Social Icons

Pages

Friday, November 28, 2008

புது வெள்ளம்(சிறுகதை)

ஹேமாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

திருச்சி டவுனுக்குப் போய்விட்டு மதியமே திரும்பிவருவதாக சொன்ன பெரியப்பாவையும் பெரியம்மாவையும் இன்னும்காணோம்.மணி நாலாகப்போகிறது.

வெளியே ஹோ என்று மழை! அதன் ஆரம்பகட்டத்திலேயே மின்சாரம் பறிபோய்விட்டது. நேற்று நள்ளிரவுலேசாய் அடித்தகாற்றுக்கு டெலிபோன் இணைப்புகள் எல்லாம் அறுந்துவிட்டன.செல்போன்கள் அதிகம் ஆக்கிரமிக்காத சிறுக்஢ராமம் அது.

மழையின் இரைச்சலைக் கேட்க பயந்து வீட்டு ஜன்னல்களை எல்லாம் அடைத்து இருந்தாள் ஹேமா. இப்போது அவள் பார்வைக்கு தப்பமுடியாதபடி ஜன்னலைப் பிளந்துகொண்டு வீட்டிற்குள் வெள்ளம் வர ஆரம்பித்துவிட்டது. செக்கசேவேலென்று நொப்பும் நுரையுமாய்- அடியம்மா என்னவெள்ளம் . என்ன வெள்ளம்!

இனி கீழே இருந்தால் ஆபத்து .
ஹேமா மாடிக்கு ஓடினாள். அங்கிருந்துபார்த்தபோது கிராமத்தின் எல்லா வீடுகளுமே தண்ணீரில் மிதப்பது தெரிந்தது.

எதிர்வீடு அதற்கு அடுத்தவீடு என்று தெருமுழுதுமே ஏற்கனவே காலியாகிவிட்டிருந்தது. எல்லோரும் மழைவலுத்ததுமே ஊரைவிட்டுப்போய்விட்டார்கள்போலிருக்கிறது. ஜன்னல்களைமூடிவிட்டு தனியேவிட்டில் இருந்ததால் ஹேமாவை யாருக்குமே தெரியவில்லை .

இப்படியுமா மனிதர்கள் ?ஆபத்துவரும்போது 'அடிஹேமா வயசுப்பெண்ணாச்சேடிம்மா, தனியாஇருக்காதே வெளியே வா தப்பித்துக்
கொள்ளலாம்?' எனஒருகுரல்கொடுக்கமாட்டார்களோ ?

அவர்களைகுற்றம் சொல்லி என்ன ?யாருக்குமே அப்போதைய நிலையில் எதுவும் தோன்றாதுதான்.

மனதை சமாதனப்படுத்திக்கொண்டு மாடியில் நின்று பார்வையை வீசிப் பார்த்தாள் ஹேமா.

ஒரு ஈ காக்கையைக்காணோம்! அதோ வடக்கே தென்னந்தோப்பில் மரங்களெல்லாம்கூட பாதிக்குமேல் மூழ்கிவிட்டன. அக்ரஹாரத்தில் மேலக்கோடியில் உள்ள கோவில்கோபுரம்தெரிகிறது.கோவிலுகுள்ளும் நீர் புகுந்துவிட்டதா என்ன?

ஹேமா கையெடுத்துக் கும்பிட்டாள்.அந்தக்கோவிலுக்கு பெரியம்மாவுடன் வெள்ளிக்கிழமை தவாறாமல் போவாள்.

'தாயில்லாப்பொண்ணுடி...வேண்டிக்கோ நெய்விளக்குபோட்றேன் தாயே நிறைவான புருஷன்
கிடைக்கணும்னு" என்பாள் பெரியம்மா மீனாட்சி

ப்ளஸ்டூவரைபடிக்கவைத்துவிட்டு பிறகு ஹேமாவை கிராமத்துப்பள்ளிக்கூடத்துகுழந்தைகளுக்கு ட்யூஷன் எடுக்க வைத்துவிட்டாள்மீனாட்சி.

வீட்டில் பெரியம்மா வைத்ததுதான் சட்டம்.பெரியப்பா மகாதேவன்,ஓய்வுபெற்ற வங்கிக் கணக்காளர்.
விபத்தில் இறந்துபோன தன் தம்பியின் ஒரேமகள் என்பதால் ஹேமாவிடம் தாராளமாய் பாசத்தைப் பொழிபவர். உயர்ந்த எண்ணங்கள் இருந்தாலும் அதை செயல் படுத்த தயக்கம் காட்டுபவர்...வீட்டில் மனைவியிடம் ஏற்பட்ட பயம் அவருக்கு வெளியிலும் தொடர்ந்ததோ என்னவோ தானாக வலிய யாருக்கும் உதவிசெய்ய முன்வரமாட்டார்,மனைவியின் அனுமதி கிடைத்துவிட்டால் வாரிச்சுருட்டிக்கொண்டு ஓடுவார் .

குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும்போதே குழந்தைகளிடம் வாழ்க்கைப்பாடம் கற்றுக்கொண்டாள் ஹேமா. கள்ளம்கபடம் வேற்றுமை பாராட்ட தெரியாதகுழந்தைமனது என்றும் மனிதர்களிடம் நிரந்தரமாயிருக்கக் கூடாதா? வளர வளர மனவயலில்தான் எத்தனை களைகள்!

பெருமூச்சு விட்டபடி ஹேமா இப்போது சுற்றிலும் பார்க்க ஆரம்பித்தாள்.

கல்லணை உடைந்துவிட்டதா என்ன ?எதனால் இப்படிஒருவெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது?

வீடே மெல்லமெல்ல அமிழ்வதுபோலபிரமையானது.

தாத்தா கட்டியவீடு. அதைக்கட்டிய கதையை பாட்டி சொல்லக் கேட்கணுமே! அந்த நாளில் சுண்ணாம்பும் வெல்லப்பாகும் கோழிமுட்டையும் அரைத்துஅரைத்துக் கட்டினார்களாம். கல்லணையே
உடையுமானால் தாத்தா கட்டிய வீடு எம்மாத்திரம்?

ஹேமா அச்சத்துடன் தெருவையே பார்த்தாள்.
தெருவா அது? நதி ஒன்று சுழித்துசுழித்து ஓடிக்கொண்டிருப்பதுபோலவெள்ளப்பிரவாகம் எங்கும்!

கோயில் தர்மகர்த்தா மாதவாச்சாரியின் வீட்டுக்கல்யாணத்துக்கு இன்னும் ஒருவாரம்தான் இருக்கிறது. மாப்பிள்ளை பம்பாயாம்.
கல்யாணத்துக்கு முதல்நாள் மாப்பிள்ளைக்கு ஏதோ முக்கிய மீட்டிங்காம் அதைமுடித்துக்கொண்டுவருவதாய் சொன்னதாக தர்மகர்த்தா நேர்றுகோயில்போனபோது பெருமையாய் கூறிக்கொண்டார்.கிராமத்துக்காரர்களுக்கு பம்பாய் டில்லியெல்லாம் இன்னமும்அமெரிக்காவுக்கு சமம்!

ஹேமாவின் பெரியம்மாவும்பெரியப்பாவும்கூட ஹேமாவின் கல்யாண விஷயமாகத்தான் டவுனுக்குப் போயிருக்கிறார்கள்.பையனுக்கு தில்லைநகரில் பாங்க் வேலையாம். ஜாதகம் பொருத்தம்பார்த்து பிள்ளைவீட்டிலும் பேசிப்பார்த்து வருவதாக காலையிலேயேகிளம்பிப்போனார்கள்.அப்போதே தூறலாக இருந்தது. அப்புறம்தான் மழை சீறிஅடிக்க ஆரம்பித்தது.புயலாய் காற்று பேசியது.

மணி ஆறுஆகிவிட்டது,இன்னமும் டவுன் போனவர்கள்வரவில்லை. தகவல் சொல்ல போன் வீட்டில் வேலை செய்யவில்லை.

கீழே என்ன ஆயிற்றோ ?

நல்லவேளை, ஓடிவந்து எல்லா முக்கிய சாமான்களையும் ஒருத்தியாகவே மாடிக்குகொண்டுவந்துவைத்துவிட்டாள்.

அதுவரைபுத்திசாலித்தனம்தான்.

தெருவில்-கண்ணுக்கு எட்டியதொலைவில் -விளக்கு ஏதும் இல்லை. இருட்ட ஆரம்பித்துவிட்டது.
நீச்சலடித்து ஓடிவிடலாம் என்றால் நீச்சலேதெரியாது. ஏதேதோ பாடம் கற்கிறோம் வாழ்க்கையின்
போராட்ட காலங்களில் நம்மை தற்காத்துக்கொள்ளும் கலைகளை அதிகம்பேர் கற்றுக்கொள்ளத்
தவறுகிறோம்.

அழுவதைதவிர வேறுவழிதெரியாமல் அழத் தொடங்கியது அந்த இருபத்திமூன்றுவயதுகுழந்தை.

பயத்திலும்கவலையிலும் கண் அயர்ந்துவிட தூங்கியேவிட்டாள்.

யாரோ நிரில் நீந்திவரும் சத்தம் சளக் சளக் என்ற நீரசைவின் ஒலியில் கேட்கவும், திடுக்கிட்டுவிழித்தாள்.
மாடிப்படிகளில் காலடி ஓசை, தீனமாய் கேட்டது.

"ஏமா?"

அவள் நிமிர்ந்தாள்.



"ஏமா...இங்கனயா இருக்குற ?வெள்ளம் வந்து ஊரே காலியாயிப் போச்சே உனக்குத்தெரியாதா, ஏமா?'

ஹேமா திகைப்புடன் அவனையே பார்த்தாள்.

உதயனா? ஆமாம் அவனே தான்.

அவனைக் கண்டதும் அழுகைபீறிட்டது.

"அளுவாத ஏமா...வா ,வா! படகு இருக்குது ...நான் கொண்டந்தேன் ...தப்பிச்சிபோயிடலாம் வா"

வாரிசுருட்டிக்கொண்டு எழுந்தாள் .மாடிப்படிகளில் இறங்கி கீழே வந்ததும் தான் பரவிநிற்கும் நீரின் ஆகிருதி மனதுக்கு பிரமையைகொடுத்தது.

"உதயா வீடுபூரா தண்ணி சூழ்ந்திருக்கே வெளிலஎப்படிபோகிறது?"

"சும்மா வா ஏமா...வாசலுக்கு கஷ்டப்பட்டு போயிட்டா அங்கன படகு வச்சிருக்கேன் படகிலே ஏறிட்டுபோயிடலாம்..ஊர்கோடி சத்திரம் கொஞ்சம் உயரமான இடத்துல இருக்குறதுனால அங்க வெள்ளம் புகுந்துக்கல..எங்க சனம் எல்லாம் அங்கன போயிட்டாங்க.. நான் தான் இன்னும் யாரெல்லாம் வெள்ளத்துல தவிக்கிறாஙக்ளோன்னு தேடி வந்தேன்"

" இந்த தண்ணீயப் பாத்தாலே பயமா இருக்கு எனக்கு"

"அப்படி பயந்துகிட்டு வூட்ல ஏன் உக்காந்துட்டு இருந்தே ஏமா?"

"நான் உட்காரலே ..என்னை விட்டுட்டு அவங்கபோயிட்டாங்க.. தனியா நான் எங்க போவேன் சொல்லு?"

"சரி வா நேரமாவுது"

அவன் முன்னே தண்ணீரில் இறங்கி நடந்தான் .ஹேமா தொடர்ந்து இறங்கினாள். மார்பளவு தண்ணீரைப் பிளந்துகொண்டு வாசலுக்கு வருவதற்குள் இரண்டுஇடங்களில் கால்தடுக்கி விழுந்துவிட்டாள்.

"பாத்து வா ஏமா"

மறுபடி அவள்விழுமுன் கைகொடுத்து அவளைப்பிடித்துக் கொண்டான் உதயன்.

படகில் உட்கார்ந்ததும் கொஞ்சம் பயம் விலகினமதிரி இருந்தது. கொஞ்சம்தான் படகு கவிழாமல் நிலைகுலையாமல் இருக்கணுமே எனநினத்தது மறுபடி முகம் வெளுத்துப்போனது .

உதயன் அதை கவனித்தவன் போல"ஏமா! பட்டணத்துப்பொண்ணுங்க எல்லாம் எவ்ளோ தைரியமா இருக்காங்க .,நம்ம ஊர்லயும் பொண்ணுங்க தேறிட்டாங்க..,நீதான் இந்த காலத்துல இப்படி பயந்தபொண்னா இருக்கற?' என்றான்.

அவன் படகை செலுத்தும்போது வெள்ளத்தோடு போராடுவதையும் அவனுடைய இரும்புக்கரங்கள் அப்படியும் இப்படியும் துடுப்புகளை வலிப்பதும் தெரிந்தன.

'ஊர் பூரா மூழ்கிடுத்தா உதயா?"

"ஆமா ஏமா...நானும் நீயும் சேர்ந்து ஒண்ணாங்கிளாஸ்படிச்ச பள்ளிக்கூடமும் முழ்கிடிச்சி... ரொம்ப சேதம்....டிவிக்காரங்க வந்திட்டே இருக்காங்களாம்"

"கல்லணைஉடைஞ்சிபோயிடுத்தா என்ன?'

உதயன் சிரித்தான். பிறகு "கல்லணைஉடையுமா ? அது உடைஞ்சா உலகமே அழிஞ்சிடுமில்ல?" என்றான்.

"ஆமா...நான் வீட்ல தனியா இருக்கறது எப்படி தெரிஞ்சுது உனக்கு?"

"ஜோசியம் பாத்து வந்தேன் ஏமா"

"விளையாடாம சொல்லேன் உதயன்?"


"ஒருயூகம்தான் ஏமா..காலைல உங்க பெரியம்மா பெரியப்பா டவுன் பஸ் ஏறினத பொட்டிக்கடைல நின்னுட்டு இருந்தப்போ பாத்தேன். அவங்க திரும்பி வரலைனு தெரியும் எனக்கு ஏன்னா டவுனு பஸ் எதுவும் மதியமிருந்து ஊருக்குள்ள வரல.காவிரிஆறு சிந்தாமணிக்கரைல முதல்ல உடைஞ்சிடுமே! அங்கனயும் மழைவெள்ளம்னு பொட்டிக்கடை ரேடியோ செய்தி சொல்லிச்சி. அப்பத்தான் நீ என்ன ஆனியோன்னு
யோசிச்சேன் ..சரின்னு ஓடியாந்தேன்.."

"நீமட்டும் வரலேன்னா என்கதி என்ன ஆறது உதயா?"

"நான் வராட்டி என்ன ஏமா? வேற யாராச்சும் வந்து காப்பாத்துவாங்க ஏன்னா கடவுள் நல்லவரு"

"கடவுள் நல்லவரா? எனக்கு அப்படிதோணல உதயா !கடவுள் நல்லவர்னா என் அம்மாஅப்பாவை என்
சின்னவயசுலேயே ஏன் பறிக்கணும் ? உன்னை ஏன் இப்படி ஏழ்மைகுடும்பத்துல பொறக்கவச்சி படிக்கவிடாமல் ஊர்லகூலிவேலை செய்யவைக்கணும்?"

"அதுக்கெல்லம் காரணம் இருக்கும் ஏமா. எல்லாம் ஒரு நிலைல இருந்திட்டா மனுஷன் தலைகால் புரியாமபோயிடும் பாரு! அதுக்குதான்!"


உதயன் ,ஹேமாவின் பெரியப்பாமகாதேவனின் வயலில் வேலைபார்க்கும் இளைஞன். சாதாரணமாக அவன் ஊருக்குள் யார் வீட்டுக்குள்ளும் வரமாட்டான் .இடுப்புத் துண்டை கையில் ஏந்திக்கொண்டு தலைகுனிந்தபடி வாசலோடு நின்றுபேசிபோய்விடுவான்.

மாடுகன்றுகளைக் குளிப்பாட்டி வீட்டுத் தொழுவத்தில் கட்ட வரும்போது திண்ணையில் ஹேமா,பள்ளிக்குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதை நின்று கவனிப்பான். பரஸ்பரம் சின்ன புன்னகைகளோடுதான் அவர்களின் நட்பு.

இன்று தான் அவனிடம் அதிகம்பேசி இருக்கிறாள்.

படகுநின்றது.

"இறங்கு ஏமா. சத்திரம் வந்திடிச்சி..'"என்றான்.

பதட்டத்துடன் அவசரமாய் இறங்கியதில் கால்வழுக்கிவிட அப்படியே உதயனின்மீது சாய்ந்து விட்டாள் ஹேமா.
கைத்தாங்கலாய் அவளைப்பிடித்துக்கொண்டு நிதானமாய் மண்டபம் நோக்கிநடந்தான் .அவனுக்கு முன்பே அங்கே சிலர்இருந்தார்கள்.

"ஏமா இப்படி உக்காரு" என மேடான திண்ணைபோலிருந்த ஒரு இடத்தைக்காட்டினான்.

ஹேமா களைத்துப் போய் உட்கார்ந்தாள்.மழையின் சாரலில் உடம்பு நடுங்கியது.
கண்ணைஇருட்டுக்கொண்டுவர அப்படியே சுருண்டு படுத்துவிட்டாள்.

"ஏமா! ஏமா!: அழைத்தான் உதயன்.

"உம்ம் "
"என்ன செய்யுது? ஏன் முகமெல்லாம் இப்படி சிவந்திருக்குது?" என்றுகேட்டபடி அவன் ஹேமாவின்நெற்றியில் தயக்கமுடன் கைவிரல்வைத்துப்பார்த்தான்.

அனலாய் கொதித்தது.

"காச்சலடிக்குதே ஏமா?"

"ஹ்ம்ம்"

"இங்க வென்னிதண்ணிக்குக்கூட வளி இல்லயே?"

உதயன் சுற்றுமுற்றும்பார்தான். எதிரேஒருமூலையில் தர்மகர்த்தாவின்குடும்பம் அமர்ந்திருக்கவும் அவர்களிடம் ஓடிச்சென்றவன்
"ஐயா !ஏமாக்கு காச்சலடிக்குது "என்றான் கலங்கியவிழிகளுடன்.

"அதுக்கு என்ன செய்யணும் இப்போ? வெள்ளம் வடியட்டும் முதல்ல... நானே தைமாசத்துல வைக்காம பொண்ணுக்குக் கார்த்திகைல கல்யாணம் வச்சிட்டு நெல்லும் பருப்பும் வெள்ளத்துல போறத பாத்து அவஸ்தப்படறேன் நீவேற இப்போ வந்து காச்சல் மண்ணாங்கட்டின்னு புலம்பாத போடா.." மாதவாச்சாரி சீறிவிழுந்தார். அவர் மனைவி உதட்டை சுழித்தாள். பக்கத்தில் கண்ணில்கனவுகளுடன்அந்த கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட பெண்.

உதயன் திரும்ப ஹேமாவின் அருகில் வந்தான்," ஏமா ,நீ ஏதும் சாப்டியா?' என்றான் கவலையாக.

"எனக்கு எதுவும் வேணாம்"

"கேட்டதுக்கு பதில் சொல்லு ஏமா.ஏதும் சாப்புட்டியா இல்லியா?"

"கார்த்தால சாப்டேன், இப்போ பசீ இல்ல உதயா"

"சுருண்டு படுத்ருக்கியே ஏமா! பசிதானே? நாலு நாளு ஆனாலும் சாப்பிடாம எனக்கெல்லாம் பழக்கமுண்டு .உனக்கு அப்படிகிடையாது இரு .எங்காச்சும் யாராச்சும் பொட்டலம் தராங்களான்னு பாக்றேன்..":

"ஒண்ணும் வேணாம் .. நீ இங்கேயே இரு.. எதுன்னாலும் இங்க இருக்கற எல்லாரும் சேர்ந்துபோவோம்.."

உதயன் சிரித்தான். " பாத்தியா ஏமா.. தண்ணீ வேறுபாடு பாக்காம எல்லாத்தியும் அடிச்சிட்டுப்போகும். .வெள்ளம் வந்திச்சின்னா எல்லாரும் ஒண்ணாயிடறோம். இந்தவெள்ளம் வராட்டி அந்த தர்மகர்த்தா ஐயா இங்கவந்து எங்க சாதிசனங்களுக்கான இந்த சத்திரத்துல வந்து உக்காருவாரா? "

"தர்மகர்த்தா பற்றி எனக்கு அக்கறை இல்லை, ஆனா எனக்கு அதெல்லாம்கிடையாது .அப்புறம் பாரதிகவிதைகளைப்படிச்சபெண் அப்படீன்னு என்னை
சொல்லிக்கவே முடியாது..ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றவர் பாரதி தெரியுமா?"

" நானும் நாலுக்ளாஸ் படிச்சேனே..கொஞ்சம் இதெல்லாம் விளங்கும் ஆனா ஊரு கட்டுப்பாடு இருக்குல்ல..இப்படி நான் உன்பக்கத்துல உக்காந்திட்டு இருக்கறதே பாவம்.அதர்மம்"

"பாவமாவது புண்ணீயமாவது? மனசு சுத்தமா இருந்தா அதுவே போதும். அதுக்குமேல தர்மம் எதுவும் இல்லை"

"இதெல்லாம் வெறும்பேச்சு ஏமா. எதிரே உக்காந்திட்டு நம்மையே பாத்திட்டு இருக்கற இந்த தர்மகர்த்தா ஐயா நாளைக்கே ஏதும் நம்மைப்பத்தி கதை கட்டிவிடுவாரு ..."

ஹேமா அவனையேபார்த்தாள். அவன் சொல்வது உண்மைதான். காலம் எவ்வளவுமாறினாலும் சிலமனிதர்கள் மாறுவதேஇல்லைதான்.

தர்மகர்த்தா லேசுப்பட்டவரில்லை. அவருடையமனவியும் முன்பு ஒருசமயம் பள்ளி ஆசிரியை பத்மாவிற்கு சூட்டியபட்டத்தை ஹேமாவினால் மறக்கமுடியவில்லை. வம்புமடத்தலைவி அந்த பெண்மணீ.

ஆபத்து சமயத்தில் உதவுவது தான் மனிதத்தன்மை., அதைத்தான் உதயன் செய்தான் ,இதுதவறாகிவிடுமா?

உதயன் தன் சட்டைபாக்கெட்டிலிருந்து ஒரு பிஸ்கட் பொட்டலம் எடுத்தான். பிரித்து ஹேமாவிடம் நீட்டினான்.

"இந்தா ஏமா சாப்பிடு"

"வேணாம்"

"ஏன் எமா அவரு பாத்துடுவாருன்னு தானே வேணாம்கிறே?"

"அதெல்லாம் இல்ல எனக்குப்பசி இல்ல.."

உதயன் மௌனமாய் கீழே உட்கார்ந்தான் மழை விட்டுவிட்டு பெய்தபடியே இருந்தது.

அந்த சத்திரம் பழையகாலக்கட்டிடம். நாட்டு ஓடுகளால் வேய்ந்த கூரை .தண்ணீர்மெல்லமெல்ல சத்திரத்திற்குள்ளும் நுழைய ஆரம்பித்தது, அதைக்கண்டதும் அலறிபுடைத்துக்கொண்டு உள்ளே இருந்த மக்கள் வெளியே வந்தனர்.நீரில் நீந்தியும் போராடி எதிர்நீச்சல்போட்டபடியும் கடந்தனர். தர்மகர்த்தா குடும்பமும் ஹேமாவும் உதயனும்மட்டுமே அங்கிருந்தனர். ஹேமாவுக்கு நினைவே போகும் அளவுகாய்ச்சல் அடித்தது. அந்த நிலையில் அவளை அங்கே விட்டுவிடவோ வேறிடம் கொண்டுசெல்லவோ வகையற்று திகைத்து அமர்ந்துவிட்டான் உதயன்.

தர்மகர்த்தாவைப் பார்த்து ,"வெண்ணாத்திலே உடப்பு எடுத்திடிச்சாமே?" என்று கேட்டான் உதயன்.

"உம்" என்று உறுமினார் அவர். அவனோடு பேசவும் பிடிக்காத வெறுப்பு முகத்திலும் குரலிலும் தெரிந்தது.
அப்போது சத்திர சுவரை கவனித்த உதயன் உரத்த குரலில்,

"சாமி !இப்படி நாங்க உக்காந்திருக்கிற பக்கம்வந்திடுங்க ... அங்க ஆபத்துவரப்போகுது" என்றான் .

அவரும் அவரது குடும்பமும் அவசர அவசரமாய் இந்தப்பக்கம் வரவும் சுவர் சரிந்து விழவும் சரியாக இருந்தது. நீர் அரிப்பினைத்தாங்காமல்பயங்கர ஒலியுடன் சாய்ந்த சுவர் வெள்ளத்தில் கரைந்து ஓடியது.

சத்திரம் இப்போது அந்தரத்தில் நிற்கும் சர்க்கஸ்காரனைப்போல தள்ளாடியது.

"உதயா! உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னெ தெரியல ,, கடவுள்மாதிரி எங்கள காப்பாத்திட்டேப்பா.."
நெகிழ்ந்தார் மாதவாச்சாரி.

"தெய்வம் மனித ரூபத்தில் வரும்னு சொல்வா.. அது இப்போ உண்மையா போச்சு" என்று கைகுவித்தாள் அவரது,மனைவி. மகள் கல்யாணக்கனவுகளில் இருந்தாளோ என்னவோ புன்னகையுடன் காணப்பட்டாள்.

ஹேமாவுக்குஇதுஒன்றும் தெரியவில்லை. காய்ச்சல்வேகத்தில் அனத்திக்கொண்டு கிடந்தாள்.

உதயன் சிரித்தபடி," எல்லாத்துக்கும் மேல சாமீ இருக்காரு ..அவருக்கு தெரியாத கணக்குவழக்குங்களா நமக்குதெரியபோகுது?
சரி இனிமே இங்க இருக்க லாயக்கில்லங்க.. வாங்க வேற இடம்போயிடுவோம்.."

"ஆமா உதயா! உன்படகில எங்களையும் கூட்டிண்டுபோ. அடுத்தவரம் ஜனனிக்குகல்யாணம் தெரியுமோல்லியோ? இப்போ எங்களைகரைசேர்த்துடுப்பா மகராஜனா இருப்பே" கெஞ்சினார் மாதவாச்சாரி.




"என்னைக் கும்பிடாதீங்க சாமி ..நான் ரொம்ப சின்னவன் எல்லாத்திலியும்"

"இல்லடாப்பாநீ ரொம்பபெரியவன்"

உதயன் படகைப்பார்த்தான் .அவர்களைப்பார்த்தான் .படகில் நால்வர்மட்டுமே செல்லலாம் .தர்மகர்த்தா குடும்பத்திலேயே மூவர்
இருக்கிறார்கள்,ஹேமாவோடு நால்வர். அவர்களைப்படகில் ஏற்றி தான் கீழேயிருந்து கையினால் வலித்துக்கொண்டு செல்ல தீர்மானித்தான்.

"ஏமா ஏமா எந்திரி" என்று ஹேமாவை அழைத்தான்.

"நேரமாச்சு உதயா..ரொம்ப இருட்டறதுக்குள்ள போயிடலாம் .. எங்கள காப்பாத்துப்பா!"

"ஏமா?'
அவள் எழுந்திருக்கவே இல்லை.

"சரி சாமி .. நிங்கள்ளாம் படகுல ஏறுங்க" என்றுகூறி ஹேமாவை தூக்கிதோளில் சாய்த்து ஏற்றிக்கொண்டான் உதயன். படகுக்கு அவர்கள்வரவும் சத்திரத்தின் எஞ்சியபகுதியும் சரிந்து விழுந்தது.

"ஐயோ! பிழைச்சோம் " வீறிட்டார் மாதவாச்சாரி.


ஐவரையும் ஏற்றிக்கொண்டு தான் நடந்தபடியே படகினை தள்ளிக்கொண்டுவந்தான் உதயன்
படகு,நீரைப்பிளந்து செல்ல அதற்கு ஈடுகொடுத்து தள்ளுவது எளிதாக இல்லை. உயிரைக்கையில்பிடித்து வேகமாய்தள்ளினான் . மேல்மூச்சு
வாங்கியது. கழுத்துவரை நீரில் இருந்துகொண்டு கைகளினால் எப்படிதான் தள்ளினானோ ?

ஹேமா மயக்கம் தெளிந்தவள் விழித்துப்பார்த்து," எங்க இருக்கோம்?' என்றாள்

"சத்திரம் முழுக்க இடிஞ்சிபோச்சு.. உதயந்தான் நம்ம காப்பத்தினான்" என்றார் மாதவாச்சாரி.

எங்கோ தொலைவில் குரல்கேட்டது .

"ஹேமா ஹேமா!"

யாரு பெரியப்பவா?

ஆமாம் அவர்தான்.

"ஐயா! கவலைப்படாதீங்க.. ஏமாவை நான் அங்கிட்டு கரைபக்கம்கொண்டாந்து சேர்த்திடறேன்" என்று பதில்குரல் கொடுக்க வாய்திறந்தான் உதயன் வார்த்தையே வரவில்லை உடம்புசோர்ந்து நா வறண்டுபோனது.

படகுமெல்ல நகர்ந்தது. சுற்றிசுற்றிவந்தது ஆடிகவிழ்ந்துவிடும் போலிருந்தது, அப்போதெல்லாம் தோள்கொடுத்து தாங்கிப்பிடித்தான் உதயன்.

ஒருவழியாக வெள்ளம் வடிந்த கரையை அடைந்தது படகு .
அங்கே கையில் டார்ச்லைட்டுகளுடன் பலர் நின்றுகொண்டிருந்தார்கள்.

" இன்னும் சிலநிமிஷம்தாமதிச்சிருந்தா எல்லாரும் செத்துப்போயிருப்போம்" என்றபடி படகினின்றும் இறங்கினார் மாதவாச்சாரி.

தொடர்ந்து இறங்கின அவர்மனைவி,"புனர் ஜென்மம் தான் போங்கோ" என்றாள் பெருமூச்சுவிட்டு.

"என்னாச்சு..நாங்க டவுன்ல மாட்டிண்டோ ம்..வெள்ளம் கொஞ்சம் வடிஞ்சதும் புறப்பட்டு வந்தோம்...ஹேமா உனக்கு ஒண்ணுமில்லையே?" மகாதேவன் குழப்பமாய் கேட்டார்.

"ஆமா இந்த உதயன் லூஸ்மாதிரி நின்னுண்டு இருந்தான். நாந்தன் படகை எடுடா ஊர்வெளில வெள்ளம் வடிஞ்ச திசைல போடான்னேன்"
என்றார் ,மாதவாச்சாரி.


"அப்படியா? ஹேமாவை தெய்வம்போல நீங்கதான் காப்பாத்தி கரை சேர்த்தேளா? நன்றி மாதவாச்சாரி"

" என் ஆயுசுல இப்டி ஒருமழைவெள்ளம் வந்து பார்த்ததே இல்லை சுவாமி.பாழாப்போன வெள்ளம் எல்லா ஜாதிக்காராளையும் சிலமணிநேரம் ஒண்ணாசேர்த்து தொலைச்சிடுத்து ..நீர் என்னடான்னா தப்பிச்சி டவுனுக்குப் போயிட்டீர்? நாங்க எங்க சொந்த புத்தியை உபயொகிச்சி எப்டியோ வந்து சேர்ந்தோமாக்கும்"


உதயன் படகை தள்ளிக்கொண்டுநகர்ந்தான் . பாலத்தடியில் சுழித்துசீறும் வெள்ளத்தின் பேரொலிகூட அவன்காதில் விழவில்லை சற்றுமுன் மாதவாச்சாரி பேசிய பேச்சில் உடல் இற்றுவிழுந்துவிட்டான்.

சுதாரித்து கொஞ்சம்தொலைவு செல்வதற்குள் கண்ணை இருட்டிகொண்டுவந்தது, நெஞ்சில் தாங்கமுடியாத வலி .கரையைவிட்டு மறுபடி வெள்ள சுழலில் அவன் உடல் சாய்ந்தது.

"உதயாஆஆஆ" ஹேமா அலறினாள்.

அவள்பெரியப்பா சட்டென உதயனைக்காப்பாற்ற வெள்ளத்திலிறங்க காலை எடுத்துவைத்தவர் உடனே தயங்கி இழுத்துக்கொண்டார் .
மினாட்சி," புது வெள்ளம் எப்படி இருக்குமோ? நீங்க போகவேண்டாம்" என்று தடுத்தாள்.

"சுவாமி உமக்கு நீச்சல் தெரியும்தான் அதுக்காக இப்படியா புது வெள்ளத்துல காலை வைக்கிறது? கடவுள் இருக்கார் அவருக்கு தெரியாத கணக்குவழக்கா?' சொல்லிவிட்டு மாதவாச்சாரி நகர்ந்தார்.


ஹேமாவுக்கு மறுபடி கண்ணை இருட்டிகொண்டுவந்தது." உதயா! ஐயோ உதயனை வெள்ளம் அடிச்சிட்டே போறதே, அவனைக்காப்பாத்த யாருமில்லையா?..." என்று வீறிட்டாள்.மயக்கமாகி அப்படியே சரிய இருந்தவளை தரதரவென இழுத்துக்கொண்டு பெரியம்மா நடந்தாள்.

மேடுபள்ளம் பாராது புகுந்து வளையவரும் வெள்ளம் !அதற்குத் தப்பிய மனிதன் மேட்டில் நின்று பள்ளத்தைப் பார்த்துக் கடவுளை நோக்கி கை எடுக்கிறான். அவனுடைய செய்கை மேட்டையும் பள்ளமாக்குவதை அவன் உணரவில்லை.

பிரளயத்தின் போதுகூட இதை அவன் உணரப்போவதில்லை.
*********************************************************************************************************

9 comments:

  1. அன்புள்ள சகோதரி ஷைலஜா,

    ஒரு வேண்டுகோள்.ஒரு சுவராசியமாக
    ஒரு சிறு கதை எழுதுங்களேன்.

    1960 வருட நெடி அடிக்கிறதே.வேறு ஏதாவது புது கரு முயற்சி செய்து இருக்கலாமே.

    அதுவும் இந்த கருவுக்கு இவ்வளவு பெரிய (சிறு) கதையா?

    வாங்க நம்ம வலைக்கு கதை/கட்டுரை/கவிதை படிங்க.வாழ்த்துங்க இல்லேன்னா சாத்துங்க

    ReplyDelete
  2. பெரியயயயயயயயயயயயயய கதை...கருத்தும் நீங்க சொன்னவிதமும் அட்டகாசம் ;))

    ReplyDelete
  3. தமிழகத்தில் சிதம்பரம் மற்றும் பல இடங்களில் வெள்ளத்தால் வீடுகள் மூழ்கிக் கிடக்கிற நேரத்தில் அந்தக் காட்சிகளை அப்படியே கண் முன் நிறுத்தின மாதிரி ஒரு கதை.

    மனிதம் மறப்பதே சில மனிதரின் தலையாய குணம் என்பதை இக்கதையும் காட்டி விட்டது. ஒருவரை கொலை செய்வது போன்ற கொடூரங்கள் எல்லாம் இல்லாத இந்த ‘நல்ல’ உள்ளங்கள்.. நன்றி மறப்பது, வார்த்தைகளாலேயே கொல்லுவது, ஆபத்தில் உதவாது போவது போன்றவையும் உயிரை எடுக்கும் பாவத்துக்குச் சமம் என்று உணரவே போவதில்லை. அவர்கள் பிறப்பால் ‘உயர்ந்தவர்’கள் ஆயிற்றே.

    கடவுளின் மறு உருவமாய் உதயன். அவனை கடவுளாக தரிசிக்க தெரிந்த ஒரே உள்ளமாக ஹேமா.

    //"அதுக்கெல்லம் காரணம் இருக்கும் ஏமா. எல்லாம் ஒரு நிலைல இருந்திட்டா மனுஷன் தலைகால் புரியாமபோயிடும் பாரு! அதுக்குதான்!"//

    கீதா உபதேசம் போல உதயனிடமிருந்து வந்தவை. Hats off!

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷைலஜா!

    ReplyDelete
  4. K.Ravishankar said...
    அன்புள்ள சகோதரி ஷைலஜா,

    ஒரு வேண்டுகோள்.ஒரு சுவராசியமாக
    ஒரு சிறு கதை எழுதுங்களேன்.>>>>>

    எழுதினாப்போச்சுங்க ரவிசங்கர்

    1960 வருட நெடி அடிக்கிறதே.வேறு ஏதாவது புது கரு முயற்சி செய்து இருக்கலாமே.
    >>>>

    வெள்ளம் எல்லாகாலத்லயும் வருமே...அதான் கரு பழசாதெரியுதோ?

    அதுவும் இந்த கருவுக்கு இவ்வளவு பெரிய (சிறு) கதையா?
    >>>>>>

    சின்ன கருதான பெரிய குழந்தையா வருதாம்?:)

    வாங்க நம்ம வலைக்கு கதை/கட்டுரை/கவிதை படிங்க.வாழ்த்துங்க இல்லேன்னா சாத்துங்க>>>

    வரேன் வரேன் வாழ்த்தறத வாழ்த்துவேன் சாத்தறத சாத்துவேன்!!! நன்றி வருகைக்கும்கருத்துக்கும்!

    12:35 PM

    ReplyDelete
  5. கோபிநாத் said...
    பெரியயயயயயயயயயயயயய கதை...கருத்தும் நீங்க சொன்னவிதமும் அட்டகாசம் ;))

    8:12 PM

    <<<<<<<,வெள்ளம் பத்தினது அதான் பெரியகதையாப்போச்சி கோபி நன்றிகருத்துக்கு

    ReplyDelete
  6. ராமலக்ஷ்மி said...
    தமிழகத்தில் சிதம்பரம் மற்றும் பல இடங்களில் வெள்ளத்தால் வீடுகள் மூழ்கிக் கிடக்கிற நேரத்தில் அந்தக் காட்சிகளை அப்படியே கண் முன் நிறுத்தின மாதிரி ஒரு கதை.>>>


    எங்க திருச்சிகிட்டஒருகிராமத்துல நடந்தகதை இது

    மனிதம் மறப்பதே சில மனிதரின் தலையாய குணம் என்பதை இக்கதையும் காட்டி விட்டது. ஒருவரை கொலை செய்வது போன்ற கொடூரங்கள் எல்லாம் இல்லாத இந்த ‘நல்ல’ உள்ளங்கள்.. நன்றி மறப்பது, வார்த்தைகளாலேயே கொல்லுவது, ஆபத்தில் உதவாது போவது போன்றவையும் உயிரை எடுக்கும் பாவத்துக்குச் சமம் என்று உணரவே போவதில்லை. அவர்கள் பிறப்பால் ‘உயர்ந்தவர்’கள் ஆயிற்றே.

    கடவுளின் மறு உருவமாய் உதயன். அவனை கடவுளாக தரிசிக்க தெரிந்த ஒரே உள்ளமாக ஹேமா.

    //"அதுக்கெல்லம் காரணம் இருக்கும் ஏமா. எல்லாம் ஒரு நிலைல இருந்திட்டா மனுஷன் தலைகால் புரியாமபோயிடும் பாரு! அதுக்குதான்!"//

    கீதா உபதேசம் போல உதயனிடமிருந்து வந்தவை. Hats off!

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷைலஜா!>>>>

    மிக்க நன்றி ராமலஷ்மி பொறுமையாபடிச்சி அழகா கருத்தும் சொன்னதுக்கு

    7:41 AM

    ReplyDelete
  7. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
  8. ஒரே வார்த்தையில் 'சூப்பர்'

    ReplyDelete
  9. கவிநயா said...
    ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

    7:47 PM


    இளைய பல்லவன் said...
    ஒரே வார்த்தையில் 'சூப்பர்'

    8:59 PM
    >>>>>Thanks a lot Kavinaya and Ilaiyapallavan!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.