா இதற்கு அன்பளிப்பாக இந்தக் கபலிலுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றான்.

மத்வர் புன்னகை தவழ தன் மறுப்பைத்தெரிவித்தார். ஆனால் அந்தக்கணம் கப்பலில் இருந்த அந்தகோபிப்பாறையை நோக்கினார் .ஞானத்ருஷ்டியில் அவருக்கு அதில் ஒளி(ர்)ந்திருந்த க்ருஷ்ணர் தெரியவும் கப்பலோட்டியிடம் அதைமட்டும் கேட்டுப் பெற்றுகொண்டார் அதனை பக்தியுடன் சிரசில் சுமந்துகொண்டு நாராயண ஸ்மரணத்துடன் உடுப்பி நோக்கி நடந்துவந்தார்(அந்தநேரம் அவர் பக்திபரவசத்தில் பாடிய பாடல்களை த்வாத்சஸ ஸ்தோத்திரம் என்றுவழங்கப்படுகிறது)

கப்பலோட்டியிடமிருந்து பெற்றுக்கொண்டு வந்த அந்த வெள்ளைமண்பாறையை திருக்குளத்தில் நீராட்டியபோது க்ருஷ்ணரின் சாள்க்ராம சிலை வெளிப்பட மத்வர் பரவசத்துடன் விழுந்து வணங்கினார். அந்ததிருக்குளம் மத்வசரோவர் என்று பிரசித்தி அடைந்தது, அந்தக்குளத்தின் தீர்த்தம் தான் க்ருஷ்ண பகவானின் ஆராதனைக்கும் அபிஷேகத்திற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

சிலைக்கு நீராட்டியதும் அதுமேலும் ஸாந்நித்யம் பெற்று பிரகாசித்தது. உடனே முறைப்படி க்ருஷ்ணமடத்தில் பிரதிஷ்டை செய்தார். அதுதான் உடுப்பி க்ருஷ்ணன்கோயில் என்று புகழ்பெற்று விளங்குகிறது.

பாலக்ருஷ்ணன் வடிவில் வலதுகையில்மத்தும் இடதுகையில் கோலும் ஏந்திக்கொண்டு உடுப்பியில் க்ருஷ்ணன் பார்ப்போரை பரவசம் அடையச்செய்கிறான்!

இந்தக்கிருஷ்ணரை பூஜை செய்யும் உரிமை ஸ்ரீமத்வாச்சாரியாரின் பரம்பரையில் வந்த அவரது சிஷ்யர்களுக்கு மட்டும்தான் அளிக்கப்படுகிறது. சிறுவயதிலேயே தீஷை பெற்று சந்நியாசம் மேற்கொண்ட அவர்கள் பாலஸந்நியாசபட்டர்கள் என்று விளங்குகிறார்கள்.ஸ்ரீ கிருஷ்ணன் சந்நிதியில் மத்வாச்சாரியாரால் ஏற்றப்பட்ட ஒரு நெய் தீபம் (பிரதிஷ்டைதினம்) இன்றும் அணையாமல் பாதுகாக்கப்படுகிறது.இங்கு பூஜைக்கு உபயோகப்படும் மணி காஷ்ட(மரம்) பீடம் வெள்ளி அஷயபாத்திரம் மேலும் தீபங்கள் முதலியன மத்வாச்சாரியார் காலத்தவை அவரது கரங்களால் புனிதமடைந்தவை.



தென்னகத்து மதுரா எனப்படும் உடுப்பி என்றதுமே நம் நினைவிற்கு வருபவர்
கிருஷ்ணபக்தர் கனகதாசர்.

கனகதாசரின் காலம் 15ம் நூற்றாண்டு (1506 - 1609). என்கிறார்கள். , செல்வச் செழிப்புடன் விளங்கிய விஜயநகரப் பேரரசு மறையத் தொடங்கியிருந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.

கனகதாசர் குருபர் குலத்தினராக இருந்தும் இளம்வயதிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்தும், கவி பாடும் திறன் பெற்றவராகவும் இருந்தார். ஹரிபக்திசாரம், நரசிம்ஹஸ்தவம் ஆகிய துதிப்பாடல்களும், ராமதான்யசரித்ரே , நளசரித்ரே, மோகனதரங்கிணி ஆகிய காவியங்களும், நூற்றுக் கணக்கான தனிப் பாடல்களும் அவர் இயற்றியவையாகும்.

. கனகதாசர் உடுப்பிக்குச் சென்று அங்குள்ள கிருஷ்ணர் கோயிலில் நுழைந்து தரிசனம் செய்ய விரும்பினார். அதனை சில பிராமண பூசாரிகள் தடுத்தனர். கோயிலின் பின்புற வாயிலுக்குச் சென்று அங்கிருந்தே மனமுருகிப் பாட ஆரம்பித்தார். அவரது பக்திக்கு இரங்கினார் பரந்தாமன். அவருக்கும் கிருஷ்ண விக்கிரகத்திற்கும் இடையே இருந்த சுவரில் பிளவு உண்டானது. அதில் ஜன்னல் அளவு பெரிய இடைவெளி தோன்றியது. அதே நேரத்தில் கிருஷ்ண விக்கிரமும் அரைவட்டமாகத் திரும்பி அந்த துவாரத்தின் வழியே தாசருக்குத் தரிசனம் தந்தது!. .




பகவான் தரிசனம் தந்து விட்டார். ஆனால் தன் வாழ்நாளின் கடைசிவரை கனகதாசர் கோயிலுக்குள் நுழையவே இல்லை. கன்னட நந்தனார் என்று இவரைக்கூறினாலும் நந்தனார் போன்றோ, திருப்பாணாழ்வார் போன்றோ அவர் கடைநிலைச் சாதியினர் கூட இல்லை. போர்வீரராக ‘நாயக்கர்’ என்ற பட்டத்துடன் வாழ்ந்திருக்கிறார். இருந்தாலும் அவர் உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. சாதியக் கட்டுப் பாடுகள் அந்த நாளில் மிகவும் ஆளுமையாக இருந்திருக்கின்றன என்று இதனால் தெரியவருகிறது.




இன்றும் உடுப்பி கோயிலின் வாயிலில் ‘கனகன கிண்டி’ (கனகனது சாளரம்) என்று ஒரு ஜன்னல் இருக்கிறது. சம்பிரதாயத்தின்படி கிழக்கு நோக்கி வீற்றிருக்காமல், கிருஷ்ண விக்கிரம் மேற்கு நோக்கி இருக்கிறது நாமும் கனகதாசர் வழிபட்ட அந்த ஜன்னல்துவாரத்தின் வழியேதான் கிருஷ்ணரைக்காணவேண்டும்.ஆண்டிற்கு ஒருமுறை விஜயதசமி உற்சவத்தின்போது கிழக்குநுழைவாயில் திறக்கப்படும்.அப்படிக் கதவுதிறந்ததும் முதலில் புதிதாக விளைந்த நெல் போன்ற தானியங்கள் இந்த வாயில்வழியாக சந்நிதிக்கு உள்ளே செல்லப்படுகிறது
.

கனகதாசருக்கு கர்நாடக சங்கீதத்தின் இசையமைப்பு பற்றிய அடிப்படை ஞானம் இருந்தது. கிராமிய இசைவாத்தியமான எளிய தம்புராவை மீட்டிப் பாடும் வகையில் எளிய சொற்களிலேயே அவரது பெரும்பாலான பாடல்கள் அமைந்துள்ளன. பல பாடல்கள் தத்துவார்த்தமானவவை.
.
உடுப்பியில் அவர் நின்று பாடிய வீதியில் கோயிலுக்கு வெளியே அவருக்கு ஒரு சிறு நினைவு மண்டபம் உள்ளது. அதில் கனகதாசரின் திருவுருவச் சிலைக்கு மாலை போட்டு வைத்திருக்கிறார்கள். கோயிலுக்குள் அவரது சிலையோ திருவுருவப் படமோ எதுவும் இல்லை. ,ஆண்டுதோறும் நவம்பர் 24ம்தேதியன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடுகிறார்கள் “கனகதாஸ ஜயந்தி” என்று கொண்டாடுகிறார்கள்.. கனகதாசரின் பிறந்தநாள் மட்டுமல்ல பசவண்ணா எனும் கன்னடப்புலவரின் பிறந்தநாளுக்கும் கர்நாடகத்தில் மாநில அரசு விடுமுறை. அளிக்கிறது. கர்நாடக வீரசைவ சமயப் பிரிவின் குருநாதர் தான். பசவண்ணர்
அடித்தட்டு மக்களின் சமய, ஆன்மீகக் குரலாக எழுந்த இரு பெரும் சைவ, வைணவப் பெரியார்களின் பிறந்த நாட்களை அரசு விடுமுறையாக அறிவித்ததோடு, அவர்களின் புனித நினைவைப் போற்றி, அவர்களது மனிதநேய ஒருமைப்பாட்டுச் சிந்தனைகளைப் பரப்பும் வகையில் பல நிகழ்ச்சிகளையும் நடத்த மாநில அரசு ஆதரவு தருகிறது.

ஆலயவளாகத்தில் ஐம்பத்திற்கும் மேல் கறவைமாடுகள் கட்டப்பட்டுள்ளன.

உடுப்பியில் எட்டுமடங்கள் உள்ளன. பல உன்னத ஆசாரியார்களின் சிஷ்யபரம்பரையினர் அவைகளை இன்னமும் சிரத்தையுடன் பாதுகாத்துவருகின்றனர். இந்த எட்டுமடங்களைத்தவிரவும் மேலும் பலமடங்கள் தினந்தோறும் அன்னதானம் செய்துவருகின்றன. உடுப்பி சென்றால் நாம் மடங்களில் தங்கிக்கொள்ளலாம். பரந்துவிரிந்த விசாலமான அறைகளும் நடுமுற்றமும் அதில் சிறுகோவில்மண்டபமும் அத்துடன் பழையகாலபாணியில் கட்டப்பட்ட மரத்தூண்களும் நிலைகளுமாய் ஒவ்வொரு மடமும் நம்மை பரவசப்படுத்தும். அரண்மனைவளாகம்போல காணப்படும். ரதத்தெரு(தேரடிவீதி) சென்று காலாறநடக்க்லாம்..ஊரெங்கும் கிருஷ்ணவாசனையை நுகரலாம்!

கிருஷ்ணனின் திருவிடத்திற்கு அருகில் ஏறக்குறைய ஐந்துகிலோமீட்டர் அருகே அரபிக்கடலின் அழகிய மால்பே கடற்கரை அமைந்துள்ளது. கடல்நடுவே செயிண்ட்மேரீஸ் தீவு இருக்கிறது.கையில் பணம் அதிகமிருந்தால் அங்கே போய் ஓர் இரவு இளைப்பாறலாம்!

உடுப்பி ஸ்பெஷல் பல உண்டு அதில் பத்ர அடை என்பது அங்கேதான் அதிகம் கிடைக்கும்!. சேப்ப இலையைசுருட்டி தயாரிக்கும் சிற்றுண்டி இது,சுவையறிந்தால் விடமுடியாது!

ஆனாலும் உடுப்பிகோயிலின் சின்னக்கண்ணனின் மந்திரதொனி அழைப்பும், அந்தக்கள்ளச்சிரிப்பும் ஊரைவிட்டு நகர்ந்தபின்னும் நம் உள்ளத்திலேயே நின்றுகொண்டிருக்கும்!



த்ருடபக்தி நின்னல்லி பேடி
நான் அடிகெரகுவேனய்ய அனுதின ஹாடி
கடெகண்ணிலே நன்ன நோடி
பிடுவே கொடு நின்ன த்யானவ மனசுசி மாடி (தாஸன)


எப்போதும் மாறாதிருக்கும் திடமான பக்தியை உன்னிடத்தில் வேண்டி,
நான் உன் பாதத்தில் தினமும் விழுந்து உன் நாமத்தை பாடிக்கொடிருப்பேன்.
உன் கடைக்கண்ணால் என்னை பார்த்து
நான் என்றென்றும் உன்னை தூய மனதோடு நினைத்துக்கொண்டிருக்குமாறு அருள்புரிவாய்

(புரந்தரதாசர்)
மேலும் படிக்க... "பாத கமலங்கள் காணீரோ!"

Thursday, October 06, 2011

அரங்கன் அந்தாதி!

விஜயதசமி தினத்தில் புதிய முயற்சிகள் வெற்றி பெறும் என்பார்கள். நீண்ட நாளாய் வலைத்தளைத்தை சற்று புதுமைப்படுத்த எண்ணி இருந்தேன் நேரமில்லாமல் போனது இன்று ஒருவழியாய் வலைப்பூவிற்கு புதியபெயரையும் சூட்டி சில மாற்றங்கள் செய்துவிட்டேன்! நல்ல நாளில் திருவரங்கன் பேரில் ஒரு அந்தாதியை இடுகிறேன்!



முன்குறிப்பு...



இந்தக் கவிதையை 5வருடம் முன்பு எழுதியதும் ஸ்ரீரங்கம்போக நேர்ந்த நாள் ஒன்றில் இதனை பேப்பரில் எழுதிக்கொண்டுபோய் திருவரங்கன் சந்நிதி உண்டியலில் போட்டுவிட்டுவந்துவிட்டேன் எனது காணிக்கையென அரங்கனுக்கு. (பாவம் அரங்கன்!) பிறகு இப்போது இதனை இன்று இங்கு இடத்தோன்றவும் இடுகிறேன்.. சிலபிழைகள் தவறுகள் இருக்கக்கூடும் .அதற்கு முதலிலேயே மன்னிப்பு!






அரங்கன் அந்தாதி

**********************************



ஷைலஜா(திருவரங்கப்ரியா))

காப்பு.
அகிலாண்ட நாயகியாம், அன்னை அபிராமியாம்,
மஹிஷாஷ§ரனை வென்ற மாமங்கை மாரியாம்,
முகில் வண்ணன் முகுந்தனவனுக்கு முத்தான சகோதரியாம்,
சகித்தென்னை யாளும் அவள் தாளடியே காப்பு.

அந்தாதி.

அரங்கமதில் துயில் கொள்ளும்
அன்பு நிறை அண்ணல்,
இரங்கி நிற்கும் பக்தருக்கு
இசைந்தருளும் வள்ளல்.
உறங்குவது போலிருக்குமவன்
உள்ளமதில் விழிப்பு,
அறங்களை யாளுமவன் அறிந்திடுவான்
அண்டத்தின் கணிப்பு. (1)


புகல் என்று வருவோர்க்குப்
புன்னகையோடு தருவான்,
இகழ்வாரையும், இன்னல் புரிவாரையும்
இனிமையோடு ஏற்பான்.
பாம்பணையில் பள்ளி கொள்ளும்
பரந்தாமன் அவன் தான்.
நாம் வணங்கும் நாரணன்,
நலம் தரும் திரு அரங்கனே.(2)



கன்னங்கரு மேனி அழகன்,
கார்முகில் வண்ணன்.
எண்ணும் பொழுதிலேயே ஏற்று
ஏராளமாய் வழங்கும் மன்னன்.
உயர்வான ஆழ்வார்கள்
உளமாறத் துதித்தக் கண்ணன்
பெயர் பலகொண்டானை
நினைக்கையிலே உளம் உருகுமே.(3)

உருகும் பெரும் பனி போன்றது
உத்தமன் அவன் உள்ளம்.
பெருகிவரும் திருவருள்
அதுவே பேரானந்த வெள்ளம்.
நாள் தோறும் நாரணனை
நாம் வணங்கும் போதில்
வாள் கொண்டு வெட்டியது போல்
வினை நீங்கிடுமே கடிதிலே. (4)

கடிதில் விரைந்து அன்று
கஜேந்திரனைக் காத்தவன்.
சடுதியில் வந்து நம்மைச்
சக்கரம் ஏந்திக் காப்பவன்.
தாயினும் மேலான தாமோதரன்
தயா சாகரன்
ஆயிரம் நாமங்கள் கொண்ட
அராவமுதன் அரங்கனே(5)



அரங்கனவன் உறங்குமிடம்
அனந்தனது திருமேனி
அரவரசன் தன் சிரந்தூக்கி
அண்ணலைக் காப்பான் பேணி
திருவடியும், திருக்கரமும்
தெய்வத் திருமேனி எங்கும்
ஒரு பொழுதும் விட்டகலாத
அரவின் புகழ் தங்குமே.(6)



தங்கும் படி யாவரையும்
தன்னகத்தேக் கொள்வான்
பொங்கும் சூழ் புனலாம்
பொன்னியையும் கொள்வான்
ஆரம் போல் காவிரிப் பெண்
அழகிய மணவாளனுக்கு
தாரமாம் திருமாமகள் அவளும்
அருள் தரப் பார்ப்பதில்லை கணக்கே(7)



கணக்கில் என்றும் அடங்காதது
அரஙகனைக் காண வரும் கூட்டம்
வணங்கும் தன் அடியார்களை
வாழ வைப்பதே அவன் நாட்டம்
அவனன்றி ஓரணுவும் அசையாது
அவனியில் காண்
கவலைகள் பறந்து போகும்
கார்வண்ணன் பெயரில் தானே!(8)



தான் எனும் அகந்தை நீக்கி
தாமோதரன் தாள் சேர்வோம்
ஊன் எடுத்த பயன் தீர
உத்தமன் புகழ் பாடுவோம்
அரஙகமதில் குடிகொண்ட
அண்ணலைத்தேடி ஒடுவோம்
தரணியெல்லாம் வாழ வைக்கும்
ரங்கராஜனையே நாடுவோமே.(9)



நாடுவோம் என்றும் நாரணன் பதம்
நல்லன எல்லாம் தரும்
பாடுவோம் பரந்தாமன் புகழ்
பக்தியும் பணிவும் வரும்.
குறையென்று ஏதுமில்லை
அன்று குன்றேந்தியவன் பாதம் சரண்
மறை புகழும் மாதவனின் அருளிருக்க
மனதிற்கு அது அரணே.(10)



அரண்மனையினும் பெரியது அகிலம் காக்கும்
அரங்கனவன் திருக்கோயில்.
திரண்டு வரும் திருமால் அடியார்கள்
திருவருள் பெற நிற்பதுமதன் வாயில்
நல்லெண்ணம்,நற் செயலில் ,தெய்வமது
தேடி வரும் நம் அந்தரங்கம்
பலம் அதுதான் பற்றிக் கொண்டு
பாடிச் செல்வோம் திருவரங்கமே!(11)








--
மேலும் படிக்க... "அரங்கன் அந்தாதி!"

Saturday, August 27, 2011

துரும்பிலும் இருப்பான்!





வாசலுக்குக்கோலம் போட வந்த ஜனகா அந்தக்காலைப்பொழுதில் தெருவில் கோலிக்குண்டு விளையாடிக்கொண்டிருந்த தன் மகன்களைக் கண்டு திகைத்தாள். ஆறுவயதிலும், நான்கு வயதிலுமாக இரண்டுஆண்குழந்தைகளும் ஒன்றரை வயதில்ஒருபெண் குழந்தையும் இருக்கிறது இருபத்தி ஒன்பதுவயது ஜனகாவிற்கு. வேறெந்த செல்வம் இருக்கிறதோ இல்லையோ ஏழைகளுக்கு புத்திர செல்வத்திற்கு மட்டும் தடையில்லை’ என்று அவளே அடிக்கடி அலுத்துக்கொள்வாள்.

"ஆம்பிளை சிங்கமா ரெண்டுபேரும் அழகுக்கிளியா ஒர் பொண்ணும் நமக்கு இருக்குன்னு பெருமைப்படறதவிட்டு அலுத்துக்கிறயே ஜனகா...” என்பான் அவள் கணவன் பத்ரி பெருமையாக. வறட்டுப்பெருமை பேசுவதும் சீட்டு ஆடுவதும் வெட்டியாக வீட்டில் அமர்ந்து மனைவியின் சமையல் வேலைவருமானத்தில் வாழ்வதும் பத்ரிக்கு திகட்டாத விஷயங்கள்.

’நீ போய்ட்டுவா ..நான் குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறேன்’ என்று வீட்டில் உட்கார்ந்துகொண்டு சகாககள் நாலைந்து பேரோடு சீட்டுவிளையாடுவான். கல்யாணம் ஆனபுதிதில் சாயிராம் காட்ரிங் சர்வீசில் சமையல்பணி செய்துகொண்டிருந்தான். பெரிய பிள்ளை ஜனகாவின் வயிற்றில் இருக்கும்போதே அங்கே மேலிடத்தில் சண்டை போட்டு வேலையை அடியோடுவிட்டு விட்டான் ..வேறேங்கும் வேலை தேடிப்போகவுமில்லை. உடனே ஜனகா வாயும் வயிறுமாய் சமையல்வேலை தேடிப்போனபோது பெசண்ட் நகரில் வக்கீல் திருமலைவீட்டில் ஆள் தேடுவதாய் காதில்விழவும் போய்க்கெஞ்சி மன்றாடியதில், வக்கீல்மாமி மனம் கனிந்து வேலை போட்டுக்கொடுத்தாள்..ஜனகாவின் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில்தான் குடும்பமே ஓடுகிறது. இதில் சீட்டாட்டத்தில் விட்டதைப் பிடிக்கிறேன் என்று இருநூறும் ஐநூறுமாய் பத்ரி சுருட்டிக்கொண்டுவிடுவான்.

“டேய் பசங்களா என்னடா இந்த நேரத்துல கோலிவிளையாட்டு? பல் தேய்ச்சீங்களா இல்லையா?”ஜனகா கோலப்பொடியில்குனிந்து தரையில் நாலு இழு இழுத்தபடி கேட்டாள்.

“அம்மா! நான் தெருக்கோடி பைப்புல எழுந்ததும் போய் பல்தேச்சிக் குளிச்சும் ஆச்சு. ராத்திரியெல்லாம் நம்ம வீட்டு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வழியா ஒரேடியா வெய்யில் அனலா தாக்கிடுத்து. திரும்ப ஆத்துல வந்து பார்த்தா நீ பின் கட்டுல பாத்ரூம்ல குளிச்சிண்டு இருந்தே அதான் தம்பியும் நானும் விளையாட இங்க வந்துட்டோம். தங்கப்பாப்பா தூங்கறா..” என்றான் பெரியவன் பிரஹலாதன்.

ஜனகா கோலமாவுக்கிண்ணத்துடன் வீட்டிற்குள் நுழைந்தவள் மணி ஏழாகியும் வேஷ்டி நழுவினது தெரியாமல் பாயில் தூங்கிக் கொண்டிருந்த பத்ரியை எழுப்பினாள்.

”எழுந்திருங்க நான் வக்கீல் மாமியாத்துக்கு சீக்கிரமா கிளம்பணும். நரசிம்மஜயந்தியாம் ராத்ரி ஆயிடும் இன்னிக்கு திரும்பி வர்ரதுக்கு. ஐம்பதுபேருக்கு சமையல் செய்யணும். அந்திப்பொழுதுலதான் நரசிம்ம அவதாரம் நடந்ததாலே சாயந்திரமா நரசிம்மருக்கு பூஜை இருக்கு நிறையவேலைஇருக்குன்னு வக்கீல்மாமிசொல்லி இருக்கா. லேட் ஆச்சுன்னா மாமி என்னை உண்டுஇல்லைன்னு பண்ணிடுவா”

...”யாரு அந்த பெண் சிங்கம் தானே? ’பெசண்ட்நகர்பேய்’ன்னு எங்க வட்டாரத்துல அந்த மாமிக்கு பேரு வச்சிருக்கோம்..சீமாச்சு ஒருதடவை அவாத்துக்கு ஏதோ ஃபங்ஷனுக்கு காட்ரிங் பண்ணப்போனப்போ ஏற்பட்ட அனுபவத்துல வச்சபேருதான்..ஹ்ம்ம்.. நீ என்னமாத்தான் ஆறுவருஷமா அவகிட்ட வேலைபாக்றியோ ஜனகா? ஆஆஆவ்வ்வ்...” என நீளமாய்க் கொட்டாவிவிட்டபடி எழுந்த பத்ரி,” இன்னிக்கு சீட்டுவிளையாட்ற ப்ரண்ட் ரங்கமணி லஞ்ச் ட்ரீட் தரேன்னு சொல்லி இருக்கான்.. நங்கநல்லூர்ல அவன் மச்சினன் புது மெஸ் திறந்திருக்கானாம் அதுக்கு வரசொல்லி இருக்கான் நான் சின்னவன் துருவனையும் குட்டி கோதையையும் சைக்கிள்ல வச்சி அழைச்சிண்டு போறேன்.. மூணுபேரை சைக்கிள்ல கூட்டிண்டு போறது க‌ஷ்டம்..அதனால பெரியவனை நீ உன்கூட இன்னிக்குக் கூட்டிண்டு போ... அவனும் நரசிம்ம ஜயந்தி வைபவத்துல கலந்துக்கட்டுமே”

” வக்கீல் மாமி என்ன சொல்வாளோ தெரியல ஆனா யார் யாரோ வருவா வருஷா வருஷம் பாத்துருக்கேனே.... சரிடா ப்ரஹா வரியா என்கூட?”

”வரேனே...பெரிய பங்களான்னு நீ சொல்வியேம்மா ! தோட்டம்லாம் இருக்குமா? மரம் செடில்லாம் இருக்குமா? ஊஞ்சல் போட்ருப்பாளா நான் அதுல ஆடலாமா?”

"சமத்தா இருக்கணும்.. ஏதும் விஷமம் பண்ணினா அந்த வக்கீல்மாமிவேதவல்லி உன்னை மிரட்டுவா..,,,பொல்லாதமாமி அவாத்துல மாமாவே மாமிகிட்ட பயப்படுவார். என்னவோ போ அப்பப்போ கொஞ்சம் அரிசியும் பருப்பும் தூக்கித்தரா ...மிச்சம் மீதி சாப்பாடு தரா...மாமியோட பொண்ணு அமெரிக்காலேந்து வந்தா இரக்கப்பட்டு நமக்கு துணி மணில்லாம் வாங்கித்தரா.அதான் நானும் பல்லைக் கடிச்சிண்டு அங்கபோய்ட்டுவரேன் உங்கப்பா மட்டும் பொறுப்பா இருந்தா எனக்கு இந்த நிலைவருமா ப்ரஹா?”

தன்னைச் சுட்டிக்காட்டிப்பேசுவதைக் கேட்ட பத்ரி பாயைவிட்டு துள்ளி எழுந்தான்.”என்னடி குழந்தைகிடட் வாய் நீள்றது ?நாந்தான் உன் இடத்துல இங்க தினமும் பசங்களைப் பாத்துக்கறேனே? குளிப்பாட்டி யுனிஃபார்ம் உடுத்தி பழையதைப்போட்டு பள்ளிக்கூடம் அனுப்பறேன். சின்னது கோதை நடுக்கூடத்துல ஆய் போனா அள்ளிக்கூட போட்றேன்.பகல் ஒருமணீக்கு நீ திரும்பிவரவரைக்கும் எல்லாத்தியும் பாத்துண்டு வீட்ல சீட்டு ஆடி சம்பாதிக்கவும் செய்றேன் இன்னும் என்னடி பொறுப்பு வேணும் உனக்கு?”.

பத்ரி கூச்சல் போட ஆரம்பித்துவிட்டால் ஓயமாட்டான் தன்மேல்தவறு இருப்பவர்களுக்கே உரிய அதிகப்படி பேச்சு பத்ரியிடம் உண்டு.

பதில் பேசாமல் மௌனமாய் ஜனகா வெளியேறினாள். கூடவே அரைட்ராயரை இழுத்துப்பிடித்துக்கொண்டு நடந்து வந்த ப்ரஹ்லாதன்,” அம்மா! எனக்கு சரியான பேர்தான் வச்சிருக்கே!அதான் அப்பா இரண்யனாட்டம் அரக்கனா இருக்காரோ?’என்றான்.


” உஷ் அப்பாவை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.... உனக்கு நான் பேரு வைக்கலடா.. வக்கீல் மாமியாத்துல நீ என் வயத்துல இருக்கறப்போ வேலைல சேர்ந்தேன். மாமி நரசிம்மபெருமாள்பக்தை. பையன் பொறந்தா பிரஹலாதன்னு வைடீ ஜனகா ன்னு சொல்லிட்டா!”

“அப்போ மாமிதான் ஹிரண்யா!” கைகொட்டி சிரித்தான் பிரஹலாதன்.

”உஷ் அங்கவந்து இப்டில்லாம் சிரிக்கப்டாது ...மாமி கோச்சிபபா...சமத்தா இரு என்ன?’

”சரிம்மா. ”

பழைய மாம்பலம் ஸ்ரீனிவாசா தியேட்டர் வாசல் பஸ் ஸ்டாப்பில் இருவரும் சில நிமிஷங்கள் காத்திருக்கும்போதே பஸ் வந்துவிட்டது.

பஸ்ஸில் ஏறியதும் கண்டக்டரிடம்,” பெஸன்ட்நகர் கலாஷேத்ரா காலனி” என்று சொல்லி பத்துரூபாயைக்கொடுத்தாள்.

பஸ்ஸில் நிற்கக்கூட இடமில்லை..

”ஏன்மா தினம் இப்டித்தான் நெருசல்ல போய்ட்டு வரியா பாவம்மா நீ”

“தினம் இவ்ளொ கூட்டம் இருக்காது,இன்னிக்கு தான் இப்படி .சரி நீ என் பக்கமாவே இரு....காணாமபோய்டாதே”

கலாஷேத்ரா காலனி வந்ததும் ஜனகா மகனுடன் கீழே இறங்கினாள். இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

“பக்கத்துலதான் வீடு ப்ரஹா...அஞ்சு நிமிஷத்துல போய்டலாம்”

“வக்கீல் வீட்ல நாய் இருக்காம்மா?’

’மாமிதான் ’ என்று சொல்லவந்த ஜனகா லேசான சிரிப்புடன் ” இப்போ இல்லை...நீ குழந்தையா இருக்கறப்போ ஒண்ணு இருந்தது அது பேரு நரசிமமா” என்றாள்.

”என்னது நாய்பேரு நரசிம்மனா?”

” ஆமாம் வக்கீல் மாமி பயங்கரமான நரசிம்ம சுவாமிபக்தை! வீட்டுக்கு பேரு ஜெய்நரசிம்மா!

மாமியோட பையன் பேரு லஷ்மிநரசிம்மன். மாமியாத்ல குலதெய்வம் நரசிம்மராம் அதனால் நாய்க்கும் அதே பேரை வச்சாளாம் அந்தநாய் ஒருநாள் செத்துபோனதும் மாமிக்கு ஒருமாசம் சாப்பாடு இறங்கல...பாவம்..அந்த சோகத்துல இதுவரைக்கும் வேற நாயே வாங்கல..”

” ஏன்மா நம்மவீடல் நாய் வாங்கிவளக்கலாமா? கிரிக்கட் தோனி பேரை வைக்லாம் எனக்கு அவரை ரொம்பபிடிக்கும்.”

”ஆமாண்டா ந்ம்ம பொழைப்பெ நாய் பொழப்பா இருக்கு இதுல நாய் ஒண்ணுதான் குறைச்சல்..சரிசரி...வக்கீல் வீடு வந்துடுத்து நான் சொன்னது நினைவிருக்கோல்லியோ?’

”அம்மா! நீ எழுந்ததும் நீராகாரம் தருவே இன்னிக்கு தரவே இல்ல.பசிக்கறதும்மா இப்போவே...”

”அவசரத்துல மறந்துட்டேன் ப்ரஹா... மாமியாத்துல பாலோ மோரோ போனதும் தரேன்ப்பா”

”சரிம்மா”

வீட்டு வெளிவாசலில் செம்மண் நிரப்பி பெரிய படிக்கோலம்போடப்பட்டிருந்தது,

காம்பவுண்ட் சுவரில் க்ரானைட்டில் பதித்திருந்த சிறிய நரசிம்மர் சிலைக்கு சாமந்திமாலை அணிவித்திருக்க போர்ட்டிகோ தாண்டி நிலைப்படிக்கு வரும்போது மேலே மாவிலைக்கொத்து தொங்கியது. திறந்த கதவிற்கு அருகே நின்று ‘மாமி...”என்று குரல்கொடுத்தபடியே உள்ளே நுழைந்தாள் ஜனகா.





“மணி எட்டாறது இவ்ளோ லேட்டா வரயே? ஏழரைக்கே வரசொன்னேனே, இன்னிக்கு ந்ருசிம்ம ஜயந்தி நினைவிருக்காடி ஜனகா? ” உரத்த குரலில் அதட்டலாய்க் கேட்டபடியே வந்த உருவத்தைப் பார்த்தான் ப்ரஹலாதன்.

பழுத்த மாம்பழ நிறத்தில் பெரியவிழிகளும் அதை இன்னும் பெரிதாக்கிய காட்டிய மூக்குக்கண்ணாடியும் விடைத்தநாசியும் தடித்த உதடுமாக வேதவல்லியைப் பார்க்கும்போது அம்புலிமாமா புத்தகத்தில் அசோகவன சீதை அருகே அமர்ந்திருந்த ஒருராட்சசியின் படம் ப்ரஹலாதனுக்கு நினைவுக்கு வந்தது..மாமியும் அவனை ஏறெடுத்துப்பார்த்தாள்.




”யாருடி இந்த வாண்டு ? பெரியவனா சின்னவனா?”




”பெ.. பெரியவன் ப்ரஹா..”




”என்னடி ப்ரஹா? ப்ரஹலாதன்னு வாய் நெறயக் கூப்டாம? நான் வச்ச பேராச்சே ஏண்டா அம்பி என்ன படிக்கறே?’

”ரண்டாம் க்ளாஸ், மாம்பலம் அரசுப்பள்ளில”

”ஒழுங்காப்படிக்கப்போறியா இல்ல உங்கப்பனாட்டம் சீட்டு ஊருசுத்தறதுன்னு திரியப்போறியா? இன்னிக்கு எதுக்குடி இவனை இங்க அழைச்சிண்டு வந்தே ஜனகா?’

”அவர் எங்கயோ போகணூமாம்... சைக்கிள்ள இவனையும் கூட்டிண்டு போகமுடியாது ஆத்துல தனியா விடவும் முடியாது ரெண்டுங்கெட்டான் ..ஸ்கூல் வேற லீவ் விட்டாச்சு. அழைச்சிண்டுபோன்னு அவர் ஆர்டர் போட்டுட்டார்”

”நீயும் அழைச்சிண்டு வந்துட்டியாக்கும்? இந்தகாலத்துலயும் இப்படி ஒரு பதி பக்தியான பொண்ணை நான் இப்பத்தான் பாக்கறேன் “என்றாள் மாமி கிண்டலாக..

ஜனகா தலை குனிந்தாள்
..
”சீக்கிரமா தளிகை முடிச்சிட்டு ஜோடுதவலை நிறைய பானகம் பண்ணிடு. பதினஞ்சிகிலோ வெல்லம் உடைச்சி சுக்கு ஏலம் தட்டிப்போட்டு பண்ணு.. அம்பதுபேராவதுவருவா ஆமா, எங்க இந்த மனுஷன் போய்த்தொலைஞ்சார்? காலங்கார்த்தால பேப்பர்ல தலைசாய்ச்சா எழுந்து வர்ரதே கெடயாது..... ஏன்னா.... ஏன்னா எங்கபோய்த்தொலைஞ்சேள்?”

மாமி கணவரைத் திட்டிகொண்டே தேடும்போது வக்கீல் திருமலை தனது மெலிந்த உடலைக்குறுக்கிக்கொண்டு பயந்தபடி எதிரே ஓடி வந்தார்.

“எங்க ஒழிஞ்சங்கோ இவ்ளோ நாழி? கொல்லைலபோயி பவழமல்லி பொறுக்க சொன்னேனே? வெய்யில் வந்தா எல்லாம் வாடிப்போயிடும்.தோட்டக்கார கடங்காரன் இன்னிக்குப்பாத்து லீவ் போட்டுட்டான்.”

”ஹிஹி .....போன் வந்தது நம்ம லஷ்மிநரசிம்மன் அமெரிக்காலேந்துபேசினான். பொழுதுபோனதே தெரில்லடி வேதம்”என்று அசடு வழிந்தார்.

” அவன் நறுக்குனு நாலு வார்த்தைதான் பேசுவான் நீங்கதான் வளவளனு கோர்ட்கேஸ் கதைலாம் அவன்கிட்ட அளப்பங்கோ...சரி, இன்னும் காபி குடிக்கலதானே?”

”இல்லையே ஜனகா வந்து வழக்கம்போல கலந்துதருவான்னு காத்துண்ட்ருக்கேன்”

”இன்னிக்கு காபி சாப்பிடக்கூடாது”

“இதென்ன புதுசா இருக்கு?”

”ஆமாம் புதுசா கேள்விப்பட்டேன் அன்னிக்கு டிவில உபந்நியாசகர் சொனனர் ந்ருசிம்ம ஜெயந்தி அன்னிக்கு சாயந்திரம் அவர் பிரத்யட்சமான அந்திpபொழுதுவரை வாய்ல பச்சத்தண்ணி குத்திக்கக் கூடாதாம் அப்றோமா அவருக்கு அம்சை பண்ணின பானகத்தை முதல்ல சாப்பிடணுமாம் நாம பாட்டுக்கு இத்தனை வருஷமா காலமெருந்து நாலு காபி ஒரு பாக்கெட் பிஸ்கட்டுன்னு தள்ளிண்டு இருந்திருக்கோம். அறுவயசு பக்கம் நெருங்கிண்ட்ருக்கோம் இனிமேலாவது இந்த அல்ப ஆசைலாம் விடணும் அதுவும் நாள் கிழமைல புரிஞ்சுதா?”

அதட்டிவிட்டு மாடிக்குஏறினாள் மாமி.அவள் போனதும்,ஜனகாவிடம் தயங்கித்தயங்கி நெருங்கி வந்த வக்கீல்திருமலை,”அம்மாடி ஜனகா! ஒருவாய் காபி சக்கரை போடாம வழக்கம்போலக் கொடுத்துடுடிம்மா. எனக்கு டயபடீஸ்னு தெரிஞ்சும் மாமி இப்படி கண்டிஷன் போடறா பாரு?”என்றார் கெஞ்சுதலான குரலில்

”மாமா! மாமிக்குத்தெரிஞ்சா.....?”

”தெரிஞ்சாதானே? ஆமா இதுயார் உன் பிள்ளையா ஜனகா?”

“ஆமாம் மாமா பேருபிரஹலாதன்”

“இவன் கைல ஒரு லோட்டா காபி கொடுத்து தோட்டம் பக்கம் அனுப்பிடு அங்க பவழமல்லி மரத்துகிட்ட நான் இருக்கேன்...”

“சரி மாமா”

திருமலை நகர்ந்ததும் பிரஹலாதன் சிணுங்கினான்.

”அம்மா பசிக்கறது எனக்கும் ஏதாவது கொடு”

”முதல்ல மாமாக்கு காபி கொண்டு கொடுத்துட்டுவாடா..”

ப்ரஹலாதன் கொண்டுவந்து கொடுத்த காபியை சாப்பிட்டதும் திருமலை” தாங்க்ஸ்டா குழந்தை! ஆமா நீ காபி சாப்ட்டியோ?”என்று அன்பாகக்கேட்டார்.

”இல்ல மாமா காபில்லாம் ஆத்லபோடறதில்ல ... ஆனா கார்த்தால் நீராகாரம் சாப்டுவேன் இன்னிக்கு கிளம்பற அவசரத்துல அம்மாவும் தரல நானும் அப்படியே வந்துட்டேன்... பானகம் பண்னப்போறாளாமே மாமா? எனக்கு.பானகம் ரொம்பப் பிடிக்கும் ”

”அது பூஜைமுடிஞ்சி சாய்ந்திரமாத்தான் உன் வாய்க்குக்கிடைக்கும்டா..அதுவரை பட்டினி கிடக்கமுடியுமா உன்னால? அம்மாகிட்ட கேட்டு ஃப்ரிட்ஜ்ல ஜூஸோ பழமோ எடுத்து சாப்பிடுப்பா”

பிரஹலாதன் காபிலோட்டாவுடன் சிட்டாய்ப்பறந்தான்.

ஜனகா வெல்லத்தை கொல்லைப்புறம் கொண்டுவந்து அங்கிருந்த பாறாங்கல் திண்ணைமீது வைத்து சிறு கல் உலக்கையால் நங்நங்கென்று தட்டினாள்.

கூடவே வந்த பிரஹ்லாதன்,”அம்மா! எனக்கு துளி வெல்லம் தரியா?” என்று கேட்டான் ,கேட்கும்போதே நாவில் நீர் சுரந்துவிட்டது.

“இல்லடா உம்மாச்சிக்கு பண்றது இதை முதல்ல நாம சாப்டக்கூடாது”

இதைக்கேட்டுக்கொண்டே அங்கே வந்த திருமலை” குழந்தைக்கு சின்ன வில்லை கொடு ஜனகா ஆசைப்படறான் பாவம்”
என்றார்.

ஜனகா யோசித்தபடி ஒரு வில்லையை எடுத்து மாமாவிடம் கொடுத்து,:நீங்களே கொடுங்கோ மாமா..எனக்கென்னவோ பயமா இருக்கு” என்றாள்.

எதேச்சையாய் அங்கே வந்த வேதவல்லி திருமலையின் கையில் வெல்ல வில்லையைப்பார்த்து ருத்ரதாண்டவம் ஆடினாள்.

” என்ன நினைச்சிண்டு இருக்கேள் மனசுல? பெருமாளுக்கு அதுவும் உக்ரநரசிம்மருக்குபண்ற பிரசாதத்தை மனுஷா முதல்ல சாப்பிடறதா? எனன் அக்கிரமம் இது? வயசுக்கு ஏத்த விவேகமே இல்லை உங்ககிட்ட.. இந்தப்பொடியனுக்காகவோ இல்ல நீங்க முழுங்கவோ எப்ப்டி எடுத்தாலும் அது மகா தப்புதான்.. டேய் பொடியா போடா அந்தப்பக்கம்.....கூடத்துமூலைல உக்காந்துக்கோ அம்மாபுடவைத் தலைப்பைப் பிடிச்சிண்டு வந்தே கொன்னுடுவேன் உன்னை.பூஜைமுடிஞ்சதும் எல்லாம் நீயும் கொட்டிக்கோ யார் வேண்டாஙக்றா? நரசிம்மர் யார்மேலே எப்போ எப்டி வருவார்னு யாருக்குத்தெரியும். ஆவேசம் வந்து அவாமூலம் தன் கோபத்தைக்காட்டமாட்டாரோ? அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் .. சுவாமி உக்ரம் தெரியாதா என்ன? அதைத் தணிக்கத்தானே பானகம் பண்றோம்? ”முணுமுணுத்தபடி மாமி அகன்றாள்.

பிரஹலாதன் பயந்துபோய் கூடத்துமூலையில் போய் உட்கார்ந்துகொண்டான்.டிவியில் நரசிம்மர்கோயில் ஒன்றின் அபிஷேக ஆராதனைக்காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது.

மணி பகல் 12 ஆனது.

திருமலை திருதிருவென விழித்தபடி பிரஹலாதன் அருகில் வந்தவர்,”குழந்தே பசிக்கறதாடா?” என்று கேட்டார்.

“ஆமாம் மாமா அம்மாவும் பயப்படறா ஒண்ணும் தரமாட்டேங்கிறா..”

“நான் கொஞ்சம் பழம் கொண்டுவந்து தரட்டுமா வேஷ்டில மறைச்சி எடுத்துண்டு வரேனே?”

“வேண்டாம் மாமா ..மாமி உங்கள ரொம்ப திட்றா பாவம் நீங்க..”

”அவ அப்படித்தான்..ஆனா மாமி ஃப்ரண்ட்ஸெல்லாம் வந்தா அவாளே உரிமையா ஃபிரிட்ஜைத் திறந்து ஜூசும் கூல்ட்ரிங்கும் குடிச்சிட்டுத்தான் பூஜைக்கு உக்காருவா பாரேன்.மாமியும் அவாளை ஒண்ணும் சொல்லமாட்டா...எல்லாம் பணம் பண்றவேலைடா”

எரிச்சலுடன் முணுமுணுத்தபடி மாடிக்குப்போனவர் மறுபடி மூன்றுமணிக்குக் கீழே வந்தபோது கூடத்தில் அப்படியே கைகட்டிக்கொண்டு முகம் வாடிய நிலையில் அமர்ந்திருந்த பிரஹலாதனைப்பார்த்து வேதனையுடன் ‘ச்சூள்’ கொட்டினார்.

வேதவல்லி ஹாலில் கீழே ரத்னகம்பளத்தை விரிக்கச்சொல்லி பணியாட்களுக்கு உத்தரவு போட்டுக்கொண்டிருந்தாள்.

இதுதான் நலல் சமயம் உள்ளபோய் ஒரு லோட்டா பானகத்தை கொண்டுவந்துடலாம்..குழந்தையும் தெய்வமும் ஒண்ணூதான்..இந்தக்குழந்தை சாப்பிட்டால் பகவான் ஒண்ணும் கோவிச்சிக்கமாட்டார்.அதுவும் நரசிம்மனின் அபிமான பக்தனின் பேரை வச்சிண்டு இருக்கான் குழந்தை. வாய் மூடி தேமேன்னு உக்காந்திருக்கு...இன்னும் மூணுமணிநேரத்துக்கு மேல ஆகும் பிரசாதம் கிடைக்கறதுக்கு . அதுவரை பையன் தாங்குவானா? எங்காவது மயக்கம் போட்டு விழுந்துட்டா...? இந்த ஜனகாவும் எனக்கு மேல பயந்துசாகறா..

இப்படி நினைத்தபடிதிருமலை மெல்ல சமையலறைக்குப்புகுந்தார்.

ஜனகா அப்பளம் பொறித்துக்கொண்டிருந்தாள்.

அவளுக்குத்தெரியாமல் ஓரமாய் தாம்பாளம் போட்டு மூடிவைத்திருந்த ஜோடுதவலையை நெருங்கினார். மெல்ல அந்த தாம்பாளத்தை கையில் எடுக்கும்போது அது கைதவறி ஜிலீங் என்று சப்தப்படுத்திக்கொண்டு கீழே விழுந்தது.தூக்கிவாரிப்போட ஜனகா திரும்பினாள்.

“என்னாச்சு என்ன சத்தம் அங்க?வாசல்ல எல்லாரும் கார்ல வந்துட்டா...நீங்க கிச்சன்ல என்ன பண்றங்கோ? வாசல்லப்போய் எல்லாரையும் வரவேற்கிற வழியைப்பாருங்கோ..ம்ம்?”

வேதவல்லி போட்ட கூச்சலில் சப்தநாடியும் ஒடுங்க திருமலை வாசலுக்குப்போய்விட்டார்.

வந்தவர்கள் “ஸ் அப்பா என்ன வெய்யில்.... ஜூஸ் கொண்டாங்க சமையக்கார மாமி “ என்று நுழைந்ததும் உத்தரவிட்டனர்.

ஜனகா கொண்டுபோய்கொடுக்கும்போது ஓரமாய் உட்கார்ந்திருந்த மகனையும் ஒரு கண் பார்த்துவந்தாள்.

திருமலைக்கு கோபமாய்வந்தது கூடத்தில் மூலையில் உட்கார்ந்திருக்கிற குழந்தைக்கு ஒருவாய் நீராவது யாராவது கொடுத்துத் தொலைத்தால் என்ன? பெத்தவளுக்கே விசாரமில்லை..

அவன் அருகில்போய்,”சர்பத் கொண்டுவரட்டுமாப்பா?” என்றுகேட்டார்.

”வேண்டாம் மாமா அதெல்லாம் பழக்கமில்ல.. எனக்கு பானகம்பிடிக்கும் பூஜை ஆனதும்அதே சாப்பிட்றேனே?” என்றான் பிரஹலாதன் .

“அதுக்கு இப்போதான் மணி அஞ்சாறது அஞ்சரைக்கு ஆரம்பிச்சி ஆறரைக்குதான் பூஜை முடிப்பா அப்புறம்தான்ப்பா பானக விநியோகம் நடக்கும்”

”பரவால்ல மாமா..தோட்டத்துப்பைப்ல தண்ணி குடிச்சிட்டேன் ..”

திருமலை வேதனையுடன் வந்தபோது கையில் ஜூஸ் டம்ளருடன் வந்த லேடீஸ்க்ளப் தலைவி மாலதி ஜகன்னாதன்,” வேதா ஈஸ் ஆல்வேஸ் க்ரேட்! நரசிம்ம ஜயந்தி வைபவத்தை அவள் வீட்டில் கொண்டாடறவிதமே தனி” என்று யாரிடமோ புகழ்ந்து கொண்டிருந்தாள்.

“எல்லாம் சிரத்தையாய் செய்யணும் மாலதி, இல்லேன்னா நரசிம்மர் யார்மேலாவது ஆவேசமாய் வந்துடுவார்.” என்றாள் வேதவல்லி பெருமையும் பயத்துடனுடனும்.

பூஜை ஆரம்பித்தது. திருமலை முன்வரிசையில் உட்கார்ந்து கொண்டிருந்தவர் சட்டென பின்வரிசையைப்பார்த்தார் அங்கே பிரஹலாதன் சுவரோடு சுவராய் சாய்ந்து கண்ணைமூடிக்கொண்டிருந்தான்.

‘ஐயோ அவனுக்கு மயக்கம் கியக்கம் வந்துருக்குமோ?’

விளக்கேற்றி விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லத்தொடங்கினர். பஜனைபாடல்கள் என்று தொடர்ந்தது. இரண்டுமணிநேரமானதும்,


’எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திருவோணத்திரு விழவில்
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப் பல்லாணடு பல்லாயிரத்தாண் டென்று பாடுதுமே’

பல்லாண்டு கூறிவிட்டு ஒருவழியாய்கற்பூர ஹாரத்தி காண்பித்து மங்கள சுலோகம் சொல்லிமுடித்தனர்.. பானக நைவேத்யமும் முடிந்தது

வேதவல்லி மடிசார் புடவை தடுக்கத்தடுக்க வேகமாய் பானக ஜோடுதவலைப்பாத்திரத்தை திறந்தாள்..டம்ளரில் பானகத்தை ஊற்றி அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தாள்.

திருமலை ஓடிப்போய்,”ஒரு டம்ளர் இங்க..” என்றார்.

“அடடா உங்களுக்கு என்ன அவசரம்? வெளிமனுஷாளை கவனிங்கோ முதல்ல போங்கோ அந்தப்பக்கம்” விரட்டிய மனைவியை விரக்தியாய் பார்த்தபடி ஒரு மூலையில்போய் நின்றுகொண்டார் திருமலை.

ஓரிரு நிமிடங்கள்தான்.....


திடீரென ஹ்ஹ்ஹ்ஹூஉம்ம் என்று தலைமயிரை சிலுப்பிக்கொண்டு உடம்பை முறுக்கிக்கொண்டு நடுக்கூடத்தில் தொம் என கைகாலை அகட்டியபடி குதித்தார் திருமலை.

”வக்கீல் சாருக்கு எனனச்சு? முழியை உருட்றாரே? ஐய்யோ பயமா இருக்கே?”

“மாமா மாமா!”

“நான் நரசிம்மம் வந்துருக்கேன்..” திருமலை உக்ரமாய் வார்த்தைகளை உமிழ்ந்தார்.

”ஆ பெருமாளே! நரசிம்மா ! நான் சொன்னெனே சிரத்தையா பூஜை பண்ணினா பெருமாள் யார்மேலாவது வந்துடுவார்னு. என் பாக்கியம் பெருமாள் இங்க .ஹோ பெருமாளே ஏஏஏ..” வேதம் பெருமையாய் சொன்னபடி நாலுதடவை கீழேவிழுந்து சேவித்தாள்.

”உன் பூஜைல குத்தம் இருக்கு் வேதா”

“கு..குத்தமா? இல்லையே நேமமா செய்தேனே சுவாமீ?” கைநடுங்க குரல் நடுங்க சொன்னாள் வேதவல்லி/

“ஹ.. அநியாயமா செய்துட்டு என்ன பேச்சு பேசறே நீ?”

“அநியாயாமா? அபசாரம் மன்னிச்சிடுங்கோ பெருமாளே என்ன குத்தமாச்சு?”

”என் பக்தனை பட்டினி போட்டுட்டு நீங்கள்ளாம் பானகம் சாப்பிடறங்கோ...இது மகா அநியாயம்”

“பக்தனா? எல்லாரும் உங்க பக்தா பெருமாளே.. யாரைசொல்றேள்?யாரு?”

“பிரஹலாதன் என் அபிமான பக்தன் தெரியாதா? ஹூஹூ,ம்ம்ம்ம்”

“ப்ரஹலாதன் உங்க அருமைபக்தன் அறிவேனே ஹரி ஹரி”

“அந்தபிரஹலாதன் இல்லை...இங்க இருக்கும் பிரஹலாதன்”

“பிரஹ்...ஓ சமையக்காரி பையனா?...” புரிந்தவளாய் வேதம் “அபச்சாரம் பண்ணிட்டேன் “ என்று மறுபடி விழுந்து சேவித்தாள் பருத்த உடல் மூச்சிறைக்க கூடத்துமூலையில் மயக்கமாகிக் கிடந்த பிரஹலாதனை நெருங்கினாள்..

“சீக்கிரமா பெருமாள் மலையேறதுக்குள்ள பெருமாள் உத்தரவை செய்துமுடி வேதா” யாரோ வயதான பெண்மணி உரத்தகுரலில் சொன்னாள்.

பிரஹலாதனின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவனை மடியில் அமரவைத்து பானகத்தை சொம்பில் கொண்டுவரச்சொல்லி அதனை மெல்ல அவன் வாயில் ஊற்ற ஆரம்பித்தாள்.’நரசிம்மப்பெருமாளே என்னை மன்னிச்சிடு உன் பக்தனை நான் கவனிக்காதது தப்புதான்’ வாய்விட்டு அரற்றினாள்.

மடக் மடக் என பானகத்தை முழுங்கிய பிரஹலாதனுக்கு உயிரே திரும்பிவந்தமாதிரி இருந்தது. மெல்ல ஆசுவாசமாய் கண்ணைத்திறந்தான்.. அனைவரும் தன்னை கீழே விழுந்து நமஸ்கரித்துக்கொண்டிருக்க, அங்கே நின்றுகொண்டிருந்த திருமலை மட்டும் பிரஹலாதனைப்பார்த்துக் குறும்பாய் கண் சிமிட்டினார்.
மேலும் படிக்க... "துரும்பிலும் இருப்பான்!"

Wednesday, August 24, 2011

நாளை!(கவிதை)






நாளைக்கு ஒரு நாடகம்
நடிக்க வேண்டியிருக்கிறது
நாடக ஸ்க்ரிப்ட் கைக்கு வரவில்லை
நாள்முழுவதும் ஒத்திகை செய்ய வழியில்லை
கதாபாத்திரம் அதே தான் என்றாலும்
இன்றுபோட்டது நாளைக்கு இறந்ததாகிவிடும்
புத்தம்புது நாடகம்தான் நித்தம்!
க்ரீன் ரூமைவிட்டு வெளியே வந்து
விளக்குபோட்டதும்
வெளிச்சத்தில்தான்
வசனம்பேசவேண்டும்
இன்றையநாடகத்திற்கான ஒத்திகையை
நேற்றைக்குப்பார்க்கவில்லை
இன்றுதான் நேற்றின் நாளையாகி இருந்ததே.
கைநழுவும் பாதரசமில்லைதான் நாளை
ஆனாலும் கைபிடிக்க இயலா காற்று
நாளை பிறந்ததும் மேடை ஏறியதும்
தானாய் வருகின்றன வசனங்கள்
நாளையின் தலை எழுத்ததினை
அசலைப்பத்திரப்படுத்திக்கொண்டு
நகலையாவது இறைநாயகன்
நம்கைக்கு அனுப்பி வைத்தால்
சரிபார்த்து நடிக்கலாம்
அதற்கு வழி இல்லாததால்
நாளை கதி என்ன என்று தெரியாமலே
மேடை ஏறி நடிக்கத்
தயாராகிக்கொண்டுதான் இருக்கிறோம்!

****************************************************************

(இன்றைய நவீனவிருட்சத்தில் பிரசுரமானது கவிதை)
மேலும் படிக்க... "நாளை!(கவிதை)"

Saturday, August 20, 2011

ஓ.. பட்டர் ஃப்ளை!





வண்ணாத்திப்பூச்சிகள் பார்க்க அழகானவை என்பதை யாராலும் மறுக்கமுடியாது பட்டாம்பூச்சி என்றும் இதை சொல்கிறார்கள்..வண்ணாத்துப்பூச்சியா வண்ணாத்திப்பூச்சியா எது சரி? வண்ணாத்திப்பூச்சி வயசென்ன ஆச்சி என்று திரைப்பாடல் நினைவுக்குவருகிறது. பூப்பூவா பறந்து செல்லும் பட்டுப்பூச்சி அக்கா என்ற பாட்டு ஓ..பட்டர்ஃப்ளை விரித்தாய் சிறகை இப்படி சில பாட்டுக்களும் நினைவுக்கு வரணுமே!

வண்ணாத்திப் பூச்சிகள் எப்போதும் தோட்டங்களில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும் அவற்றை சில இடங்களில் கூட்டம் கூட்டமாகத் தரையில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கலாம். அவை ஏன் அப்படி உட்காருகின்றன தெரியுமா? தங்கள் உடலுக்குத் தேவையான உப்பினை உரிஞ்சி எடுத்துக் கொள்வதற்காகத் தான்.(இந்ததகவலை பறவைகளைப்பற்றீய பரந்த ஞானம் உள்ள திரு கல்பட்டுநட்ராஜன் சார் சொல்லி்ருக்கிறார்)






.
பட்டர்ஃபிளை எபெக்ட் என்றால் ஒரு சிறிய மாற்றமும் பெரிய ஒரு மாற்றத்தை தோற்றுவிக்க கூடிய தன்மை உடையது எனும் பொருள்பட உள்ளதை விக்கிப்பீடியா மூலம் அறிந்துகொண்டேன். அதாவது வண்ணாத்திப்பூச்சி பறக்கும் எபெக்டு பெரிய சுனாமிவரக் காரணம் ஆகலாமாம். பூனை நாய்க்கெல்லாமும் பூமில வரப்போகிற இயற்கை சீற்றங்கள் பற்றிய முன் எச்சரிக்கை உணர்வு இருக்குமாம்.



பட்டர்ஃப்ளை பார்க்குகள் வெளிநாட்டில் குறிப்பா கனடாவில் மிகவும் பிரபலம் என்றாலும்

கார்டன் சிடி ஆஃப் இண்டியா என்கிற் பெங்களூரின் பன்னார்கட்டா பகுதியில் சற்றும் செயற்கை சூழலின்றி காடுகள் அமைந்த பகுதியில் நகரின் தெற்கே சிடியிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பன்னார்கட்டா நேஷனல் பார்க்கிற்கு தினமும் பல்லாயிரம் மக்கள் வந்துபோகிறார்கள்.







-- லையன் சஃபாரி (Lionsafari)எனப்படிம் சிங்கங்களை சுதந்திரமாய் அலையவிட்டு நாம் வாகனக்கூண்டிலிருந்து அவைகளை அருகே சென்று பார்ப்பது இங்கு பலவருடங்களாக உள்ளது ஆனால் சிலவருடங்களாக மட்டுமே பட்டர்ஃப்ளைபார்க் என்று வண்ணாத்திப்பூச்சிகளுக்கென்றே பிரத்தியேகப்பூங்காவினை அமைத்துள்ளனர். இதைப்பற்றி சொல்லத்தான் வண்ணாத்திப்பூச்சி பற்றி சின்ன அறிமுகத்தோட பதிவு ஆரம்பமானது!

இந்த பட்டர்ஃப்ளை பார்க்குல பெரியவர்களுக்கு30ரூபாயும் சிறுவர்களுக்கு 15ரூபாயும் டிக்கட் வசூலிக்கின்றனர்.

இந்தப்பார்க்கில் நீங்கள் புகுந்துவிட்டால் அவ்வளவுதான்! சிறகடிக்கும் பட்டுப்பூச்சியாய் மகிழ்ந்துபோய்விடுவீர்கள். அழகழகான வண்ணத்துப்பூச்சிகளைப்பார்க்கும்போதே ’ஓ பட்டர்ஃப்ளை விரித்தாய் சிறகை பறித்தாய் என் மனதை’ என்று பாடத்தோன்றும். எத்தனை வண்ணங்கள் அதன் உடலில்! வண்னத்துப்பூச்சிகள் வந்து அமருவதற்காகவே வளர்க்கப்படும் ரோஜா தோட்டம் பழம் கொண்ட மரங்கள் சிறு ஓடைகள் என்று உள்ளம் கொள்ளைபோகும் விததில் அமைந்துள்ளது இந்த பட்டர்ஃப்ளைபார்க்கில் .விதம்விதமான ரோஜாக்களைப் பார்ப்பதா பச்சை ஆரஞ்ச் மஞ்சள் நீலம் சிவப்பு என்று சிறகில் கொண்ட ஓவியத்தீற்றலுடன் வண்ணத்துப்பூச்சிகள் அங்கும் இங்கும் பறக்கின்றதைப்பார்ப்பதா?


நம் கையில் நம் தலைமேல் அமர்ந்து ஹலோ சொல்லிப்போகின்றன. எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாரதிபோல பாடத்தோன்றும் அளவிற்கு அந்த இடத்தில் நமக்குப்பரவசம் தோன்றுவது நிஜம்!

ஏழரைஏக்கர் நிலப்பரப்பில் 10000சதுர அடி டோம் அதாவது வட்டவடிவமான வளைவுப்பகுதிகொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்தபார்க்கில் ஒரேநேரத்தில் இருபதிலிருந்துமுப்பது வகை வண்ணத்துபூச்சிகளைப் பார்க்கலாம்

விலங்குகளுக்கு மட்டும் தான் பூங்கா இருந்தது இப்பொழுது வண்ணத்துப்பூச்சிகளுக்கும் உள்ளது இது அக்டோபர்நவம்பர் மாதங்களில் மட்டுமே திறந்திருக்கும் ஏனெனில் வண்ணத்துப்பூச்சிகளுக்கான சீசன் இதுதான் என்பதால் குறிப்பிட்ட இருமாதங்கள் மட்டுமே நீங்கள் அதிகம் அவைகளைக்கண்டு மகிழலாம்! சில நேரங்களில் பட்டாம்பூச்சிகள் நம்ம கண்ணுக்கு தென்படாம ஏமாத்துது என்று சிலர் புகார் சொல்கிறார்கள். அதென்னவோ நாங்கபோகிறபோதெல்லாம் வந்துடுதே(மலர்முகம் என்பதாலோ? !!(ஓவர்தான் பொறுத்துக்குங்க)!!

என்ன எல்லோரும் இந்த சீசனுக்கு புறப்பட்டுவிட்டீர்களா பெங்களூர் பட்டர்ஃப்ளைபார்க்கிற்கு?!














--





மேலும் படிக்க... "ஓ.. பட்டர் ஃப்ளை!"

Tuesday, July 19, 2011

நாய் ஜாக்கிரதை!


”நான் சொன்ன வாசகத்தை எழுதிமுடிச்சிங்களா இல்லையா? இடியட்ஸ்... இன்னுமா அந்தப்பலகை ரெடியாகல?” என்று வள் என்று சீறி விழுந்தபடியே கடைக்குள் நுழைந்தாள் அந்தப்பெண்மணி.

'நல்வரவு 'என்று கொட்டையாய் பெயர்ப்பலகையில் எழுதிமுடித்த சிகாமணி அந்தப்பெண்மணியைக்கண்டதும் பெயிண்டையும் ப்ரஷையும் அப்படியே கீழே வைத்துவிட்டு சின்னதடுப்பிடையே புகுந்து கடையின் உள்பக்கம் பதட்டத்துடன் ஓடினான்.

“முதலாளீ” என்றான் மூச்சிறைக்க
.
“என்னடா சிகா?”

மரப்பலகை ஒன்றினைத்தரம் பார்த்துக்கொண்டிருந்த குமரவேல் இப்படிக்கேட்டதும் சிகாமணி,”முதலாளி! அந்தம்மா கடைசில நம்ம கடைக்கே வந்திட்டாங்க இப்ப” என்றான்.

முதலாளி இல்லாத நேரங்களில் எல்லாம் கடையின் டெலிபோன் ரிசிவரை சிகாமணிதான் எடுப்பது வழக்கம், அப்படி இரண்டுமூன்றுதடவைகளில் எடுக்க நேர்ந்தபோது இந்தப்பெண்மணி போனில்” இன்னுமா நான் சொன்ன போர்டை எழுதி முடிக்கல வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்?” என்றும்,” ரோஸ்வுட்பலகையின் நாலுமூலையிலும் பித்தளைல விளிம்புகட்டி நடுல அழகா எடுப்பா எழுதச்சொல்லி ஒருவாரமாச்சு இன்னும் போர்டை ரெடி பண்ணாம இருக்கீங்கஒரு வேலைகொடுத்தா பொறுப்பா செய்யறதில்லையா? இதே அமெரிக்காவா இருந்தா இதுக்கெல்லாம் நாங்க கோர்ட்ல கேஸ்போடலாம் தெரியுமா? இந்தியா உருப்படாம போகக் காரணமே உங்களமாதிரி சிலபேராலதான்”என்றும் கூச்சல்போட்டிருக்கிறாள்.அவள் மென்மையாகப்பேசி சிகா கேட்டதே இல்லை.

அதனால் அவளை நேரில்கண்டதும் சிகாமணி திகைத்துப்போனான். ஐம்பதுவயதிருக்கும் வசதியான வீட்டுப்பெண்மணி என்பதை தோற்றமே காட்டியது. பாப்கட் செய்த தலை. பாண்ட் ஷர்ட் அணிந்து வந்தவள் கூலிங்க்ளாசைக் கழட்டிவிட்டு உஷ்ணப்பார்வையில் கடையை அளந்தாள்.

“வாங்கம்மா வாங்க” முதலாளி பொறுமையாய் வரவேற்றார்.

“என்னதத வாங்குறது?பத்துநாளாச்சு நான் ஒரு போர்டு எழுதச்சொல்லி, இன்னும் முடிக்கல நீங்க? கடைக்குபோன்செய்தா எப்போவும் நீங்க மரப்பலகை வாங்க வெளில்போயிருக்கிறதாகவே இந்தப்பையன் சொல்றான்...ஏய் நீதானேப்பா அது?பொடிப்பயலே... நேர்ல நறுக்குனு நாலுவார்த்தை கேக்கத்தான் அதிரடியா வந்தேன்..இதபாருங்க போர்டு நாளைக்கே ரெடியாகி வீட்டுக்குக்கொண்டுவரணும் சொல்லிட்டேன் ஆமா..”

“சரிங்கமா அந்த குறிப்பிட்டமரப்பலகை கிடைக்க தாமமாகிடிச்சி.. நாலுமூலையிலும் பளபளன்னு பித்தளைவிளிம்பு பொருத்திட்டோம் கடைசி இழைப்புநடக்குது முடிச்சிட்டா தம்பி வாசகத்தை அரைமணில எழுதிடுவான் சாய்ந்திரமே அவன் கைல வீட்டுக்கு கொடுத்தனுப்பறேன்,மா..”

”என்னத்த கொடுத்தனுப்பப்போறீங்களோ உங்களையெல்லாம் நம்பிப் பிரயோசனமே இல்லை ....என்ன கடை வச்சி நடத்தறீங்களோ ஹ்ம்..” காலடியில் இடறிய சைலன்ஸ்ப்ளீஸ் என்ற வாசகம் எழுதிய பலகையை மிதித்துக்கொண்டே போனாள்.

மாலை சொன்னபடிபலகையை இழைத்து முடித்துவிட்டார்குமரவேல்.
சிகாமணியிடம் பலகையில் எழுத வேண்டிய வாசகங்களை ஒருதாளில் எழுதிக்கொடுத்தார் ”சரியா எழுது சிகா அதுக்குவேற அந்தம்மா சீறிட்டுவருவாங்க”என்று சொல்லி சிரித்தார்.

சிரத்தையாய் வெள்ளை பெயிண்டில் ப்ரஷைதோய்த்துமணிமணியாய் எழுதிமுடித்தவன் காய்ந்ததும் கையோடு முதலாளி கொடுத்த விலாசத்திற்கு எடுத்துக்கொண்டுபோனான்.

வாசலில் அல்சேஷன் நாய் ஒன்று கன்றுகுட்டி சைசில் இவனைப்பார்த்து வாலைஆட்டிக்கொண்டுவந்தது.சிகா சற்றுமிரண்டு நிற்கையில் ஒருசுற்றிசுற்றி வந்து மோப்பமிட்டுவிட்டு ஒதுங்கிப்போய்விட்டது. சின்ன லொள் கூட இல்லை!

உள்ளே போனில் மும்முரமாய் பேசிக்கொண்ட்ருந்த அந்தபெண்மணி சிகாவைகக்ண்டதும்,

” வந்து தொலைஞ்சியா?ரெடியாச்சா ஒருவழியா? இந்த சின்ன வேலைக்கு ஒருவாரத்துக்கு மேல கேட்குதாக்கும்?யூஸ்லெஸ்பீபிள்! சரிசரி அதை காம்பவுண்ட்கேட்ல கம்பிபோட்டு இறுக்கமாய்க் கட்டி்ட்டுப்போய்ச்சேரு... என்ன தயங்கி நிக்கற?ம்? கம்பி கதவுலயே இருக்குதுபொ,,போ..” என்று சீறி விழுந்தாள்.

சிகா அந்தப்பலகையை கவனமாய் நுழைவுவாசலில் இருந்த க்ரில் கேட்டில் இரும்புக்கம்பியை வளைத்து முறுக்கி இறுக்கக் கட்டினான்.

கதவை மூடிவிட்டு ’தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று பெருமூச்சுவிட்டபடிவெளியே போனவன் சட்டென திரும்பிப்பார்த்தான்.

”நாய் ஜாக்கிரதை” என்ற வாசகம் எழுதிய பலகை வீட்டின் உட்புறம் திரும்பி இருந்தது.
***********************************************************************************************



(நவினவிருட்சத்தில் அண்மையில்வெளியான சிறுகதை)
மேலும் படிக்க... "நாய் ஜாக்கிரதை!"

ரசிகன்(சிறுகதை)


நீண்ட நாள் கழித்து இந்தஅறைக்குள் நுழைகிறேன். மொட்டைமாடியில் காற்றோட்டமான ஜன்னல்கள் கொண்ட மேற்கூரை மேய்ந்த சின்ன அறைதான்.ஆனாலும் என்னுடைய சாம்ராஜ்யம் இங்கேதான் நடந்திருக்கிறது. சுற்றிலும் புத்தக அலமாரிகள் நடுவில் ஒரு மரமேஜை அருகில் நாற்காலி . சின்னதாய் டேபிள்ஃபான் ஒன்று . நண்பர்கள் வந்தால் அவர்களை உட்கார வைக்க நீளமாய் ஒரு மரபெஞ்ச். குடிநீருக்காய் ஒரு பானை அவ்வளவுதான் சாம்ராஜ்ய சொத்துக்கள்!

பதினைந்து வருஷம் முன்பு இந்த அறையைக்கட்டி முடிக்கவே பத்தாயிரம் ரூபாய்க்குமேல் செலவானது. சுமதிகூட,”என்னங்க இவ்ளோ பணம் ஒரு சின்ன ரூமுக்கா செலவழிக்கணும் அதுல ரம்யாக்கு தங்கத்துல நகையாவது வாங்கலாம் அவளுக்கும் வயசு ஏழு ஆகபோகுதில்ல?” என்றாள் கவலையுடன்.

“கீழ்வீட்ல எனக்குன்னு தனி ருமே இல்லை ஒரே சத்தம் வேற. இங்கே தனியா ஏகாந்தமா உக்காந்திட்டு கற்பனை செய்து கதைகதையா எழுதி லட்சலட்சமா சம்பாதிச்சிடுவேன் கவலைப்படாதே”என்று சமாதானம் சொன்னேன்.

கலைஞனுக்கு லட்சங்களில் லட்சியம வந்துவிட்டால் கலைமகளுக்குப்பிடிக்காதுபோலும்.... பணத்திற்காகவே எழுத ஆரம்பித்தேன். நாலைந்துவருஷங்களிலேயே என் புகழ் மங்க ஆரம்பித்து எழுதியபடைப்புகளை தொடர்ந்து பத்திரிகைகள் நிராகரித்தன. அந்தவிரக்தியில் நான் பேனா பிடிப்பதையே நிறுத்தியும் ஏழெட்டுவருஷங்கள் ஆகிவிட்டன.

இன்று மனைவியும் மகளும் சொந்தக்காரர் வீட்டுத்திருமணத்திற்குப்போய்
விட்டார்கள்..ஆபிசிலிருந்து சீக்கிரமாகவே வீடுவந்தவன் அப்படியே கூடத்து சோபாவில் எதையோ பறிகொடுத்தவன் போலப்படுத்திருக்கிறேன். பஸ்ஸில் வரும்போது பத்திரிகை ஒன்றில் படித்த கதையை அசைபோடுகிறேன். எழுதியவர் பெயர் ஒன்றும் பிரபலமாய்த்தெரியவில்லை ஆனால் எழுதிய கருத்தும் கதையின் ஓட்டமும் மனசை அள்ளிச்சென்றன.

இப்படித்தான் நானும் பல கதைகள் எழுதி இருக்கிறேன். ஒரு நிகழ்ச்சி ஓர் அனுபவம் ஓர் உணர்ச்சி படித்த ஓர் செய்தி என்று எதுவேண்டுமானாலும் ஒரு சிறுகதையை உருவாக்கிவிடும்.. அப்படிப்பட்ட கதைகள் எழுதி பரிசுகள் வாங்கி பிரபல எழுத்தாளர் எழிலூர்எதிராஜன் என்று நான் பேரும் புகழுமாய் வாழ்ந்த காலம் கனவுபோல இருக்கிறது. இந்த ஏழெட்டுவருஷங்களில் நான் எழுதுவதையும் எழுத்தாளர்களை சந்திப்பதையும் அடியோடு நிறுத்தியேவிட்டேன். காரணம் விரக்திதான்.

அப்படியே பழைய நினைவுகளை அசைபோட்டு சிந்தித்து உட்கார்ந்திருந்தவனை டீபாய் மீதிருந்த டெலிபோனின் ட்ரிங் ட்ரிங் என்ற சத்தம் சுதாரிக்கவைத்தது.

ரிசீவரை எடுக்கிறேன்.


"ஹலோ எழுத்தாளர் எழிலூர்எதிராஜன் இருக்காரா?"

எதிர்முனை என்னை இப்படிக்கேட்கவும் வியப்பில் கண் விரிக்கிறேன் ...எல்லோரும்மறந்துவிட்டிருப்பார்கள் என்று நினைக்கும் நேரத்தில் இப்படி ஒரு குரல் உற்சாகமாய் கேட்கவும்.”ஆமாம்நீங்கயாரு?’ என்கிறேன்

”சார் நான் ரசிகன்.......”

”ஓ என் ரசிகரா? வேடிக்கைதான் நான் கதை எழுதுவதையே நிறுத்தியே பல வருஷமாச்சே?””

”அதைத்தான் கேட்க வருகிறேன் .....எதனால் எழுதுவதே இல்லை? அற்புதமான வளமான எழுத்து உங்களுடையது”

”அப்படியா?”

”ஆமாம் ......உங்களுடைய சிறுகதைகளில் ஆன்மாவைக்கண்டவன் நான்.”

”மகிழ்ச்சி ரசிகன்”

“ஆமாம் ! நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளி சார்....உங்களைமாதிரி படைப்பாளிகளால்தான் மனதில்பட்டதை அழகான காட்சியை
உயர்ந்த அல்லது இழிந்த பண்புகளை விருப்பு வெறுப்பு இல்லாமல் உள்ளது உள்ளபடி திறந்த மனத்தோடு எத்ற்காகவும் கவலைப்படாமல் உன்னத படைப்பினை உருவாக்கமுடியும்.உள்ளத்தின் உள்ளொளி எழுத்தில் பிரகாசித்துவிடும். படைப்பாளி பயனை எதிர்பார்ப்பதில்லை ஆனால் அவன் படைப்பு சமுதாயத்திற்கு எவ்வளவோ பயன்படுகிறது. சமுதாயத்தின் பண்பாட்டை வளர்ப்பதுதான் கலை. அதன் இலக்கு மனிதனை உயர்த்துவது. அவன் சிந்தனையை விரிவடையச்செய்வது அவன் வாக்கில் ஒளிதுலங்கச்செய்வது அவன் செயலை மேம்படசெய்வது.இந்த அற்புதமான பணியை உங்கள் எழுத்து ஒருகாலத்தில் செய்துகொண்டிருந்தது. அதை முடக்கிவிட்டீர்களா சார், என்னைப்போன்ற ரசிகர்களுக்காக தாங்கள் மீண்டும் எழுதவேண்டும்.இது என் கோரிக்கை அல்ல , கட்டளை!” என்று சொல்லிவிட்டு எதி்ர்முனை ரிசீவரை வைத்துவிட்டது.

சட்டென மனதில் யாரோ விளக்கு ஏற்றியமதிரி அகமும் புறமும் பிரகாசமாகிறது.

இருண்டகிடந்த என் மனத்தின் அறையை யாரோ திறந்துவிட்டமாதிரி இருக்கிறது அதனால்தான் இந்த மாடி அறைக்கதவைத்திறந்து உள்ளே நுழைகிறேன். ஜன்னல்களைத்திறந்துவைக்கிறேன். மாலைநேரத்துக்காற்று ரம்மியமாய் வீசுகிறது.

புத்தக வாசனையை இழக்காத அந்த அறைச்சுவர்களில் படங்களாய் வீற்றிருந்த அரவிந்தரும் அன்னையும் என்னைப்பார்த்துப்புன்னகைக்கிறார்கள். இந்தப்புன்னகையைக்காணவாவது நான் இந்த அறைக்குள் வந்திருக்கலாமோ? எழுதுவதும் ஒரு தவம் தானே ? தவம் செய்ய மறந்தேனோ?’புத்தகத்தில் இல்லாதவற்றைக் கற்றுக்கொடுப்பவர் நல்ல வாத்தியார்; ஆசிரியர் சொல்லிக்கொடுக்காதவற்றையும் கற்றுத்தெரிந்துகொள்ளுபவன் நல்ல மாணவன்’ என்று ஆங்கிலத்தில் ஒரு வசனம் இருக்கிறது. அதுபோல அன்றாட வாழ்விலே ஈடுபட்டுத் தத்தளித்து நீந்திக்கரையேற முயற்சி செய்து கொண்டிருக்கும் நாம், நம் அவசரத்தில் காணாது விட்டுவிட்ட அல்லது கண்டும் இனம் தெரியாது விட்டுவிட்ட அனுபவங்களை நம் கண்ணுக்கு முன் கொண்டுவந்து நிறுத்தி அவற்றுள் புதைந்துகிடக்கும் உண்மைகளை வெளிக்கொண்ர்ந்து நம் கவனத்தைல் நிலைநாட்டுவதுதானே எழுத்துக்கலைஞனின் பணி என்று தோன்றுகிறது. என் பணியை செய்யத்தவறிவிட்ட உணர்வில் உள்ளம் குறுகுறுக்கிறது.மேல்நாட்டு அறிஞர் ஒருவர் கூறியதுபோல”நிலையில்லாது கரைந்து மறைந்துகொண்டிருக்கும் கணங்களில் அமரத்துவத்தைக்காட்டுவது தான் கலை” என்ற விமர்சனம் சிறுகதைக்கு மிகவும் பொருந்துவதாகப்படுகிறது.

மேஜையின் அருகே சென்று நாற்காலியில் அமர்ந்து பேனாவை எடுத்து எழுத ஆரம்பிக்கிறேன் .கற்பனை விண்ணாய் விரிகிறது. சொற்கள் இடித்துக்கொண்டு வாக்கியங்கள் மின்னலாய் தெறிக்க காவிய மழை ஒன்று பெய்துவிடுகிறது.

சமைக்கும்போதே வரும் வாசனைகளால் பதார்த்தங்களின் சுவையை அறியமுடிவதுபோல எழுதும்போதே வந்து விழுந்த வார்த்தைக்கலவைகளில் ஆத்மத்ருப்தியான படைப்பு உருவாகி விட்டதை உணர்கிறேன். விரக்தியும் வெறுப்புமாய்சிலவருடங்கள் ஒளிந்திருந்த எதிராஜன் மறைந்து புத்துணர்ச்சியுடன் மீண்டுவந்தவனாய் உற்சாகமாய் கீழே வருகிறேன் .

கல்யாணத்திற்குப்போயிருந்த மனைவியும் மகளும் வருகிறார்கள்.என்னைக் கண்டதும் மனைவி,”எப்போ வந்தீங்க?” என்கிறாள் வியப்புடன்.

“மதியம் சாப்பிட்டதும் வீடு வந்திட்டேன் அப்போ என்னவோ மனசு உற்சாகமாய் இல்லை ரொம்ப டல்லாயிருந்தது ஆனா இப்போ ஒகே”

உஸ்ஸ்ஸ் என்று பெருமூச்சுவீட்டபடியே,” அப்படியா? ஆமா.... காலைல எழுந்ததுமே கவனிச்சேன் நம்ம வீட்டு லாண்ட்லைன் போன் ’டெட்’டா இருந்திச்சி... கம்ப்ளெயிண்டும் போற வழில கொடுத்தேனே யாரும் வந்து ரிப்பேர் செய்தாங்களா?” என்று கேட்டபடியே ரிசீவரை காதில் வைத்தவள்,” ஹ்ம்ம் இன்னமும்டயல்டோன் கேக்கலயே, டெட் ஆகத்தான் இருக்குது” என்கிறாள் சலிப்பான குரலில்

”என்ன! போன் ’டெட்’டா இருக்கிறதா?’்” என்று நான் திகைத்து நிற்கிறேன். மனசுக்குள் ரசிகன் நகைக்கிறான்.


(கதை அண்மையில் நவீனவிருட்சத்தில் வெளிவந்துள்ளது)
மேலும் படிக்க... "ரசிகன்(சிறுகதை)"

Sunday, July 17, 2011

பூமியை வாழவிடு.









//கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு, சூரியன் எஃப்.எம் கவிதை போட்டியை நடத்துகிறது. ‘வைரத்தின் நிழல்கள்’ என்ற இந்தப் போட்டி, ஜூலை 13-ம் தேதி வரை நடக்கிறது. நேயர்கள் ‘பூமியை வாழவிடு’ என்ற தலைப்பில் கவிதைகளை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு வைரமுத்து பரிசு வழங்கி கவுரவிக்கிறார். கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி: ‘வைரத்தின் நிழல்கள்’, சூரியன் எஃப்.எம், 73, முரசொலி மாறன் டவர்ஸ், மெயின் ரோடு, எம்.ஆர்.சி நகர், சென்னை-28
வைரமுத்துவின் பிறந்த நாள் விழாவை, கவிஞர்கள் திருநாளாக, வெற்றித் தமிழர் பேரவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது//



இப்படி ஒரு அறிவிப்பினை தினகரனை ஆன்லைனில் படித்ததும் எழுதி அனுப்பிவைத்தேன் தற்சமயம் வெளிநாட்டில் இருப்பதால் கவிதையை வாசித்தார்களா இல்லையா பரிசு கிடைத்ததா ஒன்றும் தெரியவில்லை.ஆனாலும் எனது அன்புநட்புவட்டம் வாசித்துக்கூறும் கருத்துக்களைவிட பெரிய பரிசென்ன வேண்டும்என்று வலைப்பூவில் அளித்திருக்கிறேன்!










பூமியைவாழவிடு!








புன்னகையை முற்றிலும்

இழக்குமுன்னமே

எனக்குப் புதை குழி

தோண்டப் போகிறீர்களா மனிதர்களே?

புகையிலைப் படுக்கையை

தயார் செய்து

ஆலைப் புகையிட்டு

பிளாஸ்டிக் மாலை அணிவிக்க

ஆயத்தமாகி விட்டீர்கள்!



என் கொடையாய் ஆறுகளைத்தந்தேன்

அழகுமிகு சோலைகளை உருவாக்கினேன்

பூலோக சுவர்க்கமாய் மாற்றினேன்

கனிகளை காய்களை பயிர்களை வளர்த்தேன்

வனங்களை அமைத்தேன் விலங்கு

இனங்களுக்கு அடைக்கலம் தந்தேன்


முன்னொருகாலத்தில்

இங்குஎன் குழந்தைகளான

ஆறுகளின்ஆராவரசத்தம் இருந்தன

பறவைகள் ஓயாத ஓசையுடன்

இலைகள் அடர்ந்த மரங்களில் வசித்தன.

வனங்களும் பச்சைவயல்களும்

வயல் வரப்பின் மீது அமர்ந்து

வாய்க்கு ருசியாய் அயிரமீன்குழம்புடன்

வெங்காயம் சேர்த்த நீர்ச்சோறு உண்ட

வெள்ளந்திமக்களும் வாழ்ந்தனர்



நாட்டுப்பற்றுகொண்ட

தியாகிகளையும் தலைவர்களையும்

புலவர்களையும் புரவலர்களையும்

என்று நல்லோர்கள் பலரைக்

கண்ட புண்ணியத்தாய் நான்!



இன்று..



தர்மம் தலைகுனிகிறது

ஊழல் உற்சாக ஊற்றாய்

ததும்பி வழிகிறது.



அஹிம்சை அழிந்து

அன்பும் மனிதநேயமும்

அற்பமாகிவிட்டது.



தீவிரவாதிகளுக்குப்

புகலிடமாய் இந்த

பூமித்தாய் ஆகலாமா?.



என்னைக் கண்டபடி

கூறு போட்டு

அடுக்குமாடிக் கட்டிடங்களை

அண்ணாந்து பார்க்குமளவுக்குக்

கட்டிவிட்டீர்கள்

என்கோபத்தை

சின்னக் குலுக்கலில்

சிறுபுருவ நெரிப்பில்

நியாயமாய் தெரிவித்தேன்

புரிந்து கொள்ளவில்லை நீங்கள்

.அல்லது

புரிந்தும் புரியாதது போல்

அலட்சியமாய் இருக்கின்றீரோ?

இரண்டுமே மெய்தான்.
.
என் மூச்சு எங்கே எனத்

தேடுகிறீர்களா என்ன?

அதைத்தான் கார்பன் மோனாக்சைடில்

பத்திரப்படுத்தி விட்டீர்களே!




தாயென்கிறீர்கள் என்னை

பேணிக்காக்கத்தான்

மறந்துவிட்டீர் மைந்தர்களே!




ஆறுகளை நீரற்ற சகதி

சேறுகளாக்கிவிட்டீர்,

விலங்கினங்களைத்துரத்தி

வனத்தினில்புகுந்து

வான் உயரக்கட்டிடங்கள் எழுப்ப

மானிடர்கள் வந்துவிட்டீர்கள்.




விட்டுவிடுதலையாகிப்பறந்த

சிட்டுக்குருவிகள் எல்லாம்

விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவுகளில்

கண்கட்டுவித்தைபோல

காணாமல்போய்விட்டனவே!



ஓசோன் ஓட்டை ஆனதனால்

உலகின் வெப்பமும் கூடியதே!

பருவத்தில்பெய்தமழையை

வருமோஇனி மழை

என ஏங்கி நின்று

வான்பார்த்து

வருத்தத்தில்

வாடி நிற்கிறீர்கள்!



மேனியெங்கும் பாளம்பாளமாய்

வெடிப்புவந்து வேதனையுற்று

மூச்சுவிடவும் முடியாமல்

முனகும் இந்த பூமித்தாயினை

தவிக்கவிடும் மானிடரே!

எந்தையும்தாயும்

மகிழ்ந்துகுலாவி

இருந்த நாடென்று இதனை

உமது சந்ததியினருக்குக்

கைகாட்டிடவும்

பொய்யாய்க்கனவாய்

பழங்கதையாய்

பூமித்தாயின் வரலாறு

போகாதிருக்கவும்

புரிந்துகொண்டு வாழுங்கள்.



வெறும் வேஷமிட்டுவாழும்

வாழ்க்கையினின்றும்

வெளியே வாருங்கள்!

வேருக்குத்தான் நீர் தேவை எனும்

விவேகச்சிந்தனைஉங்களுக்கு

விரைவில்தானே வந்துவிட்டால்

பூமித்தாயாம் நானும்தான்

’பூமியைவாழவிடு’ என்று

பூகம்பமுழக்கமிடமாட்டேன்

பூப்போலே பூமண்டலத்தை

புரிந்து என்றும் காத்திடுவேன்!
மேலும் படிக்க... "பூமியை வாழவிடு."

Thursday, April 14, 2011

உறவுக்குக்கரம் கொடுக்கும் புத்தாண்டே வருக!


வரமாகி உரமாகி உறவுக்கு நற்
கரமளிக்கும் புத்தாண்டே வருக! வாழ்க!
தரமான வாழ்வை என்றும் மக்கள்
தாராளமாய்ப் பெற தயக்கமின்றி தருக!

சொத்தாகி சுகமாகிப்பொருளை அள்ளிச்
சுற்றமெல்லாம் களிக்கச் சுவையாய் வருவாய்!
கொத்தாகிக்குலையாகிப்பூக்கள் பூக்கும்
கோடையிலே பொலிவுறவே கர ஆண்டே வருக!

இயற்கைத்தாய் சீறிடாமல் எம்மைக்காப்பாய்!
இலங்கைவாழ் எம்மக்கள்தம்மைக்காப்பாய்!
அயர்வின்றி பெருகிடவும் மனிதநேயம்
அருகுபோல் வேருன்றி உலகம் எங்கும்
வியனுறவே வளர்ந்திடவே செய்வாய் தாயே!
வேற்றுமைகள் போக்கிடவே வளங்கள் சேர்ப்பாய்!
செயற்கைக்கோள்விஞ்ஞானசெயல்கள் யாவும்
சீர்பெற்று ஓங்கிபுகழ் அடையச்செய்வாய்!

சித்திரையில் கால் ஊன்றி வந்தத்தாயே!
செந்தமிழ்போல் எமையெல்லாம் செழிக்க வைப்பாய்!
இத்தரையில் புல்பூண்டு அனைத்தும் வாழ
இதமான மழையைப் பின் தருவாய் நீயே!

முத்தாக மலராகத்தோன்றும் எங்கள்
முத்தமிழ்போல் நிலைவாழ்வு அளிப்பாய் தாயே!
வித்தாக மனிதநேயம் மனிதமனத்தின் உள்ளே
சத்தாக இருந்திடவே செய்திடுவாய் தாயே!
மேலும் படிக்க... "உறவுக்குக்கரம் கொடுக்கும் புத்தாண்டே வருக!"

Sunday, February 20, 2011

ஆதாரம் நீயென்று அரவிந்த அன்னைக்கு....







மலர் என்றால் தாமரை அன்னை என்றால் பாண்டிச்சேரி அரவிந்த அன்னை!

அரவிந்தர் சொல்லுவார்..” நான் பத்துவருடங்களில் அடைந்திருக்ககூடிய ஸித்தியை ஒரே வருடத்தில் அடைந்திருக்க முடிகிறதென்றால் அதற்குக்காரணம் அன்ன்னையின் ஆன்மீக சாதனையே.அன்னையினால்தான் எனது பூரண யோகத்தை நடைமுறையில் கொண்டுவர முடிந்தது.அன்னை இல்லையென்றால் இந்த ஆஸ்ரமம் இல்லை”

அன்னையெனும் அருள் நதியில் நாம் உண்மை உள்ளத்துடன் மூழ்கிஎழும்போது பரிசுத்தமாகிறோம். அவள் அருளில் சிறப்பெல்லாம் பெறுகிறோம்.அன்னையே சரணம்!
ஓம் ஆன்ந்த மயி சைதன்யமயி சத்யமயி பரமே!

அன்னையின் அருள்மொழிகளில் சில....


"நம்மை நாமேத் திருத்திக் கொள்வதால் சமுதாயச் சீர்திருத்தம் தானே நிகழும்,எனவே நம்மைச் சீர்திருத்திக் கொள்வோம்.பின் சமுதாயம் தானே சீர்திருத்தம் பெற்றுவிடும்!!

மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு உள்ளேயே இருப்பதுதானே அன்றி ,வெளியேயுள்ள புறக் காரணங்களால் வருவது அன்று!!

எல்லோருடைய உள்ளங்களிலும் இருக்கிறேன் என்று விளக்கும் உணர்வே ஸ்ரீ அன்னையின் உணர்வும் உண்மையும் ஆகும்!!

மனிதனின் உண்மையான அனுபவங்களின் வெளிப்பாடாக மலர்வதே மகிழ்ச்சியாகும்!!

தன் கடமைகளை முறையாகவும்,ஒழுங்காக செய்வது மட்டுமே உண்மையான பக்தியும்,கடவுளை வேண்டி நிற்பது மட்டுமே ஆசனமும் ஆகும்!!


நான் எனக்காக மட்டும் அல்ல என்று சொல், உனது வாழ்வின் பொறுப்புகளை எல்லாம் - நம்பிக்கைகளை எல்லாம் உண்மையிடம் அதாவது இறைவனிடம் ஒப்படைத்து விடு, அனைத்தும் சீராக நடக்கும்.

இறைவனது அருளைப் பெற விரும்புவதே உயர்ந்த ஞானம் ஆகும். அப்படிப்பட்ட உயர் ஞானத்தை அடைய வேண்டும் என்பதே நமது குறிகோளாக இருக்க வேண்டும்."



அன்னையின் திரு அவதாரத்திருநாளான இன்று அன்னைக்கு எனது எளிய காணிக்கையாக இந்தப்பாடலை எழுதி சமர்ப்பிக்கிறேன் .அன்னையின் திருவடிகளுக்கு பணிவான நமஸ்காரங்கள்.

ராகம் பாக்யஸ்ரீ

பல்லவி

ஆதாரம் நீயென்று ஆனந்தமாய் இங்கு
அரவிந்த அன்னையை சரண்புகுந்தோம்-நமக்கு (ஆதாரம்)

அனுபல்லவி

ஏதாகிலும் பிழை அறியாமல் செய்திடில்
மாதா அவள் நம்மை மன்னித்தே அருள்செய்வாள்(ஆதாரம்)


சரணம்


அறியாமை இருள்தன்னில்
அநியாயமாகவே
அடைந்துகிடந்து அவதி யுற்றோமே
தெரியாமல் பிறர்நோக தெளிவின்றி பல சொல்லை
நெருபென்ன நெடிதாக வீசி எறிந்தோமே
கருமேகத்திரையாக கவலைகள் சூழ்கையில்
சிறுபிள்ளைபோலவே தவித்துப்போகையிலே
அருள் நதியாகவே அரவணைப்பவளை
அன்னை! அன்னை! அன்னை, எனப்பாடி(ஆதாரம்)
மேலும் படிக்க... "ஆதாரம் நீயென்று அரவிந்த அன்னைக்கு...."

Sunday, January 16, 2011

சக்கரைப்பொங்கல் சாப்பிடவந்தார் ஜனாதிபதி ஒபாமா!

நட்டநடு நிசியில் கொதிக்கும் வெய்யிலில் வியர்க்க விறுவிறுக்க சாலையில் நடக்கிறேன். ஔரங்கசீப் நட்டுவைத்த சந்தனமரங்களெல்லாம் நிழல் பரப்பி கிளைகளை அசைத்தது. காற்றில் சந்தனவாசனை மிதந்தது.

'சந்தனக் காற்றே! செந்தமிழ் ஊற்றே" எனக்கவிதை ஒன்று சொந்தமாய் நானே எழுதியது பாட்டாக என்னுள் பிரவாகமெடுக்கிறது. வெள்ளைக்குயில் ஒன்று முழிகளை உருட்டியது. ஆந்தைகீதம் பாடியது. சட்டென மழைத்தூவி எனது கவிதைமேதைத்தனத்திற்கு ஆசிவழங்கிவிட்டு அசரீரி கொடுத்ததுவானம். 'இந்த மழைபோதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?'

'ஓ போதும் வானமே நிறுத்திக்கொள்' என்றதும் ஷவரை ஆ·ப் செய்தது.

அடுத்தகணம்...

மின்னலடித்து என்னைப்பார்த்துக் கண் அடித்தான் வானவன். என்ன அநியாயம் ஒருஇளம்(!)பெண் தனியே நடுஇரவில் நடந்தால் இப்படியா வானவனே கண்அடிப்பதா? 'இதக்கேட்பாரில்லயா?' என வாய் விட்டு அலறியேவிட்டேன். உடனே பெருங்கூட்டம் கூடிவிட்டது.

எல்லாரும் என்னைத் தேற்ற வந்தார்கள் என நினைத்தேன் ஆனால் அத்தனைபேரும்'யாரிந்த இன்னொரு ஐஸ்வர்யா ராய்?' என்றுதான்(ஓவர்தான் பொறுத்துக்குங்க கதை முடிவுவரைக்கும்!) நோட்டமிட்டர்களே தவிர தனியே தவித்தவளுக்கு ஆறுதல் சொல்லக்காணோம்... சரியான ஜொள்ளுப்பார்ட்டிகள்பா! மேலே நடந்தேன்.

யாரது இருட்டில் பதுங்கிபதுங்கி நடப்பது? உடலிருக்கு காலைகாணோம்
யாராயிருக்கும்?

யோசித்தேன்

பிறகு கோபமாய், 'ஏய் ! நீ ரொம்ப அசிங்கமாயிருக்கே!' என்றேன். அப்போதுதான் அந்த மீசையை கவனித்தேன்..ஓ வீரப்பனா? இல்லை இல்லை அவனது ஆவி! ஆவிக்குத்தான் காலிருக்காது.

"ஹேய், உன்னத்தான் விஜய்குமார் சுட்டுட்டாரே உன்னைப்பத்தி இப்போ பேப்பர்ல ஒண்ணும் செய்தி கிடையாது . நீ எதுக்கு இப்போ ஆவியா வேற வந்து அலையறே? இப்பவும் யாரையாவது கடத்ற ஐடியாவா என்ன?"

இப்படி நான் கேட்டதும்,'தாயே! ஆவியாக வந்த என்னை அடையாளம் கண்ட ஆதிபராசக்தி! நீயே காளீ(லி?)! அம்மா! மலைமகளே!(ஷைலஜாக்கு தமிழாக்கம் மலைமகளாம் பாருங்க வீரப்பனுக்கு என்னே தமிழ் அறிவு!) நான் காட்டுல பதுக்கி வச்ச கோடிக்கணக்கான பொருள் எல்லாம் சுருட்டிகிட்டு திரும்ப வந்துட்டுருக்கேன்மா! என்னயக் கண்டுபிடிச்ச உனக்கு தொண்ணூறு லட்சம் தரேன் தாயீ! காட்டிகொடுத்துடாதே கருணைதெய்வமே!' என்று கெஞ்சினான். எனக்குப் பல லட்சங்களை வாரிகொடுத்த அந்த கே(¡)டீஸ்வரனுக்கு நன்றி எல்லாம் சொல்லவில்லை.'சரிசரி..எல்லாம் ஆயிரம் ரூபா நோட்டா இருக்கட்டும்?' என்று மிரட்டிவைத்தேன்.

பணத்தை அப்படியே கைப்பையில் அலட்சியமாய் வைத்தபடி நடையை துரிதமாக்கினேன். பாதிவழியில் போகும்போது எதிரே தூரத்தில் இரண்டு பேர் மிகவும் நட்புடன் மனம்விட்டு பேசிவருவதைக் கண்டேன் ,'ஆ' என சின்னதாய் வீறிட்டுவிட்டேன்.

மஞ்சள்துண்டு தோளில் அசைய வீரநடைபோட்டுவருபவர் யார் கருணா நிதியா? ஆமாமாமாம். அவரேதான். அருகில் யார் பச்சை சேலையை கழுத்து வரை மூடி நடப்பவர்? சாட்சாத் ஜயலலிதா அம்மாதான். ஐய்யெயோ இவங்ககிட்ட மாட்டிகிட்டா ஆபத்துப்பா..

கலைஞர் தனது புது கவிதைத் தொகுப்பிற்கு நல்ல தலைப்பு சொல்லும்படி என்கிட்ட கேட்டுக்கிட்டே இருக்கார். இளைஞன் படத்திற்கு விமர்சனம் எழுத சொல்லுவார்!அம்மாவோ என்னிடம்,'எப்படி(குண்டா) இருந்த நீ இப்படி(இளைச்சித்துரும்பா)ப்போனே அதன் ரகசியம் என்ன எனக்கும் சொல்லு?' எனக் கேட்டு என்னை இம்சை செய்வாங்கப்பா...இவங்ககிட்டேயிருந்து தப்பிச்சே ஆகணும்.

துப்பட்டாவை எடுத்து முகத்தை மறைக்கிறேன். சட்டென எங்கும் இருட்டு சூழ்கிறது. நிலவுமுகம் அல்லவா அதான்.. இருட்டுல நான் வேற பக்கமா வந்துடறேன். அப்பாடி அந்த இரண்டு பேருகிட்டேருந்தும் தப்பிச்சேனே? மறுபடி துப்பட்டாவை முகத்திலிருந்து எடுக்கிறேன். பளீரென ஒளீவெள்ளம்!

வெளிச்சத்தில் சாலை ஓரமாயிருந்த அந்தக்கோயிலை கவனிக்கிறேன்! அருகில் சென்று பார்க்கிறேன்,கோயில் கல்வெட்டில் அதை பெரியார் 1965ல் கும்பாபிஷேகம் செய்து வைத்ததாக எழுதிருந்தனர். வாசலில் அருள்மொழியின் பக்திச்சுவை சொட்டும் உபந்நியாசப்பேருரை!

கமல்ஹாசன் நெற்றியில் நாமம் அணிந்து, பட்டுவேஷ்டியுடன் என்னை பார்த்து கைகுவித்தார். கோயிலில் தொண்டு செய்கிறாராம் நடித்தநேரம்போக.ஆஹா என்ன பக்தி பாருங்க அவருக்கு.

சாமிக்கு ஒரு பூமாலை வாங்கிப்போகலாமென எதிரில் தெரிந்த ஒரு கடைக்குள் நுழைகிறேன்.

தங்கத்தாமரை, பொன்மல்லிகைமொட்டுக்களாகவே காணப்பட்டன.

'முழம் மூணு ரூபா தங்கக்கட்டி மாலை" என்றாள் பூக்காரி.

அட! பூமாலை கிடையாதா என்ன?

'இங்கவாமா, வைரக்கட்டி மாலை சாமிக்கு போடு..முழம் ரெண்டே ரூவா?"

இன்னொரு கடைக்காரி அழைத்தாள்.

தங்கமும் வைரமும் சீரழிந்ததை பார்க்கமுடியவில்லை, ஓரத்து குப்பைத் தொட்டியில் பழையமாடல் பிடிக்கவில்லை எனப்பேசியபடி ஒரு கூடை நகைகளை பெண்மணி ஒருத்தி வீசி எறிந்தாள்.

இதாவது பரவாயில்லை வெங்காயம் மூட்டைமூட்டையாக வீசி வெளில எறிந்துகொண்டிருந்தார்கள்.

சட்டென என் செல்போன் ஒலிக்கவும் எடுத்து காதில் வைக்கிறேன், 'ஹலோ?' என்கிறேன்.

ஹலோ.. நாந்தான் ஒபாமா பேசறேன் ..இன்னிக்குபொங்கல் நன்னாள். உங்க வீட்டுக்கு சக்கரைப் பொங்கல் சாப்பிட வரட்டுமா? மூட நெய் பெய்து முழங்கை வழிவார என்று ஆண்டாள் திருப்பாவையைப் படிதது முதல் சக்கரைபொங்கல் சாப்பிட தாளாத ஆசை."




எப்படியோ இவரும் என் செல் நம்பர் தெரிந்து போன் செய்துவிட்டாரே...மகிழ்ச்சியா இருந்தாலும் பொங்கலுக்குப்போட வீட்ல முந்திரிபருப்பு இல்லயே என்ன செய்வது?
யோசிக்கிறேன்,

பிறகு, "ஒபாமா! இன்னொரு நாள் வாங்கப்பா..வீட்ல முந்திரிப்பருப்பு இல்ல..அதில்லாம எனக்கு சக்கரைபொங்கல் செய்ய இயலாது.

”சக்கரைப்பொங்கல் என்று எழுதிய பேப்பரையாவது கண்ணால்பார்த்துப்போகவரேனே ப்ளீஸ்?:” கெஞ்சினார்

சரி வாங்கன்னு சொல்லி முந்திரிப்பருப்பு இல்லாமலே சக்கரைப்பொங்கல் செய்துபோட்டுவிட்டேன். இதற்கு ஆஸ்கார் அவார்ட் தரப்போவதாக சொல்லிப்போனார்.ஒபாமா கொஞ்சம் சமத்து.

ஆனா பில்கேட்ஸ் ரொம்ப மோசம் ஒரு மசால்தோசைக்கு என்னை என்னவெல்லாம் பாடாய் படுதினார் அன்று?

போன வாரம் ஒருநாள்....

பில்கேட்ஸ் சொல்லாம கொள்ளாம எங்க விட்டுக்கு வந்துட்டார். கையும் ஓடல காலும் ஓடல எங்களுக்கெல்லாம். வந்ததும் மசால் தோசை வேணும்னு கேட்டார்.

அதெல்லாம் ரெடி செய்ணும் இருங்கன்னு சொன்னேன் கோபம் வந்து முறைச்சார் நான் உடனே பின்லெடனுக்கு போன் செய்து 'பின்! இந்த பில் ரொம்ப பிடிவாதம் பிடிக்கறார் நீதான் வந்து அதட்டணும்'னு ரகசியமா கத்தினதை பில் கேட்டுவிட்டார்.

கோபம் தலைக்கேற, மீசை துடிக்க பெரிய முழியை உருட்டி பேச ஆரம்பித்தார். "ஆ! அந்த ஒற்றனை உனக்குத் தெரியுமா? அவன் உலக மகாக் கள்ளன். அவனோடு உனக்கென்ன பேச்சு? அவன் உனக்கு மாமனா(ரா)மச்சானா? தமிழ்மணத்தில் பதிவுகள் எழுதிக்குவித்தவனா? என்னோடு போருக்கு வந்தானா டாங்கரை வீழ்த்தினானா எம்குல அமெரிக்கப்பெண்களூக்கு அரிசி உப்பும்மாதான் செய்யக் கத்துக் கொடுத்தானா?"

பில் பாட்டுக்கு வீ.பா.க, டயலாக் சொல்லீட்டே போனார். நல்லவேளையாக என் கணவர் நைசாக பின்கட்டுவழியாகப்போய் ஹோட்டலிலிருந்து மசால் தோசை வாங்கி வந்தாரோ பில்கேட்சின் வாயை அடைக்கமுடிஞ்சிதோ? (தோசைமூணுநாளையதாம். மகா பழசு என பிறகு சரக்குமாஸ்டர் தெரிவித்தார்)


பழைய நினைவுகளில் மூழ்கியதில் எங்கும் ப்ளாக் அண்ட் ஒயிட் டாகவும் புகை புகையாகவும் இருக்கவே தட்டுத்தடுமாறி ஒரு அன்னதான சத்திரவாசலுக்கு வருகிறேன். பசிக்கு ஏதும் சாப்பிடணுமே?

வாசலில் இலவச போஜனம் என்று எழுதி இருக்கவும் சாப்பிடலாமென உள்ளே நுழைகிறேன். எனக்கெல்லாம் போஜனமே கிடையாதாம்...போகச் சொல்லிவிட்டனர்.

காரணம் என்ன உங்களுக்குத் தெரியுமா ?!

(பிகு...கட்டுரையை குழுவில் அளித்தேன் முதலில் மலேசியாவிலிருந்து மீனா இதற்காக எனக்கு வெங்காயமாலையைப்பரிசாக அனுப்பிவிட்டார் இங்க அதான் பாருங்க..அதற்குமுன் தங்க வைர பிளாட்டின மாலைலாம் தூசு என்று கீ......ழே அதைத்தள்ளிட்டேன்!!






















மேலும் படிக்க... "சக்கரைப்பொங்கல் சாப்பிடவந்தார் ஜனாதிபதி ஒபாமா!"

Saturday, December 11, 2010

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்.....

சுதந்திர வேள்வியில் நெருப்பாய் எழுந்தவர் நீலகண்ட பிரும்மச்சாரி. அவரைச்சிறையிலடைத்தனர் விடுதலை ஆகிவெளியே வந்தவரின் உடலில் சிறைத்தழும்புகளையும் மீறி வறுமைத் தழும்புகள் தெரிந்தன. எம் அன்னையின் கைவிலங்குகள் என்றைக்கு உடையும் என்று கொதித்தவர் தன்னை வதைத்த வறுமையை எண்ணி வேதனையுற்றார். மகாகவியின் மனம்கவர் தோழரான நீலகண்ட பிரும்மச்சாரிக்கு நிலைகெட்ட மனிதர்களை நினைக்கும்போதே நெஞ்சுகொதித்தது. அவரின் பொது உடமை நெஞ்சம் எழுத்துகக்ளில் பொங்கிவழிந்தது, அவர் எழுத்தில் இருந்த நெருப்பு வயிற்றில் வந்து வசிக்கத் தொடங்கியது.

அப்போதுதான் ஒருநாள் மகாகவியின் இல்லத்திற்குவந்துசேர்ந்தார். பசியில் உடல்தள்ளாட கை மகாகவியின் சின்ன மகளிடம் யாசகம் கேட்டது.
சேர்த்துவைத்திருந்த இரண்டணாவை அந்த சின்னப்பெண் அவரிடம் கொடுக்க பெற்றுக்கொண்ட பெருமகனார் இரவில் திரும்பிவந்தார்.

பாரதியிடம்,”தோழா உன் மகளிடம் நான் பெற்ற இரண்டணா இன்றைய பசியை தீர்த்தது இனி நான் என் செய்வேன்? செல்வரிடம் கொள்ளையடித்துத்தான் காத்துக்கொள்ளவேண்டும் வறுமைவாட்டுகிறது இனியும் தாங்கமுடியாதையா முடியாது” என்று தேம்பினார்.

கேட்டதும் மகாகவி எரிமலையானார். “என்ன உலகமடா இது ஒரு பணக்காரனின் சுகத்துக்கு ஆயிரம் ஏழைகள் பலியாவதா? தம்பி நீலகண்டா நீ தடுமாறாதே தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் காத்திடுவாள் சக்தி கவலைப்படாதே” என்று ஆறுதல்கூறினார். அருகில்குடி இருந்தோரை அணுகி ஐந்துரூபாய்வரைப்பெற்று நண்பரை அனுப்பிவைத்தார் . தன்னைக்கும்பிட்டு நகர்ந்த நீலகண்டரைப்பற்றி எழுதினார் மகாகவி.

பாரத சமுதாயம் வாழ்கவே!

(திருமதி சகுந்தலாபாரதி வெளிப்படுத்திய நிகழ்ச்சியைக்கேட்ட என் தந்தை கூறியதிலிருந்து)
மேலும் படிக்க... "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்....."

Sunday, November 21, 2010

திருக்கார்த்திகை மாதம்!

தீபங்கள் ஏற்றும் திருக்கார்த்திகைமாதம்! பன்னிரண்டு தமிழ் மாதங்களிலேயே கார்த்திகைக்கு மட்டுமே திருக்கார்த்திகை என்று பெயர் உண்டு. ஆதியிலிருந்தே மனிதன் அக்னியை தெய்வமாகக் கொண்டாடி வந்தான். பெரும்பான்மையான பண்டிகைகளில் நாம் விளக்கேற்றி வைப்பது இந்த அடிப்படையில்தான்.

ஒளியானது குறிப்பிட்ட அளவுள்ள சலனத்திலேயே நம் கண்ணுக்குத் தெரியும். இவ்வுலகில் நாம் கண்ணால் காண முடியாத ஒளியும், காதால் கேட்க முடியாத ஒலியும் உள்ளது. ஆந்தை பூனை இவற்றுக்கு இரவில் கண் தெரியும் மர்மம் இதுவே. நம் கண்ணால் பார்க்க இயலாத அளவுக்கு குறைந்த சலனம் உள்ள ஒளியை நாம் இருள் என்கிறோம். அளவுக்கு அதிகமான சலனம் உள்ள ஒளியும் மனிதனுக்கு இருளாகவே தெரிகிறது.

'தீப மங்கள ஜோதி நமோ நம...'

'அருட்பெரும் சோதி தனிப் பெரும் கருணை'

இறைவன் ஜோதி மயமானவன். சிவம் என்றால் சிவப்பு நிறம் என்று அர்த்தம். சிவம் என்னும் நாமம் தமக்கே உரிய செம்மேனி அம்மான் என்று பாடினார் திருநாவுக்கரசர். சூரியனை நாம் வழிபடுவதும் ஒரு இறைவழிபாடுதான். பின்பு அது ஒளி வழிபாடாகப் பரிணமித்தது. அந்த ஒளி வழிபாடே திரு விளக்கு வழிபாடாயிற்று. பின்னர் அதுவே திருக்கார்த்திகை தீபமாயிற்று.

தூண்டுச் சுடரளைய சோதி கண்டாய் என்கிறது தேவாரம். ஒரு சமயம் பிரும்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் தமக்குள் யார் பெரியவர் என்கிற போட்டி ஏற்பட சிவபெருமானோ தன்னுடைய அடி அல்லது முடியை காண்பவரே வெற்றி பெற்றவராவார் என்று தெரிவித்தார். பிரும்மன் அன்னப் பறவை வடிவம் கொண்டு வானில் பறந்து சென்று முடியைக் காண முயன்று தோற்கிறான். பகவான் விஷ்ணுவோ வராக அவதாரமெடுத்து பாதாள உலகம் சென்று மலரடியைக் காணமுடியாது போக முடிவில் இறைவன் ஜோதிவடிவமாகக் காட்சி அளித்த இடமே திருவண்ணாமலை. ஆகவேதான் இதை அக்னி ஸ்தலம் என்று கூறுவர். இங்கு ஏற்றப்படும் ஜோதியைக் காண பஞ்ச மூர்த்திகள் தப்பாமல் வருவதாய் ஐதீகம். இந்த ஜோதியைத் தரிசித்தால் ஐம்புலன்களையும் அடக்கும் ஆற்றல் பெருகுமாம். 'எமது உடல் ஒருமனை உள்ளம் ஒரு பாத்திரம் அதில் உணர்வாகிய நெய்யை ஊற்றி உயிரெனும் தீயை இட்டு பிராணன் எனும் காற்று நிரப்பி அறிவுச் சுடரை ஏற்றி அன்பினால் தூண்டிக் கொண்டே இருந்தால் ஆணவமாகிய மாய இருள் அகலும் பின்பு சிவ பரஞ்சோதி தரிசனம் கிட்டும்' என்று மிக அழகாக அப்பர் சுவாமிகள் கார்த்திகை தீப சரித்திரத்தை நமக்கு எடுத்து இயம்புகிறார்.

இவற்றிலிருந்து திருவிளக்கே இருள் அகற்றும் பெரும் பொருள் என்பது புலனாகிறது. நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கேற்றி நீங்காச் சிவபதம் அடைந்தார்.

கார்த்திகை தீபம் ஏற்றுவோம்! காலமெல்லாம் ஓளிமயமாய் வாழ்வோம்!
மேலும் படிக்க... "திருக்கார்த்திகை மாதம்!"

Friday, October 15, 2010

காதல்ரோபோ(சவால் சிறுகதைப்போட்டி)



”எப்படிடா மச்சான் இப்படி ஒரு காரியம் செய்தே! சூப்பர்டா! நீ ஒரு ரோபோடிக் எஞ்சினீயர்னு தெரியும், அமெரிக்கால பஃபல்லொ
பல்கலைக் கழகத்துல ரோபோ டெக்னாலஜி படிச்சேன்னும் தெரியும் ஆனா இந்தியா வந்த உடனேயே இப்படி ஒரு அட்டகாசமான ரோபோவை தயாரிப்பேன்னு நினைக்கவே இல்லைடா பரத்! எல்லாம் எந்திரன் படம் பார்த்த பாதிப்பால தானே இப்படி ஒரு ரோபோ தயாரிச்சி வச்சிருக்கே?”

’வெறும் ரோபோ இல்லடா இது காதல் ரோபோ! ரோபோ டெக்னாலஜிக்குத்தேவையான கொஞ்சம் அறிவியல் கொஞ்சம் தொழில்நுட்பம் கொஞ்சம் கணிதம் கொஞ்சம் பொறி இயல் இவைகளை ஒண்ணாக் கலந்து legokitsவச்சிட்டுபன்னிரண்டுமாசமா -அதாவது ஒருவருஷமாஎந்திரன் படம் வர்ரதுக்கு முன்னாடியே ஆரம்பிச்சி படாதபாடுபட்டு நான் தயாரிச்சேன். இதான் எந்திரி.’

’எந்திரிக்கணுமா எதுக்கு?’

’இல்லைடா மாப்பிள்ளை, எந்திரனுக்கு ஆப்போசிட் எந்திரி.பெண் ரோபோஆன இது, உயிருள்ள ஜீவன் போல சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் ‘ஐசாய் 1’ என்ற ரோபோவை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது விஞ்ஞானக் கற்பனை அல்ல.. நிஜம் என்கிறார் இந்த ரோபாவை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் டீகோ கார்சியா. மனிதர்களுக்கு ஒரு துணையாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் உயிருள்ள நபர் போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையிலும், முடிவுகளை தாமாக சுதந்திரமாக எடுக்கும் வகையிலும் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் நிலவும் மகிழ்ச்சி, துக்க சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு செயல்படும் திறன் படைத்த ரோபோக்களை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி வராங்கன்னு கேள்விப்பதும் அமெரிக்கால எனக்கு நண்பனான ஸ்பெயின் நாட்டு அபிகைல் இந்த விஷயத்துல உதவறேனான். லெகோகிட்ஸ் உதவியோட நான் உருவாக்கினது அப்படியே என் காதலியப்போலவே பேசும் காமினின்னா திரும்பிப்பார்க்கும் அவளைப்பற்றிய எல்லாரகசியமும் எனக்கும் இதுக்கும் இப்போ தெரியும்’

’ரொம்ப விளக்கிட்டியேடா! புரியுதுடா பரத்! ரஜனியோட புதுப்பட வரவினால ரோபோ பத்தி இப்போ கிராமத்து மக்களும் அறிஞ்சிருப்பாங்க! சரி, இந்த ரோபோவை வச்சி உன்னோட காதல்ரோஜாவை நீ மீட்டுக்கப்போறே சரியா?’

’எக்சாட்லி சிவா. இதைவிட்டா வேற வழியே இல்லையேடா ..என் வருங்கால மாமனார் சொக்கநாதன் ரொம்ப கெடுபிடியா இருக்கிறாரே!’

’ஆமா! காமினி படிச்சது சென்னை காலேஜ்னாலும் பொறந்தது திருச்சிகிட்ட இருக்கிற குக்கிராமமாச்சே! இன்னமும் ஜாதி குலம்கோத்திரம்னு அவங்க வீடல் ஸ்ட்ரிக்டா இருக்காங்க.. படிப்புமுடிச்சதும் பொண்ணை ஊருக்கு கூட்டிப்போய்ட்டு காமிரா உள் காமினியாய் அடைச்சிட்டாங்க. கையில செல்லும் இல்ல வாயத்திறந்து பேச சொல்லும் இல்ல , அப்படி அடக்கிவச்சிருக்காரு சினிமா வில்லனாட்டம் இருக்கற அவ அப்பா சொக்கநாதன். இதையும் மீறி உங்க காதல் எந்திரன் படத்து விளம்பரம் மாதிரி எகிறிகுதிச்சி வளருதுன்னா அதுக்குக்காரணம் ராகினி! அவதான் வாரவாரம் உனக்காக சிநேகிதி காமினிக்கு காதல் தூது போகும் காதல்புறா! அவள் கொண்டுபோய் உன் காதல் கடிததை காமினிகிட்ட தரா. பதில்பெற்று வரா. எல்லா கதையும் எனக்குதெரியும்டா பரத்!’


’ராகினிக்கு இந்த ரோபோ காமினியோட நல்ல பழக்கமாகிடிச்சி உயிர்த்தோழிகளாகிட்டாங்க. இன்ஃபாக்ட் ராகினி உதவியோடதான் ரோபோவை கிராமத்துவீட்ல வச்சிட்டு என் காமினியைக்கடத்திட்டு வந்து ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கப்போறேன். கிராமத்துல ராகினி இதுகூட ஒருவாரம் தங்கி, ரோபோவை சந்தேகம் வராதமாதிரி அங்கபழக்கிட்டு வந்துடுவா..அப்புறமா ஒருநாள் ரோபோ’ பரத் இல்லாத வாழ்க்கை எனக்குத்தேவை இல்லை நான் சாகப்போறேன்’னு கடிதம் எழுதிவச்சிட்டு இங்க என்கிட்டயே வந்திடும்!’

“ஹாலிவுட்பட ரேஞ்சுல கதை விறுவிறுப்பாத்தான் இருக்கு சொதப்பாம திட்டப்படி நடக்கணும்”

’சரி வா உன்னை ரோபோக்கு அறிமுகப்படுத்தறேன் இங்க நீ வந்து ரொம்பநாள் ஆச்சில்ல நான் எல்லாம் சொல்லி வச்சிருந்தாலும் ராகினியைத்தெரிஞ்ச அளவு ரோபோக்கு உன்னைத்தெரிஞ்சிருக்காது ’

இப்படி பரத் சொல்லும்போதே

“எதுக்கு அறிமுகம் பரத் ? சிவா என்ன எனக்கு புதுசா? நடிகர் விவேக் மாதிரி துறுதுறுன்னு இருக்காரு பேச்சும் அதே!முதல்ல பார்த்ததே மனசுல பதிஞ்சிபோச்சே” என்று ரோபோ சிரித்தபடி கேட்கவும்,’பாத்தியா எல்லாம் இதுக்கு அத்துப்படி..காமினியாவே ஆகிடிச்சிபோல?’ என்றான் சிவா.

’ஆமா...முக்கா(ல்)மினி ! கிராமத்துக்குப்போனா முழுசாயிடும்! காமினியப்போலவே பாவாடைதாவணில்லாம் போட்டு முகத்துல மாஸ்க் எல்லாம் பொருத்திட்டேன் சிவா!எப்படிடா இருக்கு?’

’அசல் எந்திரன் ரஜினியேதான்! அங்க ஆண் இங்க பெண் அதான் வித்தியாசம்!’

நண்பர்கள் சிரித்துக்கொண்டார்கள் ரோபோவும் வெட்கப்பட்டு சிரித்தது.





அரங்கபுரம் .

திருச்சிஅருகே காவிரிக்கரையோரம் இருந்த அந்தகிராமத்திற்கு கோயிலைப்பார்க்கபோகிறவர்கள் போல பரத்தும் சிவாவும் காரில்பின்பக்கம் அமரவைத்த ரோபோவோடு போனார்கள்.ராகினி முதல்நாளே அரங்கபுரம் போய்விட்டிருந்தாள் இன்னும் சற்றுநேரத்தில் திட்டமிட்டபடி அவள் காமினியுடன் கோயிலுக்குவருவாள். நூற்றுக்கால்மண்டபத்தின் தூண்களைப்பார்க்கிற சாக்கில் அங்கே போகும்போது ரோபோவும் காமினியும் இடம் மாறிவிடும்

ராகினி காமினியோடு கோயிலுக்குள் நுழைந்தாள் .சுற்றுமுற்றும் பார்த்தபடி இருவரும் நூற்றூக்கால் மண்டபத்திற்குள் ஓசைப்படாமல் வந்தார்கள். அங்கே சிவா பரத் ரோபோ மூவரும் காத்திருந்தனர். அப்போது சட்டென
மண்டபத்திற்குள் இருந்த தூசியும் உதிர்ந்த பழைய காரை வாசமும் காமினிக்கு மூச்சடைக்க ’ஹா’ என்று மயங்கிவிழுந்துவிட்டாள்.

’ஐயோ என்னடா இது?’ சிவா அதிர்ச்சியுடன் பார்த்தான்.

’கைத்தாங்கலா கார்வரை கூட்டிப்போய்டுவோம் கோயில்ல யாரும் வர்ரதுக்கு முன்னாடி சீக்கிரமா போயிடலாம்’

காரில் ஏறியதும் பாட்டிலைத் திறந்து நீரை எடுத்துமுகத்தில்
தெளித்தான்பரத்.
மெல்லக்கண் திறந்தவள்,’ மூ ..மூச்சுவிட கஷ்டமாஇருக்கு” என்றாள் .

’டவுன்ல தில்லைநகர்ல நர்சிங்ஹோம் போங்க அவர்தான் எனக்கு ஆஸ்துமாக்கு எப்போவும் வைத்தியம் செய்ற டாக்டர். பேரு ஆத்மநாதன் ’.என்றாள்.

’ஆஸ்துமாநாதன்ன்னு பேர் வச்சிருக்கலாமோ?’ சிவா சிரித்தபடிகேட்கவும் பரத் அதை ரசிக்கும் நிலையில் இல்லாமல் விழித்தான்.

ஆத்மாநர்சிங் ஹோம்.

காமினியைப்படுக்கையில் படுக்கவைத்து சோதித்த அந்தடாக்டர் , சினிமா டாக்டரைப்போல மூக்குக் கண்ணாடியைக்கழற்றியபடி,” ஆல்ரெடி ஆஸ்துமா இருக்கிறபொண்ணு மூச்சுக்கு ரொம்ப சிரமப்பட்டிருக்கா நிலமை சீரிய்சாத்தான் இருக்கு..கொஞ்சம் ட்ரீட்மெண்ட் கொடுத்தாகணும் நீங்க வெளில வெயிட்பண்ணுங்க” என்றார்.

மூக்கில் மாஸ்க்கைப்போட்டு ஏதோ ஒயர்களை கைகளில் செருகிவிட்டு அவர் நகர்ந்துபோனார். அப்பாவிற்கு போன் செய்து விவரம் சொல்லிவிடுவாரோ என பயந்த காமினி தப்பிக்க தீர்மானித்தாள்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

அவள்குதிப்பதை அறைக்கதவைத்திறந்து அப்போதுதான் உள்ளே வந்த பரத் அதைப்பார்த்துவிட்டு அவனும் அதே வழியில் சென்று வெளியே குதிக்க சிவாவும் தொடர்ந்தான். நர்சிங்ஹோமின் வாசலுக்கு அவர்கள் வந்தபோது
.......


’தெரியும் உன்னை இவன் சிவப்பு கார்ல கடத்திட்டுவந்ததா ஊர்க் கோயில்குருக்கள் சொன்னாரு உடனே புயலாய் பொறப்பட்டேன் எவ்ளோ நாளா இந்தக்கதை நடக்குது ம்? ‘வில்லன் அப்பா எதிரில் வந்து கண்ணை உருட்டி உறுமினார்.

காமினி கைகளைப்பிசைந்தாள்

அருகில்நின்ற சிவாவும் பரத்தும்,’ இதென்னடா சேமிக்காமல் நாலுபக்கம் கதையை தட்டச்சிய நேரத்தில் கரண்ட் கட்ஆனமாதிரி?’ (எத்தனை நாளைக்கு வெண்ணை தாழிங்கறது ஹிஹி!)என்பதுபோல முழித்தார்கள்

’ஆஸ்பித்ரி வராம இருந்தா இந்நேரம்கார்ல சென்னைக்கே போய்ருக்கலாம் இப்போ ப்ளான் எல்லாம் ஏரோப்ளானாகிட்டது.’

யோசித்தவன் சட்டென பாண்ட்பாக்கெட்டில்கைவிட்டான், துப்பாக்கியை எடுத்தான்.


“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.தீபாவளிக்கு அக்காசுவாதியின் மகன் அச்சுதன் கேட்டான் என்று வாங்கின பொம்மைத்துப்பாக்கி தான் நிஜம்போலவே தத்ரூபமாயிருக்கவும் சொக்கநாதன் சோகநாதனாகி கை குவித்தார்.

’ஐயோ மகளைக்கொன்னுடாதே ’அலறினார் வில்லன்.

’அப்போ வழிவிடுங்க ’ என்று அதட்டினான் சிவா.

காரில் ஏறினார்கள் மூவரும்

’காரை தில்லைநகர் ஏழாம்கிராசுக்குகொண்டுபோங்க சீக்கிரம்’ என்று பரபரத்தாள் காமினி.

’எதுக்கு ?’

’சொல்றேன் அப்புறம் விவரம். இப்போ போகணும் அங்க முதல்ல’ என்றாள் காமினி அவள் அமமாவின் வயிற்றில் இருந்தபோது ஜூனூன் பார்த்த பாதிப்பில்

ஜோதிடபூஷணம் பரந்தாமன் என்ற போர்டு கொண்ட வீட்டுவாசலில்காரை நிறுத்தச்சொன்னாள்.

கார்நின்றதும் வேகமாய் இறங்கினாள் சேலைமுந்தானைமுடிச்சை அவிழ்த்து
ஒரு பொட்டலத்தை அவரிடம் கொடுத்தாள்.‘வர வழில போலீஸ் ஜீப் வேற நின்னுட்டு இருந்தது பயந்திட்டே இதை எடுத்துவந்தேன்” என்றாள் அவரிடம்.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே
” என்று பாராட்டினார் பரந்தாமன்.



’சார் போலீசு கண்ல மண்தூவறது கஷ்டம இல்ல எங்கப்பா கண்ல மண்ணைத்தூவிட்டு இந்த வைரத்தை அவர் பொக்கிஷ ரூம்லிருந்துஎடுத்ததைப் பாராட்டுங்க’

’என்னது வைரம் ?’முழித்தான் பரத்

’இது ஒரு துர் அதிர்ஷட வைரமாம்! இது இருக்கற இடத்துல பெரும் துக்கம் சூழுமாம் மனசுல நல்ல எண்ணத்தையே வரவிடாதாம்.ஒரு வீட்டையே இடிச்சிதள்ளிடுமாம் ஒருவருஷம் முன்னாடியே . ஜோஸ்யர்பரந்தாமன் எங்கவீட்டுக்கு வந்தப்போ எங்கப்பா கிட்ட சொன்னாரு இது மஹாளய அமாவாசைக்கு முன்னாடி வைரத்தை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தலேன்னா பெரிய கெடுதல் நடக்கும் அப்பா அதை நம்பலஅவர் கம்ப்யூட்டர் ஜோதிடர் சிதம்பரம் என்பவர் சொன்னதை நம்பி இதை பொக்கிஷ அறைல வச்சி பூஜை செய்ய ஆரம்பிச்ச நாள் முதல் வீட்ல பசுமாடு செத்துப்போச்சி பாட்டி தடுக்கி விழுந்தாங்க பணம் திருட்டுப் போச்சி ஆனாலும் அப்பாவை சிதம்பரம் தன் கைப்பிடில வச்சிருக்காரு. நான் பரந்தாமனின் ஜோதிடத்தை நம்பினேன் அதான் அப்பாக்குத்தெரியாம கோலிக்குண்டு சைஸ்ல இருக்கற இதைசிரமப்பட்டு எடுத்து வந்தேன்.’

’கல் ஜோசியமா ? ஆகா இனிமே ஜோதிடர் பரந்தாமனுக்கு யோகம்தான்’ சிவா சிரித்தான்.

’கிண்டல்செய்யாதப்பா சில வைரம் அமோகமா அதிர்ஷ்டம் கொடுக்கும் ஆனா சில வைரம் வாழ்க்கையே அழிச்சிடும். எனக்கெதுக்கு இது, இப்பொ இந்த வைரத்தை உங்ககண்முன்னாடியே நான் அகண்டகாவேரிலவீசிடறேன்பாருங்க.. ’

’ரொம்ப நன்றி அப்போ நாங்க வரோம் ’ என மூவரும் கிளம்பினர்.

சொக்கநாதன் கடுப்புடன் வீட்டிற்கு வந்தபோது மனைவி வாயெல்லாம் சமீபத்தில் கட்டிக்கொண்ட பல்லோடு வரவேற்றாள்.

“ராகினி நம்ம பொண்ணை கூட்டி வந்துட்டாங்க காமினி மனசு மாறிட்டாங்க சமைக்கிறா பாட்டெல்லாம் பாடறா !” என்றாள்.

’அப்படியா?’

(ரோபோ) காமினியைப்பார்த்துக் கண் பனித்தார் சொக்கநாதன். ”அம்மாடி ! ஜோசியர் சிதம்பரம் சொல்ற வரனுக்கு உன்னைக்கட்டிதருவேன்மா நான் அதுவரை காத்திரு காமினி!” என்றார்

ஆயிற்று ஒருவாரம் ரோபோகாமினிக்கு வீட்டையும் மனிதர்களையும் பழக்கிவிட்டு ராகினி திரும்பிப்போயிருந்தாள்.

அன்று பத்திரிகை செய்தியாக குடும்ப ஜோதிடர் சிதம்பரம் தனது போலி ஜோதிடத்தொழில் காரணமாய் பலரை ஏமாற்றியதில் போலீசில் மாட்டிக்கொண்டதை படித்தார்.

’அடப்பாவிமனுஷா! பெரிய கம்ப்யூட்டர் ஜோதிடன்னு சொல்லி என்கிட்ட ஏதோ வைரத்தைக்கொடுத்து உசத்தியானதுன்னு பல லட்சம் ரூபாயை வாங்கிக்கிட்டே! வீட்ல பொக்கிஷமா பாதுக்காக சொன்னே!அந்த வைரம் வீட்ல இருக்கக்கூடாது கெடுதல் நடக்கும்னு ஆப்த நண்பன் ஜோதிடன் பரந்தாமன் சொன்னதை நான் கேட்கல.உன் பேச்சை நம்பி அந்த வைரத்தை வீட்லயே வச்சிருந்தேன் மகளையும் அவள் ஆசைப்பட்டவனுக்குக்கட்டித்தரக்கூடாதுன்னு நீ சொன்னதையும் கேட்டேன் நீயே இப்போ போலின்னு தெரிஞ்ச பிறகு எனக்கு அந்த அதிர்ஷ்டமில்லாத வைரம் வேண்டாம் கைவிட்டுப்போன மகளுக்கு அவள் விரும்பினவனையே கட்டிதந்துடப்போறேன் ’ என்று பேப்பரை மூடிவிட்டு ’அம்மா காமினி காமினி’ என்று மகளின் அறைக்கு ஓடினார்

லோ பேட்டரியின் காரணமாக ரோபோ காமினி அங்கே படுக்கையில் அசையாமல் கிடக்கவும் பதறிப்போனவர் ரோபோமகளை அள்ளி எடுத்து காரில் கிடத்தி ஆஸ்பித்திரி நோக்கி விரைந்தார்.


ஆத்மா நர்சிங் ஹோம்.

மறுபடி ஆஸ்துமா தொல்லை காரணமாய் அங்கே நிஜக்காமினி அட்மிட் ஆகி இருக்க அவளைப்பார்த்து திடுக்கிட்டார் சொக்கநாதன் ’ காமினி காமினி’ என இருமுறை அலறினார்.

அதற்குமேலும் அப்பாவை ஏமாற்ற மனமில்லாத காமினி நடந்ததைச்சொல்லிவிட்டாள்.

’ரெஜிஸ்டர் கல்யாணம்தானே ஆகி இருக்கு பரவால்லமா நான் ஊரைக்கூட்டி எட்டுப்பட்டிஜனங்களையும் வரவழைச்சி ஜோரா கண்ணாலம் செய்துடறேன்’ என்றார்.

பேட்டரி சார்ஜ் ஆகி எழுந்து உட்கார்ந்த ரோபோகாமினி,”அப்போ நான்?” என்று கண்கலங்க,” அம்மாடி நீ எப்போதும் என்கூட கிராமத்துலயே இருக்கலாம்மா” என்ற சொக்கநாதனிடம் ,”ஸாரி மாமா...ரோபோ காமினியை உங்களால் கவனிச்சிக்கமுடியாது. நான் சென்னைக்கு கூட்டிட்டுப்போய் என் ஆராய்ச்சி சாலைல வச்சிக்கணும்” என்றான்

மாப்பிள்ளை ! அப்போ நாங்களும் கிராமத்தைவிட்டு சென்னைக்கே வந்துடறோம் எங்களால சொந்தமகளைக்கூடப்பிரிஞ்சி இருக்கமுடியும் ஆனா.. ஆனா.. ரோபோங்கறீங்களே இவளைவிட்டுப்பிரியமுடியாதுப்பா”

என்று அழ ஆரம்பித்தவரை அருகில்போய் தேற்ற ஆரம்பித்தார்கள் காமினிகள்!

--
மேலும் படிக்க... "காதல்ரோபோ(சவால் சிறுகதைப்போட்டி)"

Thursday, October 14, 2010

தசரா யானைகளின் அவஸ்தைகள்.




மைசூர் தசராவில் முக்கிய அம்சமாய் இடம் பெறுவது 'ஜம்புசவாரி' எனப்படும் யானைகளின் அணிவகுப்பும் அவைகளின் சாகசங்கள் கொண்ட விளையாட்டுக்களும்.

நாகரஹோலே காட்டிலிருந்து மைசூருக்கு 70 கிலோமீட்டர் கஜபயணம் நடைபெறும். 'பலராமா' என்ற யானையின் தலைமையில்
மற்ற யானைகள் தசராவிற்கு ஒருவாரம் முன்பாகவே மைசூர் அரண்மனை வாயிலுக்கு வந்துநிற்பது வழக்கம்.


பலராமா எனப்படும் மூத்த யானைக்கு தங்க முகப்படாம் அணிவிக்கப்படும்.
(இந்த வருஷம் பலராமன் பலமில்லாராமனாய் உடம்பு சரி இல்லாமல் இருப்பதாக் சொல்கிறார்கள்)
இதனால் யானை, மற்றவர்கள் பார்வையைக் கவர்ந்தாலும், படும்அவஸ்தையை அந்த யானைதான் உணரும்.

தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்தினால் வலி இல்லாமல் போகுமா?
அதுபோலத் தான். 750கிலோ எடை உள்ள சுமையான தங்கக் கவசம் அதன் வயோதிக உடலை வேதனைப்படுத்துவதை மிகச் சிலரே உணரமுடியும். இதே
அவஸ்தை தான் மற்ற யானைகளுக்கும், மைசூர்நகரத்தின் சந்தடித்தெருக்களீல் ஆறுகிலோமீட்டர் நெருசல்களினிடையே அவை பாகனின் கட்டளைக்கு பயந்து நடக்கும்.

தசரா வைபவத்தையொட்டி யானைகள் காட்டிலிருந்து வரவழைக்கப்படுகின்றன. அவைகளை ஒத்திகையின்போதே நகரத்தின் தார் சாலையில் ஏறத்தாழ 40கிலோமீட்டர் தினமும் நடந்து செல்ல பயிற்சி அளிக்கப்படுகிறது. காட்டின் அமைதியான சூழ்நிலையில் மிருதுவான சாலைகளில் நடந்துபழக்கப்பட்ட யானைகள் தார்சாலையின் காலடியில் கண்ணாடிச்சில்லுகள் குத்தியெடுக்க சிரமப்பட்டு நடப்பது
வேதனை. தினமும் 750 கிலோ எடை உள்ள தங்க முகப்படாமுடன் தலைமை யானை, பயிற்சிக்குச் செல்லவேண்டும். தினமும் சூரியவெப்பத்தின்கீழ் பாகனின் அங்குசத்திற்கு அடிபணிந்து அவஸ்தைகளை அழுத்திக்கொண்டு யானை
நிற்பது பரிதாபக் காட்சி.

அணிவகுப்பின்போது யானைகள் கூட்டதினரின் கூச்சலுக்கும் வானவேடிக்கை ஒலிக்கும் மிரண்டு சற்றே முரண்டு செய்தால் பாகனின் ஆயுதம் அவைகளின் உடலைப் பதம் பார்க்கும் அவைகளின் உடல் அழுத்தம் நீங்க அவ்வப்போது ரம், ஒப்பியம் அளிக்கிறார்கள், இது உடல்நலக்கேட்டை விளைவிக்கும் என அறியாமல்.

அணிவகுப்பிற்கென்றே அவைகளுக்கு செயற்கையாய் அலங்காரங்கள் செய்யப்பட அதற்கு 10லிருந்து 12 மணிநேரவிரயம். இதற்கு சம்மதிக்காத யானைகள் பாகனின் அங்குச மிரட்டலில் அடிபணிகின்றன.


வனவாழ்வுநலப்பாதுகாப்பு அமைப்பு (Wildlife Rescue and Rehabilitation Centre (WRRC) தலைமைப் பொறுப்பிலிருக்கும் சுபர்ணாபக்ஷி கங்குலி சொல்கிறார், "வனவிலங்கு நல்வாழ் உரிமைச் சட்டப்படி எந்த யானைக்கும் 400கிலோ எடைக்குமேல் பாரம் சுமக்க
அனுமதி இல்லை.காட்டிலிருந்து பிடிக்கப்பட்ட யானைகள் இந்தியா முழுவதும் மொத்தமாக 3000 வரை இருக்கலாம், இதில்
கேரளாவிலிருந்து மட்டுமே 800 யானைகளாம். பிடிக்கப்பட்டயானைகள் ஜெய்ப்பூரில் சுற்றுலாவாரியத்தில் 87ம், ராஜஸ்தானில் அம்பேர்கோட்டையின்கடின சாலையில் சுற்றுலா பயணிகளை சுமக்க 120 யானைகளும் உள்ளனவாம்.
தவிரகோயில்களுக்கு சில கொடுக்கப்படுகின்றன. கோயில் யானைகள் சங்கிலியால்பிணைக்கப்பட்டு கான்க்ரீட் தரையில் அதன் பாதம் பதிய நிற்கவைக்கப்
படுகிறது. இதை வனத்தில் வாழ்ந்த எந்த மிருகமும் தாங்கிக் கொள்ளாது. அரசுதான் இதைக் கருத்தில் கொண்டு கவனிக்கவேண்டும்" என்கிறார்.

தசரா கமிட்டிக்கும் Department Of Wildlife Rescue and Rehabilitation Centre (WRRC)- க்கும் சில ஆலோசனைகளை வைத்தாயிற்று.

1. தசரா நேரத்தில் யானைகளை உபயோகிப்பதை நிறுத்தவேண்டும்.

2. யானைகளுக்கு, சுமையான முகப்படாம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

3, 20 அல்லது 30 கிலோ எடைக்குமேல் உள்ள மர உருளைகளை யானைகள் தூக்கக்கூடாது.

4. யானைகளின்மீது வண்ணமிட்டு அலங்கரிப்பது கூடாது.

5. வன்மையான பயிற்சிகளைத் தடை செய்யவேண்டும்.

2003ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் மட்டும் யானைக் கலவரம் மூன்று முறை நடந்தது. அதில் கொச்சினில் கோயில் விழாவுக்குச் செல்லும் வழியில் பாகனைக் கொன்ற நிகழ்ச்சி மிகவும் வேதனையானது. அமைதியான மனித சஞ்சாரமற்ற
காட்டின் இயற்கைச் சூழலிலிருந்து நகரத்திற்கு கொண்டுவரப்படும் விலங்குகள் வன்மையாகவும் கொடூரமாகவும் செயல்படக் காரணம் அவற்றிற்கு நகரத்தின்
சந்தடியும் தங்களது தனிமை பறிபோவதாலும்தான்.
அன்று 'ஆதிமூலமே' என்று கஜேந்திரன் என்னும் யானை கத்தியதும் ஆண்டவன் ஓடிவந்து காப்பாற்றினார்;
இன்று அரசு அதைச் செய்யுமா?

இதோ மைசூரில் தசரா திருவிழா ஆரம்பமாகிவிட்டன!.
'மைசூருதசரா எஷ்டந்து சுந்தரா?' (மைசூரின் தசராப்பண்டிகை, எத்தனை அழகு!’
என்று ஒலிபெருக்கியில் பாடல் வீறிடுகிறது.

பயிற்சி யானைகள் அணிவகுப்புப் பாதைகளில் நடக்கத் தயாராகிவிட்டன!




--
மேலும் படிக்க... "தசரா யானைகளின் அவஸ்தைகள்."

Thursday, October 07, 2010

நவராத்திரி தகவல்1 செய்குதம்பி பாவலர்.

ஒரு நவராத்திரி விழாவில் சதாவதானி செய்குதம்பி பாவலரை அவரது நண்பர் இட்டாபார்த்தசாரதி நாயுடு என்பவர் பாடும்படி கேட்டபோது

“உருமகளை அயன் நாவில் உறைபவளை
பொறை மகளை உலகுக்கெல்லாம்
குருமகளை அன்பர் புகழ் குலமகளை
மலர்மகளை குறைதீர் செல்வத்
திருமகளின் மருமகளை நிலமகட்கும்
கலைமகளை செவ்வி வாய்ந்த
ஒரு மகளை எனக்கருள வருமகளை
பெருமகளை உன்னல் செய்வாய்!”

என்று பாடலைப்பாடினார்.

இந்து தெய்வத்தை இதுபோன்று எதுகை மோனையுடன் பாடிய இஸ்லாமியப்பெரியவர் செய்குதம்பி பாவலரின் நாவன்மையும் பாவன்மையும் அவர்தம் பெருந்தன்மையைப்போலவே சிறப்பாக இருக்கிறது அல்லவா?

இதை இங்கே உங்களுக்கு அளித்தவர்.....:)

ஷைலஜா(எ) மலைமகள்
மேலும் படிக்க... "நவராத்திரி தகவல்1 செய்குதம்பி பாவலர்."

Wednesday, September 15, 2010

இதயங்களில் இன்றும் இருப்பவர்!





இன்று வாழ் சமுதாய்ச் சிறப்பெலாம்
எழில் படங்களாய் வார்த்திட்ட வித்தகர்
ஒன்றினோடொன்று மாறுபற்றிடும்
உலகமக்களின் உள்ளங்கள் ஆய்ந்தவர்
வென்றிபெற்றிடும் மானிடன் மாட்சியும்
வீழ்ச்சியுற்றிடும் தாழ்ச்சியும் கண்டவர்
என்றும் வாழும் தமிழிலக்கியம் தந்தவர்
இதயங்களில் இன்றும் இருப்பவர்!


மனிதர் மேல் அபிமானம் மிகுந்தவர்
மாநிலமுதலமைச்சர் பதவிவகித்தவர்
கனவு கொண்டிடும் நற்றமிழ் வாழ்வுறக்
கதை கவிதைகள் பலவும் படைத்தவர்
புனிதமாம் சமுதாயம்பிறந்திடப்
புதினம் பற்பல நன்கு அளித்தவர்
இனிமையே உருவாகவேவிளங்கியவர்
இதயங்களிலே இன்று இசைந்தே இருப்பவர்!



காவிரி வெள்ளமென களிமணம் கொண்டவர்
கலைகள் யாவினும் ரசனை மிகுந்தவர்
பூவினைப்போன்றுள மென்மனம் வாய்த்தவர்
பொருந்து நண்பரைத்தோளொடு அணைப்பவர்
நாவினாலுரைத் தேனினை வார்த்தவர்
நாடு முற்றும் புகழ்பெறத் திகழ்ந்தவர்
யாவும் செய்யும் பேனாவினை ஆணடவர்
யாவரும் போற்றும் தலைவராய் இருப்பவர்!

--~--~---------~--~----~------------~-------~--~----~
மேலும் படிக்க... "இதயங்களில் இன்றும் இருப்பவர்!"

Saturday, September 11, 2010

தாலாட்டு பாடாத பாரதி!




கனக்கும் செல்வமும் நூறுவயதும் கணபதியிடன் தரவேண்டிப் பாடியவன்!அமுதம்தரவேண்டி அன்னை சக்தியின் தாள் பணிந்தவன்! கனக்கும் செல்வத்தையும் அவன் காணவில்லை அன்னையிடம் அமுதம்பெற்று ஆயுள் நீண்டு வாழவுமில்லை. ஆனாலும் சத்தியமாய் உரைத்திட்ட அவனது சாகாவரிகளில் நித்தியம் வீற்றிருப்பான் பாரதி!


உணவின்றி ஒருமனிதன் பசித்திருந்தாலும்கூட உலகினை அழிப்பதுதான் சரியென்று சொன்னவன். ஜாதியில் பேதம் சொன்ன பாவிகளைப்பார்த்து சவுக்கடியாய் அவன் கேட்ட கேள்விகளில் தலைகுனிந்தது அந்தக்கூட்டம். அடுப்பூதப் பிறந்தவளா ஆரணங்கு அவள் மகத்துவத்திற்குத் தலைவணங்கு என்றான் மகாகவி!

காக்கையும் குருவியும் உறவென்று சொல்லிக்களிநடம்புரிந்தவன் எரியும் தீக்குள் விரலைவைத்தால் அது தெய்வத்தின் தீண்டலான இன்பம் என்று உணர்ந்து உரைத்தவன்!

நிலைகெட்ட மனிதரை நினைத்துக்கொதித்தவன், நெஞ்சு பொறுப்பதில்லையே என்று துடித்தவன்! எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று இயற்கை அழகினில் மனத்தை பறிகொடுத்தவன்!

ஒருநாள் பாரதி தெருவில் நடந்துபோய்க்கொண்டிருந்தான் அப்போது ஒருவீட்டில் அழும் குழந்தையை வாய்வார்த்தைபேசி சமாதானப்படுத்திக்கொண்டிருந்தாள் அது கேட்கவில்லை வீறிட்டு அழுதபடியே இருக்கவும் வீட்டின் உள்ளிருந்த ஒரு வயதான பெண்மணி வாசலுக்குவந்தவள் நடந்துபோகும் பாரதியைப்பார்த்தாள்

“அப்பா பாரதி! இந்தக்குழந்தை ஓயாமல் அழுகிறது இதைதூங்க வைக்க நீ ஒரு தாலாட்டுப்பாடேன்” என்று கேட்டுக்கொண்டாள்.

அதற்கு பாரதி,”தமிழர்கள் எல்லாரும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் அதனால் நான் தாலாட்டுப்பாடமாட்டேன். தூங்குவோரை எழுப்பும் சக்தி கொண்டபாடல்களையே பாட விரும்புகிறேன்” என்று கூறி பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி பாடினார்.

கடைசிவரை பாரதி ஒரு தாலாட்டுப்பாடல்கூட பாடவில்லை!
மேலும் படிக்க... "தாலாட்டு பாடாத பாரதி!"

Thursday, September 09, 2010

மலர்போல மனம் வேண்டும்!






செப்டம்பர்1ம்தேதி குங்குமச்சிமிழ் நாவல் மலர்போல மனம் வேண்டும் !

சில கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த புத்தகத்தின் விலை ஐந்துரூபாய்க்குள்தான்! நான் எழுதி இருப்பதால் உடனே வாங்கிப்படிக்கணும் என்ன?!(எப்படில்லாம் அதட்டி உருட்டி படிக்கவைக்கவேண்டி இருக்குப்பா?!

இம்மாதம் கலைமகள் பெண்மணி மாத இதழ்களிலும் சிறுகதைகள் பிரசுரமாகி இருக்கு ! யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!
இதை அறிவிக்கவே இந்தப்பதிவு!!
எங்கே யார் ஃபஸ்ட் கடைக்குபோயி புக் வாங்கிப்படிச்சி பின்னூட்டம் இடப்போறீங்க?!
மேலும் படிக்க... "மலர்போல மனம் வேண்டும்!"

Saturday, September 04, 2010

வேருக்கு விழா!

ஆசிரியர்தினம் வருவதற்கு முன்பே சிறந்தஆசிரியர்களுக்கான விருதை வழங்கி கௌரவித்திருக்கிறது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்.

சென்னையில் நடந்த ‘அன்புள்ள ஆசிரியர்க்கு’என்ற இந்த நிகழ்ச்சியில் விருது வாங்கிய 14 ஆசிரியர்களில் 7பேர் பெண்கள் என்பது இன்னொரு சிறப்பு!

இவர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சிப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள். இவர்கள் கடந்த ஆண்டு தனியார்பள்ளிகளுக்கு இணையாக 10மட்டும் 12ம் வகுப்பு பொதுதேர்வுகளில் தேர்ச்சி சதவீததை சாதித்துள்ளார்கள்.

ஆசிரியர்களை கௌரவப்படுத்துவதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவதாக சொன்ன ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் முரளி தன்னுடைய பள்ளிப்பருவ அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவரதுபேச்சு தனது ஆசிரியர்கள்மீது அவர் வைத்திருந்த அன்பை உணர்த்துவதாக இருந்தது

மனதைத்தொடும் ஒரு சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார் தன் பேச்சில்.

ஒருமுறை தனது ஆசிரியரின் பிறந்தநாளை ஞாபகம் வைத்து அதனை பத்திரிகை ஒன்றில்புகைப்படத்துடன் அளித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

படத்தைக்கண்ட் பல நண்பர்களுக்குப் பழையநினைவுகளை அது கிளறிவிட அவர்களும் ஆசிரியருக்கு உடனே போனில் வாழ்த்துசொன்னார்களாம் !ஆசிரியர் நெகிழ்ந்துபோய்விட்டாராம்.


இதைத் தொடர்ந்து ஒவ்வொருவருடமும் இவருடைய நண்பர்கள் ஆசிரியரின்பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்களாம்! இதைச் சொன்ன முரளி மாணவர்களும் ஆசிரியர்களை தங்கள் வாழ்நாளில் மறவாமல் இருக்க வேண்டும் என்றார். ஆசிரியர்களும் மாணவரிடம் அன்போடும் பரிவோடும் நடந்துகொள்ளவேண்டும் அப்போதுதான் சிறந்தகுடிமகனாக ஒரு மாணவன் உருவாகமுடியுமென்றார்.

சென்னை ஐஐடியின் துணைப்பதிவாளர் சூர்யகுமாரும் ஆசிரியரின்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்தினார் .விருதுபெற்ற் ஆசிரியர்களுக்கு மறகக்முடியாதபொன்னாளாக அன்றைய தினம் அமைந்தது .

சிலமாதங்கள் முன்பு வாழ்ககையில்வெற்றிபெற்ற பிரபலங்களின் அன்னையர்களை கௌரவித்தது இதே கிருஷ்ணாஸ்வீட்ஸ் நிறுவனம் .அதனை தொலைக்காட்சி ஒன்றில் பிறகு காண்பித்தார்கள். இப்போது நாளைய தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களை கௌரவிக்க விழா எடுத்திருப்பது வேர்களை என்றும் நினைவுபடுத்துவதாக இருக்கிறது!
மேலும் படிக்க... "வேருக்கு விழா!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.